பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Friday, December 23, 2016
Wednesday, December 14, 2016
Saturday, December 10, 2016
அதிமுக உடையாது - ஹரன் பிரசன்னா
அடுத்த தேர்தல் வரை சசிகலாவுக்குப் பிரச்சினை இல்லை. உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்றாலும் பெரிய கவலை இல்லை. சட்டமன்றத் தேர்தலே முதல் இலக்கு. எம்ஜியார் இறந்தபோது அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருக்குமே ஜெயலலிதா ஒரு பொருட்டில்லை. தானே தலைமையேற்க சரியான ஆள் என்று எண்ண பலர் இருந்தார்கள். இன்று சசிகலாவுக்கு இப்பிரச்சினை இல்லவே இல்லை. அடிமையில் மோகம் கொண்ட அமைச்சர்கள் அடுத்த தலைமைக்குத் தயாராக இருக்கிறார்களே ஒழிய, தானே தலைவர் என்றறிவிக்கும் அளவுக்கு தைரியமாக இல்லை. கட்சியை உடைத்துக்கொண்டு போனாலும் சில வருடங்களில் அரசியலில் காலி ஆகிவிடுவோம் என்று தெரிந்திருக்கிறது. அதையும் மீறி கட்சியை உடைக்கும் தேவை திமுகவுக்கு இருக்கிறது.
நம் மக்களின் இன்னொரு பிரச்சினை, ஒரு தடவை ஓர் அரசியல்வாதிக்கு எதிராக ஒரு தேர்தலில் வாக்களித்துவிட்டால், அவருக்குத் தண்டனை வழங்கிவிட்டதாக மானசீகமாக முடிவெடுத்துவிடுவார்கள். சசிகலா கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை விரும்பாத மக்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை மிக மோசமாகத் தோற்கடித்துவிட்டால், அதற்கடுத்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கோபத்தை மறந்துவிடுவார்கள். இது சசிகலாவுக்கு இருக்கும் இன்னுமொரு சாதகம்.
இதையும் மீறி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலைச் சந்தித்தால் தோற்கும் வாய்ப்புகளே அதிகம். தோற்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். நான்கரை ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அரசியல் அதிகாரமும் பணமும் இந்த நான்கரை ஆண்டுகளில் எப்படி வேண்டுமானாலும் செயல்படச் சொல்லும். இதை மீறி, தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்கெனவே அதிமுக வென்றிருக்கும் வேளையில், மூன்றாவது முறையாக வெல்வது அத்தனை எளிதல்ல. ஜெயலலிதாவின் கரிஷ்மா என்றும் சசிகலாவுக்குக் கைக்கூடப் போவதுமில்லை. ஜெயலலிதா இருந்தபோது தள்ளி வைத்திருந்த நிலையிலேயே சசிகலாவின் குடும்பத்தினர் உருவாக்கிய பிரச்சினைகள் நமக்குத் தெரியும்.
இன்று ஜெயலலிதா இல்லாத நிலையில், சசிகலாவின் தலைமை உருவாகி வரும் சூழலில், இவர்கள் மிக வெளிப்படையாகவே அதிகார வட்டங்களை உருவாக்குவார்கள். இது 1996 அளவுக்குக் கூட அதிமுகவைக் கொண்டு செல்லும் வாய்ப்பு உண்டு. கூடவே தமிழ்த் தேசியவாதிகளின் பங்களிப்பும் சேர்ந்துகொண்டால், நிலைமையை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியான திமுகவின் நிலையையும் பார்க்கவேண்டும். கருணாநிதியின் அதிகாரம் இல்லாத அரசியல் அந்நேரம் உருவாகி இருக்கும். வாரிசுச் சண்டைகள் எல்லாம் ஓய்ந்து ஸ்டாலின் நிச்சயம் முக்கியத்துவம் பெற்றிருப்பார். இப்போதே கிட்டத்தட்ட அப்படித்தான். சரியான கூட்டணியுடன் ஸ்டாலின் வெல்லும் வாய்ப்புகளே அதிகம். அந்த வாய்ப்பை உறுதி செய்யவேண்டியதே இன்றைய திமுகவின் முக்கிய வேலையாக இருக்கவேண்டும். பாஜக புழைக்கடை வழியாக வருகிறது, நூலேணியில் இறங்கி வருகிறது என்றெல்லாம் கதை பேசிக்கொண்டிருந்தால், சசிகலாவிடமும் தோற்க வேண்டிய அவல நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதிமுகவை உடைப்பது குறித்து அதிமுகவினரை விட திமுகவினர் பதற்றமடைகிறார்கள். அதிமுகவை பாஜக உடைக்கக்கூடாது என்று திமுகவினர் பதறுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. திமுககூட அதிமுகவை உடைக்கக்கூடாது என்று நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது எதிரணியை உடைப்பதையும் உள்ளடக்கியதுதான் அரசியல். மற்ற கட்சிகளைவிட நல்லாட்சியைத் தருவோம் என்பதே ஒரு முக்கியக் கட்சியின் முதன்மை நோக்கமாக இருக்கும். இதன் பின்னணியில் நல்லது செய்வதை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்சியை உடைப்பதும் அந்த வெற்றிடத்தில் ஆட்சியைப் பிடிப்பதும் அரசியல்தான்.
இந்த அரசியலை எத்தனை வெளிப்படையாக மேற்கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது. பணத்தின் மூலம் இதைச் செய்வதுதான் பிரச்சினைக்குரியதே ஒழிய, அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு செய்வது பெரிய பாவமல்ல. இதற்காக திமுகவினர் பதறுவதை விட்டுவிட்டு யதார்த்தத்தைப் பற்றி யோசிப்பது நல்லது. இதைச் சொல்வது ஏனென்றால் இது பாஜகவுக்கும் பொருந்தும். :-) ஆனால், பொன் இராதாகிருஷ்ணனும் தமிழிசையும் எத்தனை நல்லவர்கள் என்றால், ஒரு ஃபோன் போட்டு, இப்படி அதிமுக தத்தளிக்கும்போது அதை உடைக்கும் அரசியல் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு உடனே ஏற்றுக்கொண்டு இன்னும் அமைதியாகிவிடுவார்கள். அத்தனை நல்லவர்களைப் பார்த்து பின்வாசல் அவதூறுகளைப் பரப்பாதீர்கள். மீறினால் நரகம் நிச்சயம். :-)
நன்றி: ஹரன் பிரசன்னா முக நூல் பக்கம்.
சசிகலா அதிமுக பொதுச் செயலாளரானால் பிராமண சமூகத்தின் அக்கறையான ஆதரவு கிடைக்காது - எஸ்.வி.சேகர் ( கடைசியாக நகைச்சுவையுடன் முடிப்பது மரபு )
Posted by IdlyVadai at 12/10/2016 06:38:00 PM 5 comments
Labels: அரசியல், ஹரன்பிரசன்னா
தியாகியாக்கும் படலம்..
நன்றி: குசும்பன் - செம !
Posted by IdlyVadai at 12/10/2016 11:34:00 AM 0 comments
Labels: நகைச்சுவை
Thursday, December 08, 2016
ஜெய சகாப்தம் - பகுதி 1 - எ.அ.பாலா
1980-ல் கடலூர் மஞ்சக்குப்பத்தில் “பெண்ணின் பெருமை” மாநாட்டில் “பாரதி கண்ட புதுமைப்பெண்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய மேடைப் பேச்சு அரசியல் வாழ்வுக்கு அச்சாரமாக அமைந்தது. சில மாதங்களிலேயே எம்ஜியார் ஜெயாவை, அதிமுகவின் பிரச்சாரச் செயலாளர் ஆக்கினார். எம்ஜியாரை தனது அரசியல் குரு/வழிகாட்டி என்று சொன்னபோதிலும், அவரை மதித்துப் போற்றியபோதிலும், எம்ஜியார் லெகசியில் (Legacy) சிக்கிக் கொள்ளாமல், ஜெயா தன்னைத் தனித்துவமாகக் காட்டிக் கொண்டு, “அம்மா” வழியை அமைத்துக்கொண்டவர்.
எம்ஜியார் போலவே, கேரிஸ்மா (Charisma) என்பது மிக இயல்பாகவே அவரிடம் இருந்தபோதிலும், அவரது பல (ஏழை)மக்கள் நலத்திட்டங்கள் ஜெயாவின் பொதுத்தோற்றத்தை பிரம்மாண்டமாக்கி நிலைநிறுத்தின என்றால் அது மிகையாகாது. அந்த கேரிஸ்மா, பொதுமக்கள் மட்டுமன்றி, அரசியல் தலைவர்கள் பலரையும் அவர் சொன்னதை செவி கொடுத்துக் கேட்க வைத்தது. அவரது 69% இடஒதுக்கீட்டுக் (திராவிடத்தின் முக்கியமான) கொள்கைக்காக அவவருக்கு வீரமணியே “சமூக நீதி காத்த வீராங்கனை” என்ற பட்டம் வழங்கிய பின் அதைச் சிலாகித்து எழுதவேண்டிய அவசியமே இல்லை!
பன்மொழித் திறமையோடு அசாத்தியமான பேச்சாற்றல் மிக்கவர். தமிழக அரசியலுக்கு மிகவும் தேவையான ஒன்று. பள்ளிக்கல்வி வரையே படித்திருந்தாலும், நிறைந்த வாசிப்பால், ஆங்கிலத்தில் சரளமும், சொல்வன்மையும் நிறைந்திருந்ததால், தனது ஆரம்பகால ராஜ்யசபா நாட்களில், விவாதங்களில் அருமையாக உரையாடினார். பல வட இந்திய அரசியல் ஆளுமைகளிடமிருந்து மதிப்பும், மரியாதையும் எளிதாகக் கிட்டியது. ஆங்கிலப்புலமை மிக்க குஷ்வந்த் சிங்கே “அம்மா” ரசிகர் தான்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில், அரசியல் ஆதாயத்துக்காக ஜெயா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் என்று கூறுபவர்கள், பிறிதொரு சமயத்தில், இலங்கைப் பிரச்சினையை வைத்து தமிழக மக்கள் வாக்களிப்பதில்லை என்றும் முரணாகப் பேசுவர். யதார்த்தம் என்னவெனில், யார் என்ன கூறினாலும், (முக்கிய விஷயங்களில்) ஜெயா சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் குணம் கொண்டவர். ஈழப்போரின்போதும், விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்னும், இலங்கைத்தமிழர் பட்ட பெரும் இன்னல்களைக் கண்டு, அரசியல் ஆதாயத்தைத் தாண்டி, ஈழ நலனில் அக்கறை கொண்டே, ராஜபக்ஷேவை கடுமையாகச் சாடி, ஈழத்தமிழர்க்கு முழு ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு மாறினார் என்றே எண்ணுகிறேன்.
I could go on and on in this vein but I now conclude with these words of Tennyson:
So many worlds, so much to do,
So little done, such things to be,
But there is more than I can see,
And what I see I leave unsaid
Jaya Intervention in Rajyasabha, Apr 25, 1984
ஜெயலலிதாவிற்கு சசிகலா மாதிரி இட்லிவடைக்கு எ.அ.பாலா
Posted by IdlyVadai at 12/08/2016 06:37:00 PM 1 comments
முகமது பின் துக்ளக் சந்தித்த சோதனைகள்
தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்று ‛முகமது பின் துக்ளக்'. அமரர் சோ அவர்களால் நாடகமாக நடத்தப்பட்டு வந்த கதை திரைப்படமானது, அவரே இயக்கி நடித்தார். நீலு, பீலி சிவம், மனோரமா, உஷா நந்தினி, அம்பி ராஜகோபால், சுகுமாரி உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். 1971ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அக்கால அரசியலை கடுமையாக விமர்சித்தது. இதனால் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் படத்திற்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். பல தடைகளை தாண்டித்தான் முகமது பின் துக்ளக் வெளிவந்தது. படம் சந்தித்த பிரச்சினைகள் பற்றி சோ கூறியது அவரது வார்த்தைகளில்...
எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது, அவருக்குக் கீழ் மானேஜராக இருந்துகொண்டே, திமுகவை கிண்டல் செய்கிற ஒரு படத்தை துணிந்து எடுக்க முனைந்தவர் நாராயணன். 'பரந்தாமன்' என்கிற பெயரில் துக்ளக்கில் நிறைய எழுதி இருக்கிறார் அவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் மேனேஜராக வேலை பார்த்தவர், அதற்குப் பிறகு தான் எம்ஜிஆரிடம் வந்தார். என்னிடம் அவருக்கு நல்ல பழக்கமுண்டு. அவரும், முரசொலியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மல்லிகார்ஜுனும் இணைந்து அப்போது நாடகமாக மிகவும் பிரபலமாக இருந்த 'முகமது பின் துக்ளக்'கை சினிமாவாக தயாரிக்க முடிவு செய்து இறங்கினார்கள். நான் தான் அந்தப்படத்தை இயக்கினேன்.
மிகவும் குறைந்த பட்ஜெட் படம். எங்களுடைய நாடகத்தில் நடித்தவர்களில் பலர் அதிலும் நடித்தார்கள். அதோடு மனோரமா போன்றவர்களும் அதில் நடித்தார்கள். திமுகவையும், காங்கிரசையும் விமர்சித்ததாக அதில் காட்சிகள் இருந்ததால், அந்த படத்தைத் துவக்கியதில் இருந்தே ஒரே பிரச்சினை தான். அதிலும், திமுகவுக்கு - 'முகமது பின் துக்ளக்' படப்பிடிப்பு சென்னையில் நடப்பதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது படத்தைத் தடுக்க என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்தார்கள்.
ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு தொடங்கும்போதும் ஒரு பிரச்சினை காத்திருக்கும். எங்கிருந்தோ போன் அழைப்பு வரும். அந்த அழைப்பு வந்தவுடன் படத்தை ஒளிப்பதிவு செய்த கேமராமேன் காணாமல் போய் விடுவார். அப்புறம் அசிஸ்டெண்ட் கேமராமேனை வைத்து அன்றைய காட்சிகளை ஒரு வழியாக எடுத்து முடிப்போம். இப்படி 26 முறைக்கு மேல், கேமராமேன்கள் மிரட்டப்பட்டு, பலர் மாற்றப்பட்டும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. அதில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு இதே மாதிரி மிரட்டல் போன்கள் வரும். குறிப்பிட்ட காட்சியில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் அதோடு நழுவி விடுவார்கள்.
நடிகை ஜி.சகுந்தலா நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கும் போன் அழைப்பு வந்து விட்டது. தயாரிப்பாளரான நாராயணன் என்னிடம் வந்தார். “பாருங்க சார் - போன் வந்தாச்சு. இனிமேல் அவங்களும் கிளம்பிடுவாங்க. எப்படியாவது இன்னைக்கு அவங்க வர்ற சீன்களை எடுத்து முடிச்சுடுங்க சார்”. படப்பிடிப்பில் இருந்த சகுந்தலா போன் வந்ததும் உடனே என்னிடம் வந்து,“வீட்டில் அவசரமா வேலை இருக்கு சார். போகணும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பப் பார்த்தார். நானும் பார்த்தேன். வேறு வழியில்லாமல், அவரை ஓரிடத்தில் வைத்து போனிலேயே பேசி நடிக்கிற மாதிரி குறிப்பிட்ட காட்சிகளை எடுத்து முடித்து, அவரை அனுப்பி விட்டேன். இப்படி பலருக்கும் நடந்தது.
கவிஞர் வாலி கூட அந்தப் படத்தில் பாடல் எழுதியதற்காக மிரட்டப்பட்டார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை கூப்பிட்டு எம்ஜிஆர் மிரட்டிப் பார்த்தார். அவரும் மசியவில்லை. கெடுபிடிகளை எல்லாம் மீறி படத்திற்கு ஒத்துழைப்பு தந்தவர்களும் இருந்தார்கள். நாராயணன், படத்தில் நடித்த நாடக நடிகர்களுக்கு குறைவான சம்பளம் தான் பேசி இருந்தார். இருந்தாலும் படம் முடிந்தவுடன் அவர் எல்லாருக்கும் சின்சியராகக் கொடுத்தார்.
இப்படிப் பல தொந்தரவுகளை மீறி படம் முடிந்தாலும், சென்சாருக்கு படம் போனதும், அங்கும் படாதபாடு பட்டது. சென்சார் சர்டிபிகேட்டை அவ்வளவு லேசில் வாங்கிவிட முடியவில்லை. அப்போது 1971 தேர்தல் நேரம். அதற்குள் எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று நினைத்தோம். ஆனால் படத்தில் இருந்த அரசியல் வசனங்களால், சில காட்சிகளால் - பல தடைகள். இந்திரா, கருணாநிதி - இருவருடைய தலையீடும் அதில் இருந்தது. நானும் பொறுத்துப் பார்த்தேன். தடைகள் முடியாமல் நீண்டுகொண்டே போனது. சென்னையில் ஒரு பொதுக்கூட்டம் போட்டேன் -பேசினேன். துக்ளக்கில் எழுதினேன். அப்போது பலரையும் சென்சார் கெடுபிடிகளைத் தளர்த்தச் சொல்லி தந்தி கொடுக்க கோரிக்கை விடுத்தேன். 10,000-க்கும் மேற்பட்ட தந்திகள் கொடுக்கப்பட்டன. சென்சார் போர்டில் இருந்தவர்களுக்கே அதிர்ச்சி. அதற்கு மேலும் தடையை நீடிப்பது சரியாக இருக்காது என்று முடிவு பண்ணி படத்தில் 22 இடங்களில் 'கட்' கொடுத்தார்கள். நானும் பார்த்தேன். தொடர்ந்து படத்தில் 'கட்'கூடாது என்று சண்டை போட்டுக்கொண்டே இருந்தால், படமே வெளிவராது. அதனால் கட்-களை ஏற்றுக்கொண்டு விட்டேன்.
முகமது பின் துக்ளக் படம் தியேட்டர்களில் வெளியாகி விட்டது. நல்ல வெற்றி. தியேட்டர்களில் படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது திமுக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. முஸ்லிம்களைத் தூண்டி விட்டு படம் ஓடும் தியேட்டர்களில் போய் 'முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கிறது'என்று கலாட்டா செய்யச்சொன்னார்கள். படத்தில் முதல் பாட்டே 'அல்லா- அல்லாஞ்நீ இல்லாத இடமே இல்லை' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் பாடலுடன் தான் ஆரம்பிக்கும். அந்த பாட்டை கேட்டதும், திமுக கலாட்டா பண்ண அனுப்பி வைத்த முஸ்லிம்கள் கைதட்டி ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி பல தடைகளை தாண்டித்தான் முகமது பின் துக்ளக் வெளிவந்தது. இவ்வாறு சோ கூறியுள்ளார்.
நன்றி: தினமலர்
Posted by IdlyVadai at 12/08/2016 02:49:00 PM 0 comments
"சோ"ராமஸ்வாமி - அஞ்சலி
இவர் தனது “துக்ளக்” இதழைத் துவங்கிய விதமே அலாதியானது. பொதுவாக தனது நாடகங்களில் அரசியல் நையாண்டி செய்வதை வழக்காமாகக் கொண்டிருந்த இவரை, இதெல்லாம் உன்னால் பேசத்தான் முடியும், எழுத முடியுமா என்று கேட்டதை சவாலாக எடுத்துக் கொண்டு ஒரு வீம்புக்காகத் துவங்கிய பத்திரிகைதான் “துக்ளக்”, 1970 ஆம் ஆண்டு ஜனவர் 14, பொங்கல் தினத்தன்று விளையாட்டாகத் துவங்கியது, இன்று 46 ஆண்டுகளைக் கடந்து, அடுத்த இதழ் வருமா என்று அவரது தீவிர வாசகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதையும் நேரிடையாகவே எழுதுபவர், விமர்சிப்பவர், யாரையும் சார்ந்து தனது நிலையை வைத்துக் கொண்டதில்லை. தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்று பொதுவாக அவருடைய கடுமையான விமர்சகர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டு. அரசியலில் மொரார்ஜி தேசாய் துவங்கி, வாஜ்பாய், இந்திரா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, நரேந்திர மோதி வரை தனிப்பட்ட முறையில் பழக்கம் வைத்திருந்தவர், தவிர்க்க இயலாமல் ஜனதா கட்சியில் சிறிதுகாலம் உறுப்பினராக இருந்தார், மற்றபடி நேரிடை அரசியலில் அவர் தொடர்பெடுத்ததில்லை, ஆறு ஆண்டுகள் பாஜகவின் ராஜ்யசபை நியமன உறுப்பினராகவும் இருந்தார், அதுவே அவர் பாஜக சார்ந்தவர் என்று கூறுவதற்கு விமர்சகர்களுக்கு ஏதுவாக அமைந்தது.
இவரை இந்திய அரசியலின் நாஸ்ட்ரடாமஸ் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது, இந்திராவின் எமெர்ஜென்ஸியை முன்பே கணித்துக் கூறியதோடு மட்டுமல்லாமல், அதைக் கடுமையாக தனது துக்ளக் பத்திரிகை வாயிலாகத் தொடர்ந்து எதிர்த்தவர். இதழியல் தணிக்கை அமலில் இருந்த சமயம் இவரது இதழில் விளம்பரம் நீங்கலாக அனைத்துமே தணிக்கைக்குள்ளாக்கப்பட்டதால், ஒரு இதழில் சம்பந்தமே இல்லாமல் தமிழ் எழுத்துக்களை “கஙநியவலற” என்ற ரீதியில் இதழ் முழுக்க இட்டு நிரப்பி தணிக்கை அதிகாரிகளைத் திக்குமுக்காடச் செய்தார், இவ்வாறு எழுதியிருப்பதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது, இதன் மூலம் ஏதோ சொல்ல வருகிறார் என்று அந்த வார இதழ்கள் மொத்தத்தையும் இந்திரா அரசாங்கம் பறிமுதல் செய்து, இவரையும் விசாரணைக்கு சம்மன் செய்து விசாரித்ததில், எதை எழுதினாலும் தணிக்கை செய்வதால், உங்களை வேண்டுமென்றே அலைகழிக்கத்தான் இப்படி நிரப்பினேனேயொழிய மற்றபடி அதில் வேறேதும் இல்லை என்று சொன்னார்.’
அதே எமெர்ஜென்ஸி சமயம், இதழியல் தணிக்கையின் சமயம், தணிக்கை அதிகாரிகளிடம் சென்று, பத்திரிகை எடிட்டரான எனது பணியை நீங்கள் மிகவும் மெனக்கெட்டுச் செய்வதால், எனக்கான சம்பளத்தையும் நீங்களே எடுத்துக் கொள்வதுதான் முறையாக இருக்கும் என்று திகைக்க வைத்தவர். பின்பு இந்திரா காந்தியாலேயே ஒரு தினசரி துவங்கச் சொல்லி அழுத்தம் வந்தாலும், அதனை நாசூக்காக மறுத்தவர்.
சஞ்சய் காந்தி விமான விபத்தில் அகாலமாக உயிரிழந்திருந்த சமயம், இந்திரா காந்தி அரசாங்கம், சஞ்சய் காந்தியின் நினைவாக தபால்தலைகளை வெளியிட்டு கெளரவித்தது. அதற்கடுத்த துக்ளக் இதழில், சஞ்சய் காந்தியின் விமானத்தில் பயணம் செய்த பைலட் மற்றும் கோ பைலட் இவ்விருவரது புகைப்படங்களுடன் கூடிய தபால்தலைகள் இரண்டு பக்க அளவில் வெளியிடப்பட்டு, இந்திரா அரசு இவர்களை கெளரவிக்கத் தவறியதால், தாம் அவர்களைக் கெளரவிக்க எண்ணி இத்தபால் தலைகளை வெளியிட்டிருப்பதாகவும், தனது வாசகர்கள் அவற்றை தங்களது தபால் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் விண்ணப்பம் விடுத்திருந்ததையடுத்து, அதனைப் பயன்படுத்தத் துவங்கினர், இந்தியத் தபால்துறையும், அவற்றை நிஜத் தபால்தலைகளாக எண்ணி அங்கீகரித்தது.
ஜெயலலிதாவின் 6 ஆவது வயதிலிருந்து அவருடைய மரணத்தறுவாய் வரை அவருடன் நட்பு பாராட்டியவர். 1996 தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த் ஆதரவுடன், திமுக-தமாக கூட்டணியை ஏற்படுத்தி, ஜெயலலிதா அரசாங்கம் வீழக் காரணமாக இருந்த போதிலும், அவர்கள் இருவரின் நட்பில் எந்த விரிசலும் ஏற்பட்டதில்லை, சோ மறைவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருந்த இரங்கற்செய்தியில் குறிப்பிட்டிருந்தது போல, பலருக்கு ஆசி வழங்கிய ஜெயலலிதாவே, தலைவணங்கி ஆசி பெறுபவர் என்று ஒருவர் இருந்தால், அவர் சோ-தான் என்று குறிப்பிட்டிருந்தது சற்றும் மிகையானதல்ல.
ஜெயலலிதாவின் 91-96 ஆட்சிக் காலத்து ஊழல்களைக் கடுமையாக விமர்சித்து எழுதியவர்; நான் எவரை ஆதரித்தாலும், அவர் ஆட்சிக்கு வந்த மறுகணமே அவரை விமர்சிக்கத் துவங்கிவிடுவேன், எனது பத்திரிகையே ஒரு எதிர்க்கட்சிதான் என்று கூறியவர். திமுக தலைவர் கலைஞரை விமர்சிக்காது வெளியான துக்ளக் இதழே இல்லை என சொல்லுமளவிற்கு எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கலைஞரது அரசியல் நிலைபாடுகளைக் கடுமையாக விமர்சித்தவர், ஆயினும், அவருடன் நெருங்கிய நட்பைப் பேணியவர்.
இவ்வாறான பெருமைகளுக்கெல்லாம் உரிய சோ இன்று நம்மிடையே இல்லை, அவரது இழப்பைக் குறித்து வேறு எது கூறினாலும் அவை வெறும் சம்பிரதாயமான வார்த்தைகளாகவே இருக்கும்.
- யதிராஜன்
நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள் என்றால், அவள் மலம் கழிப்பது எங்கே? என்ற திமுகவினரின் பிதற்றலுக்கு, தேர்தலில் சீட்டுக் கொடுக்க முடியாத தொண்டர்களுக்கு அவர்கள் தலைவர் இதயத்தில் இடம் கொடுக்கிறாரே, அவர் இதயமென்ன பொதுக் கழிப்பிடமா? - இது தான் சோ.
Idlyvadai Team misses :(
Posted by IdlyVadai at 12/08/2016 12:16:00 PM 3 comments
Labels: அஞ்சலி, யதிராஜ சம்பத் குமார்
சசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்? என். ராம் கருத்து
Posted by IdlyVadai at 12/08/2016 08:47:00 AM 1 comments
Labels: அரசியல்
ஓர் இரவு
முழி ஒளிப்பதிவு பார்க்க இங்கே செல்லவும் : http://www.ndtv.com/video/news/the-buck-stops-here/after-jayalalithaa-s-death-did-sasikala-natarajan-mastermind-a-midnight-coup-441655
Posted by IdlyVadai at 12/08/2016 06:26:00 AM 0 comments
Labels: அரசியல்
Wednesday, December 07, 2016
ஜால்ரா சத்தம்
ஆனால், நேற்று மெரினா கூட்டத்தில் அடி மட்ட தொண்டர்கள் பலர் இதைக் கண்டு கோபமாக ஏசிக்கொண்டு இருந்ததைப் பார்க்க கேட்க முடிந்தது.
முகநூலிலும், டிவிட்டரிலும் திடீர் ஜால்ரா சத்தம் கேட்டு டிவியை பார்த்தால் அங்கே தந்தி டிவி மூச்சுக்கு முந்நூறு தடவை அதே ஜால்ராவைப் போட்டுக்கொண்டு இருந்தது.
இது கூட பரவாயில்லை ஆனால் பிரதமர் மோடி தலையை தடவிக்கொடுத்து ஆறுதல் சொல்லுவது எல்லாம் டீ மச் தேவையில்லாதது.
பிஜேபி இல.கணேசன் மெனக்கட்டு ஒருவரைப் பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்ததை எல்லாம் பார்க்கும் போது கேவலமாக இருந்தது.
காங்கிரஸ் திருநாவுக்கரசர் விடுவாரா அவரும் ராகுலுக்கு அறிமுகம் செய்து வைத்து தன் கடமையை செய்தார்.
கடைசியில் அந்தச் சாஸ்திரி பால் தெளித்த பிறகு பிசுக்கை துடைத்துக்கொள்ள தன் மேல் அங்கவஸ்திரத்தைக் கொடுத்து அவரும் கடைசியாக ஜால்ரா அடித்தார்.
Posted by IdlyVadai at 12/07/2016 09:23:00 AM 5 comments
Labels: அரசியல்