பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 31, 2011

எனக்குத்தெரிந்த தில்லி! - பாரதி மணி

தில்லி தினமணியில் என் கட்டுரை.


ஜூன் மாதம் 3-ம் தேதியிலிருந்து தினமணி நாளிதழின் தில்லிப்பதிப்பு வெளிவருகிறது. அதற்கான சிறப்பு மலரில் வெளியிட என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள். அந்தக்கட்டுரையை இங்கே நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தில்லி தினமணி வாசகர்கள் தவிர, இட்லிவடை வாசகர்களும் படித்து ’அனுபவிக்கட்டுமே!’ என்ற நல்லெண்ணம் மட்டுமே காரணம்!

பாரதி மணி
bharatimani@hotmail.com

எனக்குத்தெரிந்த தில்லி!

பாரதி மணி

முதல் தடவையாக 1955-ல் சென்னையிலிருந்து ஜி.டி. எக்ஸ்பிரசில் என் அக்கா அத்தானுடன் புதிதாகக்கட்டியிருந்த புதுதில்லி ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, பதினெட்டு வயதான எனக்கு பிரமிப்பாக இருந்தது. புதிய மனிதர்கள், மொழி, உணவுப்பழக்கங்கள் எல்லாமே வேறாக இருந்தது. வந்தபுதிதில் ‘எப்படி நாம் நமது அரைகுறை ஆங்கிலத்தையும், கால்குறை ஹிந்தியையும் வைத்துக்கொண்டு இங்கே குப்பை கொட்டமுடியும்?........திரும்ப ஊருக்கே ஓடிவிடலாமா?’ என்று பலமுறை நினைத்ததுண்டு! ஆனால் தில்லி என்னை ஐம்பது வருடங்கள் வைத்திருந்து, கொஞ்சம் பக்குவமானவனாக மாற்றி அனுப்பிவைத்தது!

ஒரு குக்கிராமத்திலிருந்து திடீரென தில்லிக்கு உந்தித்தள்ளப்பட்ட எனக்கு அங்கே பார்த்த பல விஷயங்கள் புதிதாகவும், புதிராகவும் இருந்தன. ரகசியமொன்று சொல்கிறேன். வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம். மானம் போய்விடும். நமக்குள்ளேயே இருக்கட்டும்! தில்லி போன மறுநாள் ஒரு முக்கிய விஷயமாக ஆபீசிலிருந்த என் அத்தானுக்கு போனில் தகவல் சொல்ல சரோஜினி நகர் மார்க்கெட் போனேன். ஒரு கடையில் என் வாழ்வில் முதல் தடவையாக நம்பர் சுழட்டும் டயல் போனை பார்த்தேன். என் பார்வதிபுரம் கிராமத்தில் எந்த வீட்டிலும் அப்போது தொலைபேசி கிடையாது. நாகர்கோவிலிலிருந்த என் உறவினர் வீட்டில் பத்து கிலோவுக்குக்குறையாத எடையுள்ள கருப்பு போன் டயல் இல்லாது சுழற்றும் கைப்பிடியுடன் இருக்கும். அதில் என் உறவினர் பேசக்கேட்டிருக்கிறேன். ரிசீவரை ’தொட்டிலில்’ இருந்து எடுக்காமலே கைப்பிடியை இரண்டு மூன்று முறை சுற்றுவார். பின் ரிசீவரை எடுத்து ‘யாரு!....சம்முகமா? லீவிலெருந்து எப்பம் வந்தே? சின்னவளுக்கு கல்யாணமெல்லாம் நல்லா நடந்திச்சா? குளந்தைகளெ வீட்டுக்கு வரச்சொல்லு. எம் பொஞ்சாதிக்கு பாக்கணுமாம். முன்னூத்தியெட்டு….ரெட்டியாருக்குப்போடு’ என்பார். எக்ஸ்சேஞ்சிலிருக்கும் ஆபரேட்டர் சம்முகம் தொங்கும் பிளக்கை எடுத்து 308 நம்பரில் செருகுவார் போல. இதையெல்லாம் பார்த்திருந்த எனக்கு, டயல் செய்யும் போன் புதிசு. என் ஆயுசிலேயே முதன்முறையாக டெலிபோனில் பேசப்போகிறேன்! என்னிடம் என் அத்தான் ஆபீஸ் ஐந்து டிஜிட் நம்பர் இருந்தது. இப்போது ஒரு சந்தேகம். ரிசீவரை கையிலெடுத்து பிறகு எண்களை சுழற்றவேண்டுமா….அல்லது எடுக்காமலே டயல் செய்யவேண்டுமா? யாரிடமாவது கேட்கலாமென்றால் முதலில் கூச்சம். பிறகு மொழிப்பிரச்னை. ஹிந்தி சுமாராக புரிந்துகொள்ளவும், எழுத்துக்கூட்டிப்படிக்கவும் தெரியுமே தவிர சரளமாகப் பேச வராது! திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அப்போது ஐந்தாம் வகுப்பிலிருந்து மெட்ரிக் வரை ஹிந்தி கட்டாயப்பாடம். கடையெதிரே கொஞ்சநேரம் காத்திருந்தேன். ஒருவர் வந்தார். ரிசீவரை எடுத்து காதில் வைத்துக்கொண்டு டயல் செய்தார். ஓரிரு வினாடிகளுக்குப்பிறகு ரிசீவரை வைத்துவிட்டார். (ஏன்? ஓஹோ…எங்கேஜ்டுனு சொல்வாங்களே….அதுவா?) மறுபடியும் எடுத்து டயல் செய்தார். பேசினார்….யாரையோ மாலை ஆறுமணிக்கு பார்க்கவரலாமா என்று கேட்கிறாரென்பது புரிகிறாற்போல இருந்தது. எனது அடுத்த பிரச்னை எங்கேஜ்டு டோனுக்கும் டயல் டோனுக்கும் வித்தியாசம் தெரியாது! பண்டும் செத்திருந்தாத்தானே சுடுகாட்டுக்கு வழி தெரியும்? அந்த பகவான் அதற்குமேல் என்னை சோதிக்கவில்லை. டயல் செய்தவுடனேயே ட்ரிங்,,,ட்ரிங்… என்றது. அடுத்த முனையிலிருந்து ‘யெஸ்….கணபதி ஹியர்” என்று அத்தானின் குரலும் கேட்டது தில்லியில் என் முதல் தொலைபேச்சு வெற்றிகரமாக நடந்தது! இது நமக்குள்ளியே இருக்கட்டும்!...... வெளீலெ தெரியாண்டாம்!

நினைத்துப்பார்த்தால் என் தலைமுறையினர் தான் டெக்னாலஜியின் பலப்பல மாற்றங்களை சந்தித்தவர்களெனத்தோன்றுகிறது தொலைபேசியையே எடுத்துக்கொள்ளுங்களேன். ஆரம்பத்தில் ஆபரேட்டர் மூலம் பேசும் சுழற்றும் கைப்பிடி கருவி, ஐந்து டிஜிட் டயல் போன், பின்னர் க்ராஸ் பார் எக்ஸ்சேஞ்ச், OYT (Own Your Telephone) மூலம் ரூ.3000 கட்டிவிட்டு ஆறுவருடம் கனெக்ஷனுக்காக காத்திருப்பு, வீடு மாறினால் டெலிபோன் மாற இரு வருடங்கள், ஆபரேட்டர் மூலம் Trunk Call Booking, அதிலும் Ordinary, Urgent Calls. நமக்கு நாள் நல்லதாக இருந்தால் காலையில் புக் பண்ணிய அர்ஜென்ட் கால் இரவுக்குள் பேசமுடிந்த அதிசயம், பின்னர் வந்த ஏரியா கோடுடனான S.T.D., தொண்ணூறுகளில் ஆரம்பித்த Twentyfive Rupees Only per minute for both Incoming and Outgoing Calls மொபைல் போன் படிப்படியாக ரூ. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை விழுங்கிய 2G, Incoming Calls are also charged while Roaming. டாட்டா டோகோமோ அறிவித்த All Calls Local/National/Roaming One Paise per second! ரிஷி கபூர் மகன் அடிக்கடி டி.வி.யில் சொல்வது போல் "Keep it Simple! Silly!' அதன் பின்னர் 3G at no extra cost! அடிக்கடி விளம்பரங்களில் வரும் Vodafone 3G Zoozoo விர்விர்ரென்று பறந்து செய்யாத சாகசங்களே இல்லை! அப்படியே 2G ஊழல் மூலம் திஹாரிலிருக்கும் ஆண்டிமுத்து ராசாவையும், மகள் கனிமொழியையும் விர்ரென்று பறந்துபோய் தில்லி ஜெயிலிலிருந்து ககன மார்க்கத்தில் மீட்டுக்கொண்டுவந்து, கோபாலபுரத்தில் நிறுத்தினால், தமிழ்நாட்டின் மூத்த தலைவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்? அப்புறம் வந்தது Smart Phone, I-Phone. இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது! நானும் நேற்று மார்க்கெட் போய் ரூ. 27,000 கொடுத்து புதிதாக வந்திருக்கும் Android தடவிய Gingerbread இருக்கும் Samsung Nexus S Smart Phone வாங்கிவிட்டேன்! இதில் NHM Writer வேலை செய்யுமாவென்று கிழக்குப்பதிப்பகம் பத்ரியைத்தான் கேட்கவேண்டும்! பாருங்கள்… என் கண் முன்னாலேயே டெக்னாலஜி எப்படியெல்லாம் கன்னாபின்னாவென்று வளர்ந்திருக்கிறது என்று!

அப்போது நான் பார்த்த தில்லி வேறு. என்னைப்போன்ற ‘பெரிசு’களுக்கு மட்டுமே தெரிந்த தில்லி! இப்போதைய ராமகிருஷ்ணபுரம் நரிகள் நடமாடும் காடாக இருந்தது. மெஹ்ரோலி ரோடில் சப்தர்ஜங் மருத்துவமனையை விட்டால், மெஹ்ரோலி கிராமத்தில் தான் ஆள் நடமாட்டமிருக்கும் . தில்லி தமிழ்ச்சங்கம் கனாட்பிளேசில் இப்போதிருக்கும் பாலிகா பஸார் மேல் இருந்த தியேட்டர் கம்யூனிகேஷன் பில்டிங்கில் இருந்த மூன்று சிறிய அறைகளில் அரசியல், போட்டி பொறாமையில்லாமல் இயங்கிவந்தது. கோடை காலத்தில், குளிர்ந்த தண்ணீருக்காக வீட்டுக்கொரு புது சுராய் (Surahi) இடம் பிடிக்கும். தினக்கூலியில் நியமனம் பெற்ற ‘Watermen--தண்ணீர் மனிதர்கள்’ அரசாங்க அலுவலகங்களின் ஜன்னல்களை மூடியிருக்கும் விளாமிச்சவேர் (கஸ்கஸ்) தட்டிகளுக்கு அவ்வப்போது தோளில் மாட்டியிருக்கும் தோல்பையிலிருந்து தண்ணீர் தெளித்து, புழுக்கத்தை அதிகரித்துக்கொண்டிருந்தார்கள். வாரத்துக்கொருமுறை ராஜஸ்தான் பாலைவனத்திருந்து வரும் ’ஆந்தி’க்காற்று வீடு முழுக்க புழுதியையும், குளிர்ச்சியையும் கொண்டுவர மறக்காது. குளிர்காலம் வருமுன்பே, தெருக்களில் புது ரஜாய்கள் செய்யும் ‘நாரதர்கள்’ தங்கள் ஒற்றைநாண் தம்புராவை டொய்ங் டொய்ங் என்று மீட்டிக்கொண்டே போவார்கள். ஆட்டோக்கள் கண்டு பிடிக்குமுன்னர் இருந்த நாலு சீட் ‘பட்பட்டி’கள் பத்துப்பேரை அடைத்துக்கொண்டு விரைந்து போகும். நார்த் ப்ளாக் அருகே ட்ராபிக் சிக்னலில் காத்திருக்கும்போது பல தடவைகள் பக்கத்தில் திரும்பிப்பார்த்தால், பைலட், பந்தா ஏதுமில்லாமல், சிக்னலை மதித்து நிற்கும் கருப்புக்கண்ணாடியில்லாத அம்பாசிடர் காரில் பூனைத்தூக்கத்திலோ, அல்லது கோப்பு பார்த்துக்கொண்டோ போகும் பிரதமர் நேருவைப்பார்க்க முடிந்தது! தினமும் பாலுக்கு பாத்திரத்துடன் விடியற்காலை இருட்டில், ‘கந்தா நாலா’ அருகிலிருந்த செளத்திரி சுக்ராமின் பால்பண்ணையின் கிழிந்த கயிற்றுக்கட்டிலில் காத்திருக்கவேண்டும். காண்டாமிருகம் போல் கருகருவென வளர்ந்திருந்த ஐம்பது தில்லி எருமைகளின் சாண மூத்திர வாசனையை பொறுத்துக்கொள்ளும் மனத்திடம் அவசியம் தேவை! இல்லையென்றால் வீட்டுக்கு சைக்கிளில் கொண்டுவந்து கொடுக்கும் ’தூத்வாலா’க்களின் சரிபாதி தண்ணீர் கலந்த பா..ஆ..ல் தான் கதி! Delhi Milk Service, Mother Dairy, டோக்கன் பால் எல்லாம் வர ஆண்டுகள் பல காத்திருக்க நேர்ந்தது. தினமும் அதிகாலையில் நமக்குத்தேவையான தினசரிப்பேப்பர்களை சைக்கிள் ட்யூபிலிருந்து தயாரித்த கருப்பு ரப்பர் பாண்டில் சுருட்டி, சைக்கிளில் போய்க்கொண்டே, மேல்மாடியில் குடியிருக்கும் நம் வீட்டுக்கதவுகளில் குறி தவறாது வீசும் பேப்பர்வாலாக்கள் இன்னும் இருக்கிறார்களா? ஷாஜஹான் ரோடில் அரை நூற்றாண்டுக்கும் மேல் பிரசித்திபெற்ற பிரபுதயாள் கையேந்திபவன் கோல்கப்பா-தஹி பல்லா-பாப்டி அப்போது ஒரு பிளேட் எட்டணா தான். ஒரு ப்ளேட் சாப்பிட்டால், மதிய உணவை மறந்துவிடலாம்! தினமும் ஃப்ரெஷ்ஷாக அரைத்துச்சேர்க்கும் மசாலாக்கள், வேறெங்குமில்லாத ருசியைக்கொடுத்தன. அமைச்சர்கள் வீட்டிலிருந்தும் டிரைவர்கள் காத்திருந்து வாங்கிப்போவார்கள்.

தில்லியின் Wall Street என அறியப்பட்ட மதுரா ரோடு – பின்னர் பஹதூர் ஷா ஸஃபர் மார்க் என்று நாமகரணம் ஆனது – இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலிருந்து அப்போது வெளிவந்த சங்கர்ஸ் வீக்லி வரையிலான முக்கிய பத்திரிகை அலுவலகங்களைக்கொண்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மன் மட்டும் கனாட்பிளேசில் இருந்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் நான் வேலை பார்த்த ஸ்டேட் டிரேடிங் கார்ப்பொரேஷன் இருந்தது. உணவு இடைவேளையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆபீஸ் போய் – அங்கே மட்டும் ஏர் கண்டிஷன் மிக நன்றாக வேலை செய்யும்! -- முந்தையநாள் டாக் எடிஷன் தினமணியை ஆரஅமர புரட்டுவேன். ஏ.என். சிவராமன் எழுதிய பொருளாதாரக்கட்டுரைகளையும் தினமணி கதிரையும் விரும்பிப்படிப்பேன். எப்போதாவது வழியில் தென்படும் வெள்ளை வெளேரென்று மார்வாடி வேஷ்டி ஜிப்பாவிலிருக்கும் ஸ்ரீ ராம்நாத் கோயங்காவுக்கு வணக்கம் சொல்வேன். கோயங்காவை எனக்குத்தெரியும்….என்னைத்தான் அவருக்குத்தெரியாது! அவர் தில்லியிலிருக்கும்போது பல பிரமுகர்கள், சீனியர் அரசியல்வாதிகள் அவரைப்பார்க்க வருவார்கள்.

தில்லி மக்களிடம் பல விஷயங்கள் நாம் கற்றுக்கொள்ளும்படி இருந்தன. அதிகாலையில் தெருவில் சந்திக்கும் பழக்கமில்லாதவர்களோடும் ‘ராம்…ராம்….பாய்ஸாப்!’ என்று கடவுள் பெயராலேயே வணக்கம் சொல்லுவது எனக்கு புதிதாக இருந்தது. அடுத்தநாள் அவரைப்பார்த்தால், நானே முதலில் ‘ராம்…ராம்….சாச்சா!’ என்று என்னை அறிமுகப்படுத்திக்கொள்வேன். ஊரில் முத்து உதிர்வதுபோல சில பெரிசுகள் எதிரே வருபவர்களிடம் ‘என்ன….ஆத்தங்கரைக்கா?’ என்பது எப்போதாவது வரும். குட் ஈவினிங் என்பதை தமிழ்ப்படுத்தி ‘மாலை வணக்கம்’ சொல்வதெல்லாம் பரவலாக பிற்பாடு தான் வந்தது! மனதுக்கு திருப்தியாக சாப்பிட்டு முடிந்ததும், நமக்கெல்லாம் ‘ஆஆ…..வ்வ்’ என்றோ ‘ஏஏ..வ்வ்’ என்றோ தான் ஏப்பம் வரும். அது கேட்பவர்களை முகம் சுளிக்கவைக்கும். தில்லிப் பெரிசுகள் ஏப்பம் வந்தால் வாயைக்குவித்துக்கொண்டு, அதை ‘ஓ…ம்…..ஹரி ஓம்’ என்று மாற்றிவிடுவார்கள். ’ஐடியா நல்லா இருக்கே!’ என்று இதைப்பார்த்து நானும் என்னை மாற்றிக்கொண்டேன். இப்போது நானும் ‘ஓ…ம், ஹரி ஓம்!’ தான்! நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்! கோவில் மற்றும் பொதுவிடங்களில் லட்டு போன்ற பிரசாதங்கள் வினியோகிக்கும்போது, ஒவ்வொன்றாக எடுத்து நம் கைகளில் போடுவதற்குப்பதிலாக, பணிவாக தட்டை நம் முன் நீட்டி, நம்மையே எடுத்துக்கொள்ளச்செய்யும் ‘பெருந்தன்மை’ எனக்குப்பிடித்திருந்தது.

சென்னை திரும்பியபிறகு, நண்பர்கள் என்னை ‘தில்லி மணி’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் நடித்த ஓரிரு படங்களில் எனது பெயர் ‘தில்லி மணி’யென்றே டைட்டில் கார்டில் காட்டப்பட்டது. அந்த மாநகரம் என்னை 50 வருடங்கள் போஷித்து வளர்த்து ஆளாக்கியதென்றாலும் என் பெயரில் அதை ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு முன்பே இங்கே டெல்லி கணேஷ், டெல்லி குமார், டெல்லி கண்ணன், டெல்லி ராஜா என்று பலபேர் இருந்தார்கள். அந்த ஜோதியில் கலந்துகொள்வதில் எனக்கு விருப்பமில்லை. 2000-ல் எனது முதல் தமிழ்ப்படம் ‘பாரதி’ வந்த புதிது. ஒருநாள் ராணி சீதை ஹால் கச்சேரியில் நீண்டநாள் நண்பர் வயலின் வித்தகர் லால்குடி ஜெயராமனை சந்தித்தேன். பாரதி படத்தை வெகுவாக சிலாகித்து பாராட்டிவிட்டு, ‘மணி! இனிமே உன்னை ‘பாரதி மணி’னு தான் கூப்பிடப்போறேன்’ என்று சொன்னார். சென்னையில் ஓர் அடையாளத்தை தேடிக்கொண்டிருந்த எனக்கு அது உவப்பாக இருந்தது. என்னால் அந்த முண்டாசுக்கவிஞனாக மாறமுடியாவிட்டாலும் அவன் பெயரை ஒட்டிக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது!
வெகுநாட்களுக்குப்பிறகு சமீபத்தில் தில்லி வந்தபோது, அந்த நகரமே மாறிப்போய் எனக்கு அந்நியமாகத்தெரிந்தது. வழவழவென சாலைகள், பார்க்குமிடமெல்லாம் ஃப்ளை ஓவர்கள், நகரை சுத்தமாகப்பராமரிப்பதில் அரசின் கவனம் எல்லாம் நகரத்தையே மாற்றிவிட்டன. எத்தனை கோடி ஊழல் நடந்திருந்தாலும், சமீபத்தில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் தில்லியின் அடிப்படைக் கட்டுமான வசதிகளை பெருக்கித்தான் இருக்கின்றன. தில்லியில் தரைக்கு கீழேயும், மேலேயும் சீராக ஓடும் மெட்ரோ ரயிலும் இதற்கு முக்கிய காரணம். தூங்கிக்கொண்டிருந்த ஹரியாணாவின் Gurgaon – குட்காவ்ன் ஒரு ஹாங்காங் போல மாறி, தில்லியோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. பதினாறாவது மாடியிலிருந்து தூரத்தில் புழுவைப்போல் ஊர்ந்து போகும் மெட்ரோ ரயிலைப்பார்க்கும்போது, நாம் ஹாங்காங்கில் தான் இருக்கிறோம் என்றே தோன்றியது. இரண்டுமணி நேரம் அவஸ்தைப் பட்டுக்கொண்டு போகும் ஆஸாத்பூர் மண்டிக்கு அலுங்காமல் நலுங்காமல் 37 நிமிடத்தில் போகமுடிகிறது. மெட்ரோ ரயில் தலைநகரத்தையே புரட்டிப்போட்டிருக்கிறதென்பதை மறுக்கவே முடியாது!

எனது ஒரே வருத்தம் எனக்குத்தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் யாரையும் தில்லியில் பார்க்கமுடியவில்லை என்பது தான், தெருவில் இறங்கினால் எல்லாமே புதிய தலைமுறை முகங்கள்! என்னைத்தெரிந்தவர்களெல்லாம் எங்கே போனார்கள்? வயதானால் இதெல்லாம் நடக்கும் போலிருக்கிறது. ஒருவர் கூட ‘மணி ஸாப்! கைஸே ஹோ? பஹுத் தின் ஸே திக்காயி நஹீ தியா?’ என்று என் கைகளைப்பற்றிக்கொள்ளவில்லை!


Read More...

Monday, May 30, 2011

அணில் - பாப்பா பாட்டு



அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்

- பாப்பா பாட்டு
( இதே மாதிரி, நாய்க்குட்டி, பூனைக்குட்டி பாடல்கள் கைவசம் இருக்கிறது )
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் - நடிகர் விஜய்

Read More...

Wednesday, May 25, 2011

பாசக்கிளிகள்

தினமும் கோபாலபுரத்திலிரிந்து சில கிளிகள் கனிமொழியை பார்க்க டெல்லி செல்லுகிறது. இன்று ஸ்டாலினும் அவர் குடும்பமும். நாளை யார் என்று தெரியாது.

வழக்கமாக டெல்லிக்கு கடிதம் எழுதும் கலைஞர் இந்த முறை சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியை சந்திப்பதற்காக வந்தார். தேர்தல் காலத்தில் இவருக்கு சான்றிதழ் கொடுத்த சிதம்பரம் இவரை சந்தித்துள்ளார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசியுள்ளார். இது பெரிய விஷயம் இல்லை ஆனால் கலைஞரை சந்தித்துவிட்டு வந்த குலாம் என்ன சொல்லியிருக்கிறார் என்பது தான் வேடிக்கை

"....ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது.தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன்"


இவர்களை நாம் தலைவர்கள் என்று சொல்லுகிறோம். அதாவது சுப்ரீம் கோர்ட் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பதனால்தான் தங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை இல்லை என்றால் நாங்கள் 'வேண்டியதை' செய்திருப்போம் என்று மீடியாவிற்கு குலாம் நபி ஆசாத் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். பேசாம தமிழ்நாட்டில் யாருக்காவது பிரச்சனை என்றால் தமிழ் கவிதை எழுத ஆரம்பிக்கலாம் ஜெயிலில் இருப்பவரும் கவிஞர், அவரை போய் பார்த்தவரும் கவிஞர். ஆக கவிஞராக இருந்தால் பிரச்சனை வராது போல.

துண்டை காணோம் துணிய காணோம் என்போம் இப்போது மஞ்சள் துண்டை காணோம்.

Read More...

Monday, May 23, 2011

கலைஞர் அறிக்கை

கலைஞர் அறிக்கை இரண்டு நாளைக்கு முன்பே போட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நீண்ட அறிக்கையை படிக்க எனக்கு இவ்வளவு நாள் ஆச்சு அதனால் கொஞ்சம் லேட் :-)

என்னைப் பற்றியும், என் குடும்ப வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கைப் பற்றியும் நேரம் வரும்போதெல்லாம் பல முறை உனக்கும், உன் வாயிலாக ஊராருக்கும் சொல்லி இருக்கிறேன். இப்பொழுது சொல்லப்போவது அதைப்போன்ற "சுய புராணம்'' அல்ல. சுயபுராணத்தைத்தான் "நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில் ஐந்து பாகங்கள் எழுதி முடித்திருக்கிறேனே. இப்பொழுது நான் எழுதப்போவதை அடுத்த பாகத்தின் முன்னுரை என்று கருதிக்கொண்டாலும் சரி, அதற்கிடையே எழுந்துள்ள "மன ஓலம்'' என்று எண்ணிக் கொண்டாலும் சரி, இந்தச் சூழலில் இவற்றை நான் ஞாபகப்படுத்தியே தீர வேண்டும்.

நான் உயிரினும் மேலாக கருதும் நமது கழகம், பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்? இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக்கொண்ட தொகுதிகளின் கணக்கா? தமிழ்நாட்டிற்கென்றே தனியான "ஜபர்தஸ்து''களை, ஜனநாயக விரோதச்செயல்களை, சாட்டைகளாக கொண்டு, சர்வாதிகார "பாட்டை'' வகுத்துக்கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை.

ஆனால் இந்தியாவிலேயே அல்லது தமிழ்நாட்டிலேயே அதிகார செல்வாக்கைப் பெருக்கி - "ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, லட்சம் கோடி சம்பாதித்து மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிற குடும்பம், கருணாநிதியின் குடும்பம்'' என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், மழை விட்டும் தூறல் விடவில்லை என்பதைப் போல, இப்போதும்கூட அந்த பிரச்சாரத்தை ஏடுகள் வாயிலாக, ஏனைய ஊடகங்களின் வாயிலாக கூறிக்கொண்டிருக்கிறார்களே, அவற்றை பொய்யுரை என்றும், புனைந்துரை என்றும், புளுகு மாயப்புழுதி மாயம் என்றும், என் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

நான் செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் நான் பிறந்தவன் அல்லன். தஞ்சை மாவட்டத்தில் (தற்போது நாகை மாவட்டத்தில்) திருவும் வளமும் கொண்ட திருக்குவளை கிராமத்தில் சுற்றிலும் சூழ்ந்திருந்த வயல்களில் கிடைத்த பயிரையும், நெல்லையும், அரிசியையும் பயன்படுத்தி கொண்டு, ஒரு ஓட்டுவில்லை வீட்டில் விவசாயியாகவும் இசைமேதைகளில் ஒருவராகவும் இருந்த - முத்துவேல நாதசுரக்காரருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவன் நான்.

நான் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் தள்ளாடி நடந்தும் பின்னர் திருவாரூர் பள்ளியில் பயின்றும், அங்கு பெற்ற அறிவால் அந்த இளமையிலேயே அண்ணாவையும், பெரியாரையும் முறையே அரசியல் இயக்கத்திற்கும், அறிவு இயக்கத்திற்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டும், சூடு தணியாத சுயமரியாதை உணர்வோடு பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

பதினான்கு வயதிலேயே "பனகல் அரசரை'' படித்து "படிக்க முடியாது கட்டாய இந்தியை'' என்று மொழிப்போரில் புகுந்து, அதற்கு அடுத்தடுத்த தொடர் களங்கள் பலவற்றைச் சந்தித்து ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், 12 முறை தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று - பொன்விழாக்கள், பவளவிழாக்கள் கொண்டாடியும்கூட, இலக்கியவேந்தர், கலை வேந்தர் என வேந்தர் பட்டங்களை பெற்றாலும்கூட, வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான்தொடும் மாளிகைகளுக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக்கொள்ள நினைத்ததும் இல்லை; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை. அவற்றைத் தேடிக்கொள்ள திருட்டு வழியை தேடிக் கொண்டவனுமல்ல

அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டு காலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டு காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த காலகட்டங்களில் எதுவுமே சம்பாதிக்க வில்லையா என்ற கேள்விக்கு நான் தரும் பதில் ஆம்; சம்பாதித்தேன், "தமிழுக்கு தொண்டு செய்வோன்'', "தமிழ் வாழ தலையும் கொடுக்கத்துணிவோன்'' என்ற பட்டப்பெயர்களை, புகழுரைகளை நிரம்ப சம்பாதித்தேன். என் எளிய வாழ்க்கையை நான் நடத்திட பொருளீட்டியதே இல்லையென்று புளுகிடும் துணிவு எனக்கில்லை, பொருளீட்டியது உண்டு. அந்தப்பொருளில் பெரும் பகுதியை வாழ்வின் இருளில் இருந்தோர்க்கு வழங்கியது உண்டு.

நான் முதலில் எழுதி, நானும் நடித்த "சாந்தா அல்லது பழனியப்பன்'' எனும் நாடகத்தை - 1940-களில் நூறு ரூபாய்க்கு விற்று, அந்தப்பணத்தை என் குடும்பச்செலவிற்கு மட்டுமல்லாமல், அடுத்த நாடகத்திற்கான முன் செலவுகளுக்கும் ஆரூர் நடிகர் கழக அமைப்புக்கும் அளித்தேன். அதைத்தொடர்ந்து, கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "ராஜகுமாரி'' படத்திற்கும், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மந்திரி குமாரி'', "தேவகி'' போன்ற படங்களுக்கும் நான் வாங்கிய பணம் மாதச்சம்பளமாக இருந்ததால் அந்த ஊதியத்தை, வருமானவரி போக மிச்சப்பணத்தை தான் தந்தார்கள்.

பின்னர் "பராசக்தி'', "மனோகரா'', "மலைக்கள்ளன்'', "இருவர் உள்ளம்'', "மருதநாட்டு இளவரசி'' - "திரும்பிப் பார்'', "பணம்'', "நீதிக்குத் தண்டனை'', "இளைஞன்'' என்றெல்லாம் தொடர்ந்து தற்போது "பொன்னர்-சங்கர்'' வரையில் 76 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறேன்.

பிரசாத் இயக்கத்தில் உருவான "தாயில்லா பிள்ளை'' மற்றும் "இருவர் உள்ளம்'' படங்கள் நூறு நாள் ஓடினால் மேலும் பத்தாயிரம் ரூபாய் தருவதாக பிரசாத் வாக்களித்து, அவ்வாறே நூறுநாள் அந்தப் படம் ஓடியதற்காக அவர் தந்த பத்தாயிரம் ரூபாயை கொண்டு என்னை பெற்றெடுத்த திருக்குவளையில் - "முத்துவேலர், அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி'' கட்டி அந்நாள் முதல்-அமைச்சர் பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்புவிழா நடத்தினேன்.

அப்பொழுது நான் எழுத்தாளர் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினரும் கூட (எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தவன்). இதே போல நான் எழுதிய படங்கள் அனைத்திலும் பெற்ற ஊதியத்தில் திருவாருக்கு அடுத்த காட்டூரில் சிறிதளவு நஞ்செய் நிலம் வாங்கவும் பயன்படுத்திக் கொண்டது போக மிச்சத்தை நலிந்தோருக்கே வழங்கினேன். காட்டூரில் ஆரம்பப் பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அப்போதே நிதியளித்து அந்தக் கிராமப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தேன்.

கட்சிக்குப் பொருளாளராக இருந்தபோது அண்ணாவின் ஆணைப்படி, தமிழகத்தில் ஊர்தோறும், நகர்தோறும், பட்டி தொட்டி, குக்கிராமம் என செல்லாத இடமில்லை என்ற அளவிற்குச் சென்று - கழகக் கொடியேற்ற, கழகத்தினர் இல்லத்தில் உணவருந்த என்பதற்கெல்லாம் கட்டணம் விதித்து - சென்னை விருகம்பாக்கம் கழக மாநாட்டில் அண்ணாவிடத்தில், மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமை வீரர் பி.ராமமூர்த்தி, பார்வர்ட் பிளாக் இயக்கத்தைச் சேர்ந்த பி.கே.மூக்கையா தேவர் ஆகியோர் முன்னிலையில் 11 லட்சத்தை தேர்தல் நிதியாக அளித்தேன். வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, கைத்தறியாளர் கண்ணீர் துடைக்க நெசவாளர் நல்வாழ்வுக்காக நிதி, இப்படி எத்தனையோ நிதிகள் வழங்கியும்-வசூலித்து தந்தும் தொண்டாற்றியவன்தான் நான்.

2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' திரைப்படத்திற்காக 11 லட்சம் ரூபாயும், "கண்ணம்மா'' திரைப்படத்திற்காக 10 லட்சம் ரூபாயும் கிடைத்ததை சுனாமி நிவாரண தொகையாக -அப்போதிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் மூலமாக நேரடியாக கொடுக்க செய்தேன். 9-7-2008-ல் "உளியின் ஓசை'' திரைப்படத்திற்காக எனக்கு தரப்பட்ட 25 லட்சம் ரூபாயில் ஏழு லட்சம் ரூபாய் வருமானவரிபோக மீதத்தொகை 18 லட்ச ரூபாயை அன்று கலையுலகை சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவிநிதியாக - கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக வழங்கினேன்.

17-9-2009இல் "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தத்தொகையினை அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குவேன் என்று அறிவித்ததை யொட்டி, அப்படி வழங்கப்பட வேண்டிய தொகை 61 லட்சம் ரூபாய் என்று கூறிய போது என்னுடைய சொந்த கையிருப்பு நிதி 11 லட்சம் ரூபாயையும் சேர்த்து உதவி நிதியாக 29-10-2009 அன்று வழங்கினேன். 27-4-2010 அன்று "இளைஞன்'' திரைப்படத்துக்காக வருமானவரி போக 45 லட்சம் ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது. அந்த தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து பிறகு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுக்காக அந்த தொகை உதவி நிதியாக வழங்கப்பட்டது.

"பொன்னர் -சங்கர்'' திரைப்படத்திற்காக 8-9-2009-ல் 10 லட்சம் ரூபாயும், 6-6-2010-ல் 121/2 லட்சம் ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது. இந்த படத்திற்காக தரப்பட வேண்டிய 25 லட்சம் ரூபாயில் வரியாக 21/2 லட்சம் ரூபாய் போக எஞ்சியத்தொகை 221/2 லட்சம் ரூபாயாகும். இந்த தொகையிலிருந்து காவல் துறையிலே விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வழங்கச் செய்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.

கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள், உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக, நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். அவை இன்றைக்கும் என்னுடைய பெயரால் அமைந்துள்ள அறக் கட்டளைகளின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்ச்சிகளிலும், மாலைக்கு பதிலாகவும், பொன்னாடைகளுக்கு பதிலாகவும் வழங்கப்பட்ட நிதியினையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியிலே சேர்த்திருக்கிறேன்.

ஈழத்தமிழர் நிவாரணத்திற்காக தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்ட போது என்னுடைய சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறேன் "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த என் மனைவி தயாளு அம்மையார் அதிலிருந்து பிரிந்து வந்த வகையில் கிடைக்கப்பெற்ற 100 கோடி ரூபாயில் எனக்கு கிடைத்த 10 கோடி ரூபாயில் ஐந்து கோடி ரூபாயினை பங்கீட்டுத் தொகையாக செலுத்தி, தி.மு.கழகத்தின் சார்பில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்றினை கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தொடங்கப்பட்டது.

11-1-2007 அன்று நடைபெற்ற 30-வது புத்தக கண்காட்சி விழாவில் நான் பேசும்போது -இந்த 5 கோடி ரூபாயிலிருந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே அந்த சங்கத்துக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. அந்த தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு-அந்த சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாய சீர்திருத்த கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், வெளியிடும் பதிப்பாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து, தலா ஒரு லட்சம் பொற்கிழி வழங்கிட கூறியுள்ளேன்.

இந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக்கொண்டு "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டு இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.கழக சார்புடைய "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்கு நான் கொடுத்ததில் எஞ்சிய நான்கு கோடி ரூபாய்க்கு மாதந்தோறும் கிடைக்கின்ற வட்டித்தொகையிலிருந்து-கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005 நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மேமாதம் வரை 2337 பேருக்கு மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை தற்போதும் ஒவ்வொரு மாதமும் தரப்பட்டு வருகிறது.

"சன்'' தொலைக்காட்சியிலிருந்து எனக்கென்று கிடைத்த 10 கோடி ரூபாயில்-"கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்கு அளித்த 5 கோடி ரூபாய் போக எஞ்சிய 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வைப்புநிதிக்கு கிடைத்த வட்டித்தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக தமிழ்ச்செம்மொழி நிறுவனத்திற்கு 26-7-2008 அன்று வழங்கி அந்த தொகையிலிருந்து கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்.

கோவையில் நடைபெற்ற உலக தமிழ்மாநாட்டின்போது முதன் முறையாக இந்த விருது பின்லாந்து நாட்டு தமிழ்அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு பத்து லட்ச ரூபாய் பொற்கிழியாக நன்கொடையுடன் வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக்கூட ஏழை-எளியவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றி அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான முறையான பத்திரப்பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.

"சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி - 18-10-2005 அன்று "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் - 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை.

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு-செலவு, கொடுக்கல்-வாங்கல், இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று விதிமுறை இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட; கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிர்வாகி தம்பி சரத் குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர்கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும்கூட, அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி - புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் "தர்ப்பைப் புல்'' முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

உடன்பிறப்பே, உனக்கும் இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், உன் தமையன் நான் "சுயபுராணம்'' இது என்றாலும் சுயமரியாதைப் புதினமாக இதைக் கருதி இந்தக் கடிதத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் ஒவ்வொரு வரியாக நீ படித்து, சிந்தித்து, புரிந்துகொண்டு, செயல்படுத்துவாயானால் தன்மானக் கழகமாம் தமிழர்நலம் தேடும் இந்தப் பாசறை அறப்போர்க் கணைகளை ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் வடிவில், தம்பி தங்கைகள் உருவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது திண்ணம்

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியருக்கு அமெரிக்கா விருது! - முரசொலி செய்தி


Read More...

Friday, May 20, 2011

கனிமொழி



பிகு: பழைய படம்

Read More...

Thursday, May 19, 2011

'துரோகம்' அரசியலில் இல்லாத வார்த்தை

புதுச்சேரியில் தனித்து ஆட்சி அமைத்து, கூட்டணிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என புதிய முதல்வர் ரங்கசாமி மீது ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ரங்கசாமி காங்கிரஸ் 15 இடங்கள், அதிமுக 5 இடங்கள் வென்றது.

ஒரு சீட் இருந்தால் பெரும்பான்மை என்ற நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ சிவகுமார் ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சி அமைத்தார். இதில் வேடிக்கை என் என்றால் இவர் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவர். இதனால் ஜெயலலிதா கூட்டணிக்கு ரங்கசாமி துரோகம் இழைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இது துரோகம் என்றால் வைகோவை கழட்டிவிட்டதும் துரோகம் தான்.

Read More...

Wednesday, May 18, 2011

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - பழ.நெடுமாறன்

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.



ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.

1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.

எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.

காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.

இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!

கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.

1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.

1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.

அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?

நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?

தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?

இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!

உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.

ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.

உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.

மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?

கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்''
முரசொலி பதில் வெயிட்டிங்..


Read More...

இலவச கல்வி விளம்பரம்

Read More...

Tuesday, May 17, 2011

காது தோடு

ஜெயலலிதா வெற்றி பெற்ற பின் செய்த முதல் காரியம் காது தோடு அணிந்துக்கொண்டது என்று நினைக்கிறேன். முன்பு ஆட்சிக்கு வந்த பின் தான் நகை அணிவேன் என்று சொன்னது ஞாபகம் இருக்கலாம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை பற்றி யாரும் கேட்கவில்லை, ஜுவியில் கழுகார் எழுதுவார் என்று நம்புகிறேன்.

தமிழக மக்களுக்கு காதுல பூ சுற்றாமல் இருக்கணும்.

Read More...

ஓய்வு ?

தமிழகத்தில் தொடர்ந்து, 12 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்த கலைஞர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தான், அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று இந்த தேர்தலிலேயே சொல்லியிருக்க வேண்டும், ஆனால் தவறிவிட்டார். தற்போது திமுக தோற்ற பிறகு அவருக்கு இந்த எண்ணம் வந்துள்ளது. அரசியலிலிருந்து ஓய்வு பெற்று திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன் நிறுத்த உள்ளார் என்பது தான் தற்போது அறிவாயலத்தில் ஹாட் டாப்பிக். ஸ்டாலினுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

பாசக்கிளிகள், உளியின் ஓசை, பெண்சிங்கம், பொன்னர் சங்கர், இளைஞன் வரிசையில் அடுத்த படம் ரெடி !

Read More...

பதில் இல்லாத சில கேள்விகள்

ஞாநியின் வேதனை கேள்வி

கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி, ராசாவை வேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் சதிகாரர் என்று சொல்லலாமே தவிர தன் கட்சிக்காரருக்கு ஒரு தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்ட அதே நாளில் அதே மன்றத்தில் ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளின் காலைத் தொட்டு வணங்கிய செய்தி படிக்க வேதனையாக இருந்தது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ஒரு முறைகேடும் நடக்கவில்லை என்று வாதிடும் தி.மு.க கட்சி சார்பில் கனிமொழி, ராசா இரு வருக்காகவும் வாதாட ஒரே வக்கீலாக ராம்ஜெத்மலானியை நியமித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

தொடர் ராஜினாமாக்கள்
கலைஞர், தங்கபாலு ராஜினாமாக்கள் சரி, ஏன் இவர்கள் ராஜினாமா செய்தார்கள் ?

1. சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து குஷ்பு
2. பெப்ஸி தலைவர் குகநாதன் ராஜினாமா
3. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம.நாராயணன்
இவர்கள் சொன்ன காரணம் தான் சூப்பர் 'பர்சனல் வேலை, புதிய படபிடிப்பு..." ஒருவரும் திமுக தோல்வியினால் என்று சொல்லவில்லை. நல்லா நடிக்கிறாங்கப்பா


கொசு தொல்லை

1. பா.ஜ., தமிழக துணைத் தலைவர் பதவியில் இருந்து, எச்.ராஜா ராஜினாமா செய்தார் - தேர்தல் தோல்வி எதிரொலியாம்.

2. 'தி.மு.க.வின் சாதனைகளுக்கு வாக்காளர்களிடமிருந்து கிடைத்த பரிசுதான் தேர்தல் தோல்வி' கி.வீரமணி அறிக்கை

ஓபன் டாக்

1. யார் வேண்டுமானாலும் திரைப்படம் தயாரிக்கும் நிலை வர வேண்டும்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தங்கர்பச்சான் கோரிக்கை.

2. புதிய தலைமை செயலகத்தை மாற்றக்கூடாது - டாக்டர் ராமதாஸ் அறிக்கை


அப்படியா ?
முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா மண்டபத்தில் பதவியேற்கும் விழாவில் கந்துக்கொண்ட பிரவீன் குமாரை பல அதிமுக தொண்டர்கள் காலில் விழுந்து வணங்கினார்கள். இதை தடுத்த அவரது மனைவியை "சும்மா இருங்க" என்று கடிந்துக்கொண்டு பிறகு அவர் மனைவி என்று தெரிந்த பின்னர் அவர் காலிலும் விழுந்தாகளாம் !

Read More...

Saturday, May 14, 2011

தேர்தல் 2011 வெற்றி பெற்றவர்கள் விவரம்



Read More...

Friday, May 13, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-5-2011

வணக்கம் முனி,

அதிமுக கூட்டணி 186 இடங்கள் என்று நீ சொன்ன கணிப்புதான் கொஞ்சம் பக்கத்தில் வந்தது. ஹெட்லைன்ஸ் டுடே, நக்கீரன் எல்லாம் தேர்தல் அறிக்கை போலவே பொய்த்துவிட்டது. தமிழர்களாகப் பார்த்து எனக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்லுகிறார் கலைஞர். அவர் முகத்தில் இன்று நிஜமான சந்தோஷத்தை பார்த்தேன். சில வருஷம் முன்னாடி ஞாநி ரெஸ்ட் எடுங்க என்று சொன்னதற்கு கனிமொழி தலைமையில் வாணி மஹாலில் ஞாநிக்கு பூணூல் அர்ச்சனை விழுந்தது. இனி கலைஞருக்கும் 'Rest' of the DMK தலைவர்களுக்கும் பர்மனென்ட் ரெஸ்ட் தான். ஏன் ஞாநி கூட இனி ஓ-பக்கங்களில் கலைஞருக்கு ரெஸ்ட் கொடுத்துவிடுவார் என்று நம்புவோம். கலைஞர் இல்லை என்றால் இட்லிவடை கடையை நான் எப்படி ஓட்டுவேன்? பேசாம நானும் ரெஸ்ட் எடுக்க போய்விடலாம் என்று இருக்கேன்.

இந்த தேர்தலில் சில சந்தோஷங்கள் இருக்க தான் செய்கிறது. முதல் சந்தோஷம் பா.ம.க விரட்டியடிக்கப்பட்டுள்ளது, அடுத்து விடுதலை சிறுத்தைகளுக்கு விடுதலை அளித்துவிட்டார்கள். இனி அவர்கள் ஃபிரீயாக உலாவலாம். அடுத்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தவர்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பார்கள் என்ற Myth முறியடிப்பட்டுள்ளது.

குஷ்பு போல குழந்தை, அண்ணாவுடன் ஸ்கூல் போன தலைவர்கள் இருக்கும் திமுகவில் வடிவேலுவின் 'தண்ணி' பிரச்சாரத்தை ஓயாமல் டிவியில் காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். இவை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்.

விஜயகாந்த் என்ற கேப்டன் காங்கிரஸுக்கு மாற்றாக வந்துவிட்டார் என்பது 2011 தேர்தலில் புதிய செய்தி. அடுத்த தேர்தலில் காங்கிரஸ், விஜயகாந்த் என்று கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ரஜினிக்கு இல்லாத தைரியம் விஜயகாந்துக்கு இருப்பது அவரின் உழைப்பு, நம்பிக்கையை காட்டுகிறது.

திரையுலகம் ஜால்ரா அடித்தாலும், அவர்களும் தியேட்டர் பிரச்சனை போன்றவைகளை பேச முடியாமல் இருந்தார்கள், இனி சன் டிவி வாங்கவில்லை என்றாலும், காக்க காக்க போன்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும் இது ஒரு விதத்தில் நல்லது. திமுக அனுதாபிகள் டிவிட்டர் பக்கம் இன்று வராதது நம் 'அதிர்ஷ்டம்'. பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.

அடுத்து வரும் கல்லூரி, +2, பத்தாம் வகுப்பு தேர்வில் பலர் தமிழ் பாடங்களை எடுப்பார்கள், தமிழ் மட்டுமே படித்தால் கிரிமினல் வழக்கிலிரிந்து தப்பிக்கலாம் என்ற பாடம். சில வாரங்களுக்கு முன் எல்லோருக்கும் புரிந்தது. ஸ்டாலின், கலைஞர் போன்றவர்கள், ஏன் ஜெயலலிதாவும் கூட பயந்துக்கொண்டு தங்கள் தொகுதிகளை விட்டு சென்னைக்கு வெளியே இருக்கும் தொகுதிகளை தேர்ந்தெடுத்தது வெட்ககேடு. அவர்கள் இருக்கும் தொகுதிக்கு என்ன செய்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சும்மா ஒரு பஸ்டாண்ட், கக்கூஸ் கட்டிவிட்டால் தொகுதி மக்கள் குறைகளை தீர்த்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் தமிழக தேர்தல் தோல்வியை பார்த்து வருத்தப்பட்டாலும் , காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இருவர் சந்தோஷப்படுவார்கள் என்று நிச்சயம் எனக்கு தெரியும் - ஒன்று இ.வி.கே.எஸ் இளங்கோவன், மற்றது எஸ்.வி.சேகர். தங்கபாலு தோற்றது தமிழக மக்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்.

ஒரு தலித் திஹார்க்குப் போகலாம், ஆனால் குடும்பத்தில் இருப்பவர்கள் டெல்லிக்கு கூட போக கூடாது என்ற புதிய சமூக நீதியை கருணாநிதி நமக்குப் புரியவைத்துள்ளார். தலித் என்பதால் ராசா மீது குற்றம் சுமத்துகிறார்கள், என்று ராமரைத் தூற்றிய கலைஞர், இப்போ ராசாதான் எல்லாவற்றிருக்கும் காரணம் என்று 'ராம்'ஜத்மலானியை கொண்டு கனிமொழி சார்பில் வாதாடவைக்கிறார். அதே கோர்ட்டுல அதே நாளில் அதே ராசா ராசாத்தி காலுல விழுந்து சேவிச்சாராம். வெக்கம் கெட்ட ஜென்மங்கள்.

காங்கிரஸ் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயரை தேர்தலுக்கு பின் வருமாறு பேரம் பேசப்படுகிறது, பிறகு முன் ஜாமீன் மனுக்கள் தேர்தல் முடிவுக்குப் பிறகு தள்ளிவைக்கிறது சி.பி.ஐ நீதிமன்றம். இவை எல்லாவற்றையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மறந்துவிடுவார்கள்.

பா.ஜ.க ஐபிஎல் மாட்சில் இருக்கும் சியர் லீடர்ஸ் போல. அவர்களை இந்தத் தேர்தலில் கண்டுகொள்ள வேண்டாம். அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம், ஆந்திரா, பாண்டிச்சேரி என்று எதிலும் அவர்கள் இல்லை.

அழகிரி ரொம்ப டென்ஷனில் இருக்கிறார் என்று தகவல். மதுரையில் அவருக்கு கிடைத்த மார்க் 0/10. திருமங்கலத்தில் பணம் கொடுத்து இடைத்தேர்தலில் சொல்லி அடித்தவருக்கு இந்தத் தேர்தலில் வடை போச்சே என்று இருக்கதான் செய்யும்.

இன்னும் சில மாதங்களில் (நாட்களில்), திமுக குடும்பச் சண்டை வெளி உலகத்துக்கு வந்து நாறும் என்று எதிர்பார்க்கலாம். குமுதம் அரசு பதில்களில் ஹிஹி என்று சிரிப்பதைப் போல தமிழகம் சிரிக்கும். சன் டிவி ஜெயலலிதா காட்சிகளை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள் நிலை இப்போது 'நடுநிலமை'. கலைஞர் டிவியில் மம்தா, ஓபாமா என்று ஹிந்தி சானல் போல ஆகிவிடும். விகடன், கல்கி, குமுதம் என்ற பத்திரிக்கை 'சலாம்' போட்டு விட்டு கொஞ்ச நாளில் ஜெயை விமர்ச்சித்து தலையங்கம் எழுதும், அதை முரசொலி மறுபதிப்பு செய்யும். கீ.வீரமணி நிலைமை ரொம்பப் பாவமாக இருக்கிறது. இருந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை பார்த்து வணக்கம் சொல்லிச் சிரிப்பார்.

திமுக தோல்விக்கு இலங்கை, மீனவர் பிரச்சனை காரணம் என்று நம்பினால் அது முட்டாள் தனம். காரணம் யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு விதத்தில் திமுக மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது தான் காரணம். 2G ஒரு காரணம் அவ்வளவு தான் இவர்கள் கொடுத்த இலவச டிவி தான் முக்கிய காரணம். ஏன் என்றால் அதில் தான் இவர்கள் மீடியா 2G பற்றி ஓயாமல் பிரச்சாரம் செய்ததை இலவசமாக பார்த்தார்கள்.


பிகு: இன்று பிளாகர் கொஞ்சம் படுத்திவிட்டது, இருந்தாலும் கவர் இட் லைவில் பலர் கலந்துக்கொண்டார்கள் அவர்களுக்கு என் நன்றிகள்.

Read More...

Thursday, May 12, 2011

இட்லிவடை அழைக்கிறாள்

எலக்ஷன் முடிஞ்சு ஒரு மாசம் போனதே தெரியலை. பலமணி நேரப் பவர் கட்டிலும், கனிமொழியின் காராக்ரஹத் தடுப்பு முயற்சியிலும், ஐபிஎல் கூத்திலும் மக்களுக்குப் பொழுது போனது. வடக்கத்திய சேனல்கள் வழக்கம் போல மொக்கையான செய்திகளை ஊதும் வேலையச் செய்கின்றன. நேத்திக்கு ராகுல் காந்தி பைக் ஒட்டி, விவசாயிகளின் பிரச்னையை வளர்த்து விட்ட செய்திதான் இன்னிக்கு ஓடும் பொழப்பு. வடக்கே அப்படி இருக்க, தெற்கே என்ன சோகம் என்றால் ராமதாஸ் வைகோ கேப்டன் விஜயகாந்த் என்ற பெயர்களில் பெருந்தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதைக்கூட மக்கள் மறந்து விட்டார்கள்/மறக்கடிக்கப் பட்டார்கள். பத்திரிக்கைகளில் கூட ரெண்டு மூணு வாரமா. மருந்துக்குக் கூட இவிங்க பேரு வரலை. இன்று நித்தியானந்தா பழனியில் பேட்டியில் சிரித்துக்கொண்டு சித்தர்களுக்கு சிலை வைக்க போகிறாராம். அடிக்கடி வந்து ஜோக்கடிக்கும் எஸ்.வீ. சேகர் கூட சிதம்பரத்துக்கு பத்திரிகை வைத்த பிற்கு காணாமல் போய் விட்டார்.எது எப்படியோ. பரவாயில்லை. நாளைக்குக் காலையில் ஒரு மாசமாக் காணாமல் போனவர்கள் கண்டிப்பா வந்து விடுவார்கள்.

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், கர வருஷம் சித்திரை மாசம் முப்பதாம் நாள் ஸூர்யோதயத்தில் (சூர்யன் உதித்தாலும் உதிக்காவிட்டாலும்) இட்லிவடையில் எலெக்ஷன் ஸ்பெஷல் "லைவ்"ஆக ஓட இருக்கிறது, இதன் மூலம் இட்லிவடையின் ஆஸ்த்தான வாசகர்களையும், பின்னூட்டவாதிகளையும், ட்விட்டரில் வெட்டி அரசியல் செய்பவர்களையும் இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள பாசத்துடன் அழைப்பதில் இட்லிவடை மகிழ்ச்சி அடைகிறது.

மறக்க வேண்டாம். மறந்தும் இருக்க வேண்டாம். காலை 5.00 - 6.00 மணி முதல் கடை களை கட்டட்டும். அனைவரும் வருக :-)

Read More...

Wednesday, May 11, 2011

யார் மனசுல யாரு ?



திமுக, அதிமுக ஜெயிக்குமா என்று இல்லாமல் யார் சொல்லுவது சரி என்று கூட மே 13 அன்று பார்க்க வேண்டும் போல இருக்கு. எல்லோரும் Friday the 13th அன்று இங்கே ஆஜர் ஆகிவிடுங்கள் :-)

Read More...

Monday, May 09, 2011

நோ கமெண்ட்ஸ்

Read More...

Sunday, May 08, 2011

சன்டேனா இரண்டு (08-05-11) செய்திவிமர்சனம்

இந்த வாரம்......."விலை போன மத்திய அரசு"
செய்தி # 1

"நமது மத்திய அரசை பன்னாட்டு மற்றும் வர்த்தக நிறுவனங்கள்தான் நடத்துகின்றன " என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார் எதிர்க்கட்சி தலைவர் திரு.அத்வானி.

அவர் கூற்று நூற்றுக்கு நூறு சதம் உண்மை என்பதை நிருபிக்கும் விதமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

பன்னாட்டு அணு உலைகளை திறப்பது,பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை பெட்ரோலிய நிறுவனங்களிடம் ஒப்படைத்தது...தற்சமயம் அதை விட ஒரு மிகப்பெரிய கொடுமையை மக்களுக்கு இழைத்து இருக்கிறது மத்திய அரசு.

கம்யுனிஸ்ட் ஆட்சி நடைபெறும் கேரளாவில் சமிபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

காசர்கோடு - கேரளாவில் உள்ள அழகான மாவட்டம். கேரள - கர்நாடக எல்லையில் அமைந்து உள்ள, முந்திரி காடுகள் நிறைந்துள்ள மாவட்டம். (மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் "உயிரே" பாடல் காட்சி மற்றும் வசந்தின் சத்தம் போடாதே படத்தில் இந்த காதல் போன்ற பாடல்கள் எடுக்கப்பட்ட "பேக்கல் போர்ட்" இங்குதான் உள்ளது).

இங்கு உள்ள முந்திரி மரங்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டை முந்திரிக்காட்டு விவசாயிகள் அதிகரிக்க தொடங்க, அதன் விளைவுகள் பயங்கரமாக விஸ்வரூபம் எடுத்து உள்ளது இப்போது தெரியவந்து உள்ளது.

சமிபகாலமாக அந்த மாவட்டத்தில் உடல் முடங்கி போகும் குழந்தைகளின் பிறப்பு கணிசமாக அதிகரிக்க, அதன் காரணம் இந்த என்டோசல்பான் மருந்தே என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.

காசர்கோட்டை சேர்ந்த புருஷோத்தமன் என்கிற ஏழை விவசாயின் பதிமூன்று வயதான மகளான பிரியங்கா, என்டோசல்பானால் பாதிக்கப்பட்டு நடக்கவும் இயலாமல் ஒரு கோமா நோயாளி போல வாழும் செய்தி நம்மை அதிர வைக்கிறது (படத்தில் இருப்பவர்).



இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட அம்மாநில முதல்வர் திரு.அச்சுதானந்தன், உடனே என்டோசல்பானுக்கு கேரளாவில் தடை விதித்ததோடு, இந்த பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்துவதை உடனே நிறுத்துமாறு,நம் தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்.

இதற்காக ஒரு உண்ணாவிரத போராட்டமே நடத்தினார் கேரளா முதல்வர்.

ஆனால், யாரும் இதை பற்றி அக்கறை காட்டவில்லை. முன்பு, பெப்சி மற்றும் கோலா போன்ற பானங்களில் இது போன்ற சில விஷ பொருட்கள் கலந்து இருப்பது தெரியவந்த போது, அந்த பானங்களை தடை செய்யும் முதல் போராட்டம் நடைபெற்றதும் கேரளாவில்தான் என்பதை நாம் இங்கே நினைவு கொள்ளவேண்டும்.

"இந்தியாவில் மூன்று நிறுவனங்கள் எண்டோசல்பான் தயாரிப்பில் உள்ளன. இவை ஆண்டுக்கு 9,000 டன் எண்டோசல்பான் மருந்தைத் தயாரிக்கின்றன. இதில் பாதி அளவு இந்திய விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. மீதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.1,340 கோடி. தற்போது இந்த மருந்தைத் திடீரென்று தடைசெய்து நிறுத்திவிட்டால், இந்தியாவில் இதை நம்பியிருக்கும் 75 விழுக்காடு விவசாயிகளுக்கு மாற்றுப் பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்காது என்று இந்தியா கருதுகிறது" என்கிறது தினமணி செய்தி.

"பூச்சி கொல்லி நஞ்சுகள் பூச்சியைக் கொல்லுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. இரண்டாம் உலகப் போரில் உருசியப் படைவீரர்களைக் கொல்லுவதற்காகக் கிணற்றிலும் ஆற்றிலும் கொட்டுவதற்காக ஹிட்லர் படை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவை

இவை. போர் முடிந்த பிறகும் கம்பெனிகள் இலாபம் குவிக்க வேண்டும் என்பதற்காகவே பூச்சி மருந்து என்ற பெயரில் இந்த நஞ்சுகள் உழவர் தலைகளில் கட்டப்பட்டன"

-என்று தனது நீண்டதொரு ஆராய்ச்சி பயணத்தில் கண்டுகொண்ட ஒரு அதிர்ச்சி தரும் உண்மை சில வருடங்களுக்கு முன்பே வெளியிட்டு இருக்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

"இயற்கை வழி உழவாண்மை ஒன்றே நிலைத்தும் நீடித்தும் இருக்க வல்லது. இயற்கை வழி என்பது யூரியாவுக்குப் பதிலாகச் சாணி போடுவது இல்லை. உயிர் உள்ள இயற்கை. உயிர் இல்லா இயற்கை இவற்றுக்கிடையில் உள்ள உறவுகளை அறிந்த பயிர் செய்வது இயற்கை வழி.

எடுத்துக்காட்டாக, பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம். அவற்றைத் தின்னும் பூச்சிகளும் குருவிகளுமே உலகில் அதிகம். பூச்சிகளைக் கொல்வதற்கு என்று நஞ்சு தெளித்த போது நன்மை செய்யும் பூச்சிகள் மடிந்தன.பறவைகள் மறைந்தன. ஆகவே பூச்சி கொல்லி தெளிப்பதாலேயே பெருகுகின்றன" என்று விளக்கம் தருகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் முன்வைக்கும் இயற்கை வேளாண்மை திட்டத்தை, ஒட்டுமொத்த இந்தியாவும் பயன்படுத்த வேண்டிய தருணம் இப்போது வந்து இருக்கிறது. ஆனால், அவரது இந்த திட்டங்களுக்கு நம் தமிழக அரசே ஒத்துழைக்காதது அநியாயம் ஆகும்.

173 நாடுகள் கூடிய மாநாட்டில், என்டோசல்பானின் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை சுட்டிக்காட்டி, இந்த பூச்சிகொல்லி மருந்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று விவாதம் எழுந்த போது, என்டோசல்பானை தடை செய்ய கூடாது என்று வாதிட்டு அனைவரையும் கவர்ந்த(?) ஒரே ஒரு நாடு....விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட நமது இந்தியா என்னும் செய்தியை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

சர்வதேச நிறுவனமான என்டோசல்பானிடம் இருந்து, 'முக்கியமானவர்களுக்கு' 'பொட்டி' போய்விட்டதோ என்றே நினைக்க தோன்றுகிறது. இந்தியாவின் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் நாட்டு மக்களை பற்றி உண்மையான அக்கறை இல்லை. தொலைநோக்கு பார்வை என்பது இவர்களுக்கு கூட்டணி அமைப்பதில்தான் இருக்கிறது. தங்கள் 'பாக்கெட்டுகள்' நிரம்பினால் போதும் என்று வாழும் அரசியல்வாதிகள், பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட மோசமானவர்கள்.

என்டோசல்பானை தயாரிக்கும் ஐரோப்பிய நாடுகள் தங்களது நாடுகளில் ,அதன் பயன்பாடுகளை நிறுத்திவிட்டு, அதே சமயம் என்டோசல்பானை தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்து இருக்கும் கொடுமையை எப்போது இந்தியா உணரப்போகிறது? எப்போது நாம் உணரப்போகிறோம்?

செய்தி # 2

சுனாமி தாக்குதலை தொடர்ந்து,ஜப்பான் நாட்டில் உள்ள அணு உலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உலகின் மிக சிறந்த தொழில்நுட்பத்தை உடைய ஜப்பானால் கூட, அணு உலைகளில் இருந்து கசிந்து வரும் கதிர்வீச்சை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அங்கு ஜப்பானிய பெண்களின் தாய்ப்பாலில் கூட, கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதை கண்டு அறிவியல் அறிஞர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

இந்த தருணத்தில், சுவிசர்லாந்து,ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் புதிதாக தொடங்கவிருந்த அணு உலை திட்டங்களை உடனே நிறுத்திவிட்டன.

ஆனால்,எந்தவித கட்டமைப்பு மற்றும் ஜப்பானை போன்று நவீன பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாத, நமது இந்திய அரசு ஒரு புதிய அணுஉலை தொடங்கும் திட்டத்தை துவங்கி இருக்கிறது.

ஜைடாபூர் அணு உலை திட்டம் - மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்து உள்ள ஜைடாபுரில், சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த திட்டத்திற்கு ஒதுக்கி உள்ளது இந்திய அரசு.

இப்பகுதி, கொய்னா என்னும் பகுதி, பூகம்பம் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு, அதற்க்கான வாய்ப்புகள் இல்லாத இடமாக இருக்கிறது என்று அறிவித்து இருக்கிறது Atomic Energy Regulatory Board (AERB) .

அதற்க்கான அளவீடுகளாக, இந்த ஆராய்ச்சி நிறுவனம் சில அறிவியல் ஆதாரங்களை வழங்கி உள்ளது.

Latitude of JNPP site: 16° 34’ 38” N to 16° 36’ 29” N

Longitude of JNPP site: 73° 19’ 02” E to 73° 20’ 48” E

மேற்கண்ட இந்த அளவுகளால், பூகம்ப மற்றும் இயற்கை சீரழிவுகள் இல்லாத பகுதியாக இயற்கையாகவே அமைந்து இருக்கிறது இப்பகுதி என்கிறது இந்திய அரசு.

ஒரு யூனிட்டுக்கு 1650 மெகாவாட் என்ற கணக்கில், ஒரு நாளைக்கு 36 - 39 மில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த ஜைடாபூர் அணு உலை.இதை போன்று 1650 மெகாவாட் திறன் கொண்ட ஆறு ரியாக்டர்கள், 250 - 300 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட போகின்றன.

இந்த அணு உலை "PWR-type" என்னும் உரேனியம் மூலப்பொருளாக பயன்படுத்தபட போகிறது. இது, International Atomic Energy Agency (IAEA)/Atomic Energy Regulatory Board (AERB) ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கிறது.

இந்த திட்டத்தின் பயன்களாக பின்வருவனவற்றை அறிவித்து இருக்கிறது அரசு, வழக்கமான விஷயங்கள்தான்.

இதன் மூலம், நாட்டின் மின்சார பற்றாக்குறையை தீர்க்க முடியும்.

பல்லாயிரம்பேருக்கு இதன் மூலம் நேரடியாகவோ,இல்லை மறைமுகமாகவோ வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த அணு உலையை சுற்றி உள்ள பகுதிகள் பெரும் தொழில் வளம் பெருகும்.

இந்த திட்டத்திற்கு, ஜப்பானை முன்னுதாரணமாக காட்டி, முன்னாள் அணு ஆராய்ச்சியாளர்கள், சமுக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பாதுக்கப்பற்ற அணு உலை என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

மிக முக்கியமாக ,மக்கள் பிரச்சினை ஒன்று முழு பூசணிக்காயாக மறைக்கப்படவிருக்கிறது.

இந்த திட்டத்தால்,ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் தங்களின் வசிப்பிடங்களை காலி செய்யும் கட்டாயம் ஏற்ப்பட்டு இருக்கிறது.

இதனால், அப்பகுதி மக்கள் முழுவதும் இந்த திட்டத்திற்கு, மத்திய அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்களை தொடங்கி இருக்கிறார்கள்.

ஆனால், மக்களின் கோரிக்கைகளை கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் முழுவீச்சில் இறங்கி விட்டது.

ஆனானப்பட்ட ஜப்பானே, அணுஉலை திட்டங்களால் பெரும் அழிவை சந்தித்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு பெற்ற நாடுகள் எல்லாம் தங்களின் அணுஉலை திட்டங்களை கைவிட்டு விட்டன.

இந்த தருணத்தில்,ஜைடாபூர் அணு உலை திட்டம் தேவையா?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டில் அணுஉலைகளை திறந்தால் ஏற்ப்படும் ஆபத்துக்களை உணர்ந்து, குறைந்த முதலீட்டில் அவற்றை செயல்படுத்த தேர்வு செய்து இருக்கும் நாடுதான்...நமது இந்தியா. இந்த ஜைடாபூர் அணுஉலை திட்டத்திலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த AREVA என்ற நிறுவனம் முதலீடு செய்து உள்ளது.

ஏன், பிரான்ஸ் நாட்டில் இந்த அணு உலை திறக்க இடமில்லையா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மகராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு எதிராக, Fax, E-Mail மூலம் லட்சக்கணக்கான சமுக ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு, அப்பகுதி மக்களோடு விவாதிக்காமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துவிட்ட மத்திய அரசுக்கு நமது எதிர்ப்பை நாமும் தெரிவிப்போம்.

(நன்றி...இனி,அடுத்தவாரம்)

-இன்பா

Read More...

Saturday, May 07, 2011

நோ கமெண்ட்ஸ்



( நன்றி: துக்ளக்)

Read More...

Friday, May 06, 2011

கனிமொழி

இன்றைய தினம் மீடியா கனிமொழி மீது தான். அவருடன் யார் வந்திருக்கிறார்கள், என்ன டிரஸ் என்று எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். துக்ளக் பத்திரிக்கையிலிருந்து சில பகுதிகள்

நமக்கு ஸி.பி.ஐ.யின் நோக்கங்கள் பற்றிய சந்தேகம் தொடர்கிறது. சாதாரணமாக பணம் பாதாளம் வரை பாயும் என்றால், ஊழல் பணம் மலை உச்சி நோக்கி செல்லும்; பெரியவர்களுக்கு பங்கு இல்லாமல், பெரிய ஊழல்கள் நடைபெறாது என்பது, இந்தியப் பொருளாதாரத் தத்துவம். ஆகையால், ஸ்பெக்ட்ரம் ஊழல் பங்கு, மேலே எவ்வளவு தூரம் வரை போகிறது என்பதைப் பொறுத்துத்தான், ஸி.பி.ஐ. விசாரணையின் தன்மை அமையும் என்பது நம் கருத்து.

இப்போது கனிமொழி மீது வந்திருக்கிற குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிற காரணங்களில் சில, வினோதமாக இருக்கின்றன. ‘ராசாவை இவர் அடிக்கடி சந்தித்தார்; இவருக்கு கலைஞர் டி.வி.யின் செய்திகளில் முக்கியத்துவம் தரப்பட்டது...’ என்றெல்லாம் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை எதை நிரூபிக்கப் போகின்றன? கனிமொழி 2-ஜி சதியில் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டையா? எப்படி? நமக்குப் புரியவில்லை.

போகப் போக, இவ்வழக்கில் காட்டப்படுகிற ஆதாரங்கள், ஒருவேளை குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கிற வகையில் அமையலாமோ, என்னவோ! இப்போது குற்றப் பத்திரிகையில் கூறப்படுவதுதான் ஆதாரம் என்றால், அது தமாஷாகத்தான் முடியும்.

குற்றப் பத்திரிகையில், கலைஞரின் மனைவியின் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்பது பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது. சரி; புரிகிறது. ஆனால் அதே சமயத்தில், ‘கலைஞர் மீது நடவடிக்கை உண்டா, இல்லையா’ என்பது, ஏன் ஒரு கேள்வியாகக் கூட கருதப்படவில்லை என்பது புரியவில்லை. கிரிமினல் சட்டப்படி, ஒருவரால் அவருடைய மனைவிக்கோ, குமாஸ்தாவிற்கோ, வேலைக்காரனுக்கோ கூட... சொத்து கிடைத்திருந்தால், அது, அவருடைய சொத்தாகவே கருதப்படும்.

ஒருவர், பொது வாழ்க்கையில் இருக்கிறபோது, இந்தப் பொறுப்பு இன்னமும் கூடுகிறது. கலைஞர், பொது ஊழியர். கலைஞர் சேனலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று கலைஞர் கூறியது, அப்படியே ஏற்கப்பட்டதா? அல்லது, அவருடைய மனைவி, மகள் போன்றோரின் பெய ரில் இருப்பது, அவரால் கிட்டியது என்பதால், இவ்விவகாரத்தில் அவருக்கு உள்ள பொறுப்பு விசாரிக்கப்படுகிறதா?

ஸி.பி.ஐ., இந்த விவகாரத்தில் பலன் அடைந்தவர்கள் பட்டியலில் அவர் பெயரையும் இணைத்தால், ‘அப்படி தான் பெற்ற பயன் அல்ல அது’ என்று நிரூபிப்பது, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி கலைஞர் பொறுப்பாகுமே? இந்த ரீதியில் ஸி.பி.ஐ. சிந்திக்கவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? நமக்குப் புரியவில்லை. நமது சந்தேகங்கள் தொடர்கின்றன; இந்த வழக்கில், சட்டத்தை விட, அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக நமக்குத் தோன்றுகிறது.


கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜர் ஆகிறார். இவர் தான் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

Read More...

Thursday, May 05, 2011

டமிலன் டச்

Read More...

Monday, May 02, 2011

சாமாவை முடித்த பாமா!



10. 3. 1957 - 1. 5. 2011
ஆண்டவன் சொல்றான் ஒபாமா முடிக்கிறான்
இந்தியாவிற்கு ஒரு ஒபாமா பார்சேல்..

Read More...