பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 30, 2010

மண்டேனா ஒன்று - 30/8/2010 - கலைவாணி !

இக்கட்டுரையாசிரியரின் கூற்றுப்படி, தற்பெருமைக்கும் தன்னகந்தைக்கும் முன்பாக விநயத்தையும், படிப்பினையையும் உண்டாக்குவதாக அமைந்துள்ளது இக்கட்டுரை. ஆசிரியர் ஒவ்வொரு முறையும் இந்தியா வரும்பொழுதும், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கடைக்கு விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த உண்மைச் சம்பவம், தன்னைப் பற்றி உயர்வான அபிப்ராயம் உடைய எவரையும் விநயம் கொள்ளச் செய்யும். இக்கட்டுரையின் மூலம், இதனைப் படிப்பவர்களுக்கு பின்வரும் இரண்டு படிப்பினைகள் கிட்டக்கூடும்.

*எவற்றையும் கண்மூடித்தனமாக அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

*எவற்றையுமே நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பணிபுரியும் பத்திரிக்கையாளனான நான் பாரிஸ் ஹில்டன் முதல் ஓபரா வின்ஃப்ரே வரை ஏராளமான புகழ்பெற்ற மனிதர்களை பேட்டி காணும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கிறேன். ஆயினும், மயிலை கற்பகாம்பாள் கோயில் அருகில் இருக்கும் கலைவாணி என்ற பெண்ணை பேட்டி கண்ட அனுபவம் மிகவும் அலாதியானது. வாருங்கள் என்னுடன்!! இந்த அற்புதமான பெண்ணுடன் சில நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

செப்டெம்பர் 2008 இல், நானும் எனது மனைவி பத்மாவும் முடிந்தவரை மயிலையில் எங்களது நேரத்தை செலவிடுவது என முடிவு செய்து கொண்டோம். ஆகவே மயிலை கோவிலுக்கருகே ஒரு அபார்ட்மெண்டை எடுத்துக் கொண்டோம்.

ஒரு நாள் நாங்கள் சில வேத புஸ்தகங்களையும் , கேஸட்டுகளையும் வாங்கத் தீர்மானித்தோம். அவ்வாறுதான் கலைவாணியுடனான எங்களது சந்திப்பும் நிகழ்ந்தது.

வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் என்னுடைய ஞானம், சங்கரர் மற்றும் விவேகானந்தரின் ஆழ்ந்த கருத்துக்களில் பொதிந்துள்ள சாரத்தை மறுத்து தங்களின் பிறப்பின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து வாழும் மாட வீதி மானிடர்களை விடவே சற்று அதிகம். ஒரு சமயம், பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற ஒரு உபந்யாஸத்தில் கலந்து கொள்ள நேரிட்டது. அங்கே கோதா வெங்கடேச சாஸ்திரிகள் "தத்வ போதத்தின்" அழகை விவரித்துக் கொண்டிருந்தார். அதுவே ஆதி சங்கரரின் ஆச்சர்யம் மிகுந்த அருளிச்செயல்கள் மீது எனது மனத்திற்கு நாட்டத்தை ஏற்படுத்தியது. கோவிலில் தரிசனத்திற்குப் பின், "கிரி ட்ரேடிங் கம்பெனி"யினுள் வியாபித்து, தத்வ போதம் தொடர்பான புஸ்தகத்தைத் தேடத் துவங்கினேன்.

அங்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் பல்வேறு வகையான புத்தகங்களையும், சிடிக்களையும் வாங்குவதைக் கண்டோம். பஜன்கள் முதல் பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரிகள் வரை பல்வேறு சிடிக்களை அவர்கள் சேகரம் செய்ததைக் கண்டதும், நாங்கள் சரியான இடத்திற்கே வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தோம்...

நான் தத்வ போதத்தைத் தேடிக் கொண்டிருக்கையில், எனது மனைவி பாரதியார் பாடல்களையும், எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியின் கேஸட்டுகளையும் சேகரிப்பதில் மூழ்கியிருந்தாள். நான் இந்தப் புத்தகத்தை அநேகமாக எல்லா இடங்களிலும் தேடினேன்....

அங்குதான் அப்பெண் கலைவாணி நின்று கொண்டிருந்தாள் . காஷியருக்கு அருகே நின்று கொண்டு, எங்களது அனைத்து நடவடிக்கைகளையும் அமைதியாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். சற்றே அடர்ந்த கருமையான நிறம் கொண்டவள், அருகிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம், 17 அல்லது 18 வயது நிரம்பிய பெண், அதிகபட்சமாக எட்டாம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க முடியாது. வறுமையின் காரணமாக அவள் இங்கு வேலை செய்பவளாக இருக்கலாம்...என்னுடைய பத்திரிக்கையாள மூளை தேவையில்லாமல் இப்பெண்ணைப் பற்றிய கணக்கீடுகளில் மூழ்கியிருந்தது...அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாலும், நான் அவளை அலட்சியப்படுத்தி விட்டு, தத்வ போதத்தை தேடுவதில் கவனம் செலுத்தினேன்.

சந்த்யா வந்தனம் முதல் ஸ்வாமி விவேகானந்தரின் சிகாகோ உரை வரை பல புத்தகங்கள் என் கண்ணில் பட்டன. ஆனால் சுமார் 40 நிமிடங்களைச் செலவழித்த பிறகும் நான் தேடியது கிடைக்கவே இல்லை. நான் அவளைக் கவனித்தேன்...என்னையே மிகவும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்...

நான் அவளைக் கேட்டேன், அப்பேர்பட்ட பெண்ணிற்கு சாதாரணமாக எதுவுமே தெரிந்திருக்க முடியாது என்ற எண்ணத்தில், தத்வ போதத்தை விடுங்கள்.

"ஸார், நான் தங்களுக்கு உதவலாமா?"

"நான் தத்வ போதத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்"

"தேவநாகரியிலா அல்லது ஆங்கில மற்றும் தேவநாகரி மூலத்திலா?"

"கடவுளே, இவளுக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்கலாம் போலும், தேவநாகரி மற்றும் ஆங்கில மூலத்தில்"

"சின்மயா மிஷன், ஹிந்து பப்ளிகேஷன்ஸ், ராமக்ருஷ்ண மடம் இவற்றில் எவற்றின் பதிப்பை வாங்க விரும்புகிறீர்கள்?"

"தெரியவில்லை.....அவ்வளவாக அது பற்றி எனக்கு அபிப்ராயமேதுமில்லை...அடிப்படையாக அதைக் கற்கவே விரும்புகிறேன்"

"நீங்கள் தமிழ் படிப்பீர்களா?"

"நான் தமிழந்தான்"

நான் பெரும்பாலும் எவ்வாறு பல இடங்களில் தமிழன் அல்லாதவன் போன்று நடித்திருக்கிறேன் என்பதை என்னுள்ளேயே எண்ணிக் கொண்டேன்)

"அப்படியானால் நீங்கள் இதையே எடுத்துக் கொள்ளலாம்.....என்று நான் எந்த இடத்தில் சற்றொப்ப அரை மணிநேரமாகத் தேடிக் கொண்டிருந்தேனோ அதே அடுக்கிலிருந்தே ஒரு புத்தகத்தை லாவகமாக உருவி என்னிடம் கொணர்ந்து கொடுத்தாள்.

இந்த புத்தகம் என். சிவராமன் என்பவரால் எழுதப்பட்டது, ஹிந்து பப்ளிகேஷன்ஸ் வெளியீடு. மிகவும் எளிமையானதும், கருத்தாழம் மிக்கதுவும் கூட. தேவநாகரி எழுத்துக்களிலும் கூடவே கொடுக்கப்பட்டுள்ளது இப்புத்தகத்தில் என விளக்கினாள்.

"அடக் கடவுளே, இவ்வளவு அறிவுக் கூர்மையுடைய இப்பெண்ணை நான் எதனால் குறைத்து மதிப்பிட்டேன்? நான் ஒரு என் ஆர் ஐ என்ற அகந்தையினாலா? அல்லது அவள் மிகவும் அப்பாவியாக, கருமையான நிறத்துடன் தோற்றமளித்ததாலா? அல்லது தனது ஏழ்மையினால் இப்பணியை ஏற்றிருக்கும் இப்பெண்ணிற்கு தத்வ போதம் பற்றி எதுவும் தெரிந்திருக்காது என்ற என்னுடைய அறியாமையினாலா?"

நான் என்னுடைய குணாதிசயத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென எண்ணிக் கொண்டேன். இவ்வளவு அற்புதமான பெண்ணிற்கு முன் நான் எவ்வளவு அடிமுட்டாளாக நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அத்தருணத்தில் உணர்ந்து கொண்டேன்.

"மேடம், நேற்றுவரை தத்வ போதத்தை யார் எழுதினார்கள் என்று கூடத் தெரியாமலிருந்தேன். தற்செயலாக தத்வ போதம் தொடர்பான ஒரு சொற்பொழிவை பாரதிய வித்யா பவனில் கேட்டதன் மூலம் ஏற்பட்ட உந்துதலினால்.....

"பாரதீய வித்யா பவனில், கோதா வெங்கடேஸ்வர சாஸ்திரியின் சொற்பொழிவில் கலந்து கொண்டீர்களா?"

"நான் மிகுந்த அதிர்ச்சியுடன், கடவுளே....அது உனக்கெப்படித் தெரியும்? "

"வழக்கமாக இவர்தான் இது தொடர்பான சொற்பொழிவுகள் ஆற்றுவார். தவிர இந்நகரிலேயே இவர்தான் சிறந்த முறையில் தத்வ போத சொற்பொழிவாற்றுபவர்" என்றாள்.

"ஆமாம்! விவேகானந்தர், ராமக்ருஷ்ணர் மற்றும் தத்வ போதம் தொடர்பாக நிறைய படித்திருக்கிறேன். தவிர, தற்செயலாக தத்வ போதம்தான் எனக்கு மிகுந்த விருப்பமானதுவும் கூட."

"நீ தத்வ போதம் படித்திருக்கிறாயா?"

"நான் என்.சிவராமன் எழுதிய இப்புத்தகத்தைப் படித்திருக்கிறேன். நீங்கள் ஒருமுறை இப்புத்தகத்தைப் படிக்கத் துவங்கினால் கீழே வைக்கவே மனம் வராது" என்றாள்.

"ஏன்? அப்படி என்ன இப்புத்தகத்தில் சிறப்பு?"

"சார், நீங்கள் ஏதோ தத்வ போதம் பற்றித் தெரியாதவர் போல் என்னிடம் கேலி செய்கிறீர்கள்"

"இல்லை நிஜமாகவே தெரியாது என எனது அறியாமையை ஒப்புக் கொண்டேன்"

"எனது மனைவி தான் சேகரித்த சிடி தொகுப்புகளைப் பற்றிய பெருமிதத்துடன், ஒரு மூலையிலிருந்து எங்களுடைய சம்பாஷனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்."

"சார், என்னைப் பொருத்தவரை இப்புத்தகம் மொத்த வேதத்தின் சாராம்சத்தையும் அப்படியே தருகிறது. ஒருவர் தன்னிடமுள்ள அகங்காரம் அத்தனையும் விட்டொழித்துவிட்டு மிகுந்த விநயமுடையவராகி விடுவார்."

"உண்மையாகவே வெறுமனே இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அப்படியான விநயமுடையவர்களாகி விடுவார்களா?"

"இந்த எழுத்துக்களை மிகுந்த அற்பணிப்புணர்வுடனும், ஈடுபாட்டுடன் படிப்பவர்கள் கண்டிப்பாக பக்குவமடைவார்கள்... மிகுந்த ஈடுபாடும், கடமையுணர்ச்சியும் தேவை."

"இப்பெண்ணின் அஸாத்ய புத்திக் கூர்மையை உணர்ந்த என்னுடைய மனைவியும் எங்களுடைய சம்பாஷணையில் கலந்து கொண்டாள். அதனால் அவள் என்னிடம், " நீங்கள் ஏன் வாஷிங்டன் போஸ்டிற்காக இப்பெண்ணை பேட்டி காணக் கூடாது? ஏன் பாரிஸ் ஹில்டன்களை மட்டுமே காண்கிறீர்கள்? என்று கேட்டாள். நானும் அப்பெண்ணிற்கு ஏதோ கடமைப் பட்டவனாக உணர்ந்தேன். எனவே அவளிடம், நேர்காணலுக்காக சிறிது நேரத்தை ஒதுக்க முடியுமா என்று கேட்டேன்...."

"முதலில் இதற்கு என்னுடைய முதலாளி அனுமதிக்க வேண்டும். தவிர, உங்களைப் போன்ற வாடிக்கையாளர்கள் பலருக்கும் என்னுடைய உதவி தேவைப்படும் எனக் கூறி அமைதியாக மறுத்தாள்."

"உன் பெயர்தான் என்ன?"

"கலைவாணி!!"

"அவளுடைய பணியின்பாற்பட்ட பக்தி மற்றும் ஈடுபாடு இவையனைத்தும் எனது மனைவியை அவளிடம் பெருமை கொள்ளச் செய்தது மட்டுமல்லாமல், நேரிடையாக அவளது முதலாளியிடமே செல்லச் செய்தது....சார், அந்தப் பெண் கலைவாணி...

"ஆமாம், கடின உழைப்பாளி"

"இவர் என்னுடைய கணவர் விஷ்வநாத்"

"உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி"

"இவர் வாஷ்ங்டன் போஸ்டில் சீனியர் பத்திரிக்கையாளர்..."

"வாஷ்ங்டன் போஸ்ட்? என கடை உரிமையாளர் எழுந்து விட்டார்."

"ஆமாம், சார் நான் இந்தப் பெண்ணை பேட்டி காண விரும்புகிறேன்...இவளது புத்திக் கூர்மையும், பண்பும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது."

"கடை உரிமையாளர் அவளை அழைத்தார்....அப்போது நேரம் மாலை 5.45."

"கலைவாணி, இவர்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்கள். உன்னுடன் சிறிது நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்."

"சார், இது கூட்டமான நேரம், நிறைய வாடிக்கையாளர்கள் உதவிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களால் முடியுமானால் நாளை வரலாம்."

"ஓகே, ஓகே என்னால் நாளை வர முடியும்."

"மறுதினம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுடன் எனக்கு இருந்த சில சந்திப்புகளை ஒத்தி வைத்து விட்டு இப்பெண்ணைப் பார்ப்பதற்கென்றே வந்தேன்."

"கலைவாணி ஆற்காடு அருகிலிருக்கும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண். அவளுடைய ஐந்து சகோதரிகளில் இவளே மூத்தவள். இவளுடைய தகப்பனோ பெரும் குடிகாரர். யாரைப் பற்றிய கவலையுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டிருக்கிறார். கட்டிட மேஸ்திரியிடம் உதவியாளாக வேலை செய்த இவரது தாயாரும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இந்த ஆறு பெண்களையும் தெருவில் நிர்க்கதியாக விட்டு இறந்துவிட்டார்."

"ஒன்பதாம் வகுப்பே முடித்திருந்த இப்பெண் தனது ஐந்து சகோதரிகளையும் உடனழைத்துக் கொண்டு சென்னை வந்து விட்டார். இங்கு வந்து வேலை தேடிய இவருக்கு கிரி ட்ரேடிங் கம்பெனி உதவ முன்வந்திருக்கிறது. இவருடைய ஐந்து சகோதரிகளையும் தன்னுடைய சொற்ப வருவாயில் படிக்க வைக்கிறார். அவர்களனைவரும் அருகிலுள்ள கார்பரேஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்."

"கலைவாணி, தத்வ போதத்தைப் பற்றிப் படிக்கும் ஆர்வம் உனக்கு எப்பொழுது, எவ்வாறு ஏற்பட்டது?"

"இங்கு சேர்ந்த பிறகு, வாடிக்கையாளர்கள் விரும்பும் விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால்தான் அவர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் விவேகானந்தர் எழுதிய சிறிய புத்தகங்களை முதலில் வாசிக்கத் துவங்கினேன். அவை என்னை மிகவும் கவர்ந்த படியால், மேலும் தமிழிலுள்ள பகவத் கீதை, விவேக சூடாமணி போன்றவற்றையும் படித்தேன்...பிறகு இவ்வாறாக...

"உன்னுடைய சம்பளம் எவ்வளவு?"

"2500 ரூபாய்"

"இந்த சொற்ப வருவாய்க்குள் உன்னுடைய எல்லா தேவைகளையும் ஈடு செய்ய முடிகிறதா?"

"இல்லை சார். ஆனால் என்னுடைய முதலாளி எனக்கு நிறைய உதவுகிறார்."

"வாழ்க்கையில் உனது நோக்கம் என்ன?"

"என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் நல்ல கல்வியை அளிக்க வேண்டும். அப்போழுதுதான் அவர்களை நல்ல பணியில் அமர்த்த முடியும்."

"நான் உனக்கு மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் அளித்தால், உன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அது போதுமானதாக இருக்குமா?"

"அது சற்றே அதிகம்தான். ஆனால் நான் எதையுமே என்னுடைய முதலாளியின் வாயிலாகத்தான் ஏற்றுக் கொள்வேன்"

"எனவே நாங்கள் அவளை அவளது கடை உரிமையாளரிடம் அழைத்துச் சென்று, நாங்கள் மாதா மாதம் அவளது சகோதரிகளின் படிப்புச் செலவிற்காக பத்தாயிரம் ரூபாய் அளிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தோம்."

"அவள் அதற்குத் தகுதியானவள்தான். நீங்கள் என்னை நம்பி என்னிடம் மாதா மாதம் பணத்தை அனுப்பி வைக்கலாம்; நான் அதனை அவளிடம் சேர்ப்பிக்கிறேன். அல்லது நீங்கள் அவளது பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் துவக்கி அதற்கே அனுப்பி வைக்கலாம்" என்று யோசனை கூறினார்.

என்னுடைய நண்பர் ஜான் பால், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மண்டல மேலாளரும் என்னுடன் வந்திருந்தார். என்னுடைய இச்செயலுக்காக தன்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்தார். என்னுடைய மனைவி, " கலைவாணி வேத வேதாந்தங்களில் தேர்ச்சியுற்று அமெரிக்காவில் பல சொற்பொழிவுளை ஆற்ற வேணுமென்று கற்பகாம்பாளை வேண்டிக் கொள்கிறேன்" என்று கூறினார். மேலும் அத்தகைய சொற்பொழிவுகளுக்கும் நாங்களே ஏற்பாடும் செய்து தருவோம்.

"நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றோம். இன்னமும் பீஹார் மற்றும் பாரக்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்றால் இது போன்று இன்னும் எத்தனை ரத்தினங்கள் கிடைக்குமோ?"

"நாங்கள் மிகவும் விநயமுடையவர்களானோம்."


ஆங்கில கட்டுரையை எனக்கு மெயிலில் அனுப்பிய சங்கருக்கும், அதை உடனே மொழிபெயர்த்த யதிராஜுக்கும் நன்றி.

Read More...

Sunday, August 29, 2010

அடடே.....உலக தலைஞர் !


(நன்றி: தினமணி, மதி - அடடே .. )

கீழே நன்றி முரசொலி, கல்கி இருக்கிறது :-)



இந்த விழாவிற்கு வருகின்ற நேரத்தில், காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரி கையிலே ஒரு விகடத் துணுக்கு. என்ன விகடத் துணுக்கு என்றால் - "கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப் பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்" என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு. அந்தப் பத்திரிகையைப் படித்தவர் கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக் கூடும். "அடடே .....!" என்ற தலைப்பில் வெளி வந்து ள்ளது இது.

என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு

பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத் திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?

அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியா விலே பிரிதிவி ராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர். மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர். நானும் மறைந்த நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், அவருடைய சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி அவர்களும் மைசூரில் "நாம்" திரைப்படத் திற்காக சென்று பணியாற்றிக் கொண்டிருந்த போது - மைசூரில் பிரிதிவி ராஜ் கபூரின் நாடகம் "பதான்" என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதைக் காண நாங்கள் சென்றிருந்தோம். பிரிதிவி ராஜ் கபூர் நடித்தார். அவர் பல படங்களில் நடித்தார். "அக்பர்" அவர் நடித்த படம் தான். நீங்கள் கண்டிருப்பீர்கள். நாங்கள் பார்த்த "பதான்" நாடகத்தில், முக்கிய வேடத்தில் அமர்ந்திருக்கும் அவர், தன்னுடைய மனைவியை அழைத்து இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது - வாய் நிறைய தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டு - சிரிப்பு வந்த காரணத்தால் அடக்க முடியாமல், அதை படுக்கை அறையிலேயே துப்புவார். அந்தக் காட்சியை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் அந்தத் தியேட்டரே அதிரக் கூடிய அளவிற்கு கையொலி செய்து வரவேற்பார்கள். அதை அவ்வளவு பெரிய நடிப் பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு - அவ்வளவு பெரிய மகத்தான நடிகர் பிரிதிவி ராஜ் கபூர் - அவருடைய மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்கள வையிலே உறுப் பினராக இருந்தவர் அல்லவா? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசீ கபூர் அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரந்தீவ் கபூர் இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ள வில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை.

ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே - மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம் - என்னு டைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த்; - அவர் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது. ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடு பட்டுக் கொண்டிருக் கிறான், அவன் திராவிடச் சமுதாயத் திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். (கைதட்டல்) என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது, நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். நான் ஏதோ அவர் மீது கோபத் தாலோ, பொறாமையாலோ இதைச் சொல்லவில்லை.

ரஜினி காந்த் அரசியலிலே முழுக்க முழுக்க இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள். நான் அரசியலிலே முழுக்க முழுக்க இருக்கின்ற காரணத்தால், கலைத் துறையிலே எனக்கு இருக்கின்ற ஈடுபாடு தான் காரணம் என்று சொன்னால், என்னைப் போன்ற அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள், கலைத் துறை நண்பர் களை எப்படி நேசிக்க முடியும்? கலைத் துறையிலே எப்படி தொடர்பு கொள்ள முடியும்? கலைத்துறையிலே உள்ள யார் எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல், நட்புணர்வும், நேச உணர்வும் கொண்டிருக் கின்ற காரணத்தால் தான் தம்பி பாரதிராஜா இங்கே சொன்னதைப் போல இன்று நேற்றல்ல - ஆண்டாண்டு காலத்திற்கும் அவர்கள் என்னை நினைக்கின்ற அளவிற்கு - நான் அவர்களை நினைக்கின்ற அளவுக்கு அந்த இனிய தொடர்பு எங்க ளிடத்திலே இழைந்தோடிக் கொண்டிருக்கின்றது. அதை யாரும், எவரும் எந்த வகை யிலும் தடுக்க முடியாது என்பதையும் அப்படி தடுக்க முடியாது என்பதற்கு பலமான சுவராகத்தான் பையனுhரில் 15 ஆயிரம் பேருக்கான வீடுகள் கட்டப்பட்டு, திறக்கப்பட வுள்ளன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
( நன்றி: முரசொலி, 23/8/2010 )

கலைஞர் குடும்பத்தின் சினிமா துறை ஆதிக்கம் பற்றி தினமணியில் மதியின் கேலிச்சித்திரம், கலைஞர் கருணாநிதிக்கு எரிச்சலாகிவிட்டது. பிருத்விராஜ் கபூரின் குடும்பத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் நடிக்கவில்லையா? சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் நடிக்கவில்லையா? ரஜினியின் மருமகனும் மகள்களும் சினிமாவில் ஈடுபட வில்லையா ? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலா நிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது என்று பொரிந்திருக்கிறார்.

நண்பர் மதி, கலைஞர் சொல்லும் குறுக்கே போடும் நூலான பூணூலைப் போட்டிருப்பவர் அல்ல. விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொ ல்ல முடியாத போதெல்லாம் பூணூலில் சரணடைவது கருணாநிதியின் வழக்கம். கலைஞர் குடும்பத்தில் இனியும் பிறக்கக்கூடிய அன்புநிதி, பண்புநிதி, குணாநிதி, தமிழ்நிதி, தேன்மொழி, கவிமொழி, லெனின், ஜீவா என்று யாரானாலும் சினிமாவில் ஈடுபடட்டும். நமக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. இந்த நிதிகளுக்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது என்பதுதான் தமிழ் மக்களின் கவலை.

கல்லூரிப் படிப்பை முடித்ததுமே பல கோடி ரூபா பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வல்லமை கலைஞர் குடும்பத்தில்தான் இருக்கிறதே தவிர, பிருத்விராஜ் கபூர் குடும்பத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை. போட்டி கம்பெனிகளின் கேபிள்களை வெட்டிப் போட்டு அராஜகம் செததற்காக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செயப்படவேண்டுமென்று கபூர் குடும்ப வாரிசுகள் யாருக்கும் எதிராக எந்த அரசு அதிகாரியும் பரிந்துரை எழுதும் அவலம் நிகழவில்லை.


ஒரு படத்தின் ரிலீஸ் தேதி, எந்தெந்த தியேட்டரில் எத்தனை நாள் என்பதையெல்லாம் கட்டுப்படுத்தி முழு திரையுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தில் எந்தக் கபூரும் இருந்ததில்லை. திரையுலக சங்கத் தேர்தல்களில் ஜெயித்த அணியை மிரட்டி, தோற்றதாகக் கையெழுத்து போடச் சொல்லி தன் ஜால்ராக்களைப் பதவியில் உட்காரவைக்கும் வேலையை ஒரு கபூரும் செததில்லை.

கலைஞர் கருணாநிதி இப்போதெல்லாம் வசனம் எழுதும் ஒரு படம் கூட மக்கள் ஆதரவைப் பெற்று அமோகமாக ஓடுவதில்லை. ஆனால் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்துக்கு வசனத்துக்காக 50 லட்ச ரூபா சம்பளம் அவருக்கு மட்டும் தரப் படும் மர்மம், எந்தக் கபூருக்கும் புரியவே புரியாது. ராஜ்கபூரின் வசனகர்த்தா கே.ஏ.அப்பாஸ் முதல் இன்று வசூலைக்குவிக்கும் படங்களின் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி வரை யாருக்கும் இப்படிச் சம்பளம் கிடைத்ததில்லை.

பரம்பரை மிராசுதாரரான ஜி.கே வாசனின் அறிவிக்கப்பட்ட சொ த்து மதிப்பு மூன்று கோடி 78 லட்சம். எந்த சினிமாவுக்கும் கதை வசனம் எழுதி ஒரு நாளும் சம்பாதிக்காத கனிமொழியின் சொத்து எட்டுக் கோடி 56 லட்சம்; அழகிரியின் சொத்து மதிப்பு 19 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருப்பதன் மர்மங்கள் கபூர்களுக்குத் தெரியாது. கபூர்கள் முழு நேரம் நாடகமேடையில் நடிகர்களாக உழைத்து சினிமாவுக்கு வந்து ¦º¡ந்தக் காசில் ஜெயித்தவர்கள். அரசியலுக்காக சினிமாவையும், சினிமாவை ஆதிக்கம் செöய அரசியல் அதிகாரத்தையும் கலைஞரும் அவர் வாரிசுகளும் பயன்படுத்துவதால்தான் விமர்சனங்கள் எழுகின்றன. இனியும் எழும்.

இனி இந்தக் குறுக்கே நூல் போடும் விவகாரத்துக்கு வரலாம். கலைஞர் கருணாநிதியின் கணக்குப்படி தமிழகத்தில் பூணூல் போடும் பார்ப்பன சாதியினரின் எண்ணிக்கை மூன்று சதவிகிதம்தான். ஆனால் மொத்த வாக்காளர்களில் கலைஞர் கருணாநிதியை ஆதரித்து வோட்டுப் போடுபவர்கள் எப்போதும் சுமார் 25 சதவிகிதம்தான். மொத்தப் பூணூலார் மூன்று சதவிகிதம் பேரும் எதிர்த்ததாக வைத்தாலும், கருணாநிதியை விரும்பாத இதரர் 72 சதவிகிதம். மக்கள் இன்னமும் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டுதான் வோட்டுப் போடுகிறார்கள். ஜாதி அடிப்படையில் மட்டுமே வோட்டுப் போட்டார்கள் என்றால் கருணாநிதியின் ஜாதியும் பூணூலார் ஜாதியும் ஏறத்தாழ ஒரே சதவிகிதம்தான். அவருக்கு 25 சத விகித ஓட்டு கூட வந்திருக்க முடியாது.

குறுக்கே நூல் போட்டவர்களை நம்பித்தான் கருணாநிதியின் மீடியா வியாபாரங்களே நடந்து வந்திருக்கின்றன. குங்குமம் பத்திரிகையைத் தொடங்கியபோது அவர் ஆசிரியராக அழைத்து வந்தது, பூணூல் போட்ட சாவியைத்தான். நிர்வாகத்தை கவனிக்க நியமித்தது, பூணூல் போட்ட டி.கே.தியாகராஜனைத்தான். பத்திரிகையின் முதல் இதழின் அட்டைப் படத்தில் கண்ணாடியில் முகம் பார்த்து பொட்டு இட்டுக் கொள்ளும் பெண்ணுக்குப் பக்கத்தில் சுவரில் தொங்கவிடப்பட்டது காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேநதிரர் படத்தைத்தான். மறைந்த முரசோலி மாறனின் நெருங்கிய நண்பரும் இன்றளவும் தி.மு.க அரசின் ஆதரவுடன் கிரிக்கெட் வாரியப் பதவியில் இருப்பவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், கலைஞரின் ஒரு பேரனுக்குப் பெண் கொடுத்த வீட்டார், வக்கீல்கள், ஆடிட்டர்கள் பலரும் குறுக்கே நூல் போட்ட பார்ட்டிகள்தான். பேரன்கள் கம்பெனியின் பெயரான சுமங்கலி என்ற வார்த்தைப் பிரயோகமே ‘அவாளு’க்குரியதுதான்.

மீண்டும் சொல்கிறேன். கலைஞர் நேரடியாக விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். முடியாவிட்டால், ஜாதியம் பேசுவது முனைமழுங்கித் துருப்பிடித்த ஆயுதம். அது உதவாது. இன்றைய புதிய வர்ணாஸ்ரமத்தில் ஆதிக்க ஜாதி,கண்ணுக்குத் தெரியாத அதிகாரப் பூணூலை அணிந்திருக்கும் புதிய பார்ப்பனரான கருணாநிதி வகையறாக்களே.
( நன்றி: கல்கி, ஓ - பக்கங்கள் )

பூணூல் பற்றி அவணி அவிட்டம் அன்று ஸ்பெஷலாக பேசிய கலைஞருக்கு நன்றி


Read More...

Friday, August 27, 2010

படம் = புதிர்

படங்கள் கீழே...



Catch phrase :-)

Read More...

Thursday, August 26, 2010

ஸ்விட் நியூஸ்



நியூஸ் கீழே....

விஜயகாந்த் இன்று தனது 58-வது பிறந்த நாளை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டிய விஜயாகாந்த். அதை, குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார்.

இதையடுத்து, அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் விஜயகாந்துக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், விஜயகாந்த் வீட்டுக்கு நேரில் வந்து வந்து வாழ்த்து தெரிவித்தார், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

அப்போது, விஜயகாந்துக்கு கைகுலுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, இனிப்பை ஊட்டியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

அதன்பின் இளங்கோவன் கூறுகையில், "விஜயகாந்த் நல்ல தலைவர். அவரை வாழ்த்துவதற்காக நேரில் வந்தேன். அவர் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு நல்லாட்சி தருவார்," என்றார்.

( நன்றி: விகடன் )

இந்த படத்தை பார்த்தால் கலைஞர் என்ன சொல்லுவார் ?


Read More...

Wednesday, August 25, 2010

புழுக்கை அளவு கூட இல்லாத ...


"இந்தியர் தானா என்று கேள்வி : ஆனந்திடம் கபில்சிபல் சமாதானம்" என்ற தலைப்பில் ஆனந்த பற்றிய செய்தி பல நாளிதழில் வந்துவிட்டது. இதற்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? கீழே சில கமெண்ட்ஸ்... :-)


* அறிவு என்பது புழுக்கை அளவு கூட இல்லாத ஒரு அரசாங்கம். இதை தவிர இவர்களை என்ன சொல்வது?...

* காங்கிரஸ்கார்களை பொருத்தவரை இந்தியர்கள் என்றால் அது இந்திகார்கள் மட்டுமே. தமிழக இழி பிறவி காங்கிரஸ்காரர்களுக்கு வெறிநாட்டில் இருந்து இந்தியாவில் 13 ஆண்டுகளாக குடியு ரிமையே பெறாத சோனியா கான் தான் இந்தியர் , இந்தியாவின் மருமகள், அதைவிட பெற்றெடுத்த தமிழச்சியை விட அவர்தான் அன்னை. ஆனந் இந்த பட்டத்தை ஏற்க்க கூடாது

* திரு .ஆனந்த் அவர்கள் பட்டத்தை பெறாமல் தவிர்ப்பது நலம் . அதைவிட , ஸ்பெயின் குடிஉரிமையை பெறுவது மிக்க நலம் .இந்த "டாக்டர்" பட்டத்தை விட ஸ்பெயின் குடிஉரிமை மதிப்பும் மரியாதையும் கொண்டது . இளையராஜா வே சொன்னது போல் நம் தேசம் கிரிக்கட்டை கட்டிக்கொண்டு அழட்டும் ...

* ஆனந்தத்தை பார்த்தா இத்தாலி நாட்டுக்காரர் மாதிரியா தெரியுது ?...

* சந்தேகத்திற்கு இடமின்றி இது கருணாநிதியின் சதியே ! ஸ்பெயினிலிருந்து உலக தமிழ் மாநாட்டிற்கு வந்து கருணாநிதியை புகழவில்லை என்று ஆத்திரத்தில் செய்திருக்கலாம் !

* தமிழர்கள் டைரெக்ட் செய்த தெலுங்குப்படங்களுக்கு அரசு Nandi விருது கொடுக்கக்கூடாது என ஆந்திரத் திரையுலகம் தகராறு செய்தது நினைவுக்கு வருகிறது.அவர்கள் எல்லோரும் அப்படித்தானோ?

* திரு விஸ்வ‌நாத‌ன் ஆன‌ந்த் முழுக்க‌ முழுக்க‌ டாக்ட‌ர் ப‌ட்ட‌த்துக்கு த‌குதியான‌வ‌ர் என்ப‌து என் க‌ருத்து என்றாலும் விசாரித்து கொடுப்ப‌தில் த‌வ‌றொன்ருமில்லையே. க‌ல்ப‌னா சாவ்லா இந்திய‌ரே அல்ல‌ ஆனால் அவ‌ர் பெய‌ரில் விருதே இருகின்ற்து. அவ‌ர் உயிருட‌ன் இருக்கும்போது த‌ன்னை இந்திய‌ர் என்று எப்பொழுதும் சொன்ன‌தில்லை. இது போன்று விசாரிப்ப‌தால் இந்திய‌ க‌வுர‌வ‌ டாக்ட‌ர் ப‌ட்ட‌த்தின் ம‌திப்பு உய‌ரும் சில் நாடுக‌ளில் சில் நூரு டால‌ர்க‌ள் கொடுத்தாலே டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் கிடைத்துவிடும். கோட‌ம்பாக்க‌ம் சினிமா கும்ப‌ளிட‌ம் போய் கேளுங்க‌ள் எந்த‌ எந்த‌ நாட்டில் எவ்வ‌ள்வு கொடுத்தால் டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் கிடைக்கும் என்று அவ‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள். ஆன‌ந் நீங‌க‌ள் அதை வாங்கி விருதுக்கு பெருமை சேருங்க‌ள் வாழ்த்துக்க‌ள்

* விஸ்வநாதன் ஆனந்த் என்ன எம். எஃப். ஹூசைனா, வெளிநாடுதான் என் நாடு என்று அறிவித்த பின்னாலும் டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு?

* நமது நாட்டில் இருந்துட்டு நல்ல பேரும்,புகழும் , நெறைய பணமும் சம்பாதித்துவிட்டு , அடுத்த நாட்டின் குடியுறிமை பெற்ற ஆனந்த் அவர்களே உங்களுக்கு எதுக்கு டாக்டர் பட்டம்?...

* You learn chess in india but u sold in spain In Spain there is no dual citizen so anand is spain citizen not indian. Hi anand dont blame indian Govt. You sold your indian citizen to spain Govt....

* சரி இந்த சினிமா நடிகர் விஜய்க்கு எல்லாம் எப்படிப்பா டாக்டர் பட்டம் கொடுத்தாங்க.... அதுக்கெல்லாம் கபில் delay பண்ணவே இல்லையே ....... அவரு இந்தியரோ?

* Hello Anand, I really don't understand why did you receive spain citizenship when you are been treated as Indian in the whole world . You were born as Indian, brought up as Indian and you should live as Indian. May be it's your personal, but whoever going out of country, remember that we should not forget that we are indians and we should pay our tax also to India. I heard that, Tax is very less if you live in Spain :)...

* Anand had NOT lived in India and its good he has clarified he is an Indian. He cannot play for other countries really. They'll not let him do so - there is no need for his wife to be annoyed - they must submit docs required - its great that the experienced Sibal has apologized , so Indians should stop going mad about cricket, get educated and look at other sports as well, esp. Hockey.

* தமிழா நிமிர்ந்து நில் .தமிழன் என்றால் யார் என்று காட்டு.வட நாடு காரனுக்கு புத்தி மந்தம்தான்....


குறைந்த காற்றழுத்த நிலை: தமிழகத்தில் கன மழை பெய்யும்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. நமக்கு தான் ஆபீஸ் என்ன செய்ய :-)

Read More...

Monday, August 23, 2010

மண்டேனா ஒன்று 23/08/2010

ராஜீவ் காந்தியின் 66 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தில்லியில் நடைபெற்ற ராஜீவ் காந்தி ஸத்பவன விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வீரவுரையாற்றினார். இவ்வுரையின் ஹைலைட், "சாதி மத வேறுபாடுகளைத் தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் பெற முனையும் யாரையும் விட்டு வைக்க மாட்டோம்; இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சமாதானம் செய்து கொள்ளவே முடியாது" என்று எழுச்சியுரையாற்றினார். இவ்விழாவில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட மெளலானா வஹியுதீன் கான் பாராட்டப்பட்டு, பணமுடிப்பு பரிசளிக்கப்பெற்றார்.




இவ்விழாவில் அன்னையின் எழுச்சியுரை, பாரட்டப்படக் கூடியது மட்டுமல்லாமல், மிகவும் துணிச்சலானதுவும் கூட. எப்படியென்று கேட்டால், இவரது பேச்சின் முக்கிய சாராம்சம், சாதி, மத வேறுபாடுகளை தூண்டிவிட்டு, ஆதாயம் பெற முனைபவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம் என்கிறார். அதாவது ஹிந்துக்களைத் திருடன் என்றும், ஹிந்துக்கள் மங்கலத்திற்காக நெற்றியில் அணியும் திலகத்தை நெற்றியில் ரத்தம் வடிகிறது என்று எள்ளி நகையாடியும், அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும், ஹிந்துக்களின் ஆதர்ஸமான ராமன் குடிகாரன் என்றும், எந்த ஐஐடியில் பொறியியல் படித்தான் என்றும் குறிவைத்து சாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பவர்களுடன் சமரசம் செய்து கொள்வது இயலாது என்று அர்த்தமாகிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனையே விஞ்சி விட்டார் என்றால் மிகையல்ல. அன்னையின் இப்பேற்பட்ட மதநல்லிணக்க உணர்வும், தேசிய சிந்தனையும் புல்லரிக்க வைக்கிறது.

இன்னும் சற்று யோசித்தால், சீக்கியக் கலவரத்தில் முக்கியப் பங்காற்றிய காங்கிரஸ் தலைவர்களான ஜகதீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் போன்றவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தக் கூடும். நல்லவேளை, "ஒரு பெரிய மரம் வீழ்ந்தால், பூமி அதிர்வது இயற்கையே" என்று முத்துதிர்த்த தலைவர் இன்று இல்லை; இருந்திருந்தால் அவருடனும் இவ்விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியிருப்பார். இப்பேற்பட்ட துணிச்சலுடன் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த பேச்சை பாராட்டாமல் என்ன செய்வது?

அநேகமாக இந்த எச்சரிக்கை கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கும் பொருந்துமெனவே தெரிகிறது. கேரளாவை சீரழிக்கும் மத அடிப்படைவாதத்திற்கெதிராக சமீபகாலமாக கருத்து தெரிவித்து வரும் கேரள முதல்வரும், இடதுசாரித் தலைவருமான அச்சுதானந்தன், மற்றும் பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக மதானியைக் கைது செய்துள்ள கர்நாடக அரசு ஆகியவற்றிற்கும் இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும்.

இவ்வளவெல்லாம் ஏன்? ராமனும், ராமாயணமும் வெறும் கற்பனையே!! எல்லாம் கட்டுக்கதை என்று உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, ஹிந்துக்களைப் புண்படுத்திய தன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கே மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி செய்யாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவன்றோ தேச பக்தி? எத்தனை காந்தி வந்தாலும் இந்த தேச பக்திக்கு ஈடாகுமா?

கருணைகாகக் காத்திருக்கும் அஃப்ஸல் குரு, அஜ்மல் கஸாப் போன்று மனிதக் குருதியில் மதநல்லிணக்கத்திற்காக புனித வேள்வி நிகழ்த்திய தலைவர்களை தண்டிக்க வேண்டும் என கூக்குரலிடும் பண்டாரப் பரதேசிகளான பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரீஷத் போன்றவர்களுக்கும், பெரும்பான்மையான ஹிந்துக்களைக் கொண்ட தீவிரவாதிகளான மாவோயிஸ்டுகளுக்கெதிராக கூக்குரலிடுபவர்களுக்கும் இந்த கடும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

தவிர, இனி தனிப்பட்ட ஒரு சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு, தனிப்பட்ட ஒரு மதத்தினருக்கு மட்டும் சலுகைகள் மற்றும் புனிதப் பயணத்திற்கான படிகள், தேர்தலில் ஜாதியை முன்னிறுத்தி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது, சிறுபான்மையினரை ரட்சிப்பதற்காகவே நாங்கள் அவதரித்துள்ளோம் என்ற வசனம் பேசும் கட்சிகள் போன்ற சமூக அவலங்கள் களையப்பட்டு, மத மற்றும் சமுதாய நல்லிணக்கம் புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையை அன்னையின் வீரவுரை நமக்கெல்லாம் உணர்த்துகிறது.

எங்கோ இருக்கும் ஆர்பஸானோவில் பிறந்து, இந்தியாவில் இருக்கும் ஆண்டிப் பண்டாரங்களுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட இந்த அற்புதத் தலைவியைப் பெற நாம் என்ன தவம் செய்தோமோ?
- யதிராஜ்

ஓணம் வாழ்த்துகள்!


Read More...

Thursday, August 19, 2010

பிட் நியூஸ்


சில பிட் நியூஸ் :-)

அம்மாவைப் பார்க்க திருச்சியில் திரண்ட கூட்டம் 'அவதார்' படத்தின் கிராஃபிக்ஸ்
அல்ல! இந்த ஒரு வரிக்காகவே முரசொலி நம்மை முழுப் பக்கத்துக்குத் திட்டும். பார்ப்பன கேமராவோ, சூத்திர கேமராவோ மலைக் கோட்டை நகரில் கூடிய கூட்டத்தைப் பார்த்து மலைத்தே போயிருக்கும். - அம்மா அலை ஆரம்பம் - விகடன் கட்டுரையின் முதல் பகுதி

I use Sun Direct at home. On Independence day, Kalaignar TV broadcased the movie Tamil Padam. Just to avoid the viewers watching the long running movie, they blocked the Kalaignar TV from 9:30am to 1:00pm. I was getting signal scrambled message.
Later when i turned the channel at around the channel was made available at 1:15pm.
Exceptional marketing strategy by Sun TV. - இரண்டு நாளைக்கு முன் எனக்கு ஒருவர் அனுப்பிய மெயில்

கே : ரெட்டி சகோதரர்களைக் காப்பாற்ற, கர்நாடக முதல்வர் ஏன் இத்தனை அக்கறை செலுத்துகிறார்? இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் என்பது மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமைக்குத் தெரியாதா?

ப : ரெட்டி சகோதரர்களிடம் எம்.எல்.ஏ.க்கள் பலர் இருக்கிறார்கள் என்பது எடியூரப்பாவின் அச்சம். ஆனால், ரெட்டிகள் சிக்கினால், அவர் அதற்காக வருந்துவார் என்று தோன்றவில்லை. அகில இந்திய அளவில், மேலிடத் தலைவர்களே ரெட்டிகள் மீது அக்கறை காட்டுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. - துக்ளகில் ஒரு கேள்வி பதில்.

கேள்வி :- விடுதலை நாள் விழாவினையொட்டி, முதலமைச்சர் விவசாயிகளுக்கு இலவசமாக பம்ப்செட் வழங்க முன்வந்து அறிவித்த அறிவிப்பினை "தினமலர்" நாளேடு "தேர்தல் ஆண்டில் விவசாயிகளுக்கு சலுகை" என்று உள்நோக்கத்தோடு தலைப்பிட்டு குரோதத்தோடு வெளியிட்டிருக்கிறதே?

பதில் :- தேர்தல் முடிவுற்று, பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நாளில் முதலமைச்சர் கலைஞர் விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடனை ரத்து செய்து அறிவித்தாரே, அது தேர்தல் ஆண்டு என்பதாலா? தேர்தல் ஆண்டு என்பதால் தான் கழக ஆட்சியில் இந்த நான்காண்டு கால மாக அடுக்கடுக்காக சலுகைகள் செய்யப் பட்டதா? "தினமலர்" நாளேட்டுக்கு ஏன் இந்த வக்கிரபுத்தி? அண்மையில் நடை பெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குக் கூட உங்கள் பத்திரிகையின் ஆசிரியரை அழைத்து, ஆய்வுக் கட்டுரை படிக்கச் செய்ய ஏற்பாடு செய்யும்படி முதலமைச்சர் கலைஞரே அதிகாரிகளிடம் தெரிவித்தாராமே! ஜெயா ஊருக்கு ஊரு திடீரென்று புறப்பட்டுச் சென்று கட்டுரை படிக்கிறாரே, அது தேர்தல் ஆண்டு என்பதற்காக நடைபெறும் செயல் என்று எழுத ஏன் "தினமலர்" முன் வரவில்லை? - முரசொலியில் தினமலருக்கு ஏன் இந்த வக்கிரபுத்தி? என்ற தலைப்பில்

ஒருமுறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். நானும், புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத் தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லாரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லாரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள். இறைவா உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு? என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம்.

உடனே இறைவன் சொன்னாராம் "நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும், நீயும் காற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல் தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து விடுகிறது. ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே வைத்துக் கொள்கிறாய். அதனால் தான் உன்னை எல்லாரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள். இந்தக் கதை சொல்கிற கருத்து என்னவென்றால், கருமிகளை காலம் எட்டி உதைத்து விடும். ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு தன் குறிப்பேட்டில் என்றும் பதிந்து வைத்துக் கொள்ளும். - இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை

பல்வேறு இடங்களில் பிட் அடித்த நியூஸ் :-)


Read More...

Wednesday, August 18, 2010

படம் + பாட்டு = புதிர்

கீழே இரண்டு படங்கள் இருக்கு. சரியான ஆங்கில வாக்கியத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.





ஒன்று சினிமா படத்தின் பெயர், மற்றொன்று பாட்டின் பெயர். ( இரண்டும் ஆங்கிலம் தான் )

Read More...

Monday, August 16, 2010

மண்டேனா ஒன்று 16/8/2010

63 64 ஆவது சுந்தந்திர தினத்தையொட்டி ஏழாவது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக்கொடியேற்றுகிறார் என்று பெருமையுடன் காங்கிரஸார் மார்தட்டுகின்றனர். வட இந்திய மற்றும் கூட்டணிக் கட்சியினரின் மீடியா அடிப்பொடிகளும் அதனை மணித்துளிக்கொருமுறை அறிவித்து பூரிப்படைகின்றனர். தனியொரு பிரதமர் ஐம்பதாயிரம் பாதுகாப்புப் படைவீரர்கள் புடை சூழ, குண்டு துளைக்காத கூண்டிற்குள் இருந்து கொடியேற்றும் நிகழ்வை சுதந்திரம் என்று நாமும் மார்தட்டுவது துரதிருஷ்டவசமானது;

சுதந்திரமடைந்த அறுபத்து மூன்றாண்டுகளில், தொண்ணூறு சதவிகித ஆட்சிக்காலத்தை காங்கிரஸே ஆக்ரமித்திருந்தது. அக்காலத்தில் காங்கிரஸ் வளர்த்து விட்ட பிரச்சனைகள், பிரதமரைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை விட அதிகம். அப்பிரச்சனைகள் இன்றும் தேசத்தைச் சூழ்ந்து கொண்டு சுழட்டியடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பிரதமரோ இவற்றைப் பற்றி சற்றும் கவலையற்றவராக இருக்கிறார். அவருடைய அமைச்சரவை சகாக்கள் கருமமே கண்ணாக கல்லாவை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மக்களோ, இந்த தேர்தலில் என்ன இலவசமாகத் தருவார்கள் என விட்டத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நமது அதிர்ஷ்டம், ஆடுவோமே, பள்ளு பாடுவோமே என்று பாடியவர் இன்று இல்லை.

காங்கிரஸ் முதன்முறையாகப் பதவியேற்றதும் செய்த நற்காரியம், ராஜீவின் ஆட்சியில் நடைபெற்ற போஃபர்ஸ் ஊழலை சவக்குழியில் புதைக்கும் முயற்சியில் இறங்கி வெற்றிபெற்றது. இந்த விவகாரத்தை சூட்டோடு சூடாக முன்னமே தமது ஆட்சிக்காலத்தில் முடித்து வைக்காத பாஜகவை இதில் முக்கியமாகக் குற்றம் சாட்ட வேண்டும். சோனியாவிற்கு வேண்டியவர் என்ற ஒரே காரணத்திற்காக, குவாத்ரோக்கி பிடிபட்ட செய்தி தெரிந்திருந்தும், அவரை விடுவிக்கும் வரை ஆக வேண்டியவற்றை எல்லாம் கவனித்து விட்டு, பிறகு ஒன்றுமே நடவாதது போல், அவர் குற்றமற்றவர், அவரை தொந்தரவு செய்யக் கூடாது என பிரதமர் அவருக்காக வருத்தப்படுகிறார். இப்பேற்பட்டவர் எழுபதாவது முறை செங்கோட்டையில் கொடியேற்றினாலும், பெருமைப்படுவதற்கு ஏதுமில்லை.

அடுத்து போபால் விஷவாயுக் கசிவு விவகாரம். அதென்னவோ தெரியவில்லை? அயல்நாட்டவர்கள் என்றாலே காங்கிரஸாருக்கு அலாதிப் பிரியம் போலும். குவாத்ரோக்கியை எப்படி தப்புவிக்க விட்டனரோ, அதே போல ஆண்டர்ஸனுக்கும் பாதையமைத்துக் கொடுத்துவிட்டனர். குவாத்ரோக்கியாவது பொருளாதார ஊழலில் தொடர்புடையவர்; தொலைகிறான் சனியன் என்று விடலாம். ஆண்டர்ஸன் இருபத்தையாயிரம் உயிர்களை நரபலி கொண்டவன். ராஜீவ் முதல் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் அவன் தப்புவிக்க துணைபோயிருக்கின்றனர். இதில் இப்பொழுது யார் மேல் குற்றம் சுமத்துவது என்பதே பெரும் குழப்பமாக இருக்கும்படியாக அத்தனை தலைகள் உருள்கின்றன. பார்த்தார் அர்ஜூன் சிங்!! நரசிம்மராவ்தான் முழுமுதற்காரணம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். ஒழிந்தது பிரச்சனை. நரசிம்மராவ் போயே போய்விட்டார். அவருக்காக குரல் கொடுக்க இப்பொழுது யாரும் இல்லை. தவிர, நரசிம்மராவ் சோனியாவுக்கு பிடித்தமில்லாதவர். இந்த ஒருகாரணம் போதாதா? இதிலும் பிரதமர் வாய் திறக்கவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்? வேண்டுமானால் ஆண்டர்ஸன் சார்பில் மன்னிப்பு கோருவார்; வருத்தம் தெரிவிப்பார். ஏற்கனவே சீக்கிய கலவரத்திற்கு யாரின் சார்பிலோ மன்னிப்பு கோரியது போல!!

அடுத்ததாக, முந்தைய வரலாற்று நிகழ்வுகளின் வரிசையில் இடம்பெறக் கூடிய அளவு தகுதி படைத்த ஸ்பெக்ட்ரம். இந்த ஒரு விஷயத்தில், இவர் பிரதமராக செயல்பட உண்மையாகவே தகுதி படைத்தவர்தானா என்று பெருவாரியான மக்கள் மனதில் கேள்வியை எழுப்ப வைத்த விஷயம். என்னதான் பிரதமர் நேர்மையாளராகவும், யோக்கிய குணசீலராகவும் இருந்தாலும், அவரது செயல்பட இயலாத தன்மை, அவருடைய நேர்மையையே கேள்விக் குறியாக்கிவிட்டதே? இவ்வளவு பெரிய இமாலய ஊழல்; தேசத்தின் மிகப்பெரிய, பாரம்பரியம் மிக்க தேசியக் கட்சியின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்க வைத்த ஊழல். பிரதமரின் உத்தரவிற்க்குப் பிறகும், முறைகேடாக ஒரு ஏலத்தை நடத்தியிருக்கிறார் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை சகா. அப்படியென்றால் அந்த அமைச்சரவையில் பிரதமரின் மதிப்புதான் என்ன? அத்தனை குற்றச்சாட்டுகள், அதனை ருசுப்பிக்கும் ஆதாரங்கள், டெலிபோன் உரையாடல்கள் என கைப்புண்ணாக இருந்த பிரச்சனையில், பிரதமர் இன்னும் மெளனம் சாதிப்பது எதனால்? சுதந்திரமடைந்த அறுபத்து மூன்றாண்டுகளில், ஒரு பிரச்சனையில் கூட சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையில்லாத பிரதமர் எத்தனை லட்சமாவது முறையாக கொடியேற்றினால்தான் என்ன? யாருக்குப் பெருமை?

காஷ்மீர் விவகாரம்!! பாரத தேசம் இந்த அண்டத்தில் உள்ளளவும், காஷ்மீர் பிரச்சனையும் இருக்கும்; அதன் பரிணாமமும் நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் என்று கூறும்படியான அளவிற்க்கு ஆட்சியாளர்களின் நிர்வாக, மற்றும் முடிவெடுக்கும் திறமையின்மையால் விளைந்த ஒரு கோரம். இதன் தீவிரம் இப்பொழுது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. தினமும் வன்முறை, கலவரம், கொலைகள் என வளர்ந்து கொண்டே போகிறது. இதனையெல்லாம் ஒரு முடிவிற்கு கொண்டுவர என்ன செய்வது என்று செய்வதறியாமல் காங்கிரஸ் திகைத்து நிற்கிறது. எல்லாம் காங்கிரஸின் கர்மவினை என்று சொல்லாமல் என்ன செய்வது? பிரதமர் வருத்தப்படுகிறார்; கெஞ்சுகிறார். போதுமே!! வேண்டாமே என்று நா தழுதழுக்கிறார். காஷ்மீரில் பிரிவினைவாதிகளோடு சேர்ந்து முன்னாள் முதல்வரின் அரசியல் கட்சியும் சேர்ந்து பிரச்சனையை இன்னும் தீவிரப்படுத்துகிறது. ஆட்சியாளர்கள் விழி பிதுங்குகிறார்கள். காஷ்மீருக்கு சுயாட்சி கொடுப்பது பற்றி பரிசீலிப்போம் என்கிறார் பிரதமர். இதுதான் தீர்வா இதற்கு? இப்படி செய்வதற்க்கு பதிலாக பேசாமல், காஷ்மீரை பாகிஸ்தானுக்கே பிரதமர் தாரை வார்த்து விடலாம். இரண்டும் ஒன்றுதான்! நாமும் அறுபத்து மூன்றாவது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்.

பாகிஸ்தான் தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்டுகள் பிரச்சனை. பாகிஸ்தான் பிரச்சனைக்கு காஷ்மீர்தான் காரணம் என்று சொல்வதுதான் ஒரே தீர்வு. காஷ்மீர் பிரச்சனைக்கும் முடிவில்லை. ஆக பாகிஸ்தான் தீவிரவாதமும் ஒரு தொடர்கதைதான். இது ஒருபுறமிருக்க மாவோயிஸ்டுகள் பிரச்சனை. தினமும் ஒரு ரயில் கவிழ்ப்பு; ஐம்பது பாதுகாப்பு படையினர் மரணம் என பத்திரிக்கைத் தலைப்புச் செய்திகள். மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டால் நமது சாயம் வெளுத்து விடுகிறது. பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால் அதிலும் பிரயோஜனமில்லை. ஆட்சியாளர்களின் நிலை அந்தோ பரிதாபம். மாவோயிஸ்டுகளுக்கு ஐ எஸ் ஐயும், தாவூத் இப்ரஹீம் மற்றும் சோட்டா ஷகீலின் உதவியும், தூண்டுதலும் இருக்கிறது என புதிய கண்டுபிடிப்பு வேறு. என்ன பிரயோஜனம்? பிரதமர் தீவிரவாதிகளின் தாயார் அழுவதைப் பார்த்து இரவுத் தூக்கத்தைத் தொலைக்கிறார். மனிதாபிமானவாதி. மக்கள் பிரதமரின் செயல்பாட்டினைப் பார்த்து வாழ்க்கையில் தூக்கத்தையே மறந்து விடுவர் போலும்.

மேற்கண்ட பெருமைகள் போதாமல், தற்போது பாரதத்தின் மேன்மைக்கும் மேலும் மேன்மை சேர்க்க காமன்வெல்த் ஊழல். ஸ்பெக்ட்ரம் ஊழலையே மிஞ்சும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இதனைப் பற்றிப் பேசிய மணிசங்கர ஐயர் தேசத்துரோகியாகிவிட்டார். அயல்நாடுகளில் இந்தியாவின் பெருமை இவ்விவகாரத்தால் சந்தி சிரிக்கிறது. அயல்நாட்டு தூதரகத்திலிருந்து வந்த கடிதத்தை போர்ஜரி செய்யுமளவிற்கு படு கேவலமாக ஒரு காங்கிரஸ் எம்.பி நடந்து கொண்டிருக்கிறார். பிரதமர் என்ன செய்கிறார்? யாருடைய ஆணைக்காக காத்திருக்கிறார். ஒரு ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களையெல்லாம் பதினைந்து ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். வேலையைத்தான் ஒழுங்காகச் செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. ஏராளமாகப் பணம் செலவழித்து கட்டிய கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுகிறது. இந்த லட்சணத்தில் மத்திய பொதுப்பணித்துறை, தில்லி பொதுப்பணித்துறை என்று பலர் வரிந்து கட்டிக் கொண்டு ஈடுபட்டுள்ளனராம். ஊக்கத்தொகை வேறு!! சுதந்திரமடைந்து அறுபத்து மூன்றாண்டுகளாகியும், பிரதமர் மட்டும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது.

இவை தவிர, விலைவாசி உயர்வு, பண வீக்கம், விவசாயிகள் தற்கொலை, கிரிமினல் பின்னணி அமைச்சர்கள், மாயாவதி, மம்தா பானர்ஜி, தண்ணீர் பிரச்சனைகள், கட்ட பஞ்சாயத்து மற்றும் இதர சமூக விரோத செயல்கள் போன்றவை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டதாலும், அவற்றைப் பற்றி மக்களே கவலையற்றிருப்பதாலும் பிரதமரும் அதைப் பற்றி கவலையுறத் தேவையில்லை.

" ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று....."

- யதிராஜ்



50! ?


Read More...

Sunday, August 15, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 15-8-2010

முனிக்கு இட்லிவடை எழுதும் அவசரக் கடிதம்...

வணக்கம் முனி,
முதலில் சுதந்திர தின வாழ்த்துகள். இந்தச் சுதந்திர தினத்தில் குமுதம் 'பை பை' காமிச்சிட்டாங்க. ரிப்போர்ட்டர், சிநேகிதி இரண்டு பை வீக்லியும் வரதராஜனுக்கு, மற்றவை ஜவஹர் கைவசம். இனி ரிப்போர்ட்டர், சிநேகிதியில் 'குமுதம்' லேபிள் இருக்காது. ரிப்போர்ட்டருக்கு பதிலா குமுததுலேருந்து வேற ஒரு பை வீக்லி வரும் என்று எதிர்ப்பார்க்கலாம். அரசியலில் புலனாய்வு பத்திரிக்கை என்று பார்த்தால் இவர்களைப் பற்றியே ஒரு பெரிய புலனாய்வு செய்ய வேண்டியிருக்கும் போல. கோயில் பற்றி எழுதும் முக்கிய நபர் இப்ப எந்த பக்கம் போவது என்று யோசித்துக்கொண்டு இருக்காராம்.

அடுத்த மேட்டர் சிம்பு தேவன் பத்திரிக்கை ஆரம்பிக்க போகிறாராம். பேசாம கலைஞரை கவுரவ ஆசிரியராக நியமிக்கலாம். நல்ல காமெடியாக எழுதுவார். துக்ளக் கலைஞர் ஜோக்ஸ் என்று இந்த வாரம் போட்டிருக்கிறார்கள். சமயம் கிடைக்கும் போது படித்து பார்.

சில நாட்களுக்கு முன் கலைஞர் இப்படி சொல்லிஇருக்கார். "மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் மொத்த கடன் பொறுப்பு 592 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2009-10ம் ஆண்டின் இறுதியில் அரசுக்கு உள்ள மொத்த கடன் 88 ஆயிரத்து 882 கோடி ரூபாய் தான்!"

எவ்வளவு நாளைக்கு தான் கலைஞர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று மற்ற மாநிலங்களோட ஒப்பிட்டு கருத்து சொல்றது... இந்த முறை உலக அளவில் அமெரிக்காவோட ஒப்பீடு செய்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் "ஒபாமாவிற்கு கற்றுக்கொண்டுத்த தலைவர் என்று பெருமை இவருக்கு வந்து சேரும்". என்ன ஒன்று, ஒபாமா மிஸ்டர் கருணாநிதி என்று சொல்லாமல் கலைஞர் என்று சொல்ல வேண்டும்.

ஜோக்ஸ் அப்பார்ட், கொஞ்சம் கோப மேட்டர் பற்றி பார்க்கலாம்.

இன்போசிஸை திருட்டுக் கம்பெனி என்று சொன்னவுடன் எல்லாரும் கடுப்பாகிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். 'பாடி ஷாப்' என்று சொல்லும் போது வராத கோபம் இப்ப எதற்கு வந்தது என்று ஆச்சரியம் தான். முன்பு படிக்காதவர்களை அடிமைகளாக விற்றார்கள் இப்ப படித்த அடிமைகளை விற்கிறார்கள். அமெரிக்க விசா கட்டணம் ரொம்ப அதிகம் என்று புலம்புகிறார்கள். அமெரிக்கா போவது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக ஆகிவிட்டது, உண்மையான சாப் ஷாப் யார் என்பதை இந்த கார்ட்டூனை பார்த்தால் தெரியும். அவ்வளவு தான்.

அமெரிக்காவை விட ஜெயமோகன் கூட்டத்துக்கு ஊட்டி போவது இன்னும் கஷ்டம் என்று பலருக்கு தெரிவவில்லை. பேசாம மக்கள் அமெரிக்காவுக்கு சென்று அங்கிருந்து ஊட்டிக்கு விசா வாங்கிகொண்டு வரலாம். ஜெயமோகன் கூட்டத்துக்கு இவ்வளவு பேர் வர கூடாது என்று நிபந்தனை எல்லாம் போட்டிருக்கார். நானும் ஏன் என்று யோசித்தேன். அப்பறம் தான் புரிந்தது, இல்லோரும் கூட்டமாக போய் ஊட்டியில் உட்கார்ந்தால் இவர்கள் விடும் மூச்சு காற்றி ஊட்டி சூடாகிவிடாதா? அதுவும் இலக்கிய கூட்டம். அப்பறம் தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு நஷ்டம் வராதா? அந்த நல்லெண்ணம் தான். ( நல்ல படம், நன்றி பத்ரி )

நல்லெண்ணத்துக்குக் காரணம் பகவத் கீதை என்று நரேஷ் குப்தா ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.

நான் எப்போதுமே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. பலனை எதிர்பார்க்காமல் சந்தோஷமாகக் கடமையைச் செய்வதைப் பெருமையாக நினைத்தேன். இதற்கான மனோபலத்தை எனக்கு அளித்தது பகவத்கீதையும் காந்தியக் கொள்கைகளில் எனக்குள்ள ஆழ்ந்த ஈடுபாடும்தான். படிக்கிற காலத்தில் என்னிடம் எப்போதும் ஒரு பாக்கெட் சைஸ் பகவத் கீதை புத்தகம் இருக்கும். உண்மையை எழுதினால் பிரச்னை வரும்! ஆக பகவத் கீதை படித்தால் நல்லெண்ணத்துடன் வாழலாம். முன் உதாரணம் காந்தி. அடுத்து இவர். இவர் கலைஞரைப் பார்க்கவில்லை என்று கலைஞர் ரொம்ப வருத்தப்பட்டார். ஆனால் பகவத் கீதை படித்ததால் ஒரு நல்ல கொள்கையுடன் வாழ்த்துள்ளார் நரேஷ் குப்தா.

உமாசங்கர் பற்றிய பெட்டிஷனை உடனே இட்லிவடையில் போடுங்கள் நிறைய மெயில் வந்துவிட்டது. நேற்று கூட ஒரு மெயில் 'அர்ஜண்ட்' என்று வந்தது. திறந்து பார்த்தால் உமாசங்கர் பற்றி உடனே போடவும் என்று அவர் எழுதிய லெட்டர்.

அதில் இது மாதிரி எழுதியிருக்கார்.

"While I was working in ELCOT, twice I was called by Tmt.Rajathi Ammal, wife of the Hon'ble Chief Minister of Tamil Nadu to her office at Alwarpet. I should have refused to meet her. However, by way of courtesy I met her in her office. She attempted to influence me to award contract to her men in the matter of purchase of 45000 fishermen wireless sets. I told her that only through e-tender contracts are finalised and I should not be disturbed."


போலீஸ்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் பணியாற்றும் `ஆடர்லி' முறை நீண்ட நெடுங்காலமாக பழக்கத்தில் இருந்தது. இந்த `ஆடர்லி' முறையை ஒழித்து முன்பு கலைஞர் உத்தரவு பிறப்பித்தார். இருந்தாலும் மறைமுகமாக இந்த `ஆடர்லி' முறை வேறு மாதிரியாக பழக்கத்தில் உள்ளது. உமா சங்கர் முதலவர் அழைத்தால் போகவேண்டும் ஆனால் அவர் குடும்பத்தில் யாராவது அழைத்தால் எதற்குப் போகவேண்டும் ? அதுவும் இரண்டு முறை ? இதுவும் கிட்டத்தட்ட ஆடர்லி மாதிரி தான். முன்பு பார்த்துவிட்டு இப்ப ஆங்கில கடித இலக்கியம் எழுதி என்ன பயன்? அவர் முன்பு சமர்ப்பித்த ஜாதிச் சான்றிதழ் நிஜமா, போலியா என்று தெரியாத நிலையில் இவர் எவ்வளவு நேர்மையாக நடந்திருந்தாலும் அது எல்லாம் வேஸ்ட் என்று நினைக்கிறேன். நரேஷ் குப்தாவுக்கு இவருக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பார்க்கலாம். எல்லாம் கீதை செய்த வேலை. உடனே உமா சங்கருக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் ஒரு செட் கீதை பார்சேல்..

இதை சொன்னதால் உடனே என்னைப் பார்ப்பான் என்று நீங்க திட்ட வேண்டாம். கலைஞர் ரெடியாகத் திட்டு வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் புதுசாக 'அவாளுக்கு' ஒரு ஃபார்முலா கொண்டு வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன் அவர் பேசிய பேச்சு இது. பார்ப்பனீயம், பிராமணர் உருவத்தில் மட்டுமல்ல செட்டியார், முதலியார், தலித் என யார் உருவத்தில் வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். அதுதான் திமுகவின் கொள்கை. இந்த கொள்கைப்படி நாங்கள் செயல்படுவதால்தான் எங்கள் இயக்கம் இந்தியா அளவில் முழு வெற்றி வாகை சூடியுள்ளது.

அதை விடக் காமெடி, அசினுக்கு போலீஸ் பாதுகாப்பு. ஏன்? இலங்கை சென்று வந்துள்ளார். நம்ம தமிழ் தொண்டர்கள் செய்ய முடியாத ஒன்றை இவர் செய்துள்ளார். அதனால் பாதுகாப்பாம். அசின் பரவாயில்லை, ஆனால் கருணாஸ் நிலமை தான் பாவம். இலங்கைக்கு செல்லக் கூடாது என நாம் தமிழர் இயக்கத்தினர் தொடர்ந்து மொபைலில் மிரட்டி வருவதாக சென்னை கமிஷ்னரிடம் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். ஏதோ நேர்த்தி கடனுக்கு போகணுமாம். ஆனால் நம்ம தமிழர்கள் விட மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆனால் கருணாஸ் அசின் மாதிரி மிரட்டலுக்கு பயந்து தனது இலங்கை பயணத்தை ரத்து செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். உண்மையான தமிழன். சபாஷ்! அசினுக்கு பாது காப்பு குடுத்தாங்க, சரி. கருணாஸுக்குக் குடுத்தாங்களா? தெரியாது. ஆனா குடுக்கலாம். இலங்கைக்கு டிக்கெட் வாங்கறவங்க எல்லாருக்கும் குடுக்கலாம். இன்று பிரதமர் கொடி ஏற்றுவதற்கு பாதுகாப்பு என்றால் பரவாயில்லை, ஆனால் அசின் டான்ஸ் ஆடினால் பாதுகாப்பு என்றால் நம் வரி பண்ம் எப்படி எல்லாம் வீணாகிறது என்று பாருங்கள். இப்ப எல்லாம் இலங்கைக்கு பயணம் செய்வர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மாதிரி ஹார்லிக்ஸ் ஏற்றிக்கொண்டு போகும் லாரிகளுக்கும், மிட்டாய் ஏற்றிக்கொண்டு போகும் வண்டிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதுவும் மதுரை பக்கம் என்றால் ராணுவப் பாதுகாப்பு தேவைப்படும்.

திருச்சியில் ஜெயலலிதா கூட்டத்தை பார்த்துச் சிலர் மிரண்டு போயிருக்கிறார்கள். பத்திரிகையாளுக்கு தனியாக விநியோகிக்கபட்ட அறிக்கையின் காப்பியில் "கை" என்ற வார்த்தை அடைப்பு குறிக்குள்ள இருக்காம். அதனால அனைவரும் “கை” கோர்த்துச் செயல்படுவோம்னு அவர் சொன்னதுல ஏதோ "கை"மேல் பலன் இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

இதை படிக்கும் போது அனுபம் கேர் செய்த டுவிட் தான் ஞாபகம் வருகிறது
There is Father’s Day, Mother’s Day, Friendship Day, etc. But no dog day? Every dog has his day, but when?

சிலர் கருணாநிதி என்று என் பேரை சொல்லி தான் கூப்பிடுகிறார்கள் என்று ரொம்ப வருத்தப்படுகிறார் கலைஞர். மரத்தைக் கொத்திக்கொண்டு இப்ப நம்மை கொத்திக்கொண்டு இருக்கும் பறவை ஒன்று இலக்கியக் கட்டுரை ஒன்றில் கருணாநிதி என்று எழுதி, அது வெளி வந்த போது அதைக் கலைஞர் என்று மாற்றி விட்டார்களாம். கட்டுரையே எடுத்திருந்தால் எடிட்டருக்குப் பரிசு தந்திருக்கலாம். அது கூடப் பரவாயில்லை, நடிகர்களில் இந்த "சார்" கலாச்சாரம் எப்ப வந்தது? ரஜினி சார் என்று ரைட்டர் பேயோன் சொன்னால் போனால் போகிறது என்று விடலாம். ஆனால், சூரியா சார், தனுஷ் சார், என்கிறார்கள் ஆனால் அசினை அசின் என்றும், நயந்தாராவை நயன் என்று தான் சொல்லுகிறார்கள். பெண்களுக்குத் தமிழ் நாட்டில் கிடைக்கும் மரியாதை இவ்வளவு தான்.



அப்படியே "சார்" என்று மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியானவர் நமிதா மட்டும் தான் !


( எது எப்படியோ, இதோ இவர்களை பற்றி எழுதியதால் இந்தப் படத்தை போட முடிந்தது. )

இப்போதைக்கு பை,
இட்லிவடை



Read More...

ஜெயலலிதாவின் திருச்சி பேச்சு

பலர் கேட்டுக்கொண்டதால் ஜெயலலிதாவின் திருச்சி பேச்சு இங்கே....





கோவை பேச்சுக்கு ஒரு வாரம் பதில் சொன்னார், திருச்சி பேச்சுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ளுவார் ? யாருக்கு தெரியும் !



Read More...

The Sisterhood of the Traveling Pants - சினிமா விமர்சனம்

அன்னி பிராஷேர்ஸ் ( Anne Brashares) எழுதிய The Sisterhood of the Traveling Pants என்ற நாவலின் திரைவடிவம் இது. 2005ல் வெளிவந்தது.

பதின்ம வயது என்பது ஒரு அழகான காலகட்டம்..அதில் நமக்குப் பிடித்ததுபோல நண்பர்கள் அமைந்துவிட்டால் அதைவிட அந்த காலகட்டத்தை அனுபவிக்க வேறு எதுவும் வேண்டாம். எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள பெற்றோர்கள்,காசு, பணத்திற்கு கவலையற்ற ஒரு இன்பமான மனநிலையில் வாழ்க்கையே இனிமையாய் இருப்பதுபோல தோன்றும்.. படிக்கவேண்டியதும், இளமையை நல்ல விதமாய் கழிப்பதுமே ஒரு இயல்பான மனநிலையும், மகிழ்ச்சியானதும்.. பலருக்கு வாழ்க்கை இப்படி அமைவதில்லை.



அப்படி அமைந்த, இதுவரை ஒருமுறைகூடப் பிரிந்திராத நான்கு பெண்களும் முதல்முறையாய் கோடைவிடுமுறையை அனுபவிக்க தனித்தனியே வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். நால்வரின் உடல்வாகும் ஒவ்வொரு திணுசாய் இருந்தாலும் எல்லோருக்கும் மிகச் சரியாய் பொருந்துவதுபோல ஒரு ஜீன்ஸ் அமைய அதை அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்திய பின்னர் அதை மற்றவருக்கு தங்களது அனுபவத்துடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என தீர்மானிக்கிறார்கள். இந்த தீர்மானம் மூலம் அவர்களின் சகோதரித்துவம் (Sisterhood என்ற வார்த்தைக்கு எனது தமிழாக்கம்) ஒரு ஜீன்ஸ் காற்சட்டை மூலம் எப்படி வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதும் பிரிந்திருக்கும் இவர்களை இணைக்கும் பாலமாய் எப்படி செயல்படுகிறது என்பதும்தான் கதை.

நால்வருக்குமான இணைப்பு அவர்கள் பிறக்கும் முன்னரே அவர்களது தாயார்கள் ஒன்றாய் குழந்தை பிறப்புக்கு முன்னர் செய்யப்படும் பயிற்சி வகுப்பிலேயெ தொடங்கி விடுகிறது. மேடையில் கிண்டல் செய்யப்படும் நண்பிக்காக கிண்டல் செய்தவனை சாத்துவதிலேயே அவர்களின் இள வயது நட்பின் ஆழம் சொல்லப்பட்டு விடுகிறது.

நால்வரில் ஒருத்திக்கு ( லேனா) நம்மூர் திரைப்படங்களைப்போலவே காதலை எதிர்க்கும் தாத்தா பாட்டி. ஆனால் அதை இறுதியில் ஏற்றுக்கொள்வதில்தான் நமக்கும் அவர்களுக்குமான முதிர்ச்சியில் வித்தியாசம். குறைந்த பட்சம் சொல்வதைக் கேட்பதிலும்,அதை ஏற்றுக்கொள்வதில் கான்பிக்கும் முதிர்ச்சியும் இன்னொரு வித்தியாசம்.

குறைந்தபட்சம் நமது தலைமுறை குழந்தைகளுக்கு” உனது குழந்தைகளும், எனது குழந்தைகளும் நமது குழந்தைகளுடன் விளையாடுகின்றனர் என்ற நிலை வரவில்லை, நமது திரைத்துறையைச் சேர்ந்த சித்தி, சித்தப்பா குடும்பம் தவிர. ஆனால் அப்படி ஒரு நிலையில் இருக்கும் குழந்தைகள் அனுபவிக்கும் வேதனையும், சேர்ந்திருப்பதில் ஏற்படும் உளவியல் சிக்கல்களும், பெற்றோர்கள் தங்களது சுகத்திற்காக, அல்லது சுயநலத்திற்காக செய்யும் செயல்கள் எப்படி குழந்தைகள் மனதை கொல்லுகின்றன என்பதற்கு இப்படத்தில் வரும் கேர்மன் ஒரு உதாரனம். இவரது நடிப்பு மிக இயல்பு.

அதேபோல உடல் பருமன் எப்படி ஒருவரின் தன்னம்பிக்கையை பாதிக்கிறது, தங்களின் நிலை குறித்து கழிவிரக்கம் கொள்கின்றனர் அல்லது ஒரு பாதுகாப்பற்ற தன்மையை, அல்லது பிறர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் தன்னை கேலி செய்யவே சொல்லப்படுகிறது என்ற என்பது போன்ற என்னத்தை உருவாக்குகிறது என்பதும் கேர்மனின் சித்தியின் பேச்சுக்கு கேர்மன் வெடிப்பதில் காட்டப்படுகிறது..


நால்வரும் இந்தப் பிரிவையும் அவரவர்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை கடிதம் மூலமும், அனுப்பும் அல்லது அனுப்பப்படும் ஜீன்ஸ் மூலமும் சரிக்கட்டுகின்றனர். தனித்து இருக்கும் அந்நேரத்தில் ஜீன்ஸ் வருவது அவர்களுக்கு தங்களது தோழியை நேரில் பார்ப்பதுபோன்றும், தனது தோழிகள் தொட்டுணர்ந்த ஒன்றை தொடுவதுபோலும் உணர்கின்றனர்.

பிரிவின் மூலம் தங்கள் நட்பின் ஆழத்தையும், தங்கள் வாழ்வின் சுக துக்கங்களையும் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாய் இந்த ஜீன்ஸ் பரிமாற்றம் நடக்கிறது.

நமக்கு நடக்கும் நல்லது கெட்டவைகளை நமக்கு கிடைத்த பொருட்கள் மூலம் அதைத் தாண்டி செல்லவும், அல்லது சமாதானம் சொல்லிக்கொள்ளவும் பயன்படுத்துகிறோம். கிட்டத்தட்ட வேதாந்தம் போல. அதிருஷ்டம், துரதிருஷ்டம் எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. அந்த ஜீன்ஸ் முதல் சுற்று சென்றுவரும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கிறது.எனவே அதனால் அதிருஷ்டம் ஏதுமில்லை என்பதும், மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை என்றும், இதன்மூலம் உங்கள் மகிழ்ச்சி கெடாமலிருக்கட்டும் என பிற தோழிகளுக்கு எச்ச்சரிக்கை செய்தும் கடிதம் எழுதி அனுப்புகின்றனர்.ஆனால் அதே ஜீன்ஸ் இரண்டாம் முறை சுற்றி வரும்போது எல்லோருக்கும் நல்லது நடக்கிறது. உடனே ஜீன்ஸ் அதிருஷ்டம் கொண்டுவருவதாக நம்பி அதைப் பேசுகின்றனர். இறுதியில் ஜீன்ஸுக்கும், நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தமில்லை என்ற முதிர்ச்சியை அடைகிறார்கள்

கிரீஸ் என்ற அழகான நாட்டின் கடற்கரைகள்தான் எவ்வளவு அழகு? லீனாவுக்கும், கோஸ்டோஸுக்குமான காதல் மலரும் தருனங்கள், லீனாவின் பாட்டியின் வீடு மற்றும் அது அமைந்திருக்கும் இடம், ஒரு பூலோக சொர்க்கம்.

அவ்வளவு அழகான, சுத்தமான கடற்கரைகள். வீட்டிலிருந்து தெரியும் கடற்கரைக்காட்சி ரம்மியம்..

நண்பிகளுக்குள் இருக்கும் அன்னியோன்யம், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் ஆறுதலாய் இருப்பது, பதின்ம வயதின் கிசுகிசுப்புகள், சந்தோஷங்கள், எப்போதுமே சந்தோஷமான தருணங்களாக ஆக்கிக்கொள்வது, எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வது என்று எல்லாவற்றையும் பார்க்கப் பார்க்க நாம் தாண்டிவந்த விஷயங்கள்தானே என்று பெருமையாகவும், மகிழ்வாகவும் எண்ண வைக்கிறது.

நாடகத்தன்மையற்ற நடிப்பு எல்லா நடிகர்களிடமிருந்தும்..

மனதை மயக்கும் இசை.. அதுவும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றார்போல.. குறிப்பாய் கிரீஸில் லேனாவும், அவள் காதலனும் செல்லும் ஒரு பாரில் வாசிக்கப்படும் ஒரு தந்தி வாத்திய இசை. அரபு இசையைப் போன்றதொரு இனிமை.

ஒளிப்பதிவும் அருமை, குறிப்பாய் கிரிஸில் எடுக்கப்பட்ட பகுதிகள்.

நால்வருக்குமான அனுபவம் மட்டுமே மொத்தப் படம். வேறு ஒன்றும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. இருப்பினும் ஏதோ ஒன்று கட்டிப்போடுகிறது, முழுப்படத்தையும் பார்க்கச் சொல்லி. தொலைத்துவிட்ட இளமையாய் இருக்குமோ?

இதன் அடுத்த பாகம் வந்துவிட்டது.. நான் இன்னும் பார்க்கவில்லை.. அவசியம் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியிருக்கிறது இந்த ஃபீல்குட் திரைப்படம்.

- ஜெய் ஹனுமான்

Read More...

Saturday, August 14, 2010

மீண்டும் ஓ !




தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான சமூக, அரசியல், பத்திரிகைச் சூழல் என் ‘ஓ’பக்கங்கள் பகுதிக்கு இதழியல் வரலாற்றில் இடம் தேடிக் கொடுத்திருக்கிறது. ஓர் எழுத்தாளரின் ‘பத்தி’ தொடர்ந்து வெவ்வேறு பத்திரிகைகளில் வருடக்கணக்காக வெளியாவது இதுவே முதல் முறை. கடந்த ஏழாண்டுகளில் இரண்டு பத்திரிகைகளில் இடம் மாறி இப்போது மூன்றாவதாக ‘கல்கி’ இதழுக்கு வந்திருக்கிறது. காரணங்கள் விமர்சனங்களைச் சகிக்காத அரசியல் சூழலும், கருத்துச் சுதந்திரத்தைவிட வணிகத்தை முதன்மைப்படுத்துகிற பத்திரிகைச் சூழலும் தான்.

கல்கி இதழில் நான் எழுதும் முதல் தொடர் பகுதி இதுவேயாகும். என்னுடைய இரண்டு சிறுகதைகள் எழுபதுகளில் கல்கியில் வெளிவந்திருக்கின்றன. அதில் ஒரு கதை ‘டெலிவிஷன்’. நேரடி ஒளிபரப்பில் பங்கேற்கும் ஒரு வேலையற்ற பட்டதாரி இளைஞன், யாரும் எதிர்பாராதபோது லஞ்சம் ஊழல் பற்றிப் பகிரங்கமாகப் பேசி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பற்றிய கதை. இது வெளியானதும் அப்போது தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். வெவ்வேறு தேர்தல் சமயங்களில் சிறப்பு நிருபராக கல்கி சார்பில் சென்று தொகுதி நிலவரங்கள் பற்றி சில கட்டுரைகள் எழுதி யிருக்கிறேன். 1978-இல் நாங்கள் பரீக்‌ஷா நாடகக் குழு தொடங்கியபோது. முதல் நாடகம் பற்றி எழுதிய ஒரே வார இதழ் ‘கல்கி’தான்.

லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அரசு நிர்வாகம் வேண்டும்; சக மனிதர்களிடம் அன்பும் சமத்துவமும் பேணும் வாழ்க்கை நெறி குழந்தையிலிருந்தே ஊட்டு விக்கப்படவேண்டும்; ஆபாசமும் வக்கிரமும் வன்முறையும் ஆதிக்கம் செலுத்தாத கலை இலக்கியச் சூழல் வேண்டும்... என்ற பார்வைகள்தான் நானும் ‘கல்கி’ இதழும் சந்திக்கும் புள்ளிகள். என்னை ‘ஓ’ போடவைக்கும் ஆச்சரியமான, அதிர்ச்சியான, அவலமான, அக்கறைக்குரிய விஷயங்களைப் பற்றி இங்கே வாசகர்களுடன் பகிர்வதே இந்தப் பகுதியின் நோக்கம். பல விஷயங்களைப் பற்றி நம் கருத்து உடன்படலாம்; மாறுபடலாம். ஆனால் எல்லாவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கும் சிந்திப் பதற்குமான ஒரு கருத்துச் சுதந்திரச் சூழல் தேவை என்பதே நம்மை இணைக்கும் ஒற்றைப் பார்வை.


பொதுவாக நடிகர்களுக்குக் கூச்சம் இருக்கக்கூடாது என்பது நடிப்பின் தேவைகளில் ஒன்று. எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க அப்போதுதான் முடியும். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, வசனகர்த்தாவாக நாடகத்திலும்

சினிமாவிலும் பெயர் வாங்கியவர்; நடிகராக அல்ல. ஆரம்ப நாட்களில் ஒரு சில நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்குக் கூச்சம் விட்டுப் போயிருக்க வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் எதைப் பற்றியும் எந்தக் கூச்சமும் இல்லாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் அவர் ஒருவர்தான்.

அரசு திட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வ மாக இருந்ததை, எழுபதுகளில் தாம் ஆட்சிக்கு வந்தபிறகு மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

இதற்கு முன்பெல்லாம் அரசு திட்டங்களுக்கு பெரியார், அண்ணா பெயரையோ அஞ்சுகம் அம்மையார் பெயரையோ முத்துவேலர், முத்துலட்சுமி பெயர்களையோ சூட்டிக்கொண்டிருந்தவர், இப்போதெல்லாம் தம் பெயரையே சூட்டிக் கொண்டிருக்கிறார். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் மாளிகை என்று பெயர்கள் சூட்டப்படுகின்றன.

அரசாங்கத்தின் ராணி மேரி மகளிர் கல்லூரியில் புதிய கட்டடத்துக்குத் தம் பெயரைச் சூட்டிவிட்டு தானே அதைத் திறந்தும் வைத்திருக்கிறார். ஒப்புக்காக அதைத் திறக்கப் பேராசிரியர் அன்பழகனாரைக் கூட அழைக்கவில்லை. இன்னும் பாக்கியிருப்பது தமக்கான சிலை, தம் உருவப்படம், தம் பெயரில் அருங் காட்சியகம்... இவற்றையும் அவரே திறந்து வைப்பதுதான்.

கலைஞர் பெயர் சூட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன் நடக்கிறது என்று கூட்டணியை ‘வலி’க்கச் செய்யும் ஒரு பேச்சை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதும், அதற்கு கருணாநிதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார். கலைஞர் வீட்டு வசதி திட்டம் முழுக்க மாநில நிதியில் நடக்கிறது. மத்திய அரசின் இந்திரா காந்தி திட்டத்துடன் அதை இளங்கோவன் குழப்பிக்கொண்டு விட்டார் என்பதுதான் அறிக்கையின் சாராம்சம். ஆனால் மாநில அரசு நிதியில் நடப்பதால், அதற்கு தம் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்பது பற்றி பதிலே கிடையாது.

இதில் இன்னொரு பிரச்னை என்ன வென்றால் கலைஞர் என்பதை தம் பெயர் என்று கலைஞர் கருணாநிதியே நம்பத் தொடங்கிவிட்டார் என்பதுதான். அதனால் தான் ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிட்டுப் பேசுவதைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பொரிந்து தள்ளியிருக்கிறார். ‘என் வயது என்ன, உன் வயது என்ன’ என்றெல்லாம் ஏகவசனம் வேறு. கூடவே ‘நான் வயதில் பெரியவன் என்பதால் உன்னைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும் என்பதால் ஏகவசனத்தில் கூப்பிடும் உரிமை எனக்கு உண்டு’ என்று சமாதானம் வேறு.

ஒருவரை அவர் பெயர் சொல்லி அழைப் பது தவறு என்ற விசித்திரமான பண்பாடு தமிழக அரசியலில் மட்டும்தான் இருக்கிறது. இதில் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மீதி எல்லா கட்சிகளும் தங்கள் தலைவர்களுக்கு அடைமொழி சூட்டும் கலாசாரத்தில் விழுந்திருக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு வெளியே பத்திரிகையாளர்கள் பிரதமரை ‘மிஸ்டர் மன்மோகன் சிங்’ என்றோ மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர் என்றோ முகத்துக்கு நேரே கூப்பிடுகிறார்கள். இங்கே அப்படிப் பேசினால் உதை விழும். அலுவலகத்துக்கு ஃபோன் செய்து நிருபரைப் பற்றிப் புகார் செய்வார்கள்.

ஜெயலலிதா தம்மைக் கருணாநிதி என்று அழைப்பது பண்பாட்டுக் குறைவு என்று அறிக்கை விடுத்திருக்கும் இதே கருணாநிதி தான், தொடர்ந்து தம் ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க அரசு என்று ஜெயலலிதா பேசினால், அவரை திருமதி ஜெயலலிதா என்று அழைப்பேன் என்று பண்பாடு பொங்கித் ததும்பும் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டார். ஜெயலலிதா திருமதியா இல்லையா என்பதற்கும் தி.மு.க. மைனாரிட்டி அரசா இல்லையா என்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

உலகத்தில் எந்த நாட்டிலும் இங் குள்ளது போல அரசியல்வாதிகளின் பெயர் சூட்டும் கலாசாரம் இல்லை. மிகப் பெரும் தலைவர்களின் பெயர்களை விமான நிலை யத்துக்கோ நூலகத்துக்கோ சூட்டும் போதுகூட அவர் இறந்த பிறகே சூட்டுகிறார்கள். சிலைகள் வைப்பதும் அப்படித்தான்.

ஜாதிச் சண்டைகள் வருகின்றன என்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்கள் பெயர்களில் இருந்த தலைவர்கள் பெயர்களையெல்லாம் நீக்கி உத்தரவிட்டவர் கலைஞர் கருணாநிதி. தம் நெஞ்சறிவது பொய்யற்க என்ற கூச்சம் இன்னும் கொஞ்சமேனும் அவருக்கு மீதம் இருக்குமானால், உடனடியாக அரசு திட்டங்கள், கட்டடங்கள் பெயர்களிலிருந்து தம் பெயரை நீக்க அவர் உத்தரவிட முன்வரவேண்டும். இல்லாவிட்டாலும் பின்னாளில் ஆட்சி கைமாறும்போது, இந்தப் பெயர்களெல்லாம் அடுத்த ஆட்சியாளரால் நீக்கப்படும் என்ற உண்மையாவது அவருக்கு உறைக்க வேண்டும்.

இன்னும் நூறு வருடம் கழித்து வரும் தமிழ்க் குழந்தைகள் இப்படித் தம் பெயரை தாமே சூட்டி மகிழ்ந்த தலைவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தயவுசெய்து கற்பனை செய்து பாருங்கள். கூச்சமாக இருக்கும்.
கல்கி, ஞாநிக்கு வாழ்த்துகள்


Read More...

சுதந்திர தின வாழ்த்து



பிரதமருக்கு பாதுகாப்பு தேவை, இந்த பாப்பாவுக்கு தேவையில்லை

நாளை சுதந்திர தினம் தலைவர்கள் + இட்லிவடை வாழ்த்து :-)

Read More...

Friday, August 13, 2010

பெட்டி வாங்கிய செய்தியும், பெட்டி செய்தியும் !

இரண்டு செய்தியும் வைகோ பற்றி

பெட்டி வாங்கிய செய்தி
தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பம் அதிகம் - அ.தி.மு.க. கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் வைகோ.....

......2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இருந்த வைகோ, திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டுக்கு வருவதாக வாக்களித்துவிட்டு, மாநாட்டுக்கு முதல் நாளன்று போயஸ் தோட்டத்துக்குப் போய் ஜெயலலிதாவிடம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து சரணாகதி அடைந்தார்.

அப்போது அவர் நாற்பது கோடி ரூபாய்க்கு விலை போய்விட்டதாக பல்வேறு பத்திரிகை களும் கிசுகிசுக்களை எழுதின. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இப்போதும் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில் இன்னும் எத்தனை எத்தனை கோடிகள் பேசுமோ? அல்லது வைகோவை பேசவைக்குமோ? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுமானால் அது எப்படித் தவறாகும்?

நன்றி: முரசொலி


பெட்டி செய்தி:

கடந்த 7-ம் தேதி நடந்த சம்பவம். ஈரோடு புத்தகக் காட்சியில் வைகோ ஒன்றே முக்கால் மணி நேரம் ஆற்றிய உரையில் ... எழுத்தின் வரலாறு, எழுத்துலக மாமேதைகள் பற்றிய குறிப்புகள், அவர்களது எழுத்துகளால் விளைந்த புரட்சிகள் என வரிசையாக வெளிப்பட்டது. தனது உரையில் 168 பெயர்களைச் அடுக்கிக்கொண்டு வ்ந்தார் அப்போது 'பொது உடைமை எழுத்தாளர்கள், திராவிட இயக்க எழுத்தாளர்கள் வரிசையில், சங்கத் தமிழையும், 'பொன்னர் சங்கரையும்' தந்தார் கலைஞர் கருணாநிதி' என்று சொல்லியுள்ளார்.

கலைஞர் பெயரையும் அவருக்கு இலக்கிய அந்தஸ்தையும் கொடுத்ததற்கு வைகோ ஏதாவது பெட்டி வாங்கியிருப்பாரோ ? கோடிகளில் இல்லை என்றாலும் சில லட்சங்கள் வாகியிருப்பார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுமானால் அது எப்படித் தவறாகும்?

Read More...

Thursday, August 12, 2010

விகடனுக்கு வந்த தைரியமும், முரசொலிக்கு வந்த கோபமும்

போன வார விகடனில் வந்த 'மீண்டும் காவிரி?' தலையங்கத்தைப் படித்து விட்டு விகடனின் அட்டைப் படத்தை திரும்பவும் பார்த்து அது விகடன் தானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். அடுத்து இதற்கு கலைஞர் என்ன பதில் சொல்லுவார் என்று யோசித்தேன். அதற்கும் முரசொலியில் பதில் வந்துவிட்டது.

விகடனில் தலையங்கம் + முரசொலியில் அதற்கு வந்த பதிலும் உங்கள் பார்வைக்கு...

மீண்டும் காவிரி?

மேட்டூர் அணை திறக்குமா? காடு கழனிகளில் பசும்கதிர்கள் தலையாட்டுமா? எதிர்வரும் தை, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா? காவிரியை மையப்படுத்தி மீண்டும் சோதனைச் சுழல் தொடங்கிவிட்டது டெல்டா பகுதிகளில். வருடாவருடம் இதையே அரசியலாக்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், டெல்லி பயணம், பிரதமர் சந்திப்பு என்று அரசியல்வாதிகள் பொழுதுபோக்குவது வழக்கம்தான். ஆனால், இந்த வருடம் நாடகமாடவும், கண்துடைப்புக் காட்சிகள் அரங்கேற்றவும் அத்தனை சுலபமாக முடியாது.

காரணம், நெல் அறுவடை நடத்த வேண்டிய தை மாதத்தை ஒட்டியே ஓட்டு அறுவடை நடத்தவேண்டிய தேர்தலும் வருகிறது. தண்ணீரை மையப்படுத்தி, 'கடித இலக்கியம்' படைத்துவிட்டுச் சும்மா இருக்கவோ, தண்ணீர் கேட்டுத் தந்தி அடித்துவிட்டு மக்களின் மறதி நோயைப் பயன்படுத்திக்கொள்வதோ இந்த முறை முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

மத்திய அரசில் அங்கம் வகிப்பதைத் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துவது மட்டும் இன்றி, அண்டை மாநிலத்துக்கு டெல்லி மூலமாக அழுத்தம் கொடுத்து, நம் மாநிலத்தின் நலனைக் காப்பதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையேல், விவசாயிகள் அனைவரையும் அரசாங்கமே கட்டடக் கூலிகளாக மாற்றி நகரத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, விவசாய நிலங்கள் அனைத்தையும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றி செல்போன்களும், கார்களும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் தயாரித்துக்கொண்டே இருக்கலாம். வந்தாரை வாழ வைத்துக்கொண்டே இருக்கலாம். தமிழ்நாட்டில் பிறந்தோரைத் தத்தளிக்க வைத்துக்கொண்டே இருக்கலாம்.

'வாடிய பயிரைக் கண்டால்தானே வாட வேண்டும்' என்று, இங்குள்ள 'நவீன வள்ளலார்கள்' பயிர் வைப்பதற்கே வழி இல்லாமல் செய்துவிடக் கூடாது!

வலது கையில் தர்ப்பையும் இடது கையில் துப்பாக்கியும் ஏந்தி டெல்லி செல்வாரோ விகடன் ஆசிரியர்? - முரசொலி கட்டுரை
4.8.2010 தேதியிட்ட ஆனந்த விகடனில் ‘மீண்டும் காவிரி’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது.

காவிரிப் பிரச்சினை பற்றி ஆனந்த விகடன், தலையங்கம் எழுதியிருப்பதை கூர்ந்து படித்தால், காவிரி டெல்டா விவசாயிகள் மீது அதற்குள்ள கரிசனத்தை விட, கலைஞர் மீது அதற்குள்ள பாப்பாரத்தனம் கலந்த துவேஷ உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

‘‘மேட்டூர் அணை திறக்குமா? காடு கழனிகளில் பசும் கதிர்கள் தலையாட்டுமா? எதிர் வரும் தை விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்குமா? காவிரியை மையப்படுத்தி மீண்டும் சோதனைச் சுழல் தொடங்கி விட்டது டெல்டா பகுதிகளில்..... வருடா வருடம் இதையே அரசியலாக்கி போராட்டம். ஆர்ப்பாட்டம் டெல்லி பயணம், பிரதமர் சந்திப்பு, என்று அரசியல் வாதிகள் பொழுது போக்குவது வழக்கம்தான். ஆனால், இந்த வருடம் நாடகமாடவும், கண்துடைப்புக் காட்சிகள் அரங்கேறவும் அத்தனை சுலபமாக முடியாது.

காரணம் நெல் அறுவடை நடத்த வேண்டிய தை மாதத்தை ஒட்டியே ஓட்டு அறுவடை நடத்த வேண்டிய தேர்தலும் வருகிறது.

தண்ணீரை மையப்படுத்தி கடித இலக்கியம் படைத்து விட்டு சும்மா இருக்கவோ தண்ணீர் கேட்டு தந்தி அடித்து விட்டு மக்களின் மறதி நோயை பயன் படுத்திக் கொள்வதோ இந்த முறை முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

மத்திய அரசில் அங்கம் வகிப்பதை தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துவது மட்டு மின்றி அண்டை மாநிலத்துக்கு அழுத்தம் கொடுத்து நம் மாநிலத்தின் நலனைக் காப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்’’

என்பது சீனுவாச அய்யர் எகத்தாளம் பொங்க ஆனந்த விகடனில் எழுதியிருக்கிற தலையங்கத்தின் ஒரு பகுதி.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளாக இருந்தால் காவிரி நீர் வேண்டும் என்பதற்காகவோ முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக்கூடாது என்பதற்காகவோ ஆந்திரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக் கூடாது என்பதற்காகவோ ஆர்ப்பாட்டம்தான் நடத்த முடியும். போராட்டம்தான் நடத்த முடியும். பிரச்சினை முற்றினால் டெல்லி பயணம், பிரதமர் சந்திப்பு என்பதெல்லாம் இயல்பாக நடைபெறும் இன்றியமையாத பணிகள்தான்.

அதுபோலவே மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் பிரச்சினையின் முக்கியத்துவம், அவசரம் கருதி டெல்லிக்குக் கடிதம் எழுதத் தான் முடியும். காவிரியில் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று அண்டை மாநிலமான கர்நாடகத்துக்கு வேண்டுகோள் விடத்தான் முடியும்.

இவர்களெல்லாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், அவர்கள் எதிர்க்கட்சியினராக இருந் தாலும் ஆளுங்கட்சியினராக இருந்தாலும் செய்தே தீர வேண்டிய இன்றியமையாக் கடமைகளாகும் - காரியங் களாகும்.

இதைத்தான் தமிழக எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியினரும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுவது பற்றிய பிரச்சினையில் சிறப்பாகச் செய்து கொண்டிருக் கிறார்கள்.

மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி ஏன் தண்ணீர் திறந்து விடவில்லை? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப,

கலைஞர் உடனடியாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரினார். கர்நாடக அரசும் தண்ணீர் திறந்து விட ஒப்புக் கொண்டது. அதேசமயம் தென் மேற்கு பருவக்காற்று தொடர்பான மழை இந்த ஆண்டு முன்கூட்டியே பெய்ய ஆரம்பித்ததால் கர்நாடகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களெல்லாம் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டன.

தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று ஒப்புக் கொண்ட அடிப்படையிலும் கபினி, மழை வெள்ளத்தால் நிரம்பி வழிந்ததாலும் கர்நாடக அரசு கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டது.

அதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமாகி காவிரி டெல்டா விவசாயிகளின் பாசன வசதிக்கு தண்ணீர் திறந்து விடும் நல்ல நிலைமை உருவானது.

அதனாலே ஜூலை 28ம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு விட்டது. எனினும் ஆகஸ்ட் 4ஆம் தேதியிட்ட ஆனந்த விகடனில் அதன் ஆசிரியர், மேட்டூருக்கு தண்ணீரே வரவில்லை என்பது போலவும் கர்நாடக அரசை தண்ணீர் திறந்து விடுங்கள் என்று முதல்வர் கலைஞர் கேட்டுக் கொள்ளவே இல்லை என்பது போலவும் -மீண்டும் காவிரி என்ற தலைப்பிட்டு பிலாக்கனம் பாடியிருக்கிறார். ஒப்பாரி வைத்து ஓவென்று அழுதிருக்கிறார்.

கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால், அதனை கடித இலக்கியம் என்று நையாண்டி செய்கிறார் சீனுவாச அய்யர்.



சீனுவாச அய்யர் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆர்ப்பாட்டம், போராட்டம், டெல்லி பயணம், பிரதமர் சந்திப்பு, பிரதமருக் குக் கடிதம் இவைகளையெல்லாம் தவிர்த்து விட்டு புதிதாக என்ன செய்திருப்பார்? முதல்வர் சீனுவாச அய்யர் ஒரு கையில் தர்ப்பைப்புல்லும் இன்னொருகையில் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஏந்திய துப்பாக்கியும் ஏந்திக் கொண்டு டெல்லி சென்று விகடனின் சின்னமான குரங்கு குதித்தது போல பிரதமர் மன்மோகன் சிங்கின் மேஜையின் மீது குதித்து ``பிரதமரே, காவிரியில் தண்ணீர் திறந்துவிட நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால், இதோ பாருங்கள்! வலது கையில் உள்ள தர்ப்பைப்புல்லை வைத்துக் கொண்டு அக்னி ஸுத்தம் சொல்லி உங்களை எரித்து சாம்பலாக்கி விடுவேன் அல்லது காந்தியடி களை கோட்சே எப்படி சுட்டுக் கொன் றானோ அதுபோல இதோ இடது கையில் இருக்கிற இந்தத் துப்பாக்கியால் உங்களை முழங்காலுக்குக் கீழே சுட்டு எச்சரிப்பேன்" என்று கூறிவிடுவாரோ முதல்வர் சீனுவாச அய்யர்? அதுபோல அக்னி ஸுத்தம் சொல்ல தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் தெரியாது, முதல்வருக்கும் தெரியாது. துப்பாக்கியால் சுடுவது ஜனநாயகத்துக்கு உகந்த மரபும் அல்ல. ஆனால், எழுதவே தெரியாத சீனுவாச அய்யர், மத்திய அரசுக்கு கலைஞர் கடிதம் எழுதுவதை கடித இலக்கியம் என்று கேலி செய்கிறார்.


கலைஞர் கடிதம் எழுதினாலே அதுவும் ஒரு இலக்கியமாக - கடித இலக்கியமாக வளர்ந்து விடுகிறது என்றால் கொண்டை உள்ளவள் பூ முடித்துக் கொள்கிறாள். மொட்டைச்சிகள், முண்டைகள் அதைப் பார்த்து வயிற்றிலும் வாயிலும் லபோ திபோ என்று அடித்துக் கொண்டால் அதற்கு யார் என்ன செய்வது? அது ‘அவாள்’ புத்தி!

- நன்றி, முரசொலி

எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது என்றும், நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன் என்றும் நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம் - ஆயிரம் மாச்சரியங்கள் தோன்றலாம். எல்லாவற்றையும் விட, தமிழ்ப் பண்பாடு என்று ஒன்று இருக்கிறது, அதைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றும் சில வாரங்களுக்கும் முன் மூன்று மேடைகளில் கலைஞர் பேசினார்.


Read More...

Monday, August 09, 2010

மண்டேனா ஒன்று 9/8/2010

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஜோயல் ஸ்டீன் என்பவரால் புனையப்பட்ட இந்நகைச்சுவைக் கட்டுரை இந்தியர்களை அவமதிப்பதாக, அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். டைம்ஸ் பத்திரிக்கை மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறினர். அவ்வாறே டைம்ஸ் பத்திரிக்கையும், இக்கட்டுரையாசிரியரும் மன்னிப்பு கோரினர். கட்டுரை வந்த சில நாட்களில் யதிராஜிடம் மொழிபெயர்க்க சொன்னேன். இந்த வாரம் அந்த கட்டுரையின் மொழியாக்கம் உங்களது பார்வைக்காக.



அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியிலுள்ள எடிசன் என்ற நகரில் தவிர, ஏனைய அமெரிக்கா அனைத்திலுமே நான் குடியேற்றத்தை ஆதரிக்கிறேன். 1989 ஆம் ஆண்டில் நான் மேநிலைப்பள்ளியிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் பொழுது எடிசன் நகரம் முழுக்க வெள்ளையர்கள் நிரம்பிய ஒரு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகராகவே இருந்தது. அப்பொழுது அந்நகரம் மென்லோ பார்க் என்ற பெயரால் வழங்கப்பட்டு வந்தது. பிறகு தாமஸ் ஆல்வா எடிசன் அந்நகரில் ஒரு கடை துவங்கியதும், அவரை கெளரவிக்கும் விதமாக அந்நகர் எடிசன் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பிறகு இந்நகர் ஒரு குறிப்பிட்ட இந்திய சமூகத்தினருக்கு தாயகமாக விளங்கியது. இந்தியாவைப் பொருத்தவரை இங்கிருக்கும் இந்திய சமூகத்தினர், முட்டாள் அமெரிக்கர்களுக்கு இணைய ரெளட்டரை எப்படி மறுபடியும் உயிர்பிப்பது என்று கற்றுத் தருபவர்கள்.

இப்போது என்னுடைய நகரம் எனக்கு முற்றிலும் பழக்கமில்லாததாய்த் தோன்றுகிறது. என்னுடைய பால்ய நண்பர்கள் மதுபான விருந்திற்காக சிலவற்றைத் திருடிய பிட்ஸா ஹட் இப்பொழுது சற்றும் பொருத்தமற்ற மேற்கூரையுடன் கூடிய இந்திய இனிப்புப் பலகாரக் கடையாக விளங்குகிறது. நான் முன்பு சிலவற்றைத் திருடிய A&P, இப்பொழுது இந்திய பலசரக்குக் கடையாகக் காட்சி தருகிறது. நாங்கள் பலான திரைப்படங்களைக் கண்டுகளித்த மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் இன்று பாலிவுட் திரைப்படங்களைத் திரையிட்டுக் கொண்டும், சமோஸாக்களைப் பரிமாறிக் கொண்டும் இருக்கின்றன. நாங்கள் பணம் திருடிய ஒரு இத்தாலிய ரெஸ்டாரெண்ட், இன்றைக்கு மொகல் என்ற பெயரில் அமெரிக்காவிலேயே புகழ்பெற்ற ஒரு இந்திய ரெஸ்டாரெண்டாக விளங்குகிறது. இவ்வாறாக எடிசனில் உள்ள ஒட்டுமொத்த வெள்ளையின இளைய சந்ததியினர் அனைவரும் குற்றங்களைக் கற்க இடமில்லாமல் போய்விட்டது.

உலக வரைபடத்தில் எங்களிடமிருந்து பாதி தொலைவு தள்ளியுள்ள ஒரு கூட்டத்தினரால் எவ்வாறு தற்செயலாக நியூ ஜெர்ஸியிலுள்ள ஒரு நகரைத் தேர்ந்தெடுத்து தம்மவரைக் குடியேற்ற முடிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏனைய இந்திய மாகாணங்களால் கேலிக்குள்ளாக்கப்பட்ட ஒரு மாகாணத்திலிருந்து குடியேறியவர்களா? இந்தியாவிலுள்ள நடைபாதைகளும், ஷாப்பிங் மால்களும் அவ்வளவு மோசமானவையாகவா இருக்கும்? அல்லது நாங்கள் தவறுதலாக எங்களது அனைத்து சாலைகளும் மும்பைக்குச் செல்லுமாறு அமைத்து விட்டோமா?

இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு ரட்ஜர்ஸ் பல்கலையில் பாலிஸி ஸ்கூல் அதிகாரியாக இருக்கும் ஜேம்ஸ் ஹ்யூஸைத் தொடர்பு கொண்டபோது அவர் விவரித்தார். அதாவது, லிண்டன் ஜான்சனுடைய 1965 ஆம் ஆண்டு குடியேற்றச் சட்டம், ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுக்கு, அமெரிக்காவில் தங்களது குடிகளை நிறுவிக் கொள்வதற்கான விதிகளை தளர்த்தியது. லிண்டன் ஜான்ஸனுக்கு ஆசியர்களுடன் உள்ள தெளிவில்லாத உறவினால், அவர் ஆசியர்களை இங்கு வரவேற்பதிலும், ஆசியாவிற்கு சென்று அவர்களை நசுக்குவது ஆகிய இரண்டிலுமே விருப்பு கொண்டிருந்தார்.

அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நான் சிறுவனாக இருந்த சமயத்தில், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து மருத்துவர்களும், பொறியாளர்களுமாக எடிசனில் குடியேறினர். இதற்கு முக்கியக் காரணம், எடிசனில் உள்ள நல்ல பள்ளிகள், குறைந்த விலைவாசி மற்றும் எடிசனுக்கு மிக அருகாமையிலுள்ள AT&T நிறுவனம். சிறிது காலம் வரை நாங்கள் இந்தியர்களை மிக்க அறிவு ஜீவிகளாகவே கருதி வந்தோம். பிறகு 1980- களில் மருத்துவர்களும், பொறியாளர்களும் வியாபாரத் தொடர்புடைய தங்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களை இங்கு வந்து குடியேற்றினர். இம்முயற்சி இந்தியர்கள் அறிவு ஜீவிகள் என்ற கருத்தில் எங்களுக்கு சிறிதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. 1990 – களில் இந்திய வர்த்தகர்கள் அவர்களுடைய சகோதரர்களை இங்கு குடியமர்த்தினர். இந்தியா ஏன் இன்னும் மிகுந்த ஏழ்மையான தேசமாக இருக்கிறது என்று நாங்கள் புரிந்து கொள்ளத் துவங்கினோம்.

இறுதியாக, எடிசனுடைய கலாச்சாரத்தை முழுமையாக மாற்றுவதற்குப் போதுமான இந்தியர்கள் அங்கு இருந்தனர். அச்சமயத்தில் என்னுடைய நண்பர் ஒருவர், எடிசன் வாழ் இந்தியர்களை "Dot Heads" (நெற்றித் திலகமிட்டிருப்பதால்) என குறிப்பிடத் துவங்கினார். ஒரு பள்ளிச் சிறுவன் இந்தியர்கள் மிகுந்த தெருவின் வழியே செல்லும் போது " Go home to India" என்று கூச்சலிட்டான். இரண்டிற்கும் மேற்பட்ட கைகளையும், யானை முகத்தையும் உள்ள கடவுளை ஆதர்சமாகக் கொண்ட ஒரு பிரிவினரை "Dot Heads" என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமான இன அவமதிப்பு என்றால், நமது பள்ளிகளின் தரம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது.

1980 களிலிருந்த எனது சில நண்பர்களைப் போலல்லாமல், என் நகரில் ஏற்பட்டிருந்த பல மாற்றங்கள் என்னைக் கவர்ந்தன. குறிப்பாக, நல்ல ரெஸ்டாரண்ட்கள், என்னுடன் டங்கன்ஸ் & ட்ராகன்ஸ் விளையாடுவதற்கு ஏற்புடைய நிறத்துடனான மக்கள் மற்றும் வயதான வெள்ளையர்களிடம் அதிகம் வசூலிக்காத ரெஸ்டாரண்ட் முதலாளிகள் போன்றவை. ஆனால் நான் வெளியேறிய சிறிது காலத்திற்குப் பிறகு, அந்நகர் இந்தியத்தனமான ஸ்ட்ரிப்பிங் மால்களும், வீடுகளுமாக களையிழந்து போய்விட்டது. அங்கு எப்பொழுது சென்றாலும், அரிஸோனாவைச் சேர்ந்தவர்கள் பேசுவதை உணர்வேன். தனிமைப்படுத்தப்பட்டு, எதையோ இழந்துவிட்டு, நம்பிக்கையிழந்து போய் யாரும் எவ்வளவு காரமான பதார்த்ததையும் சாப்பிட முடியும் என்பது போல.

இவ்விஷயம் என்னை ஏன் இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அறிவதற்காக, என்னுடைய மேநிலைப்பள்ளி நண்பரான ஜுன் சோய் என்பவரிடம் பேசினேன். இப்பொழுதுதான் எடிசனுடைய மேயராக இருந்து ஓய்வு பெற்றிருப்பவர். அவர் கூறினார், எடிசனின் புதிய பரிமாணத்தில் அதனுடைய செல்வச் செழிப்பு குறைந்திருப்பதே என்னுடைய இக்கருத்திற்குக் காரணமாக இருக்கக் கூடுமென்றும், இந்தியர்களின் வருகை மட்டும் ஏற்பட்டிருக்காவிடில், எடிசனுடைய பொருளாதார நிலை இன்னும் மோசமான நிலைக்குச் சென்றிருக்குமென்றும் அவர் கூறினார். எந்தவொரு இடமுமே மாற்றத்திற்குட்பட்டதுதான். நான் மன்ஹாட்டன் செல்சியாவில் வாழ்ந்த பதினோரு வருட காலத்தில், அப்பகுதி, பெரும் கொள்ளையர்களும், வேசிகளுமாக இருந்ததிலிருந்து, ஓரினச்சேர்க்கையாளர்களும், எதிர்பாலர்களின் ஆடைகளை அணிவிப்பவர்களைக் கவரும் வேசிகளின் பகுதியாக மாறி, பிறகு அதிலிருந்து, பெரும் பணக்காரர்களும், மற்றும் திருமணத்திற்குப் பிறகு வேறு ஆண்களைப் புணரும் பெண்களுடைய நகராக மாறியிருக்கிறது. சோய் சொன்னது போல், அந்நகரினுடைய மாற்றங்களின் ஒரு பகுதியாக நானும் இருந்திருக்கிறேன். அத்துடன் அவ்விஷயத்தை அங்கேயே நிறுத்திவிட்டோம்.

தாயகத்திற்கு மறுபடியும் செல்ல இயலாத, மற்றும் அங்கிருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவியலாத, எடிசனின் முதல் குடியேற்ற சந்ததியினர் தங்களுடைய புதிய சூழலுடன் அவ்வளவு எளிதாக ஒன்றமுடியவில்லை. ஆனால் என்னுடைய பழைய ஸ்டீவன்ஸ் மேநிலைப்பள்ளியில் படிக்கும் தற்போதைய மாணவர்களின் ஃபேஸ்புக் புகைப்படங்கள் எரிச்சலூட்டுபவையாக உள்ளன. அவர்கள் பெரும்பாலும் என்னுடன் 80’களில் பழகிய இத்தாலிய இளைஞர்கள் போலிருந்தார்கள். தங்கச் சங்கிலிகள், பட்டனில்லாத சட்டைகள், ஜெல் போடப்பட்ட தலைமயிர் என. அவர்கள் அணிந்து கொள்ளும் வாசனை திரவியத்தால் அமெரிக்க சுதந்திர தேவி சிலையே கண்ணீர் வடிப்பாள்.

டைம்ஸ் பத்திரிக்கையின் மன்னிப்பு : ஜோயல் ஸ்டீன் அவர்களுடைய இந்த ஹாஸ்யக் கட்டுரையினால் எங்களுடைய வாசகர்கள் யாராவது புண்பட்டிருப்பின், அதற்காக எங்களது மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இக்கட்டுரை நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் புனைப்பட்டது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Source: My Own Private India, Times


இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் மீது அமெரிக்க எம்.பி. ஒருவர் கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார். திருட்டுப் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடும் நிறுவனங்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் மலிவான சொல்லை அவர் இன்போசிஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களை குறிப்பிடவும் பயன்படுத்தி உள்ளார். அடுத்த மண்டேக்கு, அடுத்த மன்னிப்பு ரெடி :-)



Read More...

Sunday, August 08, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 8-8-2010

இட்லிவடைக்கு முனி எழுதும் கடிதம். ..


அன்புள்ள இட்லிவடை,

ரொம்ப நாளா ஆளை காணோம் ? விருத்தாசலத்துக்கு போய்விட்டாயா ? நேற்று “விருத்தகிரி” படப்பிடிப்பில் மன்னர் வேஷத்தில விஜயகாந்த் தடித்ததை பார்த்தியா ? இவர் எப்ப மன்னர் ஆகி, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து எப்ப முதலமைச்சர் ஆவது. நித்தியிடம் போய் ஆசிர்வாதம் வாங்கினாலாவது எதாவது நடக்கும் என்று நினைக்கிறேன்.

நம்ம எஸ்.வி.சேகரை பாரு. ஏதோ தொண்டை வலியாம், டாக்டரிடம் போகாமல், நேராக நித்தியிடம் போய் தன் வலியை சரி செய்துள்ளார். இதிலிருந்து தெரிவது என்ன ? நித்திக்கு தொண்டை தெரப்பி மட்டும் தான் தெரியும் போல. எனக்கு தெரிந்து தொண்டையில் கிச் கிச் என்றால் விக்ஸ் சாப்பிட வேண்டும். இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கும் வரை நித்தியை ஒன்றும் செய்ய முடியாது. சன் டிவி காட்சிகளை பற்றி கேட்ட போது அதற்கு சேகர் சொன்ன பதில் "முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர்". சேகருக்கு காமெடி கூட பிறந்த குணம்.

நித்தியின் வீடியோவை போட்டு ஒரு கலக்கு கலக்கிய சன் டிவி நேற்றும் இன்றும் எந்திரன் பாடல் ரிலீஸ் நிகழ்ச்சியை போட்டு கலக்குகிறது. விளம்பரங்களுக்கும், 'அடுத்து வருவது.." என்பதற்கும் இடையில் நிகழ்ச்சியை பார்ப்பது என்பது ஒரு பெரிய சவால்.

நித்திக்கே ரசிகர்கள் இருக்கும் போது, சிம்புவின் இருக்க மாட்டார்களா ? போன வாரம் ஒரு பத்திரிக்கைக்கு 3 இடியட்ஸ் படத்தில நீங்களும் நடிக்கிறீங்களா என்று கேள்விக்கு அவரின் பதில்.

"விஜய் சார் பெரிய ஹீரோ. அவர்கூட நடிக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, எனக்கு அஜீத் ஃபேன்ஸ் அதிகம். அதையும் யோசிச்சுதான் முடிவு எடுக்கணும். அஜீத்ரசிகர் களை சங்கடப்படுத்திடக் கூடாதுன்னு தயக்கமா இருக்கு. இன்னும் முடிவு பண்ணலை!"

என்ன ஒரு 'வில்லத்தனம்'. கமல் படத்தில் இவர் நடித்தால் எனக்கு ரஜினி ரசிகர்கள் அதிகம் அதனால் தயக்கமா இருக்கு என்று சொன்னாலும் சொல்லுவார். எது எப்படியோ அஜித், சிம்புவிற்கு பெண் ரசிகர்கள் தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். லிட்டில் சூப்பர் ஸ்டார் குட் பிகம் பிக் சூப்பர் ஸ்டார். ஆனால் சிம்புவிடம் ஒரு நல்ல குணம் இருக்கு. அது, பேண்ட் பாக்கெட்டில் எப்போது சில சாக்கிலேட் இருக்கும். 'குட்டி' குழந்தைகள் யாராவது வந்தால் அதை கொடுத்து மயக்குவாராம். நான் சொல்லுவது நிஜ குட்டி குழந்தைகள்.


இது கலி காலம், சூப்பர் ஸ்டார் யார் என்பதை கூட மறந்துவிடுகிறார்கள். மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தில் நடந்த எந்திரன் பாடல் விழாவில் ஐஸ்வர்யா பேசி முடித்துவிட்டு கொஞ்சம் தூரம் நடக்க உடனே பதறித் துடித்து மீண்டும் மைக் முன்னாடி வந்து ஐஸ் ரஜினியை பற்றி கலைஞர் பேசினார். ( புகழ்ந்து என்பதற்கு செம்மொழி வார்த்தை கலைஞர் ). மேடையிலே இப்படி நடித்தால், படத்தில் எப்படி நடித்திருப்பார் என்று சொல்ல வேண்டியதில்லை.

நிச்சயம் தமிழ் படங்களில் ஒரு ரவுண்ட் வருவார் என்று தெரிகிறது. எந்திரன் பாடலை கேட்டுவிட்டி ரஜினி/ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் "கேட்க கேட்க தான் நல்லா இருக்கும் ஹிட்டாகும்" என்று சொல்லுகிறார்கள். சுமாரான பெண்ணை தினமும் பார்த்தால் கொஞ்ச நாளில் அவரே பரவாயில்லை மாதிரி தெரிவதில்லையா ? அதே டெக்னிக் தான் இது. ஆண்களுக்கு சகிப்பு தன்மை அதிகம் உண்டு ஆனால் சாமர்த்தியம் போறாது. சகிப்பு தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன வித்தியாசம் ? மனைவி கொடுக்கும் காப்பியை குடித்தால் அது சகிப்பு தன்மை. அதை அவளுக்கு தெரியாமல் சிங்கில் கொட்டினால் சாமர்த்தியம். இப்ப முருகனை எடுத்துக்கொள்ளுங்கள் உலகத்தை சுற்றி வா என்று சொன்னவுடன் உடனே மயில் மீது ஏறி சுற்றினார். அவருக்கு சாமர்த்தியம் போறாது.

ஞாநி தமிழ் பத்திரிக்கையை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார். ஆனந்த விகடன், குமுதமை தொடந்து இப்ப கல்கியில் ஓ-பக்கங்கள் வர போகிறதாம். சில வாரங்களுக்கு முன் ஞாநி 'நேசமுடன்' கல்கியில் எழுதுவார் என்று டிவிட் விட்டேன். பலர் ஜோக் என்று நினைத்தார்கள். ஆனால் சில சமயம் ஜோக் நிஜமாகும் வாய்ப்பு இருக்கிறது. இனி கல்கிக்கு முரசொலியில் 'இலவச' விளம்பரங்களை எதிர்ப்பார்க்கலாம்.

முருகனை பற்றி சொல்லிவிட்டு பிள்ளையார் பற்றி சொல்ல வேண்டாமா ?

ஆன்மீகத்தில் இப்ப எல்லாம் சந்தேகம் வந்தால் யாரை கேட்பது என்று குழம்ப வேண்டாம். இருக்கவே இருக்கார் கலைஞர். பிள்ளையாருக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சில வாரங்களுக்கு முன் பேசியுள்ளார்.

"ஏதோ இந்த அரசு எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிற அரசு, எது கேட்டாலும் தருகிற அரசு என்பதற்காக எதையும் கேட்டுவிடக் கூடாது. புராணத்தில் பிள்ளையாருக்கு ஏன் கல்யாணம் ஆகவில்லை என்றால், அவர் கேட்கக் கூடாததை கேட்டு விட்டார். "உனக்கு பெண் எப்படி இருக்க வேண்டும்' என கேட்ட போது, பார்வதியை காட்டி, "எங்க அம்மா மாதிரி பொண்ணு இருக்கணும்' என பிள்ளையார் சொன்னார். அதனால் கோபம் வந்து, "பிள்ளையாருக்கு கல்யாணமே இல்லை' என சாபமிட்டனர் என்கிறது ஒரு புராணம்"


ஆக புராணம், பிள்ளையார் எல்லாம் உண்மை போலிருக்கு.

அவருக்கு தெரியாது வேறு ஒரு புராணத்தில் புள்ளையாருக்கு இரண்டு உண்டு என்பது. அந்த புராணம் பற்றி வேறு நிகழ்ச்சியில் பேசுவார். கவலைப்படாதே. கலைஞர் ஆட்சியில் இலவச பேச்சுக்கும் பஞ்சம் இல்லை.

திமுகவின் அடுத்த இலவச திட்டம் என்ன தெரியுமா ? இலவச ஃபிரிட்ஜாம். நிஜமாக மக்களுக்கு ஐஸ் வைப்பது என்றால் இது தான். ஸ்பெக்டரம் பணம் எப்படியோ மக்களுக்கு வினியோகம் ஆனால் நல்லது. துக்ளகில் ஒரு கேள்வி இப்படி போகிறது ‘அமைச்சர் ராசா மீது ஊழல் புகார் என்றதும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் மீது பொய்யாகக் குற்றம் சொல்கிறார்கள் என்று புலம்பிய கருணாநிதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்கிறாரே? அவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தானே?’

நல்ல கேள்வி. நன்றி பத்ரி.

பத்ரி உலகமயமாதல் பற்றி நீயா நானாவில் நடித்திருக்கிறார். சாரி, பங்குகொண்டுள்ளார். எனக்கு தெரிந்து இந்தியா உலகமயமாகுமோ ஆகாதோ நிச்சயம் நீயா நானா உலகமயமாகியது - சாரு, ஜெயமோகன், பத்ரி, ஞாநி என்று பிளாக் உலகம் வந்துவிட்டார்கள். பா.ராவும், சரக்கு மாஸ்டரும், இட்லிவடையும் தான் பாக்கி. கூடிய சீக்கிரம் வந்துவிடுவார்கள். கனகவேல் காக்கும் தெய்வமா அல்லது ஸ்ரீராகவேந்தர் காக்கும் தெய்வமா என்று ஒரு டாப்பிக் வைத்தால் நல்லா இருக்கும். நான் பார்வையாளனாக வர ரெடி.

கிட்டதட்ட ஒரு லட்சம் பார்வையாளர்கள் வர இருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் தோண்ட தோண்ட பலதும் கிடைக்கிறது. காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது என்று முடிவெடுத்ததுமே, மும்பை தாக்குதலைக் காரணம் காட்டி, பாதுகாப்பை முன்னிட்டு பல நாட்டு வீரர்கள் இந்தியாவிற்கு வர மறுப்பு தெரிவித்தனர். அதையெல்லாம் ஒருவழியாக தாஜா செய்து, மேற்கொண்டு ஆகவேண்டியவற்றைக் கவனித்தால், இன்றுவரை இன்னும் மைதானங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்குண்டான வசதிகள் இன்றுவரை தயாராகவில்லை. போட்டிகள் துவங்க இன்னும் 60 நாள்கள் இருக்க பல விதங்களில் லஞ்சம் பற்றி தினமும் ஒரு பக்கம் பேப்பரில் விளம்பரம் கிடைக்கிறது, 100ரூபாய் குப்பை தொட்டியிலிருந்து பல லட்சம் பொருட்கள் வரை லஞ்சம் விளையாடியிருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் மணி சங்கர ஐயர் மணி அடித்ததால் தான். ஐயர் என்றால் கோயிலில் மணி அடிக்க வேண்டும். மைக் முன்னால் மணி அடித்தால் ? கத்தி போய் வால் வந்த கதையாக இப்போது இது. அடுத்த ஊழல் வரை டிவியில் இது ஓடும். ஊழல் நம் நாட்டு பாரம்பரியம்.

"பார்க்க ரொம்ப பாரம்பரியமா இருக்கிறது தான் என் ஸ்டைல். நான் எப்பவும் திருநாள்ளாறு தியாகராஜர் சன்னதியோட வீபூதியை வெச்சுகிட்டு தான் மேடை ஏறுவோன். மேடையில பாடுறப்போ மார்டனா இரு, மத்தவங்க மாதிரி டிரஸ் பண்ணிக்கோன்னு நிறைய பேர் சொல்லிட்டாங்க. ஆனா கவர்ச்சி உடைகள்ல எனக்குத் துளிக்கூட விருப்பம் இல்லை. அதே போல பாடகிகள் காம்பியரிங் டப்பிங்.... எல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு நல்லா பாடறதிலும் கர்நாடக சங்கீதத்தை இன்னும் முழுக்க கத்துக்கறதுலயும் தான் விருப்பம்" சொன்னது பாடகி சைந்தவி. அம்மணி 'சங்கீத மஹா யுத்ததுக்கு' ரெடியாயிட்டாங்க என்று நினைக்கிறேன். அம்மணிக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் அழகான கவர்ச்சி தான் என்றுமே எடுப்படும் :-)

ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகள் அனைத்துமே திமுகவிற்கு உரைக்கிறது என்பது தினசரி முரசொலியைப் பார்த்தாலே தெரிகிறது. அதுவும் கோவை மாநாட்டிற்குப் பிறகு திமுக ரொம்பவே பயந்து போயுள்ளது, கலைஞர் அங்கு இரண்டாம் இன்னிங்ஸ் ஆடியதிலிருந்து தெரிகிறது. சென்ற வார முரசொலியில் ஜெயலலிதாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் கண்டன கூட்டம் வேற. ஜெயலலிதாவின் தாய் சந்தியாவைப் பற்றி எழுதப் போவதாக முரசொலி பூச்சாண்டி காண்பிக்கிறது. இந்த லட்சணத்தில் தமக்கு அரசியல் பண்பாட்டை காமராஜரும், அண்ணாவும் கலந்து புகட்டியதாக வேறு கலைஞர் மார் தட்டுகிறார். நாம் தலையில் ரத்தம் வரும் வரை தட்டிக்கொள்ள வேண்டியது தான்.

தமது வாழ்க்கை வரலாற்று நாவலின் கையெழுத்துப் பக்கத்துக்காக 'ரத்தம் சிந்தியதாக' சச்சின் பற்றி கொஞ்சம் நாளைக்கு முன் ஒரு செய்தி வந்தது. நல்ல வேளையாக அது தவறான செய்தி என்று சச்சினே சொல்லிவிட்டார். இல்லை என்றால் அவர் திராவிட பரம்பரையில் சேர்ந்திருப்பார்.

"
என்னுடைய ரத்தத்தை எடுத்து சிவப்பு வண்ணத்திற்கு பதிலாக கொடுத்து திராவிடர் கழகக் கொடியை அன்றைக்கு உருவாக்கினோம். அதனுடைய விரிவாக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி. இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற "திராவிட'' என்கிற சொல்லை சேர்த்துக் கொண்டிருக்கின்ற எந்த கட்சியின் கொடியிலும் - காணப்படுகின்ற சிவப்பு இருக்கிறதே, அது என்னுடைய ரத்தம் தான் என்பதை அவர்களுக்கெல்லாம் நான் நினைவூட்ட விரும்புகிறேன்"
இது கலைஞர் பேசியது. சச்சின் தப்பித்தார்.

பாவம் 2 தேர்வு போலி சான்றிதழ்கள் கொடுத்த மாணவர்கள் தான் தப்பிக்க முடியவில்லை. இந்த மோசடியில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர், பிளஸ் 2வில் 80 சதவீத மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். டாக்டராக வேண்டும் என்ற ஆசையில் முன்னணி கல்லூரியில் படிக்க வேண்டும் என்று இந்த குறுக்கு வழியை முயற்சித்துள்ளனர். இப்ப இவர்களின் எதிர்காலத்தை பாருங்கள்



நல்லா படிச்சா
இந்தியாவுல நீ டாட்டா
ரொம்ப நல்லா படிச்சா
இந்தியாவுக்கே டாட்டா


இப்ப உனக்கு டாட்டா,
இப்படிக்கு,
முனி

பிகு: இந்த மாதிரி படம் இல்லை என்றால் கடிதம் பூர்த்தியாகாது, அதனால்... :-)



Read More...