பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 28, 2013

விஷமக்கார (கண்ணன்) சீலி - சுமதி

திரு ஸ்ரீதர் என்கிற திரு பரணிதரன் என்கிற திரு மெரீனாவின் "சின்ன வயதினிலே" புத்தகத்தைப் பலரும் விகடனில் தொடராக வந்த போதே வாசித்திருப்பீர்கள். எத்தனை தடவை படித்தாலும் அலுக்கவே அலுக்காத புத்தகங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. நானும் விட்டுவிட்டுச் சில வாரங்கள் படித்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக வந்தது தெரியாது.

சில வருடங்களுக்கு முன் உறவினர் வீட்டில் ஊர்க்கதை எல்லாம் பேசி, சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் போதுதான் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. அட்டைப்படம் திரு. கோபுலுவின் கைவண்ணத்தில் மிக அருமையாக இருந்தது. புரட்டிப் பார்த்தால் சிறு வயதில் விகடனில் அம்மா சொல்லி நான் அவ்வப்போது படித்த தொடர்தான் என்று தெரிந்தது. உடனே உறவினரிடம் படித்து விட்டுத்தருகிறேன் என்று சொல்லிவிட்டு எடுத்துக் கொள்ள மனம் பரபரத்தது. ஆனால் அப்படிக் கேட்கவில்லை. காரணம் படித்து விட்டுத் தருகிறேன் என்பதன் அர்த்தம் அவர்களுக்கும் தெரிந்திருந்தால் என்ன செய்வது.... மதிப்பிற்குரிய புதிய உறவு வேறேயா.... மரியாதையைக் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் பிறகு நாமே வாங்கிக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன். விகடன் பிரசுரம் என்பதைத் தவிர வேறு விவரங்கள் மறந்து ஒரு வழியாய் இந்த வருடம் தான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.



இந்தப் புத்தகத்தின் பல்வேறு சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமான ஒன்று , ' குடும்பப்படம் , குடும்பத்துடன் வந்து கண்டு களியுங்கள்' , என்று விளம்பரம் பார்த்திருப்போமே, அதுபோல் இது ஒரு குடும்பப்புத்தகம். வீட்டில் உள்ள எல்லா வயதினரும் அவரவர் வயதிற்கேற்ப மீண்டும் மீண்டும் படித்து மகிழ பலப்பல சுவாரசியங்கள் பக்கத்துக் பக்கம் கொட்டிக்கிடக்கின்றன.


புத்தகம் முழுவதும் ஆறு முதல் பத்து வயதில் இருக்கும் சிறுவனின் பார்வையிலேயே போவது இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு. திரு மெரீனா, அல்ல அல்ல, சீலி ரசிக்க ரசிக்க தன் இளமைப் பருவத்தை எழுதியிருக்கிறார்.

முதல் அத்தியாயத்திலேயே சீலி என்ற சிறுவன் நம்மைக் கொள்ளை கொண்டு விடுகிறான். பள்ளி செல்லும் வயது தாண்டியும் பள்ளியில் சேர்க்கவில்லை என்பதால் தானே சேரப் போய்விடுகிறான். வகுப்பில் ஆசிரியர் புதுப் பையனைப் பார்த்து "நீ யார், உன் பெயர் என்ன " என்று வினவ வீட்டில் தன்னைக் கூப்பிடும் பெயரான சீலி என்பதையே சொல்ல, நிஜப்பெயரைத் தெரிந்து கொண்டு வரும்படிச் சொல்லி அனுப்பி விடுகிறார்.

இனிஷியலுடன் தன் பெயர் தெரிந்த வினாடியிலிருந்து சீலி அடைந்த பெருமிதம், அட்டெண்டென்ஸில் தன் பெயரை அழைத்தவுடன்," ப்ரெசென்ட் சார் " சொல்லும் உற்சாகம், தான் டபுள் ப்ரமோஷன் பெற்றது எப்படி, அதற்கான காரணம், சீலிக்காக "எவனையாவது இன்னிக்கு அடிக்கணுமா" என்று கேட்டு சீலி அவ்வப்போது கைகாட்டும் எனிமியைத் துரத்தித் துரத்தி அடிக்கும் அடாவடி நண்பன், என்று புத்தகத்தின் ஆரம்பப்பகுதியே நமக்கு சிரிப்பு மூட்டி அதே சிரிப்புடனே பக்கங்களைப் புரட்டுகிறோம்.

நண்பர்களை அறிமுகப்படுத்திய சுவாரசியத்துடனே தான் மிகவும் நேசிக்கும் தன் புரசைவாக்கம் வீட்டையும் வீட்டு உறுப்பினர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறான். காத்தாடியும் டீல் போட்டு, ஷேக்ஸ்பியர் வகுப்பும் எடுக்கும் "கலா நிலையம்" அண்ணா (அப்பா), சாப்பாட்டு வேளையில் வீட்டுப் பசங்களோடு தோழர்களுக்கும் சேர்த்து குழம்பு சாத உருண்டையைப் பிசைந்து தரும் அம்மா, ஸ்ட்ரிக்ட் கம் ப்ரெண்ட்லி சித்தப்பா, இதிகாச வகுப்புகள் எடுக்கும் அம்மணி பாட்டி, பெரிய டின்னில் திரட்டிப்பால் கிளறிக்கொண்டு வரும் ஜானகிப் பாட்டி, (ஜானகிப்பாட்டி வரும் கோச் வண்டியும் ஜாட் கோலும் இதில் கிளைக்கதை), மைசூரிலிருந்து வரும் அத்தை, நுங்கம்பாக்கத்திலிருந்து காரில் வரும் சின்ன அத்தை, அம்மாஞ்சி தான் நிஜப் பெயர் என்று நினைத்த பெரிய அண்ணன், மாஸ் வைத்து விளையாடும் கோலி ஆட்டத்தை ஸ்பெஷலைஸ் செய்த ராதா அண்ணன், அறுந்த காத்தாடியைப் பிடிக்க ஓட்டு வீட்டுக் கூரைகளின் மேல் ஓடி ஓடுகளை நொறுக்கிய சித்தப்பா பிள்ளை சுந்தரராமன், வேறு பெயர்களில் சண்டே இண்டுவில் கதை எழுதிப் படம் போட்ட அத்தை பிள்ளைகள் குஞ்சப்பா மற்றும் டூடூ ( யார் என்று தெரிகிறதா )

இப்படி உறவுகளைத் தவிர வீட்டுக்கு வந்து போகும் பலர் -- வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பதால், விடிய விடிய பல நாட்கள் திறந்தே கிடக்கும் வீட்டு வாயில் கதவு....

வீட்டுக்கு வருபவர்களெல்லாம் தவறாமல் கேட்கும் கேள்வி -- சீலி மிகவும் பெருமிதம் கொள்ளும் கேள்வி-- "இப்ப சீலி விஷமம் எப்படி இருக்கு?" . ஒரு தரம் சீலியின் விஷமத்துக்கு யாரோ செமத்தியாய் அடித்து விடுகிறார்கள். அடி வாங்கிய சீலிக்கு கண் மண் தெரியாத பெரும் கோபம் வந்து விடுகிறது. நம்மில் பலரும் கோபம் வ்ந்தால் கையில் கிடைத்ததைத் தூக்கி எறிவோம் அல்லவா !!! சீலி அப்படி எதை எடுக்கிறான் என்று யூகியுங்கள் பார்ப்போம்.

எங்கள் வீட்டில் அப்படி அடிக்கடி அகப்பட்டுக் கொள்ளும் பொருள் என்ன என்று யோசிக்காமலே ஞாபகம் வந்தது. டி.வி ரிமோட். அதுவும் கிரிக்கெட் பார்க்கும் போது ரிமோட் படும் பாடு சொல்லி மாளாது. யாராவது காட்ச் மிஸ் செய்யும் போது, பிடித்த விளையாட்டு வீரர் அவுட் ஆகும் போது, அம்பயர் எல் பி டபிள்யூ கொடுக்காத போது அல்லது ராங் எல் பி டபிள்யூ கொடுக்கும் போது என்று பல தருணங்களில் ரிமோட் மேலே பறக்கும் அல்லது சுவரில் முட்டிக் கொள்ள அனுப்புவோம். இனி ஏழேழு ஜென்மத்துக்கும் இந்த வீட்டில் மட்டும் ரிமோட்டாக வந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொள்ளும் அளவுக்கு அதைப் படுத்தியிருக்கிறோம்.

என்ன... இதே போல் உங்கள் வீட்டிலும் கோபம் வந்தால் அகப்படும் பொருள் ஞாபகம் வந்திருக்குமே !!! சிலருக்கு மனைவி-- பூரிக்கட்டை ஜோக் கூட நினைவு வரும். ஆனால் சீலிக்குக் கையில் அகப்பட்டது என்னவென்று நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. புத்தகம் படித்தவர்கள் சொல்லாதீர்கள். இனிமேல்தான் படிக்கப்போகிறவர்கள் யூகித்துக்கொண்டே இருங்கள். படித்த பிறகு உங்கள் யூகம் சரியா என்று ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். :-)

நிமிஷத்துக்குப் பத்து பொய்கள் சொல்ல அஞ்சாதது , பால் என்று நினைத்து பினாயிலைக் குடித்தது, நெய் டப்பாவில் மணல் மணலாக இருக்கிறது என்று நினைத்து கைப்பிடி (நிஜ) மணலை அந்த டப்பாவில் போட்டது, குதிரை வண்டியில் அம்மா போய்க்கொண்டிருக்கும் போது நானும் வரேன் என்று வண்டியின் பின்னாடியே ஓடியது, என்று பல இடங்களில் திருமதி அருணா சாய்ராம் பாடும் விஷமக்காரக் கண்ணன் பாட்டு மனதில் ரீங்காரமிடுகிறது.

அப்படியென்றால் வெறும் விஷமம் மட்டும்தானா நம்ம சீலி ?? இல்லை. தேவைப்படும் நேரங்களில் அம்மாவுக்கு உதவியாக பத்து பாத்திரம் தேய்த்துக் கழுவித்துடைத்து வைப்பது, வீட்டைப் பெருக்குவது, ஒட்டடை அடிப்பது, சாக்கடையைக் குத்தி அடைப்பை நீக்குவது, ராத்திரி படுக்கைகளைச் சரியான ஆர்டரில் போடுவது என்று சீலி படு சமத்தும் கூட.

ஒரு இடத்தில் சீலி சொல்வதைப் பாருங்கள் -- எங்களை நாங்களே எண்டெர்டெயின் பண்ணிக் கொள்ளப் பழக்கப்படுத்திக் கொண்டு சந்தோஷமாக இருப்போம். மூட்டைப்பூச்சிக்கு மோட்சம் கொடுப்பது இரவு நேரப் பொழுதுபோக்கு என்றால் பகல் நேரங்களில் பல வழிகள். இது தவிர சீசன் வாரியாக காத்தாடி, கோலி, பம்பரம் வகையறா... வீட்டிற்குள்ளேயே முற்றத்தில் விளையாடும் பாட்மிண்ட்டனும் ரிங் டென்னிஸும்.... சாவு ஊர்வலம் வேடிக்கை பார்ப்பது, அப்படியே அதில் பணம் சம்பாதிப்பது....!!

இல்லையா பின்னே... சாலையில் இறைக்கப்படும் காசுகள் யாரும் எடுத்துக் கொள்ளத்தான் என்பது சரியான லாஜிக் தானே!!! அப்படிக் கிடைத்த காசில் பிடித்த பண்டம் வாங்கிச் சாப்பிடுவது எவ்வளவு இன்பம்..... ஆனால் வீட்டுப் பெரியவர்களுக்கு இதெல்லாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிகிறதா.... கடுமையான திட்டு, பயமுறுத்தல்களினால் இந்த அருமையான வழி கை நழுவிப் போன பிறகு, சீலி சில்லறைக் காசு சம்பாதிக்க மேற்கொள்ளும் புதுப்புது உத்திகள் ....

அப்போதே நாடகங்கள் போட்டுப் பழகிய சீலிக்கு மிகவும் பிடித்த வேஷம் பீமன். அதற்குக் காரணம் காஸ்ட்யூமோ வசனமோ அல்ல. அந்த வேஷத்துக்கு கிடைக்கும மூன்று உருண்டை குழம்பு சாதம் தான் !!!

முதன் முதலில் தொலைபேசியில் பேச ஆசைப்பட்டுப், பின்விளைவுகளைப் பற்றிச் சிறிதும் நினைத்துப்பார்க்காமல் சீலி டயல் செய்யும் நம்பரும் எதிர்முனைக்காரரிடம் சொல்லும் விஷயமும், பின்னர் பயந்து நடுங்குவதும்.. ரெயில்வே லெவல் க்ராஸிங் கேட் மூடவதற்கு சீலி நினைத்துக் கொண்டிருந்த காரணமும் நினைக்கும் போதே சிரிப்பை வரவழைக்கிறது.

இப்படி சிரிக்கச் சிரிக்க நம்மிடம் பேசிக் கொண்டு வரும் சீலி, பள்ளிக்கூடத்தில் முதல் தேதியே ஃபீஸ் கட்ட முடியாமல் ஃபைனுடன் சில நாட்கள் கழித்துக் கட்டுவதையும், தன் வீட்டில் ஏனோ சில சமயம் சாமான் உள் காலியாக இருந்ததையும், காலை உணவு சாப்பிடவே மதியமாகி விடுவதையும், யார் யார் வீட்டுக் கல்யாணங்களோ தங்கள் புரசைவாக்கம் வீட்டில் நடக்கும் போது அவர்களுக்கு டிபன் பரிமாறி (!) தானும் பந்தியிலேயே சாப்பிட்டு, கௌரவம் பார்த்துக் கொண்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸுக்கு தானே மாடிக்குச் சென்று சப்ளை செய்ததையும் கூட வேடிக்கையாகப் பகிர்ந்து கொள்ளும் சீலி, கடைசி இரு அத்தியாயங்களில் சொல்லும் விஷயங்களில் , நம்ம சீலிக்கு இப்படி ஒரு துயரம் நடந்து விட்டதே என்று வருத்தப்பட்டுக் கண் கலங்காமல் இருக்கவே முடியாது. சீலிக் கண்ணா, அழாதடா என்று சொல்லத்துடிக்கிறோம். கோவில் கோவிலாகச் சென்று சீலி ப்ரே பண்ணும் போது நாமும் அந்தப் ப்ரேயரில் சேர்ந்து கொள்கிறோம்.

ஒரே சமயத்தில் சீலியின் குறும்புகளையும் ரசித்து, நம்மையும் நம்முடைய இளமைப் பருவத்துக்குப் போகச் செய்து, கொடுத்த விலைக்கு (ரூ. 55/-) மேலே பல மடங்கு திருப்தியைத் தரும் இந்தப் புத்தகத்தில் சீலியை வரைந்திருப்பவர் ஓவியர் திரு கோபுலுஅவர்கள்.

சுருட்டைத்தலை முடியும், கட்டம் போட்ட சட்டையும், ஏற்கனெவே முகம் பூரா குறும்பும் அப்பிக்கிடக்கும் சிறுவனுக்கு ஒரு வால் வேறு வைத்திருக்கிறார். பொழுதை உபயோகமாகக் ( !! ) கழிக்க சீலி ஒரு தையல் கடையில் டெயிலர் வெட்டிப் போட்ட பெரிய துண்டுகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போடும் படம் ஆஹாஹா, பலே பேஷ்..... நாக்கைத்துருத்திக் கொண்டு சீலி மிகக் கவனமாக ( !!!! ) துணி வெட்டுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தப் படத்தில் டெயிலரும் தான் துணி தைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் துணி தைக்கும் அவரை விட, சும்மா வெட்டிப் போடும் சீலியின் முகத்தில் தெரியும் அந்தக் கவனம்... அப்படியே உயிரோவியம் தான். . புத்தகத்தின் இறுதியில் போட்டிருக்கும் படமும் எழுதப்பட்ட வாசகங்களும் க்ளாசிக். சுவாரசியம் கெடக்கூடாது என்பதால் மற்ற படங்களைப் பற்றி விவரிக்கவில்லை.

வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்து விகடனை ஒளித்து வைத்துப் படித்த சீலி, ( பின் நாளில் அதே விகடனில் கார்ட்டூன்கள் வரைந்தவர் ) , முதன் முதலில் வரைந்து வெளியானது என்ன தெரியுமா? ( சீலியின் சிறு வயதுக் குறும்புகளில் அதுவும் ஒன்றாக்கும் )

மொத்தத்தில் புத்தகத்தைப் படிக்கப் படிக்க நம் வீட்டுச் சீலிச் சுண்டெலிகளின் ஞாபகம் ஆங்காங்கே வருவது உறுதி. யார் கண்டது, உங்கள் வீட்டின் சீலியாக நீங்களே கூட இருந்திருக்கலாம். ..


புத்தகம் -- சின்ன வயதினிலே
ஆசிரியர் -- திரு மெரீனா
விகடன் பிரசுரம் ரூபாய் 55 /-

Read More...

விஜயகாந்த் அடி


நீதிமன்றத்தில் விஜயகாந்த் நேற்று ஆஜரானார். விஜயகாந்த் கூட தேமுதிக தொண்டர்கள் குவிந்தனர். போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் தவித்தனர். அப்போது தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி கூட்டத்தினரை அடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தினரை அடிக்கும் போது 'தவறுதலாக' விஜயகாந்த் தலையிலும் ( சிலர் தோள் என்று சொல்லுகிறார்கள்) ஒரு அடி விழுந்தது.

பார்த்தசாரதி கிரிக்கெட் ரசிகராக இருப்பார்.பந்தை அடிக்க அடிக்க தான் மேலே வரும். அதே போல விஜயகாந்தை அடிக்க அடிக்க தான் அவர் மேலே வருவார் என்று நினைத்திருப்பார்.

Read More...

Wednesday, February 27, 2013

ஒரு சிறுவனின் மரணம் - க்ருஷ்ண குமார்

இரண்டு பெரிய ஆண்கள் முன்னால் ஒரு சிறுவன் நிற்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அச்சிறுவன் தான் அந்த தவறைச் செய்திருக்க வேண்டும் என்று நம்பும் அவர்கள், கோபத்தில் அவனை அடிக்கத் தொடங்குகிறார்கள். தாங்கள் அவனின் ஆசிரியர்கள் என்பதால் அவனை அடிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அச்சிறுவனுக்கு உதவ இப்போது எந்த நாதியும் இல்லை. அச்சிறுவன் உயர் சாதியா, தலித்தா அல்லது மலைவாழ் மக்களைச் சேர்ந்தவனா என்பதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே இல்லை. எந்த நாதியும் இல்லாமல் அவன் தனித்துவிடப்பட்டது தான் இங்கே பிரச்சனை. அந்த நொடியில், கொடுரமான விழைவுகளில் இருந்து அவனைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட எந்த ஒரு அமைப்பும் நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறான். ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமை கோட்பாடுகளோ, சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய ஆணையமோ (National Commision for Protection of Child rights - NCPCR) அவனைக் காப்பாற்ற முடியாது. எப்படிப்பார்த்தாலும் இதில் அரசால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனென்றால் அதே அரசின் அதிகாரத்தைக் கொண்டு அதன் மேற்பார்வையில் தான், சிறுவனை இறக்கமில்லாமல் கண்டபடி அடிக்கும் இந்த இரண்டு பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அரசாங்க பள்ளிகளிலோ அல்லது தனியார் பள்ளிகளிலோ எங்கே வேலை செய்தாலும் சரி, சிறுவர்களின் மனம் மற்றும் உடல் மீதான உரிமையை சட்டப்பூர்வமாக எடுத்துக்கொள்வது அரசாங்கத்திற்கு இருக்கும் அதிகாரத்தின் மூலம் தான்.

அந்த இருவரும் அச்சிறுவன் நிலைகுலைந்து விழும் வரை அவனை நையப்புடைத்திருக்கிறார்கள். அவனுடைய பெற்றோர் பக்கத்து நகரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே மருத்துவர்கள் சிறுவனுடைய முதுகுத்தண்டு நொறுங்கியிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் பரிந்துரைத்த சிகிச்சை முறை செலவு பிடிக்கக்கூடியது என்பதால், அவனுடைய பெற்றோர் வேறோர் நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே, சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்க்கும் போது, பள்ளியில் இருந்த வாளி உடைந்துவிட்டதை சிறுவன் தனது ஆசிரியர்களிடம் தெரிவித்திருக்கிறான்; அவனே உடைத்திருக்கக் கூடும் என்று அவர்கள் சந்தேகப்பட்டிருக்கிறார்கள். இது மத்தியப்பிரதேச மாநிலம் பீட்டுலில் இருக்கும் ஒரு அரசு பள்ளியில் நடந்த சம்பவம். ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார், அடுத்தவரையும் வெகு விரைவில் போலீஸ் கைது செய்யக் கூடும். தொடந்து வழக்கு நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை. சிறுவர் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் தன்னுடைய விசாரனையை முடித்து, வழக்குக்கு வலுசேர்க்கக்கூடும். அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, அனைவரும் சொல்வதுபோல், சட்டம் தன் கடமையைச் செய்யும். இந்த வழக்கு தன்னுடைய பாதையில் பயணிக்கத்தொடங்கியிருக்கும் போது, நாம் ஒரு புதிய கேள்வியை எழுப்பலாம், உடனடியாக பதில் கிடைக்கப்போவதில்லை என்றாலும் கூட நாம் கேள்வியை எழுப்பலாம்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அடிப்பது குற்றம் என்பதால் இங்கே இவர் குற்றம் செய்தாரா என்ற சந்தேகமெல்லாம் இல்லை. புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அடிப்பதை தடை செய்யக் கோருகிறது; அதாவது ஆசிரியர்கள் சிறுவர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை அடிக்கக்கூடாது. அப்படி அடித்து, அதனால் காயமோ மரணமோ ஏற்பட்டிருந்தால் ஆசிரியர் குற்றவாளி என்பதில் சந்தேகமே இல்லை. இங்கே சட்டம் செய்ய வேண்டிய ஒரே வேலை, மாணவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதையும், அதனால் தான் மரணம் நேர்ந்திருக்கிறது என்பதையும் உறுது செய்வது. பள்ளிக்கூடத்தில், ஆசிரியர் மட்டுமெ சிறுவர்களின் உடல் மேது அதிகாரம் எடுத்துக் கொள்ள முடியும்; அதுவும் கூட சிறுவர்களின் மூளை (அறிவு) அவர்களின் பொறுப்பு என்பதிலிருந்து அவர்கள் எடுத்துக் கொள்வது தான். ஆசிரியர் என்ற பொறுப்பில் அமர்த்தப்படுவதன் மூலம், பெரியவர்களுக்கு சிறுவர்களின் உடம்பு மீதான உரிமை (access) போய்ச் சேருகிறது. “ஆசிரியர்களை இந்தப் பொறுப்பில் அமர்த்துவது யார்?” என்பதே நாம் கேட்க வேண்டிய கேள்வி. இந்தக் கேள்வி, அந்தச் சிறுவனின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவும்.

கடந்த இருபது வருடங்களில், சமூகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நிலையும் அவர்களின் அந்தஸ்தும் அதிகளவு மாறியிருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மாணவர்களின் நிலையை மேம்படுத்தியிருப்பதோடு, அரசாங்கத்துக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது; ஆனால் பள்ளிகளில் குழந்தைகளின் நலனுக்கும் அவர்களின் முன்னேற்றத்துக்கும் பொறுப்பானவர்கள் ஏழை கீழ்நிலை ஊழியராகவே இருக்கிறார்கள். குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில், தொடர்ந்த நிர்வாக குளறுபடிகளால், ஆசிரியர்களின் நிதி மற்றும் சமூக நிலைமை பெரிதும் மாறியிருக்கிறது. அரசியல் மாற்றங்களும் கொள்கை மாறுதல்களும் இவர்களின் நிலையை ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி (1993-2003) தொடங்கி வைத்த தொடர் கொள்கை சீர்த்திருத்தங்களை தற்போதைய பி.ஜே.பி அரசும் தொடர்கிறது. ஆசிரியர்களுடைய வாழ்க்கையின் மாற்றங்கள் எப்போதுமே தேசிய அளவில் உருவாகும் கொள்கை முடிவுகளைப் பொறுத்தே இருந்திருக்கிறது.

1990களில், உள்ளூர் குழுக்களை தொடக்கப்பள்ளிகளை தொடங்க அனுமதிப்பதுடன் அப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்துக்களிடம் அளிப்பதன் மூலம் கல்வி அமைப்பில் மாற்றம் செய்ய முடிவு செய்தது. பல வழிகளில் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்த கொள்கைகள் மாற்றப்பட்டன. ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களை தேயும் (dying cadre) ஊழியர்களாக நடத்த முடிவு செய்து, பழைய ஊதிய அளவில் எந்த புதிய ஊழியரையும் அமர்த்தக் கூடாது என்று முடிவு செய்தது. புதிய ஆசிரியர்களுக்கு சாதாரண பயிற்சியும் குறைவான சம்பளமும் தரப்பட்டது. இந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வந்த போது, அதன் அரசியல் ஆதாயம் கருதி, பழைய ஊதியத்தைவிடவும் குறைந்த ஊதியத நிலைகள் உருவாக்கப்பட்டன. மற்ற வடஇந்திய மாநிலங்கள் இந்த ஆசிரியர்களிடம் பிரச்சனைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட போதும், மத்தியப் பிரதேச அரசு இவர்களை முழுமையான ஆசிரியர்களாக அங்கீகரித்தது. முதலில் மத்தியப் பிரதேசம் மட்டுமே இப்படியொரு ‘சிறந்த’ முறையைக் கையாண்டது. பின்னர் பீகாரும் இதையே பின்பற்றி, பணி நிறைவு அடையும் ஆசிரியர்களுக்கு பதிலாக இந்த குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்களை நியமித்தது.

மேலே சொல்லப்பட்ட வரலாறே, சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு இருந்த மதிப்பு, கடந்த இருபது வருடங்களில் எப்படி குலைந்து போயிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கும். கொஞ்சமாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பவருக்கோ குழந்தைகளுக்கிடையில் பணி செய்ய விரும்புபவருக்கோ தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி இன்றைக்கு ஏற்புடையதாக இல்லை. தேர்வு முறை என்பது இந்தப் பணிக்கு கட்டாயம் இருக்க வேண்டிய பண்புகளும் திறமைகளும் இருக்கிறதா என்பதை பார்ப்பதில்லை; ஒருவர் பெற்ற பட்டங்கள் மூலமே பணிக்கு அவர் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் இந்த பட்டங்களுக்கும் அவர்களுடைய பண்புகளுக்கும் திறமைகளுக்கும் துளி கூடச் சம்பந்தம் இல்லை. இந்த பணிக்கு ஒருவரை தகுதியுடையவராக்கும் பயிற்சி வகுப்புகளின் பெறுமானம் மிக மிகக் குறைவு. இந்த பயிற்சியை அளிக்க அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் பல போலிகள் தாம். உச்சநீதிமன்றம், நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் அமைத்த ஒரு ஆணையம், மகாராஷ்டிரத்தில் கல்வியில் டிப்ளமோ பட்டம் வழங்கும் மொத்தமுள்ள முன்னூறு கல்வி நிறுவனங்களில் நாற்பத்தி நாலு மட்டுமே தகுதியுடையவை என்று கண்டறிந்தது. மற்ற மாநிலங்களிலும் நிலைமை இது மாதிரித்தான் இருக்கும். தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான இரண்டு வருட பட்டயப் (டிப்ளமோ) படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதி பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சி தான்.

ஆறு முதல் பதினோரு வயதுக் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய ஒருவரிடம் உணர்வு முதிர்ச்சியோ அறிவு முதிர்ச்சியோ எதிர்பார்க்கப்படுவதில்லை. பயிற்சி என்ற பெயரில் இளைஞர்களை தேவையில்லாத சடங்குகளை எல்லாம் பின்பற்ற வைக்கிறார்கள், அதுவும் கூட தபால் மூலமாகவோ தொலைதூரக் கல்வி மூலமாகவோ தான் நடக்கிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் உருப்படியானது என்று சொல்லக்கூடியது ஒன்றே ஒன்று தான். அது தில்லி பல்கலைக்கழத்தின் எட்டு கல்லூரிகளில் நான்கு வருடப் படிப்பாக பயிற்றுவிக்கப்படும் Bachelor of Elementary Education (B.El.Ed) தான். இந்த நல்ல படிப்பு மேலும் பல இடங்களில் பயிற்றுவிக்கப்படவேண்டும்; ஆனால், தில்லி பல்கலைக்கழகம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைத் தயாரிக்க இரண்டு வருட டிப்ளமோ படிப்பு ஒன்றை தொடங்கவிருப்பதாக கேள்விப்படுகிறோம். இரண்டு வருடம் என்ற குறைந்த காலத்தில் போதுமான கல்வியும் அதற்குவேண்டிய பயிற்சியும் போதுமான அளவு கிடைக்காது என்பதை உணர்ந்து அவர்கள் இந்த புதிய படிப்பை கைவிட வேண்டுமென்பதே என் விருப்பம்.

இப்போது மீண்டும் பீட்டுல் கதைக்கு வருவோம். சிறுவன் இறப்புக்கு யார் காரணம் என்று முடிவெடுக்க சட்டத்துறை அனைத்து ஆதாரங்களையும் திரட்டும் போது, இதில் மாநில அரசின் பொறுப்பும் கேள்விக்குள்ளாக்கப்படுமா? அச்சிறுவனை மூர்க்கமாகத் தாக்கிய ஆசிரியர்களை பணியில் சேர்த்துக் கொண்டதன் மூலம் அவனுடைய உடல் மீதான உரிமையை அவர்களுக்கு அளித்தது இந்த அரசாங்கமே. ஒரு சிறுவனின் நலத்தையும் உரிமையையும் இவர்கள் காப்பாற்றுவார்கள் என்று எந்த விதத்தில் அரசாங்கம் முடிவு செய்தது என்று நீதிமன்றம் அரசிடம் கேட்க வேண்டும். இந்த வேலையைச் செய்ய இவர்களுக்கு என்ன விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டது என்பதையும் நீதிமன்றம் வினவ வேண்டும். ஆசிரியர் பணியை இவர்களால் சரியாகச் செய்ய முடியாததற்கு கட்டாயம் யாராவது விளக்கமளிக்க வேண்டும். சிறுவர்களின் நலனைக் காக்க வேண்டிய அரசாங்கம், அவர்களுக்காக ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் கொண்டிருக்கும் மெத்தனப்போக்கே இது எல்லாவற்றுக்கும் காரணம் என்பது தான் பதிலாக இருக்கும். இந்த மெத்தனப் போக்கு, கல்வி உரிமைச் சட்டம் மற்றும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த நோக்கங்களை ஒரு நாளும் நிறைவு செய்யாது.

(எழுதியவர் தில்லி பல்கலையின் கல்வியியல் துறையில் பேராசிரியராக இருப்பவர்; NCERTயின் முன்னாள் இயக்குனர்.)

மூலம் : http://www.thehindu.com/todays-paper/tp-opinion/the-death-of-a-small-boy/article4211581.ece

Read More...

Tuesday, February 26, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 4

இசையில் தொடங்குதம்மா:
நமது மூளைக்கும், இளையராஜாவின் மூளைக்கும் அமைப்பிலும், இயங்கும் விதத்திலும் நிச்சயமாக நிறைய மாற்றங்கள் இருக்கும். காரணம்-இசை.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்து வரும் ஆய்வுகளில் தெரிய வருவது இதுதான். குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கப் படும் இசையால், அவர்களின் மூளையின் அமைப்பில், செயல்பாடுகளில் நல்ல வளர்ச்சியை உருவாக்க முடியும் என்பதே.
இந்த உலகிற்கு வரும் முன்னரே, குழந்தைகள் அம்மாவின் குரலை, தனித்து இனங்கண்டு கொள்ளப் பழகி விடுகின்றன.சொல்லப் போனால், குழந்தை கேட்கும் முதல் இசையும் அதுதான்.அம்மாவின் குரலை அரவணைப்பாக உருவகப் படுத்தும் குழந்தை, பிறந்த பின்னரும் அதையே தொடர்கிறது;


கர்ப்பத்தில் இருக்கையிலேயே பழக்கப் படுத்தப் பட்ட , கேட்ட எந்த ஒரு இசையுடனும், ஒலியுடனும்-அது அம்மா பாடிய பாடலோ, வாசித்த ஏதேனும் ஒரு இசைக் கருவியின் இசையோ அல்லது உரக்கக் கேட்ட இசையோ-, குழந்தை வெகு விரைவாக அதனுடன் ஒத்திசைய முடிகிறது.

பேச முயற்சிப்பதற்குப் பல வாரங்களுக்கு முன்னரே, குழந்தைகள் தாயின் தாலாட்டுப் பாடல்களுக்கு பதில் கொடுக்க ஆரம்பிக்கின்றன. தொட்டிலில் போட்ட என் எட்டு மாதக் குழந்தையை ஆட்டிக் கொண்டே, ரே..ரே…ரே..ரே.. என்று ராகம் போட்டுக் கூவி, சட்டென்று நிறுத்தினால், நான் விட்ட இடத்திலிருந்து அவனும் ரே ரே என்று மழலையில் தொடரக் கேட்டிருக்கிறேன். குழந்தைகள்,தங்களை அறியாமலேயே ஒலியை உள்வாங்கி அதற்கு பதில் தருகின்றன.பொருள்களைத் தொடுகையில், கீழே போடுகையில், தட்டுகையில், கரண்டி போன்ற ஏதேனும் ஒன்றை வைத்துத் தட்டுகையில் உண்டாகும் ஒலியால் அவர்கள் கவர்ந்திழுக்கப் படுகிறார்கள்.

என் ஒன்றே கால் வயது மகன், காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களுக்குள்,நேராக சமையலறைக்கு வந்து கைக்குக் கிடைத்த பாத்திரம், கரண்டியைக் கொண்டு லொட்டு லொட்டென்று அவனுக்குத் தெரிந்த சுப்ரபாதத்தை இசைப்பது தினசரி வாடிக்கையாகி விட்டது.

குழந்தைகளின் நகர்வு இயக்கத்திற்கும், அவர்களின் ஒலி எழுப்பும் திறனுக்கும் உள்ள தொடர்பை நரம்பியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். சில குறிப்பிட்ட நகர்வு இயக்கங்களை மேற்கொள்ள முடியாத குழந்தைகளால், சில குறிப்பிட்ட ஒலியையும் உண்டாக்க முடியவில்லை.

இசையும், நகர்வும் ஒருமித்த ஒரு உருவாய் குழந்தை வளர்கிறது.தன் உடலையே ஒரு இசைக் கருவியாக இந்த உலகுடன் இயைந்து இசைக்கும் இசையாக வளரும் குழந்தையின் கட்டுப்பாடுகளற்ற நகர்வு பள்ளிக்கு சென்ற பிறகு, அதன் இயல்புத் தன்மையை இழக்கத் துவங்குகிறது.

அறிவியல் உலகில்,குழந்தையின் மூளை வளர்ச்சியில் இசைக்கு இருக்கும் பங்கு குறித்த விவாதங்கள் நீண்ட காலமாக நிகழ்ந்து கொண்டே இருந்தன.

மொஸார்ட்டின் இசையைக் கேட்ட குழந்தைகளின் ந்யூரான் செல்களின் அடர்த்தி (density) அதிகமாகி அதன் காரணமாக ஞாபக சக்தி, புதிர்களுக்கு பதில் சொல்லும் திறன்கள் அதிகரித்ததை ஆய்வு முடிவுகள் உணர்த்தின.
மிகக் குறைந்த வயதிலேயே இசையைக் கற்றுக் கொண்ட குழந்தைகள் மொழித் திறன், கணிதத் திறன், செஸ் போன்ற நுட்பமான விளையாட்டுகளை விளையாடத் தேவையான ஒன்றிரண்டு படிகள் அட்வான்ஸாக சிந்திக்கும் திறன் ,ஞாபக சக்தித் திறன்,மற்றும் பொதுவான ஐ.க்யூ போன்ற எல்லாத் திறன்களும் அதிகரித்து விளங்கின. இது போன்று, இசையால் Spatial Temporal Reasoning, and Language Analytical Reasoning திறனும் அதிகரிப்பதை “Mozart Effect” என்று அழைக்கிறார்கள்.(இந்த “Mozart Effect” குறுகிய காலத்திற்கே என்று வாதிடுவோரும் உண்டு). சிக்கலான கணிதப் புதிர்களை விடுவிக்க மூளையின் எந்தப் பகுதி நன்கு செயல்பட வேண்டுமோ, அந்தப் பகுதியை இசை நன்கு தூண்டி செயல்பட வைக்கிறது.எனவே, இசையில் ஆர்வமுடன் இருக்கும் குழந்தைகள் கணிதப் புலிகளாகவும், கணிதத்தில் புலிகளாக இருக்கும் குழந்தைகள் இசையை வெகு சீக்கிரமும் கற்க முடிகிறது.
உலகப் புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜனுக்கு, கணிதத்திற்கு அடுத்து இசையில்தான் பெரும் ஆர்வம் இருந்ததாம். சென்னையில் இருக்கையில் அப்போதைய இசை மேதை டாக்டர்.எம்.டி.ராமனாதம் அவர்களது கர்நாடக இசைக் கச்சேரியைத் தவற விட மாட்டாராம். இசை ஆர்வத்தினால் ஒரு குழலை வாங்கி அதை வாசித்துப் பயிற்சி பெற்று வாசித்ததோடு மட்டுமல்லாமல், இசை ரசனையுள்ள நண்பர்களுடன் அடிக்கடி சந்தித்து இசை குறித்த கருத்துக்களைப் பகிரவும் செய்வாராம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி பரவலாக நமக்குத் தெரியாத விஷயம், அவர் மிகச் சிறந்த இயற்பியல் விஞ்ஞானி மட்டுமல்ல; வயலின் இசையை மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கும் கலைஞரும் கூட.எப்போதெல்லாம் தன் ஆராய்ச்சிப் பணிகள் சிக்கலாகி, தீர்வுகளைக் கண்டறிய சிரமப் படுகிறாரோ, அப்போதெல்லாம், ஒரு சிறு பிரேக் எடுத்துக் கொண்டு, மொஸார்ட்டின் இசையை தனது வயலினில் இசைத்து மகிழ்வாராம்.
வெவ்வேறு வகையான இசையானது மூளையில் வெவ்வேறு விதமான அலைவரிசையை (ஆல்ஃபா, பீட்டா போன்ற ) உருவாக்க வல்லவை. மிகுந்த சப்தத்துடன் கூடிய ஹெவி மெட்டல்,ராக் போன்ற இசையை விடுத்து, மெல்லிய, க்ளாசிக்கல் வகை சங்கீதத்தை குழந்தைகளைக் கேட்க வைக்கலாம்.
இசையினால் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் வளர்ச்சிகள் எல்லாமே, வெறுமனே இசையை, அவர்கள் கேட்பதால் மட்டுமே நிகழ்ந்து விடுவதில்லை. ஏதேனும் ஒரு இசைக் கருவியை (பியானோ அல்லது வயலின் அல்லது வேறு ஏதேனும் ஒன்று) வாசிக்கப் பயிற்சி பெறுவதே மேற்கூறிய எல்லா நல்ல பலன்களையும் ஒருசேர அளிக்க வல்லது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் வயதும் அதற்கேற்ற இசைப் பயிற்சியும்:
கர்ப்ப காலத்தில்:
நல்ல இனிமையான, மெல்லிய இசையை தொடர்ந்து கேட்கவும்
பச்சிளம் குழந்தைகள்:
மெல்லிய, சிறிய, தாலாட்டுப் பாடல்கள், நர்சரி ரைம்ஸ்களை, குழந்தைகளைக் குளிப்பாட்டுகையில், உடை அணிவிக்கையில், உணவு ஊட்டுகையில், உறங்க வைக்கையில் பாடலாம். திரும்பத் திரும்ப வரும் வாக்கியங்கள் இருப்பது குழந்தைகள் கிரகித்து மகிழ்வதற்கு எளிதாக இருக்கும். தாளத்துடன் கூடிய ரித்மிக் பாடல்களை, அவர்களை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தோ, அவர்கள் கைகளைத் தட்டச் சொல்லியோ கற்றுக் கொடுத்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் அவர்களது பாணியில் பதிலுக்கு இசைப்பதைக் காணலாம்.
தவழும் குழந்தைகள்:
ஒன்றரை வருடம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் சின்னச் சின்ன பாடல்களை விரும்புவர். ஞாபக சக்தி இன்னமும் முழுவதும் வளராத இந்தப் பருவத்தில் ஒரு சில வார்த்தைகளையே அவர்களால் நினைவில் கொள்ள முடியும்.நகர்வும், இயக்கமும் அவர்களுக்கு மிகவும் விரும்பத் தக்கதாகி, கையசைவுகளுடன் கூடிய நர்சரி ரைம்ஸ்கள் ஒரு ஆர்டர் படி நினைவில் கொள்ள வசதியாக இருக்கும்.மீண்டும் மீண்டும் சொல்லப் படும் ரைம்ஸ்களை நினைவில் வைத்திருந்து சொல்ல முடியும்.

பள்ளிக்கு முந்தைய குழந்தைப் பருவத்தில்: (pre-schoolers)
இந்தக் குழந்தைகள், நர்சரி ரைம்ஸ்,பாடல்கள்,அறிமுகமான பொருள்கள், பொம்மைகள்,விலங்குகள்,விளையாட்டு அசைவுகள், அறிமுகமான மனிதர்கள் என அனைத்தையும் விரும்புவர்.விரல், கைகளால் இசைக்கக் கூடிய கருவிகள், இசையுடனோ, அல்லது இல்லாமலோ ஒலிக்கும் பாடல்கள் போன்றவற்றை அறிமுகம் செய்யலாம்.இந்த காலகட்டத்தில், வெவ்வேறு இசையின் வெவ்வெறு வடிவங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். நாட்டுப் புறப் பாடல்கள், சிம்ஃபொனிகள், ஒபேராக்கள்,ராக் அன் ரோல், அவர்கள் பார்த்த படங்களின் சவுண்ட் ட்ராக்ஸ் என எல்லாவற்றையும் அறிமுகப் படுத்தவும்.அவர்களை வெவ்வேறு விலங்குகளாக உருவகப் படுத்தி, அந்த விலங்குகளின் ஒலிகளை, வெவ்வேறு வாகனங்கள், பறவைகள் போல ஒலி எழுப்பச் சொல்லி கற்றுத் தரவும்.பின்பு அவைகளை இசை வடிவில் அவர்களுக்குப் போட்டுக் காட்டவும்..

குழந்தைகளுடன் சிறு சிறு நடன் அசைவுகளை நீங்களும் மேற்கொள்ளவும். ஐந்து வயதிற்குள்ளாகவே, குழந்தைகளுக்கு நடனமாடக் கற்றுக் கொடுப்பது நல்லது. நடனம் என்றால், சரியான அபிநயம் பிடிக்க ட்ரில் வாங்குவது போன்ற கண்டிப்பான நடனம் அல்ல. குழந்தைகளே மகிழ்ந்து, அவர்கள் நம்மைப் பார்த்து இமிடேட் செய்யும், சில சமயம், அவர்கள் பாணியில் புதிய அசைவுகளைக் கொண்ட அவர்கள் மகிழ்ந்து சிரமமே இல்லாமல் செய்யும் நடனம்.
இசையும் , நடனமும், குழந்தைகளின் புலன்களுக்கு இனிமையாகவும், தாளகதியுடனும் இருத்தல் அவசியம். பாடலின் அர்த்தத்தை விட ஒலியின் அழகை அவர்களை ரசிக்க வைக்கச் செய்ய வேண்டும்.உயிர்ப்புள்ள அசைவுகளும், பதிவுகளும், அவர்கள் காதுகளையும், மனதையும் மகிழ்விக்கின்றன.தாள கதியில் இருக்கும் நடன அசைவுகள் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன.

இசையைக் கற்பிக்க சில டிப்ஸ்:
1.பாடல்களைப் பாடவும்: சூழ்நிலைக் கேற்றவாறு, உறங்க வைப்பதற்கோ, வெளியில் அழைத்துச் செல்கையிலோ அதற்கேற்ற விதமான பாடலைப் பாடவும். குழந்தை பாடா விட்டாலும், அதனுடன் தொடர்புடைய செயலை (கைதட்ட, தலையாட்ட) செய்ய ஏதுவாக இருக்கும்.
2.நீங்களே முழுப் பாடலையும் பாடவும். வரி வரியாக சொல்லித் தர முயற்சிக்காமல், முழுப்பாடலையும், குழந்தை கவனிக்குமாறு பாடவும்.ஒரே பாடலை பலமுறை பாடிக் காட்டவும்.
3.பாடலின் எல்லா வார்த்தைகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிக்காதீர்கள்-எவ்வளவு தெரிகிறதோ அவ்வளவு பாடட்டும். அதுவே இன்பமாக இருக்கும்.
4.பாடலின் ராகம், டெக்னிக் போன்றவைகளை வலியக் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டாம்.அவர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதை விட பாடுகிறார்கள் என்பது முக்கியமானது.
5.குழந்தையின் பாடலை ரெகார்ட் செய்து அவர்களுக்கு மீண்டும் போட்டுக் காட்டவும். அந்தப் பாடலுக்கே அவர்களை ஆடச் சொல்லவும்.
6.அவர்களுக்கு நன்கு தெரிந்த பாடல், ரைம்ஸில் அதில் வரும் பெயரை எடுத்து விட்டு, அவர்கள் பெயரைப் போட்டுப் பாடவும்.
உதாரணம்: ஜானி ஜானி எஸ் பாப்பா
7. மிக மெதுவாக, குழந்தை நீங்கள் விட்ட சொல்லை நிரப்புமாறு பாடவும்.
உதாரணம்: ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்_____________ ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ______________
இசையுடன் அபரிமிதமான ஈடுபாட்டில் இருக்கும் குழந்தையின் அறிவு வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்ல, பிற்காலத்தில் இசையை நன்கு ரசிக்கும் ஒரு இசை ரசிகனாகவும் அவனை மாற்றுகிறது.
எனவே, ஸ்டார்ட் ம்யூஸிக்
டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in


அப்பா: குழந்தைக்கு கணக்கு வரலை, அவனை மியூசிக் கிளாஸுக்கு அனுப்ப போறேன்.

அம்மா: அதுக்கு பதிலா டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பலம் கணக்கு இன்னும் நல்லா வரும்.

அப்பா: ஜோக் அடிக்காதே

அம்மா: நீங்கதாங்க முதல்ல ஜோக் அடிச்சீங்க !

Read More...

யார் கண் பட்டதோ ?

கடந்த ஒரு வாரமாக இட்லிவடையில் எந்தப் பதிவும் வரவில்லை.
முதலில் பிளாகர் டெம்பிளேட்டில் ஏதோ மாற்ற ஆரம்பித்து சொதப்பியது...திரும்ப பழைய டெம்பிளேட்டை கொண்டு வரும் சமயம் என் லேப்டாப் படுத்துவிட்டது.

அதை சரி செய்ய இரண்டு நாள் ஆச்சு, மன்மோகன் சிங் குண்டு வெடித்த இடத்தை பார்த்த அன்று, பில் சரியாக கட்டவில்லை என்று இண்டர்நெட்டை புடுங்கிவிட்டார்கள். 

ஒருவாரம் பதிவு ஏதுவும் வாராதது குறித்து வாசகர் யாரும் பெரிதாக கவலைப்படவில்லை :-)

Read More...

Wednesday, February 20, 2013

வைகோ - ஜெ - திடீர் சந்திப்பு


அப்போது, நெடுஞ்சாலையில், வடக்கு நோக்கி முதல் அமைச்சருடைய வாகனங்கள்

வந்து கொண்டு இருந்தன. தடுப்புச் சுவர் இல்லாத ஒரு இடைவெளியில், திடீரென்று முதல் அமைச்சருடைய கார் வலதுபுறமாகத் திரும்பியது. முதல் அமைச்சர், கார் ஓட்டுநரிடம் கையைக் காட்டி, காரை நிறுத்தச் சொல்லுவது தெரிந்தது.

அதைப் பார்த்து வைகோ அருகில் செல்லுவதற்குள், காரின் கதவைத் திறந்து முதல்

அமைச்சர் கீழே இறங்கி விட்டார். வெயில் நெருப்பாகத் தகித்துக் கொண்டு இருந்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

வைகோ நலமாக இருக்கின்றீர்களா? இவ்வளவு கஷ்டப்பட்டு நடந்து வருகின்றீர்களே?

என்று முதல் அமைச்சர் கேட்டார். ஆம்; நலமாக இருக்கிறேன்; வெயிலுக்காகத்தான் தலைப்பாகை கட்டி இருக்கின்றேன். நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா? என்று வைகோ கேட்டார். அதைக் கேட்டுப் புன்னகைத்த முதல்வர், நான் நலமாக இருக்கிறேன்; எங்கள் ஊருக்கு வந்து இருக்கின்றீர்கள். சாப்பிட்டு விட்டீர்களா? என்று கேட்டார்.

சாப்பிடவில்லை. பையனூரில்தான் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வைகோ கூறினார்.

இதுதானே பையனூர். எங்கே சாப்பிடப் போகிறீர்கள்? என்று முதல் அமைச்சர் கேட்டார்.

உடனே மல்லை சத்யா, இங்கே ஒரு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று சொன்னார்.பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன் உள்ளிட்டோரை, முதல் அமைச்சருக்கு வைகோ அறிமுகப்படுத்தினார். உங்கள் நடைபயணத்தின் கோரிக்கை என்ன? என்று முதல் அமைச்சர் வைகோவிடம் கேட்டார்.

முழு மது விலக்குதான் எங்கள் கோரிக்கை என்றார் வைகோ.அதன்பின் முதல் அமைச்சர், உங்கள் தாயாரையும், உங்கள் துணைவியாரையும், பிள்ளைகளையும் நான் நலன் விசாரித்ததாகச் சொல்லுங்கள் என்றார். அதற்கு வைகோ நன்றி தெரிவித்ததுடன், உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன். 100 ஆண்டுகள் நீங்கள் நலமாக, வெற்றிகரமாக வாழ என் வாழ்த்துகள் என்றார். அதற்கு முதல் அமைச்சர், மிகவும் நன்றி என்றார்.

நாங்கள் நடந்து வருகின்ற இந்தப் பயணத்தில், காரை நிறுத்தி எங்கள் நலன் விசாரித்ததற்கு மிக்க நன்றி என்று வைகோ கூறினார். அதன்பிறகு, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு முதல் அமைச்சர் சென்றார். மரத்தால் செய்யப்பட்ட படிக்கட்டு இல்லாமலேயே காரை விட்டு முதல் அமைச்சர் இறங்கியதும், குடை இல்லாமலேயே ஏழு நிமிடங்கள் வெயிலில் நின்று பேசியதும், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் வைகோவிடம் கேட்டதற்கு, அரசியலில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட்டணியில் இல்லை என்றாலும் அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் நலன் விசாரித்துக் கொள்ளும் அரசியல் நாகரிகத்தை முதல் அமைச்சர் நடைமுறைப்படுத்தி இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது என்றார்.


தனியா நான் வேற எதற்கு ?

Read More...

Tuesday, February 19, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 3

இந்தத் தொடருக்குப் பெருவாரியான ஆதரவை நல்கி வரும் இட்லிவடை வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

குழந்தை வளர வளர, நம் முயற்சி எதுவுமில்லாமலேயே அதன் மூளையும் தன்னிச்சையாக வளர்ந்து விடுவதில்லை.மாறாக, அந்தக் குழந்தையின் மூளை பெறும் அனுபவங்களையும், பயிற்சியையும் பொறுத்தே அது சிறந்ததாக வளர்கிறது.குழந்தையின் மூளையை ஒரு பிரம்மாண்டமான ஸ்பாஞ்சாக உருவகப் படுத்திக் கொள்ளவும்.மெய்,வாய்,கண்,மூக்கு, செவி என்கிற ஐந்து புலன்களால் நிகழும் அத்தனை அனுபவங்களையும் அந்த மாபெரும் ஸ்பாஞ்ச் உறிஞ்சிக் கொள்கிறது. இத்தகைய அனுபவங்களால், எந்த அளவுக்கு மூளையின் இணைப்புத் தொடர்புகள் (Synapses)தூண்டப் படுகின்றனவோ, அந்த அளவுக்கு அந்தப் பிஞ்சு மூளை சூப்பர் மூளையாக வளர்ச்சி அடைகிறது.எத்தனை குறைந்த வயதில் எவ்வளவு அதிகமான தூண்டல்களை,புதிது புதிதான அனுபவங்களை உங்கள் குழந்தைகளுக்குத் தருகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது சூப்பர் குழந்தையாகப் பரிணமிக்கும்.

குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது கணப் பொழுதும் மாறிக்கொண்டே அல்லது இயங்கிக் கொண்டே இருப்பது.அது நிலையாக ஒருபோதும் நிற்பதில்லை.It is either improving or degenerating. முறையான பயிற்சிகளைப் பெறும் குழந்தையின் மூளை வளர்ந்து கொண்டிருக்கையில், பயிற்சிகளற்ற, திறன்கள் சரியாக ஊக்குவிக்கப் படாத மூளை, அதன் ந்யூரல் கனெக்ஷன்களை இழந்து வளர்ச்சியின் வேகம் குறைகிறது.
குழந்தையின் மூளை வளர்ச்சித் திறனை பாதிக்கும் காரணிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

• ஜெனிடிக்ஸ் எனப்படும் பாரம்பரியம்,
• உணவு மற்றும் ஊட்டச் சத்து,
• பெற்றோர்களின் அன்பு,அக்கறை மற்றும் குழந்தையின் செயலுக்கான அவர்களின் பிரதிபலிப்பு,
• குழந்தை தினசரி பெறும் அனுபவங்கள்,
• குழந்தையின் உடல் இயக்கங்கள் இவை எல்லாமே முக்கியக் காரணிகள்.
ஐந்து புலன்களின் வாயிலாகக் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் மூளையின் சர்க்யூட் இணைப்புகளை பலமாக்கி அதன் சாதுர்யத்திற்கு சரியான அடித்தளம் அமைக்கின்றன.
உதாரணமாக இப்படிச் சொல்லலாம்.
அம்மாவின் உடல் வாசம்,(smell)
அப்பாவின் குரல் (hearing)
முகம் பார்ப்பது அல்லது பளபளக்கும் பொம்மையின் கலர் (vision)
மிருதுவான கை அணைப்பு (touch)
பால் குடிப்பது (taste)

அம்மாவின் அணைப்பை உணர்வது, அப்பாவின் குரலை இனங்கண்டறிவது என்று எல்லாவற்றிற்குமே அது அதற்கு என்று குழந்தையின் மூளை சர்க்யூட் போட்டு, ஒரு அமைப்பை (pattern) உருவாக்குகிறது.தொடர்ந்து பலமுறை குழந்தையின் பெயரைச் சொல்லி அழைத்தீர்களானால்,அதன் மூளையில், ”தன்னைத் தான் அழைக்கிறார்கள்” என இனங்கண்டறிவதற்கான சர்க்யூட் கனெக்ஷன்கள் நிகழ்ந்து, நீங்கள் அழைக்கையில் திரும்பிப் பார்க்கக் கற்றுக் கொள்வான்(ள்). இவ்விதமாக,மூன்று வயதாகும் குழந்தையின் மூளையில் 1000 ட்ரில்லியன் கனெக்ஷன்ஸ் உருவாகி இருக்கும்.(இது வளர்ந்த மூளையில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகம்) சுமார் பதினோரு வயதில், தேவையில்லாத சர்க்யூட்டுகளை வெட்டி விட்டு, முக்கியமானவைகளை மட்டும் தக்க வைத்துக் கொள்கிறது.
திரும்பத் திரும்பக் கிடைக்கும் அனுபவங்களின் வாயிலாக மூளையின் சினாப்ஸிஸ்கள் பலப்படுத்தப் பட்டு, தனித் தனி இணைப்புகள் அதற்கென்று உருவாகின்றன.உபயோகிக்கப் படாத இணைப்புகள் கழற்றி விடப் படுகின்றன.(based on “Use or Lose” it principle).


வலது மற்றும் இடது மூளை:
மனித மூளையின் சிந்திக்கும் தன்மை வலது மற்றும் இடது மூளையினால் வேறுபடுகிறது.கீழ்க்கண்ட அட்டவணை வலது மற்றும் இடது மூளையின் வேறுபட்ட சிந்திக்கும் திறனைக் காட்டுகிறது.
Right and Left Brain Functions
http://shiftoftheage.files.wordpress.com/2010/03/right-left-brain-functions.jpg
நாம் ஒவ்வொருவரும் வலதோ, இடதோ ஏதோ ஒரு மூளையின் ஆதிக்கம் அதிகம் உடையவராக இருக்கிறோம்.இரண்டு பக்க மூளையையும் முழுவதுமாக சரிவரப் பயன்படுத்தும் புத்திசாலிகளாகவும் ஒரு சிலர் இருப்பர்.மனனம் செய்ய, லாஜிக்கைக் கற்றுக் கொடுக்கும் நம் கல்வி முறை பெரும்பாலும் இடது மூளையையே அதிகம் பிரயோகிக்க வகை செய்கிறது. ஆனால், வலது, இடது இரண்டு பக்க மூளையையும் சரியாகப் பயன்படுத்தப் பயிற்சி பெறும் குழந்தைகளே சூப்பர் குழந்தைகளாக மலரும்.
முழு மூளைத் திறனைப் (whole brain development) பெறுவதற்கு என்னென்ன வழிமுறைகள் என்பதைப் பார்க்கலாம்.



Concept # 1. Start Early:
பச்சிளம் குழந்தைப் பருவத்திலேயே , ஏன் கர்ப்பத்தில் இருக்கும் போதே மூளை வளர்ச்சி துவங்கி விடுகிறது.
குழந்தை வயிற்றுக்குள் இருக்கையிலேயே, அதனுடன் பேச ஆரம்பித்து விடுங்கள்,நல்ல இசையை, புதிய மொழி ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்யலாம்.
Concept # 2.Make Connections:
மூளையின் சர்க்யூட் இணைப்பு, அது பெறும் தகவல்களுக்கேற்ப, தன்னுள் இணைப்புகளை உருவாக்குகிறது. அதிகமான தகவல்கள் = விரைவான மற்றும் அதிகமான கற்றல்
படைப்புத் திறன் மிக்க மூளையானது முதல் மூன்று வயதிற்குள்ளாகவே, எல்லாவிதமான செய்தி, அனுபவங்களைப் பெறுவதற்குத் தயாராகி விடுகிறது.
பார்ப்பதை, கேட்பதை விரைவாக ஸ்கேன் செய்து, அதை வகைப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய விஷயத்துடன் லிங்க் செய்து, பிற்பாடு பயன்படுத்த, பத்திரப் படுத்திக் கொள்கிறது.
இந்த வயதிற்குள்ளாகவே, உங்கள் குழந்தைகளுக்கு எல்லாப் புலன்களின் மூலமாகவும் (by using flashcards,classical music,world languages,sensorial toys and games) கற்றுக் கொடுக்க முயற்சியுங்கள்
Concept # 3:Teach Both Brains:
இரண்டு விதமான சிந்தனைத் திறத்தையும் ஊக்குவிக்க விளையாட்டு முறைகளுடன், லாஜிக்கல் விஷயங்களை, எண்களையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்கவும்.
இசையைக் கற்றுக் கொள்வது இரண்டு பக்க மூளையின் செயல்பாட்டுத் திறனையும் ஊக்குவிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
Concept # 4 Maximize the Right Brain Window:
முதல் இரண்டு வயது வரை, குழந்தைக்கு இடது மூளையின் குறுக்கீடு ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். இந்த காலத்தில் வலது மூளை தனக்குக் கிடைக்கும் அனைத்துத தகவல்களையும் இடது மூளையின் குறுக்கீடுகள் அற்று குஷியாக, தானே உள்வாங்கி, சேமித்து, பிரதிபலிக்கிறது
இரண்டு வயதிற்குள்ளாகவே, எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான Flash Cards, சித்திரப் புத்தகங்கள், கதைகளை அறிமுகப் படுத்த முடியுமோ, அவ்வளக்கவ்வளவு அதன் வலது மூளையின் செயல்திறனை நன்கு ஊக்குவிக்கலாம்.மூன்று வயதுக்குப் பின்,வெவ்வேறு விதமான விளையாட்டுகளின் மூலம் வலது மூளையின் திறனை வளர்க்கலாம்.
Concept # 5. Be Happy:
A happy child becomes happy adult என்பர். குழந்தைகளுக்கு, அவர்களின் எல்லா புலன்களையும் பயன்படுத்தக் கற்றுக் கொடுங்கள். உங்கள் செயல்பாடுகள் மூலம், அமைதி, அன்பு, அரவணைப்பு போன்ற உணர்ச்சிகளையும் அவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு பழகுங்கள். கதைகளினூடே மேற்கூறிய உணர்ச்சிகளையும் மற்ற உணர்ச்சிகளையும் அவர்களுக்குப் பயிற்றுவிப்பது எளிது.


தினமும் ஒரு இருபது நிமிடங்களாவது உங்கள் குழந்தையை வெளியே பார்க், கடைவீதி, பஸ்ஸ்டாண்ட் போன்ற புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நினைவிருக்கட்டும்-ஒவ்வொரு புதிய பொருளை, இடத்தைப் பார்க்கையிலும் அதன் மூளையில் புதிய புதிய சர்க்யூட்டுகள் உருவாகின்றன.

குழந்தைகளுக்கு, நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லிக் கொண்டே , பேசிக் கொண்டே இருக்கவும்.அம்மா, இப்போ மம்மு செய்யப் போறேன், மம்மு செஞ்ச உடனே நீ சாப்பிடுவியாம், பெல் அடிக்குது, யாரு வந்துருக்காங்கன்னு பாக்கலாமா?, என்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு சாதாரண விஷயத்தையும் குழந்தையிடம் தெரிவித்துக் கொண்டே செய்யுங்கள்.


சரி.இப்ப, அஜ்ஜிக் குட்டியை எப்பிடி சூப்பர் குழந்தையா வளக்கணும்னு இட்லிவடையில எழுதியிருக்காங்க, அதப் படிக்கலாமா? என்று குழந்தையுடன் சொல்லிக் கொண்டே இதைப் படிக்கவும்
;) ;)


டாக்டர்.பிரகாஷ்
www.rprakash.in



Read More...

கொலைகார இலங்கை, உதவும் இந்தியா - பத்ரி சேஷாத்ரி

இன்று தி ஹிந்து பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியான படங்கள் வாசகர்களைக் கடுமையாகப் பாதித்திருக்கும்.

முதல் பக்கத்தை அடுத்து, நடுப்பக்கக் கட்டுரை. எழுதியவர் கால்லும் மெக்ரே. இலங்கையில் கொலைக்களம் என்ற படத்தை பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சிக்காக இயக்கியவர். ஏற்கெனவே வெளியான இரு பகுதி ஆவணப்படத்தின் மூன்றாவது பகுதியில் என்ன வரப்போகிறது என்பதை எடுத்துச் சொல்லும் கட்டுரை இது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. அப்போது அந்தச் சிறுவன் இறந்துகிடந்த படத்தை ஆராய்ந்த நிபுணர்கள், வெகு அருகில், மூன்றடி தூரத்தில், கண்கள் ஏதும் கட்டப்படாத நிலையில், தான் சுடப்படப் போகிறோம் என்பது தெரிந்த நிலையில், அச்சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான். அச்சிறுவன் சற்றே கையை நீட்டி முன்னே சென்றிருந்தால் அந்தத் துப்பாக்கியைத் தொட்டிருக்க முடியும் என்கிறார் ஒரு நிபுணர்.

இப்போது தி ஹிந்து கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கும் படத்தில் சுடப்படுவதற்குச் சற்றுமுன் அச்சிறுவன் சட்டை ஏதும் இன்றி, மணல் சாக்குகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதற்குப்பின் உட்கார்ந்திருக்கிறான். அந்தப் படங்களையும் பின்னர் இறந்துகிடக்கும் படங்களையும் வீடியோவையும் ஆராயும்போது இதுதான் தெரிய வருகிறது. அந்தச் சிறுவனுக்கு கையில் ஏதோ பிஸ்கட் போல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாப்பிட்டு, நீர் குடித்து முடித்ததும், அவன் கூட வந்திருக்கும் ஐந்து மெய்க்காப்பாளர்களையும் அச்சிறுவன் பார்க்கும்போதே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உடனே அச்சிறுவனுக்கு மிக அருகில் வந்து அவனையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

சரணடைந்தவர்களைக் கொல்லக்கூடாது, சிறுவர்களைக் கொல்லக்கூடாது என்ற எந்த விதிமுறைகளையும் இலங்கை அரசு மதித்ததாகத் தெரியவில்லை. இந்த அரசும் இதன் தலைமையில் இருக்கும் மகிந்த ராஜபக்‌ஷேவும் மிகக் கொடுமையான, சர்வதேசச் சட்டத்துக்குப் புறம்பான, அநீதியான ஒரு செயலைச் செய்திருக்கிறார்கள். இச்செயல்கள் தொடர்பான சாட்சியங்கள் வலுத்துக்கொண்டே போகிறது.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு குற்றவாளியை இந்தியா பாதுகாக்கிறது. இல்லாவிட்டால் சீனாவுடன் அவர்கள் உறவு வைத்துக்கொள்வார்கள் என்ற சொத்தை வாதத்தை முன்வைத்து தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு ஆதரவான, மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துவருகிறது. ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்கூட இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதாகச் சொல்லிக்கொண்டே இலங்கையைக் காப்பதான ஒரு நிலையையே இந்தியா எடுத்தது.

இந்தியாவின் மனித உரிமைச் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதே தனியாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் அதைத் தாண்டி இலங்கையில் கொலைச் செயல்களுக்குத் தூபம் போட்டவர்கள், அவற்றை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்தவர்கள், பிற நாடுகள் குற்றம் சாட்டும்போது இலங்கையில் நடந்த கொலைச் செயல்களுக்கு ஆதரவாக வாதாடி, ராஜபக்‌ஷேயைக் காத்தவர்கள் என்ற அவப்பழி இந்தியாமீது சூழ்ந்துள்ளது. இந்தக் கறையிலிருந்து விடுபட ஒரே ஒரு வழிதான் உள்ளது. இலங்கைமீது கடுமையான அழுத்தத்தைச் சுமத்தி, இலங்கையின் மகிந்த ராஜபக்‌ஷே போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கப்படுமாறு செய்ய இந்தியா முனைப்புடன் செயல்படவேண்டும். இது எளிதான ஒரு செயல் அல்ல. உலகின் பெரும்பாலான நாடுகள் குற்ற நெஞ்சுடன் இருப்பவையே. அவர்கள் கைகள் ரத்தக் கறை படிந்தவையே. ஆனாலும் இலங்கையில் கொடூரமான நிகழ்வுகளை மனத்தில் கொண்டு பிற குற்றவாளிகள் ஒன்றுசேர்ந்து தம் பாவங்களைக் கொஞ்சமாவது குறைக்க முடிவெடுக்கவேண்டும்.

ராஜபக்‌ஷேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்வரை இலங்கையை ராஜரீக முறையில் பிற நாடுகள் விலக்கிவைக்கவேண்டும். ராஜபக்‌ஷே தன் நாட்டில் கிட்டத்தட்ட எமெர்ஜென்சி அதிகாரங்களுடன் அனைத்து அமைப்புகளையும் நொறுக்கித் தன் வசம் கொண்டுவந்துவிட்டார். அந்த நாட்டில் இனி யாருக்கும் நியாயம் கிடைக்கப்போவதில்லை. ஆட்சி மாற்றம் வந்தாலொழிய.

-  பத்ரி சேஷாத்ரி

அண்டை நாடு இந்தியாவிற்கு பதில் பாகிஸ்தானாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கலாம்.

Read More...

கார்டூனுக்கு பூணூல்



விகடனில் கலாட்டூன்! - ஓவியம் : ஹாசிப்கான்.

ஹாசிப்கான் ஓவியம் பல MAD ஓவியத்தை நினைவுப்படுத்தும். ஃபோட்டோ ஷாப் உதவிக்கொண்டு அவர் வரையும் கார்ட்டூன் எல்லாம் அசத்தலாக இருக்கும். கார்டூன் வரைந்துவிட்டு கீழே இரண்டு பாரா எழுதுவது எல்லாம் இவரிடன் கிடையாது, படம் சில சமயம் படத்துடன் தலைப்பே போதுமானது. இவர் விகடனுக்கு கிடைத்த பொக்கிஷம். நிற்க.

கலாம் ஜானாதிபதி பதவிக்கு வந்த போது, இவர் மற்றவர்கள் போல இல்லாமல் வித்தியாசமாக செய்வார் என்று நம்பினார்கள். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி ஒரு மாற்றமும் வரவில்லை. நடுராத்திரி ஆட்சியை கலைக்க கையெழுத்து போட்டார் என்ற விமர்சனம் தான் வந்தது. அடுத்து வந்த அம்மையார், தன் குடும்பத்துடன் வெளிநாடு போய்விட்டு வந்து தனக்கு வந்த பரிசு பொருட்களை எல்லாம் ஏதோ காரணம் சொல்லி எடுத்துக்கொண்டு போனார் திரும்ப வந்ததா என்று யாருக்கும் தெரியாது.

அடுத்து வந்த பிரணாப் காங்கிரஸ் ஜால்ரா ஆசாமி, கூட்டணிக்குள் பிரச்சனை என்றால் உடனே இவருக்கு பிளைட் டிக்கெட் புக்செய்துவிடுவார்கள். இவர் என்ன செய்ய போகிறார் என்று நினைத்துக்கொண்டு இருந்த சமயம் கசாப், அப்சல் என்று இருவரை தூக்கு மேடைக்கு அனுப்பி பிஜேபியை கதிகலங்க வைத்தார். லேட்டஸ்ட் வீரப்பன் கூட்டாளிகள்... காங்கிரஸ் காரர்களே இப்போது இவர் செயலை பார்த்து அரண்டு போயிருப்பார்கள் என்பது என் எண்ணம்.

மேலே உள்ள இந்த கேலி சித்திரத்துக்கு பூணூல் போட்டு பார்ப்பான வெறி செயல் என்று கமெண்டுடன் ஃபேஸ் புக்கில் உலாவ விட்டுருக்கிறார்கள் கோபாலபுரத்து சிஷ்யர்கள்.


பார்ப்பான் பிரஷர் குக்கர் மாதிரி. அவன் அடியில் என்ன தான் நெருப்பு வைத்து சூடு ஏற்றினாலும், ஆனந்தமாய் விசில் அடித்துவிட்டு நெருப்பிட்டவனுக்கே உணவளிக்கும் நல்ல குணம் படைத்தவன்.

Read More...

Monday, February 18, 2013

கிருபாகரனுக்கு உதவி தேவை - Followup

கிருபாகரனுக்கு உதவி தேவை என்ற பதிவுக்கு இட்லிவடை வாசகர்கள் பலர் உதவ முன்வந்தது குறித்து மகிழ்ச்சி.

பணம் அனுப்பியவர்கள் சரியான தகவல்களை சொல்லவில்லை என்று நினைக்கிறேன். சிலருக்கு எங்கே அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லை.

பணம் அனுப்பியவர்கள் விவரங்களை சரியாக சொல்ல வேண்டும் - எவ்வளவுத்தொகை அனுப்பட்டது என்ற விவரம் கிடைத்தால் தான் அந்நிறுவனத்தார் அந்தத்தொகையை இந்தக்குழந்தையின் செலவிற்காக அளிக்க இயலும். அதனால் பணம் அனுப்பும் அன்பர்கள், அல்லது வேற கேள்விகள் இருந்தால் கிரிஷுக்கு [ sw_griesh@yahoo.com ] ஒரு மெயில் அனுப்பிவிடுங்கள்
நன்றி.

Read More...

Sunday, February 17, 2013

சன்டேனா இரண்டு (17-2-13) செய்திவிமர்சனம்



இந்த வாரம்....இரண்டிலும் இரண்டு.



செய்தி # 1


இரண்டு பெரிசுகள் இந்த காதலர் தினத்தின் அகில இந்திய அளவில் பெருமளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள்.



முதலாமவர், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர்.


இவர் உலகின் வயதான தந்தை என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது பெயர் கரம்சித் ராகவ். வயது 94. இவரது மனைவி சகுந்தலாவிற்கு 59 வயதாகிறது. இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மிகவும் வயதான தந்தைக்கு பிறந்தாலும், அந்த குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் ஆரோக்கியமாகவே உள்ளது.


"இந்த தள்ளாத வயதில் எப்படி உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது?" என்ற கேள்விக்கு,கரம்சித் "காலையில் எழுந்தவுடன் மூன்று லிட்டர் பால் குடிப்பேன்.புரோட்டா, சப்பாத்தி, அரிசி சாதம் இவற்றையும் பதம் பார்ப்பேன். கண்டிப்பாக தினமும் உணவில் அரை கிலோ நெய் சேர்த்துக் கொள்வேன்" என்று கூறியுள்ளார்.



"இன்னும் பத்தாண்டுகள் என் மகனுடன் விளையாடுவேன். இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை. அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளேன்" என்கிறார்.



இரண்டாமவர், பீகாரை சேர்ந்த இந்தி பேராசிரியர். 60 வயதான இவர், தன்னுடைய வகுப்பு மாணவியான ஜூலி என்ற 23 வயது இளம் பெண்ணை மணந்து கொண்டு இருக்கிறார். கவனிக்க, இது முழுக்க முழுக்க காதல் திருமணம். இது நடந்தது 2006 ஆம் ஆண்டில்.



இந்த வருடம் அவர் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் அவர் ஒரு பள்ளிக்கூடம் ஒன்றை அவரது சொந்த ஊரான பாகல்பூரில் ஆரம்பிக்க இருக்கிறார்.



"உலகின் முதல் காதல் பள்ளிக்கூடம் இதுதான்" என்று கூறுகிறார் இவர். இந்த பள்ளிக்கூடம் மூலமாக காதலின் மகத்துவம் குறித்து அனைத்து வயதினருக்கும் கற்றுக்கொடுக்க இருக்கிறார் இந்த பெருசு.



காதலுக்கு 'இரண்டு' இல்லை என்று புரிகிறது.





ஒன்று, கண். இன்னொன்று வயது..





செய்தி # 2






இரண்டு .ஆய்வுகள் படித்தேன்.



முதலாவது இந்தியாவின் "பொருளாதார முன்னேற்றம்(?)" பற்றியது.



தேசியக் குற்றங்கள் பதிவு ஆணையத்தின் (NCRB) புள்ளியியலின்படி 1995க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், , வன்புணர்ச்சிக் கொடுமைகள் 50 சதவீதமும், கடத்தல் சம்பவங்கள் 100 சதவீதமும் வரதட்சணைக் கொலைகள் 50 சதவீதமும் குடும்ப வன்கொடுமைகள் மூன்று மடங்காகவும் பாலியல் இழிவுபடுத்தல் இருமடங்காகவும் அதிகரித்தன என்று தெரிவிக்கிறது இந்த சர்வே.



இரண்டாவது சுதந்திரம் முதல் ஒயாமல் இருக்கும் காஷ்மீர் பற்றியது.



இம்மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இரண்டு ராணுவக் கமாண்டர்கள் (15 corps மற்றும் 16 corps). காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் ஜனத்தொகை 35 லட்சம். ஆனால், அங்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் எங்கும் நிறைந்துள்ளனர். 50 மீட்டரிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் இவர்கள் ஏகே47 துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள்.


காஷ்மீர் மக்களுக்கு பயமெல்லாம் தீவிரவாதிகளைவிடத் துப்பாக்கி ஏந்தி ரோந்திலிருந்த இந்த ராணுவத்தினர்மீதுதான் அதிகமிருந்தது. இவர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரத்தால் யாரையும் எப்போது வேண்டுமானாலும் எந்த வாரண்டும் இல்லாமல் கைதுசெய்யலாம், கொல்லலாம், மாயமாக மறைய வைக்கலாம். அதற்காக யாருக்கும் - இந்திய நாடாளுமன்றத்துக்குக்கூட - பதில் சொல்லத் தேவையில்லை.


எல்லையற்ற இந்த அதிகாரத்தை அவர்கள் யார்மீது செலுத்தினாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தப்படுவார்கள். எனவே, கொலை, கற்பழிப்பு, பணம் பறிப்பு போன்றவை மலிந்துள்ளன. கிராமப்புறங்களில் இவர்களது கெடுபிடிகள் சற்று அதிகம். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் சோதிக்கப்படுவார்கள்.



ராணுவத்தினரின் ஆணைப்படி நடக்கவில்லை என்றால், அந்தக் கிராமவாசிகளுக்கு ஆபத்து வந்துவிடும். பல இடங்களில் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டு நாங்கள் விசாரிக்கப்பட்டோம். எங்கள் அடையாள அட்டைகள் சோதிக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றவுடன் ராணுவத்தினருக்குச் சற்று நிதானம் வந்துவிடும். கடந்த 18 வருடங்களில் 80,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 20,000 பேரைத் தீவிரவாதிகள் கொன்றனர். ராணுவம் கொன்றது 60,000 பேருக்கும் அதிகம்.



இந்தியர்கள் வேறு, காஷ்மீரிகள் வேறு என்னும் எண்ணம் காஷ்மீரின் எல்லாத் தரப்பு மக்களிடமும் வயதினரிடமும் வலுவாக உள்ளது. 'இந்திய ராணுவம் அயல்நாட்டு ராணுவம். அது எங்கள் நாட்டை ஆக்கிரமித்து அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது' என்னும் கருத்தே அவர்களிடம் காணப்படுகிறது. இந்தியாவின் மேல் அவர்களுக்கு வெறுப்பும் விரோத மனோபாவமும்தான். இந்திய ராணுவமும் காஷ்மீர் மக்களைச் சொந்த நாட்டு மக்களைப் போலல்லாமல் அடிமைகளைப் போல நடத்துகிறது.



இப்படி போகிறது இந்த ஆய்வு.



"காஷ்மீரில் இந்தியா,பாகிஸ்தான், தனி நாடு என்று ஒரு நேர்மையான ஒரு பொது வாக்கெடுப்பு எடுத்தால் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்" என்று என்னிடம் சொன்னார் துபாயில் என்னுடம் பணியாற்றிய, காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பர்.



எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் என்று ஒரு வாக்கெடுப்பு எடுத்தால், முதலிடத்தில் காஷ்மீர் இருக்கும். அடுத்த இரண்டு இடங்களில் காவேரி நதியும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சனயும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.




(நன்றி, இனி அடுத்த வாரம்)



-இன்பா

Read More...

Friday, February 15, 2013

ரிப்போட்டர், குஷ்பு கண்டனம்.







நிச்சயம் கண்டிக்க வேண்டிய அட்டைப்படம். நீதிமன்றம் கூட போகலாம்.

திமுகவும் சளைத்தவர்கள் இல்லை பல்வேறு மாநாட்டு பேச்சுக்களை பார்த்தால் ஜெயலலிதாவை பற்றிய பேச்சுக்கள் பிரசுரிக்க கூட முடியாதவை. அப்போது திமுக தலைவர்கள் அந்த பேச்சுக்களுக்கு கைதட்டி சிரித்தவர்கள் தானே ?

Read More...

Zero Dark 30 - FIR

அலுவலகத்துக்கு பக்கத்தில் இருக்கும் தியேட்டரில் 'Zero Dark 30' படம் நேற்று இரவு பார்த்தேன். கடைசி 15 நிமிடங்கள்...நானே படத்தில் நடித்த ஃபீலிங். விஸ்வரூபத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்குப் போற்றுபவர்கள் இந்தப் படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். கமல் எவ்வளவு அசட்டுத்தனம் செய்திருக்கிறார் என்று புலப்படும்.

பல இடங்களில் இது சினிமாவா அல்லது நிஜமா என்று தெரியாத மாதிரி எடுத்திருக்கிறார்கள்.

9/11 இரட்டைகோபுரத் தாக்குதலுக்குப் பின் படம் ஆரம்பிக்கிறது. படிப்படியாக பல விஷயங்களைக் கண்டுபிடித்துக் கடைசியில் பின்லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். Connecting the dots அருமை.

எப்படி பத்து ஆண்டுகளாக சி.ஐ.ஏ.வின் பெண் ஏஜென்ட் (நடிகை ஜெசிகா செஸ்டெயின்) பின்லேடன் இருப்பிடத்தை கண்டுபிடித்து வேட்டை ஆபரேஷனை வழி நடத்துகிறார் என்பது தான் கதை.

அல்கெய்தா ஒவ்வொரு இடத்திலும் வெடிகுண்டு வெடிக்கச் செய்யும் இடங்களின் காட்சி அமைப்பும், திடீர் என்று வெடிக்கும் போது ஏற்படும் ஒலி ஏதோ நாமே அங்கு இருப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுக்கிறது.

சில இடங்களில் டாகுமெண்டரி மாதிரி இருந்தாலும் அவைகளை சுவாரஸியம் குறையவில்லை. இசை, ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு. நடிகர்கள் என்று எதுவும் தனியாக தெரியாமல் எல்லாம் காட்சிகளுடன் இணைந்துள்ளது. எதிலேயும் குறை கண்டுபிடிக்க முடியாதவாறு எடுத்திருக்கிறார்கள். எல்லா வசனங்களிலும் Fxxxx..கெட்ட வார்த்தை வருகிறது.

பாகிஸ்தானில் பின்லேடன் காம்பவுண்டுக்குள் இறங்கும் அமெரிக்க படைகள் அங்கே நிகழும் சம்பவங்கள் ...வெறும் இருட்டு, நிழல் போல உருவங்கள் மட்டுமே வைத்துக்கொண்டு அந்த காட்சிகள் 'அட அட' போட வைக்கிறது. என்ன மாதிரி ஹோம்வொர்க் செய்தால் இந்த மாதிரி படம் எடுக்க முடியும்?

நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க சிபாரிசு செய்வேன்.

நடுராத்திரிக்கு பிறகு 30 நிமிடத்தில் பின்லேடனை எப்படிப் போட்டுத் தள்ளுகிறார்கள் என்பதால் படத்துக்கு அந்த பெயர். படத்தில் ஓசமா இறந்த பிறகு சந்தோஷம், அதே சமயம் இந்த கதையை நம் கோடம்பாக்கம் ஆசாமிகள் யாரும் எடுக்கவில்லையே என்று டபுள் சந்தோஷமும் நமக்கு வருகிறது. சி.ஐ.ஏ ஏஜண்டாக ஆணுக்கு பதில் பெண் வந்து ..."என்னை யார் என்று தெரிகிறதா ?" என்று பாட்டுக்கு BGMல் ஒலிக்க ஓசாமாவை கையும் களவுமாக பிடிபட்டு...அவர் பக்க நியாயத்தை சொல்லிவிட்டு... சரி விடுங்க!
(படத்தில் ஓசமா ஒரு வார்த்தை கூட பேசவில்லை!)

இட்லிவடை மார்க் 8.5/10

விஸ்வரூபத்தையும் இதையும் கம்பேர் செய்து ஒருவரை எழுதச் சொல்லியிருக்கிறேன். அவர் அனுப்பினால் இங்கே பிரசுரிக்கிறேன்.

Read More...

Thursday, February 14, 2013

காதல் - கள்ளக்காதல் கவிதைகள்

அன்பின் இட்லிவடை,

ஒரு வார இதழில் காதல்-கள்ளக்காதல் பற்றி நான் படித்த இரண்டு கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
இட்லிவடைக்கு ஏற்றதாக இருந்தால் பிரசுரிக்கவும். என் பெயர் வேண்டாம்.
பிடித்திருந்தால் இந்த மாதிரி இன்னும் சில கவிதைகளை அனுப்புகிறேன்.
நன்றி
....

காதல்
அது உணர்ச்சிக் குற்றம்
கள்ளக்காதல்
அது குற்ற உணர்ச்சி

காதலியிடம்
உன் புருஷனாக நான் வரட்டா ?
கள்ளக்காதலியிடம்
உன் புருஷன் போன பிறகு வரட்டா ?

அன்பரே இது போதும் :-)

Read More...

இரண்டு வாசகர்கள் இரண்டு கேள்விகள்


அன்புள்ள இட்லிவடை,
எனக்கு தமிழில் Horror நாவல்கள் பட்டியல் எங்கே கிடைக்கும் ? தமிழில் எழுதப்பட்டது அல்லது மொழிபெயர்ப்பாக இருந்தாலும் சரி.
நன்றி,
பாலச்சந்தர்



அன்புள்ள இட்லிவடை,
என் மனைவிக்கு நான் ஒரு பரிசு தரவேண்டும். ஒரு கண்டிஷன். எந்த காரணம் கொண்டும் நான் வாங்கும் பொருள், மனைவிக்கு பயன்ப்பட கூடாது. அதிக விலையாக இருப்பது அவசியம். வீட்டுக்கு வருபவர்களுக்கு பார்க்க அழகாகவும், பந்தாவாகவும் இருக்க வேண்டும். கண்டிப்பாக எனக்கு 100% பயன்ப்பட வேண்டும். ஒரு பெருளை சஜஸ்ட் செய்யுங்களேன். உங்களால் முடியவில்லை என்றால் உங்கள் வாசகர்களை சஜஸ்ட் செய்ய சொல்லுங்களேன்.
இப்படிக்கு
ஓஜஸ் அ
காதலர் தினத்துக்கும் இந்த கேள்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Read More...

Tuesday, February 12, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 2

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை என்னும் இந்தத் தொடர், குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைகளோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருக்கும் நம் அனைவருக்கும், மற்றும் வருங்காலத்தில் குழந்தைகளை வளர்க்க இருக்கும் நாளைய பெற்றோர்களுக்கும் மிக அவசியமான ஒன்று.

குழந்தைகளைப் பற்றி, கலீல் கிப்ரான் என்ன சொல்கிறார் என்பதிலிருந்து இந்தத் தொடரைத் தொடங்குவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.



Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.
They come through you but not from you,
And though they are with you, yet they belong not to you.
You may give them your love but not your thoughts.
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams.
You may strive to be like them, but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.
You are the bows from which your children as living arrows are sent forth.
The archer sees the mark upon the path of the infinite, and He bends you with His might that His arrows may go swift and far.
Let your bending in the archer's hand be for gladness;
For even as he loves the arrow that flies, so He loves also the bow that is stable.
by Kahlil Gibran

என் அக்கா மகள் வித்யா மிகச் சிறிய வயதிலேயே படு சூட்டிகை.இரண்டு, மூன்று வயதிலேயே வயதுக்கு மீறின அறிவும்,கிரகிக்கும் திறனும் கொண்டிருந்தாள்.மிகப் பெரிய புத்திசாலியாக, கல்வி, கலைகளில் அரசியாக வலம் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு,அவள் சுமாராகப் படித்து மிக சாதாரண பெண்ணாக வளர்ந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.அதற்கு அவள் காரணம் அல்ல. வித்யா மட்டுமல்ல-உங்களுக்குத் தெரிந்து நிறைய சூட்டிகையான குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகையில், தான் தேர்ந்தெடுக்கும் துறையில் வல்லுநராக, தான் மிக விரும்பும் ஒரு கலையில் தனித் தன்மையுடன் பிரகாசிக்க இயலாத மிகவும் சாதாரணமானவராகப் பரிணமித்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்.
அதற்குக் காரணம் அக்குழந்தைகள் அல்ல- அவர்களை, திறனுடன் எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் இருக்கும் நாம்தான்.

இது எப்படி என்றால்,
ஒரு குழந்தையின் ஐந்து வயது முடிவதற்குள்ளாகவே,ஏறக்குறைய அதன் தொண்ணூறு சதவீத மூளை வளர்ச்சி முடிந்து விடுகிறது.
,பிறக்கையிலேயே பல லட்ச ந்யூரான் (நரம்பு) செல்களுடன் பிறக்கிற குழந்தையின் ஒவ்வொரு ந்யூரான செல்லும் இன்னொன்றுடன் ஒயர்களைப் போல இணைக்கப் பட்டுள்ளன.குழந்தைகள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு புதிய விஷயமும் இந்த ந்யூரான் இணைப்புகளில் புதுவிதமான வழித் தடத்தை உருவாக்குகிறது. நம் நோக்கம், குழந்தையின் மூளையில் இருக்கும் ந்யூரான் செல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல- ஆனால் இந்த செல்களின் இணைப்புத்திறனை பலப் படுத்துவதே. திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட ந்யூரான் இணைப்புத் தடத்தை பலப்படுத்தி, குழந்தைக்குக் கற்றலை சுலபமாக்குகிறது.
எந்தப் பெற்றோர்கள் தம் குழந்தையிடம் அதிகமாகப் பேசுகிறோர்களோ, அந்தக் குழந்தைகள் வெகு விரைவிலேயே பேசும் திறனைக் கற்றுக் கொள்கின்றன.இரண்டு வயதாகியும் சரியாகப் பேச்சு வராமல் இருந்த என் அண்ணன் மகன், சற்றேறக் குறைய அதே வயதுடைய-ஆனால் சரளமாகப் பேசக் கூடிய- என் தங்கை மகனுடன் சேர்ந்து வளரும் சூழ்நிலை வந்த போது, அவனது விடாத பேச்சை உன்னிப்பாக கவனித்து, மிகக் குறுகிய காலத்திலேயே தானும் பேசக் கற்றுக் கொண்டான்.

எப்படி உணவும், உடற்பயிற்சியும் நம் உடலை வளர்க்கின்றனவோ, அதே போல, குழந்தைகளுக்கு நிகழும் நல்ல அனுபவங்கள்,பயிற்சிகள் அதன் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
குழந்தைகள் பேச, நடக்கக் கற்றுக் கொள்வதற்கு வெகு முன்னமே, அவர்களின் மூளை வளர்ச்சி தொடங்கி விடுகிறது. முதல் மூன்று – நான்கு வருடங்களில் உருவாகும் ந்யூரல் வழித் தடங்கள் அவர்களின் பிற்காலத்திய கற்றலுக்கும், திறமைக்கும் சரியான அடித்தளமாக அமைகின்றன.

Baylor College of Medicine-இல் கண்டறிந்த ஆய்வு முடிவுகளின் படி, அடிக்கடி விளையாட வாய்ப்பும், பெற்றோர்களால் அடிக்கடி தொட்டு, தூக்கி, அரவணைக்கப் பட்ட கைக்குழந்தைகளின் மூளை, குறைவான அரவணைப்பைப் பெற்ற குழந்தைகளின் மூளையை விட அளவில் பெரியதாகவும், அதிகமான ந்யூரல் இணைப்புத் தடங்களையும் கொண்டிருந்ததாகவும் இருந்ததாம்.

சிறு குழந்தையின் மூளை வளர்ச்சித் திறனே, அதன் எதிர்காலத்தின் சாவியைத் தன்னுள் கொண்டுள்ளது என்பது நிரூபணமான உண்மை.ஒன்பது விதமான அறிவுத் திறன்களை குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.அவைகள்….
1. Visual - Spatial
2. Verbal - Linguistic
3. Logical - Mathematical
4. Bodily - Kinesthetic
5. Musical - Rhythmic
6. Interpersonal
7. Intrapersonal
8. Naturalist
9. Spiritual

எப்படி என்று பின்னர் பார்ப்போம்



ஹரிச் சந்திரன் கதையையும் சிரவணனின் கதையையும் கேட்டு வளர்ந்த ஒரு குழந்தை ஒரு தேசத்திற்கே வழிகாட்டிய மகாத்மா காந்தியாக தலைமை தாங்க முடிந்தது.
ராமாயண, மஹாபாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்த குழந்தை, சிவாஜியாக ஒரு சாம்ராஜ்யத்தை வழிநடத்த முடிந்தது.
ஓடும் பஸ்ஸில் தன் நண்பர்களுடன் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவனும் ஒரு காலத்தில் குழந்தைதான் – சரியான விழுமியங்கள், மதிப்பீடுகள், நெறிமுறைகள் கற்றுத் தரப் படாத குழந்தை.. எந்தத் தாயும் தன் குழந்தை ஒரு தலைசிறந்த சமூக விரோதியாக வரவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டாள். முன் தினம் ஃபேஸ்புக்கில் படித்தது “தன் மகன் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தான் எனத் தெரிந்த தாய் தூக்கிலிட்டுக் கொண்டு இறந்து போனாள்” என்று. ஒரு தாயாக, தான் தோற்றுப் போய் விட்டதாக மனமுடைந்து தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்.

இந்தத் தொடர், குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல.
மாமாவாக, சித்தப்பா, பெரியப்பாவாக, ஏதேனும் ஒரு வகையில் ஒரு குழந்தையுடன் தொடர்பில், உறவு முறையுடன் இருக்கும் நம் அனைவருக்கும் அவசியமான ஒரு தொடரே. நமக்குத் தெரிந்த,நம் கண் முன்னே வளரும் ஒரு குழந்தையின் வளர்ப்பில் நாம் ஏற்படுத்தும் ஒரு சிறு முன்னேற்றம், அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஒரு கதை படித்திருக்கிறேன்…

நீரில் மட்டுமே உயிர்வாழும் நண்டு இனங்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் கடற்கரைக்கு,தவறுதலாக வந்து தரையில் தத்தளித்துக் கொண்டிருக்க, ஒரு சிறுமி ஒவ்வொரு நண்டாக எடுத்துக் கடலில் தூக்கி எறிவாள்.
அதைக் கண்ட ஒரு பெரியவர், ”இப்படி தூக்கித் தூக்கி எறிவதால், இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகும் இத்தனை ஆயிரம் நண்டுகளின் வாழ்க்கையில் என்ன விளைவை ஏற்படுத்தி விட முடியும்?”என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ”ஆயிரம் நண்டுகள் அல்ல, நான் தூக்கிப் போடும் இந்த ஒரு நண்டின் வாழ்க்கையில் அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றாள்.
அதைப் போல, நம் முன்னே கோடிக் கணக்கான மனிதர்களைக் கொண்ட நம் சமுதாயத்தில் நம்மால் மாற்றங்களை அவ்வளவு எளிதில் உருவாக்கி விட முடியாது. ஆனால், நம் குழந்தையை ஒழுங்காக வளர்ப்பதன் மூலம் நம் சமுதாயத்தின் ஒரு அலகான நம் குழந்தையை சீரமைக்க முடியும்.


என் மகனை நெறிப் படுத்தி வளர்ப்பதன் மூலம் சமூக விரோதிகளின் எண்ணிக்கையில் நிச்சயம் ஒன்று குறைகிறது என்று சொல்லுவேன். மேலும்,அவனை. சக மனிதர்களை மட்டுமல்ல, உலகின் அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்கக் கூடிய,இயற்கையை நேசிக்கக் கூடிய ஒரு மேம்பட்ட மனிதனாக இந்த உலகுக்கு நான் வழங்க முடியும் என்று நம்புகிறேன்.
ஏனென்றால் மாற்றம் என்பது நம் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும்.
துவக்குவோம்

- டாக்டர்.பிரகாஷ்.

தொடரும்....
அடுத்த பகுதி வரும் செவ்வாய்

ஒழுங்காக வளர்ந்த குழந்தைகள் பிளாக் எழுதமாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள் உண்மையா ? :-)

Read More...

Monday, February 11, 2013

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - வாசிப்பனுபவம் சுபத்ரா


குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்து பலரின் பாராட்டுகளைப் பெற்றது திரு. பா. ராகவன் எழுதிய ‘பாகிஸ்தான் அரசியல் வரலாறு’. அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக ‘மதி நிலையம்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வாசிக்கத் தொடங்கிய முதல் அத்தியாயத்திலேயே ஒரு பரபரப்பு நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரட்டையர்கள் போல ஆங்கிலேயரிடமிருந்து சுதந்தரம் பெற்றுப் பிரிந்த இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு சகோதர நாடுகளும் அடித்துக் கொள்வது ஒரே ஒரு “காஷ்மீரு”க்காக. அந்தக் காஷ்மீர் மொத்தமும் ஒரு காலத்தில் ரூ.60 லட்சத்திற்காக விற்கப்பட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

இந்தியாவுடனும் சேராமல் பாகிஸ்தானுடனும் சேராமல் “காஷ்மீர் எங்கள் பரம்பரைச் சொத்து” என்று பிடிவாதமாகக் கூறிவந்த மன்னர் ஹரிசிங் இறுதியில் இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் எவ்வாறு கையெழுத்திட்டார்? இந்தியாவிற்கு முன் பின் வந்தேயிராத சர் சிரில் ராட்கிளிஃப் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை எவ்வாறு பிரித்தார்? புதிதாகப் பிறந்த பாகிஸ்தான் குழந்தை ஜின்னாவின் திடீர் மறைவிற்குப் பிறகு எவ்வாறு வளர்ந்தது? I.S.I. எப்படி எதற்காக உருவானது? பாகிஸ்தான் அரசியலில் ராணுவம் என்ன பங்கு வகிக்கிறது?

காஷ்மீர் பிரச்சனைக்குச் சுமுக தீர்வு காண்பதற்காக இந்தியா வரவிருந்த அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஆயூப்கானை எது தடுத்தது? 1965-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போருக்கு “ஆபரேஷன் கிப்ரால்டர்” என்று பெயர் வைத்தது ஏன்? புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது என்ன? பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் விடுதலை பெறும் காட்சியில் இந்தியா ஏன் வந்தது? அதில் அதிரடிப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? அது வழிவகுத்த 1970 பாகிஸ்தான் போரை இந்தியா எவ்வாறு கையாண்டது?

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் மிக முக்கியவராகக் கருதப்பட்ட ஜூல்பிகர் அலி புட்டோ எந்நிலையில் தூக்கிலிடப்பட்டார்? அவரது மகள் பேனசிர் புட்டோ எந்நிலையில் ஆட்சி நாற்காலியில் அமர்ந்தார்? கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிம் மும்பையில் வேரூன்றியது எப்படி? தாலிபான்களுக்கும் I.S.I.க்கும் இருந்த தொடர்பு என்ன? நவாஸ் ஷெரிப் ராணுவத் தளபதியாக பர்வேஸ் முஷாரஃப்பை ஏன் நியமித்தார்? 2001-ல் முஷாரஃப் இந்தியாவுடன் நிகழ்த்திய அமைதிப் பேச்சுவார்த்தை என்ன ஆனது? அமெரிக்க – ஆப்கன் யுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு என்ன?

இவை போக, காஷ்மீரைத் தவிர இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வேறு என்னென்ன பிரச்சனைகள் நிலவுகின்றன? உலகின் மிக முக்கிய தீவிரவாத இயக்கங்கள், பாகிஸ்தானின் தேர்தல் முறைகள் என எண்ணற்ற விசயங்கள் அடங்கிய ஒரு புத்தகம் இது.

இந்தியா சுதந்தரம் பெற்றது 1947. அதற்கென ஒரு அரசியல் அமைப்புச் சாசனம் (Constitution) உருவாகியது 1950-ல். ஆனால் இந்தியாவிற்கு ஒரு தினம் முன்பு சுதந்தரம் வாங்கிய பாகிஸ்தானுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் எழுதத் தேவைப்பட்டது ஏறத்தாழ பத்து வருடங்களாம்...! இந்தியாவிற்கு இணையான அல்லது இந்தியாவைவிடச் சிறந்த ஒரு வல்லரசாக உருவாகும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்து பின்தங்கியது எதனால்? இது போன்ற எண்ணற்ற தகவல்களும் இந்நூலில் புதைந்து கிடக்கின்றன.

புத்தகத்தைப் படித்து முடித்த பின்னர் பாகிஸ்தான் மீது இதுவரை இருந்துவந்த உணர்வுகள் மாறி அது நம் சகோதர நாடு என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிவிட்டது ஏன் என்று தெரியவில்லை.. :-)


- சுபத்ரா
http://subadhraspeaks.blogspot.in

:-)

Read More...

கிருபாகரனுக்கு உதவி தேவை


இட்லிவடை மூலம் பல நல்ல உள்ளங்கள் பலருக்கும் உதவி வருவதை நான் என் சொந்த அனுபவத்தில் அறிவேன்.

தற்போது, கிருபாகரன் என்கிற ஒருவயது குழந்தை இரத்த புற்றுநோயின் காரணமாக அவதிப்பட்டு வருகிறது. இவனுக்கு அறுவைசிகிச்சை செய்ய ரூ.8,00,000 வரை செலவாகும் என்று மருத்துவமனை அறிவித்துள்ளது. SAVE A LIFE CHARITABLE TRUSTஎன்கிற நிறுவனம் இந்தக்குழந்தைக்கு நிதி திரட்டு முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் நம்பதகுந்த நிறுவனம், எங்கள் பைந்தளிர் மனமகழ்மன்றத்தின் சார்பில் இந்த நிறுவனத்திற்கு இரண்டு முறை நிதிஉதவி அளித்துள்ளோம். ஆகவே உதவும் உள்ளம் கொண்டவர்கள் இந்த குழந்தைக்கு உதவி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோன். (விவரங்கள் அனைத்தும் இணைப்பில்)



விவரங்கள் கீழே...









Read More...

Sunday, February 10, 2013

ம்ரு'தங்கம்'



நல்ல வாசிப்பு நன்றி ஈரோடு

Read More...

நித்தியை சந்தித்து பாராட்டிய காஞ்சி சங்கராச்சாரியார்



ரீசண்டா கும்பமேளாவில் எடுத்த வீடியோ

"எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்" என்ற வசனம் இருவருக்கும் பொருந்தும். விஷமிகள் வேலையாம்...
மற்ற மதங்களை பற்றி வாய் கிழிய பேசும் ஹிந்து மத தளங்கள் இதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன ? எப்போதுமே அடுத்தவர்களை குறை சொல்லும் போது தன்னுடைய முதுகில் உள்ள அழுக்கை திரும்பி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

Read More...

Thursday, February 07, 2013

குஷ்பு ஜாக்பாட் பேட்டி

''தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''

''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக் கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''

''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''

'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''

''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''

''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும். தலை வர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப் பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!''

''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''

''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.''

சில மணி நேரத்துக்கும் குஷ்பு வீட்டுக்கு எதிரில் 10 ஆண்களும், 10 பெண்களும் திரண்டார்கள். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டனர். திடீரென்று வீட்டின் மீது சரமாரியாக கல் வீசி விட்டு ஓடி விட்டனர். குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. மதில் சுவரில் இருந்த விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. கல் வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை.

பேட்டி : நன்றி: விகடன்


தலைவரிடம் கூட்டணி பற்றி கேட்டுப்பாருங்கள் - கூட்டணி பற்றி கட்சி பொதுக் குழுவில்தான் முடிவு செய்வோம் என்று சொல்கிறார். அடுத்த தலைவரையும் அதுமாதிரிதானே நியமிக்க வேண்டும் இதில் குஸ்பூ கேட்டதில் என்ன தவறு? குஷ்பு வீடு மதுரையில் இருந்தால் இது நடந்திருக்குமா ? தெரியாது !

Read More...

டோண்டு ராகவன் -அஞ்சலி ( ச.திருமலைராஜன் )

தமிழ் எழுத்துறுக்கள் வளர்ச்சியுற்று 2000 வரை ஆங்கிலத்தில் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருந்த தமிழ் இணையர்கள் மெல்ல மெல்ல தமிழில் தட்டச்சு செய்து அதே ஆரிய, திராவிட, பிராமண, அபிராமண, இடஒதுக்கீட்டுச் சண்டைகளைத் தாய் மொழியாம் தமிழ் மொழியிலும் தொடர்ந்து கொண்டிருந்தனர். இண்டஸ் சிவிலைஷேஷன், ஃபோரம் ஹப் போன்ற ஆங்கிலக் குழுமங்களில் தொடர்ந்த சண்டைகள் யாகூ குழுமங்களில் தமிழில் தொடர ஆரம்பித்தன. ஏராளமான தமிழ் குழுமங்கள் தமிழ் ஃபாண்ட்டுகளை நிறுவிக் கொண்டு உருவாயின. சொக்கன், இரா.முருகன், பா.ராகவன், எல்லே.ராம், பசுபதி போன்றோர் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த ராயர் காப்பிக் கிளப் என்ற யாகூர் குழுமமே தமிழில் எனக்கு அறிமுகமான இரண்டாவது குழுமமாக இருந்தது. அதற்கு முன்பாக திண்ணை விவாதக் களம் என்றொரு விவாத மேடையை மட்டும் அமைத்துத் தந்திருந்தது.

ராயர் காப்பி கிளப்பில் தமிழ் கூறும் நல்லுலகின் இயல்பான பாரம்பரிய அரசியல் சண்டைகள் குறைவாகவும் இலக்கியம் இன்ன பிற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. தொடர்ந்து அகத்தியம், மரத்தடி போன்ற குழுமங்களும் அதே போல முக்கியமான தமிழ் குழுமங்களாக இயங்கிக் கொண்டிருந்தன. அந்தக் காலக் கட்டங்களில் பிராமணர்கள் பலரும் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்டோ அல்லது முற்போக்கு வேடங்களை தரித்துக் கொண்டோ அல்லது புனைப் பெயரில் தன்னை ஒரு பிராமண ஜாதி அல்லாத ஆள் போல வேடம் போட்டுக் கொண்டோ எழுதத் தலைப்பட்டனர். பொதுவாக நிலவிய இன வெறுப்பில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தங்களை ஒரு முற்போக்குவாதியாக அடையாளப் படுத்திக் கொள்வதும் அப்பொழுது எழுதிய பலரது இயல்பாக இருந்து வந்தது. அப்படியே அடையாளம் வெளியே தெரிய நேரிட்டு விட்ட பல பிராமண இணைய எழுத்தாளர்களும் கூட பல்வேறு அரசியல் பிரச்சினைகளிலும் தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைக் கூடச் சொல்லாமலோ அல்லது சுயஜாதி வெறுப்பின் மேலிட்டு எதிர்மறையாகவோ தங்கள் கருத்துக்களைச் சொல்லி வந்தனர்.


இட ஒதுக்கீடு, இஸ்ரேல் ஆதரவு, ஆரிய திராவிட மாயயை, கருணாநிதியின் வெறுப்பு அரசியல், ஜெயலலிதா பற்றிய விமர்சனம், தேசீயவாதம், பா ஜ க ஆதரவு நிலைப்பாடு, வலதுசாரி ஆதரவு வாதங்கள், அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல், இஸ்லாமிய வஹாபிய பயங்கரவாதம் போன்று கடந்த பத்தாண்டில் உள்ளூர் முதல் உலகளாவிய அளவு வரையில் நடந்த எந்தவொரு முக்கியமான பிரச்சினைகளிலும் தங்கள் பிறந்த ஜாதியை ஜாக்கிரதையாகக் கருத்தில் கொண்டு அரசியல் சரியான கருத்துக்களை மட்டுமே சிந்தனையாளர்கள் என்றும் எழுத்தாளர்கள் என்றும் தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட பெரும்பான்மையான இணைய கருத்தாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். தான் பிராமண ஜாதியில் பிறந்து விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காகவும் அதனாலேயே தங்களை முத்திரை குத்தி அவமானப் படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்திலும், தன்னை ஒரு முற்போக்காளனாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற போலி கவுரவம் கருதியும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஆதரிப்பது முதல் ஈ வெ ரா, கருணாநிதி, வீரமணி போன்றோரின் இன வெறுப்பு அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை வரை கூசாமல் இவர்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த பேடித்தனமான செயற்கையான போலித்தனமான போக்குகளைக் கண்டு கடுமையான வெறுப்பும் சலிப்பும் அடைந்திருந்த வேளையிலேயே தமிழ் இணைய உலகில் ஒரு வித்தியாசமான மனிதராக, ஒரு துணிவான வீரனாக, தன் நெஞ்சறியும் உண்மையை மறைக்காமல் தனக்குச் சரியென்று தோன்றிய கருத்துக்குக் கடும் எதிர்ப்புக்கள், மிரட்டல்கள் வந்தாலும் பணியாமல் தன் நிலையையை உரக்கச் சொல்லிய ஒரு மாமனிதன் டோண்டு ராகவன் ஐயங்கார். ஐயங்கார் என்று தன்னை அழைத்துக் கொள்வதில் அவருக்கு எந்தவிதமான ஜாதீய நோக்கும் இருந்தது கிடையாது. தன் பிறந்த ஜாதியினால் எவரையும் தான் கீழாக நினைப்பதும் இல்லை எவருக்கும் தான் கீழானவவும் இல்லை என்ற கொள்கை உடையவராக இருந்தார். இணையத்திலும் பொதுவிலும் தன்னை ஜாதிய எதிர்ப்பாளர் என்றும் முற்போக்கு என்றும் அடையாளப் படுத்திக் கொண்டு கடும் ஜாதி அபிமானத்துடன் செயல் பட்ட பல்வேறு போலி முற்போக்காளர்கள் நடுவில் உண்மையான முற்போக்குச் சிந்தனடையுடையவராக அறிமுகமானார் டோண்டு ராகவன் அவர்கள்.

தமிழ் இணைய உலகம் யாகூ போன்ற குழுமங்களில் இருந்து வெளியேறி ப்ளாக் ஆரம்பிக்கத் துவங்கிய காலகட்டத்தில் டோண்டு ராகவனின் பளாக் தமிழ் வலையுலகத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றது. அவர் சொல்லும் கருத்துக்களை ஏற்கலாம், ஏற்காமல் போகலாம், வெறுக்கலாம், பாராட்டலாம் ஆனால் தமிழ் இணைய உலகில் புழங்கிய எவருமே அவரைக் கடந்தே செல்ல வேண்டி வந்தது. ஒரு பொறியாளராக தன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு தனக்குப் பிடித்தமான நெருக்கமான மொழி பெயர்ப்பு தொழிலில் மும்முரமாக இயங்கி வந்த ராகவன் ஓய்வு காலத்தில் தன் பொழுதுகளை கழிப்பதற்காகத் தேர்ந்தெடுத்த ஊடகம் அவரது வலைப்பக்கமாக அமைந்து விட்டது. ஓய்வுக்காலப் பொழுதுபோக்குக்காக அவர் துவக்கிய வலைப்பக்கம் அவரது கடைசி மணித் துளி வரையிலும் அவரை ஆக்ரமித்திருந்தது. இரு கோடுகள் தத்துவம் போல சில பிரச்சினைகளில் இருந்து விலகி வேறு சில சச்சரவுகளிலும் பிரச்சினைகளிலும் அவரை அவர் தேர்ந்தெடுத்த வலைப்பக்கம் மூழ்க அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் சொந்தப் பிரச்சினைகள் ஆனாலும் அவரது கருத்துக்களினால் அவர் எதிர் கொள்ள நேரிட்ட கடுமையான வெறுப்புக்களும், துரோகங்களும், மிரட்டல்களும், கை விடப்படல்களும் ஆனாலும் சரி எதற்கும் அஞ்சாமல் துணிவாக எதிர் கொண்ட ஒரு நிஜமான அஞ்சா நெஞ்சன் டோண்டு ராகவன் அவர்கள். தன் கருத்துச் சுதந்திரத்திற்காக தன் உயிரையும் பணயம் வைத்துப் போராடிய ஒரு உண்மையான கருத்துச் சுதந்திர போராளியாக தமிழ் இணைய உலகில் திகழ்ந்து வந்தார் டோண்டு ராகவன்.

தமிழ் இணைய உலகில் வேறு எவரும் எதிர் கொண்டிராத கடுமையான வெறுப்பையும், ஜாதி வெறியையும், ஆபாசமான தாக்குதல்களையும், கொலை மிரட்டல் உட்பட விடப்பட்ட கடுமையான மிரட்டல்களையும் அவரளவுக்குச் சந்தித்தவர் இன்னொருவர் இருக்க முடியாது. பலவீனமான இதயம் கொண்டவர்கள் அந்தத் தாக்குதல்கள் ஏற்படுத்திய பாதிப்பிலேயே நெஞ்சழுத்தம் ஏற்பட்டு எப்பொழுதோ உயிரிழந்திருப்பார்கள். அவர் மட்டும் அல்லாது அவரது மனைவியும், மகளும் கூட கடுமையான ஆபாச தாக்குதல்களுக்கு இரையானார்கள். தன்னை எப்பொழுதும் ஒரு இளைஞனாகவே கருதி வந்த டோண்டு எதிர் கருத்துக் கொண்டோரையும் தன்னைக் கடுமையாக வசைபாடிய பலரையும் கூட அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்தே நட்புறவு பேணவே செய்தார். அவர்களில் பலரிடமும் எச்சரிக்கையாக இருக்குமாறும் விலகியிருக்குமாறும் நான் பல முறை எச்சரித்த பொழுதும் அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து உபசரித்து வந்தார். அவர் நம்பி நட்பாகப் பழகிய சிலரே அவரைப் பற்றிய சொந்தத் தகவல்களை அவரைத் தாக்கி வந்த ஆபாச மிருகங்களுக்கு ஒற்று சொன்னார்கள். இன்று அதே நபர்கள் அவருக்கு அஞ்சலியும் செலுத்துகிறார்கள்.

டோண்டு ராகவன் அவர்களுடன் எனக்கு எப்பொழுது தொடர்பு ஏற்பட்டது என்பதை நான் பழைய மடல்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அனேகமாக 2003/04ம் வருடமாக இருக்கக் கூடும். அவர் வலைப்பதிவு துவங்கிய பின்னரே அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இணையம் மூலமாக நான் பெற்ற அற்புதமான நட்புக்களில் ஒருவர் டோண்டு ராகவன். நான் சென்னை வரும் பொழுது அவரைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தார். நான் சென்னை வாசி அல்ல என்றும் நான் திருச்செந்தூர் அருகே ஒரு கிராமத்திலேயே அனேகமாகத் தங்குவேன் என்றும் சொல்லிய பொழுது அந்த ஊர் குறித்து விசாரித்து அறிந்தார்.

தீடீரென்று எனது சொந்தக் கிராமமாகிய தென் திருப்பேரை என்ற ஊரின் பெயர் அவரை வெகுவாகக் கவர்ந்து விட்டிருந்தது. அங்கு நான் செல்ல வேண்டும் எப்படிச் செல்வது போன்ற விபரங்களைக் கேட்டு மடல் அனுப்பியிருந்தார். அங்கு செல்லும் விபரங்களைக் குறித்துச் சொல்லி எங்கள் இல்லத்தில் தங்கிக் கோவில்களுக்குச் சென்று வரும்படி ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருந்தேன். தனது அன்றாட சந்திப்புக்களையும், உரையாடால்களையும் சம்பந்தப்பட்ட நண்பர்களின் அனுமதியின்றியே உடனுக்குடன் தன் வலைப்பக்கத்தில் பதிந்து விடுவது அவரது வழக்கமாக இருந்து வந்தது. ஆகையால் அவர் என் வீட்டுக்குச் சென்று வந்த விபரத்தை உறுதியாக எழுதி விடுவார் என்பதை எதிர்பார்த்தபடியால் ஒரு நிபந்தனையாக என்னைப் பற்றிய விபரம் எதையும் நீங்கள் சென்று வந்த பின்பு எழுதப் போகும் பயணக் குறிப்பில் எழுதக் கூடாது என்று கட்டாயமாகத் தெரிவித்திருந்தேன். அந்த நிபந்தனையின் பேரிலேயே அவருக்கு ஒரு பயணத் திட்டம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன்.

தென் திருப்பேரை கிராமத்தில் அமைந்திருந்த மகரநெடுங்குழைக்காத பெருமாளிடம் அவர் என்ன வேண்டினாரொ, அதில் என்ன பலித்ததோ தெரியவில்லை அல்லது அந்தக் கோவிலும் அந்தப் பெருமானும் ஏதோ ஒரு விதத்தில் அவரை மிக ஆழமாக ஈர்த்து விட்டது. அன்றிலிருந்து அங்கு சென்று வந்த தினத்தில் இருந்து அந்தக் கோவிலின் மீது அவருக்கு ஒரு தீராக் காதல் ஏற்பட்டு விட்டது. திருநெல்வேலி தாமிரவருணிக் கரையில் அமைந்திருக்கும் நவ திருப்பதிகளில் ஒன்றாகிய தென் திருப்பேரை கோவிலும் அதன் பெருமாளின் பெயரும் அப்பகுதியினருக்கும் அங்கு சென்று வரும் வைணவ பக்தர்களுக்கும் அன்றி வேறு எவருக்கும் அதிகம் தெரியாதிருந்த நிலையில் தன் வலைப்பக்கத்தில் அடிக்கொரு முறை என் அப்பன் மகர நெடும் குழைக்காதரின் அருளால் என்று எழுதியதன் மூலமாக உலகின் பல்வேறு மூலையில் இருந்து அவர் பதிவைப் படிக்கும் ஆயிரக்கணக்கானோரிடம் மகரநெடுங்குழைக்காதரைக் கொண்டு சேர்த்தவர் டோண்டு ராகவன். அதற்கு மூல காரணமாக அதே மகரநெடுங்குழைக்காதர் என்னைப் பணித்திருந்தார் போலும். இன்று கடவுளையே நம்பாத நாத்திகர்களும், மாவோயிஸ்டுகளும் கூடக் கைக்கொள்ளும் ஒரு வாசகமாக அந்த பிரார்த்தனை மாறி விட்டிருக்கிறது. தென் திருப்பேரை சென்று வந்த டோண்டு ராகவன் அந்த தரிசனம் தந்த பரவசத்தில் முதலில் செய்த காரியமே எனக்கு அளித்த வாக்குறுதியை மீறியதுதான். ஆம் சென்று வந்த விபரங்களையும் என் வீட்டு முகவரி என் உறவினர்களின் பெயர்கள் அவருக்கு அளிக்கப் பட்ட உபசரிப்புகள் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் தன் வலைப்பக்கத்தில் பதிந்து விட்டார். அதற்காக எனது கோபங்களை அவர் பொருட்படுத்தவேயில்லை. இன்னும் பல தருணங்களிலும் கூட நான் எதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொல்லி அளிக்கும் தகவல்களை அவர் பிடிவாதமாக உடனுக்குடன் பதிந்தே வந்தார். அதன் காரணமாக நான் ஊருக்கு வரும் தகவல்களைக் கூட அவருக்குச் சொல்லாமல் தவிர்த்து வந்தேன். இருந்தும் நான் ஊரில் இருக்கும் தகவலை அறிந்து ஒரு முறை சென்னையில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்து விட்டார். நான் அன்று ஊரில் இல்லாத சூழலில் என்னைப் பார்க்காமலேயே ஆனால் அவருக்கு மிகவும் பிடித்தமான குழைக்காதரை தரிசித்து விட்டுச் சென்னை திரும்பினார்.

அவர் மீது என்ன கோபம் ஏற்படுத்தினாலும் தன் வாஞ்சையினாலும் அன்பினாலும் ஒரு ஃபோன்காலில் என்னைக் குளிர்வித்து விடுவார். என்னை விட என் உறவினர்களிடம் நெருக்கமாக அவர் இருந்து வந்தார். ஒரு முறை அவர் மீதும் என் மீதும் ஆபாசத் தாக்குதல்கள் நடத்தி போர்னோ சைட்டுகளை உருவாக்கி அதில் எங்கள் பெயர்களையும் புகைப்படங்களையும் இட்டு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த மூர்த்தி நான் பேசுவதாக அவரிடம் ஃபோன் செய்து என்னைப் போல நடித்து அவரிடம் இருந்து பல விஷயங்களைக் கறந்து அதை தன் தாக்குதல்களுக்கு பயன் படுத்திக் கொண்டான். அதன் பிறகு அவரை அழைத்து எங்களுக்குள் பரிமாறிக் கொள்ள அவருக்குப் பிடித்த என் மாமாவின் மகளின் பெயரை ஒரு சங்கேதவார்த்தையாகப் பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்தோம். இப்படி இணையத்தில் துவங்கிய நட்பு இணையம் தாண்டி எங்கள் வீடு வரை நீண்ட ஒரு நட்பாக நீண்டிருந்தது.

தமிழ் இணைய உலகின் வரலாறு எழுதப் படுமானால் அது டோண்டு ராகவனைத் தவிர்த்து விட்டு எழுதப் பட முடியாது. இன்று இணையத்தில் பல பிராமண பதிவர்களும் துணிந்து அவர்கள் மீது திணிக்கப் பட்ட தங்கள் சொந்த ஜாதியின் மீதான சுயவெறுப்பையும் மீறி தங்களுக்குச் சரியென்று தோன்றும் கருத்துக்களைச் சொல்வதற்கு உந்து சக்தியாக இருந்தவர் டோண்டு ராகவன், அவர்களுக்கான கருத்துச் சுதந்திர வெளியை உருவாக்கியவர் அவர். கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்காகக் கடுமையாகக் குரல் கொடுத்த ஒரு போராளி. அவர் மீது விமர்சனங்கள் இருக்கலாம். தன் சொந்தப் பிரபால்யத்திற்காக எந்தவொரு பிரச்சினையையும் தனக்காக விளம்பரப் படுத்திக் கொள்பவர் என்று அவர் தொடர்ந்து வசை பாடப் பட்டார். சோ குறித்தும் துக்ளக் குறித்தும் இஸ்ரேல் குறித்தும் யூதர்கள் குறித்தும் பால்ஸ்தீனப் பிரச்சினை குறித்தும் தனது கருத்துக்களை எவ்விதத் தயக்கமும் இன்றி துணிந்து பதிந்து வந்தவர் டோண்டு ராகவன். எந்தவொரு இஸ்ரேலிய யூதரை விடவும் மேலான ஒரு யூதப் போராளியாக இருந்தவர் டோண்டு ராகவன்.

தி ஹிந்து நாளிதழின் நிருபரனா நரசிம்மன் என்பவரின் மகனான ராகவன் தந்தையிடமிருந்து மொழிப் புலமையையும் அபாரமான நினைவுத் திறனையும் கொண்டிருந்தார். எப்பொழுது நடந்த சம்பவத்தையும் கூட சமீபத்தில் 1963ல் என்று ஆரம்பித்துத் துல்லியமான நினைவுத் திறனுடன் சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர் அவர். அந்த அபாரமான நினைவுத்திறனே அவரை பல மொழிகளிலும் சரளமாக கற்றுக் கொள்ள வைத்தது. ஜெர்மன், ஃப்ரெஞ்ச், உருது, ஹிந்தி என்று பன்மொழியிலும் சரளமாக பேசவும் எழுதவும் மொழிபெயர்க்கவும் ஆற்றல் உள்ளவராக விளங்கினார். பன்மொழித் திறனும் துணிவும் நினைவாற்றலும் அனைத்திற்கும் மேலாக அவரது கம்பீரமான ஆளுமையும் உயரமும் அவரிடம் அவரைக் கடுமையாகத் தாக்கியவர்களிடமும் கூட ஒரு வித பயம் கலந்த மரியாதையை ஏற்படுத்தியது. இவர் நிச்சயம் ஒரு ரா உளவாளியாகவோ மொசாட் அல்லது சி ஐ ஏ வின் கூலியாகவோ இருக்க வேண்டும் என்று அச்சப் பட்டு அதை இணையத்தில் வதந்தியாகவும் பரப்ப ஆரம்பித்தனர். ஆனால் அவர் என்றுமே தன்னை ஒரு மொழிபெயர்ப்பாளனாகவே அடையாளப் படுத்தி வந்தார். அவர் பதிந்திருக்கும் ஆயிரக்கணக்கான பதிவுகளும் பின்னூட்டங்களும் எதிர்காலத்தில் தமிழ் நாட்டின் வரலாற்றைப் படிக்க விரும்பும் எந்தவொரு மாணவனுக்கும் பல பயனுள்ள சமூக, வரலாற்று, அரசியல் செய்திகளை அளிக்கக் கூடிய ஆவணமாக அமையக் கூடும். அவரது வலைப்பதிவை எவரேனும் பாதுகாக்க முடியும் என்றால் அவசியம் செய்யப் பட வேண்டிய ஒரு ஆவணமாக அது அமையக் கூடும்.

தான் எதிர் கொண்ட கடும் மிரட்டல்களை எதிர்த்து சகல நிலைகளிலும் கடுமையாகப் போராடியது போலவே தன்னைத் தாக்கிய நோய்களையும் அவர் எதிர்த்துப் போராடி வந்தார். ஆனால் ஆனானப் பட்ட டோண்டு ராகவனையே இதய நோய் வென்று விட்டது. ஒரு வேளை அவரது கருத்துக்களை தன் வலைப்பதிவில் பதிந்து விட்ட பின்னரே படிக்க வேண்டிய பொறுமையை இழந்த அவரது அப்பன் மகர நெடும் குழைக்காதன் அதன் அருகில் இருந்து உடனுக்குடன் கேட்டறிவதற்காக தன்னருகே தனக்குள்ளே அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.

அவர் ஆச்சாரியன் திருவடி அடைந்து விட்டார். அவர் அனுதினமும் துதித்து வந்த மகரநெடுங்குழைக்காதனுடன் நிச்சயம் கலந்து விட்டிருப்பார். அங்கிருந்தாலும் கூட அவர் போராடியவற்றுக்காக அவரது அப்பன் மகரநெடுங்குழைக்காதனுடன் போராடிக் கொண்டிருப்பார் என்பது உறுதி. அவர் எனக்கு பல பாடங்களையும் படிப்பினைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். என் வாழ்க்கையின் மறக்க முடியாத ஆளுமைகளில், இனிய நண்பர்களில், ஒரு முன்னோடிகளில் ஒருவர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு அவரும் நானும் வணங்கும் மகரநெடும் குழைக்காதர் அமைதியையும் மன நிம்மதியையும் அளிக்கட்டும்.

பிரார்த்தனைகளுடன்
ச.திருமலைராஜன்

Read More...

Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன் சார் - எ.அ.பாலா

திரு.டோண்டு ராகவன் இயற்கை எய்தி விட்டது குறித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அப்போதைய மனநிலையில் விரிவாக எழுதவில்லை. இன்று காலையில் அவரது மரணச்செய்தி கிடைத்தபோது, 4 ஆண்டுகளுக்கு முன் எனது அக்கா மகன் அகாலமாக ஒரு விபத்தில் மரணித்தபோது ஏற்பட்ட அதே வலியை / தாக்கத்தை உணர்ந்தேன். அதற்கு அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் ஒரு காரணம்.

திருவல்லிக்கேணியும், இந்து உயர்நிலைப்பள்ளியும் தான் எங்கள் 8+ ஆண்டுகளுக்கான நட்புக்கு அச்சாரமிட்ட விஷயங்கள். 2004-ல் என் இடுகை ஒன்றை வாசித்து விட்டு என்னை தொடர்பு கொண்டு வலைப்பூ தொடங்குவது மற்றும் தமிழ் தட்டச்சு பற்றி கேட்டறிந்து கொண்டு அன்று எழுத ஆரம்பித்தவர், இறப்பதற்கு 2 நாட்கள் முன் வரை ஓயாமல் (சுமார் 1000 இடுகைகள் இருக்கலாம்) எழுதி வந்திருக்கிறார். அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை என்று தோன்றுகிறது. அது போல, கடைசி வரை ஏதாவது வாசித்துக் கொண்டே தான் இருந்தார்!

வாசிப்பனுபவம் அவரது மிகப்பெரிய பலம்! அதனால் அவரது தகவல்களில் தவறு காண்பது அரிது. அரசு நிறுவனத்தில் பொறியாளர் பதவியை உதறி விட்டு, தனக்குப் பிடித்தமான (பிரெஞ்சு, ஜெர்மன்) மொழிபெயர்ப்புத் தொழிலை இறுதி வரை மேற்கொண்டிருந்தவர். அவர் நேற்று தொடங்கிய மொழிபெயர்ப்பு பணி ஒன்று அவரது மடிக்கணினியில் அவருக்காக காத்து கொண்டிருக்கிறது! கடுமையான உழைப்பாளி அவர்.

போலி டோண்டு விவகாரத்தின்போது (அதில் அவர் நேரவிரயம் செய்திருப்பினும்) அவரது மன உறுதி பளிச்சிட்டதை பலரும் ஒப்புக் கொள்வர். தனது கருத்துகளின் மேலிருந்த பிடிப்பால், பலமுறை வலைப்பூ விவாதங்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், தனிப்பட்ட அளவில் பலருடனும் இனிமையாக நட்பாகப் பழகியவர் என்பதை நான் அறிவேன். போலித்தனம் துளியும் இல்லாதவர். அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், யாரையும் அவர் நிந்தித்துப் பேசி நான் கேட்டதில்லை. அவரவர் கருத்து அவரவருக்கு என்று போய்க்கொண்டே இருந்தவர்.

அதோடு, அவர் சாதீயவாதியும் கிடையாது, அவருக்கு ஈகோவும், கர்வமும் கிடையாது என்று உறுதியாக என்னால் கூறமுடியும். ஆனால், அவர் மரணத்திற்குப் பின் அவர் குறித்து எந்த தர்க்கமும் செய்ய நான் நிச்சயம் விரும்பவில்லை.

அவரது மரணத்திற்கு பாலபாரதி, நைஜீரியா ராகவன், லக்கிலுக், உண்மைத்தமிழன், ரஜினி ராம்கி ஆகியோர் வந்திருந்தனர். பாலா ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் டோண்டு சார், அதுவே அவரது தனித்துவமான சிறந்த பண்பு’ என்றார். உ.தமிழன் டோண்டுவைப் போல் எழுத இனி ஆள் கிடையாது என்றும், அவரது மரணம் தமிழ் வலையுலகுக்கு பெரும் இழப்பு என்றும் வருந்தினார். ர.ராம்கி, போலி டோண்டு விவகாரத்தில் தான் சிக்கியிருந்தால், தமிழ் இணையத்தை விட்டே ஓடியிருக்கக்கூடும் என்று டோண்டுவின் மனத்திண்மையை வலியுறுத்திப் பேசினார்.

புற்று நோய்க்கு எதிரான தனிப்பட்ட போராட்டத்திலும் அவரது அந்த மனத்திண்மையை பார்க்க முடிந்தது. தனக்கு கேன்ஸர் என்பதையே நோய் வந்து ஒரு 3 மாதங்களுக்குப் பின் தான் (சொல்லாவிட்டால் பின்னால் நான் கோபப்படுவேன் என்பதற்காக) தயங்கித் தயங்கி என்னிடம் தெரிவித்தார். எனக்கு தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதனை அறிமுகம் செய்து வைத்தவரும் அவரே! அதுவே, என் நவதிருப்பதி விஜயத்துக்குக் காரணமாக அமைந்தது. ஆன்மீகம் பற்றி டோண்டு அவர்கள் அதிகம் எழுதியிராவிட்டாலும், பெருமாள் மேல் ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர். என் திருப்பாவை இடுகைகளின் ரசிகர் அவர், பலமுறை மனதார பாராட்டியும் இருக்கிறார்.

“உங்கள் தாயார் ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை ஆளாக்கியிருக்கிறார். அவரை கடைசி வரை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். என் மகள்களை (அவருக்கு வாய்க்காத) பேத்திகளாக பாவித்து அன்பு செலுத்தியிருக்கிறார். என் தந்தையும், என் மனைவியின் தந்தையும் என் மகள்கள் பிறப்பதற்கு முன்னமே இறந்து போனதால், என் மகள்களுக்கு அறிமுகமான முதல் தாத்தா (இந்த அடைமொழி அவருக்குப் பிடிக்காதிருந்தபோதிலும்) டோண்டு ராகவன் சார் தான்!

டோண்டுவிடம் சிலபல குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் அவரது பிரத்யேக குணங்களான, கடும் உழைப்பு, நிறைந்த வாசிப்பனுபவம், போலித்தனமின்றி நட்பு பாராட்டும் / உதவும் குணம், மன உறுதி, சிறந்த அறிவாற்றல், அசாத்திய மொழித்திறமை ஆகியவற்றை 8 ஆண்டுகளூக்கும் மேலாகஅருகிலிருந்து கவனித்தவன் என்ற வகையில், அவர் ஒரு மாமனிதர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

ஒரு 7 மாதங்களுக்கு முன் டோண்டு குடும்பத்துடன் மகர நெடுங்குழைக்காதனை தரிசிக்க சென்றபோது, உடல் நிலை சற்றே சரியில்லாத காரணத்தால், அவரை மதுரையிலேயே விட்டு விட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமே தென் திருப்பேரை சென்று பெருமாளை தரிசித்ததாக அவரது துணைவியார் என்னிடம் கூறினார். டோண்டு சாரின் அந்த மனக்குறையை மகரநெடுங்குழைக்காதனே நிவர்த்தி செய்தது தான் விசேஷமான விஷயம். 2 மாதங்களுக்கு முன் டோண்டுவை தன்னிடம் வரவழைத்து அவருக்கு திவ்யமான தரிசனத்தை வழங்கியிருக்கிறார். மகரநெடுங்குழைக்காதன் மீது அவருக்கு இருந்த பரமபக்தி அத்தகையது!


எந்தரோ மகானுபாவுலு, அந்தரி கி வந்தனமுலு -- டோண்டு ராகவன் சாரின் ஆன்மா சாந்தியடைய நான் வணங்கும் பரமபத நாயகனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

மற்றவர்கள் எழுதியது
டோண்டு ராகவன் - அஞ்சலி..! - உ.தமிழனின் சிறந்த அஞ்சலி -


டோண்டு சாரின் ஜெயா டிவி நேர்முகம்


பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மரணம்


'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !



திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்  . -


சாதி இனிஷியல் மாதிரி - யுவகிருஷ்ணா


டோண்டு ராகவன் - பத்ரி சேஷாத்ரி


நண்பர் 'டோண்டு' ராகவன் - மதிபாலா


டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....


Dondu Raghavan Sir, We miss you!!


அமரர் டோண்டு ராகவன்..


டோண்டு சார்


டோண்டு ராகவன்.


சென்று வாருங்கள் டோண்டு


பதிவர் திரு டோண்டு ராகவன்!


மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக


Read More...

சாதா குழந்தை To சூப்பர் குழந்தை - 1


வணக்கம் இட்லி வடை வாசகர்களே.

சாதா To சூப்பர் குழந்தை மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இந்தத் தொடரை எழுதும் நான் பிரபல குழந்தை உளவியல் நிபுணரோ அல்லது நரம்புவியல் மருத்துவரோ அல்ல.

பிறந்து வளர்ந்தது மதுரை மண்ணில். வேலைக்காகக் கால்நடை மருத்துவம் சேர்ந்து, மார்க்கெட்டிங்கே என் மனதிற்குகந்தது என்று உணர்ந்து எம்.பி.ஏ பயின்று தற்போது பெங்களூரில் ஒரு தனியார்க் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிகிறேன்; ஒன்றே கால் வயதுக் குழந்தையின் தந்தை.அந்தக் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டி,அதற்கான பயிற்சிகள், வாசிப்புகளில் இறங்கி, நான் அறிந்து கொண்டதை, தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் பரிமாற விரும்பியதன் விளைவே இந்தத் தொடர்.

குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டும் தான் என்றில்லை- எல்லோருக்குமே இது அவசியமானது என்பதைப் போகப் போகப் புரிந்து கொள்வீர்கள்.

ஒரு குழந்தையின் வாழ்வின் முதல் நான்கைந்து வருடங்களில் அதற்கு என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் அமையும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

அப்படியான அந்த முக்கியமான காலகட்டத்தில் சரியான முறையில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? அதன் மூளை வளர்ச்சியை,படைப்பூக்கத்தை மேம்படுத்துவது எப்படி ? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக வருவதே இந்த “சாதா குழந்தை To சூப்பர் குழந்தைத் தொடர்.

அன்புடன்
டாக்டர்.பிரகாஷ்.
www.rprakash.in

போன வாரம் விஜய் டிவியில் பெற்றோர்கள் கோபம் வந்தால் தங்கள் செல்லங்களை செல்லமாக எருமை, கழுதை, நாயே என்று திட்டுவதாக  சொன்னார்கள். அதனால் குழந்தை டாக்டர் இந்த தொடரை எழுதுவதை விட கால்நடை டாக்டர் எழுதுவது தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-) கருத்துக்கள் வழக்கம் போல வரவேற்கப்படுகிறது...

Read More...