பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 24, 2014

லார்ட்ஸ் டெஸ்ட் -இங்கிலாந்தின் சொ.செ.சூ இந்தியாவின் ஏற்றம் -எ.அ.பாலா

28 நீண்ட வருடங்களுக்குப் பின், தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் இவ்வெற்றி, மிகவும் பாராட்டுக்குரியது என்பது அனைவரும் சொல்லும் ஒன்று தான். மிக முக்கியமாக, ஒரு இளம் இந்திய அணியின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்பதை நினைவு கொள்ள வேண்டும். டிராவிட், சச்சின், லஷ்மண், கங்குலி, சகீர் கான் என்ற ஜாம்பவான்கள் யாரும் இன்றி பெற்ற மகத்தான வெற்றி. 2011-ல் (இந்தியா மோசமாக தோற்ற) லார்ட்ஸ் போட்டியில் பங்கு பெற்ற அணியிலிருந்து தோனி, இஷாந்த் மட்டுமே இப்போது அணியில் உள்ளனர்.

ஏன் சொ.செ.சூ என்றால், இந்த 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனக்குச் சாதகமான “பச்சை”க்களத்தை தயார் செய்தது, ஆண்டர்சனும், ப்ராடும் (Broad சற்று Fraud-ம் தான்), இந்தியாவை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்! டாஸிலும் வென்று, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. எதிர்பார்த்தபடி இந்தியாவும் 145-7 என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தபோது, ரஹானே (103), புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் துணை கொண்டு, வழி நடத்தி, இந்திய ஸ்கோரை இரண்டு மடங்கு ஆக்கியதில், இந்தியா எடுத்த மொத்தம் 295. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்கள் அதிகம் எடுத்தும், இந்தியா 2-வது இன்னிங்ஸில் எடுத்த 342 ரன்களும், இஷாந்த்தின் அபார பந்து வீச்சும், இங்கிலாந்தின் எதிர்ப்பை முறியடித்தன.

களமும், ஸ்விங்கும் இருந்த விதத்தை வைத்துப் பார்க்கையில் இங்கிலாந்து முதலில் பேட் செய்திருந்தால், 150-ஐ தாண்டியிருக்காது என்று கூறுவேன். ரஹானேயின் முதல் இன்னிங்ஸ் சதம் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. இங்கிலாந்துக்கு தோதான ஒரு ஆடுகளத்தில், இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளில் 15-ஐ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதுவும் 2வது இன்னிங்க்ஸில் வெள்ளைக்காரர்கள் நமக்கெதிராக பொதுவாக பயன்படுத்தும் பவுன்சர் ஆயுதத்தை (தோனியின் பலத்த அறிவுரையின் பேரில்) இஷாந்த் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அசாதாரணம் என்பதோடு, மனவியல் ரீதியான ஒரு வெற்றியும் கூட!

இந்த லார்ட்ஸ் வெற்றிக்கு (தலைவர் தோனி தவிர்த்து) முக்கியக் காரணமாக குறிப்பிடவேண்டியவர்களாக, ரஹானே, முரளிவிஜய் (வித்தியாசமாக, இவர் பொறுமையின் உச்சமாக காட்சியளித்தது மன நிறைவைத் தந்தது), 2-வது இன்னிங்ஸில் 235/7 என்ற நிலையிலிருந்து இந்தியா 342 அடைய காரணமாக இருந்த ஜடேஜா மற்றும் வெறிபிடித்த வேங்கையாய் இங்கிலாந்தை வேட்டையாடிய இஷாந்த் ஆகியோர் இருந்தாலும், தனது ஆட்டத்தில் பரிமளித்தது மட்டுமன்றி (முதல் இன்னிங்ஸ் 6 விக்கெட்டுகள், 36 முக்கிய ரன்கள், 2-வது இன்னிங்க்ஸ் 52 மிக மிக முக்கிய ரன்கள்) “நம்மால் முடியும் அண்ணா” என்று சக வீரர்களுக்கு ஊக்கமும் அளித்த புவனேஷ்வர் குமார் தான் லார்ட்ஸின் கதாநாயகன் என்பது என் கருத்து.

1986-ஆம் ஆண்டு லார்ட்ஸ் வெற்றிக்கும் இந்த வெற்றிக்கும் சில சுவாரசியமான ஒற்றுமைகள் உள்ளன!

1. அப்போதும், இப்போதும் இந்தியாவின் கேப்டன்கள் உலகக்கோப்பையை ஏற்கனவே வென்றவர்கள் - கபில்தேவ், தோனி
2. அப்போதும், இப்போதும் தனது கடைசி இந்தியத்தொடரை வென்ற, ஓர் இடதுகை ஆட்டக்காரர் இங்கிலாந்தின் கேப்டன் - டேவிட் காவர், அலிஸ்டர் குக்
3. அப்போது ரோஜர் பின்னி, இந்த அணியில் அவர் மகன் ஸ்டூவர்ட் பின்னி
4. அப்போதும், இப்போதும் ஒரு துவக்க ஆட்டக்காரர், சென்னை மண்ணின் மைந்தன் - ஸ்ரீகாந்த், முரளிவிஜய்
5. அப்போதும், இப்போதும் ஒரு மும்பை வீரர் சதமடித்தார்! - வெங்க்சார்க்கர், ரஹானே
6. அப்போதும் ஷர்மா, இப்போதும் ஒரு ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர் - சேத்தன் ஷர்மா, இஷாந்த் ஷர்மா :-)
7. அப்போது ரவி சாஸ்திரியும், இப்போது ஜடேஜாவும் அணியில் ஆல்ரவுண்டராக
8. இறுதியாக, 1986 மற்றும் 2014 இந்த இரண்டு ஆண்டுகளும் repeating வகை, அதாவது, இவ்விரு ஆண்டுகளின் கேலண்டர்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.

தலைமைச்சுமையால், மிகச்சிறந்த ஆட்டக்காரரான குக் சொதப்புவது பார்க்க பரிதாபமாக உள்ளது. அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு ஆட்டக்காரராக அவரை இழப்பது இங்கிலாந்துக்கு பேரிழப்பாகவே அமையும். இந்தியாவைப் பொருத்தவரை, இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் இருப்பதால், தோனி அணியில் ஒரு complacency வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கும் இங்கிலாந்து க்ரீன் டாப் களங்களையே தேர்வு செய்யும், அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அதனால், இந்த 2 டெஸ்ட்களில் அத்தனை சிறப்பாக ஆடாத ஷிகர் தவானும், விராத் கோலியும் பொறுமையாக ஆடி ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்ப்பது மிக அவசியம். அனைவரும் டெஸ்ட் தொடரை இந்தியா இன்னும் வென்றுவிடவில்லை என்பது தெளிவாக நினைவில் இருத்துதல் அவசியமாகிறது.

---எ.அ.பாலா
1986 வருடம் புதன் கிழமையில் ஆரம்பிக்கிறது, 2014 வருடமும் புதன் கிழமையில் ஆரம்பிக்கிறது.

Read More...

Monday, July 21, 2014

வேலையில்லா பட்டதாரி - ஜெயக்குமார்


சவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 க்குப் பிறகு நான் மிக ரசித்துப்பார்த்த தனுஷ் படம் வேலையில்லா பட்டதாரி.

வேலையில்லா பட்டதாரி படும் சிரமங்களையும், படித்த வேலைக்கே போகவேண்டும் என நினைக்கும் படித்தவர்களுக்கு இன்றிருக்கும் சிரமங்களையும் அருமையாக சொல்லி இருக்கிறார்கள். அத்துடன் அரசாங்க காண்ட்ராக்டுகளில் என்ன நடக்கிறது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கின்றனர் தனுஷ்

தயாரிப்பும் தனுஷ்தான். நடிப்பதற்கு சிரமப்பட்டதாகவே தெரியாத மிக இயல்பான நடிப்பு. கொஞ்சம்கூட அலட்டாத அதே சமயம் நம் வீடுகளில், நட்புகளில் நடக்கும் காமெடி என்பதால் சும்மா ஊதித்தள்ளுகிறார்.
வீட்டுல தண்டமாத்தான இருக்க எனச் சொல்லி அவருக்கு சொல்லப்படும் வேலைகளாக ஞாயிறு கறி வாங்கிவரச் சொல்வது, தம்பியின் வண்டியை துடைத்து வைக்க, இப்படியாக.

அவரின் அந்தக்கால சைக்கிள் மொபெட்டை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் காமெடி
தம்பியுடன் ஒப்பிடும் அப்பாவிடம் சண்டைபோடும் இடத்தில் நடக்கும் காமெடிகள், அவனுக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக்குனு வச்சீங்க, எனக்கு மட்டும் வில்லன் பேரு ரகுவரன்னுதான வச்சீங்க என சீரியஸாய் கேட்பதும் அடியாட்களிடம் அடி வாங்கிக்கொண்டு இருக்கும்போது அம்மா சரன்யா அப்பாவேற வீட்ல இல்லாத நேரத்துல இவனுக வந்திருக்காங்க எனச் சொன்னவுடன் ஏம்மா நீயெல்லாம் ஒரு அம்மாவா, அப்பா வீட்டுல இல்லைன்னு மொதல்லையே சொல்லக்கூடாதா எனச் சொல்லிவிட்டு பட்டையைக் கிளப்புவதும் என பல இடங்களில் காமெடியில் கலக்குகிறார்.
பின்னர் படித்த படிப்புக்கான வேலை கிடைப்பதும் அதில் ஒரு பெரிய ப்ராஜக்ட்டுக்கு அவரை பொறுப்பாக்குவதும் அதற்கு வரும் தடைகளை உடைத்து ஜெயிப்பதுமாக மிச்சப்பாதி படம்.



இசை அநிருத். ஒரு மாஸ் படத்துக்கான இசையை கலக்கலாக கொடுத்திருக்கிறார். பாடல்கள் எல்லாமே நன்றாய் இருந்தது.
அப்பாவாக சமுத்திரக்கனி, அம்மாவாக சரன்யாவும் கச்சிதமாக நடித்துள்ளனர். சரன்யாவுக்கு அம்மா கேரக்டர் என்பது தினசரி வாழ்க்கைபோல அவ்வளவு இயல்பான நடிப்பு.

அம்மா போன் செய்து எடுக்காமல் இருந்து அதனால் அம்மா இறப்பதற்கு காரனமாய் தான் இருந்ததை நினைத்து அழும் கேரக்டரில் அவர் அழுவதைக் காட்டுவதில்லை. ஆனால், வசனங்களிலேயே மனதைத் தொடுகிறார். அதற்கு அவர் அப்பாவாக வருபவர் தனுஷுக்கு சொல்லும் ஆறுதல் இன்னொரு நல்ல விஷயம்.

இரண்டாம் பாதியில் வரும் விவேக் ஓக்கே. அவரது காலமெல்லாம் முடிந்துவிட்டதற்கான அறிகுறியாகத்தான் தெரிகிறது அவர் நடிப்பெல்லாம்.
வேலையில்லா பட்டதாரிகள் ஃபேஸ்புக் குருப் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அதில் படித்து வெளியாகும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர் பேசுவது இயல்பு மற்றும் நாட்டு நிலவரம். பொறியியல் படித்துவிட்டு கால்செண்டரிலும், சினிமாத்துறையிலுமாக இருப்பவர்கள் குறித்தும் சொல்கிறார்கள்.

வில்லனிடம் தான் சிறு குழந்தையில் இருந்து பட்டப்படிப்பு முடிப்பதுவரை நடந்ததை வரிசையாக சொல்வது கலக்கலான நகைச்சுவை.
வில்லனாக வருபவர் கணக்குக்கு மட்டுமே. மரணமாஸ் படத்தில் ஒரு சப்பை வில்லன். ஓகே ரகம்.
அமலாபால் வழக்கம்போல நல்ல நடிப்பு. அதே அழகான கண்கள். சொல்லிக்கொள்ளும்படி இல்லையெனினும் அவருக்கான பகுதியை நன்றாகவே செய்திருக்கிறார்.

சமுத்திரக்கனியின் நடிப்பும் மிக இயல்பு. வேலைல்லாத இளைஞர்கள் வீட்டில் இவ்வளவு கரிசனம் காட்டப்பட்டாலே நிறையப்பேர் மேலே வந்துவிடுவார்கள்.

சிகரெட்டின் கொடுமை மிக அழகாக காட்டப்படுகிறது. சரன்யாவின் நுரையீரலை எடுத்துப் பொருத்திய ஒரு பெண் அப்பாவுடன் வந்து நன்றி சொல்லும்போது பகீரென்றிருக்கிறது. சிகரெட் குடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் அந்த காட்சியில் வயிற்றை நிச்சயம் கலக்கி இருக்கும். அதேபோல இன்றைய கல்லூரி செல்லும் பெண்கள் செல்லும் பாதையும் சொல்லாமல் சொல்லப்படுகிறது. குடி, சிகரெட்டெல்லாம் ஆனுக்கு பெண் குறைந்தவர்களில்லை என இந்த விஷயத்தில் போட்டி இடுகிறார்கள்.

குறை என்றெல்லாம் ஏதும் சொல்லிவிட முடியவில்லை. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக வேகமாகச் செல்கிறது. சிலர் இரண்டாம் பகுதி ஸ்லோ என்பதாக சொல்லி இருந்ததைப் பார்த்தேன். அப்படியெல்லாம் இல்லை. இதைவிட சிறப்பாக எப்படிச் சொல்வதோ?
நிச்சயம் பிஜிஎம்முக்காக தியேட்டரில் பார்க்கவேண்டிய படம்.

தனுஷின் நடிப்பில் இன்னொரு அருமையான படம் வேலையில்லா பட்டதாரி.


Parking at owner's risk மாதிரி இந்த விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்ப்பது உங்க ரிஸ்க் :-)

Read More...

Friday, July 18, 2014

அரவிந்தன் நீலகண்டன் - நம்பக்கூடாத கடவுள் - ஜெயகுமார்



ஆதௌ கீர்த்தனாரம்பத்திலேயிருந்து இன்றுவரைக்குமான ஹிந்துத்வ சிந்தனைகளை தொன்மம், மதம், அரசியல், சமூகம், மானுடம், பிரபஞ்சம் போன்றவைகளுடன் இணைத்து நமக்கு தந்துள்ள அருமையான ஓர் புத்தகம் என நான் அறிமுகம் செய்வேன்.
முதலில் இந்தப்புத்தகம் நமக்குக்காட்டுவது நாம் இன்றுவரை கண்டிராத ஓர் கதவு. இதுவரை வெறும் ஹிந்துவாக, இந்தியனாக இருந்த நாம் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நம்மைக் குறித்த உண்மையன பெருமையும், நமது தொன்மம் குறித்த மனவிலக்கங்களிலிருந்தும், நமக்கு போலி பகுத்தறிவுவாதிகளால் நம்மீது சுமத்தப்பட்ட குற்ற உணர்சியிலிருந்தும் விடுதலை பெறலாம்.

நமது கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் சரித்திரத்துக்கும் , மேலை நாட்டு நாகரீகம் என நம்பப்படும் போலிகளிலிருந்து நாம் எவ்வளவுதூரம் மேம்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
அதே மேலைநாட்டுக் கலாச்சாரங்களில் இருந்து வந்தவர்களிலும் மனச்சாட்சியுடன் நடந்த, இயற்கையை உணர்ந்த, புதிய உலகை, நம்பிக்கையை, திறப்பைக் கண்டவர்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறது இந்த புத்தகம்.

கம்யூனிஸம் என்ற சமூகத்தீமை (இது என் நம்பிக்கை) மானுடத்திற்கு ஆற்றிய அளப்பரிய கொடுமைகளையும், மூர்க்கத்தனமான சிந்தனைகளால் எப்படி அறிவியலை எதிர்த்தது என்பதையும், தான் நம்பிய கொள்கைகளே சரி என்ற மமதையில் எப்படி இயற்கையை அடிமையாக்க முயன்றனர் என்பதையும் அதற்கு இயற்கை அளித்த எதிர்வினைகளையும் குளிகையாக்கி தந்துள்ளார்.

பல புத்தகங்களில் நாம் வாசித்து தெளியவேண்டியதை நமக்காக இச்சிறு புத்தகத்தில் மிக அழகாக புரியும் மொழியில் விளக்கியுள்ளார்.
அடிமைவியாபாரம் குறித்த பகுதிகளை படிக்க, படிக்க ஆத்திரமும், கோபமுமே மேலோங்குகிறது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகளுடன், மானுடவிரோதிகளாக இருந்த ஐரோப்பியர்களுக்கு எப்படி உலகை திருத்த எண்ணம் வந்ததோ? மறந்தும் அடிமைகளை மனிதர்களாக கூட நடத்தாமல் இருக்கும் அடிமைகள் இறந்துவிட்டால் கரும்புத்தோட்டத்திற்கு என்ன செய்வது எப்படி ஆட்களை எங்கிருந்து கொண்டுவருவது என்பது பற்றிய சிந்தனைகளில் இருந்தவர்கள்தான் தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்களாக சொல்லிக்கொண்டவர்கள், சொல்லிக்கொள்கிறவர்கள்.
நமது பாரம்பரிய மருத்துவமுறைகள் எப்படி மேற்குலகால் களவாடப்பட்டது என்பதும், அது எப்படி மீளப்பெறப்பட்டது என்பதும், மேலும் களவாடப்படாமல் தடுக்க இந்தியாவில் இருந்த சுயநலமற்ற மக்கள் எப்படி பாரம்பரிய மருத்துவ பயன்கள் உள்ள பட்டியலை தயாரித்து இந்திய மருத்துவ பயன்களுள்ள செடிகள், மரங்களையும், மருத்துவ முறைகளையும் களவாணித்தனமாக பேடெண்ட் செய்யமுயலும் கார்பரேட் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றினர் என்பதையும் படிக்கும்போது நம் நாட்டின் மீதான, பாரதத்தாயின் புதல்வர்களின் மீதான நம்பிக்கை கூடுகிறது.
பாரம்பரிய நெல்மணிகளை காப்பாற்றிய ஒருவரை நம் இந்திய அரசாங்கம் எவ்வளவு தூரம் கீழ்மைப்படுத்தியது என்பதையும், கடைசியில் அரசாங்கம் அவரது எதிர்ப்பைச் சமாளிக்க அவரையே பதவியில் இருந்து நீக்கியதும், மீண்டும் அவர் மனம் தளராமல் பாரம்பரிய நெல் சேகரிப்பை தொடர்ந்ததும் அதற்கு ஏற்பட்ட சிக்கல்களையும் படிக்கும்போது நம்மை ஆண்ட காங்கிரஸின் கோர முகம் தெரிகிறது. வெளிநாடுகளின் காலை நக்கிப் பிழைப்பதையும், அவர்களுக்கு அடிமைச்சேவை செய்வதையுமே காங்கிரஸ் 60 ஆண்டுகளாக செய்திருக்கிறது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்ற பெருமையை வைத்து மக்களை ஏமாற்றி உண்டு கொழுக்கும் கார்ப்பரேட் ரவுடிகளின் அடிமைச்சேவகர்களாகத்தான் இன்றைய காங்கிரஸ் இருந்திருக்கிறது.

இஸ்லாமியர்களை நம்பிச்சென்ற மேற்கு வங்கத்தின் மண்டலையும், அவரை நம்பிச்சென்ற தலித்துகளையும் நினைக்கும்போது பரிதாபம் மேலிடவில்லை. தெரிந்து பாழுங்கினற்றில் விழுந்த ஒருவராகத்தான் நினைக்கத்தோன்றுகிறது. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் தலித்தலைவரும் அதே பாழுங்கினற்றில் விழுந்திருக்கிறார் என்பதற்கு அம்பேத்கர் சிலையை முஸ்லீம் அடிப்படைவாதிகளை திருப்தி செய்வதற்காக அகற்றியதிலிருந்தே நாம் அறியலாம். அன்றைக்கு மண்டலுக்கு ஏற்பட்ட கதியையே தனக்கும், தன்னை நம்பி வருவோர்க்கும் கொடுக்க காத்திருக்கிறார். இன்றைய சொந்த லாபங்கள் அவருக்கு வருங்காலத்தில் ஏற்படப்போகும் பேரழிவை காணும் சக்தியை மறைக்கிறது. நாளை அந்த பேரழிவு நடக்கும்போது எல்லாமே காலம் கடந்துவிட்டிருக்கும். இந்துக்களாக இருப்பதைத்தவிர, இந்துக்களாக இருந்துகொண்டே உரிமைக்கு போரிடுவதைத்தவிர வேறு எந்த வழியும் அவர்களின் பேரழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதை அம்பேத்கர் உணர்ந்திருக்கிறார்.
அயோத்தி பிரச்சினையில் நம் போலி மதச்சார்பின்மை மகாத்மாக்கள் ஆடிய நாடகங்கள், பொய், புரட்டுகள் எல்லாவற்றையும் ஆதரத்துடன் சொல்கிறது இந்தப் புத்தகம். எனக்கும் பல விஷயங்கள் இதில் புதிதாய் தெரிந்தன.

ஜூராஸிக் பார்க் படத்தில் வரும் வசனத்தை வைத்து செயற்கை மரபனுக்களுடன் உருவாக்கப்பட்ட உணவு தனியங்களின் பயிர்கள் எப்படி சூழலை சமாளிக்க முடியாமல் பலவித நோய்களுக்கு ஆட்பட்டன, பின்னர் அதைச் சமாளிக்க என்னென்ன்ன விஷங்களை மருந்துகள் என்ற பெயரிலும், உரங்கள் என்ற பெயரிலும் இட்டு நம் நிலத்தை பாழாக்கினோம் என விளக்குகிறார். இறுதியில் நாம் டைனோசர்களின் பாதையில் செல்கிறோமா எனக் கேட்கிறார். ஆம் என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஆனால், அதை நம்மிடமே விட்டுவிடுகிறார்.
கஜினி முகமதுவையும், ராஜ ராஜ சோழனையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை ஒன்றுபோதும். இந்து தர்மத்தின் பெருமையைச் சொல்ல. எதிரிகளை வென்றாலும் அவர்கள் மதத்தை பரப்ப இடம் கொடுத்த கலாச்சாரம் எங்கே?, எதிரிகளின் சமய சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒழித்த இஸ்லாமிய அடிப்படைவாதம் எங்கே? அதன் தொடர்ச்சி இன்றுவரை பாமியான் புத்தரை பீரங்கியால் பிளந்தது, இன்றைக்கு ஈராக்கில் ஷியாக்களின் புனித மசூதிகளையும், கபர்ஸ்தான்களையும் அழிப்பதில் வந்து நிற்பதுவரை சகிப்புத்தன்மைக்கும் எங்களுக்கும் காத தூரம் என்பதை வரலாறு முழுக்க இடைவிடாது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், செய்துகான்பித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

காட்டுக்களவாணிகள் என்ற கட்டுரையில் எப்படி ஆதிவாசிகளின் எல்லா நம்பிக்கையையும் மறுத்து அவர்களை கிறிஸ்தவர்களாக்க முனைந்து, அவர்களை ஒடுக்கினார்கள் என்பதையும், பின்னர் அவர்களின் இறைவேசிகள் என்றழைக்கப்படும் ஷாமன்களின் மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் திருடி அதை கார்ப்பரேட் வணிகமாக்கினர் என்பதையும் சொல்கிறார். அதன் சிறந்த எடுத்துக்காட்டாக நம்மூர் வெங்காய தோசையை ஆனியன் பீட்சா என வெள்ளைக்காரன் மீண்டும் கொண்டுவந்து கொடுத்தால் 3 விலை கூடக்கொடுத்து தின்னும் மனநிலையில் வெள்ளைக்கார பொருட்களின் மீது மோகம் கொண்டலைகிறோம் என்பதையும் சொல்கிறார்.

சகோதரன் என்ற கட்டுரையில் இந்திரா பார்த்தசாரதியின் அவுரங்கசீப் நாடகத்தை முன்வைத்து நாம் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும், வரலாறு முழுக்க ஒருவருகொருவர் காட்டிக்கொடுத்தே காணாமல் போனதையும் சுட்டிக்காட்டுகிறார்.
காடுமிராண்டிச் சடங்காக கருதப்பட்ட தீமிதித்தல் இன்றைக்கு மேலை நாடுகளில் எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்ள ஒரு பயிற்சியாக பயன்படுத்தப்படுகிறது எனச் சொல்கிறார். நம்மை காட்டுமிராண்டி என சொல்லிவிட்டு அதையே தான் பயன்படுத்துவதன் மூலம் எப்படி நம் கலாச்சாரம் திருடப்படுகிறது என்பதற்கு ஓர் உதாரனமாகக் கொள்ளலாம்.

சதி என்ற அத்தியாயத்தில் எப்படி யூதர்களுக்கு எதிராக போலியாக உருவாக்கப்பட்ட ஒரு புத்தகத்தை வைத்து வெறுப்பை உமிழ்ந்தனர் எனக்காட்டுகிறது. நம் நாட்டிலும் பிராமண சமுதாயத்துக்கு எதிராக திராவிடர்க்கழகம் என்ற பெயரில் இயங்கும் நச்சுக் கும்பல்கள் செய்த செயல்களும் (குடுமி அறுப்பு, பூணூல அறுப்பு) அதன் தலைவரான ராமசாமி நாயக்கர் பாம்பையும், பாப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடி என்று வெறுப்பை உமிழ்ந்ததும் வரலாறு. அவரைத்தான் இன்றைக்கு பகுத்தறிவு பகலவன் என தமிழ்ச்சமூகத்தின் ஒரு சிறு குழு கொண்டாடுகிறது. இதே மேற்குலகாய் இருந்திருந்தால் யூதர்களுக்கு ஏற்பட்ட கதியே பிராமணர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்து பண்பாட்டின் எதையும் ஆராய்ந்து நோக்கும் தன்மை இப்படிப்பட்ட விஷப்பிரச்சாரத்தை நகைச்சுவையாக எடுத்துகொண்டது. ஆனால், இப்போது மேலும் விஷமான பிரச்சாரங்கள் பிராமணர்கள் மீது நடத்தப்படுவதாக தெரிகிறது. நாசமாப்போறவன் தான் மட்டும் போகாம ஒரு சமூகத்தையே நாசமாக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் போல. கிறிஸ்தவ எவாஞ்சலிக்கல் கும்பல்களும், இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல்களும் இந்தியாவில் நடத்த விரும்புவது இதையே.

இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் யூத வெறுப்பை நான் நேரடியாக கண்டிருக்கிறேன். அவர்களைப் பற்றி பேச்சு எழுந்தாலே முகத்தில் எழும் வெறுப்பும் அவர்களைப்பற்றி பேசநேர்ந்ததற்காக ஏற்படும் எரிச்சலையும் காணலாம். இஸ்லாமியர்களின் பார்வையில்
ஈரான் – ஈராக் போர் – யூத சதி
ஈராக் – குவைத் போர் – யூத சதி
பஹ்ரெய்னில் குழப்பம் – யூத சதி
எகிப்தில் மக்கள் கொந்தளிப்பு – யூத சதி
சிரியாவில் குழப்பம் – யூத சதி

என இப்படி மத்திய கிழக்கில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் ஆய்ந்தறிந்த விடை யூத சதி என்பது மட்டுமே. இதுதான் அவர்களின் கையாலாகாத தனத்துக்கும், அவர்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போதும், அவர்களுக்குள்ளும், வெளியிலிருந்தும் வாங்கும் அடிகளுக்கும் அவர்களுக்குள்ளேயே சமாதானம் அடைய இதுதான் பேருதவியாய் இருக்கிறது.

ஒர் அருமையான பொக்கிஷம் இந்நூல் என்பேன். அடிக்கடி நாம் எடுத்து வாசிக்க வேண்டிய புத்தகமும் கூட. எத்தனை காலம் நாம் ஏமாளிகளாய் இருந்திருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ளவும், இன்றும் நம்மை ஏமாற்றுவோர் யார் என்பதையும், நமது பாரம்பரியம் என்ன, கலாச்சாரம் என்ன, கடவுள் நம்பிக்கை குறித்த அடிப்படையான கேள்விகள், உலக சரித்திரத்தில் நடந்த கொடும் நிகழ்வுகள் குறித்து வரலாற்றுப்பார்வை என எல்லாவற்றையும் கொண்டு ஆனால் மிகச் சிறிய புத்தகமாக (160 பக்கங்கள்) வந்துள்ளது.
நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான புத்தகம் நம்பக்கூடாத கடவுள்.

புத்தகத்தில் பிடித்த வரிகள்..
“இத்தனைகோடி மக்கள் இருந்தும் முக்கி முக்கி ஒருமெடல்தானே நம்மால் எடுக்க முடிகிறது. ஆனால் சீனாவைப்பார் என நாம் அங்கலாய்க்கலாம். ஆனால் சீனாவின் சுரங்கங்களுக்குள் இறங்கிக் கரியெடுக்கும் தொழிலாளிக்கு இந்திய ஜனநாயகம் என்பது கைக்கெட்டாத தூரத்தில் இருக்கும் உயிர் காக்கும் அமுதம். “

“பிரணவம் பிரம்மத்தின் ஆன்மாவினுடைய ஒலிவடிவம். “அவையே தானேயாய்.. நீக்கமின்றி நிற்குமன்றே” என்கிறது சிவஞான போத சூத்திரம். உயிர்களனைத்தும் நீக்கமற நிற்கும் இறைத்தத்துவம் என்பது பாரத பண்பாட்டுக்குரல்.”
“அறிவியல் அமைப்புகளிடையே சர்வதேச அளவில் அறிவுப்பரிமாற்றம் தேவைதான். ஆனால், அது பரிமாற்றமாக இருக்க வேண்டும். கப்பமாக அல்ல.”

”ஆனால் இணைத்தன்மைகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. எலி வீஸல் தனது வதை முகாம் நினைவுகளின் நாவலான “இரவு” என்பதில் பைத்தியக்கார மோசே எனும் பாத்திரத்தைக் காட்டுகிறார். அவன், தான் சென்றிருந்த இடங்களில் நாஸிகள் செய்யும் பயங்கரங்களைக்கூறும்போது, அதை நம்பாமல், அந்த வடக்கு ட்ரான்ஸில்வேனிய ஊரின் யூதர்கள், மோசேயைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அந்த யூதர்களைப்போலவே 1947க்குமுன்னால் பாக்கிஸ்தானிய சிந்திகள் சிரித்திருக்கக்கூடும், 1971க்கு முன்னால் பங்களாதேஷின் சங்மாக்கள் சிரித்திருக்கக்கூடும்.1988க்கு முன்னால் காஷ்மீர பண்டிட்டுகள் சிரித்திருக்கக்கூடும். 2010ல் இலவச கலர் டீவிகளுக்கு முன்னால் அமர்ந்து தமிழர்கள் சிரிப்பதைப்போல.”


Read More...

Wednesday, July 16, 2014

வே(வெ)ட்டி கேள்வி பதில்கள்.

வேட்டி தமிழரின் பாரம்பரிய உடையா ?

இதில் என்ன சந்தேகம் ? வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும்; அதே போல் இட்லி பாரம்பரிய உணவாகும்.
பெரும்பாலும் வேட்டியை தினமும் யாரும் அணிவதில்லை. ஆனால் இட்லியை பெரும்பாலும் எல்லோரும் காலை சாப்பிடுகிறார்கள்.

வேட்டி கட்டிக்கொண்டு ஏன் ஆபீஸ் போக கூடாது ?

அலுவலகலத்தில் ஏதாவது ஃபேன்ஸி டிரஸ் போட்டி இருந்தால் தாரளமாக கட்டிக்கொண்டு போகலாம்.

வேட்டி ஏன் ஆண்கள் மட்டும் அணிகிறார்கள் ?

வேட்டி இடுப்பை சுற்றி அணிந்து கொள்ளப்படும் ஆடை, பெண்களுக்கு இடுப்பு இல்லாத காரணத்தால் பொதுவாக ஆண்கள் மட்டுமே அணிகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலேயர்களை 67 ஆண்டு களுக்கு முன்பே விரட்டிவிட்டோம். அதில் தமிழகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. சென்னையில் கிரிக்கெட் கிளப் மட்டுமல்லா மல், ஜிம்கானா, போட்கிளப், எம்சிசி போன்ற கிளப்களிலும் வேட்டி அணிந்து செல்பவர்களை அனுமதிப்பதில்லை என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறாரே ?

முதலில் கிளப் என்ற வார்த்தையை தமிழ் படுத்த வேண்டும் பிறகு வேட்டி பற்றி யோசிக்கலாம். கூடவே ஒரு படம் இணைத்திருக்கிறேன். சும்மா பாருங்க.

தமிழுக்கும் வேட்டிக்கும் என்ன சம்பந்தம் ?

துணியை வெட்டி அணிவதால் அதற்கு பெயர் வேட்டி. மற்றபடி வெட்டி சண்டை போடுபவர்களுக்கும், சண்டையில் சுலபமாக இழுத்துவிட வேட்டி சிறந்த உடை அவ்வளவு தான்.

ஒரு டவுட் - கூடவே மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் என்ற பெயரை மாற்ற வேண்டுமா ?

மெட்ராஸ் மாகாணம்’ என்பதை ‘தமிழ்நாடு’ என மாற்றி இந்திய அரசு உத்தரவிட்டபோது‘ மெட்ராஸ் ஹை கோர்ட்’ பெயரை ‘தமிழ்நாடு ஹை கோர்ட்’ என மாற்றினால் வெளிநாடுகளில் குழப்பம் ஏற்படும் என்றார்கள்! இன்றும் இதே நீடிக்கிறது. மெட்ராசிற்கு மட்டுமா இது கோர்ட் ? தமிழ்நாட்டிற்கான ஹை கோர்ட் அல்லவா ? கேரளா ஹை கோர்ட் கர்னாடகா ஹை கோர்ட் என்பது போல தமிழ்நாடு ஹை கோர்ட்’ என்றறு முதலில் மாற்ற வேண்டும் பிறகு கிரிக்கெட் பக்கம் வரலாம்.


வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிப் பதற்காக கோ-ஆப்டெக்ஸ் மூலம் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது என்று ஸ்டாலின்
கூறியிருக்கிறாரே ?
வேட்டி தினமும் அணிந்தால் இந்த தினம் கொண்டாட தேவையில்லை !

தற்போது வேட்டி பிரச்சனை என்ன விளக்கவும் ?
கடந்த 11-ஆம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் முன்னாள் நீதிபதி அருணாசலம் எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமனுக்கு அவர் வேட்டி அணிந்திருந்தார் என்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் விழாவில் கலந்துக்கொள்ளாமல் திரும்பினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் மற்றும் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப் உள்ளிட்டவை மீது நடவடிக்கை எடுப்பதுடன், புதிதாக விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டுள்ளது.

நீதிபதி என்ன சொல்லியிருக்கிறார் ?

கிரிக்கெட் கிளப்பில் நடந்தது தனியார் பொது நிகழ்ச்சி. மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறுவதாக அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது. நான் எனது அலுவலக காரில் மாலை 5.25 மணிக்கு சென்றேன். வேட்டி கட்டி இருந்ததால் அங்கிருந்த ஊழியர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். அதை கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த செயல் வியப்பாக உள்ளது. கிரிக்கெட் கிளப்பை உருவாக்கியபோது ஆங்கிலேயர்கள் அவர்களது ஆடை வரையறையை உருவாக்கி இருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு பிறகும் அதே ஆடை கட்டுப்பாட்டை தொடர்ந்து பின்பற்றுவதும், நமது பாரம்பரிய ஆடைகளுக்கு தடை விதிப்பதும் வியப்பாக உளளது என்றார்.

ஏன் ஆங்கிலேயர் வழக்கத்தை இன்னும் இந்த கிளப் விடவில்லை ? தப்புதானே ?

தப்பு தான். அதே போல ”மைலார்ட” என்று கோர்ட்டில் வாதாடுவதற்கு முன் சொல்லுவதும், கறுப்பு கோட் அணுவதும் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய பழக்கம்தான். இன்று கோர்ட்டுக்கு வக்கீல்களும், நீதிபதிகளும் வேட்டி அணிந்து கொண்டு செல்லலாமா ?

வேட்டி பற்றிய கோர்ட் கேஸ் என்னவாகும் ?

சட்டப்படி இது செல்லாது. தனியார் கிளப் களின் நிர்வாகத்தில் தலையீடுவது போல் ஆகும். அவர்களுடைய விதிகளுக்கு உட்பட விருப்பமில்லை என்றால் செல்ல வேண்டாம்.

வேட்டி கட்டிக்கொண்டு கிரிக்கெட் ?

வேஷ்டி அணிந்து கொண்டு தான் இனிமேல் சென்னையில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் என்ன வெயிலுக்கு காத்து உள்ளே போகும் கூடவே பந்தும்.

கிளப் விளக்கம் என்ன ?

குடிபோதையில் வேட்டி கட்டியிருந்தால் கழன்று விழுந்து மானக்கேடாகி விடுமே என்பதற்காகத்தான் வேட்டி கட்டிக் கொண்டு வர தடை விதித்துள்ளோம். யார் வேண்டுமானாலும் எங்களது கிளப்புக்கு வரலாம். ஆனால் வேட்டி கட்டி வரக் கூடாது. வேட்டி கட்டினால் இங்கு வருவதைத் தவிர்த்து விடுங்கள்.


வேட்டி பிரச்சனை மாதிரி லுங்கி பிரச்சனை வருமா ?

ஏற்கனவே ஞாநி அதை செய்துவிட்டார். கமலா தியேட்டரில் அவர் மட்டும் லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்கலாம் என்ற சிறப்பு அனுமதி அவருக்கு உண்டு.

இது என்ன கலாட்டா ? எங்கிருந்து ஆரம்பித்தது ?

ஒரு கோவில் சுவரில் ‘இங்கே லுங்கி, நைட்டி அணிந்து வரக்கூடாது’ என்று போட்டிருந்ததை நான் ஃபேஸ்புக்கில் விமர்சித்தார். லுங்கி என்பது மதம் சார்ந்த உடை அல்ல. ஏழைகளின் உடை என்று போராடினார்.

ஞாநி போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா ?

தெரியாது ஆனால் அவருக்கு ஒரு லுங்கி இலவசமாக கிடைத்தது.

கோயில்களில் லுங்கி உங்க கருத்து ?

கோபால் சுப்பிரமணியம் பத்மநாபசுவாமி கோயில் சென்ற போது சட்டை இல்லாமல் வேட்டி அணிந்துக்கொண்டு தான் சென்றார். அப்போது எல்லாம் யாரும் பிரச்சனை செய்யவில்லையே ? பிடிக்கவில்லை என்றால் கோயிலுக்கு போகாதீர்கள்.

கட்சிக் கரை வேட்டிகள் பற்றி

அவை கறை வேட்டிகள். ’கறை நல்லது’ அதாவது மக்கள் நலனில் அக்’கறை’.

கடைசியாக உங்க கருத்து ?

சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்

Read More...

Tuesday, July 15, 2014

நீதிக்காக நீண்ட பெரும்போராட்டம் - முடிவில் மரணம்

தனது 17வது வயதில் (21 ஆண்டுகளுக்கு முன்) ஆறு புதுச்சேரி போலீஸ்காரர்களால் வன்புணர்வுக்கு ஆளாகி, அதன் பின்னர் பல ஆண்டுகள் மனஉறுதியுடன் நீதிக்காகப் போராடிய, இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த “அத்தியூர் விஜயா”, 2 தினங்கள் முன்பு இறந்து போனார். 38 வயதான அவர், கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்ததாகத் தெரிகிறது.

1996-ல் ஷெட்யூல்ட் பழங்குடியினர் பாதுகாப்பு இயக்கத்தை (Scheduled Tribe Protection Movement)தொடங்கிய பிரபா கல்விமணி, விஜயா பல ஆண்டுகளாக, மனரீதியாக அனுபவித்த பெரும் வேதனையை வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.

விசாரணை என்ற பெயரில், விஜயாவையும் அவரது பெற்றோரையும் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு கூட்டிச்செல்கையில், வழியில் வெள்ளாமை என்ற கிராமத்தில், ஆறு காவலர்கள் விஜயாவை வன்புணர்ந்துள்ளனர். அடுத்த நாள், ஆனந்தபுரம் காவல் நிலையத்தில், விஜயாவின் தந்தை அக்காவலர்கள் பேரில் கொடுத்த புகாரை சினிமாவில் வரும் காட்சி போல ஏற்க மறுத்துள்ளனர்.....

ஒரு பெரிய போராட்டத்திற்குப் பின்னர், விழுப்புரம் ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டு, விஜயா காவலர்களால் வன்புணரப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தமிழக அரசு விஜயாவுக்கு ரூ 25000 ஈடாக வழங்கியது. தேசிய மனித உரிமை கமிஷன், விஜயாவுக்கு 2 லட்சம் வழங்குமாறு புதுச்சேரி அரசுக்கு ஆணையிட்டது. ஒரு வழியாக, ஜூலை1997-ல் CB-CID அந்த 6 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது!



பணத்தின் மூலம், outside of court settlementக்கு, குற்றம் சாட்டப்பட்ட காவலர் ஆறு பேரும் செய்த முயற்சி, விஜயாவின் மன உறுதிக்கு முன் தோற்றுப்போனது. 13 ஆண்டுகால பெரும் போராட்டத்தின் முடிவில், ஆகஸ்டு 2006-ல் நீதிபதி ரத்தன்ராஜ் ஆறு காவலர்களுக்கும் வன்புணர்வு குற்றத்துக்காக, பணி நீக்கமும், ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து, மூன்றே மாதங்களில் பெயிலில் வெளி வந்து விட்டனர்.

குறிப்பிட்ட கால அவகாசத்தில் விஜயாவின் தரப்பு (காவலரின்) மேல் முறையீட்டுக்கான எதிர்ப்பை பதிவு செய்யாததை காரணம் காட்டி, செப் 2008-ல் சென்னை உயர்நீதி மன்றம் அவர்களுக்கு விடுதலை வழங்கியது! இத்தீர்ப்புக்குப்பின் விஜயா மிகப்பெரிய மனச்சோர்வுக்கும், மனவேதனைக்கும் ஆளானார் என்று கல்விமணி கூறுகிறார். ஒரு சாதாரண குடிமகனின், முக்கியமாக நீதியின் தேவையை பெருமளவு வேண்டியிருக்கும் சாராரின், நம்பிக்கைக்கு இத்தீர்ப்பு பெரும் பாதகத்தை விளைவித்திருப்பதாகவும் கல்விமணி தெரிவித்துள்ளார்.

தீர்ப்புக்குப் பிறகு, விஜயாவின் குடும்பத்தினரும், பிற உறவினரும், அவரை ஒதுக்கி விட்டனர் இளவயதினருக்கான சமூக விழிப்புணர்வு அமைப்பைச் (Social Awareness Society for Youths) சேர்ந்த முருகப்பன், விஜயாவுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டிருப்பின், வறுமையால் ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு ஆளாகி, குறைந்த வயதில் இறந்திருக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறுகிறார்.

நன்றி: தி இந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Read More...

Thursday, July 10, 2014

ராமானுஜனின் மனைவி - ஞாநி

இரவுக் காட்சிகள் பார்ப்பதில்லை என்ற பத்தாண்டு விரதத்தை முறித்து, நேற்று இரவு ஞான ராஜசேகரனின் 'ராமானுஜன்' படச் சிறப்புக் காட்சிக்குச் சென்றேன். சில குறைகள் இருந்தபோதும் நல்ல முயற்சி. படத்தின் சிறப்பு அம்சம் ரமேஷ் விநாயகத்தின் இசை. படம் பார்த்து முடிந்து வந்தபின் நள்ளிரவுக்கு மேல் கணித மேதை ராமானுஜனின் மனைவி ஜானகி அம்மாளைப் பற்றிய குறிப்புகளை இணையத்தில் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருந்தேன்.

பாரதியின் மனைவியை போல ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கைதான் இன்னும் சொல்லப்படாத வாழ்க்கைகளில் முக்கியமானதாக பட்டது. இது எடுக்கப்படாத இன்னொரு படத்துக்கான கதை. ராமானுஜன் 32 வருடம்தான் வாழ்ந்தார் (1887-1920). ஜானகி 94 வயது வரை இருந்தார்(1899-1994). ராமானுஜனுக்கு ஜானகியை கன்னிகாதானம் கொடுத்தபோது ஜானகி வயது 9. ராமானுஜன் வயது 21. தன் 15வது வயதில் பருவமடைந்தபின்னர்தான் ஜானகி ராமானுஜனுடன் சென்னையில் குடும்பம் நடத்த வருகிறார். அடுத்து சேர்ந்து வாழ்ந்தது இரண்டே வருடங்கள். அடுத்த ஆறு வருடங்கள் ராமானுஜன் வெளிநாட்டில். திரும்பி வந்த ஒரே வருடத்தில் ராமானுஜன் மரணம். அப்போது ஜானகிக்கு வயது 21. அடுத்த எட்டாண்டுகள் தன் சகோதரருடன் மும்பையில் இருக்கிறார். அங்கே தையல் வேலையும் ஆங்கிலமும் கற்றுக் கொள்கிறார். பின் திருவல்லிக்கேணிக்கு திரும்பி வந்து கொஞ்ச காலம் தன் சகோதரியுடன் இருக்கிறார். பின் தனியே தன் உழைப்பில் தையல் வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார். அவர் அப்படி தனி வாழ்க்கை நடத்திய காலத்தில் இருந்த ஒரு சிநேகிதி 1950ல் இறந்துவிடவே, அந்த சிநேகிதியின் 7 வயது 'அநாதை'க் குழந்தையை தானே வளர்த்து ஆளாக்குகிறார். அப்போது ஜானகிக்கு வயது 51. மகனை பி.காம் வரை படிக்க வைக்கிறார். வங்கி அலுவலராக பணி சேர்ந்த அந்த வளர்ப்பு மகனுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அந்த மகனின் பராமரிப்பில் இறுதி வரை இருக்கிறார்.

1962ல் ராமானுஜனின் 75வது பிறந்த வருட கொண்டாட்டம் வரை ஜானகி அம்மாளை ( இப்போது வயது 63 ) அரசோ அமைப்புகளோ பெரிதாக கவனிக்கவில்லை. ராமானுஜனுக்கான பென்ஷன் பணம் மாதம் ரூ 50. மெல்ல மெல்ல இது 1994ல் ரூ 500 ஆயிற்று. 1962க்குப் பின் நன்கொடைகள் கணிசமாக வந்தன. இதில் திருவல்லிக்கேணியில் தனக்கென ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே இருந்தார் ஜானகி. நிறைய ஏழை மாணவர்களுக்கு எப்போதும் பண உதவி செய்துவந்திருக்கிறார். தையல் டீச்சர் ஜானகி கணித மேதை ராமானுஜன் அளவுக்கு முக்கியமானவர். தன் கணித மேதமையை உலகம் அங்கீகரித்து உதவும் வரை வறுமையில் வாட நேர்ந்ததால், அடிகக்டி மனச் சோர்வுக்கு ஆளானவர் ராமானுஜன். ஜானகி நேர்மாறாக வாழ்க்கை தனக்கு அளித்த இடையூறுகளை மீறி நம்பிக்கையோடு வறுமையில் செம்மையாக வாழ்ந்து சாதித்தவர்.

நன்றி: ஞாநி ஃபேஸ்புக் பக்கம்.

Read More...

தொட்டால் தொடரும் - கேபிள் சங்கர்


வாழ்த்துகள் நண்பரே !

Read More...

Wednesday, July 09, 2014

அமித் ஷா


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா நியமனம்
Brazil vs Germany: Not just a loss for Brazil, but a defeat for football fans

Read More...

12 Angry men - ஜெயகுமார்



12 Angry men
1957ல் வெளிவந்த கருப்பு வெள்ளைப்படம்.
ஒரு சிறுவன் தனது தகப்பனை கத்தியால் குத்திக் கொன்றதை சாட்சியோடு நிரூபிக்கப்பட்ட ஒரு வழக்கு.
12 பேர் கொண்ட ஜூரிக்கள் குழு அவர்களது கருத்தை ஒருமித்து அவன் குற்றவாளிதான் அல்லது குற்றமற்றவன் எனச் சொல்ல வேண்டும். அவர்களுக்குள் ஏற்படும் விவாதமும் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை.
முதலில் இந்தப்படத்தின் சிறப்பு என நான் நினைப்பது 1.5 மணி நேரம் ஓடும் இந்தப் படத்தை ஒரு அறைக்குள்ளேயே எடுக்க முடியும், அதையும் சுவாரசியமாய் எடுக்க முடியும் என நம்பியது, அதை எடுத்தது.
12 பேர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறைபோல. தொழில்துறை நடிகர்கள்போலல்லாமல் 12 பேர்களும் சாதாரன அமெரிக்கர்கள் வெவ்வேறு துறைகளில் இருப்போராகவும் ஒரு விவாதத்துக்கு கூடிப்பேசினால் எப்படி இருக்குமோ அப்படி அழகாக நடித்துள்ளனர்.
விவாதம் ஆரம்பித்ததுமே முதலில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. யார் யாரெல்லாம் குற்றம்சாட்டப்பட்டவன் குற்றவாளி அல்லது இல்லை என நினைக்கிறார்கள் என்பதற்காக. 12பேரில் ஒருவர் தவிர எல்லோருமே அவரை குற்றவாளிகள் என வாக்களிக்கிறார்கள்.
அந்தக்கூட்டத்தில் ஒருவர் ஆ, எல்லாக்கூட்டத்திலும் இருக்கும் அந்த ஒருத்தன் என கிண்டல் செய்கிறார்.
குற்றமற்றவர் என வாக்களித்தவர் தனது தரப்பாக கொல்ல பயன்படுத்திய கத்தியைவைத்து தனது தரப்பை சொல்ல ஆரம்பிக்கிறார். ஜுரிக்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக அந்தக் கத்தியே கொலைசெய்வதற்காகவே செய்யப்பட்டதுபோல இருப்பதாக கருத அவர் மட்டும் அந்தக் கத்தி கொலை நடந்த வீட்டின் இரு தெருக்கள் தள்ளி கிடைப்பத்தாகவும் தான் அதை வாங்கியதாகவும் அதன் விலை 6 டாலர் எனவும் சொல்லி டேபிளில் வைக்கிறார்.


அந்த விவாதத்திலேயே ஒருவர் மனது மாறுகிறார். இப்போது ”ஆம்” என்போர் 10பேர், இல்லை என்போர் 2 பேர்.
பின்னர் விவாதம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டின் அமைப்பு, கொலை நடந்த இடத்திற்கும் குற்றவாளி ஓடி வந்ததாகவும் சொல்லப்படும் இடத்தின் தூரம்,
கொலை செய்தவன் ஏன் மறுபடியும் வீட்டிற்கு வந்தான் என்பதை வைத்தும்
கொலை செய்ததாக தன் கண்ணால் கண்டதாக சொன்ன சாட்சியின் கண்பார்வை குறித்த நியாயமான கேள்விகள்
சிறுவனான அவன் தன் அப்பாவைக் கொல்ல வேண்டுமெனில் சாத்தியக்கூறுகளில் உள்ள குறைபாடு,
இப்படி ஒவ்வொன்றாக சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படவனுக்கு சந்தேகத்தின் பலனை அளிக்கின்றனர். இறுதியில் 11 பேர்கள் இல்லை எனவும் ஒரே ஒருவர் மட்டும் ஆம் என வாக்களிக்கிறார். இறுதியில் அவரை அவரது தரப்பை நிரூபிக்கும்படிச் சொல்ல அவரும் முயன்று முடியாமல் அவரும் ஒத்துக்கொள்வதுடன் படம் முடிகிறது.
படம் ஆரம்பத்திலிருந்து அந்த அறையின் சூழல், மழை வரும் முன்னர் இருக்கும்வெம்மை ஒவ்வொருவரையும் எரிச்சல்கொள்ளச் செய்கிறது. இதுல பேசுறதுக்கு என்னய்யா இருக்கு, ஆமா அவனுக்கு தண்டனையை உறுதி செய்துவிட்டுப் போறதுதான எனச் சொல்வதிலேயே பலர் இருக்கின்றனர்.
விவாதத்தின் நடுவே இடைவேளைகள் விடுகின்றனர். ஒவ்வொருவரும் அவர்களது தரப்பை மறுபரிசீலனை செய்கின்றனர்.
பயங்கர சூடாக நடக்கும் விவாதம் வெளியே மழை பெய்ததும் எரிச்சல் குறைந்து பேசும் விஷயத்தில் குவிகின்றனர்.
1957ல் நடக்கும் படத்தில் நான் கவனித்தது அப்போதே வாஷ்பேசின் இருந்திருக்கிறது. கைகழுவ திரவசோப் வைப்பதும் இருந்திருக்கிறது. கைதுடைக்க, முகம் துடைக்க துணி வைத்திருக்கின்றனர் (ரோலிங் ஸ்டைல்) விவாதம் நடக்கும் அறையில் தண்ணீர் பாட்டில் ( Water Dispenser with cups) வைத்திருக்கின்றனர்.

அப்போதைய அமெரிக்க பொதுப்புத்தியான, இன்றைக்கும் நம் நாட்டில் நிலவும் பொதுப்புத்தியான சேரிகளில் வாழ்வோர் குற்றம் சாட்டப்பட்டிருப்பின் அவர்கள் குற்றவாளிகளாக இருக்கவே வாய்ப்புண்டு. சேரிகள் குற்றங்கள் உருவாகும் இடம் என்பதை பேசுகின்றனர்.
நீதிமன்றத்தில் சாட்சிகளின் நம்பகத்தன்மை சோதிக்கப்படாமல் குற்றவாளிதான் என்ற அனுகுமுறையிலேயே வழக்கு நடந்திருக்கிறது.
படத்தில் நடித்த 12 பேரில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். ஒருவர் ஆரம்பத்திலிருந்தே மிகக்கோபமாகவே இருக்கிறார். இன்னொருவர் எப்போதும் தனது தரப்பை கோபாவேசமாகவே சொல்கிறார். சிலர் வாதம் நடப்பதைப் பொறுத்தும், சந்தேகத்தின் பலனை அளித்தும் தங்களது நிலையை மாற்றிக்கொள்வதும், விவாதத்தின் உச்சியில் ஒருவர் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் எனப்பாயும் அளவு நடக்கிறது.
ஒரே அறைக்குள் படம் நடந்தாலும் அலுக்காமல் பார்க்க வைப்பது திரைக்கதை. அதைவிட முக்கியம் விவாதங்களில் வெளிப்படும் நல்ல வசனங்கள் மற்றும் தீவிரத்தன்மையுடன் இருக்கும் விவாதம்.
க்ளோசப் காட்சிகளில் நடிகர்கள் காட்டும் முக பாவங்கள், வெறுப்பு, கோபம், கிண்டல், நக்கல், இப்படி ஒரு கோணம் இருக்கிறதோ எனத்தெரிந்ததும் காட்டும் முக பாவங்கள், அவர்களின் அசௌகரியாமான அங்க அசைவுகள், இவ்வளவுக்கு நடுவிலும் தீவிரமாக நடக்கும் விவாதம் எல்லாம்.

இசையைப்பற்றி குறிப்பிட்டுச் சொல்லத்தெரியவில்லை. இந்தப்படத்தில் இசையை இறுதிக்காட்சிகளில் மட்டுமே உணர்ந்தேன். மற்ற நேரங்களில் மிக அடங்கியே இருக்கிறது.

படம் முழுக்க வசனங்களிலேயே கட்டப்பட்டிருப்பதால் அமெரிக்க ஆங்கிலவசனங்களை புரிந்துகொள்ளும் அளவு தெரிந்திருந்தால் ரசிக்க நன்றாய் இருக்கும். இல்லையெனில் சப் டைட்டிலுடன் படம் பாருங்கள்.
எனது சேமிப்பில் இந்தப்படம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக இருக்கிறது. அவ்வப்போது நல்ல படம் எனக் கேள்விப்படுவேன். ஆனால், ஒரே அறைக்குள் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளைப்படத்தை எவன் பார்ப்பான் எனத்தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். இன்றைக்கு திடீரென பார்க்கத்தோன்றியதால் பார்த்து பிரமித்தேன். இவ்வளவு நல்ல படத்தையா இத்தனைநாள் தவறவிட்டோம் என இருந்தது.
வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பாருங்கள்.

ஜெயகுமார்


Read More...

Monday, July 07, 2014

அதிமுக ஆட்சியில் ..... கலைஞர் வருத்தம்!

சென்னை, மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து, 61 பேர் மாண்டு மடிந்த துயரம் நம் இதயங்களை விட்டு அகலாத நிலையிலேயே, செங்குன்றம் அருகே தனியார் குளிர்பான கம்பெனியின் சுவர் இடிந்து விழுந்து ஒரு குழந்தை உட்பட தொழிலாளர்கள் 11 பேர் பலியான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். என்ன காரணத்தாலோ, அ.தி.மு.க. ஆட்சி என்றாலே இவ்வாறு அகால மரணங்கள் அடிக்கடி நிகழ்வதும், அதில் பல பேர் மாண்டு மடிவதும் தொடர்ந்து வருகின்றது - கலைஞர்



அதிமுக ஆட்சியில் தான் திமுக குடும்ப சண்டையும் அதிகம் வருகிறது என்பதை சொல்ல மறந்துவிட்டார்.

Read More...

Sunday, July 06, 2014

முடிவுக்கு வந்த கொலை

சில நாள் முன், சங்கரன்கோவில் நகர இந்து முன்னணிச் செயலாளர் ஜீவராஜின் படுகொலைக்கு அந்த அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று வந்த செய்தி - என் முன்பாகவே 2வது மனைவியுடன் உறவில் ஈடுபட்டதால் கொன்றேன்.. இந்து முன்னணி தலைவரின் மனைவி வாக்குமூலம்.


கடந்த சில நாளாக ஃபேஸ்புக்கில் இவர் கொலையை பற்றி பலர் பல விதமாக பேசினார்கள். ஆனால் ஒருவர் கூட ஒழுக்கத்தை பற்றி பேசவில்லை. தமிழக காவல் துறைக்கு வாழ்த்து !

Read More...

Friday, July 04, 2014

வருத்தமும் மன்னிப்பும்

தேர்தல் சமயத்தில் இட்லிவடை தளத்தில் வலது பக்கத்தில் ‘ஆலந்தூர் இடைத்தேர்தல்லில் ஆம் ஆத்மி வேட்பாளராக ஞாநி’ என்ற செய்தியுடன், ஒரு சினிமா படத்தை போட்டிருந்தோம்.

மூத்த பத்திரிக்கையாளர் ஞாநி மீது இட்லிவடை மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. அவரை இழுவுப்படுத்தும் நோக்குடன் செய்தது அல்ல. ஆனால் பிறர் மனம் வருந்தும் படி செய்துவிட்ட அந்த அந்த படத்தை நீக்கிவிட்டு, அவரிடம் மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
இட்லிவடை

Read More...

Thursday, July 03, 2014

இன்றைய ஈராக் - ஈராக்கிலிருந்து ஜெயகுமார் - பகுதி - 2


சமீபத்தில் இட்லிவடையில் நான் எழுதியதின் அடுத்த பகுதி இது. சமீபத்திய களநிலவரங்களையும், கேள்விப்பட்டதையும் வைத்து இந்த ரிப்பொர்ட்.

தேர்தலுக்கு பிறகு புதிய பாராளுமன்றம் கூடியதுமே ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஈராக்கின் அரசியல் முழுக்க முழுக்க ஈரானைச் சார்ந்தது. இந்தநிலை சதாமின் அழிவுக்குப்பின்னர் உண்டான நிலை.

சதாம் காலத்தில் ஷியாக்களும், குர்துகளும் கொடூரமாக ஒழிக்கப்பட்டனர். பெரும்பான்மையாக ஷியாக்கள் இருந்தும் அவர்களின் இமாம்களை தரிசிக்கக்கூட பயங்கர கெடுபிடிகளை விதித்தார் சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுசைன். நான் (சதாம் ஹுசைன்) உங்கள் இமாம்களை விட பெரியவன் எனச் சொல்லி ஷியாக்களின் உணர்வுகளை புன்படுத்தினார். சதாமைப் பார்த்து நீங்கள் தப்பு செய்கிறீர்கள் எனச் சொன்ன ஷியா மதகுருமார்களை கொன்றழித்தார். இதெல்லாம் சதாம் உயிருடன் இருந்தவரையில். சதாம் ஒழிந்து மீண்டும் மக்களாட்சி மலர்ந்ததும் பெரும்பான்மையினரான ஷியாக்கள் ஆட்சிக்கு வந்தனர்.

அன்றிலிருந்து சதாம் ஷியாக்களுக்குச் செய்ததை ஷியாக்கள் சன்னிகளுக்கு செய்ய ஆரம்பித்தனர். குர்திஸ்தான் பிரிவினை கோரிக்கை சதாமின் காலத்துக்கு முந்தையது. ஆனால், தொடர்ந்து அந்த கோரிக்கை அடக்கப்பட்டே வந்திருக்கிறது. ஈராக்கில் மக்களாட்சி மலர்ந்தபின்னரும்கூட குர்திகள் ஈராக்குடன் இணைந்து இருப்பதை விரும்பவில்லை. தனிநாடாக போய்விடவேண்டும் என்றே நினைத்தனர் / நினைக்கின்றனர். அவர்களின் எண்ணம் சரியே என்பதற்கு வசதியாக குர்திஸ்தானத்துக்கு கிடைக்க வேண்டிய எண்ணெய் விற்பனையின் பங்குப்பணம் சரியாக கொடுக்கப்படவில்லை. இன்றைக்கும் பாக்தாத் கொடுத்தால்தான் சம்பளம் என்ற அளவில் நிலை. எண்னெய் வளம் இருந்தும் பிச்சைக்காரர்களைப்போல நடத்துவதால் பயங்கர கடுப்பில் இருக்கின்றனர். இதன் விளைவு தனி நாடு பிரிவினை கோரிக்கை இன்றைக்கு முழு உச்சத்தில்.

ஐ எஸ் ஐ எல் மோசுலின் உள்ளே புகுந்ததும் குர்துகள் செய்த முதல் வேலை குர்திஸ்தானின் பகுதி என அவர்கள் நம்பும் திக்ரித் பகுதியின் எண்ணெய் வளங்களை பாதுகாக்க ஆரம்பித்தனர். (குர்திகளின் மிலிட்டரியில் கிட்டத்தட்ட 1,25000 பேர் இருக்கின்றனர். இவர்கள் ஈரக்கிய மிலிட்டரி அல்ல. குர்திஸ்தானத்து மிலிட்டரி) இன்றைக்கு ஐ எஸ் ஐ எல்லின் பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதில் குர்திகளுக்கும் பங்குண்டு.

இந்த நிலையில் கடந்த ஜூலை 1 ம் தேதி கூடிய பார்லிமெண்டில் குர்திகள் எங்களுக்கு தனி நாடு தவிர வேறு வேண்டாம் எனச் சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

சுன்னி இஸ்லாமியர்கள் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவமோ அல்லது உரிய மரியாதையோ வழங்கப்படுவதில்லை, அது கிடைக்கும்வரை நாங்களும் வெளிநடப்பு செய்கிறோம் எனச் சொல்லி வெளியேறினர்.

ஈராக்கின் ஷியாக்களுக்குள்ளேயே நூரி அல் மாலிக்கி மூன்றாம் முறையாய் பிரதமர் ஆக முனுமுனுப்புகள் இருக்கிறது. இருப்பினும், இன்றைக்கு அவரைவிட்டால் வேறு வழியில்லை என்பதால் மற்ற ஷியாக்கள் அடக்கி வாசிக்கின்றனர்.

இன்றைய தேதிக்கு பார்லிமெண்டைவிட ஈராக்கின் ஐ எஸ் ஐ எல்லால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதே முதல் வேலையாக இருக்கும் நேரத்தில் இந்த சண்டைகள் முட்டுக்கட்டையாய் இருக்கின்றன.

சுன்னிகள் கேட்கும் மரியாதையும், பிரதிநிதித்துவமும் கொடுத்தால் ஐ எஸ் ஐ எல்லை நாங்களே விரட்டுகிறோம் என்கிறார்கள் சுன்னி பிரதிநிதிகள்.

இப்போதே ஐ எஸ் ஐ எல்லின் போக்கு பிடிக்காத சுன்னி குழுக்கள் ஈராக்கின் ராணுவத்துக்கு துப்புகளும், உதவியும் கொடுத்து ஐ எஸ் ஐ அல்லை திக்ரித்திலிருந்து வெளியேற்ற உதவுகின்றனர்.

அமெரிக்காவும் எல்லோரையும் ஒருங்கினைத்த, பிரதிநிதித்துவம் வழங்கும் ஒரு பார்லிமெண்ட்டை அமையுங்கள் என அழுத்தம் கொடுத்து வருகிறது.

இன்றைய தேதிக்கு ஐ எஸ் ஐ எல்லின் முன்னேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நூர் அல் மாலிக்கி அமெரிக்காவின் கருத்துகளை ஏற்பதைப் பொறுத்து ஐ எஸ் ஐ எல் விரட்டியடிக்கப்ப்டுமா இல்லை அந்த பூச்சாண்டியை வைத்து நூர் அல் மாலிக்கியை மிரட்டுவார்களா என்பது தெரியும்.

அமெரிக்க படைகள் இன்றைக்கு பாக்தாதில் இல்லாதிருந்தால் சில நாட்களுக்கு முன்னரேயே பாக்தாத் ஐ எஸ் ஐ எல்லின் கையில் வீழ்ந்திருக்கும். ஐ எஸ் ஐ எல்லுக்கும் யாருடன் மோதப்போகிறோம் என்பது தெரிந்திருப்பதால் முன்னேறாமல் பிடித்த இடங்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்று வருகிறது. இந்த இடைவெளியில் உலகம் முழுக்க ஜிகாதிகளை ஒன்று திரட்ட முயல்கிறது ஐ எஸ் ஐ எல். ஏற்கனவே செசன்யா பிரிவினைவாதிகளின் தலைவன் மோசுலில் இருப்பதாக் சொல்கிறார்கள்.

பாக்தாத் அரசுக்கு ஈரானின் ராணுவ உதவியும், அமெரிக்க உதவியும் இருக்கிறது. இந்த ஐ எஸ் ஐ எல் பூதத்தை வைத்துக்கொண்டு ஈராக்கில் எல்லா இன மக்களும் இணைந்த ஒரு ஆசை அமைக்க அமெரிக்கா முயல்கிறது. ஆனால், ஈரானின் இன்ஃப்ளுயன்ஸ் எவ்வளவு என்பதைப்பொறுத்தே அரசியல் சதுரங்கம் மாறும்.

காலிஃபேட் அல்லது இஸ்லாமிய அரசாங்கம் என்பது அவர்களே சொல்லிக்கொள்வதுதான். இப்போது ஈராக்கில் இருக்கும் 500 அமெரிக்க படைகளுக்கு உத்தரவு கிடைத்தால் அந்த காலிஃபேட் அரசாங்கத்தை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சிதறடித்து விடுவார்கள். இத்தனைக்கும் ஐ எஸ் ஐ எல் வழக்கமான கொரில்லாப் படைகளின் உத்தியான மக்களுடன் கலந்து திரிந்து தங்களை பாதுகாத்துக்கொண்டுள்ளனர். இருந்தாலும் அமெரிக்காவின் உளவும், நவீன இயந்திரங்களும் துல்லியமாக கண்டுபிடித்து தாக்கும் வல்லமையுள்ளவர்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒபாமாவிடமிருந்து ஒரு ஓகே. ஆனால், அது கிடைப்பது நுர் அல் மாலிக்கியின் கையில் இருக்கிறது.

பாஸ்ரா நிலவரம்

எந்த வித்தியாசமும் இல்ல. வழக்கம்போல இயங்குகிறது. வழக்கமான விமான சேவைகள் அப்படியே இருக்கிறது. எல்லா விமானங்களும் காலி இருக்கைகள் இல்லாமல் முழுதும் ஆட்களுடன் வருகிறது, ஆன்களும், பெண்களுமாக.

பாக்தாத்

அமெரிக்க படைகள் பாக்தாத் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளனர். ட்ரோன்கள் தினமும் 20 முதல் 30 தடவைகள் பாக்தாதையும், அமெரிக்க தூதரகத்தையும் சுற்றி வருகின்றன. அமெரிக்கர்கள் இருப்பதால் இனி ஐ எஸ் ஐ எல்லை உள்ளே விட அமெரிக்காவும் விடாது. ஐ எஸ் ஐ எல்லுக்கும் பாக்தாதுக்குள் நுழைய முற்படுவது தற்கொலை என்பது தெரிந்திருக்கும். பாக்தாத்துக்குள் இருக்கும் ஐ எஸ் ஐ எல் மக்களும் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.

திக்ரித் மற்றும் மோசுல் :

திக்ரித்தில் வான் மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், ஈராக்கிய படைகளின் கட்டுப்பாட்டில் இன்னும் வரவில்லை. 40 இந்திய மக்களின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. நம் தூதரக அதிகாரிகள் பிரச்சினை ஏதும் இல்லாத பாஸ்ராவிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இருக்கும் இந்தியர்களை பிடித்து ஊருக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் செய்ய வேண்டியது பாக்தாத்திலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும், மோசுல் மற்றும் திக்ரித்திலும். ஆனால், அங்கு ஏதும் சமீபத்தில் இந்தியர்களை வெளியேற்றியதாக தெரியவில்லை.

மக்களின் பொதுவான மனநிலை

ரமலான் மாதம் நடக்கிற படியால் மக்கள் சண்டை குறையலாம் என நம்பிக்கொண்டிருக்கின்றனர். கெர்பலா மற்றும் நஜஃப் அருகிலேயே நேற்று குண்டு வெடித்திருக்கிறது. எல்லாம் உள்ளூர் ஸ்லீப்பிங் செல்களின் கைவரிசை. வழக்கம்போல அல்லாவின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு ஏதேனும் அதிசயம் நடக்கவும், நூர் அல் மாலிக்கி எந்த பிரச்சினையும் இன்றி மீண்டும் பிரதமர் ஆகவும் விரும்புகின்றனர்.

இந்த ”தாஷ்” ஒழியக்காத்திருகின்றனர் ஈராக்கியர்கள். (தாஷ் - ஐ எஸ் ஐ எல் சொல்லிக்கொள்ளும் விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்தும் ஒரு சொல். ஷியாக்கள் ஐ எஸ் ஐ எல்லை இந்த வார்த்தையைக் கொண்டே குறிக்கின்றனர்)

ஜெயக்குமார்

Read More...