என் தாய் வழி பாட்டனார் புதுக்கோட்டை மற்றும் காரைக்குடிக்கு நடுவில் அமைந்திருக்கும் திருமெய்யம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அந்த வைணவ திவ்யதேசம் பற்றி எனக்கு நிறைய சொல்லியிருக்கிறார். அவர் காலமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் தான், அக்கோயிலுக்கு சென்று பெருமாளை முதல் முறை தரிசித்தேன். அதன் பின்னர், ஒரு 3-4 முறை சென்றிருப்பேன்.
மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 8-ஆம் நூற்றாண்டு கோயிலிது. மலைக்கு மேல் கோட்டை உள்ளது. சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் கோயிலை சுற்றி மதில் சுவரை காணலாம். திருமெய்யம் பற்றி சுஜாதா தேசிகன் அவர்களின் அருமையான இடுகை இங்கே!
திருமெய்யராக கிடந்த கோலத்திலும் சத்யகிரி நாதராக நின்ற கோலத்திலும் பெருமாள் அருள் பாலிக்கும் திவ்ய தேசமான திருமெய்யத்தில், சுமார் 50 ஆண்டுகளாக (7 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்ரோக்ஷணத்தின் போது கோயிலின் எல்லா உத்சவ மூர்த்திகளுக்குமான திருமஞ்சனத்தை தவிர்த்து) பகவத் இராமானுசரின் திரு அவதார திரு நட்சத்திர தினம் கூட அனுசரிக்கப்படாமலேயே இருந்து வந்தது சற்றே வேதனையான விஷயம்!உடையவரின் உத்சவத் திருவுருவம் எழுந்தருளப் பண்ணப்படாமல் கருவூலத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. எனது உறவினர் ஒருவர் முயற்சியின் பேரில், எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தியை, இவ்வருடம், அவரது அவதார திருநட்சத்திர நாளில் (27 ஏப்ரல் 2012) உள் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணவும் சிறிய அளவில் உத்சவம் நடத்தவும் உரிய அனுமதி பெறப்பட்டது.
அதன்படி, ஏப்ரல் 27 அன்று உபதேச (ஆட்காட்டி விரல் மடங்கி கட்டை விரலுடன் ஒரு வட்டம் ஏற்படுமாறு சேர்ந்து, மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கியபடி இருக்கும்) முத்திரையுடன் கூடிய ராமானுசரின் அழகிய உத்சவ மூர்த்தி, ஆழ்வார் மண்டபத்தில், உடையவரின் மூலவ மூர்த்திக்கு நேர் எதிரே எழுந்தருளினார். எம்பெருமானாருக்கு திருமஞ்சனம், முறையான நாலாயிர பிரபந்த சேவையும், சாற்றுமுறையும் நடைபெற்றன. பட்டு வஸ்திரமும், மாலைகளும் சாத்திக்கொண்டு எம்பெருமானார் தேஜஸ்வியாக அருள் பாலித்தது கண்கொள்ளா காட்சி!
இரு ஆச்சரியமான விஷயங்களை இதை வாசிப்பவரிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். பெருமாள் கிடந்த கோலத்தில் அருளும் திவ்யதேசங்களில், திருமெய்யரின் மூலவ மூர்த்தியே, நீள அளவிம், மற்ற திவ்யதேச மூலவர்களைக் காட்டிலும் பெரியவர்! மற்றொன்று, திருமெய்யத்தில் உபதேச முத்திரையுடன் கூடிய எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தி, விசேஷமானது, காண்பது அரிது! வைணவ சம்பிரதாயத்தில், உபதேச முத்திரையில் மேல் நோக்கி இருக்கும் மூன்று விரல்களும், சித்தம், அசித்தம் மற்றும் ஈஸ்வர தத்வங்களாகிய தத்வத்ரயத்தையும், திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஸ்லோகங்களான ரகஸ்யத்ரயத்தையும் குறிப்பவை. ஆட்காட்டி மற்றும் கட்டை விரலும் சேர்வதால் ஏற்படும் வட்டம், பூர்ண சரணாகதியால் அடையவல்ல பரமபதத்தை குறிப்பதாகும். இப்படி உபதேச முத்திரையுடன் அருள் பாலிக்கும் எம்பெருமானார் திருவுருவம், திவ்யதேசங்களில், திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே காணப்படுகிறது.
பக்தர்களின் நித்ய தரிசனத்துக்காக, உடையவரின் உத்சவ விக்ரஹம், திருமெய்யரின் சன்னதியில் எழுந்தருளப் பண்ணப்பட்டு இருப்பதாலும், இதற்கு இந்து அறநிலையத்துறையின் அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாலும், திருமெய்யம் செல்லும் அன்பர்கள் இனி வருடம் முழுதும், பெருமாளோடு, எம்பெருமானாரையும் ஒரு சேர, அகம் மகிழ சேவிக்கலாம்! திருமெய்யத்தில் உடையவர் வழிபாடு மீண்டும் துவக்கப்பட்டதற்கு திருமெய்ய மக்களில் பலர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
சாதி பேதமின்றி, ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்தவர்கள் அனைவரும் வைணவர்கள் என்றதோடு நில்லாமல், திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, தனது ஆச்சாரியனான திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளைக்கு மாறாக, அஷ்டாட்சர மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்தவர் அண்ணல் இராமனுசன்! வைணவ சம்பிரதாயத்தை நெறிப்படுத்தி, கோயில் ஒழுக்கை ஏற்படுத்தி, வைணவம் செழித்து தழைக்க இவ்வுலகில் அவதரித்த எம்பெருமானார், வைணவ குரு பரம்பரை என்ற ஆரத்தின் நடுநாயகமாய் திகழும் மாணிக்கம் போன்றவர் என்றால் அது மிகையில்லை. உடையவர் சம்பந்தம் இருந்தால் மட்டுமே, பூரண சரணாகதி நிலையிலும், பெருமாளை பற்ற முடியும் என்பது வைணவ பெருந்தகைகள் வாக்கு. அதனால், திவ்ய தேசங்களில், ராமானுச வழிபாடு என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.
அப்பேர்ப்பட்ட மகான் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் 2017-ஆம் வருடம் சித்திரையில் திருவாதிரை நட்சத்திர நாளன்று பூர்த்தியாவது ராமானுச அடியார்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். அதை, அவ்வாண்டும் முழுதும் ஒரு பொது நிகழ்வாக, விமரிசையாக, சொற்பொழிவு, வழிபாடு, திராவிட வேதம் என்று போற்றப்படும் நாலாயிர பாராயணம், தரும காரியங்கள் என்று பல இடங்களிலும் கொண்டாட வேண்டும். அதற்குள், வைணவர்கள் அனைவரும், பிரபன்ன காயத்ரி என்று போற்றப்படும் இராமனுச நூற்றந்தாதியை மனனம் பண்ணி, அதை பிறழாமல் பாராயணம் பண்ண கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அது போலவே, எல்லா வைணவ திவ்ய தேசங்களிலும், அபிமான ஸ்தலங்களிலும், ஏன், எல்லா விஷ்ணு கோயில்களிலும், உடையவரின் உத்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்படு, நித்ய கைங்கர்யத்துடனான ராமானுச வழிபாடு பரவலாக நடைபெற வேண்டும் என்பது பலரின் அவாவாக உள்ளது!
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே
(இராமானுச நூற்றந்தாதி 41)
இராமானுச முனியின் சீரும் சிறப்பையும் புரிந்து கொள்ள கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் அருளிய இப்பாசுரமே போதும்! அதாவது, "பரமபத நாயகனே நேரில் வந்து காட்சி அளித்தாலும், அஞ்ஞான இருளில் அதை உணர இயலாத நிலையில் இருந்த உலக மாந்தரெல்லாம், ராமானுஜர் அவதரித்த அக்கணமே, நல்ஞானம் பெற்று, நாராயணனுக்கு உற்றவர் ஆயினர்" என்பது இப்பாசுரத்தின் உரையாம்!
உயர்ந்து மலர்ந்த திருமுடி அழகும், உறைந்து தழைந்த திருக்கேசமும், நயந்து சுற்றிய நல்ல குழலிணை நன்றாய்ச் சுற்றிய சிகாபந்தமும், பின்னெடுத்ததோர் பிடரியின் அழகும், பிரிந்து கூடிய முக்கோல் அழகும், கண்ணொடு பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும், காணக்காணத் திகட்டிடாது கவினாய்த் தோன்றும் இராமாநுஜநே!
தேனாம் உன்னடிச் சரணம் அடைந்தோம் தினமும் எம்மைக் காத்தருள் என்றே.. காத்தருள் என்றே!
எ.அ.பாலா
பல கிரிக்கெட் பதிவுக்கு பிராயச்சித்தம் இந்த பதிவு !
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Monday, April 30, 2012
திருமெய்யத்தில் பகவத் ராமானுஜரின் திருநட்சத்திர உத்சவம் - எ.அ.பாலா
Posted by IdlyVadai at 4/30/2012 12:53:00 PM 17 comments
Sunday, April 29, 2012
ஆறு வித்தியாசங்கள்
இரண்டு படங்களுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் ( ஒற்றுமை நிறைய !) இருக்கிறது. கண்டுபிடியுங்க
பங்காரு லக்ஷ்மன் கூட ஏதாவது ஒரு காவி உடை சாமியாரை சந்தித்திருந்தால் தப்பித்திருக்கலாம்.
காஞ்சி சங்கர மடம் ஒரு காலத்தில் இப்படி தான் இருந்தது !
Posted by IdlyVadai at 4/29/2012 10:08:00 AM 7 comments
Labels: ஆன்மிகம், செய்தி விமர்சனம், படம்
Saturday, April 28, 2012
ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரியா ஸ்வாமிகள்
தமிழகத்தின் மிகப் பெரிய(?) ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். - செய்தி
தமிழ்நாட்டில் திருஞான சம்பந்தரால் வளர்க்கப் பட்ட தமிழ் சைவ மதமும், தமிழும் தழைத்தோங்க ஹிந்தி ஹிந்து கடவுள்களை வணங்குவோம்.
Posted by IdlyVadai at 4/28/2012 11:07:00 AM 16 comments
Labels: ஆன்மிகம், செய்தி விமர்சனம்
Friday, April 27, 2012
கேள்வி பதில்கள் - போட்டி
விஜய் டிவி என்று நினைக்கிறேன் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்ல வேண்டும்.
கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா?
அழகிரி பதில்: நான் போட்டியிடவில்லை
வாசகர்களுக்கு சில கேள்விகள்
சிலுக்கை இருமுறை நேரில் சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறேன். அவரது உடல்மொழியை வித்யா அப்படியே கொண்டுவந்திருக்கிறார். க்ரேட். - வாக்கு மூலம், ரைட்டர் பாரா
1. கேள்வி: நக்மாவை பேட்டி எடுத்த எழுத்தாளர் யார் ?
பிரங்கி ஊழல் புதிதாக வெடித்துள்ளது - செய்தி
2. பிரங்கி ஊழல் விசாரணைக்கு அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது ?
3. மூன்றாவது கேள்வி, 3 படம் தோல்வி, எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று ரஜினி அறிக்கை - செய்தி
கோச்சடையான் பாபா போல வெற்றி பெறுமா ?
பேத்தலான பதிலுக்கும், சரியான பதிலுக்கும் பரிசு உண்டு.
Posted by IdlyVadai at 4/27/2012 08:01:00 PM 14 comments
Labels: போட்டி
சச்சின் எம்.பி
சச்சின் ராஜ்ய சபா எம்.பி என்ற நியூஸ் வந்தவுடன், ஆங்கில டிவி சேனல் "இவர் பாதி நேரம் கிரிக்கெட் விளையாடுகிறார், இவர் எப்படி பாராளுமன்றம் வருவார்?" என்று விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சோனியாவை சந்தித்த சச்சினை பார்த்த பிஜேபி மற்றும் சில எதிர்க்கட்சிகள் உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும், இதை சந்தோஷமாக வரவேற்றாரகள். காரணம் சச்சின். அவரை பற்றி ஏதாவது சொன்னால் நிச்சயம் பப்ளிக் தங்கள் மீது கோபப்படுவார்கள் சும்மா இருக்கிறார்கள்.
சச்சின் எப்படி எம்.பி ஆகலாம் அவர் வருடத்தில் முக்கால்வாசி நேரம் கிரிக்கெட் தானே விளையாடுகிறார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா இன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
சோனியா, மன்மோகன் சிங் ஆசியுடன் இருக்கும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரே பாராளுமன்றம் பக்கம் அடிக்கடி வராத போது சச்சின் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன ?
வீட்டு வரவேற்பறையில் உபயோகம் இல்லை என்றாலும் சில சமயம் அழகிய க்ரோட்டன்ஸ் செடிகள் வைப்பதில்லையா ? அது மாதிரி தான் இதுவும்.
Posted by IdlyVadai at 4/27/2012 03:59:00 PM 6 comments
Labels: செய்தி விமர்சனம், விளையாட்டு
டர்ட்டி பிக்சர் விமர்சனம்
தில்லியின் அதிகார வட்டாரத்தில், மிகவும் கவர்ச்சியான, வாக்கு வன்மையுடைய வழக்கறிஞராகவும், செல்வந்தரான அரசியல்வாதியாகவும் அறியப்படுபவர் அபிஷேக் மனு சிங்வி. இவர் தொடர்பான மிகுந்த சர்ச்சைக்குரிய குறுந்தகடு வெளியானவுடன், St.Stephens, ஹார்வர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் மாணவரான இவர் மிகவும் சரியான நகர்த்தல்களுடன் அதை எதிர்கொண்டார். மிகவும் துரிதமாகச் செயற்பட்டு, செய்தி சானல்கள் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாக இந்த குறுந்தகட்டில் அடங்கிய காட்சிகள் வெளிவருவதை தடுக்க நீதிமன்றத்தின் மூலம் ஒரு தடையுத்தரவைப் பெற்றார், தவிர இந்த குறுந்தகட்டின் சூத்ரதாரியாக அறியப்படும் தனது ஓட்டுநரின் மூலமாகவே, முன்விரோத்த்தின் காரணமாக குறுந்தகட்டின் காட்சிகளை மிகைப்படுத்தி, ஒரு பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றினேன் என்றும் கூற வைத்தார். இதைவிட ஒரு திறமையுள்ள வழக்கறிஞரால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு விவகாரத்தின் நதிமூலத்தையே நிர்மூலமாக்கிவிட்டாலும், துரதிருஷ்டவசமாக இது 2007 ஆம் ஆண்டு போலில்லாமல், 2012 ஆம் ஆண்டு. இதே ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக இருந்திருந்தால், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இது போன்ற விவகாரத்திற்கு சமாதி கட்டப் போதுமானது. ஆனால், 2012 இல், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கான யுகத்தில், இவை போதுமானதாக இல்லை.
தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் நீதிமன்றத் தடையுத்தரவைக் காரணம் காட்டி, இச்செய்தி பற்றி ஒருபுறம் மெளனம் சாதிக்க, மறுபுறம் ஏனைய ஊடகங்களும் இது பற்றிய விவாதம் நட்த்தவோ அல்லது குறைந்தபட்சம் செய்தி வெளியிடவோ கூட மெனக்கெடவில்லை. இன்னமும் சொல்லப் போனால், நீதிமன்றத் தடையாணை பிறப்பிப்பதற்கு முன்னதாகவே சில தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் இக்குறுந்தகட்டினைப் பெற்றுவிட்டிருந்தன, ஆனாலும் அவர்களே அறிந்த காரணங்களுக்காக இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இல்லை. சமூக வலைத்தளங்கள் மட்டும் இல்லையெனில், இவ்விஷயம் எங்கு துவங்கியதோ, அங்கேயே முடிந்திருக்கும்.
ஆனால் சிங்வியின் துரதிருஷ்டம், ட்விட்டரில் இச்செய்தி பரவத் துவங்கியவுடன் கட்டுப்படுத்த முடியாமல் போனது. நீதிமன்றத் தடையாணை இருந்தபோதிலும், சிங்வியின் சர்ச்சைக்குரிய வீடியோ யூடியூப் தளத்தில் கசியவிடப்பட்டது, தவிர ட்விட்டரில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிங்வி அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒருவராக இருந்தார். ஒரு விஷயத்தின் மீதான மக்களின் நாட்டமும், ஒரு செய்தியின் மீதான முக்கியத்துவமும் மிகவும் குறுகிய இக்காலகட்டத்தில், இதை ஒரு அளப்பரிய சாதனை என்றே கூற வேண்டும். ஒருபுறம் ட்விட்டரில் “நாயால் கடிபட்ட ட்ரைவர், ட்ரைவரால் கடிபட்ட மாஸ்டர்” போன்ற ஹாஸ்யங்கள் பெருகிக் கொண்டிருக்க, நீதிமன்ற வளாகத்தில் இத்தகைய ஒரு அவலம், அதுவும் பாலியல் உறவுக்கு ப்ரதியுபகாரமாக நீதிபதிஸ்தானம் என்ற விஷயமே விவாதிக்கப்பட்டதில் கவனிக்கத்தக்க அம்சமாக விளங்கியது. இதனால் விளைந்த கோபம் உணரக் கூடியதாகவும், விமர்சன்ங்கள் மிக்க் கூரியதாகவும், கேள்விகள் மிகவும் நியாயமானதாகவும் இருந்தன. எவ்வாறு ஒரு சாதாரண ட்ரைவரால் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்கையான நிகழ்வை அரங்கேற்ற முடிந்தது? அவரால் எவ்வாறு மீடியாக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது? சிங்வி வீடியோவை நம்பக் கூடிய வகையில் மிகைப்படுத்த எவ்வாறு அவருக்குப் பணம் கிட்டியது? அந்த நிகழ்வு நீதிமன்ற வளாகத்தில் நடந்த்தா? வீடியோவில் தொடர்புடைய பெண்மணி ஒன்பது மாதங்களில் நீதிபதி பதவி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டாரா? இவ்வாறு ட்விட்டரில் எழுப்ப்ப்பட்ட அநேக கேள்விகளுக்கும் விடையில்லை. அதே சமயம், ஒரு சாரார் இது இரு வயதினரிடையே மிகவும் அந்தரங்கமாக நடைபெற்ற நிகழ்வு இது என்றும் மற்றொரு சாரார், சிங்வி ஒரு பொது மனிதர், ஒரு ராஜ்யசபை உறுப்பினர், தன்னுடைய பதவியை துஷ்ப்ரயோகம் செய்து, ஒருவருடான பாலியியல் உறவுக்கு மாற்றாக, நீதிபதி பதவியைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி தருவது ஏற்கவே முடியாதது என இருசாராரிடையே பற்றி எரியும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இவ்வாறு இவையனைத்தும் ட்விட்டரில் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, மீடியாக்கள் அதிசமாய் மெளனம் சாதித்தன. இவ்விவகாரத்தில் தம்முடைய பங்கை சுத்தமாக பகிஷ்கரித்து, ட்விட்டரில் இதனை விவாதிப்பதற்கு ஒரு களமேற்படுத்திக் கொடுத்தது.
இவ்வளவு தீர்மானமாக இவ்விவகாரத்தை எதிர்கொண்டு, நடந்தவையனைத்துமே நாடகம் என்ற பாவனையிலிருந்த சிங்வியை இவ்விவகாரத்தின் வீச்சு மெல்லத் தாக்கத் துவங்கியது. பாராளுமன்றக் கூட்ட்த்தொடர் துவங்கவிருந்த நிலையில், பாஜக இவ்விவகாரத்தைச் சரியாகப் பிடித்துக் கொண்டபோது, சிங்விக்கு தாம் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
இது போன்றதான பாலியியல் சர்ச்சைகள் ஒன்றும் புதிதானவை அல்ல, இதுபோன்ற சர்ச்சைகள் உலகின் அநேக நாடுகளிலும் அரசாங்கங்களை உலுக்கியிருக்கிறது. தவிர, இந்தியாவிலும் ஒரு அரசியல்வாதி இவ்வாறான நிலையில் பிடிபடுவது அப்படி ஒன்றும் புதிதான விஷயம் அல்ல, ஆனாலும் இச்சமயம் இவ்விஷயத்தைப் பொருத்தமட்டில் மீடியாவின் போக்குதான் மிகவும் வியப்புக்குரியதான ஒன்று. இந்தியாவைப் பொருத்தவரை மீடியாவானது மிகுந்த செல்வாக்குடைய அரசியல்வாதிகளுக்கானதாகவே திகழ்கிறது. சில விஷயங்களில் பொது மக்கள் இவற்றில் வெளியாகும் விஷயங்களை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லாமலே போகிறது. தனிப்பட்ட ஒரு நபரின் கருத்தானது செய்தியாக உருமாற்றம் பெறுவதால் உண்மையான புலனாய்வு ஊடகவியல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதனால் நீண்ட காலமாகவே செய்தி என்பது ஒருவழிப் பாதையாகவே திகழ்கிறது.
இதுபோன்ற சமூக வலைத்தளங்களின் வருகையால், குறிப்பாக ட்விட்டர் போன்றவற்றால், சாதாரண நிலையிலுள்ளவர்கள் தங்களது கருத்துகளையும், எண்ணங்களையும் பிரதிபலிக்க ஒரு சிறந்த தளம் ஏற்பட்டுவிட்ட்தாக்க் கருதுகின்றனர். ஆக செய்திகள் இனி எப்போதும் ஒருவழிப் பாதை ஆகா. மீடியாக்கள் நிரா ராடியாவின் உரையாடல்களைப் புறக்கணிக்க எத்தனித்தபோது, கீ போர்டுகளையும், அகண்ட அலைவரிசை இணைய இணைப்புகளையுமே ஆயுதங்களாகத் தரித்தவர்கள் மூலம் மீடியா இவற்றை விவாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. உபி தேர்தலின்போது மீடியாக்கள் வெறுமனே ராகுலும், பிரியங்காவும் கையசைப்பதையே காட்டிக் கொண்டிருந்தபோது ட்விட்டர் பயனாளர்களுக்கு இன்னமும் அதிகம் தெரிந்திருந்த்து. இது போன்ற பல நிகழ்வுகள் மீடியாக்கள் மீது ஒருவகையான அவநம்பிக்கையைத் தோற்றுவித்துவிட்டிருந்தன. பெரும்பாலான பிரபல மீடியாக்கள் சிங்வி விஷயத்தை முற்றிலுமாக மூடி மறைக்க எத்தனிக்கையில், ட்விட்டர் அதற்கு நேரெதிர்மாறாக நடந்து கொண்டது. மீடியாக்கள் இவ்விஷயத்தை மூடி மறைத்தபோது, ட்விட்டர் இவ்விஷயத்தை முன்னெடுத்துச் சென்றது. இன்றைய யுகத்தில் தடையுத்தரவுகளும், தடைகளும் அர்த்தமில்லாத விஷயங்களாகிவிட்டன. அரசாங்கத்தின் பல முன்னெடுப்புகளையும் தாண்டி, எவராலும் இந்த வீடியோ பரவுவதைத் தடுக்க இயலவில்லை. சிங்வி ராஜிநாமா செய்த்தும், திடீரென விழித்துக் கொண்ட்து போல் மீடியாக்கள் ட்விட்டருக்குப் பக்க வாத்யம் இசைக்கத் துவங்கின. இது சமூக வலைத்தளங்களின் வெற்றி என மீடியாக்கள் கோஷித்தன, ஒருசாரார், இது சமூகவலைத்தளங்களின் அயோக்யத்தனம், அவற்றிற்கு சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்று குமுறினர். கடைசியாக இச்செய்தியின் பொருளானது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஊடகத்தின் வாயிலாக நிலைநிறுத்தப்பட்டது.
இதனால் சமூகவலைத்தளங்கள் செய்வதனைத்துமே சரியென்றாகிவிடுமா என்றால் இல்லை. நிஜத்திலுள்ளது போலவே அங்கும் குடாக்குகளும், கிறுக்கர்களும், அர்த்தமில்லாமல் பேசுபவர்களும், உணர்ச்சி ததும்பப் பேசுபவர்களும், கருத்தே இல்லாமல் ஜோடனையாகப் பேசுபவர்களும் நிறைய உண்டு. சமூகவலைத்தளங்கள் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவெனில், இங்கு தனியொருவர் தனது தனிப்பட்ட கருத்தை மட்டுமே நிலைநிறுத்தவியலாது; தனியொரு நபர் ஒரு விவகாரத்தை திசை திருப்பி இழுத்துச் செல்ல முடியாது; என் வழியே சிறந்த வழி என்றும் கூற இயலாது. சமூகவலைத்தளங்கள் தங்களைத் தாங்களே மிகவும் நேர்த்தியாக கட்டுப்படுத்திக் கொள்கின்றன. உரத்த அர்த்தமில்லாத பேச்சுக்கள் எப்பொழுதும் அதிக கவனம் பெறுவதில்லை, அவ்வமயம் நிதானமான கருத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நான் கண்டவரையில் தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் நடைபெறுவதை விட அதிக சிந்தனையூட்டக்கூடிய கருத்தாக்கங்களும், விவாதங்களும் ட்விட்டரில் நடைபெறுகின்றன. இதற்குப் பிறகும் மீடியாக்கள் விழித்துக் கொள்ளவில்லையென்றால் காலச் சூழலில் அவை பின்னுக்குத் தள்ளப்படும். பரபரப்புச் செய்திகளுக்காகவும், இன்ன பிற விஷயங்களுக்காகவும் மக்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு பதிலாக ட்விட்டரை நாடும் யுகத்தில், மீடியாக்கள் இதுபற்றி மிகுந்த கவலையும் அக்கறையும் கொள்ள வேண்டும்.அபிஷேக் மனு சிங்வியைப் பொறுத்தமட்டில் அவர் மிகவும் தவறான சூழலில், தவறான இடத்தில் பிடிபட்டிருக்கிறார். ட்விட்டர் யுகத்தில் இது மன்னிக்கப்பட முடியாத்தாகும்.
(இக்கட்டுரையின் மூலத்தை CentrerightIndia தளத்தில் எழுதியவர் சுனந்தா வஸிஷ்ட் அவர்கள், தமிழில் யதிராஜ சம்பத் குமார், )
நாளைக்கே இவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுத்தாலும் ஆச்சரியப்பட கூடாது. இந்தியாவில் எதுவும் நடக்கலாம்!
Posted by IdlyVadai at 4/27/2012 08:11:00 AM 4 comments
Labels: செய்திவிமர்சனம், யதிராஜ சம்பத் குமார்
Saturday, April 21, 2012
Thursday, April 19, 2012
IPL5 -RCB vs PW -பங்களூர் கண்ட எழுச்சி! -எ.அ.பாலா
நேற்று சின்னசாமி அரங்கில் நடந்த ஆட்டத்தில், டாஸை வென்ற தாதா முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார்! (கெய்லின் கொலவெறிக்கு தொடக்கத்திலேயே வாய்ப்பு தர வேண்டாம் என்ற எண்ணமோ என்னவோ :)) ரைடர்-ராபின் உத்தப்பா களமிறங்கினர். உத்தப்பா இம்முறை ’ஊத்தப்பா’ போல சொதப்பாமல், ராபின்(ஹுட்) போல பரிமளித்தார்! இந்த நேரத்தில் உங்களுக்கு, மும்பையின் பல கோச்களில் ஒருவரான ராபின் சிங் நினைவுக்கு வரவே கூடாது!
5 நாள் டெஸ்ட் ஆடும் அணிகளுக்குக் கூட ஒன்றிரண்டு பயிற்சியாளர்கள் தான். ஆனால், இந்த 40 ஓவர் ஐபிஎல் கூத்துக்கு, ஒவ்வொரு அணிக்கும், பேட்டிங் கோச், ஃபீல்டிங் கோச், போலிங் கோச், ரன்னிங் கோச், ஜாகிங் கோச் ... என்று நவஜீவன் எக்ஸ்பிரஸ் போல இத்தனை கோச்களும் கம்ப்யூட்டர் அனலிஸ்ட், உடற்பயிற்சியாளர், உளவியல் வல்லுனர் என்று உதிரிகளும் ஏன் என்று புரியவில்லை! ஆனால், அதே நேரம், சியர் லீடர்ஸ் அவசியம் என்பது மிகத்தெளிவாகப் புரிகிறது!
அதோடு, ஐபிஎல்-இல் பணத்தை தண்ணி போல இறைத்து, கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நம் மக்களுக்கு அப்பைத்தியம் துளியும் தெளியாமல் பார்த்துக் கொள்ளும் BCCI-இன் கெட்டிக்காரத்தனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! போட்ட துட்டை விட பல மடங்கு அள்ளி விடுகிறார்கள் என்பது வேறு விஷயம். இது BCCI-இன் நிர்வாகிகள் (ஓசியில்) ராஜ வாழ்க்கை வாழ்வதற்கு வழி வகுக்கிறது! இருட்டுச்சந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அனானி “அகங்காரம் பிடித்த பாலா, கிரிக்கெட் ரசிகர்களை பைத்தியம் என்கிறார்” என்று கூக்குரல் இடுவதற்கு முன் ஒரு விஷயம் :) நான் சொன்ன அந்த கிரிக்கெட் பைத்திய பட்டியலில் முதல் ஆள் அடியேன் தான் என்று கூறி விடுகிறேன்!
சரி, ஆட்டத்துக்கு வருகிறேன்! 7 ஓவர்கள் முடிவில், ரைடர் அவுட், புனே 63-1 என்று நல்லதொரு தொடக்கம். உத்தப்பா ஆட்டம் இன்னும் சூடு பிடித்ததில், அவர் (69 of 45) அவுட்டானபோது, ஸ்கோர் 117-3 (13 ஓவர்களில்) என்று புனே வலுவான நிலையில் இருந்தது. ஸ்மித் அவ்வளவு பிரகாசிக்கவில்லையெனினும், சாமுவேல்ஸ் ஒரு வாங்கு வாங்கியதில் (34 of 20), புனே 182 ரன்கள் என்ற இலக்கை அடைந்தது.
கெய்ல், தில்ஷன் களமிறங்கியும், பங்களூரின் தொடக்கம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை! 10 ஓவர்கள் முடிவில், பங்களுர் 63-2. கெய்ல் அதிரடி எதுவும் இல்லை! ஆனால், அவர் (35 of 30) ஆட்டமிழக்காமல் இருந்தது பங்களூருக்கு ஆறுதலான விஷயம்! 12வது ஓவரில் கோலி அவுட்!!! தேவையான ரன்ரேட் 13.4 என்று RCB ரசிகர்களின் வயிற்றைக் கலக்கியது. Enough is enough என்று முடிவு செய்தது போல, கெய்ல், புனேவின் பெஸ்ட் பந்து வீச்சாளர் ராகுல் சர்மாவை தனது வதத்துக்கு இலக்காக தேர்ந்தெடுத்து, 13வது ஓவரில் செய்த துவசம்சத்தில் 5 சிக்ஸர்கள், அந்த ஓவரில் 31 ரன்கள்.
கெய்ல் பார்க்கத் தான் நெடுநெடுவென்று புஜபராக்கிரம காட்டான் மாதிரி தெரிகிறார்! ஆனால், அந்த 5 சிக்ஸர்களும் டைமிங்கோடு கூடிய அருமையான cricketing shots. கெய்ல் ஆடும்போது நேர் அம்பயர் ஹெல்மட் அணிந்து கொள்ளுதல் நலம் என்று எனக்குத் தோன்றியது! கெய்லின் இந்த விளாசல் காரணமாக, 6.3 என்ற ரன்ரேட் ஒரே ஓவரில், 8.3க்கு சென்றது. RRR 10.85
நல்ல பந்து வீச்சு காரணமாக ஆட்டம் மீண்டும் மெல்ல புனே பக்கம் சாயத் தொடங்கியது. 16வது நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து, அடுத்த யார்க்கர் பந்தில் கெய்லின் அருமையான இன்னிங்க்ஸ் (81 of 48) முடிவுக்கு வந்தது. RRR 13.8
சௌரப் திவாரி தடவிக் கொண்டிருந்தார்! டிவிலியர்ஸ் களமிறங்கினார். டிவிலியர்ஸ் மாத்யூஸ் வீசிய 18வது ஓவரில் (reverse switch hit) சிக்ஸர் அடித்தார்! பிரமாதமான Improvisation, Shot of the Day! சுத்தமாக பேலன்ஸ் இல்லாத நிலையில், டிவிலியர்ஸ் அத்தனை பலத்தை பிரயோகித்ததைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது!! திவாரிக்கும் ரோஷம் வந்து, அவரும் ஒரு சிக்ஸ் :)
இதற்கு நடுவில், மைதானத்தில், புலியைப் (சிவமணி) பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, ஒரு ஜில்பா தலையர் டிரம்ஸ் தட்டிக் கொண்டிருந்தது நல்ல நகைச்சுவை காட்சி ;-) கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவை. டிண்டாவின் அந்த அற்புதமான ஓவர் ஒரு anti climax. 7 ரன்கள் மட்டுமே கொடுத்து, கடைசி ஓவர் வீச இருந்த அனுபவமிக்க நெஹ்ராவுக்கு 21 ரன்கள் மிச்சப்படுத்தினார். புனே வெற்றி என்று உறுதியாக நம்பினேன்!
ஆனல், டிவிலியர்ஸ் வேறு திட்டம் வைத்திருந்தது எனக்குத் தெரியாமல் போய் விட்டது :-) அவரது improvisation திறமையையும், Never say Die attitude-ஐயும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடைசி 4 பந்துகளில் 16 தேவை என்ற நிலையில், 2 low full toss பந்துகளை சிக்ஸர்கள் அடித்து, சமன்பாட்டை 2 பந்துகளில் 4 ரன்கள் என்று ஆக்கினார். 5வதில் ஒரு ரன் மட்டுமே. டிவிலியர்ஸ் காரணமாக ஏற்கனவே ரோஷம் பொங்கிய நிலையில் இருந்த திவாரி, கடைசிப்பந்தை பவுண்டரிக்கு வெளியே அனுப்பியதில், RCBக்கு ஒரு famous WIN.
உடனே, வானம் பொத்துக் கொண்டு மழை கொட்டியது, வானத்து இமையவர் வாழ்த்து போல அமைந்தது! அத்துடன், சென்னைக்கு எதிராக கோலி வீசிய அந்த 28 ரன் ஓவர் மூலம் RCBக்கு பிடித்த சனி, இந்த அற்புதமான வெற்றி மூலம் விலகியது என்றும் கூறலாம் ;-) இப்படியாக, ஆட்டத்தில் 38 ஓவர்கள் (கெய்ல் 5 சிக்ஸர்கள் அடித்த ஓவரையும், கடைசி ஓவரையும் தவிர்த்து) பின் தங்கியிருந்த பங்களூர் அணி, ஒரு பிரமாதமான வெற்றியை பெற்றது!!!!!
எ.அ.பாலா
படத்தில் உள்ளது போல பாலாவை அன்புடன் தட்டிக்கொடுங்க, திட்டாதீங்க :-)
Posted by IdlyVadai at 4/19/2012 05:28:00 AM 16 comments
Labels: எ.அ.பாலா, விமர்சனம், விளையாட்டு
Tuesday, April 17, 2012
ஏன் காக்கா பிடிக்க வேண்டும் ?
இன்று தினத்தந்தியில் வந்த செய்தி:
குமரி மாவட்டம் தமிழ்ராணி என்பவர் உறவினர் ஒருவருக்கு கொடுப்பதற்காக 1 நெக்லஸ், 1 பிரேஸ்லெட், 3 கம்மல் என 5 பவுன் தங்க நகையை ஒரு காகிதத்தில் பொதிந்து, சிறு பார்சல் கட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மாடியில் உலர போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக மாடிக்கு புறப்பட்டார். புறப்படும்போது, நகை பார்சலையும் கையில் எடுத்து சென்றார். மாடி சுவரில் நகை பார்சலை வைத்துவிட்டு துணிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
அங்கு இரை தேடி வந்த ஒரு காகம், பார்சலை தின்பண்டம் என கருதி அதை எடுத்துக் கொண்டு பறக்க தொடங்கியது. இதைக்கண்ட தமிழ்ராணி அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.
உடனே, அருகில் நின்றவர்கள் காகத்தை துரத்தி சென்றனர். சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு ஓட்டு வீடு கூரையில் காகம் அமர்ந்தது. உடனே, காகத்தை பின்தொடர்ந்து வந்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களால் காகத்தை பயமுறுத்தி விரட்டினர். இறுதியில் காகம் நகையை விட்டுவிட்டு பறந்து சென்றது.
காகத்தை விரட்டி சென்றவர்கள் நகை பொட்டலத்தை மீட்டு தமிழ்ராணியிடம் ஒப்படைத்தனர்.
இதனால் காக்கா பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். பிடிக்க முடியவில்லை என்றால் அட்லீஸ்ட் கல்லால் அடிக்கவாவது செய்ய வேண்டும். எ.அ.பாலாவை பலர் பின்னூட்டதில் அடிப்பது கூட இதனாலோ என்னவோ யார் கண்டது :-)
Posted by IdlyVadai at 4/17/2012 07:27:00 AM 15 comments
Labels: செய்தி.
Monday, April 16, 2012
IPL5 -RCB vs RR -போலி ராயலை வீழ்த்திய நிஜ ராயல்கள்! -எ.அ.பாலா
பெங்களூர் அணி மூன்றில் 2 ஆட்டங்கள் தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ராஜஸ்தான் அணி, முதலில் பேட் செய்து, சகீர், முரளி மற்றும் வெட்டோரி என்ற 3 Veteran-களின் அனுபவத்திறமை வாய்ந்த பந்து வீச்சின் காரணமாக, 13 ஓவர்களின் முடிவில், 82-1 (டிராவிட் விக்கெட் இழப்பு) என்ற மிகச் சாதாரண நிலையில் இருந்தது! ரஹானேயும், ஷாவும் ஆடிக்கொண்டிருந்தனர்.
சகீர் 3-1-10-0
முரளி 3-0-18-0
வெட்டோரி 3-0-14-1
14வது ஓவரில், ரஹானேவுக்கு கொலவெறி பிடித்து, அரவிந்தின் மிக சராசரி பந்து வீச்சில், 6 பவுண்டரிகள் விளாசினார். இதில் ஒன்று கூட காட்டுத்தனமான ஷாட் கிடையாது! ஒரே ஓவரில் ரன்ரேட் 6.3லிருந்து 7.6க்கு எகிறியது :-) 16, 17 மற்றும் 18வது ஓவர்களில், ஷாவும் ரஹானேவுடன் சேர்ந்து கொண்டு கெய்ல், வினய், முரளி பந்துவீச்சை துவம்சம் செய்ததில், சின்னசாமி அரங்கில் ரன் மழை பெய்தது! இந்த 3 ஓவர்களில் 62 ரன்கள்! அரங்கில் பல RCB ரசிகர்கள் மூர்ச்சை அடைந்த நிலைக்கு சென்று விட்டனர் :-)
இந்த ரணகளத்திலும், 19வது ஓவரை சகீர் மிகச் சிறப்பாக வீசினார். 4 உதிரிகளை தவிர்த்து, அவர் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 20வது ஓவரில் ரஹானே தனது சதத்தை (58 பந்துகள்) பூர்த்தி செய்தார். இதை ஐபிஎல் ஆட்டங்களின் மிக நேர்த்தியான சதம் என்று கூறுவேன். சின்னசாமியில் புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது. இறுதி 7 ஓவர்களில் ராஜஸ்தான் எடுத்தது 113 ரன்கள் (பிரதி ஓவர்: 16.1) !!!!!!!!! ராஜஸ்தான் மொத்த ஸ்கோர் 195.
கோலி, ரஹானே இருவருமே திறமைசாலிகளாக இருப்பினும், Temperament-ஐ பொறுத்த அளவில், ரஹானே பெட்டர் என்று தாராளமாக கூறலாம். ஜடேஜா, முரளிவிஜய் போன்றவர்கள் ரஹானேவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!
பெங்களூர் அணியிடம் பலமான பேட்டிங் (கெய்ல், அகர்வால், கோலி, டிவிலியர்ஸ்..) இருப்பதால், “துரத்தல்” சுவாரசியமாக இருக்கும் என்று எல்லாரையும் போல நானும் நம்பினேன்! 4 ஓவர்களில், பெங்களூர் 38-0. அகர்வால் 30, கெய்ல் -8 !!! பங்கஜ் சிங் வீசிய 5 ஓவரில் துரத்தல் சற்றே தடம் புரண்டது. அகர்வால், கெய்ல் இருவரும் வீழ்ந்தனர். ஸ்கோர் 42-2. கோலி, டிவிலியர்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர். 8 ஓவர்களில் 63-2.
9வது ஓவரில், மொகிந்தர் அமர்நாத் ஸ்டைல் “பொய்” பந்துவீச்சு எக்ஸ்பர்ட் சித்தார்த் த்ரிவேதியின் 107 கிமீ வேகப்பந்தை டிவிலியர்ஸ் ஸ்டம்ப்பில் இழுத்து விட்டுக் கொண்டார்! தனது அடுத்த ஓவரில் (11வது) த்ரிவேதியின் மற்றொரு மிதவேகப்பந்து கோலியின் நடு ஸ்டம்பை தகர்த்தது! ஸ்கோர் 79-4. என்னளவில், இது RCB சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி! 2 ஆண்டுகளுக்கு முன் ரொம்ப பேசப்பட்ட சௌரப் திவாரி, எப்போதும் போல சொதப்பி (17 of 16) த்ரிவேதியின் 4வது ஓவரில் Clean Bowled. அதே ஓவரில் வெட்டோரியும் அவுட்(Clean Bowled). த்ரிவேதி 4-0-25-4. 15 ஓவர் முடிவில், 105-6, தேவையான ரன்ரேட் 18.20. ஆமென்!
யோஹன் போத்தாவின் அடுத்த (16வது) ஓவரில், மொஹமத் கைஃப் அவுட்டானதும், போத்தா தனது மூக்கின் மேல் இருந்த வியர்வையை எடுத்து அவருக்கு “ப்ரோஷணம்” பண்ணி அனுப்பி வைத்த காட்சி நல்ல நகைச்சுவை ;-) அதே நேரம், அரங்கில் இருந்த சித்தார்த் மால்யா தலையை ஆட்டியபடி சோகமாக அமர்ந்திருந்ததும், ரசிக்கத் தக்கதாய் இருந்தது! அவருடன் இப்போதெல்லாம் தீபிகா படுகோனை காண முடிவதில்லை. ஒருவேளை தீபிகா கழட்டி விட்டிருப்பாரோ? அப்படியிருப்பின், தீபிகா தனது வாழ்வில் எடுத்த ஒரு சிறந்த முடிவு அது என்பதில் ஐயமில்லை :)
17வது ஓவரில் வினய்குமாரின் விக்கெட்டை எடுத்த அமித் சிங், அந்த ஓவரின் கடைசி பந்தில், ஒரு பவுண்டரி கொடுத்ததற்கு (அதுவும், 3 ஓவர்களில் 76 ரன்கள் தேவை என்ற சூழலில்) மிகவும் வருத்தப்பட்டு கொண்டது, ராஜஸ்தான் அணியின் Spirit-க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பாவம் முரளிதரன்! இத்தனை பேட்டிங் ஜாம்பவான்கள் உள்ள RCB அணியில் தான் பேட் பிடிக்க நேரிடும் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார்! முரளி 20வது ஓவரில் அவுட்டாகி, ராஜஸ்தான் 59 ரன்களில் பெருவெற்றியை பெற்றது! Rajasthan Royals had Warne as captain and now Rahul Dravid, 2 contrasting captains but inspiring leaders in their own way!
இப்படியாக, நிஜமான ராயல்கள் போலி ராயல் அணியை (அணியின் பெயரில் ராயலும், flamboyant ஓனரும், உலகமகா கிரிக்கெட்டர்களும் இருந்தால் மட்டும் போதுமா?! ) மண்ணைக் கவ்வ வைத்தனர்!
எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com
:-)
Posted by IdlyVadai at 4/16/2012 08:50:00 PM 13 comments
Labels: எ.அ.பாலா, விமர்சனம், விளையாட்டு
Friday, April 13, 2012
IPL5 CSK vs RCB - சிங்க கர்ஜனையில் சிதறிய ராயல் - எ.அ.பாலா
இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற CSK-RCB ஆட்டத்தின் முதல் இன்னிங்க்ஸை வேலை காரணமாக டிவியில் பார்க்க இயலவில்லை. அதுவும் நல்லதுக்கு தான். கிரிக் இன்ஃபோ தளத்தில் RCB ஸ்கோர் எகிறிக் கொண்டிருந்தது! கெய்லை டம்மியாக்கி விட்டு ஊர் பேர் தெரியாத அகர்வால் சென்னை பந்து வீச்சை விளாசித் தள்ளினார். அவர் அவுட்டானபோது ஸ்கோர் 53 (5.2). அகர்வால் எடுத்தது 45, கெய்ல் 7. அஷ்வின் பந்து வீச்சு இப்படி துவைத்து எடுக்கப்பட்டு பார்த்ததில்லை. 3 ஓவர்களில் 34 ரன்கள் தாரை வார்த்திருந்தார்.
அகர்வால் சென்ற பின், கெய்லுக்கு கொல வெறி பிடித்து, ரெய்னாவின் ஒரு ஓவரில் 21 ரன்கள். 9 ஓவர்களில் 90 ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு. கோலிக்கும் சீக்கிரம் வெறி பிடிக்கும் சாத்தியக்கூறுகள் தெரிந்தன :) ஒரு வழியாக கெய்லின் பேயாட்டம் ஓய்ந்தபோது ஸ்கோர் 162/2 (16.2). இந்த ரன் மழையிலும், பிரேவோவும் மார்க்கலும் நன்றாகவே பந்து வீசினார். பாலிங்கர் வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்ததில் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. ஒரு 10-12 ரன்கள் காப்பாற்றப் பட்டதாக கொள்ளலாம். பங்களூர் மொத்த ஸ்கோர் 205.
நிச்சயம் சென்னைக்கு தோல்வி என்ற முடிவோடு (அப்ப தான் வழக்கமான நம்ம ரென்ஷன் இல்லாம பார்க்க முடியும்!) டிவி பார்க்க ஆரம்பித்தேன். நிதானமாக தொடங்கிய டுபிளஸ்ஸி ஆட்டம் களை கட்ட ஆரம்பித்தது. உருப்படாத மொ.க முரளி விஜய் மொக்கை போட்டு 11 ரன்களில் அவுட்டானதும் நல்லதுக்கு தான். அடுத்து வந்த சென்னையின் Man for all seasons, ரெய்னா (23 of 14) அவுட்டானபோது ஸ்கோர் 88 (10.3). தோல்வியை எதிர்பார்த்து, ரிலேக்ஸ்டாக ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
தோனி 2 டவுன் களமிறங்கியது நல்ல மூவ்! தோனி 7-8 "ஹெலிகாப்டர்கள்" விட்டாலொழிய ஜெயிக்க வாய்ப்பே கிடையாது! அருமையாக ஆடி, 46 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த டுபிளஸ்ஸி 15வது ஓவரில் அவுட்டானபோது RR 14.2. முரளி தனது அற்புதமான ஸ்பெல்லில் 21 ரன்களே கொடுத்து விழுந்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிட வேண்டியது. அந்த சூழலில், வெற்றிக்கு வாய்ப்பு 30% என்று சொல்லும்படி தான் இருந்தது.
தோனியின் “ஹெலிகாப்டர்கள்” சரியாக பறக்காததால், தேவையான ரன்ரேட் ஏறுமுகமாகவே இருந்தது. கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவை (RR 16.66). சென்னை வெற்றி பெறும் என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பு இல்லாததால், ஒருத்தருக்கும் (அரங்கில் பார்வையாளர்கள், சென்னை அணி) டென்ஷன் இல்லாத மாதிரி நான் உணர்ந்தேன்! அந்த 18வது ஓவரில், சாகீரின் அனுபவம் மிளிர்ந்தது. 7-ஏ ரன்கள் கொடுத்து, ஓவரின் கடைசி பந்தில், தோனியின் கடைசி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினார். இறுதி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில் வெற்றி வாய்ப்பு 10% ஆனது!
உடல் நிலை சரியில்லாத கெய்ல் ஆடுகளத்தில் இல்லை. பத்கல் ஏற்கனவே துவைக்கப்படிருந்த (2 ஓவர்கள், 35 ரன்கள்) காரணத்தால், முக்கியமான 19வது ஓவரை வீச, வெட்டோரி பகுதி நேர பந்து வீச்சாளரான கோலியை அழைத்தது, தூங்கிக் கொண்டிருந்த (மார்க்கல்) சிங்கத்தை வாலைக்கடித்து எழுப்பிய கதையானது! 2 ஓசி பவுண்டரிகள் கிட்டியிருந்தாலும், மார்க்கள் அடித்த மற்ற 3 சிக்ஸர்கள் மிக “சுத்தமான” விளாசல்கள்! அந்த 28-ரன் ஓவர் கோபக்கார கோலிக்கு போதி மரம் போல! ஓவரின் முடிவில், “நல்லாத் தானே போயிட்டிருந்தது” வடிவேலுவை கோலி ஞாபகப்படுத்தினார் :) இனி, அடுத்த 5 ஆட்டங்களுக்கு, பந்து வீச கோலிக்கு கை வராது என்று நினைக்கிறேன்! பேட்டிகளில் சற்று லூசுத்தனமாக உளறும் சித்தார்த்த மால்யா சித்தபிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது!
கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. ஒரு No Ball தவிர்த்து அந்த ஓவரை வினய் (அழுத்தத்திற்கு ஆளாகாமல்) சிறப்பாகவே வீசினார் என்பது என் கருத்து. மார்க்கல் விக்கெட் இழந்தும், முதல் 3 பந்துகளில் 12 ரன்கள்! 4வது ஒரு Dot Ball. 5வதில் ஒரு ரன் மட்டுமே! 6வது edge வாங்கி பவுண்டரிக்கு பறந்ததில், சென்னைக்கு ஐபிஎல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வெற்றி !!!! இப்படியாக ஆட்டத்தின் 37 ஓவர்களில் (பாலிங்கர் வீசிய கடைசி ஓவரையும், சென்னை பேட் செய்த கடைசி 2 ஓவர்களையும் தவிர்த்து) பின் தங்கியிருந்த சென்னை அணி ஓர் அசாதாரண வெற்றியைப் பெற்றது.
எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com
//பேட்டிகளில் சற்று லூசுத்தனமாக உளறும் சித்தார்த்த மால்யா ... //அவர் மட்டுமா ??
Posted by IdlyVadai at 4/13/2012 03:28:00 PM 19 comments
Labels: எ.அ.பாலா, விமர்சனம், விளையாட்டு
மீண்டும் தமிழ் புத்த்தாண்டு !
Posted by IdlyVadai at 4/13/2012 10:06:00 AM 8 comments
Labels: வாழ்த்து
Thursday, April 12, 2012
பிராமின் ஜாதி
நேற்று ஒரு அன்பர் கீழே உள்ள விளம்பரத்தை காண்பித்து கருத்து கேட்டார். அந்த விளம்பரம் எங்கிருந்து வந்தது என்று பார்த்த போது அது அரவிந்தன் நீலகண்டன் Facebook பக்கத்திலும் வேறு சில Facebook பக்கத்திலும் இருந்தது.
இந்த விளம்பரத்தை விளம்பரம் செய்துவிட்டு "இத்தகைய விளம்பரங்களை போடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதோடு இத்தகைய சாதிய வெறியர்களுக்கு நல்ல மனநலசிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்"
என்று எழுதியிருந்தார்.
அப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க போகிறார் என்றால் கீழே உள்ள சில விளம்பரங்கள் மீதும் எடுக்க சிபாரிசு செய்கிறேன்...
அந்த Facebook பக்கத்தில் கரிகாலன் என்பவர் கமெண்ட்: நான் பிராமின் அல்ல என்ற குறிப்புடன் ஆரம்பிக்கிறேன் , ஒரு அபார்ட்மென்ட் ஒரே பிராமின சமூகத்தவர் அந்த மொட்டைமாடியில் வடாம் போட வருகிறார், அருகில் கருவாடு போட இன்னொருவர் வருகிறார். இதை அந்த பிராமினரால் ஏற்றுக் கொள்ள முடியுமா??
அதே போல நிம்மதியாக பக்கத்து பிளாட்டில் ஒருவர் தூங்குகிறார், இதே பிராமணர் வீட்டில் அதிகாலை நான்கு மணிக்கே சுப்ரபாதமோ, வேறு ஏதோ மந்திரங்களை சொல்லும் போது அவருக்கு இடைஞ்சலாகி இருக்கும். இந்த நகர வாழ்க்கையில் பலர் இதைக் கடந்து, சகித்து, பழகி வேறுபாடு இன்று வாழ்வர், சிலரால் அது முடியாது..... அதை விட்டுவிடுதல், அவர்கள் வாழ்க்கைமுறையில் நாம் மூக்கை நுழைத்தல் சரியாகுமா ??
Posted by IdlyVadai at 4/12/2012 11:47:00 AM 53 comments
Tuesday, April 10, 2012
IPL5 - மும்பை இந்தியன்ஸ் என்னும் ”தீவிரவாத” அணி -எ.அ.பாலா
இது மும்பையின் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்துக்காக வைக்கப்பட்ட தலைப்பு அல்ல !!!
நேற்று நடந்த மும்பை-டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் ஆட்டம் மிக மிக விறுவிறுப்பாக இருந்தது. ஐபிஎல்-5 இன் முதல் nail biter ஆட்டம் என்று தாராளமாக கூறலாம். முதலில் பேட் செய்த டெக்கான் அணி, சங்ககாரா விக்கெட் இழக்கும் வரை நல்ல நிலையில் தான் இருந்தது, 82-3 (12.3 ஓவர்கள்). சங்ககாரா அவுட் என்று அறிவிக்கப்படுவதற்கு முன் மும்பை அணி செய்த ரவுடித்தனத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை! சங்ககாரா அவுட் இல்லை என்று 2 கள அம்பயர்களும் முடிவு செய்தபிறகு, முனஃப் படேலும், திமிர் பிடித்த, கேப்டன் ஆகியும் திருந்தாத ஜென்மமான, ஹர்பஜனும், நம்ம ஊர் ரவுடி தினேஷ் கார்த்திக்கும், இன்னும் ஓரிரு மும்பை ஆட்டக்காரர்களும், அம்பயரை சூழ்ந்து கொண்டு பொறுக்கித்தனம் செய்ததில், மிரண்டு போன அம்பயர், தனது முடிவை, மூன்றாம் அம்பயருக்கு refer செய்யும் கட்டாயத்துக்கு ஆளானார். ஒரு விஷயத்தை 3-ஆம் அம்பயரிடம் refer செய்வதோ, செய்யாமல் இருப்பதோ, கள அம்பயர்களின் உரிமை என்பதை திமிர் பிடித்த முட்டாள் ஹர்பஜனும் அவனது மும்பை அணி ரவுடி கூட்டாளிகளும் புரிந்து கொள்ள வேண்டும்! ஹர்பஜனை கேப்டனாக நியமித்ததில், இனி மும்பை அணியில் இருக்கும் நல்ல குணமுள்ள வீரர்கள் கூட உருப்படாமல் போவதற்கு வாய்ப்பு மிக அதிகம். இந்த எல்லா கூத்தையும், தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, ஒரு சோஃபா முழுவதையும் தான் மட்டுமே ஆக்ரமித்து கொண்டு அமர்ந்திருந்த அம்பானியின் மகன், எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது இன்னொரு ஹைலைட் :-)
சரி மேட்சுக்கு வருவோம்! டெக்கான் 150-ஐ தாண்டும் என்று நினைத்தேன். ஆனால், இறுதி ஓவர்களில் மும்பை நன்றாக பந்து வீசியதில் அல்லது டெக்கானின் லோயர் ஆர்டர் சொதப்பியதில், டெக்கான் 138 ரன்களே எடுத்தது. பேட் செய்ய களமிறங்கிய மும்பை, அங்கிட் சர்மா (சுழல் பந்து வீச்சு) மற்றும் டேல் ஸ்டெயினின் பந்து வீச்சில் பயங்கரமாகத் தடுமாறியது. ஸ்டெயின் தான் ஏன் உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர் என்பதை இன்னிங்க்ஸின் 4வது ஓவரில் நிரூபித்தார்!! It was easily the best over of IPL-5 (according to me, of all IPLs!). லெவியை செட்டப் பண்ணி அல்லது ”பதப்படுத்தி”, அந்த அருமையான ஓவரின் கடைசிப்பந்தில், ஒரு 150 கிமீ யார்க்கர் வாயிலாக லெவியின் நடு ஸ்டம்பை தகர்த்தார் ஸ்டெயின். 5 ஓவர்களில் மும்பை 15-2.
120 கிமீ வேகத்தில் பந்து வீசி, முனஃப் படேல் போன்ற கவைக்குதவாதவர்கள் எல்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, ஸ்டெயின் போன்ற அற்புதமான பந்து வீச்சாளர்கள் பரிமளிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, அவர்கள் பரிமளித்தால் தான் கிரிக்கெட்டுக்கும் சிறப்பு! ராயுடுவும், ரோஹித்தும் தாக்கு பிடித்து, ஸ்கோரை 11.2 ஓவர்களில் 58க்கு இட்டு வந்தனர். ராயுடு அவுட்! கடைசி 3.4 ஓவர்களில் (போலார்ட் அவுட்டானபோது) மும்பைக்கு தேவை 44 ரன்கள். ஸ்டெயினுக்கு ஒரு ஓவர் இருந்த சூழலில், நிச்சயம் டெக்கான் ஜெயிக்கும் என்று தோன்றியது. ஸ்டெயின் வீசிய 19வது ஓவரும் ஒரு ஜெம், 5 ரன்கள் தந்து கார்த்திக்கையும் வீட்டுக்கு அனுப்பினார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், டேன் கிரிஸ்டியனின் மிக மிக மோசமான பந்து வீச்சால் (மட்டுமே!) மும்பை ஜெயித்தது! அவரது மூஞ்சியில் அல்லது முகரைக்கட்டையில் (உதட்டை சுழித்து பண்ணிய கோணங்கித்தனத்தில்) அப்பட்டமாக பிரஷர் தெரிந்தது! He did not look international class yesterday! He bowled that last over so pathetically! மேலும், ஓவரின் 5-வது பந்தில் ரோஹித் ரன் அவுட் (அவரது மட்டை தரையில் இல்லை) என்பது என் கருத்து. அந்த ஓவரில் ரோஹித் பெரிதாக கிழித்ததாகக் கூற எதுவுமில்லை. அதற்காக அவரது நேற்றைய ஆட்டமே தண்டம் என்று கூறுவதாகவும் எண்ண வேண்டியதில்லை!
ரோஹித் இது போலவே, இந்தியாவுக்கு ஆடும்போதும் விளையாடி ஜெயித்துக் கொடுத்தால், அவருக்கு புண்ணியமாகப் போகும் !
எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com
PC மாதிரி பாலாவின் ஆட்டம் தொடரும்... :-)
Posted by IdlyVadai at 4/10/2012 09:13:00 PM 26 comments
Labels: விமர்சனம், விளையாட்டு
திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பேராசிரியராக, பல ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்ற, எனது நண்பர் முனைவர் திரு.வெங்கடாசலம் அவர்கள், இந்த இடுகைக்கு இடப்பட்ட தலைப்பில் ஒர் நூல் எழுதியிருக்கிறார். நூல் விரைவில் வெளி வர உள்ளது. நண்பர் எனக்கு நூலின் சிலபல பகுதிகளை வாசிக்க அனுப்பியிருந்தார். ஒரு புதிய கண்ணோட்டத்தில், சிந்தனையைத் தூண்டுவதாக, நான் படித்த குறள் உரைகளிலிருந்து வித்தியாசமான ஒன்றாக, முக்கியமாக வாசிக்க ஆர்வமாக இருந்தது! முழுதும் வாசித்த பின்னர், ஒரு மதிப்புரை எழுத திட்டமிருக்கிறது. இப்போது, திரு. வெங்கடாசலமே எழுதி அனுப்பிய நூல் அறிமுக முன்னுரையில் நான் சில நூல் குறிப்புகளை சேர்த்ததில் விளைந்த கட்டுரை கீழே! இதை பிரசுரித்த அருமை நண்பர் இட்லிவடைக்கு நன்றி.
”என்றென்றும் அன்புடன்”
பாலா
http://balaji_ammu.blogspot.com
என்னுடைய நண்பர் தமிழ் பேராசிரியர் ஒருவரிடம் நான் இப்புத்தகத்தை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறிய போது . . . ஹும் நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தமிழில் எதாவது எழுதவேண்டும் என நினைப்பவர்களெல்லாம் எழுதுவது திருக்குறளைப் பற்றித்தான். நூற்றுக்கணக்கில் வந்தாகிவிட்டது இனியும் என்ன எழுதப்போகிறீர்கள் என்றார். சில மணித்துளிகள் என் நா என்னுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டது! ஒருவாறாக சக்தியைத் திரட்டிக்கொண்டு தொண்டையைச் சரி செய்து கொண்டு பேசலானேன். . . . என்னுடைய தடுமாற்றத்தைக் கண்ணுற்ற அவர் இளம் சிரிப்புடன் என்னை நோக்கியவாறு இருந்தார். திடிரென்று என்னுள் ஒரு உத்வேகம். சரி சார். . .
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று 236
என்ற குறட்பாவுக்கு என்ன பொருளென்று கூற இயலுமா என்றேன். இக்குறள் எல்லா மேடைப் பேச்சாளர்களும் பயன்படுத்தும் குறளாயிற்றே என்றவர் ஒரு துறையில் பணி புரியும் ஒருவன் அத்துறையினரின் பாராட்டுதல்களை பெறும் வண்ணம் பணி புரியவேண்டும் இல்லையென்றால் அவன் அத்துறையில் பணி புரியாதிருத்தல் நலம் என்று பொருள் என்றார். முதலில் பரிமேலழகர் ஒருவன் புகழ்பட வாழவில்லை என்றால் அவன் பிறவாதிருத்தலே நலம் என்று கூறி உள்ளார் என்று தொடர்ந்தார். நான் அவரை இடைமறித்துக் கேட்டேன்: புகழ் என்றால் என்ன பொருள் என்று கூறமுடியுமா? பேராசிரியர்க்குக் கொஞ்சம் எரிச்சல். புகழென்றால் பாப்புலர். . . பேரும் புகழும் பாராட்டும் பெற்றிருப்பது என்றார். மன்னியுங்கள் திருவள்ளுவர் புகழ் என்றசொல்லை அந்தப்பொருளில் பயன்படுத்தவில்லை. புகழ் என்பது ஒரு கலைச்சொல். அதன் பொருள் அதிகாரத்தின் முதல் குறட்பாவில் உள்ளது. அந்தக்குறள்:
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு 231
இவ்வதிகாரம் ஒப்புரவு மற்றும் ஈகை அதிகாரங்களுக்குப் பிறகு வருவது. ஒருவனுடைய ஆன்மாவிற்கு (உயிர்க்கு) இவ்வுலகில் கிட்டும் ஊதியம் என்னவென்றால் இவ்வுலக வாழ்க்கை அவனுக்கு பிறருக்கு ஈகை புரியவும் ஒப்புரவு செய்யவும் ஒரு வாய்ப்பை நல்கி இருக்கிறது என்பதாகும் என்றேன். இப்படி ஒரு பொருளை அவர் அறிந்திருக்கவில்லை.
மேலும் திருவள்ளுவர் சிறப்பான நூல்களை எழுதுவோரெல்லாம் தம் நூல்களுக்கு தேர்வு செய்யும் கருப்பொருள் அவ்வாறு ஈகை புரிந்து வாழ்ந்தவரின் வாழ்க்கையாகும் என்று தனது இரண்டாவது குறளில் கூறுகிறார் ஆகவே புகழ்(இசை) என்றால் ஈகை மற்றும் ஒப்புரவு செய்து அதன்மூலம் பயனாளிகளின் மனதில் பாராட்டையும் மதிப்பையும் பெறுவது மட்டுமே என்றேன்.
சற்றே அசந்து போன பேராசிரியர் அதனால் ஆன்மாவுக்கு என்ன லாபம் என்றார் பிறருக்கு மனமுவந்து தமக்கு அசௌகர்யம் ஏற்படுத்திக்கொண்டும் கூட உதவுவதென்பது ஒருவன் அவனுடைய ஆன்மாவில் நின்று செயல்படும்போது மட்டுமே சாத்தியம். (ஈகோவில் இருக்கும்போது சாத்தியமே இல்லை.) ஆகவே அப்படிச்செயல்படும் ஒருவன் புகழப்படும்போது அவன் மேலும் மேலும் தன்னுடைய ஆன்மாவில் திளைப்பதற்கு ஊக்கம் பெறுகிறான். அப்படி ஆன்மாவில் நிலைத்திருக்கும் ஒருவனுடைய ஆன்மா மெல்ல மெல்ல மேம்பாடு அடையும். முற்றிலும் மேம்பாடு அடைந்த ஆன்மா பிறப்புச்சங்கலி அறுந்து கடவுள் உலகில் நிரந்தரமாகக் குடிபுகும்.
இவ்வாறு ஆன்ம மேம்பாடு அடைவதே இவ்வுலக வாழ்வின் பொருள் என்பதை பரிபூரனமாக உணர்ந்தவனை வித்தகன் என்ற சொல்லால் அதிகாரத்தின் ஐந்தாவது குறளில் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் என்று கூறி நிறுத்தினேன். பேராசிரியர் ஆச்சரியப்பட்டு, வித்தகர் என்றால் ஆங்கிலத்தில் wise என்று கூறுகிறோமே அதுதான் என்றல்லவா நினைத்திருந்தேன் . . . அப்படியானால் அக்குறளுக்கு என்ன பொருள்? மிக ஆவலாகக் கேட்டார் அவர். அந்தக்குறள்:
நத்தம்போல கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
அதாவது வாழ்க்கையில் செழிப்பும் வறட்சியும் அல்லது இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவன. இவ்விரண்டு நிதர்சனங்களை மனதளவில் ஒப்புக் கொண்டு துன்பம் வரும்போது அதனை convert the problem into opportunity எனப்படுவதைப் போல அதை தன் மீது ஒரு நல் அழுத்தமாக எடுத்துக்கொண்டு அயராது தன்னால் இயன்ற அளவில் மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பவனை வித்தகன் என்று அழைக்கிறார் திருவள்ளுவர் என்றேன். பேராசிரியர் மௌனமானார். ”இது மாதிரி 584 குறட்பாக்களுக்கும் 33 அதிகாரங்களுக்கும் புதுப்பொருள் இத்துணை நூற்றாண்டுகளில் வராத பொருள் கண்டுள்ளேன். திருக்குறள் ஒரு அருமையான ஆற்றுப்படுத்தும் மன நூல். அதன் முழுப்பயனும் தற்போது உள்ள உரைகளால் கிட்டாது என நான் மனதாற நம்புவதால் இந்நூலை எழுதினேன்” என்று கூறினேன். பேராசிரியர் நெகிழ்ந்து போனார். என்னுடைய முயற்சிக்கு தன்னுடைய இதயபூர்வ இல்லை இல்லை ஆன்ம பூர்வ வாழ்த்துகளென்றார்.
மேப் லித்தோ சைசில் 570 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.285. புத்தகம் வேண்டுவோர் 09886406695 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். அல்லது prof_venkat1947@yahoo.co.in என்ற முகவரிக்கு எழுதவும்.
நூலிலிருந்து சில குறிப்புகள்:
ஒவ்வொருவருக்கும் அவருடய பின்னணி எதை ஒன்றையும் புரிந்துகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும். சரித்திர ஆசிரியர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் அவரவரின் சார்பினைப்பொறுத்து ஒரே செய்தியை வேறு வேறு விதமாக விவரிப்பதை நாமெல்லாரும் அறிவோம். அவ்வகையில் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் உளவியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றியதும் ஆய்வுகளை வழி நடத்தியதும் என்னை திருக்குறளை ஒரு உளவியல் புத்தகமாகப் பார்க்க வைத்துவிட்டது. அந்தப்பார்வையில் சொல்வதற்கு புதிய செய்திகள் நிறைய உள்ளதாக எனக்குப்பட்டதாலேயே நான் இம்முயற்சியில் இறங்கினேன். இல்லையென்றால் தமிழை நன்றாகக் கல்லாததோடு இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவும் தெரியாத நான் இம்முயற்சியில் இறங்குவேனா? முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரங்களுக்கும் ஐநூற்று எண்பதுக்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கும் புதிய பொருள் இத்தனை நூற்றாண்டுகளில் நானறிந்தவரை யாரும் கூறாத விளக்கங்களையும் பொருள்களையும் தரத்துணிவேனா? ஆகவே வாசகர்களும் தமிழன்பர்களும் இந்நூல் ஒரு உளவியல் மாணவனின் பார்வை, அந்தப்பார்வையில் கிட்டும் விளக்கம் என்று மட்டுமே இம்முயற்சியை எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
திருவள்ளுவர் காட்டும் மனநல அடையாளங்கள்:
>> தம்முடைய வாழ்க்கை, தொழில் மற்றும் காதல் ஆகியனவற்றின் செயல் மற்றும் முயற்சிகளை சமூக நலன் மற்றும் தம்முடைய நலன் ஆகிய இரண்டினையும் ஒரு சேர மேம்படும்படி அமைத்துக் கொள்ளுதல்,
>> எல்லா உயிரிகளிடமும் அன்பு பாராட்டுவதில் அசாதாரன எல்லைக்குச் செல்வது , தேவைப்படின் அருள் செய்வது அதாவது ஒருவருடைய உரிமையை அவர் துய்ப்பதற்கு பக்க பலமாகச் செயல்படுவது, அந்தச் செயல்பாட்டில் பெரும் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஆகியவற்றை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுதல்,
>> எல்லா உயிர்களிடமும் ஒப்புரவு கொண்டு ஒழுகுவது அதாவது தன்னளவில் பொருள் உதவி, உழைப்புதவி, திறனேற்றல் ஆகியனவற்றை தகுதியானவர்க்குத் தருதல்,
>> தமது உரிமையை விட்டுவிடாமலும் பிறர் உரிமையைப் பறிக்காமலும் செயல்படுவது,
>> பிறருடைய பிரச்சனைகளை அவர்களிடத்தில் தம்மை வைத்து அறிந்து கொண்டு ஆவன செய்வது, இச்செயல்பாட்டில் அடுத்தவரைத் தணடனைக்கு உட்படுத்த நேரினும் அதனைச் செய்வது (கண்ணோட்டம்),
>> எந்த சூழலிலும் உண்மையை அதையும் புரை தீர்ந்த நன்மை பயக்கும் வண்ணம் பேசுவது,
>> கோபம், ஆசை, பொறாமை வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை அறவழியில் நிர்வகிப்பது
>> தன்னுடைய பொறி (aptitude/strength) இன்னதென அறிந்து அதற்குத்தக திறன்களை ஏற்படுத்திக் கொண்டு தான் தேர்ந்த துறையின் அறிவுக்கு விசுவாசமாக தாளாது உழைப்பது,
>> எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் (தம்மையும் சேர்த்து) அப்பொருளின் உண்மைத் தன்மையை அறிந்து அதனைக் கடைப்பிடிப்பது,
>> எல்லாப் பணிகளிலும் அப்பணிக்கு ஆதாரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள சிறந்த நடை முறைகளை மேற்கொண்டு ஒழுகுதல் (following evidence based best practices of a given profession),
>> தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும், பணி சார்ந்த வாழ்விலும், பொது வாழ்விலும் தம்முடைய செயல்களனைத்தையும் மேற்கண்ட கொள்கைகளின் வழி நடாத்துவது,
>> “நான் ஒரு மனிதன் என்ற அடிப்படையில் குற்றம் புரியும் ஏது உள்ளவன். பல சமயங்களிலும் விழிப்பின்றி இருப்பின் பல்வேறான குற்றங்களைப் புரியக்கூடும். ஆகையால் சதா சர்வகாலமும் விழிப்புடன் நான் இருக்கவேண்டும். அதையும் மீறி நான் தவறு செய்துவிட்டால் என்னுடைய தவறுக்கு வருந்தி என்னால் பாதிக்கப்பட்டவருக்கு தக்க இழப்பு மீட்பினை ஈந்து சமாதானம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நான் குற்ற உணர்வில் ஆழ்ந்து விடாமலிருக்க வேண்டும். அரசு நீதி பரிபாலனம் செய்யும்போது தரும் தண்டனையையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு தண்டனையை எனக்குப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டு தண்டனைக்குப் பிறகு மறுவாழ்வு வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டும்” என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதனைச் செயல் படுத்துதல் ஆகியனவாம்.
>> மொத்தத்தில் எந்த செயலையும் சிந்தனையையும் ஒருவன் தன்னுடைய ஆன்மாவினை கடவுளர் உலகம் புகுவதற்குத் தகுதியடையும் வண்ணம் செம்மைப்படுத்துவதற்கு உறுதுணையாக அமைத்துக் கொள்வது உயர்ந்த மனநலத்தின் அடையாளம். இந்த வகையில் திருக்குறள் ஒரு ஆன்மிகப்பயண வழி காட்டி.
இவ்வடையாளங்களெல்லாம் Cognitive Psychology மற்றும் Humanistic Psychology ஆகிய உளவியல் துறைகளின் கருத்துக்களோடு ஏற்புடையவையே. கடவுள் மனிதருடைய இவ்வுலக வாழ்வில் தலையிடுவதில்லை என்பது திருவள்ளுவருடைய கொள்கையாக உள்ளது. ஆகையால் உளவியலருக்கு திருவள்ளுவர் வழியில் மனிதர்களை ஆற்றுப்படுத்துவதில் பிரச்சனை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை..
திருவள்ளுவர் ஒரு எதார்த்தவாதி. பல சமயங்களில் அவர் வகுத்தளித்துள்ள கோட்பாடுகளை முற்றிலும் பிறளாது கடைப் பிடித்தல் மிகக்கடினம் என்பதனை உணர்ந்துள்ள அவர் எல்லாரையும் ஊக்குவிக்கிறாரே ஒழிய யாரையும் நீ தவறி விட்டாய் இனி உனக்கு வாழ்வில்லை என்று சபிப்பதில்லை. கடவுளின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று கூறுவதில்லை. தப்ப விரும்பினால் செய்ய வேண்டிய பரிகாரம் இதுவென எதையும் கூறுவதில்லை. சரியாகச் சொல்வதானால் கடவுள் தண்டிப்பார் என்ற கருத்து திருக்குறளில் இல்லை. ஆனால் அறம் தண்டிக்கும் என்று உறுதி படக்கூறுகிறார். அது எவ்விதம் என்பதை நூலில் பல இடங்களில் விளக்கி உள்ளேன்.
மன நலத்துடன் (அறவழியில் வாழும் வாழ்வு) கூடிய வாழ்வினைத் தேர்ந்தெடுத்து வாழாதார்க்கு கடவுளர் உலகில் குடிபுகல் என்ற இலக்கை நோக்கிய பயணம் நீண்ட நெடிய பாதையாக முடிவே இல்லாமல் இருக்க மன நலத்துடன் வாழ்வோர்க்கு அது மிகக் குறுகியதாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். சிறிதளவே அப்பாதையில் ஒருவர் முன்னேறினாலும் முன்னேற்றம் தானே ஒழிய பின்னேற்றமில்லை. ஒரு பிறவியில் ஆன்ம பலம் பெரிதும் குன்றும் அளவுக்கு அறம் பிறழ்ந்த வாழ்வு வாழ்வோருக்கு பின் வரும் பிறவிகளில் இழந்த ஆன்ம பலத்தை மீட்டு எடுப்பதற்கே பல காலம் பிடிக்குமென்பதும் ஆன்ம பலம் அதிகமாக உள்ளவர்க்கு பின் வரும் பிறவிகளில் அவர்கள் அறவழியில் வாழ்வதற்கு அவ்வான்ம பலம் உறுதுணையாக இருக்குமென்பதும் மிகவும் ஆறுதல் அளிப்பதும் நம்பிக்கையூட்டுவதுமான செய்தியாகும். கர்மா கொள்கையை (Theory of karma) இந்தக்கோணத்தில் திருவள்ளுவர் அணுகி உள்ளார் என்றே தோன்றுகிறது.
கடவுள் கொள்கையைப் பொருத்தமட்டில் கடவுள் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்ற கேள்விக்கே செல்லாமல் ஒருவர் திருக்குறளால் பயன்பெறலாம் என்பதுவும் கண்கூடு. இந்தக் கருத்தின்படியும் உளவியலருக்கு திருவள்ளுவருடைய கடவுள் கொள்கையின் பால் குழப்பம் இருக்கமுடியாது.
மேலும் எனது நூலில் நான் கூறி உள்ள புதிய விளக்கவுரைகளில் சில அல்லது பல பிறராலும் கூறப்பட்டும் இருக்கலாம். அப்படி கூறப்பட்டு இருக்கும் உரைகளை என் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நான் அவற்றை இப்புத்தகத்தின் அடுத்த பதிப்பில் குறிப்பிட்டு அவர்களுடைய பங்களிப்பை ஏற்று உலகுக்கு அறிவிப்பேன் எனக்கூறிக் கொள்ள விரும்புகிறேன். அருஞ்சொற்பொருள் விளக்கம் அதிகாரம் மற்றும் குறட்பாக்கள் ஆகியவற்றின் பொருளடக்கம் புத்தகத்தின் இறுதியில் உள்ளன.
நூலிலிருந்து, மாதிரிக்காக, ஒரு குறளுக்கான விளக்கவுரையை தந்துள்ளேன்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு 5
புதிர்: குறளில் நான்கு புதிர்கள் உள்ளன. இருள் என்றால் என்ன பொருள்? இருவினைகள் யாவை? இறைவன் பொருள்சேர் என்றால் என்ன பொருள்? புகழ் புரிந்தார் மாட்டு என்றால் என்ன பொருள்?
விளக்கம்: இருள் என்றால் குழப்பம் அல்லது மயக்கம். அதாவது ஒன்றை இன்னொன்று எனப்பொருள் கொள்வது. சற்று இருள் நிறைந்த ஒரு இடத்தில் கிடக்கும் கயிற்றினைப் பாம்பு எனத் தவறுதலாகப் பொருள் கொண்டு விடுகிறோமல்லவா? இவ்வுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக்களம், இவ்வுலகத்தில் நாம் துய்ப்பன யாவும் பயிற்சிக்கான பொருள்கள். பயிற்சியின் நோக்கம் உயிரை அல்லது ஆன்மாவை கடவுளர் உலகில் வசிப்பதற்கு தகுதியானதாக மேம்படுத்துவது. ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையான பொருள். இதைப் புரிந்து கொள்ளாமல் இவ்வுலகமும் அதன்பொருள்களும் உண்மையானவை என மயங்கி நிற்றலே இருளாம்.
இரு வினைகளாவன, சிந்தனையும் மற்றும் செயலாம். (சிந்தனையும் ஒரு செயலே. சிந்தனைத் தொழிலாளிகள் என்ற கருத்தினை நாம் அறிவோம்.)
அடுத்து இறைவன் பொருள் சேர் என்றால் இறைவன் மட்டுமே உண்மைப்பொருள் என்பதைச் சார்ந்த ஒன்று என்று பொருள். அந்த ஒன்று எது? இந்தக்கேள்வி நாம் நான்காவதாக எழுப்பிய புதிர்வினாவுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. புகழ் புரிந்தார் மாட்டு என்று சொல்வதன் மூலம் புகழ் என்ற சொல்லை புகழுக்குரிய செயலைக் குறிப்பதாக திருவள்ளுவர் கையாண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது அல்லவா? திருக்குறளில் புகழ் என்ற சொல் ஒரு கலைச்சொல்லாக சிறப்பாக வரையறைக்கப்பட்டுள்ள ஒரு சொல். ஒருவருடைய, சமூகத்துக்குப் பெரிதும் பயன்படும், உள் நோக்கமில்லாத செயலின் அருமை கருதி அவர் பால் அவருடைய பயனாளிகளிடத்தும் அவரை அறிந்தவர்களிடத்தும் தோன்றும் மதிப்புதான் புகழ் (231). பிரபலம்(stardom, celebrity, popularity) அல்லது பொரும் புள்ளி என்பது போன்ற பொருளில் புகழ் என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப் படவில்லை.
உரை:இறைவன் ஒருவனே உண்மையான பொருள். இதை உணர்ந்தவர்களிடத்தில் இவ்வுலகமும் அதன்பொருள்களும் உண்மையானவை என்ற அறியாமை இருட்டு இராது. அதேபோல் அவர்கள் பிறிதொரு உண்மையையும் அறிவர். அஃதாவது, தங்களுடைய உழைப்பு, நேரம், திறன், முயற்சி மற்றும் பொருள் ஆகியனவற்றை மனமுவந்து தேவைப்படும் நலிந்தோருக்கும் தகுதியான பிறருக்கும் ஈவதன் மூலம் தங்களுடைய ஆன்மா மேம்பாடு அடையும், முற்றிலும் மேம்பாடு அடைந்த ஆன்மா கடவுளர் உலகம் புகும் என்பதே அது. ஆகவே கடவுளர் உலகு புக சித்தம் கொண்டு அருளாளர்களாக ஒழுகுபவர்களிடம் தீயன சிந்திக்கும் செயலும் தீமை புரியும் செயல்பாடும் இராது.
வேறு விளக்கமும் உரையும்: இதல்லாமல் ”இறைவன் பொருள்சேர்” என்பதை இறைவனின் எட்டுத் தன்மை களைச் சார்ந்த என்று பொருள் கொள்ளவும் இடமுள்ளது. அவ்விதம் கொண்டால் இறைவனின் எட்டுக் குணங்களில் மனிதர்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க இயலக்கூடிய,வேண்டுதல் வேண்டாமை இலாதிருத்தல், ஐம்புலன்களின் செய்தியை நெறிப்படுத்திப் அறவழிப் பயன்பாட்டுக்குள்ளாக்குதல் மற்றும் எல்லா உயிரிகளிடத்தும் கருணையுடன் இருத்தல் ஆகியவற்றை தம் வாழ்வில் மேற்கொண்டு வாழ்வோரிடத்தில் இவ்வுலகம்தான் உண்மையானது என்ற மயக்கம் காரணமாகத் சிந்தை மற்றும் செயலில் தோன்றும் தீமைகள் இரா என்ற பொருள்கிட்டும்.
பின் குறிப்பு: இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல, உண்மையில் தமிழ்ப்பேராசிரியர் எவரையும் நான் சந்திக்கவில்லை. தங்களுக்கு சற்று ஆர்வம் ஏற்படச்செய்ய கற்பனையாக ஒரு பேராசிரியரை உருவாக்கினேன். பிழையை அன்புடன் பொருத்தருள்வீர் என நம்புகிறேன். நன்றி வணக்கம்.
அன்பன்
அர. வெங்கடாசலம்
முதல் டெஸ்ட் கமெண்ட் போடுபவர்களுக்கு எ.அ. பாலா நன்றி சொல்லுவார் :-)
Posted by IdlyVadai at 4/10/2012 04:04:00 PM 9 comments
Labels: விளம்பரம்
Friday, April 06, 2012
கலி காலம்
தாடி வைத்த கிருஷ்ணரை இப்போது தான் பார்க்கிறேன். ஹிந்து சப்போர்ட் கோஷ்டி இதற்கு வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள்.
Posted by IdlyVadai at 4/06/2012 02:52:00 PM 25 comments
Labels: அரசியல்
Tuesday, April 03, 2012
பட்டாசு
சசிகலா நேற்று மீண்டும் போயஸ் கார்டனுக்கு மாலை 4 மணியளவில் வந்தார். அங்கு அவர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் நடந்த பல விவரங்களை ஜெயலலிதாவிடம் விளக்கியதாக தெரிகிறது. - செய்தி
1. சசிகலாவை அ.தி.மு.க.,விலிருந்து நீக்கியதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவர்களில் கதி என்ன ஆகும் ?
2. எனக்கு என்னவோ சசிகலா விளக்கம் அளிக்க வந்தகாக தெரியவில்லை. போயஸ் கார்டனில் கரண்ட் கட் இருக்காது அதனாலேயே அங்கு வந்துள்ளார் என்று நினைக்கிறேன்.
Posted by IdlyVadai at 4/03/2012 07:15:00 AM 18 comments
Labels: செய்தி