பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 29, 2013

பரிதிஇளம்வழுதி அதிமுகவில் ஐக்கியம்




2011ல் பரிதிஇளம்வழுதி அளித்த பேட்டியில் திமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்தார்.


அப்போது கலைஞர் பரிதிஇளம்வழுதி பற்றி அளித்த அறிக்கை

தி.மு.க.வுக்கு 62 வயது ஆகிறது. 1976-ல் “நெருக்கடி நிலை அறிவித்தபோது தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கட்சி இனி எழுந்திருக்காது என்றார்கள். ஆனால் அதன் பிறகு சுடர் கொண்டு எழுந்தது. தி.மு.க. பிறந்த காலம் முதல் இதை அழிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

துரோக சிந்தனை கொண்டவர்கள் தமது சுகவாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதை போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசு இல்லாத போது கழகத்துக்கு நேர்ந்த கொடுமைகளை சந்திக்க முன் நின்றவர்கள், காசு சேர்த்த பிறகு அதை கட்டிக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்.

நமது விரோதிகள் நம்மை தாக்க முயலலாம். நமக்கு எதிரான விமர்சனங்கள் நம்மை எதிர்க்கலாம். துரோகிகள் நம்மை நிலை குலைய செய்ய எத்தனிக்கலாம். கொல்ல வரும் பகையை, தொல்லை தரும் துரோகத்தை நமது கழகம் வெற்றி கண்டாக வேண்டும். எதிரிகள் வெறியோடு செயல்படுகிறார்கள். அவர்களை எதிர் கொண்டு நாம் வெற்றி பெற்றிட உழைப்போம்.

தி.மு.க. பரிதிஇளம்வழுதி முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் நேற்று ஐக்கியம். 
இவருடைய ராசி என்னவாக இருக்கும் ?

Read More...

Wednesday, June 26, 2013

ராட்சஸர்கள்

சமீபத்தில் மீடியா வெளிச்சம் போட்டு காண்பிக்கும் பாலியல் கொடுமை செய்திகள் எழுத்தாளர் சிவசங்கரிக்கு ராட்சஸர்கள் என்ற சிறுகதை எழுத தூண்டுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன். பிராமின சமுதாயத்தையே இவர் எழிவு செய்துவிட்டார் என்று ஒரு கோஷ்டி அலைந்துக்கொண்டு இருக்கிறது.

சரி என்ன தான் இருக்கிறது என்று அந்த கதையை படித்த போது ஒரே ஒரு பகுதி மட்டும் அட எப்படி இதை எழுதினார் எப்படி விகடன் பிரசுரம் செய்தது என்று நினைக்க தோன்றியது. சாருவே இதை எழுத பயப்படுவார் என்று நினைக்கிறேன்.

கதையில் ஒரு பகுதி

"சமையல் வேலைகளைக் கவனிக்க முருகன் என்று ஒருவன். வயசு முப்பது முப்பத்தைந்து இருக்கும். வெடவெடவென்று சிவப்பாக, எண்ணெய் தடவி வாரிய கறுப்புக் கிராப்புடன், சிரித்த முகமாக வளையவருவான். பிரமாதமாகச் சமைப்பவன் என்பதோடு, இதமாகப் பழகுபவன் என்றரீதியிலும், எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும்."


முருகன் கையில் எப்போது விகடன் டைம்பாஸ் இருக்கும் என்று சேர்ந்த்திருந்தால் அந்த கதாபாத்திரத்துக்கு பொறுத்தமாக இருந்திருக்கும்!

Read More...

Tuesday, June 18, 2013

தாலி



கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?
மனுஷ்யபுத்திரன் பதில்: அவளுக்கு அறிவு வந்துவிட்டதன் அடையாளம்
நன்றி: குங்குமம்

இதை தூக்கி போட்டால் உடம்பு தாங்குமா ?


Read More...

’அம்மா’வின் மூவ் என்னவாக இருக்கும்?

மாலன் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் எழுதியது.

மாநிலங்களவைத் தேர்தல்: சுவாரஸ்யமான சதுரங்கம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமுறை மாநிலங்களவைத் தேர்தல் சுவையான திருப்பங்களைக் கண்டிருக்கிறது. இந்த அரசியல் விளையாட்டில், ஜெயலலிதா ஒரு சாதுர்யமான சதுரங்க ஆட்டக்காரரைப் போல காய் நகர்த்தி வந்திருக்கிறார்.I will decide என்ற அவரது கம்பீரம் அல்லது அகங்காரம் இந்த ஆட்டத்தில் மீண்டுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது.

அவரது கெட்டிக்காரத்தனமான நடவடிக்கைகள் மூலம் தனது கட்சி, தனது கூட்டணிக் கட்சி ஆகியோரின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொண்டதோடுமட்டுமல்லாமல், தனது எதிரிகளான தேமுதிகவையும் திமுகவையும் நேருக்கு நேர் மோதிக் கொள்கிற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் யார் ஜெயிக்க வேண்டும் என்பதையும் அவர்தான் தீர்மானிக்கப் போகிறார் என்பதுதான் சுவாரஸ்யம். (அது எப்படி என்பது கீழே)

அது மட்டுமல்ல, காங்கிரசையும் ஒரு இக்கட்டான கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் இப்போது திமுகவை ஆதரிக்கும் என்றால் காங்-திமுகவிடையே ஓர் ரகசிய உறவு தொடர்கிறது என்ற பிரசாரத்தை முன்னெடுக்க அது உதவும். தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிற காங்கிரசோடு அது குடும்ப உறுப்பினர் பதவி பெறுவதற்காக உறவு கொள்கிறது என்ற பிரச்சாரத்தை திமுக எதிர் கொள்ள நேரும். ஒருவேளை காங்கிரஸ் திமுகவை ஆதரிக்கவில்லை என்றால் திமுக தோற்கும் என்பது மட்டுமல்ல, தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதான தோற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.

இதன் இன்னொரு கோணம்தான் தேமுதிகவும். காங் ஆதரிக்காவிட்டால் தனிமைப்படுத்தப்படும். ஆதரித்தால் துரோக முத்திரை விழும்

அதிமுக வசம் 4x34=136 போக மீதம் உள்ள 15 கம்யூனிஸ்ட் வேட்பாளருக்குப் போகும். அவர்கள் வசம் (10+8+1) 19 இருக்கிறது எனவே அவர்களது வெற்றியும் உறுதி.

தனது அணியின் வெற்றியை மட்டுமல்லாமல் தன் எதிரிகளில் யார் ஜெயிக்கவேண்டும் என்பதையும் அதிமுகவே தீர்மானிக்க வாய்ப்பு இருக்கிறது

தேமுதிக தலைமையோடு முரண்பட்ட 7 ச.ம.உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சியில் உள்ள மற்ற கட்சிகளின் ச.ம.உறுப்பினர்கள் (2+2=4) அதிமுகவின் வழிகாட்டுதலின்படி வாக்களிப்பார்கள் என்றால் அந்த வாக்குகள் தேமுதிக, திமுக இருவரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.

இந்த queer logicன் அடிப்படையில் எழும் கேள்வி: அதிமுக இந்த வாக்குகளை கனிமொழிக்கு அளிக்கச் சொல்லுமா?

சொல்லாது என்பது வெளிப்படையான ரகசியம். கனிமொழியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் இளங்கோவனுக்கே தேமுதிக அதிருப்தி உறுப்பினர்களை தங்களது இரண்டாவது preference வாக்குகளை அளிக்கச் சொல்லலாம்.. ஆனால் தேமுதிகதான் தன் முதல் எதிரி என்பதைப் போலச் செயல்பட்டுவரும் அதிமுக தலைமை அப்படி ஒரு முடிவை எடுக்குமா? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

இரண்டு தரப்புக்குமே வேண்டாம் எல்லோரும் எங்கள் அணிக்கே வாக்களியுங்கள் என்று அது முடிவு எடுக்குமானால் கனிமொழி வென்றுவிடலாம். ஏனெனில் 34 வாக்குகள் இல்லையென்றாலும் கடைநிலையில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் யார் என்பதன் அடிப்படையில் ஆறாவது வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார். அப்போது தேமுதிகவைவிட திமுக ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்றிருக்கும்

’அம்மா’வின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?

இரண்டாவது preference வாக்குகளை யாருக்கும் போடாமல் இருந்தால் என்ன ஆகும் மாலன் சார் ?

Read More...

Monday, June 17, 2013

தொடரும் பிஜேபியின் சொதப்பல் - எ.அ.பாலா

யுபிஏ அரசின் பல சறுக்கல்களை முன்னிறுத்தி, பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் செய்ததைத் தவிர்த்து, 2014 தேர்தலுக்கு முன்பாக, அரசியல் சூழலை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள பிஜேபி எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தோன்றவில்லை. ”பளபளக்கும் இந்தியா” என்ற முழக்கத்துடன், வாஜ்பாயி தலைமையில் 2004 தேர்தலிலும், பின்னர் 2009-ல் அத்வானி தலைமையில் (யுபிஏ அரசின் பிரும்மாண்ட ஊழல்களினால் இருந்த சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்த இயலாமல்!) பிஜேபி மண்ணைக் கவ்வியது.

தற்போது மீண்டும், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசின் ஊழல்கள் மற்றும் திடமற்ற பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றினால் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் மேல் ஏற்பட்டிருக்கும் பெரிய அதிருப்தி நிலவும் நிலைமையிலும், நரேந்திர மோதியை தேர்தல் பிரச்சாரத் தலைவராக (அதாவது, 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரியாக மோதியை அறிவிப்பதற்கு அச்சாரமாக) பிஜேபி (RSS அதன் கையை முறுக்கியதன் விளைவாக்) அறிவித்துள்ளதை சொதப்பலின் உச்சம் என்று தான் கூற வேண்டும். பிஜேபியை பின்னாலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசியல் யதார்த்தம் குறித்த அறிவு குறைவு என்பது தெரிந்தது தான்.

அகண்ட பாரதம், ஹிந்துத்வா போன்றவைகளை வைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ்/பிஜேபி இன்னும் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது. குஜராத்தில் மோதி சிறந்த நிர்வாகத்தை அளித்து வருவது உண்மை தான் என்றாலும், மோதியை பெரும்பான்மையான இந்திய மக்களால் மதிக்கப்படும் “தேசிய”த்தலைவராக எண்ணுவதில் பெரிய அர்த்தமில்லை. யுபிஏ அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதை மட்டுமே முக்கியக் குறிக்கோளாக பிஜேபி கொண்டிருந்தால், இன்று ஐக்கிய ஜனநாயக முன்னணியிலிருந்து அதன் முக்கியக் கூட்டாளி JD(U) விலகும் நிலை ஏற்பட்டிருக்காது. 2014-ல் ஆட்சியைப் பிடிக்க பிஜேபி அதன் கூட்டணியில் இன்னும் சில பிராந்தியக் கட்சிகளைச் சேர்க்க முனைய வேண்டுமே அன்றி, கூட்டணியில் இருக்கும் கட்சிகளை துரத்தி விடக் கூடாது!

பிஜேபியின் இந்த நிலைமைக்கு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே காரணமில்லை, பிரதமர் பதவி ஆசை கொண்ட அதன் சில மூத்த தலைவர்களும் தான். 2014-ல் கூட்டணி துணை கொண்டு மட்டுமே ஆட்சிக்கு யாருமே வர இயலும் என்ற சூழலில், பொதுவாக அனைவருக்கும் ஏற்புடைய அத்வானியை பிஜேபி முன்னிறுத்தி இருப்பதே, சமயோஜிதமான முடிவாக இருந்திருக்கும். அத்வானிக்கு வயதாகி விட்டதாலேயே அவர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்ற வாதத்தில் அர்த்தமில்லை! அவர் ஒருவர் தான் இந்தியாவில் கிழ அரசியல்வாதியா என்ன? மேலும் அவரை விட வயதில் குறைந்தவர்களைக் காட்டிலும் அவர் மன அளவில், உடலளவில் திடமாகவே இருக்கிறார். நாடு முழுதும் நன்கு அறியப்பட்ட, பல கட்சிகளின் தலைமையுடன் நல்லுறவு வைத்துள்ள ஒரு தேசியத் தலைவர் அவர் என்பது தான் யதார்த்தம்.

பிராந்தியக் கட்சிகள் பல மாநிலங்களில் வலிமையுடன் இருக்கும் சூழ்நிலையில், நல்லதொரு கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்காமல், 2014 தேர்தலுக்குப் பின் பேரம் பேசி மோதி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்று பிஜேபி நினைப்பது, பகல் கனவாகி விடும் அபாயம் இருக்கிறது. மேலும், 2014 தேர்தலுக்குப் பின், தனிப்பெருங்கட்சியாக காங்கிரஸ் அமைவதிலும் / பிஜேபி அமைவதிலும் வித்தியாசம் இருக்கத் தானே செய்கிறது! இப்போது, மூன்றாவது அணி (இது நடைமுறை சாத்தியம் என்று நான் கருதவில்லை) குறித்த பேச்சு அடிபடுவதற்கும், பிஜேபியின் “மோதி முடிவே” காரணம்.

காங்கிரஸ் கட்சி இந்த குழப்பத்தில், மகிழ்ச்சியாக குளிர் காய்வது, தொலைக்காட்சியில் அதன் தலைவர்களின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. ராகுலை 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரி வேட்பாளாராக அறிவிப்பதை காங்கிரஸ் தள்ளிப் போடுவதை நல்லதொரு அரசியல் யுக்தியாகத் தான் நோக்க வேண்டும்! சரியான தருணத்தில் காங்கிரசின் பலம் கூடி விட்டது மக்களின் துர்பாக்கியம் தான். எதிர்காலத்தில் மோதி இந்தியப் பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மோதி தற்சமயம் சற்றே பொறுமை காத்திருக்கலாம்!

மதச்சார்பின்மையில் பிஜேபியை விட காங்கிரஸ் எந்த விதத்திலும் மேல் இல்லை (எ,கா: 1984 சீக்கியப் படுகொலை) என்றாலும், TMC, JD(U), SP, BSP, BJD, RJD, DMK, NC ... என்று பல பிராந்தியக் கட்சிகள் (இன்றைய லோக்சபாவில் இவைகளின் மொத்த பலம் 163 சீட்டுகள்) மோதியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், பிஜேபி சற்றாவது யோசிக்க வேண்டாமா! தனது பிரதம மந்திரி வேட்பாளர் யாரென்று தீர்மானிக்க பிஜேபிக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா என்பதல்ல பிரச்சினை. ”கூட்டணி அரசு” காலகட்டத்தில், தக்க ஆலோசனை செய்து, சரியான முடிவெடுப்பது தான் சமயோஜிதமாகும்.

மக்கள் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கையே, பல குழப்பங்களுக்கு நடுவில், 9 ஆண்டுகள் காங்கிரஸ், பிரதமராக வைத்திருக்கும்போது, அத்வானி போன்ற ஒரு Tall Leader-ஐ ஓரங்கட்டி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கோண்டிருக்கும் பிஜேபியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதை எழுதும்போது ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக, JD(U)வை குற்றம் சாட்டி, தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :) “இன்று பீகாருக்கு கறுப்பு தினம்” என்றும் முழங்கினார்! பாவம் பிஜேபிக்கு 2014 தேர்தலே கறுப்பாகி விடும் போலிருக்கிறதே!

- எ.அ.பாலா


ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக.. தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :)". இந்த பதிவை படிக்கும் நமக்கும் அதே உணர்வு தான் வருகிறது !

Read More...

Sunday, June 16, 2013

பெங்களூரில் இளையராஜா



மெட்ராஸ்லேர்ந்து பெங்களூருக்கு டிக்கெட் கிடைக்காததால் #Raja70BLR அட்டெண்ட் பண்ண முடியல....

Read More...

Saturday, June 15, 2013

இயக்குனர் மணிவண்ணன் அஞ்சலி



அஞ்சலி

Read More...

Thursday, June 13, 2013

செகுலரிசமும் மோதியும் - பத்ரி

(1) செய்து காட்டுவார் மோதி

(2) பாஜகவின் கூட்டாளிகள்

தினம் தினம் மோதியா என்று அலுத்துக்கொள்ளாதீர்கள். சில கேள்விகள் எழுப்பப்படும்போது அவை பற்றி எனக்கே தெளிவு ஏற்படுத்திக்கொள்வதற்காக இந்தப் பதிவுகள். இன்னமும் நிறையக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே தொடர்ந்து மேலும் சில பதிவுகளும் அவ்வப்போது வரும்.

ஐக்கிய ஜனதா தளம் ஒரு செகுலர் (மதச்சார்பற்ற) கட்சி என்று கருதப்படுகிறது. பாஜக ஒரு மதச்சார்புள்ள கட்சியாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்துத்துவம் அவர்களுடைய நோக்கங்களில் ஒன்று என்று அக்கட்சியைச் சேர்ந்த பலருமேகூடச் சொல்கிறார்கள். சிவ சேனை ஓர் இந்துத்துவக் கட்சியாகவே காணப்படுகிறது. அது தவிர, அகாலி தளம் என்ற கட்சி, சீக்கியம் என்கிற மதத்தின்மீதாகக் கட்டப்பட்டுள்ளதால் அதுவும் மதச்சார்புள்ள கட்சிதான்.
அதுதவிர முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் மதச்சார்புள்ளவையே. வெளிப்படையாகக் கிறிஸ்தவ மதச்சார்பை வெளிப்படுத்தும் கட்சிகள் என்று ஏதும் இந்தியாவில் இல்லை. மிச்சமுள்ள அனைத்துக் கட்சிகளும் என்ன சொன்னாலும் செய்தாலும், அவர்கள் அனைவருமே, காங்கிரஸ் உள்பட, செகுலர் கட்சிகளாகவே அறியப்படுகிறார்கள்.



இந்துத்துவ அரசியலின் அடிப்படையே, ‘பெரும்பான்மையான இந்துக்கள் ஏதோ ஒருவிதத்தில் வஞ்சிக்கப்படுகிறார்கள்; சிறுபான்மையினர், அதுவும் முக்கியமாக முஸ்லிம்கள், சலுகைகளாகப் பெற்றுத் தள்ளுகிறார்கள்’ என்ற கருத்து. இதற்கு முற்றிலும் மாறாக, முஸ்லிம்கள், தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். எந்த ஒரு செகுலர் கட்சியாலும் தங்களுக்கு இதுகாறும் நன்மைகள் கிடைத்ததில்லை என்கிறார்கள். இப்போது கொடுக்கப்படும் சலுகைகள் போதவே போதா என்கிறார்கள். முஸ்லிம்கள் தொடர்ந்து பின்தங்கிய வகுப்பினர்களாகவே இருந்துவருவதாக அவர்கள் புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டுகிறார்கள்.

பாஜகவுக்கான எதிர்ப்பு முஸ்லிம்களிடமிருந்து மட்டும் வருவதில்லை. மூன்று முக்கியமான இடங்களிலிருந்து வருகிறது. (1) முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர். (2) தலித்துகள். (3) திராவிடவாதிகள் (அல்லது) நாத்திகவாதிகள்.

முஸ்லிம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்வது எளிது. இது பாபர் மசூதி தாண்டியது. குஜராத் கலவரம் தாண்டியது. தாம் சிறுபான்மையினராக இருக்கும் நாட்டில் தமக்குப் பாதுகாப்பு வேண்டும்; தம்முடைய வளர்ச்சிக்கு ஊக்கங்கள் வேண்டும்; தம்முடைய வழிபாட்டுமுறைக்கு எந்தக் குந்தகமும் வரக்கூடாது; தம்முடைய பின்தங்கிய நிலை மாறவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது மிக நியாயமானதே. இந்த மாற்றங்கள் எவையும் பாஜகவிடமிருந்து கட்டாயமாக வர முடியாது என்ற கருத்து முஸ்லிம்களிடம் ஆழமாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கருத்தை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது. பாஜகவைவிட காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணியிடம் தங்களுக்கு அதிக சலுகைகள், வாய்ப்புகள் கிடைக்கும் என்று முஸ்லிம்கள் சொன்னால் அதை எப்படி மறுக்க முடியும்?

பாஜகவில் உள்ள ஒரு சில டோக்கன் முஸ்லிம் அரசியல்வாதிகள் (ஷாநவாஸ் ஹுசைன், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா, இறந்துபோன சிக்கந்தர் பக்த்) தாண்டி சமீபத்தில் குஜராத்தில் சில புதிய இளம் முஸ்லிம் தலைவர்கள் உருவாகியுள்ளனர். இவர்களுடைய கருத்து: ‘மோதியின் ஆட்சியில் முஸ்லிம்கள், இந்துக்கள் என்று அனைவருமே முன்னேறுகிறார்கள்; இதுதான் உண்மையான வளர்ச்சி; அடையாள அரசியல்தான் ஆபத்தானது; இந்த அடையாள அரசியலால்தான் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களைப் பின்தங்கியவர்களாகவே வைத்துள்ளனர்.’ ஆனால் இந்தக் கூற்றுகளை இன்று ஒரு செகுலர் நபர் எளிமையாக ஒதுக்கிவிட முடியும். ஏனெனில் நம் கருத்துகள் நம் நம்பிக்கையிலிருந்தே உருவாகின்றன. தெளிவான சான்றுகளிடமிருந்து அல்ல. நாம் சான்றுகளைத் தேடிப் போவதில்லை. அதற்கான நேரமோ வலுவோ நம்மிடம் கிடையாது.

இன்று முஸ்லிம் கட்சிகளும் தனிப்பட்ட முஸ்லிம்களும் பாஜகவுக்கு, அதுவும் முக்கியமாக மோதிக்கு, வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இத்தனை ஆண்டுகள் கழித்துத்தான் அத்வானிக்கு ஸ்பெஷலாக செகுலர் முத்திரை கிடைத்துள்ளது. இதற்குமுன் வாஜ்பாயிக்குக் கொஞ்சமாகக் கிடைத்தது. எனவே மேலும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கும் இந்த முத்திரை கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலேயே போகலாம்.

மோதி முஸ்லிம்களின் ஆதரவு என்ற முத்திரையைப் பெற்றபிறகுதான் பிரதமர் ஆகலாம் என்ற வீட்டோ இருந்தால் அவரால் என்றுமே இந்தியாவின் பிரதமர் ஆக முடியாது. இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் அப்படிப்பட்டதல்ல. உண்மையில் பாஜகவில் யாருக்குமே - ஏன் நாளை ஷாநவாஸ் ஹுசைன் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலுமேகூட - இந்த முத்திரை கிடைக்காது. இன்றைய நிலையில் பாஜகவுக்கு வெகு சில முஸ்லிம்களே வாக்களிப்பார்கள். மோதி தலைவராக இருந்தாலும் சரி, தலைவராக இல்லாவிட்டாலும் சரி.

இந்தக் காரணங்களாலேயே மோதி ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லிவிடலாமா? அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் பொதுவாக கருப்பினத்தோரின் (ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்) வாக்குகள் டெமாக்ரடிக் கட்சிக்குத்தான் கிடைக்கும். இது ஒபாமா இப்போது வந்ததால் அல்ல. டெமாக்ரடிக் கட்சி சிறுபான்மையினர் நலனை முன்வைக்கும் என்ற கருத்து அங்கே உள்ளது. ரிபப்ளிகன் கட்சி ஒருவிதத்தில் அடிப்படைவாதம் பேசக்கூடியது. தீவிரவாத எவாஞ்செலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவு கொண்ட கட்சி அது. அதேபோல லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோரும் பொதுவாக டெமாக்ரடிக் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள். தம் நலன் பொதுவாக டெமாக்ரட்டுகள் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தாலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோர் தொடர்ந்து டெமாக்ரட்டுகளுக்கே அதிக வாக்கை அளித்துவருகின்றனர். ரிபப்ளிகன் கட்சியிலும்கூட இந்தக் குழுவினரிலிருந்து சில டோக்கன் ஆட்களைப் பார்க்கலாம். எப்படி பாஜகவில் சில டோக்கன் முஸ்லிம்கள் இருக்கிறார்களோ, அப்படி.

ஆனாலும் ரிபப்ளிகன் கட்சி அவ்வப்போது ஜெயித்துக்கொண்டுதான் வருகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வீட்டோ ஏதும் கிடையாது. எப்போது பெரும்பான்மை அமெரிக்கர்கள் ஒட்டுமொத்தமாக ரிபப்ளிகன் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்களோ அப்போது அவர் வெற்று பெறுகிறார். எனவே முஸ்லிம்கள் ஓட்டு விழாவிட்டாலும்கூட அல்லது மிகக் குறைவாக விழுந்தாலும்கூட பாஜகவும் மோதியும் வெல்ல முடியும்.

பாஜகவுக்கு தலித்துகளிடமிருந்தும் திராவிடவாதிகளிடமிருந்தும் எதிர்ப்பு உள்ளது என்று சொல்லியிருந்தேன். இதற்கான காரணங்கள் வேறானவை.

பாஜகவும் அதன் ஆத்மாவாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் உயர்சாதி, பிராமணியக் கருத்துகளை முன்வைக்கும் அமைப்பு என்பது பொதுவான இடதுசாரி லிபரல் சிந்தனையாளர்களின் கருத்து. இதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. பாஜக என்ற அரசியல் கட்சி காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இளம் கட்சிதான். அது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தப் பார்வையிலிருந்து ஜன சங்கமாக உருவாகி, பின் ஜனதாவுடன் ஐக்கியமாகி, பின்னர் மீண்டும் பாரதிய ஜனதாவாக மறு உருவெடுத்தது. அதன் சித்தாந்தப் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக inclusive-ஆக மாறிவருகிறது என்றே நான் கருதுகிறேன். இக்கட்சியில் பிற்படுத்தப்பட்டவர்களின், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் என்ன என்று கணக்கு எடுக்கக்கூடிய நிலையில் இப்போது நான் இல்லை. ஆனால் இது ஒரு சுவாரசியமான ஆய்வாக இருக்கும்.

இன்று காங்கிரஸ் கட்சியில் பாஜகவைவிட அதிகமான எண்ணிக்கையில் மேல்மட்டத்தில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். ஆனால் நரேந்திர மோதியே பிற்படுத்தப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்தான் என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு இருக்கும் ஒரே காரணத்தால்தான் அவர்களால் இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்தச் சட்டம் இயற்றும் மன்றங்களுக்குச் செல்ல முடிகிறது. இன்றும்கூட பொதுத் தொகுதியில் நிற்பதற்கு இந்தச் சாதிகளைச் சேர்ந்தோருக்கு பெரும் அரசியல் கட்சிகளிடமிருந்து பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் தம் எண்ணிக்கை காரணமாகவும் தம் அரசியல் வலு காரணமாகவும் ஆட்சியில் தமக்குரிய இடத்தை வெகுவாகப் பிடித்துவிட்டனர். சொல்லப்போனால் இன்றைய இந்திய அரசியலில் மிக முக்கியமான பங்கைச் செலுத்திக்கொண்டிருப்பது இடைநிலைச் சாதிகள் என்று சொல்லப்படுவோரே.

தலித்துகள் தனியாக பாஜகமீது பயம் கொள்வார்களா, பாஜகவை ஒதுக்குவார்களா என்று தெரியவில்லை. இன்றைய default நிலையில் அவர்கள் பாஜகவைப் பெரிதாக ஒன்றும் ஆதரிக்கவில்லை. எனவே பாஜக இதற்கும் கீழே போய்விட முடியாது. மாறாக, பாஜக அவர்களுடைய ஆதரவை எதிர்காலத்தில் அதிகமாகப் பெறக்கூடும்.

இறுதியாக திராவிடவாதிகள். பொதுவாக இந்துமதத்தை எதிர்க்கும் இவர்களுக்கு இந்துத்துவவாதம் பேசுவோரை எதிர்ப்பதுதான் default position. திமுக சிறிதுகாலம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது என்றாலும் பொதுவாக பாஜகவுடன் கொள்கைரீதியில் ஒட்டுறவு இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்குச் சுத்தமாக ஆதரவு இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் மோதிமீது நிறையத் தமிழர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பல கருத்துக் கணிப்புகள் காண்பிக்கின்றன. இதனால் பாஜகவால் ஒரு சீட்டுகூடப் பெற முடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கான கட்டமைப்பு இன்று பாஜகவுக்கு இல்லை.

கடைசியாக இடதுசாரி லிபரல் கருத்தியல் கொண்டவர்கள். இவர்கள் பாஜகவை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணம் பாஜக ஒரு மதவாதக் கட்சி என்பதே. அதற்கு பாபர் மசூதி, குஜராத் கலவரம் ஆகியவை உதாரணமாகக் காண்பிக்கப்படுகின்றன. எனவேதான் அத்வானியும் மோதியும் வில்லன்கள்.
(இப்போது மோதி பெரிய வில்லன். அத்வானி கொஞ்சம் தேவலாம்.)

ஆக, இந்துத்துவத்தை வெறுத்து செகுலரிசத்தை முன்வைக்கும் இடதுசாரி லிபரல்கள், செகுலர் கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே தமக்கு நன்மை என்று நினைக்கும் சிறுபான்மை மதக் கட்சிகள், இந்துத்துவம் என்பது உயர் சாதித்துவம் என்று நினைக்கும் தலித்துகள், இந்து மதம் என்பதே புரட்டு, எனவே இந்துத்துவ பாஜக எதிர்க்கப்படவேண்டியது என்று கருதும் திராவிடவாதிகள். இப்படி இவர்கள் எல்லோரும் எதிர்க்கும்போது பாஜகவை நான் ஏன் ஆதரிக்கவேண்டும்? அதுவும் முக்கியமாக மோதிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவேண்டும்?

என் காரணங்கள் தெளிவானவை. நான் என்னை மதச்சார்பற்றவன் என்றே நினைத்துக்கொள்கிறேன். கடவுள் நம்பிக்கை அற்றவன். பாஜக அரசியல்வாதிகளின் விசித்திரமான பல கருத்துகள் எனக்குக் குமட்டலை ஏற்படுத்துபவை. சமீபத்தில் ஒரு மகானுபாவர் உதிர்த்த கருத்துகள் (“கல்யாணம் ஆவதற்குமுன்பு பெண்கள் ஜீன்ஸ் போட்டுக்கொள்ளக்கூடாது. மொபைல் போன் வைத்துக்கொள்ளக்கூடாது.”) போன்று பெரும்பாலும் பிற்போக்கான கருத்துகள் பலவற்றை பாஜகவினரிடம் நான் பார்க்கிறேன்.
மும்பையில், உள்ளாடைகளைப் போர்த்தும் நிர்வாண பொம்மைகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என்பதை முன்மொழிந்த ஜோக்கர்கள், அல்லது வேலண்டைன் டே கொண்டாடக்கூடாது, பெண்கள் ஆண்களுடன் பாருக்குச் சென்று குடிக்கக்கூடாது போன்ற முட்டாள்தனமான கருத்துகளை முன்வைப்பவர்கள் இக்கட்சியில் அல்லது கூட்டணியில் உள்ளனர். அடிப்படைவாதத் தூய்மைவாத உணர்வு என்பது மிக அபாயமானது என்பது என் கருத்து. ஆர்.எஸ்.எஸ்மீது எனக்கு மிகுந்த சந்தேக உணர்வு உண்டு.
வி.எச்.பி போன்ற அமைப்புகள்மீது கடும் வெறுப்பு உண்டு.

என் கருத்துகள் பொருளாதாரத் தளத்தில் வலதுசாரிப் பார்வை கொண்டவை. நாட்டின் பாதுகாப்பு, தேசத்தின் தன்மானம், தேசத்தின் கௌரவம் ஆகியவையும் எனக்கு முக்கியம். ஆனால் சமூகத் தளத்தில் அதிகபட்ச தனிநபர் சுதந்தரம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கலாசாரப் போலீஸ்களைக் கடுமையாக வெறுக்கிறேன். என் பார்வையில் என் கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகும் அரசியல் கட்சி ஏதும் இல்லை. எனவே நான் சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன்.
சமூகத் தளம் முக்கியமா, பொருளாதாரத் தளம் முக்கியமா என்று சிந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

காங்கிரஸின் பொருளாதாரப் பார்வை எனக்கு ஏற்புடையதாக இருந்து (நரசிம்ம ராவ்-மன்மோகன் சிங்), அதன் உட்கட்சி ஜனநாயகம் சிறப்பானதாக இருந்து, ஊழல் குறைவாக (அல்லது இல்லாததாக) இருந்தால் நான் கட்டாயம் அக்கட்சியையே ஆதரிப்பவனாக இருந்திருப்பேன். ஆனால் அப்படிப்பட்ட நிலை இன்று இல்லை. என்முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன என்று பார்க்கும்போது, மோதி தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கை அளிக்கிறது. கவனியுங்கள், பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று நான் சொல்லவில்லை; மோதியின் தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று சொல்கிறேன். வலுவான தொழில் வளர்ச்சி, வலிமையான பொருளாதாரம், தொலைநோக்குள்ள உள்கட்டமைப்பு, அழுத்தங்கள் அற்ற கல்விக்கொள்கை போன்றவற்றை முன்வைக்கும், தனிநபர் சுதந்தரத்தைக் கட்டிக்காக்கும் ஓர் அமைப்பாக, அதே நேரம் உலக அரங்கில் இந்தியாவுக்குச் சிறப்பான ஓரிடத்தைப் பெற்றுத்தரும் ஓர் அரசை மோதியால் அமைக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன். இந்த அமைப்பின்கீழ் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். கலாசார போலீஸ்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவர் என்று கருதுகிறேன்.
அப்போதும்கூட தினம் கருத்து முத்துகளை ஆர்.எஸ்.எஸ் ஆசாமிகளும் பாஜக அரசியல்வாதிகளும் உதிர்த்துக்கொண்டிருப்பர். அது எனக்குப் பிரச்னை இல்லை. அது என் வாழ்வையோ பிற குடிமக்களுடைய வாழ்வையோ பாதிக்கக்கூடாது. அமெரிக்காவின் அதி தீவிர கிறிஸ்தவ வலதுசாரிக் கருத்துகள் எப்படி அமெரிக்கப் பொதுமக்களுடைய வாழ்க்கையை பாதிக்காதவகையில் எதிர்க்கப்படுகின்றனவோ அதைப்போல பாஜக/ஆர்.எஸ்.எஸ் அல்லது பிற அதிதீவிர அடிப்படைவாதிகளின் தூய்மைவாதக் கருத்துகள் கட்டுக்குள் வைத்திருக்கப்படும் என்று நம்புகிறேன்.

இந்த என் நம்பிக்கை ஓர் இந்துவாக, ஒரு பிராமணனாக நான் பிறந்திருப்பதால்தான் எனக்குச் சாத்தியமாகியிருக்கிறது என்று ஒருவர் கருதக்கூடும். அவரை நான் குற்றம் சொல்ல முடியாது. ஒரு முஸ்லிமாக, ஒரு தலித்தாக மோதியின் ஆட்சியிடமிருந்து என்னதான் பெற்றுவிட முடியும் என்பதை அவரவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு தலித்தோ, ஒரு முஸ்லிமோ மோதியிடமிருந்து மோசமான ஒரு எதிர்காலத்தை மட்டுமே பெறுவார்கள் என்ற கருத்து தவறானது என்பது மட்டும் எனக்கு உள்ளுணர்வில் தோன்றுகிறது. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு தலித்துக்கும் சமமாகவே கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்.

அந்த நம்பிக்கை உள்ளவரையிலும் நான் மோதியை ஆதரிப்பேன்.

வாசகர்கள் கேள்வி கேட்கலாம், பத்ரி பதில் சொல்லுவார் என்று நினைக்கிறேன் :-)

Read More...

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை- 14

குழந்தைகளின் Multiple intelligences இல் linguistic intelligence பற்றி பார்த்தோம்.
இனி Logical / mathematical intelligence பற்றி …
சர்க்கஸ் கம்பெனியில் கயிற்றின் மேல் நடந்து வித்தை காட்டும் அந்த வித்தைக்காரரின் ,பள்ளிக்கே சென்று பயிலாத ஆறு வயது மகள்- மைசூர் பல்கலைக் கழகத்தில் தன் கால்குலேடிவ் திறனையும், மனப்பாடத் திறத்தையும் வெளிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியப் பட வைத்தார்.. தனது மேதமேடிக்ஸ் இண்டலிஜன்ஸின் உச்சத் திறத்தால், தனது எட்டாவது வயதில் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் இது போன்ற இன்னொரு பெர்ஃபார்மென்ஸ் கொடுத்து இந்த நாட்டையே வியப்புக்குள்ளாக்கினார்.
அந்தக் குழந்தை வேறு யாருமல்ல- மனிதக் கம்ப்யூட்டர் என்று எல்லோராலும் புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவிதான்.
இந்த இண்டலிஜென்சை நன்கு கைவரப் பெற்றவர்கள்,ஒரு விஷயத்தை அலசி ஆராயும் ஆற்றல் பெற்றவராகவும்,கணிதத் துறை சம்பந்தமான சிக்கலான புதிர்களுக்குத் தீர்வை காணக் கூடியவராகவும், தாங்கள் காணும் விஷய்ங்களில் ஒரு அமைப்பைக் (pattern) காண முடிகிறவர்களாகவும், தொடர்பில்லாத பல சின்னச்சின்ன விஷயங்களில் இருக்கும் தொடர்பைக் காண முடிகிறவர்களாகவும்,பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணக் கூடியவர்களாகவும் இருப்பர்.


லாஜிக்கல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்கும் சில புகழ்பெற்ற மனிதர்கள்:
• ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (விஞ்ஞானி)
• அமர்தியா சென் (பொருளாதார நிபுணர்)
• மார்க் ஜீகர்பர்க் (ப்ரொகிராமர்- ஃபேஸ்புக்கை நிறுவியவர்)
• ராமானுஜன் (கணித மேதை)
• விஸ்வநாதன் ஆனந்த் (செஸ் சாம்பியன்).
லாஜிக்கல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்கும் குழந்தைகள் பின்னாளில் கீழ்க்கண்ட பணித்துறைகளைத் தேர்வு செய்யலாம்.
• சிஸ்டம் அனலிஸ்ட்
• சாஃப்ட்வேர் ப்ரொக்ராமர்
• அக்கவுண்டண்ட்
• கணிதத் துறை ஆசிரியர்
• செஸ் விளையாட்டு நிபுணர்
• பொருளியல் வல்லுநர்
• ஃபாரன்ஸிக் விஞ்ஞானி
• டிடெக்டிவ்
• வக்கீல்
லாஜிக்கல் ஸ்மார்ட் குழந்தைகள், எண்ணுவதில், புதிர் விடுவிப்பதில், கம்ப்யூட்டர் செயல்பாடுகளில், பரிசோதனை முயற்சிகளில் தங்களை குஷியாக ஈடுபடுத்திக் கொள்வர்.இயல்பாகவே இவர்களுக்கு, வகைப் படுத்துவது, அப்ஸ்ட்ராக்ட் விஷய்ங்களில் இருக்கும் ஒழுங்கமைப்பையும், அவைகளிடத்தே இருக்கும் தொடர்பையும் லாஜிக்கலாகப் பார்ப்பது பிடித்தமான விஷயம்.
பெரும்பாலான லாஜிக்கல் குழந்தைகள் இசையிலும் சிறந்து விளங்கும்.இசையைப் பயில்வதோ, பயிற்றுவிப்பதோ, கணிதத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்று முன்பே பார்த்தோம்.
லாஜிக்கல் / மேத்தமேட்டிக்கல் இண்டலிஜென்ஸைக் கற்றுக் கொடுப்பது எப்படி?
உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு, கீழ்க்கண்ட பயிற்சிகளைத் தருவதன் மூலம் அவர்களை லாஜிக்கல் இண்டலிஜென்ஸில் பட்டை தீட்டலாம்.
• இன்றைக்கு எத்தனை கதை சொன்னேன் என்று கேட்டு பதில் பெறுவது, பலவகையான சிறு சிறு பொம்மைகளை ஒன்றாகக் கலந்து, அவைகளை போக்குவரத்து, காய்கறி, பழங்கள், விலங்குகள் வகை என்று வகைப் படுத்தச் சொல்வது
• பல்வேறு வகையான மரத்தின் இலைகளைக் கொடுத்து அவைகளை ஒன்று போல இருப்பவைகளை வகைப்படுத்தச் சொல்வது
• கூட்டல், கழித்தல் போன்ற கணித முறைகளை பொம்மைகள், காய்கறிகளைக் கொண்டு சொல்லித் தருவது
• காலையில் எழுவது முதல் இரவு உறக்கம் வரை உங்கள் குழந்தை என்னென்ன செய்கிறது என்று அட்டவணையிடச் சொல்வது

சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு:
• க்ராஸ்வேர்டு பஸில்கள் கொடுத்துப் போடச் சொல்வது
• ஒரு கதையின் முடிவை யூகப் படுத்தச் சொல்வது
• ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கான அடுக்கடுக்கான செயல்பாடுகள் என்னென்ன ?
• குழந்தை நேர்கொள்ளும் ஏதேனும் ஒரு பிரச்சனையைத் தீர்க்க என்ன விதமான இயந்திரத்தைக் கண்டு பிடிக்க வேண்டும்? அது எப்படி தீர்வு தருகிறது என்று கேட்பது
• ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, அதற்க ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பேசக் கற்றுக் கொடுப்பது
• ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எடுத்துக் கொண்டு, அதில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளை வரிசைப் படுத்திக் கூறச் சொல்வது உம்: இந்திய சுதந்திரப் போராட்டம்
Spatial / Visual/ Graphical Intelligence:
Picture Smart என்றழைக்கப்படும் இந்த இண்டலிஜென்ஸ், பொருள்களை/ விஷயங்களை துல்லியமாக மூளையில் உள்வாங்கி கிரகித்து, அவற்றை ப்ராசஸ் செய்து நிஜமான படைப்புகளாக மாற்றும் திறனென்று சொல்லலாம். பொருள்கள் ஒன்றுக்கொன்று எந்த வகையில் தொடர்புள்ளவை என்று அறியும் அறிவு இது.
கிராஃபிக் விஷூவல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்குபவர்கள் டிசைன் செய்தல், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற செயல்களில் ஆர்வமாக இருப்பர்.
படங்களாக விரியும் அவர்களது சிந்தனைகளை சரியாக வெளிப்படுத்துவதில் திறனுள்ளவர்களாக இருப்பர்.
தமது வலது பக்க மூளையின் அபரிமிதமான ஆற்றலால் நல்ல படைப்பாளிகளாகத் திகழ்வர். புகழ்பெற்ற விஞ்ஞானிகளான டார்வின் தனது பரிணாம விதியை ஒரு மரத்திற்கு ஒப்பாக்க்கி, ஒவ்வொரு இனத்தையும் அதன் கிளைகளாகச் சொல்லியதும், ஃப்ராய்டு, மனித ஆழ்மனதை, மறைந்திருக்கும் ஐஸ்பெர்க்கிற்கு ஒப்புமை இட்டதும், டால்டன், அணுவை , சிறிய சோலார் சிஸ்டம் என்று சொன்னதும் அவர்களின் விஷீவல் இண்டலிஜென்ஸின் வெளிப்பாடுகளே.
மாலுமிகள், சிற்பிகள்,அறுவை சிகிச்சை நிபுணர்கள், எஞ்சினியர்கள், ஓவியம் தீட்டுபவர்கள் கிராஃபிக் டிசைனர்கள்,இந்த விஷீவல் / ஸ்பேசியல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்குகின்றனர்.
மோனாலிசா ஓவியத்தை வரைந்த லியனார்டோ டாவின்சி, கலீலியோ,ஸ்டீவன்,பிக்காசோ, ஸ்பீல்பர்க் போன்றவர்கள் விஷீவல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்கியவர்கள்
விஷீவல் / ஸ்பேஷியல் இண்டலிஜென்ஸை வளர்க்க உதவும் பயிற்சிகள்:
உங்கள் குழந்தைகளின் வயதிற்கேற்ப இவைகளில் சிலவற்றைத் தேர்வு செய்யலாம்.
• ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு வண்ணத்தில் எழுதிக் காட்டுதல்
• படங்களைக் கொண்டே கதை சொல்லுதல்
• ஒரு வார்த்தையை, அது குறிக்கும் அர்த்தத்தைப் போலவே வரைதல். உம்: Snake என்பதை பாம்பு வடிவில் எழுதுதல்.
• ஒரு செய்தித்தாள் அல்லது மேகஸின்களில் இருந்து எழுத்துக்களை வெட்டி ஒட்டச் சொல்லி வார்த்தைகளை உருவாக்கச் சொல்லுதல்
• டிரஸர் ஹண்ட் வைத்து, அதற்கு விடையைச் சொல்லி, உங்கள் குழந்தையை அதை அடையும் மேப்பை வரையச் சொல்லுதல்
• பல்வேறு விதமான ஓவியங்களைக் காட்டி அவைகளில் இருந்து அவர்கள் புரிவதைக் கேட்பது.
• ஒரு பொருளைப் பார்த்து படத்தை வெவ்வேறு கோணங்களில் வரையச் சொல்வது, மனதிலிருக்கும் ஒரு படத்தை வரையச் சொல்வது
ஆர்க்கிடெக்ட், ஆர்டிஸ்டு, எஞ்சினியர் போட்டோகிராஃபர், இண்டீரியர் டிசைனர், ஃபேஷன் டிசைனர் போன்ற துறைகளை இவர்கள் பின்னாளில் தேர்வு செய்யலாம்.
டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in

போன வாரம் நீயா நானாவில் பைக் ஓட்டும் பெண்கள் விதவிதமாக எப்படி பைக்கு ஏற்றார் போல டிரஸ் செய்துக்கொள்ளவது என்று பேசினார்கள். இதை எல்லாம் எங்கே கற்றுக்கொள்கிறார்கள் ?

Read More...

தந்தி செய்திகள்

செய்தி 1 - தகவல் பெறும் உரிமை சட்டம்

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

நில பேர ஊழல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்றதாக ‘ஆம் ஆத்மி‘ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, நுதன் தாக்குர் என்ற தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் ரிட்மனு தாக்கல் செய்தார்.

அதற்கு பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை, வதந்தி அடிப்படையிலானவை‘ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், ‘இந்த மனு, பத்திரிகை செய்திகள் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை உண்மையாக கருத முடியாது‘ என்று கூறினார். இதையடுத்து, நுதன் தாக்குரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தகவல் கோரி மனு

இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை தனக்கு தருமாறு நுதன் தாக்குர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார்.

அம்மனு, மத்திய தகவல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால், ஆவணங்களை தர முடியாது‘ என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

அதற்கு நுதன் தாக்குர், ‘ஆவணங்களை தரக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டால்தான், அவற்றை முடக்கி வைக்க முடியும்‘ என்று வாதிட்டார்.

ரகசியம்

இதையடுத்து, பிரதமர் அலுவலகம் மற்றொரு வாதத்தை முன்வைத்தது.

‘இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு விலக்கு அளித்திருப்பதால், இந்த ஆவணங்களை பகிர்ந்து கொள்ள முடியாது‘ என்று கூறி, ஆவணங்களை அளிக்க மறுத்து விட்டது.


செய்தி 2: தந்தியில் இனி தகவல் அனுப்ப முடியாது !

தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இரண்டு செய்திக்கும் உள்ள தொடர்பு - தகவல் !

Read More...

Wednesday, June 12, 2013

பாஜகவின் கூட்டாளிகள் - பத்ரி

இட்லிவடையில் நான் நேற்று எழுதிய பதிவு

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலைக் குறிவைத்து பாஜக நகரத்தொடங்கிவிட்டது. காங்கிரஸ் இதைப்பற்றி அவ்வளவு கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் பாஜகவுக்கு உண்மையிலேயே அவசரம். அதனை அவர்கள் பல வாரங்களாக உணராமல் இருந்தார்கள். அதன்பின் மூன்று முக்கியமான விஷயங்கள் நடந்தேறியுள்ளன.

(1) நிதின் கட்காரி கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். ராஜ்நாத் சிங் அந்த இடத்துக்கு வந்தார்.
(2) ஒருவர்பின் ஒருவராக நரேந்திர மோதிதான் கட்சியின் தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லச் சரியான நபர் என்று முடிவெடுத்தனர். கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் பதவி அவருக்குத் தரப்பட்டது. தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக இவர் ஆகியுள்ளார்.
(3) ராஜினாமா என்று அழிச்சாட்டியம் பண்ணிய கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அடக்கிவைக்கப்பட்டுள்ளார்.



மோதி முதலில் பாஜக உட்கட்சிப் பிரச்னைகளைச் சமாளிக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள் பல நோக்கர்கள். உட்கட்சி விஷயம் பெரும்பாலும் முடிவாகிவிட்டது. அடுத்த சிக்கல் தேசிய ஜனநாயக முன்னணி என்ற நாமகரணம் சூட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டையைப் பற்றியது.

பாஜகவின் இன்றைய கூட்டாளிகள் யார் யார்?
பிகாரின் நிதிஷ் குமார், அவருடைய ஐக்கிய ஜனதா தளம்.
மகாராஷ்டிரத்தின் சிவ சேனை, இப்போது பால் டாக்ரேயின் மகன் உத்தவ் டாக்ரே கட்டுப்பாட்டில்.
பஞ்சாபின் ஷிரோமனி அகாலி தளம், பிரகாஷ் சிங் பாதல் தலைமையில்
இதுதவிர இங்கே ஒன்று, அங்கே ஒன்று என்று உருப்படியில்லாத கட்சிகள்.
முதல் மூவரிடமும் சேர்ந்து 35 எம்.பிக்கள் இருக்கின்றனர். பிற கூட்டாளிகள் சேர்ந்து 5 எம்.பிக்கள்.

இதுதவிர, பாஜக ஒரு மதவெறிக் கட்சி என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு சேராமல், அதே சமயம் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையிலும் இருக்கும் சில கட்சிகள் உள்ளன. சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவை. இதுதவிர, ஜெயலலிதாவின் அஇஅதிமுகவும் நேரடியாக தேசிய ஜனநாயக முன்னணியில் இல்லை. தெலுகு தேசமும் பிஜு ஜனதா தளமும் காங்கிரஸ் கூட்டணியில் ஒருபோதும் இருக்காது. ஆனால் அதே நேரம் பாஜகவை நேரடியாக ஆதரித்தால் முஸ்லிம் வாக்குகள் போய்விடுமோ என்ற தேவையற்ற பயமும் உண்டு. எனவே பாஜகவால் இவர்களை நம்ப முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் ஆதரவு தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு இருக்கும். அதேபோல உத்தரப் பிரதேசத்தின் சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜவாதிக் கட்சியும் தேர்தல் நேரத்தில் பாஜகவையும் ஆதரிக்க மாட்டார்கள்; காங்கிரஸையும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் தேர்தலுக்குப்பின், இப்போதைப்போல் காங்கிரஸுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவார்கள். பாஜகவுக்கு அதுவும் தர மாட்டார்கள்.

சரி, இருக்கும் கூட்டாளிகளைப் பார்ப்போம் என்றால், ஐக்கிய ஜனதா தளம் இன்றோ நாளையோ கூட்டணியிலிருந்து வெளியேறிவிடும் என்று தெரிகிறது. நிதிஷ் குமாருக்கு மோதியைப் பிடிக்கவில்லை. அதற்கு பாஜக ஒன்றும் செய்ய முடியாது. நிதிஷ் குமார் வெளியேறட்டும் என்று விட்டுவிடவேண்டியதுதான். பாஜக ஆட்சியிலிருந்து விலகினாலும் நிதிஷ் குமாரால் ஒரு மைனாரிட்டி ஆட்சியை பிகாரில் தரமுடியும். அங்கே உள்ள மொத்த இடங்கள் 243. ஐக்கிய ஜனதா தளத்தின் கையில் இருக்கும் இடங்கள் 115. பாஜக 91. ஐக்கிய ஜனதா தளத்தின் தேவை 122. எனவே மேற்கொண்டு தேவைப்படும் 7 இடங்களை காங்கிரஸ் (4), கம்யூனிஸ்ட் (1), மீதம் சுயேச்சைகள் என்று ஒப்பேற்றிவிடலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பிகாரில் பாஜகவின் வாய்ப்புகள் குறையும்.

மகாராஷ்டிரத்தில் சிவ சேனை, பால் டாக்ரே மறைவுக்குப்பின் வலு குறைந்துபோயுள்ளது. உத்தவ் - ராஜ் டாக்ரே குடும்பச் சண்டையும் காரணம். மகாராஷ்டிரத்தில் பாஜக கட்சி வளர்ச்சிக்கென்று ஒன்றும் பெரிதாகச் செய்யவும் இல்லை.

பஞ்சாப் கூட்டாளி தேவலாம். ஏதோ மோதியின் தேர்வைப் பெரிய பிரச்னையாக ஆக்கவில்லை என்பதால். ஆனால் பஞ்சாபில் உள்ள இடங்கள் மிகவும் குறைவு.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காங்கிரஸ் தன் ஆட்சியைத் தக்கவைக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. ஆனால் மாற்றத்தைக் கொண்டுவர நரேந்திர மோதி மிகக் கடுமையாக உழைக்கவேண்டும். சொந்தமாகவே 200-210 இடங்கள் வருமாறு வேலை பார்க்கவேண்டும். இது மிக மிகக் கடினமான வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மார்ஜினல் தொகுதிகள் அனைத்தையும் பாஜக வசம் சாய்க்கவேண்டும். அதற்கு இன்றிலிருந்தே ‘தீயாக’ வேலை செய்யவேண்டும்.

நரேந்திர மோதி இதனை எப்படிச் செய்யப்போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்கள் முக்கியமாக அமையும். இங்குதான் பாஜகவுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர, சில போனஸ் மாநிலங்களாக ஆந்திரம், ஒரிஸா, மேற்கு வங்கம் ஆகியவை இருக்கலாம். 3-4 இடங்கள் இந்த ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கிடைத்தால் ஒரு பத்து தேறலாம். நிதிஷ் குமாரை எப்படியும் இழக்கப்போவதால் பிகாரில் பின்னடைவு ஏற்படும். ஆனால் மோதியை முன்னிறுத்தி அதிகபட்சமாக எவ்வளவு இடங்களை அங்கே கைப்பற்ற முடியும் என்பதைப் பார்க்கவேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நான் கேள்விப்படுவதுவரை பாஜகவின் கட்டமைப்பு மிக வலுவற்றதாக உள்ளதாம். எப்படி அதனைக் கொண்டு அந்த மாநிலத்தில் பெரும் மாற்றத்தை மோதியால் ஏற்படுத்த முடியும் என்பதையும் பார்க்கவேண்டும்.

நன்றி: பத்ரி
http://www.badriseshadri.in/2013/06/blog-post_12.html

சாதா குழந்தை 2 சூப்பர் குழந்தை நாளை வரும்... இப்போதைக்கு குழந்தை அத்வானி தான் !

Read More...

Tuesday, June 11, 2013

செய்து காட்டுவார் மோதி - பத்ரி



மோதி - அத்வானி மோதல் குறித்து பத்ரி எழுதியுள்ள கட்டுரை

நேற்று தந்தி டிவி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் கலந்துகொண்ட பாஜக நண்பர், அத்வானி ராஜினாமாவை எப்படிக் கையாள்வது என்பதில் சற்று சஞ்சலம் கொண்டிருந்தார்.
அதனால்தான் விரிசல், மோதல் போன்ற வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு, அத்வானிக்கு மனத்தில் ஏதோ சஞ்சலம்; ஆனால் அவை ஓரிரு நாள்களில் சரியாகிவிடும் என்று பதில் சொன்னார்.

அத்வானி இப்படி திடுதிப்பென்று ராஜினாமா செய்துவிடுவார் என்று பாஜக உண்மையில் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லவேண்டும். கட்டுக்கோப்பான கட்சி, சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி என்பதற்கு மாற்று அந்தக் கட்சியில் பல இடங்களில் உள்ளன. எனவே அதைப் பற்றி நாம் அதிகம் விவாதிக்கவேண்டியதில்லை.

கோவாவில், பாஜக பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோதி தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு நிகழ்வு. மோதியை எனக்குப் பிடிக்கும் என்பதனால் அல்ல நான் சொல்வது. இந்தியாவின் முதன்மைக் கட்சி ஒன்றில் உள்கட்சி ஜனநாயகம் மிகத் தெளிவாக நடைமுறைக்கு வந்த ஒரு நிகழ்வு இது. கிட்டத்தட்ட அமெரிக்க பிரைமரி மாதிரி.
இதைப்போன்ற ஒரு நிகழ்வு நடக்கும்போது விரும்பத்தகாதமுறையில் அத்வானி நடந்துகொண்டதுதான் மன்னிக்க முடியாத ஒன்று.



ஏன் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பார்ப்போம்.

இந்தியாவைப் பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் மிகப் பூர்விகமான ஒன்று. பொதுவாகப் பல நேரங்களிலும் அதன் தலைவராக இருப்பவர்களே நாட்டின் பிரதமராகவும் இருந்திருக்கிறார்கள். கட்சிமீதான அதிகாரம், ஆட்சிமீதான அதிகாரம் இரண்டும் இவர்கள் கையில் குவிந்திருந்தது. சில சமயங்களில் இருவரும் வெவ்வேறு ஆட்களாக இருந்திருப்பார்கள். ஆனால் அப்போது இரண்டுவிதமான நிகழ்வுகள் நடந்தேறியிருக்கும். ஒருவர் வலுவானவராக இருப்பார், மற்றவரை அழுத்தி, வெறும் கைப்பாவையாக வைத்திருப்பார். அல்லது இருவருக்கும் இடையில் கடும் மோதல் வெடிக்கும், விளைவாகக் கட்சி பிளவாகும்.

நேருவுக்கு ஆரம்பத்தில் ராஜேந்திர பிரசாத்திடமிருந்தும் படேலிடமிருந்தும் எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் நாளடைவில் அந்த எதிர்ப்புகளையெல்லாம் நேரு புறந்தள்ளிவிட்டார். படேல் வெகு காலம் உயிருடன் இல்லை. பிரசாத் டம்மியாக்கப்பட்டார். ராஜாஜிக்குக் கட்சியின் அடிமட்டத்தில் எதிர்ப்பு இருந்தது. முக்கியமாக சுதந்தரப் போராட்ட காலகட்டத்தில் காங்கிரஸின் அதிகாரபூர்வக் கருத்துகளுக்கு எதிரானதாக அவருடைய நிலைப்பாடு இருந்தது என்று காங்கிரஸ் அடிப்படைவாதிகள் பலரும் கருதினர். விளைவாக 1950-களிலிருந்து அவர் இறக்கும் வரையில் காங்கிரஸ் கட்சி, இந்திய ஆட்சி இரண்டும் நேரு கையில் இருந்தது. இந்த அதிகாரத்தை அவர் அடிம்ட்டத்திலிருந்து பெற்றிருந்தாரா என்றால் இல்லை. கட்சியை உருவாக்கி, பிரம்மாண்டமான ஓர் அமைப்பாக மாற்றிய பெருமை காந்திக்கு மட்டுமே. அவருடைய சமகாலத்தவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தாரா நேரு என்றால், கட்டாயமாகப் பெற்றிருந்தார்.
ஆனால் அதே நேரம், பட்டேல், பிரசாத், ராஜாஜி மூவருமே முக்கியமான இடங்களிலில் நேருவிடமிருந்து விலகி, அவரை மறுக்கவும் செய்தனர். ஆனால் காந்தியின் கடைக்கண் பார்வை நேருவிடமேதான் இருந்தது.

நேருவின் மறைவுக்குப்பின் சாஸ்திரி பிரதமர் ஆனார். ஆனால் கட்சியின் முழுமையான கட்டுப்பாடு அவர் கைக்கு வரவில்லை. ஆனால் சாஸ்திரியை விடப் பொருத்தமான ஆள் நாட்டின் தலைமைக்கு இல்லை என்ற கருத்து பொதுவாக அனைவருக்கும் இருந்தது. மொரார்ஜி வேறுமாதிரி நினைத்திருந்திருக்கலாம். ஏன் காமராஜேகூட அந்தக் கட்டத்தில் பிரதமராக ஆகியிருக்கலாம்.
ஆனால் சாஸ்திரி கூடாது என்று யாரும் நினைக்கவில்லை. காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் வலுவாக ஆரம்பித்தது இந்தக் கட்டத்தில்தான். சாஸ்திரியின் துரதிர்ஷ்டவசமான மரணத்துக்குப்பின் இந்திரா காந்தியை ஆட்சித் தலைமையில் கொண்டுவந்து நிறுத்தியது சிண்டிகேட்தான்.
அங்கிருந்து கட்சி/ஆட்சி தலைமை என்பது படுபாதாளத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

தட்டுத் தடுமாறி ஆட்சியைப் புரிந்துகொள்ள ஆரம்பித்த இந்திரா, கொஞ்சம் கொஞ்சமாகக் குடியாட்சி மாண்புகளைச் சிதைத்து, சிண்டிகேட்டைப் பலி வாங்கி, கட்சி என்பதைப் புடைவைத் தலைப்பாக்கி இடுப்பில் செருகிக்கொண்டார். அதன்பின் காங்கிரஸில் இடையில் சீதாராம் கேசரி - நரசிம்ம ராவ் என்ற இருவர் 1990-களில்தான் வர முடிந்தது. அவர்களுக்கும் கட்சியின் அடிமட்டத்தில் எந்தச் செல்வாக்கும் கிடையாது. கிழங்கள், சீக்கிரம் செத்துத் தொலைந்துவிடும், கட்சியைப் பார்த்துக்கொள்ள இப்போதைக்கு இவர்கள் போதும் என்பதாகத்தான் அவர்கள் கொண்டுவரப்பட்டார்கள்.

இப்போது சோனியா - மன்மோகன் சிங் கூட்டணி இப்படித்தான். மன்மோகன் சிங்குக்கு grassroots என்றால் என்னவென்றே தெரியாது. சொல்லப்போனால் சோனியாவுக்கும் தெரியாது. ஏற்கெனவே பாட்டனார் சேர்த்துவைத்திருக்கும் சொத்தை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் அவர்கள். அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, கட்சிக்கென கொள்கைகள் வகுத்து, செயல்திட்டம் உருவாக்கி, மாற்றங்களைக் கொண்டுவந்து, நாட்டை வழிநடத்தத் தெளிவான வழிமுறைகளை ஏற்படுத்தி, என்று எதுவும் கிடையாது.

பாஜக வேறு மாதிரி. ஆட்சியில் இருந்த காலம் குறைவு. ஜனசங்கம் என்ற கட்சியை விட்டுவிட்டு, பாஜக என்ற வடிவில் அது உருவானபிற்பாடு ஏற்பட்டதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். பாஜகவாக அது உருவெடுத்தபோது அந்தக் கட்சியைப் பொருத்தமட்டில் வாஜ்பாயியும் அத்வானியும் சந்தேகமே இல்லாமல் அதன் உச்சபட்சத் தலைவர்கள். கட்சியை ஜெயிக்கவைக்க, சோர்ந்துகிடக்கும் தொண்டர்களைத் துள்ளிக் குதிக்கவைக்க, ஆட்சியை நடத்த என்று இவர்கள் இருவரும்தான். இருவருக்கும் இடையில் பெரிய உரசல்கள் எதுவும் கண்ணில் தென்படவில்லை. சில பிரச்னைகள் கட்டாயம் இருந்திருக்கும். பாஜக ஆட்சியைப் பிடிப்பதில் அத்வானியின் பங்கு மிக அதிகம் என்றாலும் வாஜ்பாயியால்தான் ஒரு கூட்டணியைக் கட்டிக் காக்க முடியும் என்று அத்வானியே முடிவெடுத்தார். பாஜக ஆட்சியில் இருந்த 6.5 வருட காலத்துக்குப்பின் கடந்த 9 வருடங்களாகக் காத்திருப்பிலேயே காலம் கழிந்துவிட்டது.

பாஜகவிலும் காங்கிரஸிலும் பல தலைவர்கள் இடைப்பட்ட காலத்தில் உருவாகிக்கொண்டே இருந்தனர்.
காங்கிரஸில் அவர்கள் காந்தி குடும்பத்திடம் கையேந்தி நின்று பிச்சை வாங்கவேண்டும். போட்டதை எடுத்துக்கொண்டு போய்விடவேண்டும். மீறி துள்ளிக்குதித்தால் வால் ஒட்ட நறுக்கப்படும்.
பாஜகவில் வாஜ்பாயி காலத்துக்குப்பிறகு அத்வானி ஒருவிதத்தில் தனிப்பெரும் சக்தியாக இருந்தார். ஆனால் அவருடைய பலம் குறைந்துகொண்டே வருகிறது; வயது அதிகமாகிக்கொண்டே வருகிறது என்பதை அவர் உணரத் தயாராக இல்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தலைவர்கள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள். மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தில் பாஜகவில் சில பிரகாசமான தலைவர்கள் இருந்தார்கள். மத்தியில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெயிட்லி, பிரமோத் மஹாஜன் ஆகியோரைச் சொல்லலாம். மாநிலங்களில் சில பழைய தலைகள் வந்தன, போயின. பிரமோத் மஹாஜன் சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்யாண் சிங், உமா பாரதி முதலியோர் முதல்வர்களாக இருந்து, கட்சியை விட்டு வெளியேறி, மீண்டும் கட்சிக்கே வந்தனர்.

அடுத்த தலைமுறை மாநிலரீதியிலான தலைவர்கள் என்றால், குஜராத்தின் நரேந்திர மோதி, ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், சத்தீஸ்கரின் ரமன் சிங், கோவாவின் மனோஹர் பரிக்கர், கர்நாடகத்தின் ஏடியூரப்பா ஆகியோரைச் சொல்லலாம். ஏடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டு, கட்சியை விட்டு விலகல் என்று தவறான திசையில் சென்றுவிட்டார். ஜார்க்கண்ட், உத்தராகண்ட், ஹிமாசலப் பிரதேசம் ஆட்களை விட்டுவிடுவோம். அங்கு பாஜக இந்தியாவையே திரும்பிப் பார்க்கும்படி யாரையும் உருவாக்கவில்லை. ஒன்று அவர்களிடம் வலுவான ஆட்கள் இருந்ததில்லை அல்லது வலுவான ஆட்சி இருந்ததில்லை. தில்லியில் கடந்த மூன்று முறையாகத் தோல்வி மட்டுமே.

எனவே பாஜகவை வழிநடத்த, கீழிருந்து உருவான தலைவர்கள் என்றால் அது இப்போதைக்கு சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெயிட்லி, நரேந்திர மோதி, ஷிவ்ராஜ் சிங் சௌஹான், ரமன் சிங், மனோஹர் பரிக்கர், வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் மட்டுமே. கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் தத்தம் மாநிலங்களிலேயே கட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள் இல்லை. இங்கே கட்டுப்பாடு என்றால் மற்றவர்கள் மனம் விரும்பித் தங்களை அந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அது எப்போது நடக்கும் என்றால் சம்பந்தப்பட்ட தலைவரால் தம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பைக் கொண்டுவர முடியும் என்று தொண்டர்களும் பிற தலைவர்களும் நம்பும்போதுதான்.

அருண் ஜெயிட்லி, ராஜ்யசபா ரகம். பின்னால் இருந்துகொண்டு கட்சியை வழிநடத்துவதுதான் அவருடைய ஸ்டைல். சுஷ்மா ஸ்வராஜ் நீண்ட காலமாக அரசியல் இருந்துவந்தாலும் ஹரியானா/தில்லி வட்டாரத்தில் அவர் பாஜகவுக்காகச் சாதித்தது குறைவுதான். அந்த மாநிலங்களில் பாஜக அடைந்த பின்னடைவுக்கு அவர் பெரும் பொறுப்பு ஏற்கத்தான் வேண்டும். ஆக, வயதான அத்வானியை விட்டுவிட்டுப் பார்த்தால், மீதமுள்ள நபர்களிடமிருந்துதான் கட்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

இதைத்தான் கோவா பாஜக மாநாடு செயல்படுத்தியது. மேலே நாம் சொல்லியுள்ள ஒவ்வொரு மாநில முதல்வரும் முன்னால் முதல்வரான சிந்தியாவும் ஒருமனதாக நரேந்திர மோதியை ஆதரித்தனர்.
அருண் ஜெயிட்லிக்கு மோதியிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. மனத்தாங்கல் அடைந்தது என்று பார்த்தால் இருவரை மட்டுமே சொல்லமுடியும். அத்வானி. ஸ்வராஜ். சுஷ்மா ஸ்வராஜ் அதனை வெளியே காட்டவில்லை. அத்வானி காட்டிவிட்டார்.

ஆனால் grassroots-ல் தொடங்கி, அடிமட்டத் தொண்டர்களின் மதிப்பைப் பெற்று, வலுவான போட்டியாளர்கள் இருந்தும் அவர்களிடமிருந்தே endorsements பெற்று, தன் அனைத்து peer-களின் மதிப்பையும் பெற்று, உட்கட்சித் தேர்தலில் அனைவரையும்விடத் தானே சிறந்தவன் என்பதைக் காட்டி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக மோதி உருவாகியிருப்பது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வுதானே? நேரு காந்தியால் முடி சூட்டப்பட்டார்.
சாஸ்திரி இருந்தது சொற்ப காலம். அவர் நீடித்திருந்தால் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கலாம். ஒருவேளை காங்கிரஸிலும் நல்லதொரு உட்கட்சி ஜனநாயகம் உருவாகியிருந்திருக்கலாம். இந்திரா, ஆட்டிவைப்பதற்கு எளிதான பொம்மை என்று நினைத்துக் கொண்டுவரப்பட்டார்; தான் பொம்மையல்ல என்று பின்னர் நிரூபித்தார். அத்வானி/வாஜ்பாயிக்குப் போட்டி என்பதே இருக்கவில்லை. ராஜிவையோ, சோனியாவை காலில் விழுந்து கூப்பிட்டுக்கொண்டுவந்தனர். அவர்களுக்குப் போட்டியில்லை. போட்டியை அவர்கள் விரும்பவும் இல்லை. இதோ, இப்போது, ராகுல் காந்தி கதையும் அப்படியே.

ஆனால் அப்படியல்ல மோதியின் கதை. போட்டி இருந்தது. இப்போதும் உள்ளது. போட்டியில் இருப்பவர்கள் அனைவரும் சப்பைகள் அல்லர். ஆனாலும் தங்களைவிட மோதி சிறந்தவர் என்பதை ஒப்புக்கொண்டனர், perhaps grudgingly. இதுதானே healthy போட்டி என்பது.

ஒரே ஒருவர் தவிர. அதனால்தான் அவர் அழுகுணி ஆட்டம் ஆடுகிறார் என்கிறோம். அவருடைய சாயம் வெளுத்துவிட்டது. ஊடகங்கள் சொல்லிக்காட்டுவதுபோல, அவர் கட்சியை உடைக்கப்போவதும் இல்லை, அவரிச் சாக்கிட்டு மோதியின் அதிகாரங்கள் குறைக்கப்படப்போவதும் இல்லை. Challenges will make Modi stronger. As is happening now.

மோதியின் முதல் குறிக்கோள், டிசம்பர் 2013-ல் வரவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, சத்தீஸ்கர் தேர்தல்கள். அனைத்துமே வெல்லக்கூடியவை. அதற்கடுத்து மே 2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். மிகக் கடினமான தேர்தல் இது. பாஜகவின் கூட்டாளிகள் எல்லாம் பெரும்பாலும் சப்பைகள்தான். சிவ சேனை வலு இழந்துகொண்டே வருகிறது. அகாலி தளத்தின் பலம் மிகச் சிறிய ஒரு மாநிலத்தில் மட்டுமே. பிகாரில் இருக்கும் நிதீஷ் குமார் நண்பனா, பகைவனா என்றே தெரியாது. எனவே பாஜக தன் சொந்தக் காலில் நின்றாகவேண்டும். வேறு யாரும் தேர்தலுக்குமுன் கூட்டணி சேரப் போவதில்லை. அஇஅதிமுக சேர்த்து. இவற்றையெல்லாம் தாண்டி பாஜக சொந்தமாக 200 இடங்களை நோக்கித் திட்டமிடவேண்டும். இது மிக மிகக் கடினம். இதை மோதி செய்துகாட்டினால், அவரைத் தேர்ந்தெடுத்தது சரிதான் என்று பாஜக தொடர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் அப்படி பாஜக தலைமையில் ஏற்படும் ஆட்சி லொடலொட என்றுதான் இருக்கும்.

மீண்டும் மற்றுமொரு தேர்தல் ஓரிரு ஆண்டுக்குள் வரும். அதற்குள் மகாராஷ்டிரம், ஹரியானா, ஆந்திரம் தேர்தல்கள் வரும். அங்கு பெரிய மாற்றத்தை பாஜக கொண்டுவரவேண்டியிருக்கும். பிறகு ஆட்சியைக் கலைத்துவிட்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 225 இடங்களை பாஜக வென்றுவிட்டால், பிரச்னை இல்லை.

இதைத்தான் தன்னுடைய இலக்காக வைத்து மோதி செயல்படவேண்டும்.

செய்தும் காட்டுவார்.

அத்வானி எல்லாம் ஒரு பிரச்னையே அல்ல.

ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

Read More...

Monday, June 10, 2013

அத்வானி !


Constipation(மலச்சிக்கல்) இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். கவலைப்படாதீங்க... !

Read More...

கல்விக்கு உதவி வேண்டி பணிவான வேண்டுகோள் - எ.அ.பாலா

அன்பான இவ வாசகர்களுக்கு:

தமிழ் வலையுலக நண்பர்கள் / வாசகர்கள் ஆதரவோடு, கௌசல்யா என்ற ஏழை மாணவி மருத்துவக் கல்வியை முடித்து, இன்று டாக்டர் கௌசல்யாவாக உருவாகியிருப்பது, மிக்க பெருமையான ஒரு விஷயம். விவரங்கள் என் வலைப்பதிவில் காணக் கிடைக்கும்.

http://balaji_ammu.blogspot.in/2006/09/blog-post.html
http://balaji_ammu.blogspot.in/2006/09/kausalya.html
http://balaji_ammu.blogspot.in/2010/08/565.html

அது தவிர, இன்னும் சிலபல சமூக உதவி சார் முயற்சிகளுக்கும், உங்களில் பலர் ஆதரவும், ஊக்கமும் அளித்து வந்துள்ளீர்கள். இவை அனைத்துக்கும் என் பணிவான நன்றிகள்.

சமீபத்தில், டாக்டர் கௌசல்யாவின் ஊரில் (அந்தியூர்) பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒரு ஏழை மாணவரின் தந்தையிடமிருந்து அவனது மேற்படிப்புக்கு உதவி கேட்டு ஒரு வேண்டுகோள் வந்துள்ளது. அதையும், மாணவனின் கல்விச் சான்றிதழ்களையும், உங்கள் உதவியை பணிவுடன் நாடி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.












மிகுந்த சிரமங்களுக்கு இடையில் அயராது உழைத்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்களும், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1147 மதிப்பெண்களும் அம்மாணவன் பெற்றிருக்கிறான். பொறியியல் கல்வி பயில மிக்க ஆர்வமாக இருக்கிறான். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில், 200க்கு 197.5 மதிப்பெண்கள் இருப்பதால், நல்லதொரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பிருப்பதை உணர்கிறேன்.

பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் என்னை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன் அல்லது இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டால் கூட போதுமானது. பிறகு பொருளுதவி செய்வதற்கு வேண்டிய விவரங்களை மின்மடல்வழி தருகிறேன். உங்களால் இயன்றதை அளித்து உதவுங்கள்.

balaji_ammu@yahoo.com

நன்றியுடன்
எ.அ.பாலா

Read More...

Sunday, June 09, 2013

அம்மா உணவகம்


இன்று மோடி வந்துவிட்டார் என்று செய்திக்கு பிறகு படித்த நல்ல பதிவு. மோடி ராசியாக கூட இருக்கலாம் :-)


ரொம்ப நாள் திட்டம்.. இன்றுதான் செயலுக்கு வாய்த்தது! கே.கே.நகர் அம்மா உணவகத்தைக் க்ராஸ் செய்யும்போது, கேஷ் கவுண்ட்டரில் கூட்டம் குறைவாக இருந்தது கண்ணில் பட்டதும்.. பிரேக்க்!

’சில்லறையா கொடுங்க’ என சொன்னார் உள்ளே இருந்த பெண்மணி. பத்து ரூபாய் நோட்டை தேடி எடுத்து எழுத்து நீட்டினேன்.

‘சாம்பார் சாதம், தயிர் சாதம் தான் இருக்கு.. அஞ்சும் மூணும் எட்டு ரூபா.. சில்லறையா கொடுங்க..’ என்றார்.

“இல்லையே..” என நான் தலை சொரிய.. ’அப்ப ரெண்டு சாம்பார்சாதமா வாங்கிக்கங்க’ என்றபடியே என் பதிலுக்குக் காத்திராமல் இரண்டு டோக்கன்களை எடுத்து நீட்டினார்.


“வேண்டாம்மா.. நானெல்லாம் ருசிக்கு சாப்பிடறவன், ஒண்ணு போதும். யாராச்சும் பசிக்கு சாப்பிடறவங்களுக்கு என் சார்பா இதைக் கொடுத்துடுங்க” என்றேன். இரண்டாவது டோக்கனைப் பிரித்தெடுத்து, அந்தப்பெண்மணி கையிலேயே கொடுத்தேன்.

அழகாகப் புன்னகைத்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. ஒரு ஐந்து ரூபாய் காசைத் தேடி எடுத்து என்னிடமே கொடுத்துவிட்டார்.

உள்ளே சாப்பாட்டுக்கு ஒரு வரிசை.. சேர்ந்து கொண்டேன்.

எனக்கு முன்னே நான்கைந்து பேருக்கும் முன்னே.. ஒரு அழுக்கு உடை இளைஞன் வரிசைக்கு வெளியே நின்று, வரிசையில் நின்றிருந்தவர்களிடம் ஏதோ கேட்டான். எட்டிப் பார்த்துக் காது கொடுத்தேன்.

‘இங்கதான் விஜயராகவபுரத்துல இருக்கேன்.. இப்ப காசில்ல.. ஒரு அஞ்சு ரூபா தர்றிங்களா.. நாளைக்கு தந்திடுறேன்’ என்று சன்னமான குரலில் கேட்டுக்கொண்டிருந்தான் அந்தப் பையன்.

என்னிடம் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் காசை எடுத்துக் கொடுக்கலாமே என நினைத்து, நான் பாக்கெட்டுக்குள் கை விடும் நேரத்துக்குள்.. எனக்கு முன்னே வரிசையில் நின்றிருந்த இன்னொரு இளைஞன் தன் கையில் இருந்த இரண்டு டோக்கன்களில் ஒன்றைக் கிழித்துக் கொடுத்தே விட்டான்!

கடவுளைப் பார்ப்பது போல அந்த டோக்கனைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே பின்புறம் நீண்டிருந்த வரிசையில் போய் நின்று கொண்டான் அந்த அழுக்கு உடை இளைஞன்.

டோக்கனை சாப்பாட்டுக் கவுண்ட்டரில் நீட்டினேன்.. “ஒரே ஒரு சாம்பார் சாதம்”.

சாம்பார் சாதத்தைத் தயாராகத் தட்டில் போட்டு வைத்திருந்த அந்தத் தாய் என் முகத்தை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தார். ‘ஒரே ஒரு’ என நான் உதிர்த்த வார்த்தையும், நான்கைந்து நாட்களாக ஷேவ் செய்யப்படாமல் இருந்த என் முகமும், இரண்டு மணி நேரம் ஊர்சுற்றியிருந்ததால் என் முகத்தில் தெரிந்த அலுப்பும் அவருக்கு ஏதோ சொல்லியிருக்க வேண்டும்!

என் கைக்கு வந்துவிட்ட தட்டைத் திரும்ப வாங்கி, இன்னும் ஒரு கரண்டி சாதத்தைப் போட்டார்!

மேன்மக்கள் மேன்மக்களே!!

பின்குறிப்புகள்: அந்தச் சாப்பாடே என் வயிற்றுக்குப் போதுமானதாக இருந்தது. என் பாக்கெட்டில் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் நாணயம் என்னைக் கேவலமாகப் பார்த்தபடியே இருக்கிறது. வயிறுகள் வாழ்த்தும் இந்தத் திட்டம் நிரந்தரமாகச் செயல்பட வேண்டுமே என இன்றுபூராவும் என் மனம் கவலைப்படவே செய்யும். அம்மா உணவகங்களில் ஒரு ஓரமாக உண்டியல் ஒன்றினை வைத்து, விரும்பியவர்கள் இத்திட்டத்துக்கு நிதி உதவி செய்ய வழி வகை செய்தால் நன்றாக இருக்கும்.

நன்றி: http://www.facebook.com/editorGGowtham/posts/10200990973887847


இந்த உணவகம் பற்றி எல்லாம் புதியதலைமுறை, தந்தி டிவி...போன்றவற்றில் விதாதிக்க மாட்டார்களா ?

Read More...

வாங்க மோடி !


வாழ்த்துகள்!

Read More...

தற்கொலை.. !


நண்பர்களை பார்த்திருக்கிறோம் ஆனால் காங்கிரஸ் பாஜக போன்ற நண்பர்களை பார்த்ததில்லை. மீடியா எவ்வளவு தான் இவர்களை உசுப்பேற்றினாலும் இவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு உயிர் நண்பர்களாக இருக்கிறார்கள்.

காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, ஊழல், ஊழலை மிஞ்சிய ஊழல்கள், உள்நாட்டுப் பாதுகாப்பில் குளறுபடி, பொருளாதார மந்தநிலை என தனது சாதனைகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லும் நிலையில், பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், காங்கிரஸையே ஆட்சியில் தொடர வைப்பது என்ற முடிவில் தீர்மானமாக உள்ளதாக கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் காட்டுகின்றன. வழக்கமாக தமிழக காங்கிரஸில் ஏற்படும் வேட்டி அவிழ்க்கும் சண்டை முறையை இந்த முறை பாஜகவிலுள்ள சிலரே முனைந்து செய்கின்றனர். அதற்கு தலைவர் ஜுரம் வந்த அத்வானி, உப தலைவர் காய்ச்சல் இல்லாத யஷ்வந்த் சின்ஹா, இரண்டுங்கெட்டான் தலவர் உமா பாரதி. இந்த உயர்'மட்ட' கூட்டத்தில் பிஜேபி தொண்டர்களுக்கு அத்வானியின் காய்ச்சல் பற்றி ரன்னிங் கமெண்டரி கொடுக்கிறார் ராஜ்நாத் சிங் என்ற பெரியவர்.

பாஜகவின் உயர்மட்டக் குழு கோவாவில் கூடி தேர்தலுக்கான வியூகங்களை கடந்த இரு நாட்களாக விவாதித்து வருகிறது. இதில் நரேந்திர மோதியைப் பற்றிய மிக முக்கியமான அறிவிப்பொன்று வெளியாகுமென மீடியாக்கள் அவதானித்து வந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்கள் சிறுபிள்ளைத் தனமாக காரணம் காட்டி இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. பாஜகவில் மோதியின் செல்வாக்கு உயர்வதையோ, அவரின் பதவி உயர்வதையோ விரும்பாத கூட்டணிக் கட்சிகள் வெவ்வேறு விதமான கருத்துகளைக் கூறி குழப்பங்களை அவ்வப்போது விளைவித்துக் கொண்டிருந்தாலும், பாஜகவிலிருந்தே வெளிப்படையாக அவருக்கு எதிர்ப்பு வெளிப்பட்டிருப்பது சற்றே வித்யாசமான காட்சி. ஏற்கனவே சில புகைச்சல்கள் இருந்து கொண்டிருந்தாலும், அவை தேர்தல் சமயத்தில் இவ்வளவு வெளிப்படையாகக் கிளம்புமென காங்கிரஸ் உட்பட எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை, அதுவும் மோதியின் அரசியல் வழிகாட்டி என பரவலாக அறியப்பட்ட அத்வானியிடமிருந்தும்.

ஆனால், அத்வானி என்ன மனநிலையிலிருக்கிறார், எதனால் இந்நிகழ்வைப் புறக்கணித்தார் என்பதில் குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய ஆழ்மனதிலுள்ள பிரதமர் பதவி அவா மட்டுமே மோதியின் செல்வாக்கு உயர்வதை அவர் விரும்பவில்லை என்று நம்பமுடியவில்லை. இந்நிகழ்வைப் புறக்கணித்திருக்கும் அத்தனை பேருமே, தனித் தனியாக தன்னைப் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், உமா பாரதி நீங்கலாக. இன்னொரு ஒற்றுமை, அனைவருமே மிகத் தீவிரமான ஆர்.எஸ்.எஸ் பின்புலமுடையவர்கள்! இதில், யஷ்வந்த் சின்ஹா, நான் ஏன் பிரதமராகக் கூடாது என்று ஒரு சமயத்தில் வெளிப்படையாகவே மீடியாவில் கேட்டவர். உமா பாரதி கட்சியில் ஒரு குழப்பவாதி என்ற அந்தஸ்தில் இருப்பதால், அவரின் புறக்கணிப்பு பற்றி அவ்வளவாக கவலைப்படத் தேவையில்லை. அத்வானி மட்டுமே இங்கு பிரதானமாகத் தெரிகிறார்.

அத்வானியின் உடல்நிலை சரியில்லை , நாளை கலந்து கொள்வார் என ராஜ்நாத் சிங் முதல் தினம் தெரிவித்தார், மறுதினமும் அவர் வரவில்லையாதலால், மருத்துவர்கள் அறிவுரை என்று மழுப்பிவிட்டார். விளைவு, மீடியாக்களுக்கு சரியான தீனி! நக்ஸல் பிரச்சனைகள், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் சரிவு போன்ற விஷயங்களெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஏன் ஷில்பாஷெட்டியே மண்ணை கவ்விவிட்டார்.

"அத்வானி புறக்கணிப்பு, பாஜகவில் பிளவு" என தலைப்புச் செய்தியாக்கி தானும் குளிர் காய்ந்து, காங்கிரஸாரையும் குளிர்காய வைத்துக் கொண்டிருக்கின்றனர். வேடிக்கையாக, திக்விஜய் சிங் முதற்கொண்டு தன்னை விமர்சனம் செய்யுமளவிற்கு அத்வானி தானாக ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டு கட்சியையும் தர்ம சங்கடத்திலாழ்த்திவிட்டார். இது நிச்சயமாக தேசத்திற்கு நன்மை செய்யப் போவதில்லை. தவிர, காங்கிரஸிலிருக்கும் அத்தனை பூசல்களையும், பிரதமரின் செயலற்ற தன்மை மற்றும் அவருக்கும், சோனியாவிற்குமிடையிலான கருத்து வேறுபாடுகளைப் பற்றி மூச்சேதும் விடாத கைக்கூலி மீடியாக்கள், இன்று பாஜகவில் தோன்றியுள்ள களையக் கூடிய கருத்து வேறுபாட்டை வைத்து, அதன் மூலமாக மிகப்பெரிய பிளவை ஏற்படுத்த முனைவதுதான் சோகம், இதற்கு தீனி போடுவது போன்று பாஜக செய்தித் தொடர்பாளர்களும் தத்து பித்தென்று உளறுவது இன்னமொரு பெரிய துரதிருஷ்டம்.

கடந்த சில பத்தாண்டுகளாக சேர்த்து வைத்திருந்த நன்மதிப்பத்தனையையும். என் தேசம் என் மக்கள் என்ற புத்தகத்தை தவிர கடந்த சில நாட்களில் இழந்ததைத் தவிர அத்வானி பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. இனியும் சாதிப்பாரென்ற நம்பிக்கையில்லை.

இவர்களின் புறக்கணிப்பிற்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது என்ற யூகத்திலும் பொருளிருப்பதாகத் தெரியவில்லை. மோதியும் தீவிரமான ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உடையவராக அறியப்பட்ட போதிலும், தன்னிச்சையாகச் செயலபடக் கூடியவர் என்பதால் ஆர்.எஸ்.எஸ் அவரை பிரதமராக விரும்பவில்லை என்ற கருத்து அடிபட்டாலும், தேர்தல் வெற்றிக்குப் பின்னர்தான் ஆர்.எஸ்.எஸ் இதுபோன்ற காய் நகர்த்தல்களை மேற்கொள்ளக் கூடுமேயொழிய, தேர்தலுக்கு முன்னரே, வெற்றிக்கு வேட்டு வைக்கும் விதமான குழப்ப வேலைகளை நிச்சயம் செய்யாது. தவிர, யஷ்வந்த சின்ஹா போன்றவர்கள் வெகு நிச்சயமாக மோதியின் மேலுள்ள காழ்ப்பு மற்றும் பிரதமர் பதவி மோகத்தால் இதனைச் செய்கின்றனர் என்று உறுதியாகக் கூறிவிடும் நிலையில், குழப்பமான நிலை, அத்வானியின் முடிவு பற்றி மட்டுமே!

இனி பாஜக உயர்மட்டக் குழு, இந்த தடைகளத்தனையையும் தாண்டி, மோதிக்கு ஒரு முக்கியமான பொறுப்பொன்றை அளிக்குமாயின், அது எழுந்த எதிர்ப்புகளை நாளடைவில் மழுங்கச் செய்துவிடும். இதற்கு மாறாக, மற்ற தலைவர்களை சமாதானம் செய்யும் நோக்கில், இன்னும் இழுபறி நீடித்தால், பாஜக முனைந்து தற்கொலை செய்து கொள்கிறது என்றுதான் பொருள்.

ஒரு மாநில முதல்வர் மக்களிடையே நாடு முழுவதும் மக்கள் பேச கூடிய தலைவராக உள்ளார். மோடி ஆட்சிக்கு பிரதமரானால் பேசாமல் அத்வானிக்கு குடியரசு தலைவர் பதவி தருவதாக சொல்லி பிரச்சனையை தீர்க்க வேண்டும் அது தான் இந்த இந்திய நாட்டுக்கு நல்லது !

உயர்மட்டக் குழுவை அத்வானி கடந்த 33 வருடத்தில் இதுவரை புறக்கணித்தது இல்லை என்பது கூடுதல் தகவல்.

பள்ளியில் "நான் பிரதமரானால்..." என்று கட்டுரை எழுத சொல்லுவார்கள். எழுதியவர்கள் எல்லாம் பிரதமர் ஆக வேண்டும் என்றால் முடியுமா ?

Read More...

சன்டேனா இரண்டு (9-6-13) செய்திவிமர்சனம்

இந்த வாரம்(மாவது)… எதையாவது உருப்படியாக எழுதலாம் என்று முயற்ச்சித்தில், நதிகள் இணப்பு திட்டம் பற்றிய ஒரு குட்டி ஆராய்ச்சி



செய்தி # 1



நெய்வேலியில் இருந்து கர்னாடக மாநிலத்திற்க்கு, கேரளாவிற்க்கும் மின்சாரம் செல்கிறது. ஆனால், காவேரி, முல்லைப்பெரியாறு என இரு மாநிலங்களும் நமது உரிமையை தட்டி பறித்து இருக்கின்றன. மத்திய அரசில் எந்த கட்சி இருந்தாலும், வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன. காரணம், நெய்வேலி மின்சாரம் தேசிய உடமை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், நதிகள் உற்பத்தி ஆகும் பகுதிகளை கொண்ட மாநிலங்கள். நதிகள் தங்களுக்கே சொந்தம் என்று கூறுகின்றன.



நதிகள் முதலில் தேசிய உடமை ஆக்கப் படவேண்டும். இரண்டாவதாக, நதிகள் இணைப்பு திட்டம்.

முதல் திட்டம் அரசியல் கட்சிகளின் கையில்தான் இருக்கிறது. இரண்டாவதான, நதிகள் இணைப்பு திட்டம் நமது இந்தியாவில் சாத்தியமா?

"நதிநீர் இணைப்பு திட்டத்தால், கூடுதலான விவசாய நிலங்களில் நீர்ப்பாசனம் செய்ய முடியும். ஆனால் இதில் சில பிரச்சினைகள் உள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கவலை உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், அது உயிரினங்களுக்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே, நதிநீர் இணைப்பு திட்டத்தை எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டி இருக்கிறது.

மேலும், நதிநீர் இணைப்பு திட்டம், எந்த அளவுக்கு மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பை அளிக்கும் என்று நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இருப்பினும், தற்போது இரண்டு, மூன்று நதிநீர் இணைப்பு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றில், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஓடும் கேன்- பேட்வா நதிகளை இணைக்கும் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தை சோதித்து பார்க்கப்போகிறோம்" - இவ்வாறு ஒருமுறை தெரிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

"நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமே" என்கிறார் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்.

இவர் தமிழக நதிகளை இணைத்து, அவற்றுக்கு ஒரு பொதுவான வழித்தடத்தை உருவாக்கும் ஒரு புதிய திட்டத்தை முன் மொழிந்து இருக்கிறார்.

நதிநீர் இணைப்பு சாத்தியமில்லை என்று சில அரசியல் தலைவர்களும் மந்திரி பொறுப்பில்உள்ளவர்களும் பேசுவதை இப்போதும் கேட்கிறோம். நாம் வானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை, வானவில்லையும் நேராக்கச் சொல்லவில்லை. நம் கண்ணெதிரே இருக்கக் கூடிய ஒரு விஷயத்தைச் சரி செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

"தமிழ்நாடு வாட்டர்வேஸ் பிராஜக்ட்
" பற்றிச் சொல்லியிருந்தேன். அது ஒரு மிகப் புதுமையான திட்டம். வெள்ளத்தைக் கட்டுப் படுத்துவது மட்டுமின்றி உபரிநீரைச்சேமிக்கவும் வைக்கக்கூடிய திட்டம். இரண்டு வழிகளில் நீர் செல்லக்கூடியஒன்று. மேட்டூர், சாத்தனூர், பவானி, வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை,சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு இவற்றோடு பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ்,செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற எண்ணற்ற ஏரிகள், குளங்களை இணைக்கக் கூடிய அற்புதமான திட்டம்.



தமிழ்நாட்டில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயக்கூடிய முக்கியமான நதிகளை ஒருபொதுவான வழியின் மூலம் இணைக்கக் கூடிய அத்தனை வரைத் திட்டங்களும் அதில்இருக்கின்றன. இந்தத் தண்ணீர் வழிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 300மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு ஆழமானஆராய்ச்சிக்குப் பிறகு இவை தீட்டப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குப்புரியும்.இது என்னுடைய கனவுத் திட்டம்.



இந்த தண்ணீர் வழிகளின் வழியே தமிழ்நாட்டின் அத்தனைஆறுகளும் இணைக்கப்பட்டு தமிழகத்தின் எல்லா ஆறுகளும், ஏரிகளும்,குளங்களும், கால்வாய்களும், இணைக்கப்பட்டு எல்லாவற்றிலும் ஆண்டு முழுவதும்கற்கண்டுத் தண்ணீர் தளும்பி நின்று விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும்,தொழிற்சாலைகளுக்கும் எப்போதும் தாகம் தீர தண்ணீர் கிடைக்கக் கூடிய அந்தஅற்புதக்காட்சி எப்போதும் என் கனவுகளில் வருவது உண்டு. அந்தக் கனவுமட்டும் நிறைவேறிவிட்டால் தமிழ்நாடே சொர்க்கபுரி ஆகிவிடாதா என்ன?

ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு இடத்தில் இருப்பது போல் மேம்போக்காகப் பார்க்கும் போதுநம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் தேர்ந்த வரைபடத் திட்டங்களின் முலம் இவைஎத்தனை அழகாக இணைக்கப்படக்கூடியவை என்கிற உண்மை புரியும்.

இது ஏதோ வரைபடத்தில் மட்டுமே உள்ள, நிதர்சனத்தில் சாத்தியமே இல்லாத பகல்கனவுதிட்டம் அல்ல. ஐந்து கட்டங்களில் நிறைவேற்றப்படக் கூடிய பிராக்டிகலானதிட்டம்.


முதல் கட்டத்தில் வைகையையும் மேட்டூரையும் இணைக்கும் திட்டம். இது 350 கிலோ மீட்டர் நீளமானது.இரண்டாவது கட்டம் மேட்டூரையும் பாலாறையும் இணைப்பது, இது 270 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.150 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வைகை - தாமிரபரணி இணைப்பு அடுத்த கட்டத்தில் உள்ளது.நான்காவது கட்டத்தில் 130 கிலோமீட்டர் நீள முள்ள தாமிரபரணி - பெருஞ்சாணி இணைப்பு வருகிறது.ஐந்தாவதுகட்ட மாக இந்த நதிகளை இணைப்பு மூலம் கிடைக் கக்கூடிய உபரி நீரை ஆங்காங்கே உள்ள குளம், குட்டை, ஏரிகளில் இணைக்கக்கூடிய சப்சிடியரி கால்வாய் திட்டங்கள்.



இப்படி நதிகளை இணைப்பது மூலம் தண்ணீர் அற்ற நதிகளுக்குத் தண்ணீர் கிடைப்பது மட்டுமன்றி,இதர தண்ணீர் நிலைகளுக்கு அதன் உபரித்தண்ணீரும் திறந்து விடப்படுவதால்நாடெங்கும் தண்ணீர் திரண்டு நிற்கக்கூடிய அற்புதமான நிலையை நம்மால் காணமுடியும். செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டியதைப் போன்ற மலைக்கவைக்கும் திட்டம் அல்ல இது.

பத்தே வருடங்களில் செய்து முடிக்கக் கூடிய பிராக்டிகலான திட்டம்.இதனுடைய பலா பலன்களும் திட்டவரைவில் தெளிவாகவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

முதல்கட்டமாக வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது இந்தத் திட்டம்,உபரியாக, 7.5. மில்லியன் ஏக்கர் அளவு விவசாய நிலத்துக்குப் பாசன நீரைஅளிக்கும்.

150 மெகாவாட்மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் அளவைஅதிகரிப்பதின் மூலம் மின்சார உபயோகத்தை 1350 மெகாவாட் அளவு குறைக்கும்.

10மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு அருமையான நீர்வழிப்பாதையை இந்தத் திட்டம் ஏற்படுத்தித் தரும். தண்ணீர் போக்குவரத்து, சுற்றுலாபோன்ற வற்றின் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.


சாலைப்போக்குவரத்தைக் காட்டிலும் 90 சதவீத எரிபொருள் சேமிப்பு இந்தத் தண்ணீர்வழிப் போக்கு வரத்தின் மூலமாகக் கிடைக்கும். ஐம்பது மில்லியன் பொது மற்றும் தொழிற் சாலை சார்ந்த மக்களுக்கு இந்தத் தண்ணீர் மூலம் பயன் கிடைக்கும். புதிய மின் உற்பத்திக் கான வழிகள் இந்தப் புதிய தண்ணீர் சாலைகளின் வழியே ஏற்படும்.



சிந்தித்துப்பாருங்கள். இந்தப் புதிய தண்ணீர் வழிகள் தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடாதா?



அசோகர் சாலை இருமருங்கிலும் மரங்களை நட்டார், ஏரி, குளங்களைஏற்படுத்தினார் என்று இன் றைய சரித்திரத்தில் படிக்கி றோமே, அதே போல்நாளைய வரலாற்றில், தமிழகத்தில் நதிகளை இணைத்தார்கள், அதன் மூலம் தமிழ்நாடு வளம்பெற்றது என்று எழுதப்பட வேண்டாமா? அது நம் கையில்தானேஇருக்கிறது?

என்று ஒரு கட்டுரையில் விளக்கம் தந்து, தனது நதி நீர் இணைப்பு கனவை வெளிப்படுத்தி இருக்கிறார் டாக்டர் அப்துல்கலாம்.

இரண்டாவது செய்தியில் இதன் எதிர்மறையான கருத்துக்களை பார்ப்போம்.



செய்தி # 2



"நதிநீர் இணைப்புத் திட்டம் பேரழிவு திட்டம்" என்றும், "இந்தத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து விளையும்" என்றும் ஒரு கருத்தை பதிவு செய்து இருக்கிறார் வருங்கால பிரதமர்(?) ராகுல்காந்தி.

"இயற்கைக்கு முரணாக நதிகளின் போக்கை திருப்பிவிடக் கூடாது" என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

"நதிகளின் போக்கை திரும்பிவிடக் கூடாது. அது இயற்கைக்கு முரணானது. அதனால், பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் வனப்பகுதியும் அழிந்துவிடும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

நதி நீர் ஆதாரம் இல்லாத நிலையில் மன்னர்கள் ஏராளமான ஏரிகள், குளங்களை அமைத்தனர். அவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைத்து வந்தது.

அப்போது இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால், தண்ணீரின் தேவையும் குறைவாக இருந்தது. ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் நிலம் பாழ்பட்டது. நீரின் தேவையும் அதிகரித்தது. பராமரிப்பின்றி ஏரிகளும் குளங்களும் தூர்ந்துபோனதால், விவசாயமும் அழிந்து வருகிறது.

நமது விவசாயிகள் 120 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தி வந்தனர். அவற்றில் 90 வகை நெல் ரகங்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன. இவை எல்லாமே வறட்சியைத் தாங்கும் திறன் கொண்டவை. மக்களுக்கு எதிரான வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என்று அறிவித்து இருக்கிறார் நம்மாழ்வார் அவர்கள்.

"இயற்கை வேளான்மை திட்டம் பின் நதிகள்,குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாருதல் போன்றவையே அரசு செய்யவேண்டிய, அத்தியாவசியமான திட்டங்கள்" என்கிறார் நம்மாழ்வார்.

இந்த வார சன்டேனா இரண்டு படித்தபின், நதிகள் இணைப்பு திட்டம் பற்றிய உங்கள் சிந்தனை என்ன?எப்படி இருக்கிறது?



(நன்றி, இனி, அடுத்தவாரம்)

-இன்பா

Read More...

Saturday, June 08, 2013

லீவு லெட்டர்

டிவர் வாசகரே,

எனக்கும் உடல் நிலை சரியில்லை. டாக்டர்கள் என்னை பரிசோதித்து பிளாக் எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். நாளைக்கு சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். டாக்டர்களிடம் கேட்டதற்கு நிறைய பால்'கோவா', 'சொம்பு' நிறைய பால் குடிக்க டாக்டர்கள் சொல்லியுள்ளார்கள்.

மீண்டும் சந்திக்கிறேன்,
இட்லிவடை
Yellow

Read More...

Thursday, June 06, 2013

தர்மம் !


இந்தியன் தாத்தா ஏற்படுத்திய அதே எஃபெக்டை இந்த 7 நிமிஷ படம் ஏற்படுத்திவிட்டது !

Read More...

Wednesday, June 05, 2013

மூங்கில் மூச்சு & தாயார் சன்னதி

ஒரு அறைக்குள் இருந்து கொண்டே ஊர் முழுவதையும் சுற்றிப் பார்த்தால் எப்படி இருக்கும்? ஆங்க்ரி பர்ட்ஸை விட்டுவிட்டு ஐஸ்பால், குச்சிக்கம்பு, பாண்டி, பம்பரம் எல்லாம் விளையாடிவிட்டு வந்தால் எப்படி இருக்கும்? அடிக்கிற வெயிலுக்குத் தாமிரபரணி ஆற்றில் விழுந்து குளித்தால் எப்படி இருக்கும்? எழுத்துகளிலேயே ஒரு இளையராஜா பாடலைக் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? ‘டைம் மெஷி’னில் ஏறிச்சென்று நம் பால்ய வயதுக் காலத்துக்கு மறுபடியும் செல்ல முடிந்தால் எப்படி இருக்கும்? இப்படிப் பல ‘எப்படி இருக்கும்’ங்களை உணர வைப்பவை எழுத்தாளர் சுகாவின் ‘தாயார் சன்னதி’ மற்றும் ‘மூங்கில் மூச்சு’ புத்தகங்கள்.

தாயார் சன்னதி தான் முதலில் வெளிவந்தது என்றாலும் நான் முதலில் படிக்க நேர்ந்தது என்னவோ, ஒரு கட்டுரைக்காக இட்லிவடை கையெழுத்திட்டு அன்பளித்த ‘மூங்கில் மூச்சு’ தான். அது முதல் சுவாரசியம். இரண்டாவது, பெரும்பாலும் நான் என் குடும்பத்தினரிடம் மட்டுமே பேசி மகிழும் அச்சுஅசல் ‘திருநெவேலித் தமிழி’ல் அது இருந்தது. ஒரு குழந்தையின் கையில் இருக்கும் குச்சி ஐஸைப் போல ஏக்கத்தோடும் தாக்கத்தோடும் படித்துக் கொண்டிருக்கையிலேயே புத்தகம் முடிந்து விடுகிறது. இரண்டு புத்தகங்களும் அப்படித் தான். படிக்கும் போது ரூமிலிருந்து எட்டி எட்டிப் பார்த்து “எம்மா.. இலங்கை வானொலீல ராஜேஸ்வரி சண்முகம்னு ஒருத்தங்க பேசுவாங்களோ?” “பூர்ணகலா தேட்டர் அப்பமேலருந்து இருக்கா?” “முந்திலாம் கார்த்திகைக்குச் சொக்கப்பானை எரிப்பாங்கள்லா?” “நீங்க ரோஜாவின் ராஜானு ஒரு படத்த ரொம்ப ரசிச்ச்சுப் பார்த்திருப்பேங்களே?” என ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருக்க, “இதையெல்லாம் யாரு உனக்குச் சொல்லுதா?” என்று அதிசயித்துக் கேட்ட அம்மாவிடம் அப்போதே ஒப்படைத்துவிட்டேன் அந்த இரு புத்தகங்களையும்.

“மங்கையராகப் பிறப்பதற்கே..” என எல்லாக் கட்டுரைப் போட்டிகளிலும் எழுதி வந்த என்னை “பையனா பொறந்திருந்திருக்கலாமோ?” என்று நினைக்க வைத்தது சுகாவின் எழுத்து. பெறகு என்ன.. தாமிரபரணியில் விழுந்து விழுந்து குளிப்பதற்கும், நினைத்த நேரத்தில் சைக்கிளில் ஊர் சுற்றுவதற்கும், ரசிகர் மன்றம் அமைத்துக் கொண்டு எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடினாலும் போய்ப் பார்ப்பதற்கும், டீக்கடை பென்ச்சில் அமர்ந்து அரசியல் பேசுவதற்கும், தெருவே அதிரும்படி பாடல்களை ஒலிக்கவிட்டு ரசிப்பதற்கும், அவ்வளவு ஏன்.. வீட்டு முற்றத்தில் இருக்கும் தெரணையில் (திண்ணை) உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதற்கும் (திருநெல்வேலி)பெண்கள் தகுதியற்றவர்கள் ஆச்சே. “நான் முதலமைச்சரானால்” “நான் கலெக்டரானால்” என்ற வரிசையில் “நான் ஆண்பிள்ளையாகப் பிறந்திருந்திருந்தால்...” என்று அடிக்கடி என்னைப் பொறாமையுடன் யோசிக்க வைத்துவிட்டது.

‘அசால்டா’ன எழுத்தின் மூலம் பல இடங்களில் வயிறு வலிக்கச் சிரிக்க வைப்பதும் சில இடங்களில் மூசு மூசென்று அழவைப்பதும் எப்படி என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நாகர்கோவிலின் “றத்தப் பொறியல்”, சென்னை டூ திருநெல்வேலி நண்பன் குஞ்சரமணியுடனான ரயில் பயணம், குற்றாலத்தின் தற்போதைய ‘அழகு கெட்ட’ நிலை, எட்டாவது பரீட்சையில் ஃபெயில் ஆனதால் ‘விஷம்’ குடித்த குமரன், சந்திரா அழுதது/சிரித்தது, நட்சத்திரம் பார்த்தல், ‘க்ளோ’, சீமானின் கொரங்கு வத்தல், காதல் மன்னன் மந்திரமூர்த்தி, ‘மை நேம் இஸ் கான்’ படம் பார்த்த அனுபவம் இதையெல்லாம் படித்துச் சிரிக்கவில்லை என்றால் அவன் மனிதனே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சைக்கிளில் திருச்செந்தூர் போய்வந்து பிரசாதம் கொடுத்து அடி வாங்கியது, ஜெயண்ட் வீல், இடுக்கன் களைவதாம் இவை மூன்றும் என்னை ரணகளப்படுத்திய பகுதிகள். இன்றும் பலரிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்.

உருக்கமான ‘தாயார் சன்னதி’ அத்தியாயத்தைப் படித்த கொஞ்ச நேரத்துக்கு அழுதுகொண்டே இருந்தேன். ‘இருப்பு’ மற்றும் ‘ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்’ இரண்டிலும் மரணங்களை எதிர்கொள்ளும் எதார்த்த மனப்பக்குவம் விளங்கியது. ‘குப்பம்மா ஆச்சி’ இறந்து போன சில ஆச்சிகளை எல்லாம் கண்முன் நிறுத்தியது. தேவனின் கோயில் பாடலைப் பற்றி நான் அறிந்து கொண்டது சுகாவின் எழுத்தால் தான். பொதுவாகக் காட்சிகளை மனக்கண்ணில் ஓடவிடும் இவரது எழுத்து, இசை பற்றிய பதிவுகளில் பின்னணி இசையோடு அவற்றை ஓட்டுகிறது. அப்பதிவுகளைப் புத்தகங்களில் படிப்பதை விட ஆன்லைன் பக்கங்களில் பாடல் துணுக்குகளைக் கேட்டுக் கொண்டே படிப்பது சொர்க்கம். இசையைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் கூட என்னால் அவற்றில் லயிக்க முடிந்தது.


தாயார் சன்னதி புத்தகத்தின் முகப்பில் writerpayon.com “இந்தப் புத்தகத்தைக் குழந்தைகள் படிக்க முடியாது” என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் மூடிவைத்து விடலாமா என யோசித்தேன். ‘சிரிப்பாணி’ பொங்குகிறது என வண்ணதாசன் ‘கட்டன் ரைட்டா’கச் சொல்லிய பிறகும் எப்படிப் படிக்காமல் போவது? ‘சுவாரசியம் என்று ஒன்று உண்டு இல்லையா, அதுபோல இது ‘சுகாரசியம்’ என்று சொல்லுகிறார் அவர். சுகாவின் எழுத்தில் என்ன வசியமோ, அது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.


சிலருக்குச் சில புத்தகங்களைப் பரிந்துரை செய்யலாம். ஆனால் பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் பிடித்த புத்தகங்களாக ‘தாயார் சன்னதி’ மற்றும் ‘மூங்கில் மூச்சு’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இணைய நண்பர்களே.. நீங்கள் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து உங்கள் வீட்டம்மாக்கள் / பெண்குழந்தைகளுக்குக் கட்டாயம் வாங்கிக் கொடுத்துவிடுங்கள். மிகவும் ரசிப்பார்கள் :-) மூன்றாம் தொகுப்பை எதிர்பார்த்து ஆவலுடன்..


சுபத்ரா @
subadhraspeaks.blogspot.in

மீண்டும் வருக..

Read More...

Tuesday, June 04, 2013

சாதா குழந்தை To சூப்பர் குழந்தை-13


உங்கள் குழந்தையின் ஐ.க்யூ என்ன?
மேற்கூறிய ஒற்றைக் கேள்விக்கான விடையை அறிய , நான்கு ஆப்சன்களைக் கொண்ட கேள்விகள் இருபதைக் கேட்டு, அதில் எத்தனை கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கிறதோ, அதைக் கொண்டு உங்கள் குழந்தையின் ஐ.க்யூ வைக் கணக்கிடுவது எல்லாம் பழைய பஞ்சாங்கமாகி விட்டது.
இன்டலிஜன்ஸ் எனப்படும் அறிவுத் திறத்தைப் பற்றி இரண்டு தவறான அனுமானங்கள் நிலவின.
1.பிறப்பு முதல் இறப்பு வரை நம் அறிவுத் திறனானது ஃபிக்ஸ் செய்யப் பட்ட ஒன்று.அது மாறவே மாறாது.
2.ஒரே ஒரு இண்டலிஜென்ஸ் தான் நமக்கு உள்ளது.
மேற்கூறிய இரண்டு அனுமானங்களுமே தவறென்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளன.
நம் புத்திக் கூர்மையை கற்றலின் மூலமும், பயிற்சியின் மூலமும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு பட்டை தீட்டுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ந்து கொண்டே இருக்கிறது,


Nature and Nurture எனப்படும் இரண்டு விஷயங்கள் தான் , அதாவது பாரம்பரியமாக நமக்குக் கடத்தப் படும் நமது ஜீன்களும்,( Nature) நாம் வளர்கிற சுற்றுப் புற சூழலும் (Nurture) தான் நம் அறிவுத் திறனை நிர்ணயிப்பதற்கான காரணிகள்.
Gardner என்னும் அறிவியல் அறிஞர், theory of multiple intelligences என்னும் கோட்பாட்டை முதல் முறையாக முன்வைத்தார்.

Linguistic ("word smart")

Logical-mathematical ("number/reasoning smart")

Spatial ("picture smart")

Bodily-Kinesthetic ("body smart")

Musical ("music smart")

Interpersonal ("people smart")

Intrapersonal ("self smart")

Naturalist ("nature smart")


மனித இனமானது பல்லாயிரக் கணக்கான வருடங்களாக மேற்கூறிய இந்த எட்டு வகை அறிவுத் திறன்களின் மூலமே சிந்தித்து வருகிறது என்றும் இவ்வகை இண்டலிஜென்ஸ்களை சிந்தனை உறுப்புகள் (mental organs) என்றும் கார்டனர் உருவகித்துள்ளார்;
நம் கல்வி முறையும், குழந்தை வளர்ப்பு முறையும் Linguistic மற்றும் Logical-mathematical intelligence க்கு மட்டுமே அதிகபட்ச முன்னுரிமை கொடுத்து மற்ற அறிவுத் திறன்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.<br />
Multiple intelligence என்னும் கான்செப்டைப் புரிந்து கொண்டால், நாம் நம் குழந்தைகளைப் பார்க்கும் விதமும், அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விதமும் நிச்சயமாக மாறுபடும்.<br />
எல்லாக் குழந்தைகளும் ஒரு சில இன்டலிஜென்ஸில் அடி தூள் கிளப்பும். ஒரு சிலவற்றில் மீடியமாக , இன்னும் சிலவற்றுள் மிகக் குறைவான திறனுடன் விளங்கும் இவற்றுள் எந்தெந்தத் திறன்களெல்லாம் பட்டை தீட்டப்பட சூழலும், வாய்ப்பும் கிடைக்கிறதோ, அவைகளெல்லாம் வளர்ந்தோங்கும். முறையான பயிற்சியினால் இந்த மல்டிபிள் இண்டலிஜென்ஸ் எல்லாவற்றையுமே நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க முடியும்.தொடர்ந்த கவனிப்பின் மூலம் எந்த இண்டலிஜென்ஸை நம் குழந்தை விரும்பி செய்கிறானோ (ளோ), அதையே அவர்களது கேரியராக தெரிவு செய்வதற்கு நாம் உதவி செய்யலாம். Interpersonal intelligence ல் இல் சிறந்து விளங்கும் குழந்தையானது தெரபிஸ்ட், கன்சல்டண்ட், சைக்காலஜிஸ்ட், அரசியல்வாதியாகவோ சிறந்து விளங்க முடியும். இயல்பாக தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தையே தன் பணியாகத் தேர்ந்தெடுத்தால், அதில் நம் குழந்தைகள் ஒரு இளையராஜா போல, ஒரு டெண்டுல்கரைப் போல லட்டு சாப்பிடுவதைப் போல சாதனைகளைச் செய்வர்.
மல்டிபிள் இண்டலிஜெண்ஸ் கான்செப்ட் மூலம் கற்றுக் கொடுப்பது, குழந்தையின் விருப்பத் தேர்வை முறையாக அறிந்து கற்பித்தலை சாத்தியமாக்குவதால் கற்றல் ஒரு இனிய நிகழ்வாக அமைகிறது.<br />
இனி இந்த மல்டிபிள் இண்டலிஜென்ஸ் ஒவ்வொன்றைப் பற்றியும் அதை நம் குழந்தைகளிடம் எப்படி வளர்ப்பது என்பதைப் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
Linguistic intelligence: (Word Smart)
Word Smart ஆகத் திகழும் நபர் வார்த்தைகளைத் திறம்பட உபயோகிப்பதில் வல்லவராக ( பேச்சில் என்றால் கதை சொல்பவரைப் போல, பேச்சாளரைப் போல, அரசியல்வாதியைப் போல ) (எழுத்தில் என்றால் கவிஞராக, ஸ்க்ரிப்ட் ரைட்டராக, ஜர்னலிஸ்டாக, எடிட்டராக) விளங்குவர்.<br />
Word Smart ஆகத் திகழும் குழந்தையானது, புத்தகங்களை வாசித்தல், பாடங்களை எழுதுவது மற்றும் படிப்பது, கதைகளைக் கேட்பது, வேர்டு கேம்ஸ் எனப்படும் வார்த்தை விளையாட்டுகள், ரைம்ஸ் சொல்லுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் காண்பிக்கும்.<br />
வில்லியம் ஷேக்ஸ்பியர், ஒபாமா, ஒப்ரா வின்ஃப்ரே, கண்ணதாசன், போன்றோர் Word Smart ஆளுமைகளுக்கு எடுத்துக் காட்டு.<br />
Linguistic intelligence இல் சிறந்து விளங்கும் குழந்தைகள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு துறைப் பணியை வெற்றிகரமாக செய்வர்.<br />
ஆசிரியர், அரசியல்வாதி, தொழில்முறைப் பேச்சாளர், கவிஞர்,ஜர்னலிஸ்ட், காப்பி ரைட்டர், எடிட்டர், நாவலாசிரியர், கதை சொல்லி.<br />
உங்கள் குழந்தையை (Linguistic)" • உரையாடலுக்கும், கலந்து பேசுவதற்கும் வாய்ப்பளித்தல்
• சக பள்ளி மாணவர்களை அழைத்து அவர்களிடம் தங்கள் அனுபவங்களைப் பகிரச் சொல்லுதல்
• பாடங்களை, கதைகளை வாய் விட்டு வாசிக்கச் செய்தல்
• வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட வைத்துப் பயிற்றுவித்தல்
• ஒரு அனுபத்தைப் பற்றிப் பேச, எழுத வாய்ப்புக் கொடுத்தல்
• புதிய நபர்களை அழைத்து வந்து அவர்களைப் பேசச் சொல்லுதல்
• நாடகம் போன்ற படைப்பூக்க நிகழ்ச்சிகளின் மூலம் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுத்தல்
பயிற்சிக்கான இடங்கள்:
• நூலகம்
• பேச்சுப் போட்டி
• கட்டுரைப் போட்டி
• கவிதைப் போட்டி
• கதை சொல்லும் நிகழ்ச்சிகள்
• மொழி வளர்ப்புப் பயிற்சிக் கூடங்கள்
• நாடகப் பட்டறை
• ஜர்னலிச வகுப்ப்புகள்

பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் பயிற்சி, வாசிப்புப் பயிற்சி, கவனிக்கும் பயிற்சி,(Listening skills) கட்டுரைப் பயிற்சி போன்றவைகளுக்கான பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடைபெறுகின்றன.
அடுத்தடுத்த தொடர்களில் மற்ற இண்டலிஜன்ஸ்களைப் பற்றியும், அவைகளை எப்படி நம் குழந்தைகளிடம் வளர்ப்பது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in

Read More...

'புது' வசந்தம் - ஒரு பேட்டியின் கதை

ஒரு வாரமாக சுஜாதா பேட்டி பற்றி FBல் வந்துக்கொண்டு இருக்கிறது. பல இட்லிவடை வாசகர்கர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அதனால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகுப்பு. தொகுக்க உதவிய அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றி.

எச்சரிக்கை: பதிவு கொஞ்சம் பெரிசு. டைம் கிடைக்கும் போது படிக்கவும் !


பகுதி 1:
கே. என். சிவராமன் என்பவர் தினகரனில்

வரும் ஞாயிறு (02.06.2013) அன்று வெளிவரும் தினகரன் நாளிதழின் இணைப்பான வசந்தம் இதழில் அந்த பேட்டி வெளியாகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலமான பிரபல தமிழ் எழுத்தாளரின் மனைவி இந்த நேர்காணலை அளித்திருக்கிறார். ஒருவகையில் முதல் முறையாக அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார் என்று சொல்லலாம்.

’’அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்... அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்... அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்... ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க... அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்...’’

-----------

‘’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு... சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது... சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை...

----------

‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்...’’

இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். தமிழகமே அந்த எழுத்தாளரின் நடைக்கு இன்றும் மயங்கியிருக்கிறது. அப்படிப்பட்டவரின் இன்னொரு முகத்தை முதல் முறையாக பதிவு செய்திருக்கிறார் அவர் மனைவி.

சக பயணியான Priya Kannan அவரை தேடிப் பிடித்து பேட்டி எடுத்திருக்கிறார்.

இந்த நேர்காணலை எப்படியெல்லாம் தமிழ்ச் சமூகம் புறக்கணிக்கப் போகிறது என்று அறிய ஆவல்.

பார்க்கலாம்.


பகுதி 2:
இந்த Teaser வந்த பிறகு பிரபலங்களின் மறுமொழிகள் சில


ஞாநி : யார் என்று எனக்குத் தெரியும். ஆனால் இவை எதுவும் புதிய தகவல்களல்ல. சக எழுத்தாளர்களுக்கும் கொஞ்சம் இதழாளர்களுக்கும் அவரை ஆராதிக்கும் உள்வட்டத்தினருக்கும் தெரிந்தவைதான். தனிப் பேச்சில் இப்படிப் பலரைப் பற்றி பலரும் பகிரும் செய்திகள் பல உள்ளன. என்றாலும் எழுத்தாளனும் சாதாரணன்தான் என்று தெரிந்துவிட்டால், இதர சாதாரணர்களிடம் குரைக்கும் உரிமையும் அதிகாரமும் போய்விடுமே என்ற அச்சத்தாலும் இனப்பாசத்தாலும் இதை பகிரங்கமாகப் பேசத் தய்ங்குவார்கள். மேற்படி கட்டுரை வெளியானபின்னர், நிச்சயம் எழுத்தாளனை, படைப்பு மனதை, எப்படி அதைப் புரிந்துகொள்ளவே முடியாத ஜன்மங்கள் மனைவியாகவும் உறவினராகவும் வந்து வாய்த்து சித்ரவதை செய்கின்றன என்பது பற்றிய தொடர் கட்டுரைகளையும் வாதப் பிரதிவாதங்களையும் எதிர்பார்க்கலாம்.

பகுதி 3:
மனுஷ்யபுத்திரன் பொங்கி எழுகிறார்

தமிழகத்தின் முன்னணி இதழ் ஒன்றில் வெளிவரப்போகும் பேட்டியை முன்கூட்டியே அந்தப் பத்திரிகையில் பணிபுரிகிறவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு கடும் விவாதம் நடந்துகொண்டிருக்றது. சம்பந்தபட்ட நிர்வாகம் அவர் மேல் கடும் நடவடிககை எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இது போல பத்திரிகை சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் நாளை முன்கூட்டியே வெளியே போகக்கூடாது அல்லவா?

விவாதத்தில் வாசகர்களுக்கு மனுஷ் பதில்கள் சில :

1. ஒரு பத்திரிகையின் ப்ரோமோஷனை அதன் நிர்வாகம்தான் செய்ய வேண்டும். வசந்தம் இந்தழுக்கு அவர்களது தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் விரிவான் விள்ம்பரங்கள் வருகின்ற்ன. சிவராமன் போன்ற ஒரு நபர் அவர்களுக்கு எதற்கு? இந்த நபர் செய்திருப்பது சம்பதப்பட்ட எழுத்தாளர்மீது செய்திருக்கும் அவதூறு என்று கேள்விப்படேன்.

2. சம்பந்தபட்டவர்கள் அப்படி ஒரு பேட்டியை தாங்கள் கொடுக்கவே இல்லை என்று என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். அநேகமாக சிவராமன் அவதூறு வழக்கை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. தனது கேவலமான எழுத்து அரசியலுக்காக் தினகரன் போன்ற ஒரு இதழை சிவராமன் பயன்படுத்த முயற்சிக்கிறார்.

3. ஒரு பத்திரிகையின் ப்ரோமோஷனை அதன் நிர்வாகம்தான் செய்ய வேண்டும். வசந்தம் இந்தழுக்கு அவர்களது தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் விரிவான் விள்ம்பரங்கள் வருகின்ற்ன. சிவராமன் போன்ற ஒரு நபர் அவர்களுக்கு எதற்கு? இந்த நபர் செய்திருப்பது சம்பதப்பட்ட எழுத்தாளர்மீது செய்திருக்கும் அவதூறு என்று கேள்விப்படேன்.

ஒரு வாசகரின் கேள்வி:

/-- சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்கிற ரீதியில் மனுஷ்யபுத்திரன் போடும் மிரட்டல் நிலைத்தகவல்கள் சுஜாதாவின் பிம்பத்தை கட்டிக்காக்கும் பெருமுயற்சியாகத்தான் தோற்றமளிக்கின்றன. --/

சுஜாதா தானே அவருடைய ப்ராடக்ட். அதன் பரிசுத்தத்தை இழக்க மனுஷ துணிவாரா..!

பகுதி 4:
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அப்டேட் செய்கிறார்...


திருமதி சுஜாதா அவர்கள் தனிமையிலும் மிகுந்த மன அழுத்தத்திலும் இருக்கிறார்.

தமிழ் எழுத்துலகப் பிதாமக பிரபல புருஷன் மறைந்து விட்ட பிறகு, அவருக்கென்று சில தனிப்பட்ட பிடிமானங்கள் இன்னமும் சரியாக வாழ்க்கையில் அமையவில்லை. அது ஒரு துரதிர்ஷ்டமே. இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட கொடுப்பினை.

இப்படிப்பட்ட நிலையில், பிரபலமாக இருந்த கணவன் மறைந்துபோய் 'நம் கதி இப்படி ஆகிவிட்டதே' என்கிற சுய பரிதாபமும், பச்சாதாபமும் சுரப்பது வழக்கமே.

அந்த 71 வயது மூதாட்டியைப் பேட்டி என்கிற பெயரில் 'ஆஃப் தி ரெகார்ட்' சொல்லப்பட்ட சில பல பர்சனல் விஷயங்கள் தினகரனின் 'வசந்தம்' இதழில் வரும் ஞாயிறன்று பூதாகாரமாக எழப் போகின்றன என்பது கேட்டு அதிர்ந்து போய் அவர்களை பெங்களூரிலிருந்து தொடர்பு கொண்டேன்.

நான் தூக்கத்திலும் மறந்துபோகாத அதே போன் நம்பர். அதே உற்சாகமான வெண்கலக்குரல்.

ஆனால் "என்னதான் நடந்தது?" என்று நான் கேட்கக் கேட்க, குரல் உடைந்து அழவே ஆரம்பித்தார்.

சுஜாதா மன்னி எப்போதுமே பயங்கர வெகுளி. எதை எப்போது யாரிடம் பேசுவது என்பது தெரியாத சூது வாது தெரியாத ஜென்மம். ஒரு விஷயத்தில் சொல்லப்போனால் அசடும் கூட. நான் இதை மிகுந்த உரிமையுடன் என் அக்காவைக் கண்டிப்பதுபோல் சொல்கிறேன். வீட்டுக்கு வீடு வாசப்படி.

"எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்" அதையும் சொன்னார். அப்படிப்பட்டவர்.

ரைட்டர் சுஜாதாவோடு நாங்கள் பல முறை சந்தித்திருக்கும்போதே திருமதி சுஜாதா கொஞ்சம் 'அப்படி இப்படி' ஆனால் நகைச்சுவையாகப் பேசியவர்தான். மடியில் கனமில்லாமல், மனதில் களங்கமில்லாமல், சரளமாக ஜாலியாகப் பேசக்கூடியவர். புருஷன் பக்கத்தில் இருக்கும்போது என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம்.

ஆனாலும், ஒருவிதமான மன அமைதியில்லாமல் இப்போது தவிக்கும் மூதாட்டியை இப்படியெல்லாம் பேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எழுத்தாளர் சுஜாதா பிராமின் என்பதால் இப்படிச் செய்கிறார்களா? அல்லது கேட்பார்தான் யாருமில்லையே என்று அவர் மீதும் அவர் குடும்பத்தார் மீதும் சேற்றை வாரி இறைக்கிறார்களா?

தெரியவில்லை. ஆனால் மனசு கனக்கிறது.

"நான் தான் அடுத்த சுஜாதா" என்று இணையத்தில் பல பேக்குகள் பெனாத்திக் கொண்டிருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு சுஜாதா தான். அது என் குரு தான். குருவிடம் எதெல்லாம் தப்பு என்று ஆராயும் அளவுக்கு நான் ஒரு முட்டாள் சிஷ்யன் இல்லை. நாங்களெல்லாம் சுண்டைக்காய் என்றால், அவர் ஒரு எவரெஸ்ட்.

அவ்வளவுதான்.

சுஜாதா நினைவை பூஜிக்காவிட்டாலும், அசிங்கப்படுத்தாமல் இருக்கும் அளவுக்குக்கூட நமக்கு கலாசாரம், பெருமை, அறிவு இல்லையா?

வெட்கம்.

வரவர தமிழில் எழுதவே வெட்கப்படவேண்டும்போல் இருக்கிறது ;-(

திரும்பவும் ஞாநி
//சுஜாதா மன்னி எப்போதுமே பயங்கர வெகுளி. எதை எப்போது யாரிடம் பேசுவது என்பது தெரியாத சூது வாது தெரியாத ஜென்மம். ஒரு விஷயத்தில் சொல்லப்போனால் அசடும் கூட. நான் இதை மிகுந்த உரிமையுடன் என் அக்காவைக் கண்டிப்பதுபோல் சொல்கிறேன். வீட்டுக்கு வீடு வாசப்படி..எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்" அதையும் சொன்னார். அப்படிப்பட்டவர்.// - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.
அன்புள்ள ராம், ஒரு பத்திரிகைக்கார் பேட்டிக்கு வந்திருக்கும்போது எதையும் உளறிவிடக் கூடாது என்ற அனுபவ அறிவு சுஜாதாவுக்கு அவரது கணவர் எழுத்தாளர் சுஜாதா என்கிற ரங்கராஜனுடன் உடன் இருந்த காலங்களிலேயே நன்றாகத்தெரிந்திருக்கக்கூடிய அளவுக்கு அவர் அறிவுக் கூர்மை உடையவர்தான். இப்போது தன்னை மறந்து ஏதேனும் சொல்லியிருந்தாலும் கூட அடுத்த சில மணி நேரத்திலேயே சில நாட்களிலேயே அதை உணர்ந்துவிடக் கூடியவரும்தான். அந்த பத்திரிகையாளரை அழைத்து சில விஷயங்கள் மட்டும் ஆஃப் தி ரிகார்ட் என்று சொல்லத் தேவையான அறிவு உடையவர்தான் அவர். நிஜமாகவே அவர் தான் சொன்ன சில விஷ்யங்கள் அச்சில் வரத்தேவையில்லை என்று உங்கள் போன் காலுக்குப் பின்னர் நினைத்தாலும் கூட, உடனே அந்தப் பத்திரிகைக்கு போன் செய்து அது அப்படி வெளிவரக் கூடாது என்று சொல்ல முடியும். அப்படி எதுவும் அவர் செய்யாதபட்சத்தில் எல்லாம் அறியாமை என்று எளிதாக ஒதுக்கிவிடமுடியாது. நீங்கள் சுஜாதா என்கிற ரங்கராஜன் மீது வைத்திருக்கும் மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. உங்கள் அன்பும் மரியாதையும் அவருடைய எழுத்துத்திறன் உங்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம். அவர் மனைவியின் கருத்துகள் என்னவாக இருந்தாலும், அவை அவரை ஒரு மனிதராக அவர் மதிப்பிட்டிருக்கும் விதத்தின் வெளிப்பாடு. உலக அளவில் பொது வாழ்வில் இருப்போரின், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பு காட்டும் உலகத்துக்கும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை காட்டும் உலகத்துக்கும் இருக்கும் ஒற்றுமைகள், முரண்பாடுகள் எப்போதும் பகிரங்க ஆய்வுக்கு உட்டபடுத்தப்பட்டே வந்துள்ளன. இதற்கு தமிழ் எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. சுஜாதா என்கிற ரங்கராஜனை நான் எழுத்தாளராகவும் அறிவேன் மனிதராகவும் அறிவேன். பல இதர எழுத்தாளர்களைப் போலவே அவருடைய இரு முகங்கள் பற்றியும் எனக்கு சில வியப்பும் மரியாதைகளும், சில கடும் விமர்சனங்களும் உண்டு. இது குறித்து பதைபதைக்க தேவையில்லை. யாரைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பானவை வெளியானால் மட்டுமே நாம் கண்டிக்க வேண்டும். அன்புடன் ஞாநி.

//பேசிட்டு சொன்னேன் இதெல்லாம் பெர்சனலா சொன்னது .எழுதவேண்டாம்ன்னு சொன்னேன்.எழுதிட்டாப் போல இருக்கு.என்று வருத்தப் படுகிறார்.பேட்டி எடுத்தவர் பிரியா கண்ணன்//- சுப்ரஜா ஸ்ரீதரன்.
இது உண்மையானால் பத்திரிகை அறத்துக்கு விரோதமானது. பிரியா கண்ணன்தான் தன் தரப்பு நியாயத்தை விளக்க வேண்டும். பேட்டியாக இருந்தால்தான் இந்த அறம் செல்லுபடியாகும். பல வாழ்க்கை சரித நூல்களில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாமலே பல சர்ச்சைக்குரிய் செய்திகளை மெய்யானவை என்று ஆய்வாளர்கள் தமக்கு உறுதிப் படுத்திக் கொண்டு எழுதும் வழக்கம் உலக அளவில் உண்டு. எம்.எஸ். பற்றிய வரலாற்று நூலை எழுதிய டி.ஜே.எஸ் ஜார்ஜ், எம்.எஸ்சின் இளமைக்கால( நிறைவேறாத) காதல் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார். - ஞாநி

வாசகர் ஒருவரின் கமெண்ட்
/-- சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்கிற ரீதியில் மனுஷ்யபுத்திரன் போடும் மிரட்டல் நிலைத்தகவல்கள் சுஜாதாவின் பிம்பத்தை கட்டிக்காக்கும் பெருமுயற்சியாகத்தான் தோற்றமளிக்கின்றன. --/

சுஜாதா தானே அவருடைய ப்ராடக்ட். அதன் பரிசுத்தத்தை இழக்க மனுஷ துநிவாரா...!



பகுதி 5
ஜெயமோகன் சும்மா இருப்பாரா அவருடைய பங்கு இதோ... வழக்கம் போல வாசகர் கேள்வி பதில்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

வணக்கம்..

திருச்சியில் தங்களை சந்தித்த பின் இப்போது தான் பேசுகிறேன்.. நலமா?

சமீபமாக எழுத்தாளன் தமிழ் சமூகத்தில் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான் என்பது குறித்து பல்வேறு கருத்து மோதல்கள் இணையம் எங்கும் தெறிக்கின்றன.. உங்கள் கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.. பல மனிதர்கள் அறிஞர்களை அல்லது ஏதேனும் ஒரு துறை வல்லுனரை சந்திக்கும் வேளையில் தங்களுக்கு தெரிந்த அச்சு பிச்சு தகவல்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு நகரவே முயல்கின்றனர்.. உண்மை..

சிறிது நாட்களுக்கு முன் சுஜாதா குறித்த பதிவுகளும், பதில்களும் அளித்திருந்தீர்கள்.. சுஜாதா தீவிர இலக்கியம் படைப்பதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் அதை முயலவில்லை என்றீர்கள். சுஜாதாவின் எழுத்து காலம் தாண்டி நிற்குமா என்பது குறித்து நான் பேச போவதில்லை..

அவரது வாசகனாக சொல்கிறேன்.. சுஜாதா ஒரு கதாநாயகன் போல் எல்லோர் மனதிலும் இருந்தார்.. இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. எழுத்தாளர் என்றவுடன் பலரும் அறிந்த மிக சில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்..

வெகுஜனம் விரும்பும் படைப்பை நோக்கியே தன்னை திருப்பிக்கொண்டவர். அவர் படைத்த சினிமாக்களில் கூட அந்த பட இயக்குனரை தாண்டி சுஜாதா டச் இருப்பதை நாம் உணரலாம். அத்தகைய ஆளுமையை பற்றி அவர் மனைவி அளித்த பேட்டி இந்த வாரம் வெளியாக உள்ளது..


......வரும் ஞாயிறன்று இந்த பேட்டி தினகரனில் வெளியாகிறது.. இது என்ன? ஒரு எழுத்தாளர்.. அதுவும் இறந்து ஐந்து ஆண்டு ஆனா பின் நொந்துகிடக்கும் அவர் மனைவியிடம் பேட்டி எடுத்து மக்கள் அவர் என கருதி வைத்துள்ள பிம்பத்தை உடைக்க ஏன் இந்த ஆசை?உங்கள் பதிவொன்றில் சுஜாதா மரணத்தை எதிர்கொண்ட விதம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.. அதை படித்து விட்டு தூங்க முயன்றும், முடியவில்லை,.. அவரது தீவிர ரசிகன், வாசகன் என்ற முறையில் நான் வைக்கும் விண்ணப்பம் இது.. சுஜாதா என்னும் ஆளுமை வரும் ஞாயிறன்று நொறுங்க போவதை நினைத்தால் மனம் கனக்கிறது..

இலக்கியவாதியோ இல்லையோ.. சுஜாதா ஒரு தலைமுறை நாயகன் அல்லவா? அவருக்கு இப்படி நம் கண் முன் ஒரு அவமானம் நிகழ வேண்டுமா? இதை சக எழுத்தாளர்கள் தடுக்க முடியுமா? சங்கங்கள் இதை கவனிக்குமா?

- ஸ்ரீகாந்த்

அன்புள்ள ஸ்ரீகாந்த்,

நீங்கள் மிகவும் இளைஞர். ஆகவேதான் இந்தப்பதற்றம். யோசித்துப் பாருங்கள். இந்த வயதில் நீங்கள் வாழ்க்கையைப்பற்றி கொண்டுள்ள ஏராளமான நம்பிக்கைகள் வரும் வருடங்களில் அழியப்போகின்றன. விளைவாக நீங்கள் உடைந்து மறு ஆக்கம் பெறுவீர்கள். அந்த நிகழ்வுகள் மூலமே உங்களுடைய உண்மையான ஆளுமை உருவாகி வரப்போகிறது. அரசியல் நம்பிக்கைகள், ஒழுக்க நம்பிக்கைகள், தத்துவங்கள் பற்றிய மன உருவகங்கள் எல்லாமே மண்ணில் கால் பதிக்கப் போகின்றன. அதன் வழியாக நீங்கள் மதிக்கும் பலர் மதிப்பை இழப்பார்கள். பலர் புதிய வெளிச்சத்தில் கண்களுக்குத் தெரிவார்கள்

நம் இளமையில் கையை விட்டு சைக்கிள் ஓட்டும் ஒரு மாமாவை கண்டு வியந்து அவரை ஆதர்ச புருஷராக நினைத்திருப்போம். இன்று அப்படி இல்லை அல்லவா? இதுதான் வாழ்க்கையின் பரிணாமம். ஆகவே பிம்ப உடைவுகள் பற்றி பதற்றம் வேண்டாம். அது ஓர் இயல்பான நிகழ்வு

சுஜாதா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரது பிம்பம் ஒன்று உங்கள் மனதில் உருவாகி வந்துள்ளது. அதை கொஞ்சம் அவர் உருவாக்கினார். கொஞ்சம் ஊடகங்கள் உருவாக்கின. கொஞ்சம் நீங்களே உருவாக்கி கொண்டீர்கள் அது உடையாமல் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள். அப்படி உடையாமல் அதை பார்த்துக்கொள்ள வேண்டியது உலகத்தின் கடமை என நினைக்கிறீர்கள், இல்லையா? நடக்கிற காரியமா அது?

ஓர் இலக்கிய வாசகனாக நீங்கள் உண்மையின் பக்கம் நிலைத்திருக்க வேண்டும் இல்லையா? உண்மையை வழிபட வேண்டும். உண்மையை தேடவேண்டும் இல்லையா? பிறிதொருவர் பற்றிய உண்மையை இந்த அளவுக்கு அஞ்சும் நீங்கள் எப்படி உங்களைப் பற்றிய உண்மையை தேடிச்செல்ல முடியும்? எப்படி அதை எதிர்கொள்ள முடியும்? அப்படி முடியாவிட்டால் நீங்கள் வாசிக்கும் இலக்கியத்திற்கு என்னதான் அர்த்தம்?

நான் சில மாதங்கள் முன்பு ஒரு கட்டுரையில் சுஜாதாவின் வீட்டுக்குச் சென்றபோது அவர் பெரிய நாமம் தரித்து வந்ததைக் கண்டதாக எழுதியிருந்தேன். அப்போது இணையத்தில் பலர் என்னை வசைபாடினர். அவதூறு செய்கிறேன் என்றும், சுஜாதா மிக நவீனமானவர் என்றும் வாதாடினர். ஆதாரம் காட்ட முடியுமா என்று கூவினர். அவர்கள் இப்போது ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் எந்நிலையிலும் மனசாட்சிக்கு தெரிந்த உண்மைகளை மட்டுமே சொல்கிறேன் என்று இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அது என் இலக்கியக் கடமை. அதைச்சொல்ல தைரியமில்லா விட்டால் இந்த வேலையை எதற்காகச் செய்ய வேண்டும்?

நானறிந்தவரை சுஜாதா மிக ஆசாரமானவ்ர். தென்கலை அய்யங்காராக மட்டுமே தன்னை உணர்ந்தவர். அது ஓர் உண்மை. அதை எதிர்கொள்ள ஏன் அஞ்சவேண்டும்? இப்போது அவரது மனைவி அவரைப்பற்றிச் சொல்லும் எல்லாமே உண்மையாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் என் அப்பா அப்படித்தான் இருந்தார். சுஜாதா அவரது தலைமுறை. அவரது தலைமுறையில் அப்படி இல்லாதவர்கள் மிகமிக அபூர்வம். அதற்காக நான் என் அப்பாவை வெறுத்துவிட்டேனா என்ன? அவரை ஆராதிப்பதை விட்டுவிட்டேனா என்ன? அப்படி வெறுக்க ஆரம்பித்தால் சென்ற தலைமுறையில் எத்தனை பேர் நமக்குத் தேறுவார்கள்?

தலைமுறைகள் தோறும் மதிப்பீடுகள் மாறுகின்றன. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நாம் பிற்பட்ட மதிப்பீடு கொண்டவர்களாகத்தான் தெரிவோம். மனிதர்களை அவர்கள் வாழ்ந்த காலச்சூழலை வைத்துப் புரிந்து கொண்டால் இத்தகைய மனக்குழப்பங்களில் இருந்து தப்ப முடியும். எனக்கு சுஜாதா ஒரு பழைமைவாதி என நன்றாகவே தெரியும். அது எனக்கு அவர் மீதிருந்த மதிப்பை சற்றும் குறைக்கவில்லை. எனக்கு அவர் இலக்கியவாதி அல்ல, ஆனால் ஒரு வகையில் அவர் என் ஹீரோதான்.

அப்படியென்றால் சுஜாதாவின் நவீனத்துவ முகம் என்ன நடிப்புதானா? இல்லை. இலக்கியவாதியின் அகம் செயல்படும் விதமே அதுதான். படைப்புகளில் சுதந்திரப் போராட்டத்தை கிண்டலடித்த புதுமைப்பித்தன் நிஜ வாழ்க்கையில் சுதந்திரப் போரில் ஈடுபட விரும்பினார் என அரை நூற்றாண்டுக்குப்பின் அவரது மனைவி வெளிபடுத்திய கடிதங்கள் [கண்மணி கமலாவுக்கு ]காட்டின . சுதந்திரப்போரில் ஈடுபட முடியாமல் அவரை வாழ்க்கையும் நோயும் கட்டிப்போட்டன. ஆகவே அவர் அதை தன் ஆக்கங்களில் நக்கலாக மாற்றி வெளிப்படுத்தினார்

ஒழுக்கவாதியான சுந்தர ராமசாமி ஒழுக்க மீறல்கள் மீது ஆழ்ந்த கவனம் கொண்டிருந்தார். ஒழுக்க மீறலை வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஜி.நாகராஜனின் அகம் ஒழுக்கம் மீதே படிந்திருந்தது. குறத்தி முடுக்கை அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளனின் எழுத்து அவனை அப்படியே காட்டுவதில்லை. அவனுடைய ஆசைகளை, கனவுகளை, எதிர்பார்ப்புகளைக்கூடத்தான் அது காட்டுகிறது

நம் முந்தைய் தலைமுறையில்தான் அறிவியல் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பதை காணலாம். இன்று எழுபது, எண்பது வயதானவர்களிடம் இந்த இரட்டைநிலையைக் காணலாம். அவர்களுக்கு அவர்கள் வளர்ப்பு காரணமாக சாதி மதம் சார்ந்த ஆசாரவாத நோக்கு இருக்கும். கூடவே நவீன அறிவியல் வழிபாட்டு நோக்கும் இருக்கும். பிள்ளைகள் ‘சயன்சும் கணக்கும்’ படிக்க வேண்டுமென விரும்புவார்கள். சுஜாதாவின் அகம் ஆசாரமான சூழலில் உருவாகி நவீனத்துவம் நோக்கி எம்ப முயன்றது என்று சொல்லலாம். அவர் விஞ்ஞானியாக ஆக முயன்ற ஆசார வைணவர்.

இத்தகைய இருபாற்பட்ட ஊசலாட்டமே எந்த படைப்பாளியையும் உருவாக்குகிறது. அதுவே அவரை நுணுக்கமாக அவதானிக்கச் செய்கிறது. திண்ணையில் ஏறி நின்று ஊர்வலம் பார்ப்பதைப்போல என்று சொல்லலாம். ஊர்வலத்தில் செல்பவர்களுக்கு அதைப்பார்க்கும் கண் இருப்பதில்லை. சுஜாதா ஏறி நின்ற திண்ணை வைணவம். அவர் அவதானித்த ஊர்வலம் அறிவியல்.

எழுத்தாளனிடம் எழுத்தை எதிர்பார்க்க பழகுங்கள். அவனுடைய எழுத்தைப் புரிந்து கொள்ள அவனுடைய அந்தரங்க வாழ்க்கையை கவனியுங்கள். அந்தரங்க வாழ்க்கையை வைத்து எழுத்தாளனை மதிப்பிடாதீர்கள். அப்படி மதிப்பிடப்போனால் உலகில் மிக மிகச் சில எழுத்தாளர்களே எஞ்சுவார்கள். எழுத்தாளனின் அகம் கொந்தளிப்புகளும் ஊசலாட்டங்களும் நிறைந்தது. அவனுடைய நிலையின்மையே அவனை எழுத்தாளனாக ஆக்குகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்

கலைஞர்களை தத்துவவாதிகளுடன் ஒப்பிடக்கூடாது. தத்துவஞானியின் ஒருமையும் தர்க்க ஒழுங்கும் கொண்ட நோக்கு அவனிடம் இருக்காது. கலைஞனை அரசியல் செயல்பாட்டாளர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களிடம் அரசியல் செயல்பாட்டாளர்களின் ஒற்றை நோக்கும் அர்ப்பணிப்பும் தைரியமும் இருக்காது. கலைஞர்களை சாதாரணமான நல்ல மனிதர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களிடம் சாதாரண மனிதர்களின் எளிய வாழ்க்கை நோக்கு இருக்காது

கலைஞனிடம் மேலே சொன்ன எவரிடமும் இல்லாத ஒரு விஷயம் இருக்கிறது. மொழியைக் கருவியாக்கி ஆழ்மனதுக்குள் செல்லும் நுட்பம். ஆகவேதான் அவர்கள் எவரை விடவும் கலைஞன் காலத்தில் வாழ்கிறான். சமூகத்தின் ஆழ்மனம் கலைஞன் வழியாகவே முன் செல்கிறது. கலைஞன் மட்டுமே ஒரு சோற்றுப்பதம் கொண்டு ஒரு பானைச்சோற்றை மதிப்பிட முடிகிறது. அதற்காகவே நாம் இலக்கியத்தை வாசிக்கிறோம்

நாம் எழுத்தாளர்களிடம் அவர்கள் எழுத்தை விட்டுவிட்டு என்ன செய்தார்கள் என்பதையே பார்க்கிறோம். சுதந்திரப்போரில் ஈடுபட்டார், ஆகவே நல்ல எழுத்தாளர் என்கிறோம். அரசியல் போர்களில் முன்னணி வகித்தார், மக்கள் சேவை ஆற்றினார், ஆகவே நல்ல எழுத்தாளன் என்கிறோம். முற்போக்குச் சிந்தனையாளர், நல்ல மனிதர், பழகுவதற்கு இனியவர் ஆகவே நல்ல எழுத்தாளர் என்கிறோம். இவையெல்லாம் அல்ல எழுத்தாளன். எழுத்துதான் எழுத்தாளன்.

இந்த அடிப்படைகள் இலக்கியம் வாசிப்பவனுக்கு இயல்பாகவே பிடி கிடைக்கும். உலக இலக்கியவாதிகளில் சிலரையேனும் அவதானித்திருப்பவனுக்கு புரியும் . மலையாளம் போன்ற சூழல்களில் இதை மீண்டும் மீண்டும் பேசி நிறுவிய விமர்சகர்களும் இலக்கிய இதழாளர்களும் உண்டு. தமிழில் நமக்கு இலக்கிய அடிப்படைகளை எவருமே சொல்லித் தருவதில்லை. நாமே புரிந்துகொள்ளும் அளவுக்கு வாசிப்பும் இல்லை. ஆகவேதான் எழுத்தாளனை நோக்கி ‘நீ என்ன சமூக சேவை செய்தாய்?’ என்றெல்லாம் கேட்கும் கோழிமுட்டை மொண்ணைத்தனம் நமக்கு வாய்த்திருக்கிறது

சுஜாதாவின் மனைவி வெளிப்படுத்தியிருக்கும் இந்தச் செய்திகளினால் என்ன ஆகப்போகிறது? சுஜாதா தமிழின் உரைநடையை நவீனப் படுத்திய முக்கியமான நடையாளர் என்பது இல்லை என்றாகி விடுமா? இல்லை அவர் எழுதிய நல்ல சிறுகதைகளும் நாடகங்களும் மோசமானவை ஆகிவிடுமா? இல்லை அவர் தமிழின் பெரும் பத்திரிகை சூழலில் அறிவியலை அறிமுகம் செய்தவர் என்பது மறைந்து விடுமா?

நான் அவரை என் நாயகனாகவே இன்றும் வைத்திருக்கிறேன். அதற்குக் காரணம் அவரது எழுத்துக்கள். அவரது எழுத்துக்கள் உள்ளவரை அவர் அப்படித்தான் நீடிப்பார். அவர் அவற்றை எழுதவில்லை சமையற்காரன் தான் எழுதினார் என்று நிரூபிக்கப் படுமானால் அதை மறுபரிசீலனை செய்வேன்

ஜெ

பகுதி 6:
எழுத்தாளர் சுஜாதா மனைவி பேட்டி பலருக்கு ஆச்சரியம், சிலருக்கு எமாற்றம்!

 

 


பகுதி 7:
கே. என். சிவராமனின் நன்றியுரை...


ஆனால், கவிஞர் மனுஷ்யபுத்திரன் இல்லையென்றால் இந்த நேர்காணல் சாத்தியமாகியிருக்காது. அவருக்கு நன்றி.

நாளை (02.06.13) ‘தினகரன்’ நாளிதழுடன் வெளியாகும் ‘வசந்தம்’ இதழில் திருமதி சுஜாதாவின் பேட்டி வெளியாகிறது.

குறிப்பிட்ட தேதியில் வேறொரு வேலை வந்துவிட்டதால் மறுநாள் வரச் சொன்னார் திருமதி சுஜாதா. புகைப்பட கலைஞருடன் சொன்ன நேரத்துக்கு சென்றார் ப்ரியா.

இயல்பான புன்னகையுடன் வரவேற்றவர், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தார். ஒளிவு மறைவின்றி தன் வாழ்க்கையை நேர்காணலாகவும் அளித்தார்.

ஆஃப் த ரிக்கார்ட் ஆக எதையும் அவர் பேசவில்லை. பேசியதை எழுத வேண்டாம் என வலியுறுத்தவும் இல்லை.

திருமதி சுஜாதா அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பும் என்பதால் எங்கள் எம்டி-யிடமும், கதிர் சாரிடமும் முழு விவரமும் சொன்னோம்.

திருமதி சுஜாதாவே மனம் திறந்து பேசியிருப்பதால், பிரசுரிக்கலாம் என்றார்கள்.

அதன் பின்னரே எடுத்த பேட்டியை ப்ரியா எழுத ஆரம்பித்தார். பல இடங்கள் கடுமையாக இருந்தன. எனவே தொலைபேசியில் திருமதி சுஜாதாவை தொடர்பு கொண்டு, ‘மேடம், நேர் பேச்சில் நீங்கள் பேசியதை அப்படியே பிரசுரம் செய்தால் உங்களுக்கு சிக்கல் வரும். பரவாயில்லையா?’ என்று கேட்டிருக்கிறார்.

சட்டென்று சிரித்துவிட்டவர், ‘பரவாலம்மா... நான் என்ன பேசினனோ அதை அப்படியே எழுது...’ என்றார்.

அப்படியும் சில சொற்கள் கடுமையாக இருக்கவே, திருமதி சுஜாதாவை மீண்டும் தொடர்பு கொண்டு அவரது ஒப்புதலுடன் வார்த்தைகளின் வீரியத்தை குறைத்திருக்கிறார். ஆனால், பொருள் மாறவில்லை.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. ஏழெட்டு முறை அவரிடம் பேசி, திருத்தி, அதன் பின்னரே லே அவுட் ஆரம்பமானது.

அச்சுக்கு செல்வதற்கு முன்னர் கூட அவரிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.

இவ்வளவையும் இங்கு குறிப்பிட காரணம், இது கற்பனை பேட்டி அல்ல என்பதை வலியுறுத்தத்தான். தவிர, 14 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகும் ‘தினகரன்’ இதழில் அப்படியெல்லாம் கற்பனையில் ஒரு பேட்டியை பிரசுரித்து விடவும் முடியாது.

இது புரியாமல் ஒருவர் முகநூலில் பொங்கியிருந்தார். இவரது அச்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தனது பிழைப்பே கெட்டு விடுமோ என அந்த மனிதர் பயந்ததில் வியப்பொன்றும் இல்லை.

எனவேதான் ’இப்போதுதான் அவரிடம் பேசினேன். தான், அப்படியொரு பேட்டியே தரவில்லை என்று சொல்லியிருக்கிறார்...’ என்று ஆவேசத்துடன் அந்த மனிதர் மறுமொழி எழுதியிருந்ததை பார்த்து புன்னைக்க முடிந்தது.

அதேபோல் வரவிருக்கும் இதழில் இடம்பெறும் பேட்டியை குறித்து முன்கூட்டியே சிவராமன் டீசர் வெளியிட்டிருப்பது தவறு. இப்படி செய்வது அறமல்ல. அலுவலக ரகசியங்களை இதுபோல் வெளியே சொன்ன பலர், வேலையை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். சிவராமனின் வேலையும் போகப் போகிறது. அவதூறு வழக்கை எதிர் கொள்ள போகிறார்...

என்றெல்லாம் நிமிடத்துக்கு ஒரு ஸ்டேட்டஸை அவர் இட்டபோதும் ரசிக்க முடிந்தது.

இந்த ரசனையும், புன்னகையும் மறுநாளே மனம் விட்டு சிரிக்கும் விஷயமானது. இதற்கு வித்திட்டவரும் அதே ஸ்டேட்டஸ் ஆசாமிதான்.

ஒரு வார இதழில் பத்தி ஒன்றை இவர் எழுதி வருகிறார். அந்த வார இதழும் தினகரன் குழுமத்தை சேர்ந்ததுதான். வாரம்தோறும் திங்களன்று வெளியாகும் இதழ் அது. அதில், வரும் இதழில், தான் எதைக் குறித்து எழுதியிருக்கிறோம் என்பதை ஸ்டேட்டஸ் ஆக போட்டிருந்தார்! அதுவும் இதழ் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு!!

இதன் பெயர் டீசர் அல்ல!! இப்படி செய்ததும் அறத்துக்கு புறம்பானதல்ல!!!

இதைப் பார்த்த பிறகு வடிவேலுவின் ரத்தம் - தக்காளி காமெடிதான் நினைவுக்கு வந்தது.

இன்னொருவர், ‘அசடு’, ‘ஜென்மம்’, ‘தனிமையின் விரக்தியில் புலம்பியதை பேட்டியாக்கியிருக்கிறார்கள்...’ என்றெல்லாம் சகட்டுமேனிக்கு திருமதி சுஜாதா மீது புழுதி வாரி இறைத்திருக்கிறார். அவருக்கு ஒரு வார்த்தை. ஒருவரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அடுத்தவரை தாழ்த்தாதீர்கள்.

டீசர் வெளியான அன்றும் திருமதி சுஜாதாவிடம் பேசினோம். ‘காலைலயே தகவல் வந்துடுச்சும்மா... ஒண்ணும் பிரச்னையில்லை...’ என்றார்.

இதுதான் திருமதி சுஜாதா.

நாளை அவரது பேட்டியை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

குறிப்பாக உங்கள் நன்றியை கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு தெரியப்படுத்துங்கள். சம காலத்தில் வாழும் அறச்சீற்றமிக்க கவிஞர்களில் இவரே முதன்மையானவர். சமூக அவலங்களின் மீதான கோபத்தை விருப்பு, வெறுப்பு இன்றி விமர்சனம் செய்வதையே தன் வாழ்நாள் கடமையாக கொண்டிருக்கிறார். இதற்காகவே நாள்தோறும் தொலைக்காட்சிகளில் தோன்றி விவாதிக்கவும் செய்கிறார்.

இவரால்தான் இந்த பேட்டி சாத்தியமானது. இவரால்தான் திருமதி சுஜாதா வாழ்ந்த வாழ்க்கை முதன் முறையாக வெளிச்சத்துக்கும் வருகிறது.

தனது ‘உயிர்மை’ பதிப்பகம் சார்பில் இவர் வெளியிட்டுள்ள ’என்றும் சுஜாதா’ நூல்தான் இப்படியொரு நேர்காணலை செய்ய வேண்டும் என்ற விதையையே விதைத்தது.

‘நீங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லவர் - உங்க மனைவிக்கும், குழந்தைகளுக்கும் தவிர என்று அண்மையில் ஒருமுறை அவள் சொன்னது உண்மைதான்...’ (பக்கம் 23).

‘வீட்டுக்குனு, குழந்தைகளுக்குனு எதிர்கால திட்டம் எதுவும் அவருக்கு கிடையாது...’

‘நான் ஒரு துருவம்... அவர் ஒரு துருவம்தான்...’ (பக்கம் 29).

என்றெல்லாம் பல விஷயங்களை அந்தப் புத்தகம் நேர்மையாக பதிவு செய்திருக்கிறது. மனுஷ்யபுத்திரன் பதிப்பாளராக இருப்பதாலேயே இது சாத்தியமானது.

இதற்கு பின்னால் என்ன இருந்தது என்பதைதான் திருமதி சுஜாதா வசந்தம் இதழில் விளக்கியிருக்கிறார்.

பெரும் கோபமும், பெரும் கருணையும் கொண்ட கவிஞர் மனுஷ்யபுத்திரன் வாழும் காலத்தில் நாங்களும் பத்திரிகையாளர்களாக இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். — with Priya Kannan.


யாராச்சும் சோடா கொடுங்க ப்ளீஸ்...மூச்சு வாங்குது :-)

Read More...