
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Wednesday, April 29, 2015
எது இலக்கியம் மற்றும் குமுதம் ரிப்போட்டர் இலக்கியம்
அவர் உடனே என்னை திருப்பி சில கேள்விகள் கேட்டார்
நீங்க கர்நாடக சங்கீதம் கேட்பீர்களா ?
கேட்பேன் ஏன் ?
உங்களுக்கு ஏதாவது அதுல புரியுமா ?
சுத்தம்.. நமக்கும் ராகம் தாளம் எல்லாம் ரொம்ப தூரம்.
இளையராஜா ?
தினமும் கேட்பேன் எனக்கு பிடிக்கும்.
(மற்ற இசையமைப்பாளர்கள் பெயரை சொல்லி)அவர்களின் பாடல்கள் ?
சில பாடல்கள் கேட்பேன் எப்பவாவது.
பாடல்களின் நடுவில் வரும் கோரஸ் ?
லால்லா லுலூலூ தானே ? கேட்டிருக்கேன்
சரி கவனமா கேட்டுக்கோ...
கர்நாடக சங்கீதம் சிலருக்கு பிடிக்கும் அது இலக்கியம் மாதிரி.
இளையராஜா - சுஜாதா மாதிரி பலருக்கு பிடிக்கும்.
மற்றவர்கள் ’புயல்’ மாதிரி வருவாங்க சாரு மாதிரி எப்பவாவது படிக்கலாம்.
கோரஸ் கவிதை மாதிரி இரண்டு மூன்று முறை சத்தம் போடுவாங்க... ஆனால் புரியாது
ஏதோ புரிந்த மாதிரி இருந்தது...
இதை இட்லிவடையில் போடலாமா ?
தாராளமாக... ஆனால் என் பெயர் மட்டும் வேண்டாம் என்றார் அந்த உள்வட்டம்.
பின் இணைப்பு கீழே. நன்றி குமுதம் ரிப்போட்டர்
Posted by IdlyVadai at 4/29/2015 07:50:00 AM 0 comments
Monday, April 27, 2015
காமெடி பீஸ்
https://youtu.be/ZZKmxIV3suk
வந்துவிட்டார் கேப்டன். உங்களுக்கு தெரிந்த வடிவேலு ஒன் லைனர் தெரிந்தால் சொல்லுங்க
Posted by IdlyVadai at 4/27/2015 06:00:00 PM 4 comments
கேப்டனின் அடுத்த ரவுண்ட்
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் !
Posted by IdlyVadai at 4/27/2015 04:52:00 PM 0 comments
Labels: அரசியல்
Friday, April 24, 2015
வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து - பத்ரி
வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து
விக்கிபீடியா 'Hate Crime' என்பதை இவ்வாறு வரையறுக்கிறது:
In both crime and law, hate crime is a usually violent, prejudice motivated crime that occurs when a perpetrator targets a victim because of his or her perceived membership in a certain social group. Examples of such groups include but are not limited to: ethnicity, gender identity, language, nationality, physical appearance, religion, or sexual orientation.
எந்தவித நேரடி முன்விரோதமும் இல்லாத நிலையில், சம்பந்தமே இல்லாத ஒருவர்மீது இனம், மொழி, பால், தேசம், பாலுறவு விருப்பம், தோற்றம் ஆகியவை காரணமாக வெறுப்பினால் உந்தப்பட்டுத் தாக்குதல் நடத்துவதுதான் ‘வெறுப்புக் குற்றம்’ எனப்படுகிறது.
பொதுவாக இம்மாதிரியான குற்றங்கள் நடக்கும்போது அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் அறிவுஜீவிகளும் குறைந்தது வாய் வார்த்தையாலாவது கண்டிப்பார்கள். தமிழகத்தின் என்ன நடந்தது? பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன் நேராகச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் நேரில் சென்று பார்த்ததுடன் மாநிலத் தலைவரின் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
தினம் ஒரு அறிக்கை விடும், ராமானுஜர் சீரியல் எழுதும் திமுக தலைவர் கருணாநிதியோ, அறிக்கைத் திலகம் பாமக ராமதாஸோ வாயைத் திறக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள், ம்ஹூம், ஒரு வார்த்தை இல்லை. ஆளும் அஇஅதிமுகவிடமிருந்து ஒரு சத்தம் இல்லை. அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தேமுதிகவிடமிருந்து ஒரு முனகல் இல்லை. நடைப்பயண நாயகன் மதிமுக வைகோ, புதுப்புயல் தமாக வாசன், தலித்துகளின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் ஆகியோரிடமிருந்து ஒரு குரல் இல்லை. இந்தக் கட்சிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்கூட வாய் திறக்கவில்லை.
திராவிடர் கழகத்தின் வீரமணி, தங்கள் அமைப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, தாங்கள் இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.
பத்திரிகையாளர் ஞாநி சொல்கிறார்: “இதுபோன்ற செயல்களை பெரியாருடன் தொடர்புபடுத்தவே கூடாது. அவர் அமைப்புரீதியான மாற்றங்களை வன்முறையற்ற வழியில் செயல்படுத்தவே விரும்பினார். இந்த நபர்கள் தங்களைப் பெரியாரியர்கள் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது. உரிமைகளை மீறும் இந்தச் செயல்கள் பகுத்தறிவின் வரையறைக்குள் வரமாட்டா.”
இம்மாதிரி பெரியாரியர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே முடியாது. இம்மாதிரியான தாக்குதல்களில் தங்கள் பங்கு என்ன என்பதை பெரியாரியர்கள் விளக்கியே ஆகவேண்டும். இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பரப்பி வந்திருக்கும் வெறுப்பு விதைதானே இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது? ஸ்வராஜ்யா இதழில் நான் எழுதியுள்ள கட்டுரையில் 2006-ல் நடந்த சில செயல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
சரி, மனித உரிமை அமைப்புகள் என்று சில உள்ளனவே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒன்றும் கருத்து சொல்லக்கூடிய செயலாக இது அவர்களுக்குத் தெரியவில்லை போல.அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் போன்றவர்கள் பொதுவான மனித உரிமைகளுக்காக மிகவும் போராடுபவர்கள். அவர்களுக்கு இதுகுறித்துச் சொல்ல ஏதுமில்லை.
தனிப்பட்ட முறையில் நீ கண்டித்தாயா, நீ கண்டித்தாயா என்று கேட்பது எனக்கு ஏற்புடையது அல்ல. ஆனால் இதற்காக என்று இருக்கும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்கூட இதுகுறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர் நிலை என்ன, பார்ப்பன வெறுப்பு என்பது எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை நன்கு விளக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று மிகக் கடுமையான எதிர்வினைகளைப் பெற்றது. இல்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்குகிறேன் என்றார்கள். இன்று என்ன நடந்துள்ளது என்று பாருங்கள்.
சமூக வலைத்தளங்களில் பல தனி நபர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் unequivocal-ஆகக் கண்டிக்காமல், கூடவே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசியதையும் பார்க்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் உண்மையான அவலம் அவர்கள்கூட இல்லை. இந்த விஷயத்தை எள்ளி நகையாடிய சிலர்தான். அவற்றைப் பார்ப்போம்.
1. ஆந்திராவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூப்பாடு போடாத சிலர் இப்போது இரண்டு பேருடைய நூல் அறுந்ததற்குக் கொதிப்பது ஏன்?
இவை இரண்டும் ஒப்பிடப்படக்கூடிய செயல்களே அல்ல. நூல் அறுந்தது சாதாரண விஷயம்தான். உயிர் போகவில்லைதான். ஆனால் என்னவிதமான ஒப்பீடு? இரண்டும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதுதானே? இதைக் கண்டிப்பதற்கு அதைக் கண்டித்து வாங்கிவந்த சான்றிதழைக் காண்பிக்கவேண்டுமா? இருவரும் தமிழர்கள்தானே? ஒரு பக்கம் சுட்டது ஆந்திர போலீஸ். இன்னொரு பக்கம் தாக்கியது தமிழர்கள். தாக்கப்பட்டவர்கள் வெறும் பார்ப்பனர்கள். பிரச்னை அதுதானா?
2. நூலைதானே அறுத்தார்கள்? அதற்கு ஏன் இந்தப் பொங்கல்?
பிரமாதம். புடைவையைத்தானே பறித்தார்கள்? சட்டையைத்தானே கிழித்தார்கள்? லேசாக மேலேதானே கையை வைத்தார்கள்? கொஞ்சமாகக் கீழேதானே தள்ளினார்கள்? ஒரு தட்டுதானே தட்டினார்கள்? வெறும் இரண்டு பேரைத்தானே தாக்கினார்கள்? அடடா, அடடா!
3. அடக்குமுறையின் வெளிப்பாடுதான் பூணூல். அதனை அவர்களாகவே நீக்கியிருக்கவேண்டும். இல்லை என்பதால் இந்தச் செயலில் ஈடுபடவேண்டியிருந்தது.
இதனை இந்தப் பதிவில் எதிர்கொள்ளப்போவதில்லை. தனியாக எழுத உள்ளேன். எந்தச் சட்ட வரையறைக்குள்ளும் அடங்காத ஒரு எதிர்பார்ப்பு இது. பிறர் எம்மாதிரியான மதச் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று எவ்விதத்திலும் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவரவர் விரும்பிய வகையில் சட்டத்துக்கு உட்பட்டு மத வழிபாடு செய்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
4. பொதுமக்கள் கூடும் இடங்களில் திறந்த மார்புடன் இருக்கும் இவர்களை சட்டை போடச் சொல்லவேண்டும்.
தமிழகத்தில் நான் பார்த்தவரை வயலில் விவசாயம் செய்வோர் முதல் வீடுகளில், தெருக்களில், பல பொது இடங்களில் வெறும் துண்டுடனோ, அதுகூட இல்லாமலோ திறந்த மார்புடன் கீழாடை மட்டும் அணிந்துகொண்டு அனைத்து சாதி ஆண்களும் செல்கிறார்கள். இதனை ஆபாசம் என்றும் பெண்களுக்கு எதிரானது என்றும் சொல்பவர்கள் சட்டம் கொண்டுவந்து மாற்ற முயலுங்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக, மாநிலத்தின் அனைத்து ஆண்களும் தெருவில் இறங்கும்போது இதனைச் செய்யவேண்டியிருக்கும்.
***
தமிழகத்தில் பொதுவெறுப்பின் அடிப்படையில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திப்பது தலித்துகள்தான். சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தலித்துகளைத் தாக்குகின்றனர். தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்ததற்காக கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தின் ஒரு பள்ளியில் “தாளாளர் சாலமன் ஜெபா, அவரது மனைவியும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா, ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா” ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இவை அனைத்துமே ஹேட் கிரைம் என்பதன்கீழ் வரும். சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்
இந்த பதிவு தான் ”நல்ல பதிவு. நன்றி பத்ரி”
நன்றி: பத்ரி வலைப்பதிவு.
Posted by IdlyVadai at 4/24/2015 12:55:00 PM 8 comments
Thursday, April 23, 2015
சுஜாதா விருதுகள் - ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் மற்றும் பலர்
ஜெ,
சுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறீர்கள். சுஜாதா விருதுகளைப்பற்றிய உங்கள் வாழ்த்துக்களை காணவில்லையே?
சித்ரன்
அன்புள்ள சித்ரன். முதல் கடிதம். புரிகிறது. ஆனாலும் சீரியஸாகவே பதில்
சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல
இளையதலைமுறையினர் சிலர் அவர்களின் இளமைப்பருவ வாசிப்பை அவரிடமிருந்து தொடங்கியிருக்கலாம். மேலே வராமல் தொடங்கிய இடத்திலேயே நின்றிருப்பது பொதுவாக தமிழர் பண்பாடு. அவர்களே அவரை இலக்கியவாதி என்பவர்கள். அவர்களுக்கு வயது முப்பதுக்குள் என்றால் அவர்கள் மேலே வாசிக்கவேண்டும் என்றும் மேலே என்றால் சிறந்த சுகசௌபாக்கிய வாழ்க்கை அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன்
சுஜாதாவை ஓர் இலக்கிய ‘ஐகான்’ ஆக்கும்பொருட்டு மனுஷ்யபுத்திரன் தொடங்கிய விருது இது. அதன்பொருட்டு அதை தீவிர இலக்கியம் எழுதியவர்களுக்கு அளிக்கத் தொடங்கினார். ஆனால் எந்த அடையாளமும் காலப்போக்கில் அதன் உண்மையான மதிப்பு என்னவோ அங்கேதான் வந்து நிற்கும். சுஜாதா விருதுகள் இன்று நடைமுறையில் பல்ப் ஃபிக்ஷனுக்கான விருதுதான்
சுஜாதா விருது பெற்ற பட்டியலில் வினாயக முருகன் எழுதிய சென்னைக்கு மிக அருகில் என்ற நாவலையும் போகன் சங்கரின் கவிதைத் தொகுதியையும் மட்டும் வாசித்தேன். இரண்டுமே தமிழின் தீவிர இலக்கியத்தின் தொடர்ச்சியை எவ்வகையிலும் உள்வாங்கிக்கொள்ளாதவை. சமகாலக் கேளிக்கை எழுத்து, மிகையுணர்ச்சி எழுத்து ஆகியவற்றிலிருந்து தொடர்ச்சியை உருவாக்கிக் கொண்டவை.
வினாயகமுருகன் எழுத்தை நான் ‘ஙேயிசம்’ என்று சொல்லத்துணிவேன். ராஜேந்திரகுமார் என்ற அமரர் எழுத்தாளர் உருவாக்கிய அழகியல்முறையைச் சேர்ந்தது. அதற்கு தமிழில் என்றுமே பெருவாரியான வாசகர்கள் உண்டு.முன்பு ஒரு நாவலின் முன்னுரையில் கண்ணதாசன் எழுதினார் [வேலங்குடித் திருவிழா] ‘தமிழ் வாசகனை எனக்குத் தெரியாதா? அவனுடைய அரிப்பு எனக்கும் இருக்காதா? ஆகவே என் அரிப்புக்காக நான் எழுதினேன். தன் அரிப்புக்காக தமிழர்கள் இதை வாசிக்கலாம்” வினாயகமுருகனும் அதை அவரது முன்னுரையில் சொல்லியிருக்கலாம்
போகன்சங்கர் கவிதைகள் தமிழின் பிறசமகாலக் கவிதைகளைக் கண்டு அவற்றை போலிசெய்பவை. பெரும்பாலான ஃபேஸ்புக் கவிதைகள் இத்தகையவைதான். உணர்ச்சிகரமான தீவிரமான மனநிலை ஒன்றை இவை போலியாக உருவாக்கிக்கொள்கின்றன. அதில் நின்றபடி மிகையுணர்ச்சியும் நாடகத்தன்மையும் கொண்ட குறிப்புகளையும் குட்டிச்சித்தரிப்புகளையும் புனைகின்றன.
இவை நீடித்தவாசிப்புக்குரியவை அல்ல. மறுமுறைகூட வாசிக்கப்படாதவை.உடனடியான ‘லைக்கு’கள்தான் இலக்கு. ஆகவே இவை பொய்யான ஓர் உணர்ச்சித்தளத்தை நிறுவி அதை அனைத்துக்கவிதைகளுக்கும் நீட்டிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. போகன் சங்கரின் கவியுலகில் துக்கம் கெட்டிப்பட்டு கிடக்கிறது. அவர் கலகக்காரராக, கண்ணீர்வடிக்கும் கதைசொல்லியாக, இருத்தலியல் துக்கம் கனத்தவராக மாறிமாறித் தோற்றமளிக்கிறார்.
நவீனத் தமிழ்க்கவிதையின் விதிகளில் ஒன்றாக இருந்தது அடக்கம். கவிதை என்பதனாலேயே மிகையுணர்ச்சி உருவாகிவிடும், பொய்யான ஆன்மிகதளம் உருவாகிவிடும் என்று அஞ்சி அடைந்தது அது. அதன் நுட்பங்களனைத்தும் அவ்வாறு உருவானவை. அவற்றைத் தூக்கிவீசி நவீனக் கவிதைகளின் வரியமைப்பு, மொழிநடை மற்றும் சில தேய்வழக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு வைரமுத்துக் கவிதைகளின் உணர்வுதளம் நோக்கிச் செல்கின்றன இவை
நான் இப்போது ஷங்கர் ராமசுப்ரமணியனின் ஆயிரம் சந்தோஷ இலைகள் என்ற கவிதைத்தொகுதியை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மொழியின் அடக்கமும் நுட்பமும் அளிக்கும் பரவசத்துடன் இக்கவிதைகளை வாசிக்கும்போது என்ன இது என்ற திகைப்பு உருவாகியது. மேலும் சில இணையக்கவிதைகளை வாசித்தபோதுதான் இது ஒரு டிரெண்ட் என்றும் இது நவீனக்கவிதையை ஆப்ரிக்க நீர்ப்பாசி போல மூடி ஆக்ஸிஜன் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது என்றும் புரிந்தது. எண்பதுகளில் கவிதைக்கு எதிரான சக்தியாக இருந்த முற்போக்குக் கவிதைகளுக்கு நிகரான நோய் இது. நான் போகனை மட்டும் சொல்லவில்லை. அப்படி ஒரு இருபது பெயர்களைச் சொல்லமுடியும்.
இன்னும் ஒன்று, ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகளே என் நண்பர் இளம்பரிதியால் பெரிய நூலாக வெளியிடப்பட்ட பின்னர்தான் என் கவனத்தை முழுமையாகப் பெறுகின்றன. ஏனென்றால் இன்று பெருகும் இந்த உடனடிஎதிர்வினைக் கவிதைகள் நடுவே இத்தகையகவிதைகள் கவனம்பெறமுடியாமலிருக்கிறது.
வணிக எழுத்து தேவை என்று நினைப்பவன் நான். சுவாரசியமான எழுத்து பல தளங்களில் வந்துகொண்டே இருப்பது வாசிப்பு எனும் இயக்கம் நீடிக்க இன்றியமையாதது. ஆகவே வணிக எழுத்தை சுட்டிக்காட்டி பாராட்டுவது மட்டும் அல்ல விருதளிப்பதும் கூட சிறந்ததுதான். ஆனால் அதை இலக்கியமாகக் காட்டும் பசப்பு மிக ஆபத்தானது. மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இன்று ஓர் இயக்கமாகவே அதை முன்னெடுக்கிறது என ஐயப்படுகிறேன்.அவரைச்சுற்றி அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஒரு குழு கூடியிருக்கிறது. அதில் அவருக்கு வணிகலாபம் உள்ளது. ஆகவே அதை அவர் வழிநடத்துகிறார்.
பொதுவாக இன்று இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் பாராட்டும் அபூர்வம். ஆகவே அவர்களுக்கு அளிக்கப்படும் விருதுகளை பாராட்டவேண்டியது கடமை. விருது பெற்றுள்ள பலர் என் மதிப்பிற்குரியவர்கள். விருதைப் பெற்றதையோ விருதையோ நான் குறைத்துச்சொல்லவில்லை. ஆனால் இவ்விருது இன்று முன்னெடுக்கும் மதிப்பீடுகளை இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இந்த மனநிலையில் இதை எழுதாவிட்டால் இது சொல்லப்படாமலேயே போய்விடலாம்.
உயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று. ஆகவே எதிர்வரும் வசைகளையும் கொந்தளிப்புகளையும் முன்னரே காண்கிறேன். பரவாயில்லை. இலக்கியவாசகர்களில் சிலராவது இப்படி ஒரு கோணம் உள்ளது என அறிந்துகொள்ள்வேண்டும். இந்த விவாதங்கள் அடங்கியபின் இந்நூல்களை வாசிக்கையில் நான் சொல்வதென்ன என்பதைப் புரிந்துகொள்வார்கள்
ஜெ
நன்றி: http://www.jeyamohan.in/74452#.VTi2Ff6UdQF
------
உயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று.
-ஜெயமோகன்
ஜெயமோகன் சுஜாதாவிருதுகள் மேல் மேற்கொண்டிருக்கும் கொலை வெறித்தாக்குதலில் மேலே சொன்ன வரி இடம் பெற்றுள்ளது. உயிர்மையை இணைய மாஃபியா என்று சுருக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உண்மையில் நிழல் உலக மாஃபியாவாக மாறி ஜெயமோகனை மிரட்ட வேண்டுமென்பதுதான் என் ஆவல்.
இந்தப் பதிவில் அவர் விநாயக முருகனையும் போகன் சங்கரையும் மிக்க் கடுமையாக தாக்குகிறார். இதற்கான காரணம் மிக எளிமையானது. அவர்கள் இருவருமே ஜெயமோகனை தொடர்ந்து விமர்சிப்பவர்கள். அதற்கு பழிவாங்க இது ஒரு சந்தர்ப்பம். அதற்க்கா சுஜாதாவையும் சேர்த்து திட்ட வேண்டிய அவலம் ஜெயமோகனுக்கு.
ஆனால் ஜெயமோகன், சுஜாதா விருது பெற்ற சமஸ் பற்றி ஏதும் சொல்வதில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதற்காக காரணம் மிகவும் பச்சையானது. அந்த புத்தகத்தை ’ அழியாக் குரல்’ என வானளாவ புகழ்ந்து ஜெயமோகன் முன்னுரை எழுதியிருக்கிறார். போகனோடு ஒப்பிட்டு ஷங்கர்ராம சுப்ரமணியணை இப்போது புகழ்வதும் அதே அடிப்படியில்தான். சமஸ்சும் ஷங்கரும் தமிழ் இந்து அல்லாத வேறு இடத்தில் பணி புரிந்துகொண்டிருந்தால் இந்நேரம் ஜெயமோகனின் குண்டாந்தடிக்கு இருவருமே பழியாயிருப்பார்கள்
விருது பெற்ற பாவண்ணன் பற்றியோ சுரேஷ் கண்ணன் பற்றியோ, சந்தோஷ் பற்றியோ, அடவி, திணை சிற்றிதழ்கள் பற்றியோ ஜெயமோகன் எதுவும் சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இவர்களும் இதே சுஜாதா விருதைத்தான் பெற்றிறுக்கிறார்கள். ஜெயமோகனிடம் இருப்பது தனிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே. அதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மதிப்பீடு சார்ந்த முகமூடிகளை அணிகிறார் என்று தெரியவில்லை.
கடந்த காலத்தில் சுஜாதாவிருது பெற்றவர்கள் அனைவருமே தமிழுக்கு வெவ்வேறு வகையில் மிக தீவிரமான பங்களிப்பை செய்து வந்தவர்கள் என்பதை அந்தப் பட்டியலை திரும்பிப் பார்க்கும் எவருக்கும் தெரியும். மேலும் இந்த விருது தேர்வில் பங்கெடுத்த அனைவரும் தமிழ்ன் மிக முக்கியமான படைப்பாளிகள். அவர்கள் அனைவரையும் ஜெயமோகன் தனது வன்மத்தால் அவமானப்படுத்த முயற்சிக்கிறார்.
ஜெயமோகன் இதற்கு மேல் கீழே இறங்க முடியாது என்று யாராவது சொன்னால் இன்னும் இறங்கிக் காட்டுகிறேன் பார் என்று சவால வீட்டு அவசர அவசரமாக இன்னும் பத்தடி பள்ளம் தோண்டி உள்ளே போய் படுத்துக்கொள்வதில் அவர் வல்லவர்.
- மனுஷ்யபுத்திரன்
நன்றி: முகநூல் பக்கம்
நூறு மீட்ட ஓட்ட போட்டியில் இந்த மாதிரி பிரச்சனை வருவதில்லை, அதனால் இனிமேல் விருதுக்கு தேர்வானவர்களுக்கு ஓர் ஓட்டப்பந்தையம் வைத்து பரிசு கொடுக்கலாம். இதில் வாசகர்கள் யாரும் கலந்துக்கொள்ள கூடாது !
Posted by IdlyVadai at 4/23/2015 02:49:00 PM 4 comments
Wednesday, April 22, 2015
ஒரு விளம்பரம் - ஒரு கேள்வி
குங்குமம் இதழில் ஜோதிகா பேட்டியில் ஒரு கேள்வி பதில்
‘‘பசங்க ஷூட்டிங்க்கு வருவாங்களா?’’
‘‘ம்ம்... ஷூட்டிங் பார்க்க வந்திட்டு, அவங்களுக்கு கேரவன் பிடிச்சுப் போச்சு. ஆனா, அவங்க இதுவரைக்கும் சினிமாவே பார்த்தது இல்லை. கார்ட்டூன்தான். அவங்க பார்க்கிற மாதிரி நல்ல சினிமா வந்தால்தான் கூட்டிட்டுப் போக முடியும். இந்த வயதில் டபுள் மீனிங் டயலாக், கேர்ள்ஸ் காஸ்ட்யூம் எல்லாம் பார்த்துதான் கூட்டிட்டுப் போகணும். சின்ன வயதில் அவங்க பொல்யூட் ஆகிடக் கூடாது!’’
இன்றைய நாளிதழில் தனுஷ் 7அப் குளிர்பான விளம்பரம் முதல் அரைப் பக்கம் வந்துள்ளது. உடல்நலத்தை கெடுக்கும் இந்த குளிர்பானங்களை தனுஷின் குழந்தைகளுக்கு அவர் கொடுப்பாரா என்று தெரியாது.
நாமும் நம் குழந்தைகளை இவர்களிடமிருந்து பொல்யூட் ஆகாமல் ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும்.
Posted by IdlyVadai at 4/22/2015 04:00:00 PM 1 comments
படச்சுருள்

தமிழ் ஸ்டுடியோ அருண் தன் ஐடி வேலையை விட்டுவிட்டு தான் மிகவும் விரும்பும் சினிமாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவுடன் பல முயற்சிகளை செய்துவருகிறார்.

நல்ல திரைப்படங்கள் திரையிடுதல், குறும்படங்கள் பற்றிய தொடர், சினிமா பற்றிய பட்டறை, நல்ல சினிமா எது போன்ற விமர்சன கட்டுரைகள் என்று வரிசையில் தற்போது படச்சுருள் என்ற சினிமா பற்றிய பத்திரிகையை ஆரம்பிக்க உள்ளார்.
ஒருவருட சந்தா 250/= செலுத்த முடிவு செய்துள்ளோம். நன்றாக இருந்தால் அடுத்த வருட சந்தா... இல்லை வேண்டாம் என்று விட்டுவிடலாம்.
நண்பனுடன் சினிமா பார்த்தால் 250/= செலவாகிவிடுகிறது, அதனால் 250/= ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது என் கருத்து.
சந்தா செல்லுத்த வேண்டிய விவரம் கீழே...
சந்தா செலுத்துவதற்கான விபரங்கள்:
படச்சுருள் வருட சந்தா: 250/-
ஆயுள் சந்தா: 15000/-
புரவலர் சந்தா: 25000/-
சந்தாவை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு விபரங்கள்:
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: PADACHURUL
வங்கிக்கணக்கு எண்: 035005500700
வங்கி பெயர் & கிளை: ICICI Bank, Adyar Branch
IFSC Code: ICIC0000350
சந்த செலுத்தியதும் மறக்காமல் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரி, அலைப்பேசி எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பி விடுங்கள்.
thamizhstudio@gmail.com
இந்த பதிவு யார் சொல்லியும் போடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
Posted by IdlyVadai at 4/22/2015 01:30:00 PM 0 comments
பூணூல் அறுப்பும் பெரியாரிஸ்ட்டுகளின் குதர்க்கமான சமூக நீதியும் - பத்ரி
2006ல் ஸ்ரீ ரங்கத்தில் பெரியார் ஈவெ ராமசாமி நாயக்கரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடெங்கும் உள்ள ஹிந்துக் கோவில்களின் மீது பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். குறிப்பாக பிராமணர்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். குறைந்தது நான்கு பிராமணர்களின் பூணூல்கள் அறுக்கப்பட்டன. சென்னையில் பக்திப் பிரசங்கங்களைக் கேட்க பிராமணர்கள் கூடும் இடமான அயோத்யா மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தற்போது 2015ல், பிராமணர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் இருவேறு இடங்களில், குடுமியுடன், பிராமணர்களுக்கே உரிய ஆடையும் அணிந்திருந்த இரு கோவில் பூசாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஆறு குண்டர்கள் அந்த பிராமணர்களின் பூணூலையும் அறுத்தெறிந்துள்ளனர்.
திராவிடர் கழகத்தால் சமீபத்தில் தாலி நீக்கும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட்டது. ஹிந்துக்கள் மத்தியில் பொதுவாக அதற்கு எதிர்ப்பு நிலவியது. அதைத் தொடர்ந்தே இந்த பூணூல் அறுப்பு நிகழ்ந்திருக்கவேண்டும்.
இந்தப் பிரச்சினை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சியில் தொடங்கியது. திருமணமான பெண்களுக்கு தாலி தேவையா இல்லையா என்ற ஒரு விவாதம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பதற்கான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. ஹிந்துத்துவ இயக்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவில்லை. இந்த எதிர்ப்பின்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டார். தாக்கியவர்களை காவல்துறை கைது செய்தது.
இதைத் தொடர்ந்து பெரியாரின் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி, தமிழ்ப் புத்தாண்டு அன்று பெரியார் திடலில், பெண்கள் தாங்களாகவே தாலியை நீக்கிக்கொள்ளும் போராட்டத்தை அறிவித்தார். கூடுதல் சுவாரஸ்யத்துக்காக மாட்டுக்கறி உண்ணும் போராட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் பிஜேபி அரசு மாட்டுக்கறியைத் தடை செய்ததை எதிர்க்கும் விதமாக இந்த அறிவிப்பும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
ஹிந்து இயக்கங்கள் கடுமையாக இதை எதிர்த்தன. எப்போதும் திராவிடர் கழகத்துடன் இணைந்தே செயல்படும் திமுக, 2016ல் தேர்தல் வரவிருப்பதை மனத்தில்கொண்டு, இந்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னை காவல்துறை இந்தப் போராட்டத்துக்குத் தடை விதித்தது. திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்தத் தடைக்கு தடை வாங்கியது. காவல்துறை உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவசர அவசரமாக சில பெண்களை வைத்து தாலி நீக்கும் போராட்டத்தை திக நடத்திவிட்டது. அங்கிருந்தவர்கள் மாட்டுக்கறி விருந்தையும் உண்டு முடித்தார்கள். கருணாநிதி மிகக் கவனமாக, இந்த தாலி நீக்கும் நிகழ்வுகளை ஆதரிக்கவில்லை.
தமிழ்நாட்டின் பலவீனமான கட்சியான சிவசேனா திராவிடர் கழக அலுவலகம் முன்பு தனது எதிர்ப்பைக் காட்டியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கைக்கலப்பு மூண்டது. காவல்துறை லத்தி சார்ஜ் செய்ய வேண்டி வந்தது.
பிராமண பூசாரிகளின் மீதான தாக்குதலுக்கான பின்னணி இதுதான்.
பெரியாரின் திக கழகம் வெளிப்படையாகவே ஒரு ஹிந்து எதிர்ப்பு இயக்கம். ஹிந்துக் கடவுள்கள், ஹிந்து புராணங்கள், ஹிந்து சடங்குகள், ஹிந்துப் பாரம்பரியம் என எல்லாவற்றுக்கும் எதிரானது இந்த அமைப்பு. எனவே இயல்பாகவே அர்ப்பணிப்பு ஹிந்துக்கள் இந்த அமைப்புக்கு எதிராகவே இருப்பார்கள். திகவுக்கு எதிராகவே ஹிந்து இயக்கங்களும் செயல்படமுடியும். திராவிடர் கழகமும் இதேபோல் ஹிந்து இயக்கங்களுக்கு எதிராகவே செயல்படமுடியும். ஆனால் திராவிட இயக்கம் மிகக் கடுமையான பிராமண எதிர்ப்பு கொண்டது. திராவிடர் கழகத்தின் இதழ்கள், பொதுவாக ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதோடு, அபிராமண சாதிகளை விட்டுவிட்டு, பிராமணர்களைத் தனியாகக் குறிவைத்தே தாக்குகின்றன.
ஹிந்து மதத்தில் உள்ள தீமைகளுக்கு பிராமணர்களே காரணம் என்பது திக மற்றும் பெரியாரின் முடிவு. சூத்திரர்கள் என்றால் முறையற்ற உறவுவழியில் பிறந்தவர்கள் என்ற தவறான பொருளை பெரியார் மீண்டும் மீண்டும் சொன்னார். இன்றுவரை எந்த நிரூபணமும் இல்லாமல் பெரியாரிஸ்டுகள் இதைச் சொல்லி சொல்லி பிராமணர்கள்மீது வெறுப்பைத் தூண்டுகிறார்கள். அவர்களது குதர்க்கம் இப்படிச் செல்கிறது. தங்கள் குடுமியும் பூணூலும் மூலம், தமிழ்நாட்டின் அபிராமணர்கள் முறையற்ற வழியில் பிறந்தவர்கள் என்பதை அவர்களுக்கு பிராமணர்கள் நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். இதனால் அபிராமணர்களின் பிறப்பு கேள்விக்குள்ளாகிறது. எனவே பிராமணர்களின் குடுமியும் பூணூலும் அபிராமணர்களை அவமானப்படுத்துகின்றன.
எனவே பிராமணர்களின் பூணூலை அறுக்கும் குண்டர்களின் செயல், அவர்கள் மீது பிராமணர்களால் சுமத்தப்பட்ட அவமானத்தைத் துடைக்கும் செயல்தானே அன்றி, குற்றமாகாது.
இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்கவேண்டும். கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் ஹிந்து ஒற்றுமை வளர்ந்துகொண்டு வருகிறது. பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகளின்கீழ் பல்வேறு சாதியைச் சேர்ந்த ஹிந்துக்கள் ஒன்று திரண்டு வருகிறார்கள். பிஜேபிக்கான ஆதரவும் பெருகியுள்ளது.
தாலி நீக்கும் போராட்டம் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்துக்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில், பெரியாரை சில பெண்கள் செருப்பால் அடிக்கும் புகைப்படங்களும், பெரியார் மீது சில ஆண்கள் மூத்திரம் ஒழிக்கும் புகைப்படங்களும் பரப்பப்பட்டன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்தாலே, இதைச் செய்பவர்கள் அபிராமணர்கள் என்பதை மிக எளிதாகவே கண்டுகொள்ளலாம். ஆனால் பிராமணர்களையே எளிதாக அடையாளம் காணமுடியும். அதிலும் கோவில் பூசாரிகளை அடையாளம் காண்பது இன்னும் எளிது. அதைவிட முக்கியம், இவர்களைத் தாக்குவது இன்னும் எளிதானது.
நவீன சமூகத்தில் வெறுப்புக் குற்றங்களுக்கு இடமில்லை. அபிராமணர்கள் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராடர் கழகம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பெரியாரின் இயக்கம், தமிழ்நாட்டு அரசியல் மற்றும் நிர்வாகத்தில், பிராமணர்களல்லாத தலித்துகளல்லாத பிடிமானத்தை உருவாக்க நினைத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளது என்று வேறோரு இடத்தில் நான் எழுதியிருந்தேன். ஆனால் திராவிடர் கழகத்தில் பல குறைகள் உள்ளன. அதனால் அதுவாகவே சிதையத் தொடங்கிவிட்டது. தீவிர பெரியாரிஸ்ட்டுகளால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் மீண்டும் அபிராமண, தலித்தல்லாதவர்களின் பிடியைக் கொண்டுவர விரும்புகிறார்கள்.
பெரியாரின் புகைப்படத்தைத் தாக்கும் அபிராமண ஹிந்துக்களின் கோபத்தை இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. இந்த அறியாமையில் அவர்களுக்குச் செய்ய முடிந்ததெல்லாம், ஆன்மிக விஷயங்களில் பிராமண மேட்டிமைத்தனத்தை முன்வைப்பதாக அவர்கள் நினைக்கும் துரதிர்ஷ்டமான கோவில் பூசாரிகளைத் தாக்குவதைத்தான். ஆனால் உண்மை வேறுவிதமானது. தமிழ்நாட்டில் இருக்கும் பிராமண, அபிராமண பூசாரிகள்தான் இருப்பதிலேயே ஏழைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தினசரி சடங்குகளில் பலமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் அவர்கள் மிகக் குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள். கோவில் நிர்வாக அதிகாரியின் ஒரு மாதச் சம்பளத்தோடு ஒப்பிட்டால், மிகக்குறைவான பகுதியையே இந்த பூசாரிகள் ஊதியமாகப் பெறுகிறார்கள். நிதி உதவியும், சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களும் இந்த பூசாரிகளுக்குத் தேவைப்படும் நிலையில்தான் இன்று அவர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தங்களுக்கே உரிய வகையில் சமூக நீதியை வகுத்துக்கொண்டிருக்கும் பெரியாரிஸ்ட்டுகள், சமூக நீதியைப் பற்றி குதர்க்கமான அறிவையே பெற்றிருக்கிறார்கள்.
Translated in Tamil from -
Source: http://swarajyamag.com/politics/hate-crime-cutting-the-sacred-thread-of-brahmin-priests/
மொழிபெயர்த்த நண்பருக்கு ஸ்பெஷல் நன்றி
கடவுளை கண்டுபிடித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
யார் காட்டுமிராண்டிகள் ? நீங்களே முடிவு செய்யுங்கள்.
Posted by IdlyVadai at 4/22/2015 08:38:00 AM 3 comments
Labels: கட்டுரை, சமூகம், பத்ரி, மொழிபெயர்ப்பு
Tuesday, April 21, 2015
எம்.ஜி.ஆரின் குமாரி... சிவாஜியின் பூங்கோதை..
‘‘அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட படச் சுருள்களில் நைட்ரேட் என்ற ரசாயனம் கலந்திருக்கும். நைட்ரேட்டில் இருக்கும் வெள்ளியை விற்றுக் காசாக்க நினைத்தவர்களால் அந்தக் காலப் படங்கள் அழிந்திருக்கலாம்!’’ என்கிறார் தமிழ்த் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.
‘‘தமிழில் பேசும் படங்கள் வரத் துவங்கியது 1930களில்தான். அப்போது வந்த ஏராளமான படங்களில் இரண்டே படங்கள்தான் நாம் பார்க்கஎஞ்சியுள்ளன. மற்றவை காணவில்லை. இதுதவிர, நாற்பதுகளின்போது பல தமிழ்ப் படங்கள் சிங்கப்பூர், மலேசியாவில் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தன. இரண்டாம் உலகப் போரினால் அந்தப் படப் பெட்டிகள் மீண்டும் தமிழகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் அழிந்துபோன படங்களும் அதிகம். அப்படி கடல் கடந்து தொலைந்த சில படங்கள் அங்கேயே டி.வி.டி ஆக்கப்பட்டு இங்கே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ‘பர்மா ராணி’, எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ போன்றவை அப்படி மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், காணாமல் போன படங்களின் பட்டியல் மிகப் பெரிது. கே.சுப்ரமணியம் இயக்கிய ‘மான சம்ரட்ஷணம்’ என்ற படம் அவற்றில் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரில் தமிழர்கள் கால்நடையாகவே பர்மாவிலிருந்து வந்த துன்பத்தை இந்தப் படம் சொல்லும். அடுத்து, சினிமா மேதை கே.ராம்நாத் இயக்கிய ‘மனிதன்’. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பிம்பங்களை எல்லாம் அந்தக்காலத்திலேயே தூக்கிப் போட்ட புரட்சிகரப் படம் அது. வெளிநாட்டில் முதன்முறையாக படம் பிடிக்கப்பட்ட தமிழ்ப் படம் ‘நவயுவன்’. லண்டனில் ஷூட் செய்யப்பட்ட இந்தப் படத்தையும் காணவில்லை.
அன்றைய கவர்ச்சிக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி, நாகையா நடித்தது ‘வாழப்பிறந்தவள்’ என்ற படம். விதவை மறுமணம் தொடர்பாக புரட்சிகரமான கருத்தைச் சொன்ன இந்தப் படமும் இப்போது இல்லை. 1938ல் எல்லிஸ் ஆர்.டங்கன் என்ற பிரபல இயக்குனர் இயக்கிய ‘அபூர்வ சகோதரர்களை’யும் தொலைத்துவிட்டோம்.
ராஜாஜியின் கதை ஒன்று ‘திக்கற்ற பார்வதி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அதுவும் காணவில்லை! இந்தப் பழைய படங்களோடு பல புதிய படங்களும் இன்னும் கிடைக்காத நிலையில்தான் உள்ளன. உதாரணமாக எடிட்டர் லெனின் இயக்கிய ‘ஊருக்கு நூறு பேர்’, எழுத்தாளர் ஜெயகாந்தனே இயக்கிய ‘உன்னைப்போல் ஒருவன்’ படங்களைக் காணவில்லை’’ என்கிறார் அவர் கவலையாக!
சரி, யாருடைய அசட்டையால் இந்த சினிமாக்கள் கை நழுவின? ‘‘காலத்தின் கோலம்!’’ என்கிறார் சினிமா தகவல் பெட்டகமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். ‘‘ஒரு தயாரிப்பாளர் தன் படத்தை வெளியிடும்போது, படத்தின் ஒரிஜினல் காப்பி... அதாவது, மாஸ்டர் நெகட்டிவ் தயாரிப்பாளரிடமே இருக்கும். காப்பி எனும் பிரின்ட்கள்தான் விநியோகஸ்தரிடம் கொடுக்கப்படும்.
ஒரு விநியோகஸ்தருக்கு அந்தப் படத்தை வைத்து பணம் சம்பாதிக்க பத்து வருடம் வரை உரிமை உண்டு. அதற்குப் பிறகு பிரின்ட் காப்பியை தயாரிப்பாளரிடம் திருப்பித் தர வேண்டும். அதன் பிறகும் அந்தப் படத்தை மீண்டும் வாங்கித் திரையிட ஆட்கள் வந்தால், தயாரிப்பாளர் தன்னிடமுள்ள ஒரிஜினலில் இருந்தோ அல்லது விநியோகஸ்தர் கொடுத்த பிரின்டிலிருந்தோ மீண்டும் பிரின்ட் போடுவார்.
நெகடிவ், பிரின்டுகளைப் பாதுகாப்பதில் பெரிய சிக்கல் உண்டு. அவற்றை அப்படியே போட்டு வைத்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். அடிக்கடி எடிட்டிங் ரூமில் ஓட்டிப் பார்க்க வேண்டும். ஏ.சி. அறையில்தான் வெகுநாள் கெடாமல் வைத்திருக்க முடியும். அந்தக் காலத்தில் ஸ்டூடியோக்கள் தவிர, தனிப்பட்ட நபர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களாக இருந்தார்கள்.
ஸ்டூடியோக்கள் தயாரித்த படங்களே காணாமல் போகும் நிலையில், தனிப்பட்ட தயாரிப்பாளர்களிடம் படச்சுருளை பாதுகாக்க இவ்வளவு வசதி எங்கிருந்து வரும்?’’ என்கிறவர், ‘‘இன்று டி.வி.டிக்களாக சில படங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் ஒரிஜினலும் பிரின்ட்டும் அழிந்து போயிருக்கலாம்.
டி.வி.டிக்களின் ஆயுள் எப்படி என்று சொல்ல முடியாது. அந்த வகையில் படங்கள் தொலைவது இனியும் தொடர்கதையாகலாம்!’’ என அதிர்ச்சி தருகிறார். அப்படித் தொலைந்துகொண்டிருக்கும் படங்கள் என்னென்ன? அந்தப் பட்டியலைத் தருகிறார் ஏ.வி.எம் நிறுவனம் நடத்தும் டி.வி.டி கடை ஊழியரான கருணாகரன்.‘‘எம்.ஜி.ஆர் நடித்த சுமார் 15 படங்களைக் காணவில்லை என்கிறார்கள் சேகரிப்பாளர்கள்.
உதாரணமாக, அவர் கெஸ்ட் ரோலில் போலீஸ் கான்ஸ்டபிளாக அறிமுகமாகிய ‘சதிலீலாவதி’ மிஸ்ஸிங். அப்புறம் ‘நாம்’, ‘சாலிவாகனன்’, ‘குமாரி’, ‘பணக்காரி’ போன்ற படங்களையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சிவாஜி நடித்த ‘மனிதனும் மிருகமும்’, ‘பூங்கோதை’, ‘நல்லவீடு’, ‘செந்தாமரை’, ‘கண்கள்’ உள்ளிட்ட சுமார் 22 படங்களைக் காணவில்லை என்கிறார்கள். அண்ணா கதை, வசனமெழுதிய ‘சொர்க்கவாசல்’, ஜெமினி இரட்டை வேடத்தில் நடித்த ‘மனம்போல் மாங்கல்யம்’, ‘மல்லிகா’... சூப்பர் ஹிட் பாடல்களோடு நூறு நாட்கள் ஓடிய இந்தப் படங்களும் இப்போது கிடைப்பதில்லை.
ஜெய்சங்கர் நடித்த காமெடி படமான ‘சிரித்த முகம்’, ‘ரத்தத்தின் ரத்தமே’, ‘ஒரு கொடியில் இருமலர்கள்’, ‘ஆசை மனைவி’, ‘சவாலுக்கு சவால்’ போன்ற படங்களும் இல்லை.
முத்துராமன், எஸ்.எஸ்.ஆர்., ஏவி.எம் ராஜன், சிவகுமார் நடித்த அநேக படங்கள் இப்போது கிடைப்பதில்லை. 80க்குப் பிறகு வந்த படங்களில் விஜயன் நடித்த ‘தெருவிளக்கு’, காந்த் நடித்த ‘யாருக்கு யார் காவல்’ மற்றும் ‘பணம் பகை பாசம்’, சரத்பாபு நடித்த ‘எங்க ஊர் கண்ணகி’, சரிதா, சுதாகர் நடித்த ‘குருவிக்கூடு’,
‘ஆடுகள் நனைகின்றன’ என இப்படியே பட்டியலிட்டால் சுமார் 200 படங்களையாவது சொல்லலாம்!’’ என அதிர்ச்சி தருகிறார் அவர்.வரலாறுகளைத் தொலைப்பதில் நம்மை மிஞ்ச யாருமில்லை!
எம்.ஜி.ஆர் நடித்த இருநூற்று சொச்ச படங்களில் சுமார் 15 படங்களைக் காணவில்லை. அவர் கெஸ்ட் ரோலில் போலீஸ் கான்ஸ்டபிளாக அறிமுகமாகிய ‘சதிலீலாவதி’ மிஸ்ஸிங்.
நன்றி: குங்குமம்
Posted by IdlyVadai at 4/21/2015 03:50:00 PM 1 comments
Labels: கட்டுரை
ஜெயகாந்தனின் கடைசி கடிதம்

இன்று முகநூலில் எல்லோரும் வைரமுத்துவைப் போட்டுத் துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வாரா வாரம் ராசி பலனை நம்பும் மக்கள் அந்த கடித்ததை நம்ப மறுக்கிறார்கள். குமுதம் ஏப்ரல் மாதம் முழுக்க ’ஏப்ரல் ஃபூல்’ செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
முக நூலில் ஒன்றை கவனித்தேன். குமுதத்தில் தற்போது எழுதும் எழுத்தாளர்கள் யாரும் இதை பற்றி ... மூச்
தொடர்புடைய செய்திகள்: The Hindu
Posted by IdlyVadai at 4/21/2015 12:45:00 PM 1 comments
Labels: பத்திரிகை
Wednesday, April 15, 2015
MMC-யில் மருத்துவம் படிக்கும் ஏழை மாணவனுக்கு உதவி வேண்டி
உங்களில் பலர் எனது முந்தைய கல்வி சார்ந்த உதவி முயற்சிகளுக்கு ஊக்கமும், பொருள் ஆதரவும் அளித்து வந்துள்ளீர்கள். புதிதாக வாசிப்பவருக்காக: எனது இன்னபிற முயற்சிகள் பற்றிய இடுகைகள் எனது வலைத்தளத்தில் உள்ளன.
தற்போது, ஒரு ஏழை மாணவர் என்னிடம் உதவி நாடி வந்துள்ளார். தனது சான்றிதழ்களை, உதவி கேட்டு என்னிடம் அளித்திருக்கிறார். அவர் நிலைமை குறித்து விசாரித்து அவர் மிகத் தகுதியானவர் என்பதையும் உறுதி செய்து கொண்டேன். மாணவனின் கல்வி/இன்னபிற சான்றிதழ்களை, உங்கள் உதவியை பணிவுடன் நாடி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எப்போதும் போல, உங்கள் ஆதரவை (உதவித்தொகை எத்தனை சிறிதாக இருப்பினும் பரவாயில்லை) நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
செல்வகுமார் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவராக இருப்பினும், இயற்பியல்(200), வேதியியல்(197), உயிரியல்(200) பாடங்களில், 199.25 மதிப்பெண்கள் எடுத்து பொதுப்பிரிவிலேயே (Open competition) மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் இடம் வாங்கியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.
பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் என்னை (balaji_ammu(அட்)yahoo(டாட்)com) தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன் அல்லது இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டால் கூட போதுமானது. பிறகு பொருளுதவி செய்வதற்கு வேண்டிய வங்கிக்கணக்கு விவரங்களை மின்மடல்வழி தருகிறேன். உங்களால் இயன்றதை அளித்து உதவுங்கள்.
நன்றியுடன்
எ.அ.பாலா
இணைப்புகள்:
Posted by IdlyVadai at 4/15/2015 08:15:00 AM 17 comments
Labels: உதவி