பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 28, 2013

ஒரு பக்க விளம்பரம்

இன்று வந்த தி.ஹிந்து ஆங்கில பத்திரிகையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வெளியிட்டுள்ள ஒரு பக்க விளம்பரம்
http://ow.ly/i/3ReV1

Read More...

சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள்பார்வை! - எஸ். குருமூர்த்தி

புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார்கள் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 பேரையும் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு நேற்று (நவம்பர் 27, 2013) வெளிவந்தவுடன் கடந்த 2004 நவம்பர் மாதம் சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புகளையும், அநாகரிகமான விமர்சனங்களையும் எண்ணிப் பார்க்கத் தூண்டியது.

சங்கராச்சாரியாருக்கு எதிராக என்னென்ன விமர்சனங்கள் எழுப்பப்பட்டன, எப்படிப்பட்ட கேலியும் கிண்டலும் செய்யப்பட்டன என்பதையும், திராவிடக் கொள்கையாளர்களாலும், கட்சியினராலும், ஏன் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஊடகங்களாலும், சமுதாயப் பிரமுகர்களாலும் காஞ்சி சங்கர மடமும், சங்கராச்சாரியார்களும் தரம் தாழ்த்தி சித்திரிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது நினைத்தாலும் முகம் சுளிக்க வைக்கின்றன.



சங்கராச்சாரியார்தான் குற்றவாளி என்று விசாரிக்காமலேயே முடிவுசெய்தது போதாதென்று, ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி பற்றி இல்லாததும் பொல்லாததுமாக எத்தனை எத்தனையோ அபவாதங்களை வேறு எழுப்பினார்கள். இதில் இறை நம்பிக்கை இல்லாத திராவிடக் கட்சிகளின் பங்களிப்புக்கு எள்ளளவும் குறைவில்லாதது, நமது ஊடகங்களின் பங்களிப்பு. இதனால் மனம் புண்பட்ட லட்சக்கணக்கான காஞ்சி மடத்தின் பக்தர்களும், ஆன்மிக நாட்டமுள்ளவர்களும் வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள் விம்மி விம்மி அழுததும், ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் மெüனமாக அதையெல்லாம் சகித்ததும் எளிதில் மறந்துவிடக் கூடியவையா?

காஞ்சி சங்கரமடமும், சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியும் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானபோது, இந்து மதத்தின் அடித்தளத்தை உடைத்துவிட வேண்டும் என்று சில நலம் விரும்பிகள் முனைந்தபோது, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் மட்டும்தான் உண்மையின் பக்கம் நின்றது. ஆதாரமில்லாமல், காழ்ப்புணர்ச்சியால் இறையுணர்வின், ஆன்மிகத்தின் எதிரிகள் ஒன்றுபட்டு சங்கர மடத்தையும், சங்கராச்சாரியாரையும் பொய்யான குற்றச்சாட்டை ஆதாரமாகக் கொண்டு பழிவாங்க முற்பட்டபோது, உண்மை என்று தான் நம்பிய கொள்கைக்காகத் துணிந்து போராடியதும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் மட்டுமே!

மடமும் சங்கராச்சாரியார்களும் எந்தவித ஆதாரமுமில்லாமல் காயப்படுத்தப்படுகிறார்கள், போதிய சாட்சியமில்லாமல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது என்பதை நாங்கள் மட்டுமே உறுதியாகச் சொன்னோம். இப்போது, போதிய ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லாமல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை, சங்கராச்சாரியார் கைதான போதே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்திருக்கிறது.

"வழக்கு செத்துவிட்டது. எப்போது, யார் இறுதிச்சடங்கு செய்வது?' என்று தலைப்பிட்டு சங்கரராமன் கொலை வழக்கு பற்றிய ஐந்து தொடர் கட்டுரைகள் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியானது. சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்ட தீபாவளி தினத்திலிருந்து 12-ஆவது நாளான நவம்பர் 24, 2004 அன்று எழுதப்பட்ட அந்தக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையிலேயே இந்த வழக்கு எந்தவித ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல் தொடுக்கப்படுகிறது என்பதை விளக்கமாவே எழுதி இருந்தேன்.

""சங்கராச்சாரியார் மீது தொடுக்கப்பட்ட இந்த வழக்கு பலமில்லாதது என்பது மட்டுமல்ல, ஆரம்பம் முதலே அடிப்படை ஆதாரமும் இல்லாதது. அது மட்டுமல்ல, இட்டுக்கட்டப்பட்டதும் கூட. ஆமாம், சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியைக் குற்றவாளியாக்க வேண்டும் என்பதற்காகவே புனையப்பட்ட வழக்கு இது'' என்று தொடங்கியது அந்தக் கட்டுரை.

""காவல்துறையினர் தாங்கள் அடையாளம் கண்ட சங்கராச்சாரியார்தான் குற்றவாளி என்று நிரூபிக்க முடியாமல் ஆதாரங்களைத் தேடி அலைகிறார்கள். ஆதாரமும் சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்பதற்காக விட்டுவிடவும் முடியவில்லை. சாட்சியங்களை இட்டுக்கட்டி எப்படியாவது வழக்கை ஜோடித்துவிட எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள். ஆனால், வழக்கு ஆரம்பத்திலேயே தோற்றுவிட்டது. காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, காக்கியின் சாயம் வெளுத்துவிட்டது. எந்த இரண்டு குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சங்கராச்சாரியாரை சங்கரராமன் கொலையில் முதல் குற்றவாளி என்று காவல்துறை தங்களது வழக்கை ஜோடித்திருந்ததோ, அந்த இருவருமே, நாங்கள் காவல்துறையால் வற்புறுத்தப்பட்டதால் தரப்பட்ட வாக்குமூலம் இது என்று சொன்னபோதே, வழக்கு தோற்றுவிட்டது'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது சங்கரராமன் கொலை வழக்கிலான தீர்ப்பு அதையேதான் கூறுகிறது. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் நான் எழுதிய அந்தக் கட்டுரைத் தொடரில் ஒன்று - "அபிமன்யு போல நிராதரவாக நிற்கும் சங்கராச்சாரியார்!'. அந்தக் கட்டுரையில், தன்மீது அபாண்டமாக சுமத்தப்பட்டிருக்கும், கொலைப் பழியால் திகைத்துப்போய் செய்வதறியாமல் நிற்கும் சங்கராச்சாரியாரை, இறை மறுப்பாளர்களும், இந்துமத வெறுப்பாளர்களும், திராவிடக் கட்சியினரும், போலி மதச் சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட சமூக சிந்தனையாளர்களும், அரசியல் கட்சிகளும் வல்லூறுகளைப் போலக் கொத்திக் குதறக் காத்திருக்கிறார்கள். காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்படும் புனையப்பட்ட செய்திகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் நமது ஊடகங்களும், திராவிட இயக்க பிரச்சார இயந்திரமும் சங்கராச்சாரியாரைக் களங்கப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் முனைந்து செயல்படுகின்றன. வழக்கால் ஏற்படும் பாதிப்பை விட இதுபோன்ற ஆதாரமற்ற தவறான பிரசாரங்களால் ஏற்படுத்தப்படும் கருத்துருக்கள்தான் சங்கராச்சாரியாருக்கு அதிக களங்கம் ஏற்படுத்துகின்றன'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

"ஏதோ சங்கராச்சாரியார் ஒரு மிக மோசமான கிரிமினல், தரம் கெட்டவர் என்பதுபோன்ற கருத்தை நீதிமன்றத்திற்கு ஏற்படுத்த, மிகவும் மோசமான குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களின் வாக்குமூலங்களை வலுக்கட்டாயமாகக் காவல்துறை பெறுகிறது' என்று "இந்த வழக்கை மறு விசாரணை செய்யாமல், நீதி கிடைக்காது' என்கிற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

டிசம்பர், 3 2004-இல் எழுதியிருந்த கட்டுரையில், எப்படி இந்த வழக்கு ஒரு கொலை குற்றத்தின் புலன் விசாரனை என்கிற நிலையிலிருந்து விலகி, சங்கராச்சாரியாரைத் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்துவதையும், காஞ்சி சங்கர மடத்தின் மரியாதையைக் குலைப்பதையும்தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறது'' என்று எழுதி இருந்தேன். ""தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, எதிர்பாராமல் ஏற்பட்டிருக்கும் தாக்குதல்களால் விக்கித்து வாயடைத்துப்போய் நிற்கும் காஞ்சி சங்கர மடத்திற்கு எதிராக நடக்கும் யுத்தமாகக் காவல்துறை இந்த வழக்கை மாற்றிவிட்டிருக்கும் நிலையில், பல மிகப்பெரிய தவறுகளுக்கு இது வழிகோலியிருக்கிறது. சமுதாயத்தில் ஆன்மிக மடங்களின் மரியாதை சீர்குலைக்கப்படுகிறது. மத நம்பிக்கையே தகர்க்கப்படுகிறது. குற்றப் புலனாய்வாக இல்லாமல், மத நம்பிக்கையையும், காஞ்சி சங்கர மடத்தின் புகழையும் தகர்க்கும் செயலாக இது மாறிவிட்டிருக்கிறது'' என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

""மதச்சார்பின்மை பேசும் ஊடகங்கள் நீதிபதி ரெட்டியின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்குமா?'' என்பது 2005 ஜனவரி 14ஆம் தேதி நான் எழுதிய கடைசி கட்டுரையின் தலைப்பு. கைது செய்யப்பட்டபோது காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு தொழிற்சாலையில் விருந்தினர் விடுதியில் தங்கி இருந்ததால், அந்தத் தொழிற்சாலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு கொலையுடன் அவரைத் தொடர்புபடுத்தி யாரோ தொடுத்த வழக்கில் நீதிபதி நரசிம்ம ரெட்டி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பளித்தார். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அவர் அளித்த தீர்ப்பில், 2,500 ஆண்டு பாரம்பரியமிக்க ஒரு ஆன்மிக அமைப்பின் மரியாதைக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், ஊடகங்களில் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியிருந்தார் நீதிபதி ரெட்டி.

""தனிநபர்கள் மட்டுமல்ல, சில இயக்கங்களும், ஏன் அரசு இயந்திரமே கூட நமது பாரம்பரியப் பெருமைகளைச் சிறுமைப்படுத்தவும், புகழ்பெற்ற நிறுவனங்களைக் களங்கப்படுத்தவும், குற்றப்படுத்தவும் முயற்சிப்பது வேதனைக்குரியது. தேசத்தையே நிலைகுலைய வைத்திருக்கும் காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரான பிரசாரங்களை எப்படி மனித உரிமை, நீதி, நேர்மை, சுய மரியாதை என்றெல்லாம் பேசும் நபர்களும், அமைப்புகளும் பார்த்துக் கொண்டு மௌனம் காக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. அன்று கெüரவர்கள் சபையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எள்ளளவும் குறைவானதல்ல இப்போது காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி மீது கட்டவிழ்த்து விடப்படும் பிரசாரங்களும், ஆதாரமில்லாத அபவாதங்களும்'' என்றும் நீதிபதி ரெட்டி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியும், காஞ்சி சங்கர மடமும் உண்மையை எடுத்துரைக்க வாய்ப்புக்கூட அளிக்கப்படாத அந்த தர்மசங்கடமான நிலையில், உண்மையின் பக்கம் நின்று குரலெழுப்பிய ஒரே ஊடகம் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' மட்டுமே!

அதற்கு எனக்குத் தரப்பட்ட வெகுமதிதான் வாரண்டு அனுப்பப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டது. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை அலுவலகம் சோதனையிடப்பட்டது. இந்தக் கட்டுரைகளின் தமிழாக்கத்தை வெளியிட்ட "துக்ளக்' இதழும் சோதனையிடப்பட்டது. வழக்கம்போல, நீதிமன்றம் தலையிட்டுத் தடை வழங்கியதால் எங்கள் தலை தப்பியது.

என்னை விசாரணை செய்த விசாரணை அதிகாரியிடம், "எந்த அடிப்படையில் நீங்கள் சங்கராச்சாரியாரைக் குற்றவாளி என்று கருதுகிறீர்கள்?' என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர் அளித்த பதில்-- ""கொலை செய்யப்பட்டவர், சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதிக்குத் தொடர்ந்து அவரை விமர்சித்தும் குற்றம் சாட்டியும் கேவலப்படுத்தும் விதத்திலும் கடிதங்கள் எழுதியவண்ணம் இருந்திருக்கிறார். அதனால், அவரை ஜயேந்திர சரஸ்வதி கொலை செய்வதற்கான காரணம் இருக்கிறது!''

""இந்தக் காரணத்தால் சங்கரராமனை சங்கராச்சாரியார் கொலை செய்திருக்கக் கூடும் என்று நீங்கள் கருதுவதானால், அதற்கு முன்னால், சங்கராச்சாரியாருக்கு வேண்டாத வேறு யாராவது இதையே காரணமாக வைத்து சங்கரராமனைக் கொலை செய்து அந்தப் பழியை சங்கராச்சாரியார்மீது சுமத்திவிடவில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். செய்தீர்களா?'' என்று நான் கேட்டேன்.

அவரிடம் பதில் இல்லை. மெüனமாக இருந்தார். நான் மீண்டும் அதே கேள்வியை கேட்டேன். முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டார்.

கிரிமினல் குற்ற விசாரணையில், விசாரணை அதிகாரி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், அது தொடர்பான எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, விசாரித்து, அவை எதுவுமே சாத்தியமில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் விளக்கினேன். அப்படிச் செய்யாமல் போனால், வழக்கு தோற்றுவிடும் என்று நான் சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவே தயாராக இருக்கவில்லை.

காஞ்சி சங்கராச்சாரியாரை எப்படியாவது குற்றவாளியாக்கி சிக்க வைக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் குறியாக இருந்தார்களே தவிர, அதற்குப் போதிய ஆதாரங்களும் சாட்சியங்களும் இருக்கின்றனவா என்பதை எல்லாம் உறுதிப்படுத்தும் மனநிலையில் காவல்துறை இருக்கவில்லை. அதன் விளைவுதான் இந்த மிகப் பெரிய சமுதாய, பண்பாட்டு இழப்பு.

ஒரு மேன்மையான, பாரம்பரியமிக்க ஆன்மிக நிறுவனம் மட்டுமல்ல, அதன் லட்சக்கணக்கான வன்முறையை விரும்பாத, சமாதானத்தை நேசிக்கும் விசுவாசிகளும் காயப்பட்டிருக்கிறார்கள். இந்து மதம் கேவலப்படுத்தப்பட்டது. நமது கலாசாரமும், மத நம்பிக்கையும், தரம்தாழ்த்தப்பட்டன. ஆன்மிக வழிகாட்டிகள் ஆஷாடபூதிகளாக சித்திரிக்கப்பட்டனர். காரணமில்லாமல் அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்தனர். இதன் பின்னணியில் அரசியல் மட்டுமல்ல, நமது பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும், ஆன்மிக சிந்தனையையும் சிதைக்கும் சதியும் இருந்தது.

சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 குற்றவாளிகளும், போதிய ஆதாரமோ சாட்சியங்களோ இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்கள் என்கிறது தீர்ப்பு. குற்றவாளி யார், அவர் ஏன் தண்டிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்படும்.

நீதிமன்றத்தின் முன்னால் இன்னார் குற்றவாளி என்று காவல்துறை சிலரை குற்றம்சாட்டி நிறுத்துகிறது. அவர்களைக் குற்றவாளிகளாக்கவோ தண்டிக்கவோ போதிய சாட்சியங்கள் இல்லை. உண்மையான குற்றவாளி கிடைக்கவில்லை, அதனால் உங்களை தண்டிக்கிறேன் என்று நீதிமன்றம் இவர்களை தண்டிக்க முடியாது. விடுதலைதான் செய்ய முடியும்.

அப்படியானால் உண்மையான குற்றவாளி யார்? விசாரணை அதிகாரியிடம் 2004 ஆம் ஆண்டு நான் எழுப்பிய அதே கேள்வியை காவல்துறை எழுப்பினால் ஒருவேளை அதற்கு விடை கிடைக்கக் கூடும். ஆனால், காலம் கடந்துவிட்ட பிறகு ஆதாரங்களையும், சாட்சிகளையும் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்போதே செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

ஆரம்பத்திலிருந்தே, காவல்துறைக்கு சங்கரராமனைக் கொலை செய்த உண்மைக் குற்றவாளியைக் கைது செய்வதில் இருந்த அக்கறையைவிட, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியின் மீது பழி சுமத்தி, அவரைக் குற்றவாளியாக்கி, காஞ்சி சங்கரமடத்தின் மரியாதையையும், இந்து மதத்தின் மீதான நம்பிக்கையையும் குலைப்பதில்தான் ஆர்வம் இருந்தது என்பதுதான் உண்மை. அதைத்தான் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது.

சங்கரராமன் கொலை வழக்குத் தீர்ப்பின் பின்னணியில் காவல்துறையினர், அரசு, ஊடகங்கள், சமுதாய சிந்தனையாளர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைத் தொட்டு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். சங்கராச்சாரியாருக்கு எதிராக, காவல் துறையினருக்கு ஆதரவாக, சங்கர மடத்திற்கு எதிராக புழுதிவாரி இறைத்துக் கேவலப்படுத்தும் இயக்கமே நடத்தினார்களே, அவர்கள் தங்களது செயல்களை, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சற்று மீள்பார்வை செய்வார்களா?

நன்றி: தினமணி

Yellow

Read More...

Wednesday, November 27, 2013

அருஷி - சங்கரராமன்

தனக்கு தற்கொலை செய்துக்கொள்ள பயமாக இருக்கிறது என்று சங்கரராமன் கூலிப்படையை நியமித்து தன்னை வெட்டி தள்ள நியமித்தார் என்று கூட நினைக்க தோன்றுகிறது. ஜெயேந்திரர் மவுன விரதம் இருப்பதாக கூறுகிறார், சட்டமும் மவுனமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

டெல்லியில் 14வயது சிறுமியும் வேலையாளும் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நிமிடத்துக்கு நிமிடம் கவர் செய்த மீடியா சங்கரராமன் கொலை வழக்கை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. 80க்கும் மேல் சாட்சிகள் பல்டி அடித்த வழக்கில் எல்லோரும் நிரபராதிகள் என்று கோர்ட் அவர்களை விடுதலை செய்திவிட்டது. இத்தனைக்கும் பட்டப்பகலில் இந்த கொலை நடந்துள்ளது. ஆனால் ஆருஷி கொலை வழக்கில் சாட்சியே இல்லாமல் தண்டனை கிடைத்துள்ளது.

9 வருடம் கழித்து குற்றவாளிகளை எங்கே பிடிக்க போகிறார்கள்.

இனி அடித்த மேல் கோர்ட் அதற்கு பிறகு அடுத்த மேல் கோர்ட் என்று இழுத்தடித்து சங்கரராமன் என்று ஒருவர் முன்பு வாழ்ந்தார் என்று கண்டுபிடிக்க போகிறார்கள். அவ்வளவு தான்.

Read More...

காதல் ஜாதி

காதலுக்காக பல தியாகங்களைச் செய்தவர்களின் பல நூறு காதல் கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எதுவுமே மதாய் தூபே என்கிற மதாய் தோம் என்பவருடைய காதலுக்கீடாகாது. மதாய் தூபே, பிஹாரிலுள்ள ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய காதலுக்காக தன்னுடைய சமூகத்தை எதிர்த்து, ஜாதியைத் துறந்து, சுக்மோனா என்ற பெண்ணை மணந்திருக்கிறார். அதுவுமெப்படி? சமூகக் கட்டுப்பாடுகளை மீறி, தன் காதலுக்காக அப்பெண்ணினுடைய ஜாதியையே தன்னுடையதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அப்பெண், சுக்மோனா, பிறப்பால் மயானத்தில் தகனத்தை மேற்கொள்பவருடைய பெண்ணாவார். மிகவும் தாழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர். "தோம்" என்பது இவர்களது குலப்பெயர்.

மதாய் தூபே, ஒரு ஆசாரமான மிகவும் பணக்கார பிஹாரி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்; ஏராளமான நிலபுலன்களுக்கு அதிபதியான குடும்ப வாரிசு. இவர்களது நிலத்தையொட்டிய மயானக் காட்டில்தான் சுக்மோனாவுடைய தந்தை, தன்னுடைய தகனத் தொழிலை மேற்கொண்டு வந்தார். அதில் வரும் சொற்ப வருமானத்தில்தான் சுக்மோனாவுடைய குடும்ப ஜீவிதம். சுக்மோனா, தினமும் தூபேவினுடைய வயலைக் கடந்துதான், தன்னுடைய தந்தைக்கு உணவு கொண்டு செல்லும் வழக்கம். அடிப்படையில் இருந்த குல வேறுபாடுகள் காரணமாக, இவர்களிருவரும் தினமும் சந்திக்க நேர்ந்தாலும், பேசிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் நேர்ந்ததில்லை. ஆனால் அன்றைய தினம், சூரியனின் தாக்கம் காரணமாக, சுக்மோனா உணவு சுமந்து செல்லும் வேளையில், தூபேவினுடைய வயலில் மயங்கிச் சரிகிறார். இதைக் கண்ணுற்ற தூபே, சமூகத்தின் சகல வேறுபாடுகளையும் மறந்து, சுக்மோனாவைத் தன் குடிலுக்குத் தூக்கிச் சென்று, மயக்கம் தெளிவித்து ஆசுவாசப்படுத்துகிறார். இங்கிருந்துதான் இக்காதல் துவங்குகிறது.

இவர்கள் காதலுக்கெதிராக, தூபேவின் சமூகம் கொதித்தெழுகிறது. அக்காலத்தில், சுக்மோனா போன்ற குலத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களை, உயரிய குலத்தைச் சார்ந்தவர்கள் "சேர்த்துக்" கொள்வது வழக்கம். ஆனால் திருமணமென்பதெல்லாம் நினைத்தே பார்க்க இயலாதது. ஒரு பிராமண குலத்தைச் சார்ந்தவன், பிணம் எரிக்கும் தொழிலைச் செய்பவருடைய மகளை மணப்பதா? முடியவே முடியாது; குலத்தை விட்டு ப்ரஷ்டம் செய்வோம், சொத்தில் உரிமை கோர முடியாது என்று தூபே தனது சமூகத்தாலும், குடும்பத்தாலும் பலவாறாக காதலைத் தியாகம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார். இவையெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தூபே, சுக்மோனாவை மணக்கப் போவதாக வெளிப்படையாக அறிவிக்கிறார். எந்தவொரு நிர்பந்தத்தை முன்னிட்டும் தமது காதலுக்கு துரோகம் செய்ய தூபே விரும்பவில்லை. முடிவாக வீட்டை விட்டும் வெளியேற்றப்படுகிறார்.

சுக்மோனாவின் பார்வையில் தூபே மிகவும் வித்யாசமாகத் தெரிந்தார். பொதுவாக, அவருடைய வயதொத்த, உயர்குல வாலிபர்கள், தங்கள் குலப் பெண்களை ஒரு போகப் பொருளாகவே நினைத்து, பலருடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கைவிட்டுள்ள நிலையில், தூபே தன்னுடைய காதலில் மிகவும் உறுதியுள்ளவராக இருந்தார்.

இக்காதலில் கடினமான கட்டம் இனிமேல்தான் என்பதை தூபே அறிந்தவராக இல்லை. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டும், சமூகத்தை விட்டு பகிஷ்கரிக்கப்பட்ட நிலையில், தூபே, சுக்மோனாவின் தந்தையை அணுகிறார், அவரைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிக்கும் நோக்குடன். காதலுக்காக சமூகத்தையும், அந்தஸ்து மற்றும் சுகபோகங்களை இழந்ததை சுக்மோனாவின் தந்தையிடம் தெரிவிக்கிறார். ஆனால் சுக்மோனாவின் தந்தை மசியவில்லை. எதிர்ப்புக் குரல்கள் அவர்கள் சார்ந்த சமூகத்திடமிருந்து இன்னமும் பலமாக இருந்தன. நீங்கள் பிராமண குலம், நாங்களோ தாழ்த்தப்பட்ட குலம்; நீங்கள் புலால் மற்றும் மதுவைத் தொடாதவர்; நாங்களோ அதிலேயே புழங்குபவர்கள். ஆகையால், என்னுடைய பெண்ணை நீங்கள் மணமுடிப்பதில் உறுதியாக இருந்தால், எங்கள் ஜாதியை நீங்கள் ஏற்று கொண்டு, நீங்களும் எங்கள் தொழிலில் ஈடுபட வேண்டும். இதற்கு முன்னர் சில நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

தன் காதலில் சற்றும் உறுதியிழக்காத தூபே, அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தார்.

முறைப்படியான ஜாதி மாற்றச் சடங்கிற்கு முன்னதாக, தூபே செய்ய வேண்டியதாக, தோம் சமூகத்தினர் விதித்த நிபந்தனைகள்...

* பன்றியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை உண்ண வேண்டும்;
* மது அருந்த வேண்டும்;
* மயானத்தில் பிணத்தினை தகனம் செய்ய வேண்டும்;
* கிராமத்தில் யாசகம் செய்ய வேண்டும்;
* தோம் சமூகப் பெண்கள் குளித்து முடித்த அழுக்கு நீரை அருந்த வேண்டும்;
* பன்றிகளை வளர்க்க வேண்டும்!!

பிராமண குலத்தில் பிறந்து, இறைச்சி மற்றும் மதுவை கனவிலும் அறியாத தூபே, இந்நிபந்தனைகளத்தனையையும் நிறைவேற்றி, தம் காதலை வென்றெடுத்தார். முறையான ஜாதி மாற்றச் சடங்கிற்குப் பிறகு, மதாய் தூபே என்ற பெயரை மதாய் தோம் என்று மாற்றிக் கொண்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் ஒரு மயானத்தில் தகனம் செய்பவராகவே வாழ்ந்தார்.

சிறிது காலத்திற்குப் பின்னர், தனது சொந்த ஊரான சலேம்பூரை விட்டு, கஜ்ராஜ்கன்ஜ் என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தார். அங்கும் பிராமண சமூகத்தவர் அதிகமாக இருந்தபடியினால், அங்கும் பகிஷ்கரிக்கப்பட்டார். ஒரு பிரிட்டிஷ் அரசர், தன் காதலுக்காக ஒரு சாம்ராஜ்யத்தை இழந்தார். ஷாஜஹான் தனது காதலுக்காக தாஜ்மஹாலை எழுப்பினார்; ஆனால் மதாய் தோமிடம் இழப்பதற்கு ராஜ்யம் இல்லை, காதலுக்காக தாஜ்மஹாலையும் எழுப்பவில்லை; ஆனால் தனது கலாசாரத்தைத் தியாகம் செய்தார். எப்போது, இன்றைய காலகட்டம் போலல்லாமல், சமூகக் கட்டுப்பாடுகளும், சாதீய வேறுபாடுகளும் மிகவும் கடுமையாக இருந்த காலகட்டத்திலேயே.

இது உண்மைக்கதையென்று நம்பக் கடினமாக இருக்கலாம். ஆனால் மதாய் தோமும், சுக்மோனாவும் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்தவர்கள்தாம். தம்முடைய காதல் வாழ்க்கையை தொடர்ந்த இவர்கள் இறந்தது 1965 இன் சமீபத்தில்தான். இவர்களுடைய வாரிசுகள் இன்னமும் சட்கி சசோரி கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், தம்முடைய பெற்றோரின் நினைவுகளைத் தவிர, அவர்களின் காதலினைப் பறைசாற்றும் வேறெந்த நினைவுச் சின்னங்களும் அற்று.

("The Hindu" வில் வெளியான இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தை எழுதியவர், Dr. கவிதா ஆர்யா, வாரணாசியின் ஆர்யா மகிளா கல்லூரியில் துணைப் பேராசிரியையாகப் பணிபுரிகிறார்.)

நன்றி - The Hindu ( http://www.thehindu.com/opinion/open-page/a-love-story-stranger-than-fiction/article5384027.ece )
மொழிபெயர்ப்பு உதவி: யதிராஜ சம்பத் குமார்.

இந்த கதையை படித்து முடித்த பின் என்ன ஒரு inspiration என்று எண்ணம் முதலில் வரும் ஆனால் நிதானமாக யோசித்தால், மதம் மாறலாம் ஆனால் காதலினால் Common Sense கூடவா போய்விடும் என்று நினைக்க தோன்றுகிறது ? எதற்கு அழுக்கு தண்ணீரையும், மதுவையும் அருந்த வேண்டும் ?

Read More...

Friday, November 22, 2013

S.Balaji in DC





எச்சரிக்கை: எ.அ.பாலா செஸ் பற்றி இட்லிவடையில் ஒரு தொடர் எழுதினாலும் எழுதுவார்
வாழ்த்துகள்

Read More...

'மட்டும்' போஸ்ட்


இந்தியாவின் பிரபலமான தெஹெல்கா பத்திரிகை ஆசிரியரான தருண் தேஜ்பால் அவர்கள் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டை அடுத்து தற்காலிகமாக பதவி விலகியிருக்கிறார். - செய்தி

விகடனில் ஏதாவது பிரச்சனை என்றால் அதை குமுதம் ரிப்போட்டர் கண்டுக்கொள்ளாது. அதே போல குமுதம் பத்திரிகையில் ஏதாவது பிரச்சனை என்றால் ஜுவி கண்டுக்கொள்ளாது. இதே போல தான் மற்ற பத்திரிகைகளும். ஒரு பெண்ணை இழுவு படுத்திவிட்டு சாதாரணமாக 6 மாச லீவில் போகிறேன் என்பதற்கு எந்த பத்திரிகையும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை குறிப்பாக கண்டிக்கவும் இல்லை. ஞாநி கூட வருத்தப்படிகிறார், கண்டிக்கவில்லை. ஆனால் நித்தியானந்தா செய்த செயலுக்கு எல்லா பத்திரிகையும் செய்த ஆர்பாட்டம் பற்றி நினைத்து பார்க்க வேண்டும்.

இது தான் பத்திரிக்கை தர்மம். இந்த தர்மம் பத்திரிகையில் மட்டும் தான் நிகழும்.


முதல்வர் ஜெயலலிதாவை நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், 'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ சந்தித்து, தன் மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். நேற்று காலை, 11:15 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, சோ சந்தித்தார். இருவரின் சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது. சந்திப்பின்போது சோ, தன் மகனின் திருமண அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கினார். -



தமிழகத்தில் இப்படி ஒரு செயலை செய்ய கூடிய ஒரே மனிதர் சோ மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

Read More...

Wednesday, November 20, 2013

தலை வால் ஜோக்


"கனடா, பிரிட்டன், மோரீஷஸ், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு ராஜபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்குக் கிடைத்த சர்வதேச கவனமும் ஆகும்.

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் நெஞ்சங்களிலும் கேமரூன் இடம்பெற்றுவிட்டார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில் இந்தியா சார்பில் ஒரு துரும்புகூட காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காது என்று மன்மோகன் சிங் அறிவித்திருந்தால் அந்தப் புகழ் அவருக்குக் கிடைத்திருக்கும்.

ராஜபட்சவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி ஏமாற்ற நினைத்ததைப் போல இரண்டுங்கெட்டான் நிலையில், தான் (மன்மோகன் சிங்) செல்லவில்லை என்றும், சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு செல்லும் என்றும் பிரதமர் முடிவு எடுத்தார். இந்த முடிவை எடுத்த போதாவது, இலங்கை அரசால் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில்தான் "நான் (மன்மோகன் சிங்) மாநாட்டில் பங்கேற்கவில்லை' என்று பிரதமர் அறிக்கை விடுத்திருக்கலாம்.

ஆனால் டேவிட் கேமரூன், ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இலங்கை ராணுவம் செய்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் விசாரணைக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்றும் கேமரூன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பணியை மத்திய அரசு செய்திருந்தால், தமிழ்ச் சமுதாயம் நன்றி செலுத்தியிருக்கும்.

குர்ஷித் செய்தது என்ன? தமிழர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, மாநாட்டில் பங்கேற்ற சல்மான் குர்ஷித் செய்தது என்ன? தமிழர்களுக்கு ஆறுதலும் கூறவில்லை. இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறவில்லை. தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக மாநாட்டில் கர்ஜிக்கவும் இல்லை.

சல்மான் குர்ஷித்துக்கு என்ன கவலை? மாண்டதெல்லாம் தமிழ் மக்கள்தானே' என்று கருணாநிதி கூறியுள்ளார்.


கலைஞர் தமிழ் பரிட்சை எழுத போகிறார். எல்லாம் True or False வகைக் கேள்விகள். அவருக்கு பயங்கர சந்தோஷம். உடனே கையில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டு தலை வந்தால் 'சரி' வால் வந்தால் 'தப்பு' என்று எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிவிடுகிறார். உண்ணாவிரதம் போல உடனே பரிட்சையை முடித்துவிட்டார். பிறகு திரும்பவும் நாணயத்தை சுண்ட ஆரம்பிக்கிறார். அப்போது அங்கே வரும் ஆசிரியர் "என்ன நடக்கிறது?" என்று கேட்க பரிட்சையை முடித்துவிட்டேன்.... எல்லா விடைகளும் சரியா என்று திரும்ப verify செய்துக்கொண்டு இருக்கேன் என்றார்.

Read More...

Tuesday, November 19, 2013

முருகேசனை வாழ்த்துவோம் !

தற்போது நான் விரும்பி படிக்கும் பத்திரிகை குங்குமம் என்று சொல்லலாம். குமுதம், விகடனை சும்மா ஒரு முறை பார்க்கலாம். ஆனால் குங்குமம், கல்கியில் பார்த்துவிட்டு ஏதாவது உபயோகமாக படிக்கலாம்.

இந்த வார குங்மத்தில் வந்த இந்த கட்டுரை சச்சினின் பாரத ரத்தனா போன்ற செய்தளில் அடுத்த வாரம் காணாமல் போய்விடும். இட்லிவடை வாசகர்களுக்கு இந்த கட்டுரையை இங்கே தருவதில் மகிழ்ச்சி.


நன்றி: குங்குமம்


பாரத ரத்தினங்கள் !

Read More...

Sunday, November 17, 2013

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா? - எ.அ.பாலா

சச்சின் ஓய்வு பெற்ற நாளே, 40 வயதிலேயே, அவரது கிரிக்கெட் சாதனைக்காக, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவித்துள்ளது. இது சரி தான், இல்லை, நாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டு என்ன, நாட்டுக்கு நல்வகையில் பங்களிக்காத அந்த கிரிக்கெட் சாதனைக்கு பாரத ரத்னாவா என்று கேட்டு, இது சரியில்லை என்று இரு தரப்பு வாதங்களை பார்க்க முடிகிறது. ஒப்புக்குச் சப்பாணியாக, அவருக்கு மட்டும் விருது கொடுத்தால் பிரச்சினை வரக்கூடும் என்று கருதி, (எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய) CNR ராவ்-க்கும் இப்போது சேர்த்து வழங்கியுள்ளது நல்ல நகைச்சுவை.

நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில், கண்கூடாக பலன் தரும் சிலபல சாதனைகளை செய்தவர்களுக்கு மட்டும் தான் விருது என்றால், ஏற்கனவே (சமீப காலகட்டத்தில்) பாரத ரத்னா வழங்கப்பட்டவர்களில் சிலபலர் தேற மாட்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சச்சின் உட்பட இதுவரை 43 நபர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். அப்பட்டியலில், 10 தென்னிந்தியர்கள் (அதிலும் முதல் மூவர் 1954-லிலேயே விருது பெற்றவர்கள் என்பதை நினைவு கொள்க!) மட்டுமே இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை! ’தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது’ என்ற கூற்று இன்று வரை பொருந்துகிறது!

இது போன்ற ஓரவஞ்சனையை காரணம் காட்டியே, பிரபல பாடகி எஸ்.ஜானகி, சென்ற வருடம் பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காகவே எம்ஜியாருக்கும், ராஜிவ் காந்திக்கும் பாரத ரத்னா தரப்பட்டது என்ற பேச்சிலும் நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டுக்கு தொண்டு, அதனால் விளைந்த நன்மை ஆகியவை மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான அளவுகோல்கள் அல்ல. ஒரு மனிதர், ஒரு துறையில் செய்த உயர்ந்த/ஒப்பில்லாத சாதனையை கௌரவப்படுத்தும் விதமாகவும் அது வழங்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அத்தகைய நோக்கில், சச்சினுக்கு விருது வழங்கப்பட்டது சரியே என்றாலும், அவரை விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த, இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் ஒரே செஸ் வைரம், இந்தியாவின் (ஏன் ஆசியாவின்) ஒரே உலக செஸ் சேம்பியன் (5 முறை பட்டம், கடந்த 6 ஆண்டுகளாக undisputed Chess champion of the World) விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காமல், சச்சினுக்கு மட்டும் வழங்கியதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என்பது நிதர்சனம்!

மேலே குறிப்பிட்டதில், World என்று வலியுறுத்தியதில் ஒரு காரணமுள்ளது. உலகில் 8 (ஒப்புக்குச் சப்பாணி நாடுகளை விட்டு விடலாம்) நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில், ஒரு டீம் விளையாட்டில், சச்சின் சாதித்ததைக் காட்டிலும், 120 நாடுகளில் விளையாடப்படும், அன்றிலிருந்து இன்று வரை கடுமையான போட்டி நிலவி வரும், தனிமனித விளையாட்டான செஸ்ஸில் ஆனந்த் சாதித்தது மிக மிக மிக அதிகம் என்பதை அவர் சாதனைகளை உற்று நோக்கினாலே போதும்.

2012-ல் நான் எழுதிய இடுகையிலிருந்து சில விஷயங்களை பகிர்கிறேன்.



”இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 பிரிவுகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. மிக உயரிய விருதாக கருதப்படும் செஸ் ஆஸ்கார் பட்டத்தை ஆனந்த் 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.”

மேலும், கடந்த 22 ஆண்டுகளாக ஆனந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகளால் இந்தியாவில் செஸ் விளையாட்டில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செஸ் புரட்சியே நடந்துள்ளது. இப்போது இந்தியாவில் 34 கிராண்ட் மாஸ்டர்களும், 70-க்கும் மேற்பட்ட இண்டர்நேஷனல் மாஸ்டர்களும் உள்ளனர். பணம் அதிகம் புழங்காத செஸ் விளையாட்டில், இத்தகைய மறுமலர்ச்சியை, ஆனந்த் தனியொரு மனிதராக நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்றால் அது மிகையில்லை. இதை நிகழ்த்தியும், 27 ஆண்டுகளாக, இன்று வரை (44 வயது வரை) இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரராக விளங்கி வருகிறார்! இவற்றுக்கும் மேல், ஆனந்த் எவ்வகையான சாதனை செய்து, பாரத ரத்னாவுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்று புரியவில்லை.

சௌரவ் கங்குலி, ஆனந்த் வெளிநாட்டில் (ஸ்பெயின்) அதிகம் தங்கி இருப்பதால், அவருக்கு பாரத ரத்னா வழங்க ஒரு தயக்கமிருக்கலாம் என்று கூறியிருப்பதை ஏற்க இயலாது. வெளி நாட்டவரான நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும்போது, வெளிநாட்டில் தங்கியிருக்கும் “இந்திய” ஆனந்துக்கு வழங்குவதில் என்ன தயக்கம்! ஆனந்த் வட இந்தியராக இருந்திருந்தால், அவரது மகா சாதனைகளுக்கு அவருக்கு இந்நேரம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதற்கு, கிரிக்கெட் பிரபல விளையாட்டு என்பதனால், என்ற கூற்றை ஓரளவு தான் ஏற்க முடியும். பாரத ரத்னா பீம்சென் ஜோஷி மாமேதை என்பதில் ஐயமே இல்லை. ஆனால், அவரது ஹிந்துஸ்தானி இசையை எத்தனை சாதாரணர்களால் புரிந்து ரசிக்க இயலும். அதனால், பிரபலம் என்பது அளவுகோல் ஆகாது. உண்மை என்னவெனில், ஆனந்த் போல அல்லாமல், சச்சினின் இமேஜ் திறமையாக உருவாக்கப்பட்டு பேணிக் காக்கப்பட்டது. மீடியாவும் அதில் பங்களித்தது.

ஆனந்த், தனது ஒவ்வொரு பெரும் வெற்றிக்குப் பிறகு, மீடியாவில் தோன்றி, அதற்கான அவரது உழைப்பை, சிரமங்களைப் பற்றி பெரிய அளவில் பேசியதில்லை. அதனால், செஸ் விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவர் மட்டுமே, அவரது ஹிமாலய சாதனையின் வீச்சை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், சச்சினுக்கு பல மும்பை (சினிமா, அரசியல், தொழில்துறை) பிரபலங்களின் ஆதரவு சதாசர்வ காலமும் இருந்து வருகிறது. தெற்கில் இருக்கும் பிரபலங்களும், இந்திய செஸ் ஃபெடரேஷனும் இது போன்ற ஒரு status-ஐ ஆனந்துக்கு ஏற்படுத்த தவறி விட்டனர். இதனாலேயே, ’சச்சினுக்கு பாரத ரத்னா’ என்பது கடந்த 2 ஆண்டுகளாக கேட்பது போல ஆனந்துக்கு பாரத ரத்னா என்ற கோரஸ்/கோஷம் எந்த மட்டத்திலும் பெரிதாக கேட்காததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கியுள்ளது. இப்போது, சரியான சூழலில், அவருக்கு பாரத ரத்னா வழங்கி அவரை காங்கிரஸ் அனுதாபியாக மாற்றியிருக்கிறது. மெல்ல மெல்ல, அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓரளவுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு யுக்தியாக இது இருக்கலாம். நன்றியுணர்ச்சி சச்சினுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா?!? இறுதியாக, சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கக்கூடாது என்பதல்ல வாதம். அவரை விட மகத்தான (விளையாட்டில்) சாதனையாளரான உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காததில் உள்ள நியாயமின்மையும், அரசியல் சார் ஓரவஞ்சனையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



இந்த இரண்டு கட்டுரைகளை (ஒன்று ஆனந்த் பற்றி, ஒன்று சச்சின் பற்றி) கட்டாயம் வாசிக்கவும்.

Viswanathan Anand is as precious as Sachin Tendulkar -----
http://www.rediff.com/sports/slide-show/slide-show-1-viswanathan-anand-is-as-precious-as-sachin-tendulkar/20131109.htm#5

Master Blaster or Master Laster: A revisionist look at Sachin Tendulkar’s career -----
http://www.livemint.com/Opinion/PKgPHTk5wKn8DZLRpCtCyK/Master-Blaster-or-Master-Laster-A-revisionist-look-at-Sachi.html

- எ.அ.பாலா

மேலே கையில் ஆனந்த் போட்டோ வரையற அன்னிக்கு ஆனந்துக்கு பாரத ரத்னா. அது வரைக்கும் யாரும் 'கை' கட்சியை திட்டாதீங்க.

Read More...

Saturday, November 16, 2013

சச்சின் !

குட் பை சச்சின் - நன்றி

Read More...

Friday, November 15, 2013

கலி முற்றிவிட்டது


"Jesus Sahasranama has its roots in the Syriac prayers of primitive Christians. Its form is derived from the Vedic hymns. Every epithet of the Divine contains quantum of 'esse' and the recital of holy names is conducive to mystical experience."

மேலும் தகவல் இங்கே : http://jesusmantra.com/

இவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்கிறது ஆனால் இதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், ஈவெரா சரியா, ஈவேரா சரியா என்று அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்... கலி முற்றிவிட்டது

Read More...

Thursday, November 14, 2013

பீட்சா 2 - வில்லா - FIR

த்ரில்லர் படத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் என்று அதனுடைய கதையை சொன்னால் பிறகு எனக்கு யாராவது பில்லி சூனியம் வைத்தாலும் வைத்துவிடுவார்கள். அதனால் நோ கதை.

பிட்சா-1 வெற்றிக்கு பிறகு பிட்சா-2 எடுக்க போகிறேன் என்று கிளம்பிய போது என்ன எடுக்க போகிறார்கள் என்று நினைத்தேன். (பில்லா-1க்கு பிறகு பில்லா-2... இப்படி நிறைய படங்கள் பார்த்த effect. )ஆனால் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் நம்மை உள்ளே எழுத்துக்கொண்டு அந்த வில்லாவில் உலாவ விட்டுவிட்ட்டார் இயக்குனர் தீபன்.

த்ரில்லர் படத்துக்கு பலமே அதன் திரைக்கதை தான். படத்தில் எங்கும் தொய்வு இல்லாமல் ஆனந்த்– கார்ல்சென் செஸ் விளையாடுவது போல காட்சிகளை நகர்த்தியுள்ளார்கள்.

இடைவேளி வரை படத்தில் பேய் பிசாசு எதுவுமே இல்லாமல் நமக்கு ஒரு திகிலூட்டும் அனுபவத்தை நமக்கு தந்து அசத்திவிட்டது பிட்சா-2 டீம்.  இந்த படத்துக்கு மிகப் பெரிய பலம் - அசோக் செல்வன் நடிப்பு, இசை மற்றும் ஒளிப்பதிவும்.

கடைசியில் சில காட்சிகளில் நம்மை 'அட' போட வைத்து, நல்ல படம் பார்த்த திருப்தியுடன் வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

பிட்சா-3யை எதிர்பார்க்க வைக்கும் படம்.

இட்லிவடை மார்க் - 6.5/10


முக்கிய குறிப்பு: ஏதோ பேய் படம் என்று நினைத்து குழந்தைகளை வீட்டில் வீட்டு விட்டு போக வேண்டாம். பயமே இல்லாத நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் !

Read More...

Wednesday, November 13, 2013

கூகிள் :-)



Read More...

Monday, November 11, 2013

காமன்வெல்த் கூத்து

இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் 15ஆம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் தம்மால் பங்கேற்க இயலாது என்று தெரிவித்து இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார் என்ற செய்தி வந்த பிறகு தமிழர் அமைப்புக்கள், தமிழக அரசியல் கட்சிகள் கொண்டாட தொடங்கியுள்ளார்கள்.

அந்த கடிதத்தில் ஏன் வர முடியாது என்ற காரணத்துக்கு "various reasons" என்று குறிப்பிட்டு காரணங்களை சொல்லாமல்,  தொலைப்பேசியில் கூப்பிட்டு பேசுகிறேன் என்றும் கடிதம் எழுதியுள்ளார் நம் பிரதமர்.

தமிழர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு விட்டார், எங்களுக்கு வெற்றி என்று எல்லோரும் தமிழ்நாட்டில் கூத்தடிக்க ஆரம்பித்துவிட்டாகள். இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது ?

பிரதமர் தன்னுடைய கடிதத்தில் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து என்று கூறியிருக்கிறாரா ? உண்மையான காரணம் வரும் "பாராளுமன்ற தேர்தல்" என்று எல்லோருக்கும் தெரியும் இருந்தும் ஆனந்த கூத்தாட தமிழர்களுக்கு சொல்லியா தர வேண்டும் ? நக்கீரன், ஜூவி, ரிப்போட்டரில் கவர் ஸ்டோரி எழுத தான் இந்த ஸ்டண்ட் உதவும் மற்றபடி பிரதமர் போயிருந்தால் சிறைப்படுத்தியுள்ள மீனவர்களாவது விடுவிக்க முயற்சி எடுத்திருக்கலாம். .


முன்னதாக, இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கை எப்படியும் பங்கேற்கச் செய்துவிட வேண்டும் என்பதில் இலங்கை அரசு மிகவும் ஆர்வம் கொண்டிருந்தது. இதற்காக, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் தில்லியில் பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பிரதமர் அதை ஒழுங்கான காரணம் இல்லாமல் தட்டிக்கழித்துவிட்டார். இப்படி அண்டை நாடுடன் பகைமை வளர்ந்தால் இலங்கை அடுத்த பாகிஸ்தான் ஆக ரொம்ப நாளாகாது.

தமிழ் நாட்டு கட்சிகளும், சமூக அமைப்புகளும் அரசியல் கட்டாயங்களுக்காக இப்படி பேச தேவை இருக்கலாம், ஆனால் பிரதமர் ? தேச நலனை கருத்தில் கொள்ள வேண்டும். இதே காமன்வெல்த் மாநாடு இலங்கை அல்லாது வேறு ஒரு நாட்டில் நடந்திருந்தால், பிரதமர் அங்கே சென்று நவாஸுடன் கைகுலுக்கியது போல ராஜபட்சவுக்கும் கைகுலுக்கியிருப்பார். அப்போது இந்த தமிழ் கும்பல் சும்மா இருந்திருக்கும். பிரச்சனை இலங்கை செல்வது தான்.



இந்த சூழ்நிலையில் நரேந்திர மோடி என்ன செய்திருப்பார் என்று யோசிக்க வைக்கிறது.

Read More...

Sunday, November 10, 2013

புஷ்பா தங்கதுரை - அஞ்சலி



அஞ்சலி

Read More...

Thursday, November 07, 2013

ஒரு கட்டுரையும் எதிர்வினையும் - காமெடி பீஸ்


தி.இந்துவில் வந்த எதிர்வினையாம்...

கண்கொள்ளாக் காட்சி அது. பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோரும் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள ‘தி இந்து’ அலுவலகத்துக்கு நேற்று வந்தார்கள். ஜெயமோகன் எழுதிய ‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?’ கட்டுரைக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வந்த அவர்கள், எதிர்வினையாகக் கையெழுத்திட்டுக் கொடுத்த கண்டன அறிக்கை இது.



மனக்குமுறலோடு ஒரு மடல்

‘‘வணக்கம், இந்த மடலின் இறுதியில் கையொப்பமிட்டுள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களும், தமிழ் உணர்வாளர்களுமாகிய நாங்கள் ‘தி இந்து’நாளிதழில் (4.11.13) வெளியாகியுள்ள எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?’ என்னும் கட்டுரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உலகெங்கும் வாழும் பல கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்திலும் ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் விதத்திலும் எழுதப்பட்டுள்ளது. ‘எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்’என்பார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். இப்போது தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஒரு ‘மாமேதை’இறங்கியுள்ளார். அதற்கு ‘தி இந்து’நாளிதழ் துணைபோகலமா?

தன்னை ஒரு நாயர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவர், மலையாள மண்ணின் மீது மாறாத பற்றுடையவர் என்பதை அறிவோம். அந்த மலையாள மண்ணில் மாற்றங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை அழிக்க ஜெயமோகன் புறப்படட்டும்.

மலாயுடன் ஒப்பிடலாமா?

மலாய் மொழியைத் தமிழுக்கு ஒப்பிட்டுக்காட்டுவது எவ்வகையில் பொருந்தும்? தங்களுக்கென்று தனி வரிவடிவம் இல்லாத நேரத்தில், பிற வரிவடிவங்களைக் கையாள்வது இயல்புதான். மலாய் மொழி ஆங்கில எழுத்துருவுக்கு வந்திருப்பதாகக் கட்டுரையாளர் சொல்கிறார். அது லத்தீன் எழுத்துருவிலும், சுமத்ரா பகுதியில் அரபு எழுத்துருவிலும்கூட எழுதப்படுகிறது என்பதை அவர் அறிவாரா?

தமிழ் எழுத்துகளின் மூல எழுத்து ‘பிராமி’என்பது தவறான கருத்து என்பதை மொழியியலாளர்களே இன்று ஏற்கின்றனர். அதனால்தான், ‘தமிழ் பிராமி’என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை எல்லாம் மொழியியல் மேதை ஜெயமோகன் அறிவாரா?

எழுத்துருவை மாற்றும்போது (உச்சரிப்பு) ஒலிப்பு முறை முற்றிலும் மாறிவிடாதா? தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று ஜெயமோகன் துடியாய்த் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது? கனத்த நெஞ்சுடன், மீண்டும் எங்களின் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’’

கையெழுத்திட்டவர்கள்

தொல்.திருமாவளவன், கலி.பூங்குன்றன், சுப.வீரபாண்டியன், தியாகு, பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், க.திருநாவுக்கரசு, சைதை க.வ.சிவா, மே.ப.காமராஜ், கி.த.பச்சையப்பன், வா.மு.சே.திருவள்ளுவர், பா.இறையெழிலன், கோ.பாவேந்தன், தமிழ்மகன், உதயன், முத்தையா குமரன், கோவேந்தன்.

கருத்துகளை மதிக்கிறோம்

தமிழ்ச் சூழலில், ஒரு புதிய விவாதக் களத்தை ‘தி இந்து’ தொடங்கிவைத்திருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் அது பெரும் வீச்சை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது. ‘கருத்துப் பேழை’ மற்றும் ‘அரசியல் கள’த்தைத் தாங்கிவரும் நம்முடைய நடுப்பக்கங்கள் வெவ்வேறு குரல்களின் கருத்துகளை முன்வைக்கும் தளமாகவே வருகின்றன. கட்டுரையாளர்கள் அல்லது பேட்டியாளர்களின் கருத்துகள் நம்முடையவை அல்ல. அதே சமயம், எல்லா விதமான கருத்துகளும் சங்கமிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்று நாம் நம்புகிறோம். எதிர்வினைகளுக்கும் நாம் இடம் அளிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று முதல் வாசகர் கடிதங்களுக்கான இடத்தையும் கூடுதலாக்குகிறோம். தமிழால் இணைவோம்!

- ஆசிரியர்



வந்தவர்களுக்கு ஒரு கப் காபி செலவில் தி.இந்து பல காப்பிகளை விற்றுவிட்டது என்று நினைக்கிறேன்.

"தி.இந்து" - ஆங்கில சொல்லை தமிழில் எழுதும் போது தமிழ் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதுவது தவறா ? சிந்தியுங்கள்

Read More...

Wednesday, November 06, 2013

பெண்ணெழுத்து - இரா.முருகன்

இட்லிவடை பத்தாம் ஆண்டு சிறப்பு பதிவு ஒன்று எழுதி தாங்க என்று கேட்டவுடன். சனிக்கிழமை தருகிறேன் கூறி அதே மாதிரி எழுதியும் கொடுத்தார் நண்பர் இரா.முருகன்ஜி.


[இது ஒரு பெண் எழுதியது. இவளைத் தேடினால் கிடைக்க மாட்டாள். என் சொந்தம் தான். ஆனாலும் நானே பார்த்ததில்லை. என் முப்பாட்டிக்கு முந்தியவளுக்கு முந்திய பெண். நூற்று ஐம்பது வருஷம் நமக்கு முந்தியவள். அந்தக் காலத்திலும் பெண்கள் உண்டு. ஆண்கள் உண்டு. ஆண்கள் இந்தப் பெண்களை அரவணைத்திருக்கிறார்கள். அதிகாரம் செய்திருக்கிறார்கள். கூட முயங்கி குழந்தை கொடுத்திருக்கிறார்கள். விதவையாக மொட்டையடித்துத் தெருவில் துரத்தியிருக்கிறார்கள். காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார்கள். வரட்டியாக மாட்டுச் சாணத்தோடு தட்டி எரித்திருக்கிறார்கள். வாவரசி (வாழ்வரசி) என்று வணங்கி இருக்கிறார்கள்.

இந்தப் பெண் எழுதி வைத்த குறிப்புகளில் சில இவையெல்லாம். அவள் காலப் பெண்கள் பட்ட கஷ்டங்கள், அனுபவித்த சின்னச் சின்ன சந்தோஷங்கள், பயங்கள், கவலைகள், ஆசைகள், நிராசைகள் பற்றி எல்லாம் சொல்கிறவை இவை. மொழி பழையது. ஆனால் மனசிலிருந்து வருவது. எனவே எப்போதும் புதுசுதான். பெண் மனசு ஆச்சே]


அரசூர் (தேதி உத்தேசமாக) ஜனவரி 1877 நாலாவது சனிக்கிழமை

நான் பகவதி. என்றால், பகவதிக் குட்டியாக்கும் முழுப் பெயர். அம்பலப்புழக்காரி. அங்கே பகவதிக் குட்டி என்றால் வெகு சகஜமான பெயர். இங்கே தமிழ் பேசுகிற பூமியில் குட்டி என்றால் கேலியும் கிண்டலும் பண்ணுவார்களாமே. அம்பலப்புழையிலிருந்து கல்யாணம் கழித்து இங்கே வந்தபோது என் புருஷன் அப்படித்தான் சொன்னார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மலையாளம் மட்டும் தெரிந்த எனக்கு தமிழ் சுமாராக தப்பு இல்லாதபடிக்கு எழுத, மலையாள வாடை அதிகம் கலக்காமல் பேசக் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்.

நாங்கள் இங்கே அரசூரில் இருக்கிறோம். அவர் புகையிலைக் கடை வைத்து நிர்வாகம் செய்கிற பிராமணன். என்ன யோசனை? பிராமணன் புகையிலைக் கடை வச்சிருக்கானா, அடுத்தாப்பல என்ன, அரவசாலை.. ஷமிக்கணும்..கசாப்புசாலை..கசாப்புக்கடை, சாராயக்கடை தான் பாக்கி என்று நினைக்கிற தோதிலா?

புகையிலைக்கடைக்காரனுக்கு எல்லாம் நம்மாத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து அனுப்புகிறோமே, காசு வசதி அத்தனைக்கு இல்லாமலா போனது நமக்கு என்று என் அண்ணாக்கள் மூணு பேரும் ஏகத்துக்கு விசனப்பட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் யாரும் தாசில்தார், கோர்டு கிளார்க்கர்மார் போல் பெரிய உத்தியோகத்தில் இருக்கப்பட்ட மனுஷ்யர் இல்லை. சமையல்காரர்கள் தான். நாலு பேருக்கு இல்லை, நானூறு பேருக்கு வடிச்சுக் கொட்டி, கிண்டிக் கிளறி, வறுத்துப் பொடித்து வதக்கி, கரைத்து, காய்ச்சி மணக்க மணக்க கல்யாண சமையல் செய்கிற சமையல்காரர்கள். தேகண்ட பட்டன்மார் என்பார்கள் எர்ணாகுளம், கொச்சி பக்கம். பட்டன் என்றால் தமிழ் பேசுகிற தாழ்ந்த ஸ்திதியில் இருக்கப்பட்ட பிராமணன். நம்பூதிரிகள் உயர்ஜாதி தெய்வ துல்யரான பிராமணர்கள். அவர்களுக்கு பட்டன்மார் ஆக்கி வைக்கிற சமையல் ரொம்பவே பிடிக்கும். எங்களை மாதிரி பட்டத்திக் குட்டிகளையும் கூட. எந்த ஜாதி பெண்ணை விட்டார்கள் அவர்கள்? எது எப்படியோ, தமிழ் பிராமணன் அழுக்கு தரித்திரவாசி. போனால் போகட்டும் என்று ரொம்ப தாழ்ந்த ஸ்தானம் கொடுத்து அவர்களையும் பிராமணர்களாக கொஞ்சூண்டு மதிக்கிறார்கள்.

நம்பூத்ரி கிடக்கட்டும். அம்பலப்புழை பற்றி இல்லையோ பிரஸ்தாபம்.

கல்யாணம் கழிச்சு ரெண்டு வருஷம் பாண்டி பிரதேசத்தில் இந்த அரசூரில் குடியும் குடித்தனமுமாக இருக்க ஆரம்பித்த பிற்பாடு கூடசொந்த ஊர் மோகமும், ஈர்ப்பும், பறி கொடுத்த மனசும், அங்கே போகணுமே என்று சதா மனசிலொரு மூலையில் நமநமன்னு பிறாண்டி பிராணனை வாங்கறது.

கிடக்கட்டும் அதெல்லாம். அதை எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு உட்கார்ந்து எழுத இல்லையாக்கும் எங்களவர் இப்படி கட்டு கட்டாக காகிதமும் கட்டைப் பேனாவும், ஜலத்தில் கரைத்தால் மசியாகிற குளிகையும் வாங்கி கொடுத்ததும் கையைப் பிடித்து உருட்டி உருட்டி தமிழ் எழுத சொல்லிக் கொடுத்ததும்.

தினசரி மனசில் தோணுகிறதை நாலு வரியாவது எழுதி வை. கையெழுத்தும் தமிழ் ஞானமும் மேம்படும். நிறைய எழுத ஆரம்பித்ததும் பட்டணத்தில் வெள்ளைக்காரன் போட்டு விக்கற டயரி வாங்கி வந்து தரேன். தினசரி ஒரு பக்கம் தேதி போட்டு எழுத சவுகரியமாக கோடு எல்லாம் போட்டு வச்சிருக்கும். வருஷா வருஷம் டயரி எழுதி நம்ம சந்ததிக்கு நாலு காசோடு கூட ஆஸ்தியாக விட்டுட்டுப் போகலாம். இதோட மதிப்பு இப்போ தெரியாது. இன்னும் நூறு வருஷம் கழிச்சு தெரிய வரும் அப்படீன்னு சொன்னார்.

இங்கிலீஷ்காரன் பிருஷ்டம் துடைச்சுப் போடுகிற எழவெடுத்தவன். அவன் போட்ட நாத்தம் பிடிச்ச டயரி எல்லாம் வேண்டாம். உங்க பேரை எழுதக் கூட அது தகுந்ததில்லைன்னு சொல்லிட்டேன்.

அய்யோ, மசி தீர்ந்து கொண்டு போறது. நான் இன்னும் விஷயத்துக்கே வரலே. வந்தாச்சுடீயம்மா.

நேற்றைக்கு வெள்ளிக்கிழமையாச்சா? அரசூர் பக்கம் நாட்டரசன்கோட்டையில் கண்ணாத்தா கோவிலுக்கு சாயந்திரம் போய் மாவிளக்கு ஏற்றி வச்சு ஒரு கண்மலர் சாத்திட்டு வரலாமேன்னார். அவர் போன மாசம் கண்ணிலே கட்டி வந்து கஷ்டப்பட்டபோது வேண்டிண்டது.. வெள்ளியிலே கண் மலர்னு சொல்வா இங்கே.. அம்பாள் கண்ணோட சின்ன பிரதிமை.. அங்கேயே விக்கற வழக்கம். வாங்கி கண்ணாத்தா பாதத்தில் வச்சுக் கும்புடணும். ரொம்ப இஷ்டமான காரியமாச்சே. அம்மாவோ அம்மையோ எல்லாம் நீதாண்டி ஈஸ்வரி.

ஆக நான், பக்கத்தாத்து அரண்மனைக்கார ராணி மாமி. என்ன அதிசயமா அப்படி ஒரு பார்வை? எங்காத்துக்கு அடுத்த வீடு ஜமீன் அரண்மனை. ராஜா இருக்கார். மாமனார் இருந்தா அவர் வயசு. ராணியம்மா உண்டு. ராணி மாமி, ராஜா மாமான்னு கூப்பிடுப் பழகிடுத்து. தங்கமான மனுஷர்கள்.

நாங்க தவிர, அரசூர் அரண்மனை ஜோசியர் வீட்டு சோழிய அய்யங்கார் மாமி, அவா பக்கத்து எதிர் வீட்டுலே ரெண்டு பெண்டுகள் .. பெருங்கூட்டம் தான். ஐயணை ஓட்டற ரெட்டை மாட்டு வண்டியிலே நாங்க. பெரிய கப்பல் மாதிரி விஸ்தாரமான வண்டியாக்கும் அது. ராணியம்மா ஏறணும்னா ஏப்பை சாப்பை வண்டி எல்லாம் சரிப்பட்டு வருமா என்ன?

இது ஸ்திரிகள் பட்டியல். ஆம்பளைகளும் நிறைய. எங்காத்துக்காரர், அவருடைய புகையிலைக்கடை ஸ்நேகிதர்கள், அரண்மனை வாசல் ஜவுளிக்கடை மூக்கக் கோனார், அரண்மனை சமையல்காரன் பளனியப்பன் ஆமா பழனியப்பன் இல்லையாம். இப்படி இன்னொரு கூட்டம் புளி மூட்டையாக இன்னொரு பெரிய வண்டியில்.

வெய்யில் தாழ நாலரை மணிக்குக் கிளம்ப உத்தேசிக்க, இவர் புகையிலைக் கடை நெடியும், கடைத்தெரு புழுதியும் வியர்வையுமாகக் கசகசக்கிறது என்று குளிக்கக் கிளம்பிவிட்டார். கிணற்றில் இரைத்து ஊற்றி, ஊர்க்கதை பேசி ஐயணை குளிப்பாட்டி விட்டபோது ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. புருஷன் குளித்துக் கிளம்பும்போது பெண்ஜாதி அட்டுப் பிடித்தாற்போல் போகலாமா என்று நானும் நாலு வாளி இரைத்து ஊற்றிக் கொள்ளும்போது மூக்கில் போட்ட நத்து கிணற்றில் விழுந்து தொலைத்தது. வைர மூக்குத்தியை எடு, மூக்கில் குத்தி ரத்தம் வர திருகு என்று நரக வாதனையோடு அதை போடுவதற்குள் வாவா என்று வாசலில் இருந்து ஆயிரம் கூச்சல்.

சரி கிளம்பலாம் என்று எல்லோரும் புறபபட மாம்பழப் பட்டுப் புடவையைச் சுற்றிக் கொண்டு அவசரமாக மாட்டு வண்டியில் போய் உட்கார்ந்தேன். பக்கத்து அரண்மனையாத்து ராணிமாமி எனக்கு முன்னாடியே அங்கே இருந்தாள்.. ரொம்ப வாஞ்சை அம்மா மாதிரி. மாமியார் இல்லாத குறையை தீர்க்கவே இவளை தெய்வம் கொண்டு வந்து விட்டதோ என்னமோ. பிராமணாள் இல்லை. சேர்வைக்காரர் வம்ச வாவரசி. ஜாதி என்ன கண்றாவிக்கு? மனுஷா மனசில் அன்போடு பழகினால் போதாதா?

தட்டை, முறுக்கு, திராட்சைப் பழம் என்று நாலைந்து ஆகார வகையறாவை வண்டியிலேயே ராணிமாமி திறக்க மற்றப் பெண்டுகள் வஞ்சனையில்லாமல் தின்று தீர்த்தார்கள். கூட ஆண்கள் இல்லாத சந்தோஷமாக்கும் அது. அப்புறம் பானகம். வேணாம் வேணாம் என்று நான் சொல்ல சங்கிலே சிசுவுக்கு மருந்து புகட்டுகிற மாதிரி தலையைத் திருகி வாயில் ஒரு பஞ்ச பாத்திரம் நிறைய் வார்த்து விட்டாள் ராணி. நான் எட்டிப் பார்த்தேன். ஆண்கள் வந்த வண்டியை எங்காத்துக்காரர் தான் ஜன்மாஜன்மத்துக்கும் வண்டிக்காரனாக ஆயுசைக் கழிக்கிற மாதிரி உற்சாகமாக வண்டி ஓட்டி வந்தார். வாயில் ஏதோ தீத்தாராண்டி பாட்டு வேறே.

நாட்டரசன்கோட்டை போனதும் தெப்பக்குளக் கரையில் ரெண்டு வண்டியும் நின்றது. ஆம்பிளைகள், எங்காத்துக்காரரும் கூடத்தான் வரிசையாக இறங்கி ஓரமாக வேலி காத்தான் புதர் ஓரம் குத்த வைத்தார்கள். எங்க வண்டியிலே மசான அமைதி. பொண்ணாப் பிறந்த ஜன்ம சாபம் அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது.

அத்தனை பொம்மனாட்டிகளும் பானகமும் ஊருணித் தண்ணீரும், சீடை முறுக்கு சாப்பிட்ட அப்புறம் பித்தளை கூஜாவில் இருந்து ஏலக்காய் போட்ட வென்னீருமாகக் குடித்து எல்லோருக்கும் வயிறு வீங்குகிற அளவு மூத்திரம் முட்டுகிறது. ஆனா, பெண்ணாப் பிறந்தவ, அவ ஊருக்கே பட்டத்து ராணியா இருந்தாலும், உலகத்துக்கு ஜாதகம் கணிக்கிற ஜோசியர் பெண்டாட்டியாக இருந்தாலும், காசு புரளும் புகையிலைக்கடைக்காரன் ஆம்படையாளாக இருந்தாலும் இடுப்புக்கு கீழே ராத்திரி மட்டும் உசிர் வரப் பட்டவர்கள். மற்ற நேரம், பொண்ணாப் பொறந்தாச்சு, பொறுத்துக்கோ.

சந்நிதிப் படி கடக்கும்போது எங்கே புடவையை நனைத்துக் கொண்டு விடுவேனோ என்று ஏக பயம். அதோடு கண்ணாத்தாவை தரிசிக்க, அவள் சிரித்தாள். என்ன அய்யர் ஊட்டுப் பொண்ணே, ரொம்ப நெருக்குதா? என்றாள். ஆமாடி ஆத்தா.

ஒரு நாள் இப்படி வாயிலே நுரை தள்ளுதே நான் வருஷக் கணக்கா இப்படித்தானே நிக்கறேன்னாளே பார்க்கணும். இல்லை எனக்கு மட்டும் கேட்டுதா?

அவசரமே இல்லாமல் பூசாரி தமிழ், கொஞ்சம் கிரந்தம், அப்புறம் ஏதோ புரியாத பாஷை எல்லாத்திலேயும் மந்திரம் சொல்லி சிரித்தார். தமிழில் நெஞ்சு உருகப் பாடினால் வேணாம் என்றா சொல்லப் போறா? அவ கிடக்கா. எனக்கு இப்படி முட்டிண்டு.

அப்புறம் ஒரு மணி நேர்ம் கூடுதல் சித்தரவதையோடு ஊர் திரும்ப வண்டி கட்டினார்கள். போகிற வழியில் ஆம்பிளைகள் திரும்ப குத்தி உட்கார்ந்து இன்னொரு தடவை நீரை எல்லாம் இறக்க, கால் வீங்கிப் போய் நாங்கள் சிவனே என்று வண்டியிலேயே உட்கார்ந்திருக்க வேண்டிப் போனது. பிரம்மா படைச்சபோது ஒரு குழாயை கூடவே கொடுத்திருக்கக் கூடாதா? நாளைக்கு விக்ஞானம் வளரும்போதாவது பிரம்மாவாவது தோசைமாவாவது என்று தூக்கிப் போட்டு விட்டு இந்தக் குழாய் சமாசாரத்தைக் கவனிக்கக் கூடாதா?

வீட்டுக்க்குள் வந்து பின்கட்டுக்கு ஓடி ஒரு பத்து நிமிஷம் பெய்து தீர்த்தேன். எதுக்கோ உடனே குளிக்கத் தோன்ற கிணற்றில் இரைத்து இன்னொரு ஸ்நானம். உள்ளே வந்து புடவையை மாற்றிக் கொண்டு பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் நமஸ்காரம் பண்ணினேன். தப்பாச் சொல்லிட்டேனேப்பா உன்னை. பொண்ணு என்ன சொன்னாலும் எப்பச் சொன்னாலும் தப்பாச்சே. குழாய் எல்லாம் வேணாம்.

- இரா.முருகன்

இது 100% முருகனின் கற்பனை... பாட்டி சொல்லைத் தட்டாத கொள்ளுப் பேரன் முருகனாக்கும் :-)

Read More...

Tuesday, November 05, 2013

இன்று விண்ணில் ஏவப்படுகிறது மங்கள்யான்

பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்படும் மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் செவ்வாய் கோளுக்கு டிசம்பர் 1-ஆம் தேதி பயணத்தை தொடங்கும் எனவும், அதன் சுற்றுப்பாதையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி இணையும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்புகிறது.
- செய்தி
படம் உதவி : விகடன்
படத்துக்கும் செய்திக்கும் தொடர்பு எதுவும் இல்லை...

Read More...

Monday, November 04, 2013

எழுத்து(கு)ருக்கள்

தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது என்று ஒரு யோசனையை எழுத்தாளர் ஜெயமோகன் தி.இந்துவில் எழுத உடனே எல்லோரும் அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று அவர் சொன்ன கருத்தை ஆராயாமல் எதிர்க்க கிளம்பிவிட்டார்கள். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

அவர் எழுதிய கட்டுரைக்கு முன்பே எதிர்வினையும் எழுதி கலக்கிவிட்டார் ஜெயமோகன்.

இன்று பலர் கம்ப்யூட்டர் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நாளை ஆங்கிலத்துக்கு பதிலாக Hexல் எழுதினால் இன்னும் வசதியாக இருக்கும். வேறு எவரைவிடவும் மரபின் மீது ஆர்வம் கொண்டவர் ஜெயமோகன். மரபுகளை எப்போதும் தர்க்கபூர்வமாக உடைத்து ஆராயவும் மறுபரிசீலனை செய்யவும் முயல்பவர் அவர். ஆழமான தொடர்ந்து பயிற்சியும் இருந்தால் இன்னும் சில வருஷங்கள் கழித்து ஆங்கிலத்துக்கு பதிலாக Hexல் எழுதினால் நல்லது என்று சொல்லுவார் என்று ஊகிக்கிறேன்.

சாம்பிளுக்கு Hexdump ஒன்றை கொடுத்துள்ளேன். என்ன என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஜெயமோகன் அடுத்து எழுதும் தமிழ் கலந்த ஆங்கில மலையாள நாவல் பரிசு அளிக்கப்படும்.இப்படி Hexல் மாற்றுவது நடைமுறைச் சாத்தியமா என்பது, தெரியவில்லை. ஆனால் எல்லாமே சாத்தியமானதுதான் என்றுதான் தோன்றுகிறது. பத்ரி போன்றவர்கள் விளக்கம் அளிக்கலாம்.

e0aea8e0aea3e0af8de0aeaae0aea9e0af88e0ae95e0af8d20e0ae95e0af8ae0aea9e0af8de0aea9e0aeb5e0ae99e0af8de0ae95e0aeb3e0af88e0aeaae0af8d20e0aeaae0aeb4e0aebf20e0aeb5e0aebee0ae99e0af8de0ae95e0aebfe0aea9e0aebe20e0ae85e0aea4e0af81202d20e0ae86e0aeb0e0aeaee0af8de0aeaae0aeaee0af8d20e0ae85e0aea3e0af8de0aea3e0aea9e0af8820e0ae95e0af8ae0aea9e0af8de0aea9e0aeb5e0ae99e0af8de0ae95e0aeb3e0af88e0aeaae0af8d20e0aeaae0aeb4e0aebf20e0aeb5e0aebee0ae99e0af8de0ae95e0aebfe0aea9e0aebe20e0ae85e0aea4e0af81202de0aeaae0aebee0aea3e0af8de0ae9fe0aebfe0aeafe0aea8e0aebee0ae9fe0af813b20e0ae86e0ae9fe0aebfe0aeafe0aea9e0af8de0ae9ae0af8820e0aeaae0aeb4e0aebfe0aeb5e0aebee0ae99e0af8de0ae95e0aebfe0aea9e0aebe20e0ae85e0aea4e0af81202d20e0ae85e0aeb4e0ae95e0af81e0aeb0e0aebee0ae9ce0aebeaa

Read More...

நூலகங்கள், பதிப்பகங்கள் - பிரபஞ்சன்

'நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் வாங்கப்படுவது இல்லை என்று பதிப்பகங்கள் சார்பில் அறிக்கைகள் வருகின்றன. நூலகங்களை நம்பித்தான் பதிப்பகங்கள் செயல்பட வேண்டுமா? வேறு வழி இல்லையா?''

''அரசு நூலகங்களை நம்பியே பதிப்பகங்கள் வாழ்வது ஓர் அவலம். இங்கு மக்கள் இன்னும் புத்தகங்களோடு சேர்ந்து வாழும் நிலை உருவாகவில்லை. புத்தகத்தின் வெகுமதி உணரப்படவில்லை. இது ஒரு பக்கம். தமக்குரிய நூல்களைத் தேர்ந்து வாசிக்கும் பயிற்சி, வாசகர்களுக்குப் போதவில்லை. சமையல், வாஸ்து, அழகுக் குறிப்புகள், ஆண்மை விருத்தி, பத்து நாட்களில் பணக்காரர் ஆகும் வழி முதலானவைகூட இங்கு புத்தகம் என்றே அழைக்கப்படுகின்றன. வங்க நாவலாசிரியர் விபூதி பூஷண் (பதேர் பாஞ்சாலி நாவல் ஆசிரியர்) எழுதிய வங்க நாவல் 'வனவாசி’யை சாகித்ய அகாதமி முன்னர் தமிழில் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற, நேர்மை மிகுந்த டி.என்.குமார சாமி-டி.என்.சேனாபதி சகோதரர்கள் வங்க மொழி பயின்று வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்த சில அரிய படைப்புகளில் ஒன்று 'வனவாசி’. இது 'ஆரண்யம்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பாளர் பெயர் இல்லாமல், அநாதையாக இப்போது வெளியாகி இருக்கிறது. இதையும் காசு கொடுத்து, நூலகத் துறை வாங்கும்.

பதிப்பாளர்கள் சிலர், எழுத்தாளர்களுக்கு ராயல்ட்டி கொடுக்காமல் பட்டினி போட்டுச் சாகடிக்கிற தமிழ்த் தொண்டு செய்கிறார்கள். என்றாலும், பதிப்பாளர்களுக்கு அரசியல், கட்சி முதலான காரணங்களால் அவர்கள் உரிமை பறிக்கப்படும்போது நாம் அவர்கள் பக்கமே நிற்க வேண்டும். அதே சமயம், பாதிக்கப்படுகிற எழுத்தாளர் பக்கமும்தான்!''

நன்றி: விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள்

சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். அன்று வந்துசேர்ந்த ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்று சொன்னது அது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை! - ஜெயமோகன் - தி.இந்து கட்டுரையில்..

ஆங்கிலத்தில் புத்தகத்தை நம்பி வாங்கலாம். தமிழில் ?

Read More...

Saturday, November 02, 2013

குஜராத் - மக்கள் நம்பும் முன்னேற்றம் - ஹரன்பிரசன்னா



குஜராத்தின் முன்னேற்றம் பற்றி எல்லா ஊடகங்களும் எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் வேளையில், உண்மையிலேயே அங்கே அந்த முன்னேற்றம் வந்துள்ளதா என்று பார்க்க குஜராத் பயணம் செய்தோம். ஒட்டுமொத்த இந்தியாவின் முன்னேற்றம் என்பதே, குஜராத் மாடல் என்பதையொட்டி இருக்கவேண்டும் என்று இங்கு எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் குரலின் உண்மைத்தன்மை என்ன என்பதே நாங்கள் அறிய விரும்பியது. இதுதொடர்பாக, ஏற்கெனவே கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘மோடியின் குஜராத் – இந்தியாவின் முன்மாதிரி’ என்னும் புத்தகம் எங்கள் ஆவலையும் சந்தேகத்தையும் ஒரு சேரக் கிளப்பிவிட்டிருந்தது. சரவணன் எழுதிய அந்தப் புத்தகம் நிறைய தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் கொண்டது. குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சியை, குஜராத்துக்குச் சென்று அங்கேயே தங்கி, நேரில் பார்வையிட்டு சரவணன் அப்புத்தகத்தை எழுதியிருந்தார். அப்புத்தகத்தை வாசிக்கும் எந்தவொரு இந்திய மனமும், தங்கள் மாநிலம் இப்படி இல்லையே என்றோ, தங்கள் நாடான இந்தியா இப்படி இல்லையே என்றோ ஏக்கம் கொள்வது உறுதி. கூடவே அவையெல்லாம் உண்மைதானா என்ற எண்ணமும், அங்கே வசிக்கும் மக்கள் இந்த முன்னேற்றத்தையெல்லாம் உணர்ந்திருக்கிறார்களா என்ற சந்தேகமும் மேலெழும். இதை ஒட்டியே எங்கள் பயணமும் அமைந்தது.

முதல் ஒருநாள் குஜராத் அரசுத் தரப்பில் கிடைக்கும் விவரங்களைச் சேகரித்துக்கொண்டேன். மீதி நாள்களில் குஜராத் பொதுமக்களின் கருத்தை அறியவே முக்கியத்துவம் அளித்தேன். ஹோட்டல்களில் வேலை பார்க்கும் அடித்தட்டு சர்வர்கள்முதல், ஆட்டோ ஓட்டுநர், கல்லூரி மாணவ மாணவியர், இல்லத்தரசிகள், அரசு அதிகாரிகள், அங்கே வாழும் தமிழர்கள், தொழில்முனைவோர் எனப் பலரிடமும் குஜராத் பற்றிப் பேசினேன். அவர்கள் சொன்ன கருத்துகளை இங்கே தருகிறேன். அதன் பின்னர் என் கருத்துகளைப் பதிவு செய்கிறேன்.



சபர்மதி ஆஸ்ரமத்தில் ரோஹித் என்னும் பி.காம் படிக்கும் மாணவர் ஒருவரை சந்தித்துப் பேசினேன். மோதி பற்றியும் குஜராத் பற்றியும் கேட்டேன். மோதியின் நிர்வாகத்தை வெகுவாகப் புகழ்ந்தார் அந்த மாணவர். அவரது ஆட்சியில், நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகச் சொன்னார். பள்ளி அளவில் கல்வியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கருதினார். மோதியைப் பற்றிச் சரியாகச் சொல்லவேண்டும் என்றால், அவரது வேலையை அவர் ஒழுங்காகச் செய்கிறார் என்றே சொல்வேன் என்றார்.


அங்கே நிதி என்னும் இன்னொரு கல்லூரி மாணவியைச் சந்தித்துப் பேசினேன். எம்.எஸ்.சி படித்த அந்தப் பெண், ‘பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் குஜராத். இரவு 12 மணிக்குக்கூட ஒரு பெண் தைரியமாகத் தனியாக வெளியே சென்று வர முடியும். டெல்லியைப் போல் பயமில்லை’ என்றார். வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்டபோது, ‘ஐடி துறைகளில் அத்தனை வேலைவாய்ப்பு இல்லை. இப்போதுதான் ஐடி வேலைவாய்ப்பு வரத் துவங்கியிருக்கிறது. பெங்களூரு, சென்னை போல ஐடி துறையில் இங்கே வேலைவாய்ப்புகளை எங்களால் எதிர்பார்க்க முடியவில்லை. மேலும் தொடக்கச் சம்பளம் என்பது மிகவும் குறைவாக உள்ளது’ என்றார். மற்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் எப்படி என்று கேட்டதற்கு, ‘மற்ற எல்லாத் துறைகளிலுமே வேலைவாய்ப்பு சிறப்பாகவே உள்ளது. அதேபோல் ஐடி துறையிலும் வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும்’ என்ற கருத்தைச் சொன்னார்.

இதன் பின்பு, எங்களுக்கு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த டிரைவரிடம் பேசினேன். அவரது பெயர் சந்தோஷ். மோதி எப்படி என்று கேட்ட உடனேயே, ‘மோதி ஒரு மிகச்சிறப்பான மனிதர்’ என்றார். ‘கடந்த பத்தாண்டுகளில் மோதியின் தலைமையில் குஜராத்தும், குறிப்பாக அகமதாபாத்தும் பெற்றிருக்கும் வளர்ச்சி அபாரமானது. நான் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம்தான் வேலை பார்த்தேன். ஆனால் மோதியின் குஜராத் மீதான அக்கறையைப் புரிந்துகொண்டு, நானும் மோதி ஆதரவாளராகிவிட்டேன். நான் மட்டுமல்ல, என்னுடன் இருந்த அத்தனை காங்கிரஸ் ஆதரவாளர்களும் இன்று மோதியின் ஆதரவாளர்களே’ என்றார். ‘குஜராத்தின் முன்னேற்றம் பற்றி எப்படிச் சொல்கிறீர்கள்? நீங்களாகச் சொல்கிறீர்களா அல்லது இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா’ என்று கேட்டேன். ’நான் குஜராத்தில் 30 வருடங்களாக இருக்கிறேன். இந்த அகமதாபாத் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை என்னால் நிச்சயம் உணரமுடியும். கடந்த 10 வருடங்களில் இதன் வளர்ச்சி அபரிமிதமானது. சபர்மதி, நர்மதா ஆறுகள் தற்போது எப்படி உள்ளன என்று நீங்களே பார்த்தீர்கள்தானே? முன்பு அவை இத்தனை நன்றாகப் பராமரிக்கப்படவில்லை. அதேபோல் வீட்டில் இப்போதெல்லாம் மின்சாரம் போவதே இல்லை. அதைவிட முக்கியம், கடந்த 10 வருடங்களில் அகமதபாத்தில் ஒரு கலவரம்கூட இல்லை. தடையுத்தரவு இல்லை. நிம்மதியாக வாழமுடிகிறது. இதனால் வியாபாரம் பெருகியுள்ளது. சாலைகளை எல்லாம் பார்த்தீர்கள்தானே? குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்கிறது. நர்மதா ஆற்றின் தண்ணீர் எந்த எந்த ஊர்க்கெல்லாம் போகிறது என்று நீங்களே பார்த்தீர்கள்தானே? இதெல்லாமே மோதியால்தான் சாத்தியமானது’ என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

ஓர் ஆட்டோ டிரைவரின் கருத்து இது. ‘மோதியை நான் குஜராத்தின் சிங்கம் என்றே சொல்லுவேன். பார்த்தீர்களா சாலைகளை? (அப்போது நாங்கள் காந்தி நகரிலிருந்து அகமதாபாத் வந்துகொண்டிருந்தோம். விடாமல் அடைமழை பெய்துகொண்டிருந்தது.) இந்த மழையிலும்கூட மின்சாரம் போகவே போகாது’ என்றார். அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் மஹ்மூத். ‘மோதி பிரதமருக்குப் போட்டியிட்டால் நான் நிச்சயம் ஆதரிப்பேன்’ என்றார் இந்த மஹ்மூத்.

ஒரு நண்பர் வீட்டுக்குப் போனோம். அவர் அகமதாபாத்தில் அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கிறார். அன்று அடைமழை பெய்து கொண்டிருந்ததால், அவரது வீட்டின் கீழே நீர் சூழ்ந்துவிட்டது. நீர் விலகியதும் வந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். நாங்கள் போகும்போது வீட்டை நீர் சூழ்ந்திருந்ததற்கான அறிகுறிகளே இல்லை. அத்தனை நீரும் வடிந்திருந்தது. நாங்கள் வீட்டுக்குள் நுழைந்த உடனேயே மின்சாரம் தடைப்பட்டு விட்டது. அந்த நண்பரின் அம்மா பேசினார். ‘ரொம்ப மழையா இருந்ததால காலேலே இருந்தே கரண்ட் இல்லை. இப்பத்தான் வந்தது, திரும்பவும் போயிடுச்சு’ என்று சொல்லிவிட்டு, மெழுகுவர்த்தியைத் தேடினார். எங்கே தேடியும் அது கிடைக்கவில்லை. ‘பவர்கட்டே ஆகாதா, அதனால இதெல்லாம் தயாரா வெச்சிக்கிறதில்லை. இன்வர்ட்டர் கூட கிடையாது’ என்று சொல்லிவிட்டு, பக்கத்துவீட்டில் மெழுகுவர்த்தி இருக்கிறதா என்று கேட்டுவரச் சொல்லித் தன்மகனை அனுப்பினார். அங்கேயும் மெழுகுவர்த்தி இல்லை. அந்தப் பையன் கடைக்குப் போய் மெழுகுவர்த்தி வாங்கிவந்தான். அந்த அம்மா மேலும் பேசினார். ‘1986ல அகமதாபாத்துக்கு வந்தேன். அப்ப இந்த ஊர்ல ஒண்ணுமே கிடையாது. இன்னைக்கு எப்படி முன்னேறியிருக்குன்னு எனக்குத்தான் தெரியும். பவர்கட்டுன்றதே கிடையாது. குடிதண்ணீருக்கும் பிரச்சினையே இல்லை. வீட்டுக்கு சமையல் கேஸ் பைப்ல வருது. வேறென்னங்க வேணும்?’ என்றார். ‘ஒரு யூனிட்டுக்கு கரண்ட் விலை ரொம்ப கூடன்றாங்களே’ என்று கேட்டோம். ‘5.50ங்க. இது கூடவோ கம்மியோ, கரண்ட் போறதே இல்லை. அதான் முக்கியம். கோவில்பட்டிக்கு லீவுக்கு வந்தா பாதி நேரம் கரண்ட்டே இருக்கிறதில்லை. அதுக்கு இது எவ்வளவோ மேல்’ என்றார். ‘மோதி சாப் பிரதமருக்கு போட்டியிட்டால் நிச்சயம் அவரை ஆதரிப்பேன்’ என்றார். பெண்கள் பாதுகாப்பு எப்படி என்று கேட்டேன். ‘நைட் 12 மணிக்குக் கூட நிம்மதியா வரலாம். இரவு தினமும் 10:30க்கு நான், பக்கத்து வீட்டு மற்றும் எதிர்வீட்டுப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து வாக்கிங் போய்விட்டு, 12 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவோம், ஒரு பிரச்சினையுமில்லை’ என்றார்.


அந்த அம்மாவின் பக்கத்து வீட்டு மனிதர் ஒருவரிடம் பேசினேன். அவர் ஒரு பிஸினஸ்மேன். குஜராத்தி. 2002 கலவரங்கள் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘அப்ப நான் இங்கதான் இருந்தேன். மோதி போலிஸை ஆதரிச்சாரா, முஸ்லிம்களைக் கொல்லச் சொன்னாரான்னெல்லாம் தெரியாது. ஆனா அந்த அடிக்குப் பின்னாடிதான் இங்கே கலரவமே இல்லாமல் இருக்கு. முன்னாடில்லாம் அப்படி இல்லை. எங்க எப்ப கலவரம் வரும்னே தெரியாது. இப்ப 12 வருஷமா அந்தப் பிரச்சினையே இல்லை. எத்தனை நாள்தான் ஹிந்துக்கள் அடி வாங்கிக்கிட்டே இருப்பாங்க சொல்லுங்க. அவங்க (முஸ்லிம்கள்) எந்த அளவுக்கு இங்க ஆடினாங்கன்னு பார்த்தவங்களுக்குத்தான் இது புரியும். இப்ப கலவரங்கள் இல்லாததால பிஸினஸ் நல்லா போகுது’ என்றார். ‘இங்கே லஞ்சமே இல்லை என்கிறார்களே, உண்மையா’ என்று கேட்டேன். ‘லஞ்சம் சுத்தமா இல்லைன்னு சொல்லமுடியாது. நிச்சயம் இருக்கும். ஆனா லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும்ன்ற அளவுக்கு இல்லை. பிஸினஸ் செய்ய எதாவது வேணும்னு மனுக் கொடுத்தா, அந்த வேலை தானா நடக்கும். அதுக்கு லஞ்சம் கொடுத்தே ஆகணும்ன்றதெல்லாம் கிடையாது’ என்றார். இந்த மனிதர் சே குவேரா படம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் அணிந்திருந்தார்.

குஜராத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் தமிழர் ஒருவரைச் சந்தித்தோம். மோதியைப் பற்றி நல்லதும் அல்லதுமாகப் பலவற்றை இவர் பகிர்ந்துகொண்டார். ‘மின்சாரம் தடைப்படறதே இல்லைங்க. ஆனா ஒரு யூனிட்டுக்குப் பணம் ஜாஸ்தி. இருந்தாலும் எல்லாருக்கும் மின்சாரம் கிடைக்குது. இதுக்குக் காரணம், மோதிங்கிறதைவிட, அந்த பவர் ப்ராஜெக்ட்டுகளை சிறப்பா முடிக்கும் ஐ.ஏ.எஸ்-னுதான் நான் சொல்லுவேன். தண்ணி இன்னைக்கு எல்லா ஊருக்கும் போகுது. அதுக்கும் காரணம் இன்னொரு ஐ.ஏ.எஸ்தான். இப்படி சிறப்பான ஐ.ஏ.எஸ்களால்தான் குஜராத் முன்னேறியிருக்கு. பல முக்கியமான பொறுப்புகள்ல தமிழர்கள் இருக்காங்க. இவங்களாலதான் மோதிக்குப் பேர்’ என்றார். 2002 கலவரம் பற்றிப் பேசினார். ‘அந்த அடி ஒரு வகைல தேவைங்க. நீங்க நினைக்கிற மாதிரி தமிழ்நாட்டு முஸ்லிம் போல இல்லை இங்க இருக்கிறவங்க. பாக்கிஸ்தான்ல சம்பந்தம் பேச குறியா நிப்பாங்க. எப்ப எங்க கலவரம் வரும்னே தெரியாது. ஆனா இன்னைக்கு இப்படி இல்லை. 12 வருஷமா கலவரமே இல்லை. அதுக்காக மோதியைப் பாராட்டணும்’ என்றார். மின்சாரம் உபரியாக உள்ளது, ஆனால் விவசாயிகளுக்கு 6 மணிநேரம்தான் மின்சாரம், அதுவும் இலவசம் கிடையாது என்பது சரியா என்று கேட்டதற்கு, ‘அது சரிதானே. காலேலதான விவசாயிங்க வேலை பார்க்க போறாங்க? 6 மணி நேரம் மின்சாரம் போதாதா என்ன? இலவசமா கொடுத்தா என்ன நடக்கும்னு நம்ம ஊர்லயே பாத்திருப்பீங்க. அதைத் தடுக்க, இங்கே விவசாயக்குத்துன்னு தனியா லைன் போட்டு கொடுக்கிறாங்க. அது நல்ல விஷயம்தான்’ என்றார். ‘பெண்கள் கல்விக்காக மோதி நிறைய செய்கிறார் என்று கேள்விப்படுகிறோமே’ என்றோம். ‘ஜூன் மாதம் முழுக்க பெண் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதிலேயே ஓய்ந்து போய்விடுகிறோம். அந்த ஒரு மாதமும் பள்ளிகள் வேறு வேலைகளே நடப்பதில்லை’ என்றார்.

கடந்த ஜனவரியில் பணி ஓய்வு பெற்றுவிட்ட ஜகதீசன் ஐ.ஏ.எஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். குஜராத்தின் பொதுவான வளர்ச்சி எப்போதும் உள்ளதுதான் என்று சொன்ன அவர், மோதியைப் பற்றி விமர்சனபூர்வமாகப் பேசினார். இவரது திறமையான நிர்வாகத்தால்தான் நர்மதாவின் தண்ணீர் இன்று பல ஊர்களுக்கும் பாய்ந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மோதியின் பாஸிடிவ் விஷயங்களாக இவர் குறிப்பிட்டது: ‘அதிகாரிகளின் பணிகளில் எக்காரணம் கொண்டும் தலையிடமாட்டார். யாரும் அவரைப் பார்த்து இந்த ஐ.ஏ.எஸ்ஸை மாற்றுங்கள் என்று சொல்லி அதைச் சாதித்துவிடமுடியாது. ஒரு ஐ.ஏ.எஸ்ஸை பத்து நாள்களுக்கு பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை மாற்றுபவர்களுக்கு மத்தியில், இவர் நான்கைந்து வருடங்கள் வரை ஐ.ஏ.எஸ்ஸை மாற்றமாட்டார். குஜராத்தின் இன்னொரு நல்ல விஷயம் சாலைகள். தமிழ்நாட்டைவிடச் சிறப்பான சாலைகள் என்று சொல்லமாட்டேன், ஆனால் தமிழ்நாட்டோடு ஒப்பிடத் தகுந்த அளவு சாலைகள் இங்கே போடப்பட்டுள்ளன.’

ஹோட்டலில் வேலை பார்க்கும் பையன் ஒருவனிடம் பேசினேன். அவனுக்கு வயது 20 இருக்கலாம். அவனது சம்பளம் 3500 ரூ! ‘இதை வைத்துக்கொண்டு எப்படிச் சமாளிக்கிறாய்?’ என்று கேட்டேன். ‘கஷ்டம்தான்’ என்றான். ‘மோதி பற்றி எல்லாரும் புகழ்கிறார்களே, நீ என்ன நினைக்கிறாய்’ என்றேன். ‘மோதி மிகச் சிறந்த தலைவர். மின்சாரம் வருகிறது. தண்ணீர் கிடைக்கிறது. எல்லா இடங்களுக்கும் பஸ்ஸில் போக முடிகிறது’ என்றான். ‘ஆனா உன் சம்பளம் இவ்வளவு கம்மியாக இருக்கிறதே’ என்றேன். ‘நான் ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதப் போகிறேன். எழுதி பாஸ் செய்துவிட்டால் நல்ல வேலை கிடைத்துவிடும். நான் படிக்காதது என் தவறு’ என்றான்.

மணிநகரில் இருக்கும் தமிழர் ஒருவரைச் சந்தித்தோம். அவர் அங்கே வந்து செட்டில் ஆகி 20 வருடங்கள் ஆகின்றன. அவர் சொன்னது: ‘இங்கே இருக்கிற பெரும்பாலான தமிழர்கள் மோதியைத்தான் ஆதரிக்கிறாங்க. அடிக்கடி தமிழர்கள் கூடும் இடத்துக்கெல்லாம் நான் போவது வழக்கம். அவங்க எல்லாருக்குமே மோதி மேல் பெரிய நம்பிக்கை இருக்கு. முக்கியமா 12 வருடங்கள் கலவரமே இல்லை. இதனால பிஸினஸ் செய்யமுடியுது’ என்றார். ‘மோதி மணிநகர்ல நிக்கிறதே தமிழர்கள் அவரை சப்போர்ட் பண்ணுவாங்கன்ற நம்பிக்கைலதானே’ என்று என்னையே மடக்கினார்.

ஒரு காம்ப்ளக்ஸில் கடை வைத்திருக்கும் இஸ்லாமியர் ஒருவரைச் சந்தித்தோம். இவர் ஜமா இ இஸ்லாமி ஹிந்தோடு தொடர்பில் இருப்பவர். மோதியைப் பற்றிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பெரும்பாலும் அவரது குற்றச்சாட்டுகள் 2002ஐ முன்வைத்தே இருந்தன. ‘2002ல் மோதி சாப் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள் என்பது உண்மை. யார் சொல்லி நடந்தது என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நடந்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய நிவாரணத் தொகை சரியாக வழங்கப்படவில்லை. பல அமைப்புகள் கேட்டுக்கொண்ட பின்னர் இப்போதுதான் அதை வழங்கினார்கள். அவர் கொஞ்சம் சாதனைகளைச் செய்தால், பெரிய பெரிய சாதனைகளைச் செய்ததாகச் சொல்லி பெரிதுபடுத்துகிறார்கள். மோதியின் மார்க்கெட்டிங்தான் இதற்குக் காரணம்’ என்றார். ‘முஸ்லிம்கள் கணிசமாக உள்ள பகுதிகளிலும் மோதியின் கட்சிக்கு வாக்கு கிடைக்கிறதே’ என்று சொன்னேன். ‘அவர்களும் இந்த மார்க்கெடிங்கை நம்புகிறார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார். ‘மோதி ஒரு ஜனநாயகவாதி அல்ல. அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் சொன்னால் உடனே அந்த வேலைகள் நடந்தே ஆகவேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். குஜராத் அரசு அலுவலர்கள் பலரும் அச்சத்தில்தான் வேலை செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவரது கட்சியின் தலைவர்களையே அவர் ஓரம்கட்டிவிட்டார். கட்சியே இன்று மோதி என்றாகிவிட்டது. அத்வானிக்கு என்ன நேர்ந்தது என்று பார்த்தீர்களல்லவா’ என்றார். ‘அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் என்கிறார்களே’ என்று கேட்டேன். ‘மின்சார விநியோகம் தனியாரால் நடத்தப்படுகிறது. எல்லாவற்றையும் தனியார் கையில் மோதி கொடுத்துவிடுகிறார். ரிலையன்ஸ் க்ரூப்புக்காகத்தான் மோதியின் அரசாங்கமே வேலை செய்கிறது என்று நினைக்கும் அளவுக்கு இங்கே விஷயங்கள் நடக்கின்றன’ என்றார். மோதியின் பாஸிடிவ் என்று எதைப் பார்ப்பீர்கள் என்று கேட்டேன். ‘12 வருடங்களாகக் கலவரமே இல்லை. இது ஒரு பெரிய விஷயம். இதற்காக மோதியைப் பாராட்டவேண்டும். இதனால் வியாபாரம் சீராக உள்ளது. இன்னொரு விஷயம், குஜராத்தைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்திருக்கிறார். அவரது மார்க்கெடிங்க்தான் இதற்குக் காரணம் என்றாலும், இதையும் பாராட்டவேண்டும்’ என்றார்.

அதே அமைப்பைச் சேர்ந்த இன்னொரு இஸ்லாமியரிடம் பேசினேன். ‘மோதியின் புகழ் என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்டது. அதில் உண்மை மிகக் கொஞ்சமும், பொய் மிக அதிகமும் உள்ளது’ என்றார். ‘முஸ்லிம்களின் ஆதரவும் அவருக்கு உள்ளது என்று செய்திகள் வருகின்றனவே’ என்று கேட்டேன். ‘நான் அதில் எந்த முக்கியத்துவத்தையும் பார்க்கவில்லை’ என்று சொன்னார். ‘மோதியின் அரசாங்கம் சாமானியர்களுக்கு எதையும் செய்வதில்லை. கடந்த 10 வருடங்களில் ஒரு பொது மருத்துவமனைகூடப் புதிதாகக் கட்டவில்லை. தொழிலதிபர்களுக்கான ஆட்சிதான் இங்கே நடந்துவருகிறது’ என்றார். 2002 கலவரங்களைப் பற்றிக் கேட்டபோது, ‘அந்தக் கலவரத்தில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கேம்ப்பில் தஞ்சம் புகுந்தார்கள். இன்னும் சில கேம்ப்களில் சில முஸ்லிம்களைப் பார்க்கமுடியும்’ என்றார். நான் அந்த கேம்மைப் பார்த்து அங்கே இருக்கும் முஸ்லிம்களுடன் பேச ஆசைப்பட்டேன். விசாரித்தபோது, தற்போது அந்த கேம்ப்புகள் இல்லை என்றும், கலவரத்தின்போது மட்டுமே முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும், அந்த முஸ்லிம்களெல்லாம் இன்று அவரவர் இடங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

அரசு அதிகாரி ஒருவரிடம் பேசினேன். ‘மோதியின் சாதனைகளாகச் சொல்வது நான்கு விஷயங்களை. ஒன்று மின்சாரம். இன்னொன்று குடிதண்ணீர். இன்னொன்று சாலைகள். நான்காவதாக விவசாயம். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். மின்சாரம், இப்போதில்லை, முன்பே குஜராத்தில் சிறப்பாகவே இருந்திருக்கிறது. சூரிய மின்சாரத்தின் மூலம், குறைவான பற்றாக்குறையைத் தாண்டியிருக்கிறார்கள். இதைப் பாராட்டவேண்டியதுதான் என்றாலும், இதையே சாதனையாகச் சொல்வதில் அர்த்தமில்லை. உண்மையில் உபரிமின்சாரம் இருக்கிறதென்றால், ஏன் விவசாயிகளுக்கு இலவசமாகத் தருவதில்லை? இலவசமாக மின்சாரம் தராமல், உபரி என்று காட்டிக்கொள்கிறார்கள். இன்னொரு விஷயம், குடிதண்ணீர். இதில் ஓரளவு உண்மை உள்ளது. நர்மதாவில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டருக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தைப் பாராட்டலாம். ஆனால் இதற்கான பாராட்டை மோதிக்கு மட்டுமே கொடுக்கமுடியாது. கடந்த 30 ஆண்டுகளாகவே இந்த வேலைகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுக்கொண்டு இருந்தன. வேகம் பெற்றது கடந்த 10 ஆண்டுகளில் என்று வேண்டுமானால் சொல்லலாம். சாலைகளெல்லாம் எப்போதுமே குஜராத்தில் நன்றாகத்தான் இருந்திருக்கின்றன. விவசாயத்தில் குஜராத் எப்போதுமே முதன்மையாகத்தான் இருந்துள்ளது. பருத்தியில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்ததாலும், கடந்த 10 வருடங்களாக மழை பொய்க்காததாலும் விவசாயத்தில் குறையே இல்லாமல் போய்விட்டது. ஆனால் இதையெல்லாம் மோதியின் தனிப்பட்ட சாதனைகளாகச் சொல்வதை ஏற்க முடியாது’ என்றார்.

பரத் பாய் என்னும் டிரைவரின் கருத்து இது: ‘மோதியின் சாதனைகள், இந்தியாவில் யாரும் செய்யாதது. குஜராத்தின் சாலைகளும் மின்சாரமும் எத்தனை மோசமாக இருந்தது என எனக்குத் தெரியும். நான் டிரைவர் என்பதால் குஜராத்தின் பல பகுதிகளுக்கும் போயிருக்கிறேன். இன்றைய குஜராத்தின் வளர்ச்சி அபரிதமானது. மின்சாரத் தட்டுப்பாடே கிடையாது. அகமதாபாத் நாளுக்கு நாள் வளர்கிறது. BTRS என்னும் விரைவுப் பேருந்து சேவையால் அகமதாபாத்தே மாறிவிட்டது. பெரிய வெற்றி இந்தப் போக்குவரத்துச் சேவை. இதனால் இதை சூரத்திலும் செயல்படுத்தப் போகிறார்கள். குஜராத்தின் சாலைகள் நாளுக்கு நாள் சிறப்பாகிக்கொண்டே இருக்கின்றன’ என்றார்.

வடோதராவில் (பரோடா) சில இல்லத்தரசிகளைச் சந்தித்துப் பேசினோம். வெளிநாட்டிலும் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வசித்திருக்கும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இப்போது வடோதரா வாசி. ‘மும்பையில் கரண்ட் கட் அதிகம் இருக்கும். தமிழ்நாட்டைப் போல் மிக அதிகமாக பவர்கட் என்று சொல்லமுடியாவிட்டாலும் மும்பையில் கொஞ்சம் இருக்கும். வழங்கப்படும் மின்சாரமும் சீராக இருக்காது. எலக்ட்ரிக் பொருள்கள் விரைவில் கெட்டுப்போகும். ஆனால் குஜராத்தில் பவர்கட்டே இல்லை. மின்சாரம் ஒரே சீராகவும் இருக்கிறது. எனவே நான் வாங்கியிருந்த யூபிஎஸ், இன்வெர்ட்டர் எல்லாவற்றையும் பரணில் போட்டுவிட்டேன்’ என்று சொன்னார். பெண்கள் பாதுகாப்புப் பற்றிக் கேட்டேன். ’நைட் எத்தனை லேட்டானாலும் ஒரு பிரச்சினை இங்கே இல்லை. குடிகாரர்கள் யாரையும் தெருவில் பார்க்க முடியாது’ என்றார்.

அதே அபார்ட்மெண்ட்டில் இருந்த பிரகாஷ் காம்லியா என்ற ஒரு வயதான மனிதரைச் சந்தித்தோம். ‘பரோடா மோதியின் ஆட்சியின்கீழ் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. முதலிலிருந்தே பரோடா வளர்ச்சி பெற்ற இடம்தான் என்றாலும், கடந்த பத்தாண்டுகளில் அதன் வளர்ச்சிவேகம் பிரமிக்கத்தக்கது. நல்ல கல்வி கிடைக்கிறது. கலவரங்கள் எதுவுமே 10 ஆண்டுகளாக இல்லை. நல்ல அரசு மருத்துவமனைகள் உள்ளன’ என்றார். மோதி பிரதம வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுவிட்டாரே, அதற்கு உங்கள் ஆதரவு உண்டா என்று கேட்டேன். ‘நிச்சயம் ஆதரிப்பேன்’ என்றார். மோதியின் நெகடிவ் என்று எதைச் சொல்வீர்கள் என்று கேட்டேன். ‘தொழிலதிபர்களுக்கு மோதி அதிகம் செய்கிறார் என்று குற்றம் சொல்கிறார்கள். எனக்கு அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதே அளவுக்கு மக்களுக்கும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதேபோல், உத்திரபிரதேசக் காரர்களுக்கும், பிஹாரிகளுக்கும் மோதி அதிகமாகச் செய்கிறார். குஜராத்திகளுக்கு அதிகம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

ஃபல்குனி ஸ்வாடியா என்னும் இன்னொரு இல்லத்தரசியைச் சந்தித்தோம். அவர் சௌராஷ்ட்ரா பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அகமதாபாத்தில் இருந்துவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக வடோதராவில் இருக்கிறார். அவர் சொன்னது: ‘அகமதாபாத் போல வளர்ச்சி அடைந்த இடம் இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லுவேன். அதன் காரணம் மோதிதான். குறிப்பாக அந்த விரைவுப் பேருந்துப் போக்குவரத்து, அகமதாபாத்தையே மாற்றிவிட்டது. எங்கே இருந்து எங்கேயும் பஸ்ஸில் போகலாம். நான் பிறந்தது சௌராஷ்டிராவில். அங்கே பல தொழிற்சாலைகள் வந்துள்ளன. இதனால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கிறது. அது நல்ல விஷயம்’ என்றார். ‘இப்படி தொழிற்சாலைகள் அதிகம் வந்தால், நிலத்தடி நீரையெல்லாம் அவர்கள் உறிஞ்சிவிடுவார்களே’ என்று கேட்டதற்கு, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் வேலை கிடைக்கிறது. மின்சாரம் கிடைக்கிறது. குடிக்க நீர் கிடைக்கிறது. நல்ல சாலைகள் உள்ளன. என் குழந்தைகளுக்கு நல்ல பள்ளி கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன. வேறேன்ன எனக்கு வேண்டும்’ என்று சொல்லிவிட்டார்.

வடோதராவில் 30 வருடங்களாகப் பணிபுரியும் வங்கி அதிகாரி ஒருவரைச் சந்தித்தோம். அவர் சொன்னது: ‘மோதி ஆட்சில 10 வருஷத்துல பெரிய அளவுல மாற்றங்கள் நடந்திருக்குன்றது உண்மை சார். மின்சாரம் தடைபடறதே இல்லை. தினமும் வீட்டுக்கு குடி தண்ணீர் வருகிறது. எல்லா இடத்துக்கும் பஸ் கிடைக்குது. நைட்ல எவ்ளோ நேரமானாலும் என் பொண்ணு பாதுகாப்பா வீட்டுக்கு வரமுடியுது. நேத்துகூட நைட் 12 மணிக்கு ஆட்டோலதான் என் பொண்ணு வந்தா. 10 வருஷமா எந்தக் கலவரங்களும் இல்லை. இதைவிட வேறென்ன சார் வேணும், எனக்கு என் மாநிலத்தில் வசிப்பதை இழக்கிறமோ என்ற எண்ணமே வருவதில்லை’ என்றார். 2002 கலவரங்கள் பற்றிக் கேட்டோம். ‘அப்ப யார் சொல்லி என்ன நடந்ததுன்னு தெரியாது. ஆனா முஸ்லிம்கள் பயத்தோட இருந்தாங்கன்றது உண்மைதான். இன்னொன்னையும் சொல்லணும், அந்தக் கலவரத்துக்குப் பின்னாடிதான் குஜராத்ல ஒரு கலவரமும் இல்லை’ என்றார். மோதி பிரதமராக வந்தால் ஆதரிப்பீர்களா என்று கேட்டேன். ‘ஆதரிப்பேன். ஆனா குஜராத்தை வென்றது போன்ற எளிமையான விஷயமாக அது மோதிக்கு இருக்காது. மேலும் ஒரு பிரதமராக மோதி சாதித்து வெல்வார் என்று நான் நம்பவில்லை’ என்றார்.

அவருடன் பணிபுரியும் இன்னொரு வங்கி அதிகாரி சொன்னது: ‘இங்கே கல்வி தரமாகவும் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது குறைந்த செலவிலும் கிடைக்கிறது. என் பெண்ணுக்கு இங்கேயே இன்ஜினியரிங் சீட் கிடைத்தால், குஜராத்திலேயே செட்டில் ஆகிவிடுவேன்’ என்றார். இவர் தமிழ்நாட்டுக்காரர்.

வடோதராவில் முகம்மது என்னும் டிரைவர் ஒருவரைச் சந்தித்தோம். மோதியின்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். ‘2002 கலவரங்களில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளார்களோ அங்கெல்லாம் வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசு நினைத்திருந்தால் மிக எளிதாகக் கலவரங்களைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் மூன்று நாள்களுக்கு அரசு இயந்திரம் செயல்படவே இல்லை’ என்றார். குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கேட்டேன். ‘வளர்ச்சி என்பதெல்லாம் ஊடகங்கள் சொல்வது. குஜராத் எப்போதுமே வளர்ச்சி பெற்ற மாநிலமாகத்தான் இருந்திருக்கிறது. இதில் மோதியின் சாதனைகள் எதுவுமே இல்லை’ என்றார். ‘நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். கலவரத்திலும் பங்குபெற்று, வளர்ச்சியும் இல்லை என்றால், ஏன் மோதியை மக்கள் தொடர்ந்து 3 முறை வெல்ல வைத்தார்கள்’ என்று கேட்டேன். ‘இங்கே வலுவான எதிர்க்கட்சி என்று, வலுவான தலைவர் என்றோ யாரும் இல்லை. அதுதான் காரணம்’ என்றார். ‘அது மட்டுமே ஒருவரை 3 முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருக்கமுடியுமா’ என்று கேட்டேன். ‘அவரது மார்க்கெட்டிங் முக்கியமான காரணம்’ என்றார். ‘மூன்றில் ஒரு பங்கு ஹிந்துக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்களே’ என்று கேட்டேன். ‘சில பகுதிகளில் அப்படி நிகழ்ந்ததும் உண்மைதான்’ என்றார். ‘சரி, முஸ்லிம்கள் கணிசமாக உள்ள பகுதிகளிலும் மோதியின் வேட்பாளர்கள் வெல்கிறார்களே’ என்று கேட்டேன். ‘ஒரு லட்சம் பேர் உள்ள ஒரு தொகுதியில் 60,000 வாக்குகள் விழுகின்றன. 40,000 பேர் வாக்குப் போடுவதில்லை. யார் அவர்கள்?’ என்று என்னைக் கேட்டார். ‘முஸ்லிம்களா’ என்றேன். ‘நீங்கள்தான் யோசிக்கவேண்டும்’ என்றார். ‘கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைச் சந்திக்கமுடியுமா’ என்று கேட்டேன். ‘தனியாக யாரையும் என்னால் சொல்ல இயலாது. ஆனால் அவர்கள் வாழும் பகுதிக்குச் சென்றால், பல கதைகளை அவர்களே சொல்வார்கள்’ என்றார். ‘கடந்த 12 வருடங்களாக கலவரங்களே இல்லையே, அது பெரிய சாதனை இல்லையா’ என்றேன். அதற்கு அவர், ‘பாஜக ஆட்சியில் இருந்தால் கலவரம் வருவதில்லை. அவர்கள் ஆட்சியில் இல்லை என்றால் உடனே கலவரம் வருகிறது. ஆட்சியில் இருக்கும்போது எப்படி அவர்களே கலவரம் செய்துகொள்வார்கள்’ என்றார்.

அகமதாபாத்தில் வாழும் கல்லூரி விரிவுரையாளரிடம் பேசினேன். ‘நான் ஆறு வருடங்களாக இங்கே இருக்கிறேன். ஆறு வருடத்தில் சாலைகள் பல புதிதாகப் போடப்பட்டுள்ளன. விரைவுப் பேருந்து சேவை ஒரு வரப்பிரசாதம். எத்தனை பெரிய மழை பெய்தாலும், ஒரு மணி நேரத்தில் நீர் வடிந்துவிடும். இது ஆச்சரியமான விஷயம். கல்லூரிகளின் வளர்ச்சிக்கும் அரசு பெரிய அளவில் உதவுகிறது’ என்றார்.

அகமதாபாத்திலிருந்து 130 கிமீ தொலைவில் இருக்கும் புன்சரி என்ற கிராமத்துக்குச் சென்றோம். இது ஒரு ரோல் மாடல் கிராமம். அங்கே இருக்கும் ரேஷன் கடைகளுக்குச் சென்று பார்த்தேன். மிகத் தரமான பச்சரிசி 2 ரூபாய்க்குக் கிடைக்கிறது. கோதுமையும் 2 ரூபாய்தான். டிஜிட்டல் தராசில் நிறுத்துத் தருகிறார்கள். எதுவுமே இலவசமில்லை.

அங்கே இருக்கும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று பார்த்தேன். தமிழ்நாட்டைப் போலவே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு (ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெனு) இலவசமாகத் தரப்படுகிறது. இந்த உணவை உண்டு பார்த்தேன். நன்றாகவே இருந்தது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் தரப்படுகின்றன. சீருடையும் இலவசம். மாணவர்களுக்கு மட்டுமே இலவசங்கள் தரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாகப் பல்வேறு கருத்துகளுடன் குஜராத்தை வலம் வந்தேன். இனி என் கருத்துகள் சில:

* குஜராத்தில் நாங்கள் சந்தித்த பலரும் சொன்ன விஷயம்: அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு பிரச்சினையில்லாமல் கிடைக்கின்றன.

* எப்போதுவேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும் பூமியான குஜராத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக கலவரங்களே இல்லை. இதைச் சொல்லாதவர்கள் இல்லை.

* கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு நேர்ந்தது தேவைதான் என்று பலரும் நினைக்கிறார்கள். (நான் இதை ஏற்கவில்லை. எந்தக் கலவரம் என்றாலும் நீதி சார்ந்த தீர்ப்பு மட்டுமே சரியானது என்பதே என் கருத்து. நான் சந்தித்தவர்கள் சொன்ன கருத்தாக மட்டுமே இதைப் பதிகிறேன்.)

* குஜராத்திகளின் ரத்ததிலேயே வியாபாரம் ஊறியிருக்கிறது போல. ஒவ்வொருவரும் தங்கள் வியாபாரம் பெரிய அளவில் நடக்க கலவரமற்ற அமைதியே முக்கியக் காரணம் என்று நினைக்கிறார்கள். இதனாலேயே மோதியை ஆதரிக்கிறார்கள்.

* மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமலிருப்பது குறித்த ஒரு பெரிய பெருமையை நான் சந்தித்தவர்களிடன் காண முடிந்தது. மோதியின் சரியான திட்டமிடலே இதற்குக் காரணம்.

* ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே காரணம் என்று ஓர் அதிகாரி காரணம் சொன்னதாக எழுதியிருந்தேன். அதுதான் உண்மை என்றாலும், நியாயமாக அந்தப் பெருமையும் மோதிக்கே சேரவேண்டும். நிர்வாகக் குறைபாட்டுக்கு மோதி காரணமென்றால், அதன் சிறப்புக்கும் மோதியே காரணமாகவேண்டும்.

* அரசு அதிகாரிகள் அஞ்சி வேலை பார்க்கிறார்கள் என்று ஒருவர் சொன்னார். இதை அவர் குறையாகச் சொன்னார். நான் இதை நிறையாகப் பார்க்கிறேன். இந்த அச்சம் இல்லாவிட்டால் அரசு அலுவலகங்கள் எப்படி நடக்கும் என்பது நமக்குத் தெரியும்.

* மோதி ஒரு சர்வாதிகாரி என்றார். ஒரு தலைவருக்குள் சிறிதளவாவது சர்வாதிகாரத்தன்மை வேண்டுமென்றே நான் நினைக்கிறேன். கருத்துகளுக்கு மதிப்பளித்துக் கேட்டுவிட்டு, தன் அறிவால் எதைச் செய்ய நினைக்கிறாரோ அதைச் செய்ய நினைத்து, அதைச் செய்து ஓயும்வரைப் போராடுவது சர்வாதிகாரத்தன்மை என்றால், அதை நான் வரவேற்கிறேன். மோதி ஜனநாயக ரீதியில்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே அவர் ஒரு மக்கள் தலைவர். சர்வாதிகாரத் தன்மைக்கும் சர்வாதிகாரத் தலைவருக்கும் இடையேயான வேறுபாடுகளே முக்கியம்.

* மோதியின் மார்க்கெட்டிங் பற்றி பலரும் குறை சொன்னார்கள். வெற்று மார்க்கெட்டிங் என்றுமே நிலைபெறாது. காரியத்தைச் செய்யாமல் மார்க்கெடிங் மூலமே சாதித்துவிடமுடியும் என்றால், இன்று இந்தியாவில் எல்லா மாநில முதல்வர்களும் இதைச் சுளுவாகச் செய்திருப்பார்கள். மோதியின் மார்க்கெட்டிங்கின் அடிப்படை, அவரது நிஜமான சாதனைகளில் உள்ளது. இல்லையென்றால் அது நிச்சயம் எடுபட்டிருக்காது.

* அகமதாபாத்தில் உள்ள விரைவுப் பேருந்து சேவை பல்வேறு தரப்பினரிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இத்திட்டம் சாத்தியமுள்ள குஜராத்தின் பல்வேறு இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படப் போகிறது.

* நர்மதாவின் தண்ணீரை குஜராத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வாய்க்கால்களைப் பார்க்கும்போது, நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தேன். இதுவே இந்தியாவின் தேவை. ஒவ்வொரு மாநிலமும் என்ன சாதிக்கமுடியும் என்பதை குஜராத் உணர்த்துகிறது. நாங்கள் குஜராத்தில் இருந்தபோது இரண்டு நாள்களாக பெரும் மழை பெய்தது. நர்மதாவில் விழுந்த மழைநீர் அந்த வாய்க்கால்கள் வழியோடி மக்களின் விவசாயத்துக்குப் பயன்பட்டிருக்கும்.

* அகமதாபாத்தில் கொசுத்தொல்லையே இல்லை. 60 வருடங்களாகவே பாதாளச் சாக்கடைகள் இருப்பதால் கொசுத்தொல்லை குறைவு என்று ஒருவர் சொன்னார்.

* அகமதாபாத்தில் மின்சாரக் கம்பிகளின் வயர்கள் வெளியே தொங்குவதில்லை. நிலத்தின் கீழே அவை பதியப்பட்டுள்ளன.

* தொழில்மயமாக்கப்படுவது பற்றிச் சிலர் குறை கூறினார்கள். ஆனால் நான் இதை வரவேற்கிறேன். இட்லி கடையைக்கூட அரசு நடத்தவேண்டும் என்ற அவலநிலை மாறினால்தான் இந்தியா முன்னேற முடியும். ஒரு தொழிற்சாலையில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால்தான் தெரியும், அது எத்தனை பேருக்கு சோறு போடுகிறது என்று. அதைவிட முக்கியம், மறைமுகமாக எத்தனை பேர் அத்தொழிற்சாலையால் பிழைக்கிறார்கள் என்பது. இதையும் ஒருசேர யோசித்துப் பார்த்தால்தான் ஒரு தொழிற்சாலையின் பிரம்மாண்டம் விளங்கும். அந்த வகையில் மோதி மிகச் சரியாகவே திட்டமிட்டுச் செயல்படுகிறார்.

* மின்சார விநியோகம் தனியார்த் துறையின்கீழ் செயல்படக் காரணம், தனியார்த் துறை அதிகம் லாபம் சம்பாதிக்கத்தான் என்ற குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இத்தனைக்குப் பிறகும் மின்சாரம் மானியத்தில்தான் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டோடு ஒப்பிடத்தக்க வகையில்தான் மின்சாரத்தின் விலையும் உள்ளது. ஆனால் தரமோ மிக நன்றாக உள்ளது. கூடவே மின் தட்டுப்பாடும் கிடையாது. எனவே இதில் தனியார்த்துறையைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. மேலும் தனியார்த்துறை லாபம் சம்பாதிக்கக்கூடாது என்பதும், தனியார் நடத்தும் தொழில்களையெல்லாம் அரசே நடத்தி அந்த லாபத்தை அரசே பெறவேண்டும் என்பதும் எனக்கு ஏற்பில்லாதது. அரசின் வேலை நிர்வாகத்தை சீர் செய்வது. அதில் குறை இருந்தால் மட்டுமே நாம் கேட்கவேண்டும்.

* உபரி மின்சாரம் இருந்தால் ஏன் விவசாயிகளுக்கு இலவசமாகத் தரக்கூடாது என்று கேட்கிறார்கள். உண்மையில் இது அரசின் கொள்கை முடிவு. இலவசம் தேவையில்லை என்று ஓர் அரசு முடிவு செய்யுமானால், அதையும் மக்கள் ஏற்றுக்கொண்டு அந்த அரசுக்கே மூன்று முறை வாய்ப்பும் தருவார்களானால், வேறென்ன வேண்டும்! விவசாயிகளுக்கென்றில்லை, பொதுமக்கள் யாருக்கும் எதற்கும் இலவசமே தரக்கூடாது என்பதுதான் சரியான நிர்வாகம்.

* பெண்கள் பாதுகாப்பு முக்கிய நகரங்களில் மிக நன்றாகவே உள்ளது என்று பலரும் கூறினார்கள். அவர்கள் அனைவரும், டெல்லியைப் போன்ற பாதுகாப்பின்மை இங்கே இல்லை என்று சொன்னது முக்கியமானது.

* மாணவர்களுக்குத் தரப்படும் இலவசங்கள் தவிர, வேறு எந்த இலவசமும் மக்களுக்குத் தரப்படுவதில்லை. மாணவர்களுக்குத் தரப்படும் இலவசங்கள் நியாயமானதே.

* கலவரங்களைப் பற்றி. உண்மையில் கலவரங்களைப் பற்றி ஊடகங்களே பொங்குகின்றன. மக்கள் அதையும் ஒரு நிகழ்வாகவே கடந்திருக்கிறார்கள் என்றுதான் அங்கே பார்த்தேன். மோதிக்கு எதிராக வேறு எந்த ஊழல் புகாரும் சிக்காத நிலையில், ஏற்கெனவே ஊடகங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடதுசாரிகளுக்கும் போலி முற்போக்காளர்களுக்கும் வயிற்றெரிச்சல் இருந்த நிலையில், மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது எரியும் கொள்ளியில் நெய் ஊற்றிய செயலாக இருந்தது. இவர்கள் கையிலிருக்கும் ஒரே ஆயுதம் 2002 கலவரங்கள். இவர்கள் இந்தக் கலவரங்களை மையமாக வைத்து முஸ்லிம்களின் மனசாட்சியைத் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். அதே மனசாட்சியுடனேயே முஸ்லிமகள் தொடர்ந்து மோதியை மூன்றுமுறை வெல்ல வைத்திருக்கிறார்கள் என்பதை இவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. இவர்களே அதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அவை என்ன?

குஜராத் கடந்த பத்தாண்டுகளில் மிக வேகமாக முன்னேறியுள்ளது என்று சொன்னால், உடனே அதை ‘குஜராத்தில் பாலும் தேனுமாக ஓடுகிறது’ என்று சொன்னதாகத் திரிக்கிறார்கள். இவர்களே இதைச் சொல்லிக்கொண்டு, குஜராத்தில் உள்ள பிரச்சினைகளைச் சொல்லி, இதுதான் பாலும் தேனும் ஓடும் லட்சணமா என்று கேட்கிறார்கள். குஜராத் என்றில்லை, இந்தியாவின் இந்த ஒரு மாநிலத்திலும் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு பாலும் தேனும் ஓடாது. இந்தியா என்றில்லை, உலகின் மிக முன்னேறிய எந்த நாடொன்றிலும் சேரிகளும், அந்நாட்டுக்கே உரிய பிரச்சினைகளும் இருந்தே தீரும். எனவே எந்த அளவு ஒரு நாடு (அல்லது மாநிலம்) முன்னேறி வந்துள்ளது என்பதே முக்கியமானது.

குஜராத்தில் லஞ்சம் கேட்பது குறைந்துள்ளது என்றால், உடனே இவர்கள், ‘குஜராத்தில் லஞ்சமே இல்லை என்று சொல்வது பொய்’ என்று வருவார்கள். எப்படி அடுத்த சில பத்தாண்டுகளில் முழுவதும் முன்னேறிய மாநிலத்தை நாம் பார்க்கமுடியாதோ, அதேபோல், லஞ்சமே இல்லாத மாநிலம் ஒன்றையும் நாம் பார்க்கமுடியாது. லஞ்சம் என்பது (கொடுத்தாலும் சரி, பெற்றாலும் சரி) நம் ரத்தத்தில் ஊறிப் போயுள்ளது. இதிலிருந்து மீள நமக்கு ஒரு பெரிய கலாசார மாறுதலே தேவை. அது நிகழ்ந்தால்தான் நாம் லஞ்சமற்ற இந்தியாவைப் பற்றிக் கனவு காணமுடியும். இந்தச் சூழலில், லஞ்சம் குறைவு என்ற நிலையை அடைவே எத்தனை பெரிய சாதனை என்று யோசித்துப் பாருங்கள். இப்படி ஒரு எண்ணம் மக்களிடையே வந்திருப்பதுதான் எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை மறக்கமுடியுமா என்பது இவர்கள் அடுத்த கேள்வி. முஸ்லிம்கள் என்றில்லை, யார் எங்கே கொல்லப்பட்டாலும் மறக்கமுடியாது. இங்கேதான் இவர்கள் போலித்தனமும் வெளியாகிறது. இந்தியாவில் இதுவரை எந்த எந்த மாநிலங்களில் யார் ஆட்சியில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று இவர்கள் யாருக்கும் அக்கறை இல்லை. மோதியைக் குறைசொல்ல வேறு ஒரு வழியில்லை என்பது மட்டுமே இதன் பின்னால் இருக்கும் ஒரே காரணம். பிரபாகரன் தலைமை வகித்த விடுதலைப்புலிகள் அமைப்பால் கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி இவர்கள் வருத்தப்படும் அதே வேளையில், பிரபாகரனையும் ஆதரிப்பார்கள். ஆனால் மோதி என்று வரும்போது, முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைச் சொல்லி, மோதியை நிராகரிப்பார்கள். இத்தனைக்கும், மோதி எங்கேயும் சென்று ஓடி ஒளியவில்லை. மோதி ஒரு ஜனநாயகவாதி. தேர்தலில் போட்டியிட்டு, தன் கட்சி பெரும்பான்பை பெற்றால் தானே முதல்வர் என்று அறிவித்து, மக்களைச் சந்தித்து வெற்றி பெற்று மூன்று முறை முதல்வரானவர். அத்தோடு கலவரங்களில் மூன்றில் ஒரு பங்கு ஹிந்துக்களும் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும் கலவரங்களில்தானே ஒழிய, அரசால் அல்ல. இன்னொரு விஷயம், அக்கலவரங்கள் ஹிந்து சன்னியாசிகள் உயிரோடு எரிக்கப்பட்ட கோத்ரா சம்பவத்திலிருந்து தொடங்குகிறது. அதன் பதிலடியாகவே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. நேரடியாகத் தொடங்கினாலும் சரி, பதிலடியகத் தொடங்கினாலும் சரி, நாம் கலவரங்களை ஆதரிக்கக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஆய்வு என்று வரும்போது ஒரு கலவரம் எப்படித் தொடங்கியது என்பது முக்கியமாகிறது. இத்தனைக்குப் பிறகும் இவர்கள் பிரபாகரனை ஆதரித்து, மோதியை எதிர்த்து தங்கள் போலித்தனத்தைப் பறைச் சாற்றுவார்கள்.

* மோதி பிரதமராவது குறித்து ஒரு குஜராத்திப் பெருமை பெரும்பாலானவர்களிடமும் இருக்கும் என்று தோன்றுகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் வழக்கத்துக்கு அதிகமான ஆதரவு மோதிக்கு உருவாகலாம்.

* இத்தனை ஊடக எதிர்ப்பையும் மீறி மோதியின் செல்வாக்கு குஜராத்தில் பிரமிக்கத்தக்கதாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

* அகமதாபாத், வடோதரா உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோக்காரர்கள் பெரும்பாலும் மீட்டர் போட்டே ஓட்டுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் நமக்கு இதுவே சாதனையோ என்று நினைக்க வைத்துவிடுகிறார்கள்.

* குஜராத்தின் இன்னொரு முக்கியமான விஷயம், மதுவிலக்கு. நம் ஊர்களில் இரவானால் குடித்துவிட்டுத் தள்ளாடி நடந்து நமக்குத் தொல்லைகொடுக்கும் ‘குடி’மக்களை நாம் அங்கே பார்க்க இயலாது. மதுவிலக்கு என்றாலும், குடிக்க மது கிடைக்கிறது என்று பலர் சொன்னார்கள். இருக்கலாம். ஆனால் நிச்சயம் நம் ஊரைப் போலக் குடித்துவிட்டு தெருவில் தள்ளாடி நடந்து நமக்கும் தொல்லை தரும் இழிய நிலை அங்கே இல்லை என்றே சொல்லவேண்டும்.

* பெண்கள் கல்வியைப் பற்றி ஓர் ஆசிரியர் குறைப்பட்டார். உண்மையில் இந்தப் பெண் கல்விக்காக ஒரு மாதம் கல்வி வீணாகப் போனால் பரவாயில்லை என்றுதான் சொல்வேன். இரண்டு காரணங்கள். ஒன்று, ஒரு மாதக் கல்வியைவிட, ஒரு பெண் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது முக்கியமானது, அவசியமானது, இந்தியாவுக்கே ஆதாரமானது. இரண்டாவது, ஒரு மாதக் கல்வி என்பது யதார்த்தத்தில் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. இதற்காகத் தனியே அலுவலர்களை நியமித்தும் இதைச் செய்யமுடியும். ஆனால் இப்போது நடப்பது போல ஆசிரியர்களைக் கொண்டு செய்வதுதான் சரியானது.

* பெண்கள் வீட்டில் பிரசவம் பார்க்காமல் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது கடந்த சில ஆண்டுகளாகக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இது ஆச்சரியம் தருவதாகும். ஏனென்றால் தமிழ்நாட்டில் இந்த விஷயத்தில் நாம் எங்கோ உயரப் போய்விட்டோம்.

* சாலைகளைப் பொருத்தவரை, ஜெகதீசன் ஐ.ஏ.எஸ் சொன்னதுபோல, தமிழ்நாட்டைவிட குஜராத் முன்னேறிவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. ஆனால், தமிழ்நாட்டளவுக்கு வந்துவிட்டது. இதுவே ஒரு சாதனைதான்.

* கல்வியின் தரத்தைப் பொருத்தவரையிலும்கூட தமிழ்நாடு உயரேதான் உள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதே வேகத்தில் போனால் குஜராத் தமிழ்நாட்டைத் தாண்டிச் செல்லும் காலம் தூரத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

இதையெல்லாம்விட நான் முக்கியமாகச் சொல்ல நினைப்பது இதுதான்:

புள்ளிவிவரங்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிட்டு, மக்களின் மனநிலையைத்தான் நான் பார்க்க நினைக்கிறேன். இன்று மக்கள் மனத்தில் நல்ல சாலை தருவதும், நல்ல குடிநீர் தருவதும், விவசாயத்துக்கு நீர் தருவதும், நல்ல தடையற்ற மின்சாரம் தருவதும், கலவரமின்றிப் பார்த்துக்கொள்வதும் அரசின் கடமை என்ற விஷயம் ஆழ ஊன்றிவிட்டிருக்கிறது. இப்படியே இன்னொரு தலைமுறை தொடருமானால், அடுத்து வரும் எந்த ஒரு அரசும் இதைத் தரவேண்டிய கட்டாயம் உருவாகும். இல்லையென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள். இதுவே மோதி செய்துள்ள சாதனை.

இன்னொரு விஷயம், மோதியின் சாதனை என்று நாம் காண்பது எல்லாமே, ஒரு முதல்வரின் கடமைகள்தான். கடமையைச் செய்யும் முதல்வர்களும் அதிகாரிகளும் அருகிவிட்ட நிலையில், மோதி செய்த தன் கடமைகளைக்கூட நாம் சாதனை என்று சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல முதல்வர்களும் தங்கள் கடமையைச் செய்ய முன்வருவார்களானால் அதுவே மோதியின் சாதனையாக இருக்கும்.

இந்த வகையில் மோதி நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
( இதன் சுருக்கப்பட்ட வடிவம் ஆழம் நவம்பர் 2013 இதழில் வெளியாகியுள்ளது )

அடுத்த முறை குஜராத் செல்லும் போது, சர்தார் சிலைக்கு பக்கத்தில் சின்னதாக ஹரன்பிரசன்னாவிற்கு ஒரு சிலை வைத்தாலும் வைப்பார்கள் !

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

Read More...

Friday, November 01, 2013

ஆரம்பம் - FIR

ஆரம்பம் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு படம் நன்றாக ஆரம்பிக்கிறது. தமிழ் பட ஃபார்முலாவின்படி முதலில் ஹீரோவின் கால்களை காட்டுகிறார்கள். பிறகு 'தல' மூஞ்சியை காட்டும் இடங்களில் பலத்த கைத்தட்டல். காரை ஓட்டிக்கொண்டு மூன்று இடங்களில் வெடிகுண்டு வைக்கும் போது அட ஆரம்பமே அசத்தலாக இருக்கே முன் சீட்டில் உட்கார வைக்கிறது.

சரி இவர் செய்யும் காரியங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல காரணம் இருக்கும் இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்லுவார்கள் என்று நாம் காத்துக்கொண்டு இருக்கும் போது ஆர்யா வருகிறார். கூடவே நயன்... ஆனால் ஹீரோ மாதிரி இல்லாமல், இவர் கால்களை (துடையுடன்) காட்டும் போது மக்கள் கைத்தட்டுகிறார்கள்!.

ஆரியா ஒரு கம்யூட்டர் ஹேக்கர் என்பதால் எப்போது கீபோர்ட்டை தட்டிக்கொண்டே இருக்கிறார். ஜி, Chief என்று அஜித்துக்கு எடுபிடியாக இருக்கிறார். டாப்ஸி இவருக்கு எடுபிடியாக இருக்கிறார்.

இடைவேளை வரை நல்ல திரைக்கதையுடன் விறுவிறு என்று போகும் படம்.... இடைவேளைக்கு பிறகு சராசரி தமிழ் படம் போல. எப்படா ஆரம்பித்ததை முடிக்க போகிறீர்கள் என்று கேட்க வைக்கிறது. தயவு தாட்சண்யமின்றி பல காட்சிகளை வெட்டியிருக்கலாம். பலருடைய முகங்களை க்ளோசப்பில் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. டான்ஸ் ஆடும் போது அஜித்தின் தொப்பை குலுங்குவது என்று கேமரா தன் வேலையை செய்திருக்கிறது. யுவன் இசை பாடல்கள் ஏதோ சுமார் ரகம்.

படத்தில் என்ன தான் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆனாலும் கடைசியில கைநாட்டு தான் என்று அஜித் ஒரு இடத்தில் வசனம் பேசுவார். என்ன தான் அஜித் நடித்தாலும் கடைசியில் கார், பைக், படகு என்று சேசிங் சீன்களும்....இந்தியா எல்லையில் தீவிரவாதிகள் என்று விஜயகாந்த், அர்ஜூன், சரத்குமார் படங்களை போல ஆகிவிட்டதே என்று நமக்கு தோன்றுகிறது.


இட்லிவடை மார்க் 6/10
முதல் பாதி நல்ல ஆரம்பம். பிற்பாதி நல்ல ரம்பம்






Read More...