-எதிர்க்கலாம் என்று எவரும்
நினைக்க முடியாத எங்கள் கலாம்.
நீர்
விதைகளையும் விழுதுகளையும்
கோடிக்கணக்கில் விட்டுச் சென்ற ஆல மரம்
புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்
இத் தேசத்தின் ஸ்தூலம் மறைந்த ஸ்தல விருட்சம் !
நீர்
விழுந்து விடவில்லை !
விட்டுச் செல்ல மனம் இன்றி
வீற்றிருக்கின்றீர் இதயங்களில் ..
நீர்
தாடி மீசையோ மழுக்கிய தலையோ
தலை மறைப்போ காவியோ
வெள்ளுடையோ மட்டும்
கொண்டிராத கொள்கை ஞானி !
மரங்கள் மறைகின்றனவே என்று நாங்கள்
கன்னத்தில் கை வைத்து
புலம்ப மட்டுமே செய்தோம்..
நீரோ
உம் கைகளுக்குள் விதைகளை கொண்டு சென்று
செல்லும் வழி எல்லாம் தூவிச் சென்றீர் !
நீர்
புலம்பியதே இல்லை ! - ஏனெனில்
உம் கண்களுக்கு எதிர்காலம்
எப்போதுமே புலனானது !
நாங்கள்
தொலைந்ததையே
தேடிக் கொண்டிருந்த போது - நீர்
தொலைவில் புதிதாய்
அதையே கண்டு கொடுத்தீர்!
நீர்
அணு சக்தியை உள்ளே வைத்திருந்தும்
அன்பு சக்தியால் எங்களை ஆட்கொண்டீர்!
எப்பொழுதுமே
உம் புன்னகையின் கவர்ச்சி
முதல் முறை முகம் பார்க்கும்
குழந்தையின் சிரிப்பைப் போலே
கள்ளங்கபடமற்றது !
நீர்
உம் கனவுகளை
மற்றவர் உறக்கத்திலும்
தோன்றச் செய்த
விந்தை விஞ்ஞானி !
அரசியலை நினைத்து
நாங்கள் நொந்த போது
நீரோ இதுதான்
இன்றைய 'அரசு இயல்' என்று அதை
இயல்பாக
எடுத்துக் கொண்டீர் !
சமூகக் கால்வாய் நாறுகிறதே என்று
நாங்கள் கவலைப்பட்ட போது
தூரத்தே தெரிந்த இளைஞர் கூட்டமென்னும்
காட்டு வெள்ளம் ஒருநாள் பாதை தேடி
புது நீராய்ப் பாயும் என்று நீர்
பொறுமையாய் நம்பி இருந்தீர் !
நீர்
நவீன இந்தியாவின் சிற்பி !
உம்மால் மட்டுமே இச்சிலையை
வடிக்க முடியாதென
உணர்ந்து
கோடி உளிகளை
குழந்தைகள் கையில் கொடுத்தீர் !
உம்மை தந்தை என்றோ மாமா என்றோ
தாத்தா என்றோ நாங்கள்
அடையாளம் காட்ட மாட்டோம்!
ஏனெனில்
நீர் எல்லா வயதினருக்கும்
தோழனாவீர் !
உம் தலையில்
எல்லா தலைமுறைக்கும் தகவல்
தகைந்து கிடந்தது!
அரசன் ஆட்சி செய்ய வேண்டியது
மண்ணை அல்ல மனங்களை என்பதை
நீர் முற்றிலும் உணர்ந்தவர் !
முடிந்தவன் சாதிக்கிறான்
முடியாதவன் போதிக்கிறான் என்பது பழமொழி ..
ஆனால் நீரோ
சாதிக்கவும் செய்தீர் போதிக்கவும் செய்தீர்..!
நீர் மதச்சார்பற்றவர் கிடையவே கிடையாது!
எல்லா மதத்தவற்கும் சார்பானவர் !
இன்றுதான்
புத்தர் சிரித்தாரோ ? - நீர் மீண்டும்
அவரிடமே வந்து விட்டீர் என்று !!
இன்றுதான்
இயேசு பிரான் கைகளை நீட்டினாரோ -
உம்மை வாரி அரவணைக்க ?
இன்றுதான் இறைவன் சற்றே
நகர்ந்து அமர்ந்தாரோ? -
உமக்கும் இடமளிக்க?
நாங்கள் தவிக்கவில்லை !
நீர் உயர்ந்தவர்-
அங்கேயே இரும் !!
மை லார்ட் !
இவர் எங்கள் கட்சிக்காரர் என்று
உலகமே உம்பக்கம் சாட்சி சொல்கிறது!!
இன்றுதான் தேசத்தையே தேசியக்கொடி
மூடியதைப் பார்க்கிறோம் !
உம் இதயம் இந்தியா இந்தியா என்றே
துடித்தது இறுதி வரை !
நீர்
பிற நாடுகளையும்
புற நானூற்றைப் பேச வைத்தீர் !
நீர்
திரும்பிய இடமெல்லாம்
திருக்குறளை திகட்டாமல் அளித்தீர் !
ஐயா
உம்மை
மறத்தமிழன் என்றோ
முதல் குடிமகன் என்றோ
ஆசான் என்றோ விஞ்ஞானி என்றோ கவிஞர் என்றோ ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியாது !
நீர்
பிரபஞ்சம் முழுதும் நிறைந்த பிரயாணி !
நீர்
வழிப்போக்கனாய் மட்டும் வாழாமல்
செல்லும் வழியெல்லாம் புதிதாய்ச்
செப்பனிட்டுக் கொண்டே சென்றவர் !
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது !
ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற மட்டுமே முடியும் !
நீரோ பேராற்றல் !
நீரின்றி அமையாது உலகு !
நீர் நாங்களாக மாறி விட்டீர் !
உம் பயணத்தைத் தொடரும் -
எம் கனவுகளிலும் செயல்களிலும் !!!
ஜெய் ஹிந்த் !! ஜெய் ஹிந்த் !!
உணர்வும் ஆக்கமும் --- ஈ. ரா. என்னும் சாமானியன் !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 29, 2015
புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்
Posted by IdlyVadai at 7/29/2015 10:42:00 AM
Labels: அஞ்சலி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment