பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 30, 2010

உலகக் கோப்பை இரண்டாவது சுற்று - Day 3

இரண்டாம் சுற்றின் மூன்றாம் நாளில் முதல் ஆட்டத்தில் நெதரலாந்தை எதிர்த்து ஸ்லொவாகியா விளையாடியது.

நெதர்லாந்து எந்தக் காரணத்தினாலோ உலகக் கோப்பை என்றால் சொதப்பும். ரூட் குலிட், வான் பாஸ்டம் போன்ற லெஜெண்ட்கள் ஆடும் போதும் என்ன காரணத்தினாலோ சத்தமின்றி போட்டியை விட்டு வெளியேறுவர் நெதர்லாந்தினர்.

இம் முறை நெதர்லாந்து முதல் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. எந்த ஒரு டச்சு அணியும் இது வ்ரை நான்கு ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றியைக் கண்டதில்லை என்பதால், ஸ்லோவாகியாவை எதிர்த்து வெல்லுமா என்ற சந்தேகம் எழுந்தது. நெதர்லாந்தின் சிறந்த வீரரான ரோபன் காயத்திலிருந்து மீண்டு ஆட வந்தது அணிக்கு வலு சேர்த்திருக்கும்.



ஸ்லோவாகியா அணி கோலியத்தைக் வீழ்த்திய டேவிட். கடந்த சாம்பியன் இத்தாலியை வீட்டுக்கு அனுப்பிய உற்சாகத்தில் இருக்கும் நாடு. ஸ்லோவாகியாவின் ஸ்டிரைகர் விட்டெக் மிகச் சிறப்பாக் ஆடி கோல்களை குவித்து வருகிறார். இன்னொரு கோலியத்தை வீழ்த்துவாரா டேவிட்?

The second one was too hot handle.

ஆட்டம் தொடங்கிய போது ஸ்லோவாகியா, பெரிய அணியைக் கண்டு மிரளாமல் தன்னம்பிக்கையுடன் ஆடியது. நேரம் செல்ல செல்ல வான் பெர்ஸியும், ஸ்னைடரும் ஸ்லோவாக்கிய தற்காப்புக்கு நெருக்கடியை அதிகரித்தபடி வந்தனர். 18-வது நிமிடத்தில் நெதர்லாந்து அரையில் இருந்து செலுத்தப்பட்ட லாங் பாலை பிடிக்க ஸ்லோவாகிய வீரரை outpace செய்ய சீறிய ரோபன் பந்தை முதலில் அடைந்து, வலப்பக்கத்தில் இருந்த பந்தை இடப்பக்கமாய் திசை திருப்பி, தடுக்க வந்த டிஃபெண்டர் கண்ணில் மண்ணை தூவி, near post-ல் கோலின் கீழ் பகுதியில் செல்லுமாறு பந்தை தனது இடக் காலால் செலுத்த ஸ்கோர் 1-0.


Arjen Robben Goal To Slovakia - The best bloopers are a click away

ரோபனின் மின்னல் வேக ஓட்டம் டச்சு ரசிகர்களுக்கு நிறைவாக இருந்திருக்கும். அந் நாட்டின் சிறந்த வீரர் காயத்திலிருந்து முற்றிலும் மீண்டதை எண்ணி மகிழ்ந்திருப்பர்.

முதல் பாதியிலேயே இன்னும்சில கோல்களை நெதர்லாந்து போட்டிருக்கக் கூடும். ஆர்ஸெனலுக்கு ஆடும் வான் பெர்ஸிக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவர் முற்றிலும் பயன்படுத்தாததால் இடைவேளையின் போதும் ஸ்கோர் 1-0 என்றே தொடர்ந்தது.

இரண்டாம் பாதியிலும் ரோபன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். வான் பெர்ஸி டிஃபெண்டர்களை ஏய்த்து தனியாக இருந்த ரோபனிடம் அளிக்க, அவரது முயற்சி கோல்கீப்பர் Mucha-வின் (இவர் பெயரை தமிழில் எழுதினால் என்னவோ போல இருக்கிறது), விரல் நுனியில் பட்டு கோலை விட்டு விலகியது.

65 நிமிடங்களுக்கு பின், ஞானோதயம் வந்தவர்கள் போல, ஸ்லோவாகியர்கள் அதிரடியில் இறங்கினர். 67-வது நிமிடத்தில் ஒரு நல்ல ஷாட்டை கோலுக்கு வெளியில் தள்ளி காத்தார் டச்சு கோல்கீப்பர். சில நொடிகளுக்கெல்லாம் ஸ்லோவாகியாவின் chance of a lifetime வாய்த்தது. ஆளரவமில்லாத இடத்தில், பொறுமையாய் குறி பார்த்து அடிக்க போதிய அவகாசத்துடன் ஒரு பொன்னான வாய்ப்பு ஸ்லொவாகியா அணியின் சிறந்த வீரர் விட்டெக்குக்கு வாய்த்து. பந்தை நேராக கோல்கீப்பர் ஸ்டெகெலென்பர்க்கிடம் அடித்து வீணாக்கினார் விட்டெக். இந்த முயற்சி கோலாகியிருப்பின் ஆட்டமே மாறியிருக்கக் கூடும்.

84-வது நிமிடத்தில் Kuyt-ன் அற்புதமான கிராஸை வாங்கி கச்சிதமாய் கோலடித்தார் ஸ்னைடர். 2-0.

ஆறு நிமிடங்களில் ஸ்லோவாகியா பல முயற்சிகள் செய்த போதும் கோல் அடிக்க இஞ்சரி டைம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

பெனல்டி பாக்ஸினுள் விட்டக்கை நெதர்லாந்து கோல்கீப்பர் வீழ்த்தி ஃபௌலாக்கியதால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது. விட்டக் கோல் அடித்து 2-1 ஆக்குவதற்கும் இறுதி விசில் ஊதப்படுவதற்கும் சரியாக இருந்தது.

ஸ்லொவாகியாவின் ட்ரீம் ரன் அத்துடன் நிறைவு பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் இரண்டு தென் அமெரிக்க நாடுகளான பிரேசிலும் சிலீயும் மோதின.

பிரேசில் ஃபாவரிட் என்றாலும் சிலீயும் முதல் ரவுண்டில் சிறப்பாகவே ஆடியிருந்தது.

இதற்கு முந்தைய உலகக் கோப்பகளில் இரு முறை பிரேசிலிடம் தோற்றுள்ளது சிலீ. மூன்றாம் முறையாவது வெல்ல வேண்டும் என்று முனைப்பாக களமிறங்கியதாலோ என்னமோ வழக்கமாய் ஆடுவதை விட அதிகமாய் அதிரடியில் இறங்கியது.

இதனால் கோலடிக்க வாய்ப்புகள் உருவானாலும் காகா, ரொபினோ, ஃபாபியானோ போன்ற ப்ரேசில் வீரர்கள் கோல் அடிக்க ஏதுவான களன்களும் நிறையவே அமைந்தன. சிலீயின் வாய்ப்புகளை எல்லாம் சிஸாரும், லூசியோவும் மழுங்கடித்துக் கொண்டே இருந்தனர். பிரேசிலுக்கு இருந்த வாய்ப்புகளைப் பார்க்கும் போது அவர்கள் 34-வது நிமிடம் வரை கோலடிக்காதது அதிசயம்.

மைகானின் கார்னரை Juan கச்சிதமாய் தலையால் அடித்து கோலாக்கி பிரேசிலை முன்னிலைப் படுத்தினார். இதன் பிறகு சிலீயின் டிஃபென்ஸ் சுத்தமாய் தகர்ந்து போனது. அடுத்த 4-வது நிமிடத்தில், இடது முனையில் இருந்து பந்தை ரொபினோ காகாவுக்கு அளிக்க, அதை அவர் தனியாய் இருந்த ஃபாபியானோவிடம் திருப்ப, முன்னால் வந்த கோல்கீப்பரைச் சுற்றி பந்தைக் கொண்டு போய், ஆளில்லா கோலுக்குள் சுலபமாய் தள்ளி 2-0 ஆக்கினார் ஃபாபியானோ.

2-0 Brazil - Chile - www.tugagolo.com

Tugagolo ponto | MySpace Video


இரண்டாம் பாதியில் ரமிரெஸ் மைதானத்தின் அரையிலிருந்து தனி ஆளாய் பந்தைக் கொண்டு வந்து இரு டிஃபெண்டர்களைத் தாண்டி ரொபினோவுக்கு அளிக்க, சிங்கிள் டச்சில் கச்சிதமாய், கோல்கீப்பரின் நீட்டிய இடக்கரத்துக்கு எட்டா வகையில் கோலாக்கினார் ரொபினோ.

எதிர்பார்த்த முடிவுதான்.

3-0 என்று பெரும் வெற்றியை அடைந்து, கால் இறுதியில் நெதர்லாந்தை மோதவிருக்கிறது பிரேசில்.

That should be another cracker of a game!

Samba flair-க்கு எதிரில் Dutch Dynamism தாக்குப்பிடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- லலிதா ராம்
http://carnaticmusicreview.wordpress.com/

Read More...

Tuesday, June 29, 2010

நாக் அவுட் ரவுண்ட் - Day 1 & 2

முதல் சுற்றைக் கடந்து நாக் அவுட் ரவுண்டுக்கு 16 அணிகள் தேர்வு பெற்றன.

அவற்றிடையே, முதல் நாளின் முதல் போட்டியாக உருகுவேயை எதிர்த்து தென் கொரியா விளையாடியது.

இரு அணிகளும் நல்ல அணிகள் என்ற போதும், முதல் சுற்றில் உருகுவேயின் ஆட்டம் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் என்று உணர்த்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியில் இறங்கின. லீ சுங் யங்கின் ஃப்ரீ கிக்கின் திக்கை உணராது கோல் கீப்பர் கல்லாய் சமைந்திருக்க, பந்து போஸ்டில் பட்டு கொரிய ரசிகர்களின் இதயத்தை உடைத்தது.




அதிர்ஷ்டத்தால் கிடைத்த சந்தோஷத்தை ஒரு கோல் மூலம் இரட்டிப்பாக்கிக் கொண்டனர் உருகுவேயினர். உருகுவேயில் முக்கிய வீரர் ஃபோர்லான் இட முனையிலிருந்து பெனல்டி பிரதேசத்துக்குள் கிராஸ் செய்தார். கொரிய கோல்கீப்பர் முனைந்திருந்தால் பந்தைத் தடுத்திருக்கக் கூடும். அப்படிச் செய்யாததால், டிஃபெண்டர்களின் கட்டுக்குள் இல்லாத சௌரெஸ் (Saurez) இடம் பந்து சென்றது. ஃபார் போஸ்டில் சுலபமாக பந்தை கோலுக்குள் செலுத்தி 1-0 ஆக்கினார்.

மான்சஸ்டர் யுனைடடில் விளையாடும் பார்க் ஜி சுங் உருகுவேயின் கோட்டையைத் தகர்க்க பல நல்ல முயற்சிகளைச் செய்தார். அவை அவருக்கு நிறைய ரசிகர்களைக் கொடுத்திருக்குமெனினும் கோல் எதுவும் கொடுக்கவில்லை. இவரை மார்க் செய்த உருகுவேயின் லுகானோவின் (Lugano) ஆட்டம் வெகு சிறப்பாக அமைந்து, பல்வேறு முயற்சிகளை மழுங்கடித்தது.

இரண்டாம் பாதியில் லீடை தக்க வைத்தால் போடும் என்ற மனநிலையில் உருகுவே விளையாடத் தொடங்கியது. தென் கொரியாவும் தொடர்ந்து கோலருகில் நெருக்கடிகளை உருவாக்கிய வண்ணமிருந்தது. அதன் பலனாய் 68-வது நிம்டத்தில் ஸ்கோரை சமன் செய்தது.

அதுவரை சிறப்பாக ஆடி வந்த லுகானோ, கோல்கீப்பருக்கு உதவியாய் பந்தை கிளியர் செய்வதாக எண்ணி லீ சுங் யங்கிடம் தாரை வார்த்தார். கிடைத்த வாய்ப்பை முழுதும் பயன்படுத்தி 1-1 ஆக்கினார் சுங் யங்.


அதன் பின் அழுத்தமெல்லாம் உருகுவேக்குத்தான். பார்க் ஜீ சங்கின் துல்லியமான பாஸ் லீ சுங் யங்கின் இரண்டாவது கோலுக்கு வழி வகுக்கும் விதமாய் அமைந்தது. கோலுக்கும் அவருக்கும் இடையில் கோல்கீப்பர் மட்டுமே இருந்த நிலையில் பந்தை நேராக கீப்பர் முஸ்லேராவிடம் அடித்து பொன்னான வாய்ப்பை நழுவவிட்டார். It proved costly.

சற்றைக்கெல்லாம் சௌரெஸ் இன்னொரு கோலை அடித்து உருகுவேயின் வெற்றியை உறுதி செய்தார். ஃபோர்லானின் கார்னரை பராக்கு பார்த்தபடி கொரியா இருக்க, பெனால்டி பெட்டியின் முனையில் பந்தைப் பெற்று அதைத் தன் வலது காலுக்கு மாற்றி, edge of the box-ல் இருந்து சௌரெஸ் அடித்த பந்து காற்றிலே வளைந்த படி கோலுக்குள் நுழைந்தது. One of the best goals of the tournament.

கடைசி நிமிடங்களில் கொரியாவின் வாய்ப்பை லுகானோ மறுத்ததும் கொரியா வீட்டுக்குச் செல்வது உறுதியானது. ஆசியாவில் இருந்து முன்னேறிய இரு அணிகளுள் ஒரு அணி வெளியேற்றப்பட்டுவிட்டது.

ஆனால், ஆஃப்ரிக்காவில் இருந்து இரண்டாம் சுற்றை அடைந்த ஒரே அணி பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் கானா மோதியது.

டிடியர் ட்ரோபா, சாமுவெல் ஈடோ போன்ற நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத ஆஃப்ரிக்க அணி என்ற போதும் செர்பியாவுடனும் ஆஸ்திரேலியாவுடனுமான ஆட்டங்களில் கானாவின் கை ஓங்கியிருந்தது. பல முறை உலக சாம்பியன் ஆன ஜெர்மனியின் கண்ணில் கூட விரலை விட்டு ஆட்டியது கானா. (விவரங்களை இங்கு காணலாம்.)

அமெரிக்காவும் முதல் ரவுண்டில் நன்றாகவே விளையாடியது. டோனொவன் என்ற சிறந்த ஆட்டக்காரரை ஃபுட்பால் உலகுக்கு இந்த போட்டி மூலம் ஈந்திருக்கிறது அமெரிக்கா. அவர் அடித்த இஞ்சரி டைம் கோல் அமெரிக்காவை அடுத்த சுற்றுக்குள் அழைத்து வந்திருந்தது.

கானாவின் முதல் சுற்று கோல்கள் இரண்டும் பெனல்டியில் கிடைத்தவையே. ஆயூ, கியான் போன்ற கானா வீரர்கள் நன்றாக விளையாடிய போதும் ஃபினிஷிங் அவர்களின் குறையாகவே இருந்தது. இந்த ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போடெங் (Boateng) கோலடித்து கானாவின் முதல் ஃபீல்ட் கோலைப் பெற்றுத் தந்தார். அரைக்கோட்டுக்கு பக்கத்திலிருந்த அமெரிக்க வீரரிடமிருந்து பந்தைக் கவர்ந்து, மின்னல் வேகத்தில் ஒற்றை ஆளாய் கோல் நோக்கி விரைந்தார் போடெங். தற்காப்பாளரின் தடுப்புகளுக்கு அசராமல், deft left-footer மூலம் கோல் அடித்து 1-0 ஆக்கினார். இவர் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்தான் தனது nationality-ஐ தன் தந்தை பிறந்த நாடான கானாவுக்கு மாற்றிக் கொண்டவர். இவரது சகோதரர் ஜெர்மன் அணியில் இடம் பெற்றுள்ளார். கானாவின் முந்தைய ஆட்டத்தில் இரு சகோதரர்களும் வெவ்வேறு அணிகளுக்காய் களமிறங்கினர்.

அமெரிக்காவும் தொடர்ந்து பல தாக்குதல்களைத் தொடுத்தது. கானா கோல்கீப்பர் கிங்சனின் அபாரமான காப்புகள் ஸ்கோர் 1-0-வென்றே தொடர காரணமாய் இருந்தன. குறிக்காக Dempsey-ம், Findley-ம் இணைந்து தொடுத்த தாக்குதலை கிங்ஸன் காலால் தடுத்தது just brilliant.

இரண்டாவது பாதியில் களமிறங்கிய Benny Feilhaber உடனேயே கோல் அடிப்பதற்கு வெகு அருகில் சென்றார். கிங்ஸனின் aggressive save-தான் மீண்டும் கானாவை காப்பாற்றியது.

62-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸுக்குள் Dempsey-ன் பிரவேசம் கானாவுக்கு ஆபத்தைக் கட்டியம் கூற, தடுக்க முயன்ற கானா வீர மென்ஸா, டெம்ப்ஸெயை வீழ்த்தியதால் அமெரிக்காவுக்கு பெனால்டி. டோனொவன் தன் திறமையையும் அனுபவத்தையும் முழுமையாய் உபயோகித்து, மீண்டுமொருமுறை அமெரிக்காவுக்கு கோல் அடித்து 1-1 ஆக்கினார்.

அதன் பின், அமெரிக்காவுக்கு சில வாய்ப்புகள் கிடைத்த போதும், கானாவின் துல்லியமான டிஃபென்ஸ் ஆட்டத்தை extra time-க்குள் கொண்டு போனது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோல் அடித்தது போலவே எக்ஸ்டிரா டைமின் முதல் சில நிமிடங்களிலேயே கோல் அடித்து 2-1 ஆக்கியது கானா. அயூவின் லாங் பால், கானாவுக்கு நிறைய கோல்கள் அடித்துள்ள கியானை அடைய, இரு டிஃபெண்டர்களை மீறி கச்சிதமாய் கோல் கீப்பரைக் கடந்து பந்தைச் செலுத்தி 2-1 ஆக்கினார்.

மரண அடி. அமெரிக்காவால் மீள முடியவில்லை.

ஆட்டம் நடக்கும் நாடு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை எனினும், ஆட்டம் நடக்கும் கண்டத்திலிருந்து ஒரு நாடு கால்-இறுதிக்கு தகுதி பெற்ற போது அரங்கம் ஆர்ப்பரித்தது.

நாக் அவுட் ரவுண்டின் இரண்டாவது நாளின் முதல் போட்டியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

ஞாயிற்றுக் கிழமை அன்று சௌகரியமான வேளையில் இரு பெரும் அணிகள் மோதுவதைப் பார்ப்பது என்பது சாமானியமாய் நடப்பதா என்ன?

ஜெர்மனியும் இங்கிலாந்தும் நேற்று மோதின.

இங்கிலாந்தின் வீரர்கள் மிகப் பிரபலமானவர்கள். இந்தியாவுக்கு கிரிக்கெட்டைப் போல இங்கிலாந்துக்கு கால்பந்து. இங்கிலாந்து ஆடும் நாட்களில் நாடே ஸ்தம்பித்து விடும் அளவுக்கு கால்பந்து பிரியர்கள். ஒவ்வொரு முறையும், பிரிட்டிஷ் மீடியா இவர்களை ஏற்று விட்டு, தோற்கும் போதெல்லாம் பின்னிப் பெடலெடுக்கும்.

இம்முறை இரண்டாவது ரவுண்டுக்கே தகுதி பெறுமா பெறாதா என்று கேள்வியை எழுப்பி, ஒரு வழியாய் முதல் சுற்றைக் கடந்து இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து. ரூனி, லாம்பார்ட், ஜோ கோல், போன்றோர் எல்லாம் அவரவர் கிளப்புக்கு ஆடுவதில் 10-ல் ஒரு பங்கைக் கூட நாட்டுக்காக விளையாடும் போது ஆடுவதில்லை என்பது திண்ணம்.

ஜெர்மனியும் செர்பியாவுடன் தோற்று ஜெர்மன் ரசிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும், கானாவுடன் சிறப்பாக விளையாடியது. Ozil, Muller, Podolski போன்ற பல இளைஞர்களைக் கொண்ட அணி ஜெர்மனி. ஃபிலிப் லாம், ஷ்வைன்ஸ்டைகர், க்ளோசா போன்ற அனுபவசாலிகளும் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

ஆட்டத்தில் ஜெர்மனி ஜெயிக்க வாய்ப்பு கூட எனினும், ஆட்டம் சுவாரஸ்யமான ஒன்றாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஸ்லோவீனியாவுடனான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆட்டம் சிறப்பாக அமைந்ததும் எதிர்பார்ப்பைக் கூட்டியது.

ஆட்டத்தின் முதல் இருபது நிமிடங்களில் பந்து இங்கிலாந்திடமே இருந்த போதும் கோல் அடிப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இத்தனைக்கும் இங்கிலாந்தின் மிட் ஃபீல் முழுவதும் அதிரடியில் இறங்கியிருந்தது. தற்காக்க வேண்டிய டெர்ரி போன்றோர் கூட கோல் அடிப்பதில் முனைப்பாக இருந்தனர். 20-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கோல் கிக் கிட்டத்டஹ்ட்ட ஜெர்மன் ‘டி’ வரை வந்துவிட, இங்கிலாந்தின் காப்பாளர்களான டெர்ரியும், அப்ஸனும் உருவாகும் அபாயத்தை உணராமலிருந்ததைப் பயன்படுத்தி க்ளோஸா பந்தை எப்படியொ கவர்ந்து, அப்சனின் கடைசி நிமிட ஊடுருவலை சமாளித்த படியே பந்தை கோல்கீப்பர் ஜேம்ஸைத் தாண்டி அடிக்க ஸ்கோர் 1-0 ஆனது.

அதன் பின்னும், இங்கிலாந்து தற்காப்பை அலட்சியமாகவே செய்தது. விரைவிலேயே இன்னொரு முயற்சியில் தாமஸ் முல்லர் கோல் வரை வந்து, தனியாக இருந்த பொடோல்ஸ்கியிடம் பந்தைக் கொடுக்க ஸ்கோர் 2-0. இத்தனைக்கும் பொடோல்ஸ்கியின் first touch கச்சிதமாய் அமையவில்லை. அதைச் சமாளித்து கோல் அடிக்கும் வரை கூட அவரை எந்த இங்கிலாந்து வீரரும் நெருங்கவில்லை. முதல் கோலுக்கும் இரண்டாவது கோலுக்கும் இடையே இன்னொரு வாய்ப்பு கிளோசாவுக்கு வாய்த்தது. நல்ல காலம் ஜேம்ஸிடம் பந்து நேராக சென்றதால் ஸ்கோர் 3-0 ஆகாமல் தப்பித்தது.

இங்கிலாந்தைப் பார்த்து ஆட்டத்தை ஜெர்மனி மாற்றிக் கொண்டதோ என்று எண்ணும் வகையில் இங்கிலாந்தின் முதல் கோல் அமைந்தது. லாம்பார்டின் ஷார்ட் கார்னர், ஜுராட்டுக்கு வர, அவர் அதை கிராஸ் செய்ய, ஜெர்மன் வீரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் அப்டன் தலையால் கோலாக்கி ஸ்கோரை 2-1 ஆக்கினார்.

இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையில் நடக்கும் ஆட்டங்கள் எல்லாம் எதேனும் சர்ச்சையைக் கிளப்பும். இந்த ஆட்டத்தின் சர்ச்சை முதல் கோல் அடித்த 60 வினாடிகளுக்குள் எழுந்தது.

லாம்பார்டின் ஃப்ரீ கிக், ஜெர்மன் சுவற்றைக் கடந்து, கோல்கீப்பரையும் கடந்து, கோலுக்குள் செல்வதற்கு பதிலாய், போஸ்டில் பட்டு கீழ் நோக்கி விழுந்தது. விழுந்த பந்து கோல் கோட்டுக்குள் விழுந்த போதும் கோல் மறுக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் பல சொதப்பல்களை ரெஃப்ரீகளும் லைன்ஸ்மென்களும் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பின்னும், ஏதெனும்ம் காரணத்துக்காக தொழில்நுட்பத்தை ஆட்டத்தில் புகுத்தி தவறுகளைக் குறைக்க வெண்டும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர். இங்கிலாந்து 2-2 என்று ஸ்கோரை ஆக்கியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கக் கூடும்.

முதல் பாதியின் முடிவில் ஸ்கோர் 2-1 என்று இருந்தது. இங்கிலாந்து சொதப்பினாலும், அரையின் முடிவில் முன்னேற்றத்துக்கான் அறிகுறிகள் தெரிகின்றன என்று ரசிகர்கள் நினைத்திருக்கக் கூடும். இரண்டாம் பாதியின் இன்னும் சிறப்பாக ஆடுவார்கள் என்ற நினைப்பு வீணாய் போனது.

தொடக்கத்தில் ஜெராட்டும் லாம்பார்டும் நன்றாக விளையாடினாலும் கொல் அடிக்க முடியவில்லை.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய், இருந்த சொற்ப டிஃபென்ஸும் இல்லாமல் போனது.

கோல் அடிக்கிறேன் பெர்வழி என்று தங்கள் அரையில் ஒருவருமே இல்லாமல் எக்ஸ்போஸ் செய்தரனர் இங்கிலிஷ் வீரர்கள். இதனைப் பயன்படுத்தி இரு counter attack (இதை அப்படியே முதலில் டைப் அடித்தேன். ஜாதி கலவரம் வந்துவிடுமோ என்று பயந்து ஆங்கிலத்துக்கு மாற்றினேன்) மூலம் ஸ்கோரை 4-1 ஆக்கியது ஜெர்மனி. இரு கோகளையும் தாமஸ் முல்லர் துல்லியமாய் அடித்தார்.

ஜெர்மனியின் நான்காவது கோலின் போது பந்தைக் கவர்ந்து ஓடிய Ozil-ஐ சிறிது துரத்துவது போலத் துரத்திவிட்டு நின்று விட்ட டிஃபெண்டர்களைப் பார்க்க அதிர்ச்சியாய் இருந்தது.

அதன் பின் ஆட்டம் சடங்குக்குத்தான் நடை பெற்றது. இங்கிலாந்து தோல்விக்கு காரணம் கூற ரெஃப்ரீயின் பிழை கிடைத்துவிட்டது. நேற்றிரவே naukri.com-ல் இங்கிலாந்து கோச் கபெல்லோவின் ரெஸ்யுமே காணக் கிடைத்தாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் வந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்காவது ஆட்டத்தில் tournament favorite அர்ஜெண்டினாவை மெக்ஸிகோ எதிர்கொண்டது.

எதிர்பார்த்தது போலவே அர்ஜெண்டினாவுக்கு சுலபமான வெற்றி.

மெஸ்ஸி இந்த ஆட்டத்திலும் மிகச் சிறப்பாக விளையாடியும் கோல் அடிக்கவில்லை. இவரையே எதிரணிகள் சூழ்ந்து கொள்வதால் Tevez, Higuen போன்றோர் சுலபமாக விளையாட முடிகிறது. யாரடித்தாலும் கோல்தானே? அதனால் அர்ஜெண்டினாவும் சுலபமாக வென்று வருகிறது.

இந்த ஆட்டத்தின் முதல் கோலை டெவேஸ் அடித்தார். சர்வ நிச்சயமாய் off-side position-ல் இருந்து கோலை அடித்தார் என்ற போதும் லைன்ஸ்மென் அதைக் கண்டு கொள்ளாததால் 1-0 ஆனது.

மெக்சிகோ டிஃபெண்டர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. கோலருகில் இருந்து கொண்டு பந்தை அர்ஜெண்டினா striker Higuen இடம் அளித்து அனுப்பி வைத்தார். ஏற்கெனவே 3 கோல் அடித்து கோல்டன் பூட்டுக்கு போட்டியிடும் ஹிகிவேனா விடுவார் வாய்ப்பை? ஸ்கோர் 2-0.

ஹிகுவேனின் ஹெட்டர் நிதானமாக ஆடப்பட்டிருப்பின் முதல் அரையிலேயே ஸ்கோர் 3-0 ஆகியிக்கும்.

இரண்டாவது பாதியின் ஆறாவது நிமிடத்தில் வெற்றியை நிச்சயமாக்கினார் டெவேஸ். கோலின் top right corner டெவேஸ் அடித்த கோல் will definitely be one of the goals of the tournament.

அர்ஜெண்டினா சுலபமாக வென்றாலும் அவர்களுடைய தற்காப்பும் கொஞ்சம் shaky-ஆகவே தென் படுகிறது. Favorite tag வேறு அவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கக் கூடும். ஜெர்மனிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் டிஃபென்ஸ் இன்னும் இறுக்கமாக இருக்க வேண்டும். அசிரத்தை ஆபத்தாய் முடியும் என்பதற்கு உதாரணமாய் மெக்சிகோவின் consolation goal அமைந்தது. சில வாய்ப்புகளை தவற விட்ட ஹெர்னாண்டெஸ் கச்சிதமாய் கோலடித்து 3-1 ஆக்கினார்.

இப்படியாக வார இறுதியின் இரு நாட்களும் இனிதே டிவியின் முன் கழிந்தன.

- லலிதா ராம்
http://carnaticmusicreview.wordpress.com/
http://cricketthavira.wordpress.com/


Read More...

Monday, June 28, 2010

மண்டேனா ஒன்று 28/6/2010

இது வெறும் அலங்காரம்தான்!!

பாகிஸ்தானிடம் அமைதியாகக் கூறுவோம், ஆனால் அழுத்தமாக!! இந்த பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகளை உதிர்த்தது நமது தமிழகத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள். உள்துறை அமைச்சர்களுக்கான “சார்க்” உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தினமும் இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் இந்திய மக்களுக்கு ”சிவப்புக் கம்பளம்” விரித்துக் கொண்டிருக்கும் வேளையில், முப்பதாண்டுகளில் பாகிஸ்தான் செல்லும் முதல் இந்திய உள்துறை அமைச்சர் மற்றும் மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் அமைச்சர் என்ற பெருமைகளைச் சுமந்தவாறு நேற்று இஸ்லாமாபாத்தில் சிகப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுள்ளார்.



பாகிஸ்தானில் சென்று இறங்கிய கையோடு, இஸ்லாமாபாத்தில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்குடன் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து சம்பிரதாயப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதே பழைய பல்லவியாக, ஹஃபீஸ் சயீதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மாலிக்கிடம், நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் பாகிஸ்தானிற்கு வந்து விட்டது என சிதம்பரம் கூறியதாக பத்திரிக்கைச் செய்திகளில் வந்துள்ளது. இது என்ன ஏதாவது சாந்தி கல்யாண முகூர்த்த வேளையா என்று தெரியவில்லை, சிதம்பரத்திற்கே வெளிச்சம். சம்பவம் நடந்து இரண்டாண்டுகளாகி விட்டது. நாமும் எவ்வளவோ இங்கிருந்தே கெஞ்சி விட்டோம். அங்கு சென்று பேசாமலிருந்தால், மீடியாக்களின் பேச்சுக்கிடமாகும் என போகிற போக்கில் நடவடிக்கை தேவை என பாகிஸ்தானிடம் கேட்கிறாற் போலிருக்கிறது.

சிறப்பு விமானத்தில் நிருபர்களிடம் கூறுகையில், இது தொடர்பாக பேச இது தருணமல்ல, சார்க் மாநாட்டிற்காக இங்கு வந்திருக்கிறேன். ஆனால் பாகிஸ்தானிடம் அமைதியாகவும், அழுத்தமாகவும் கூறுவோம் என்று கூறியிருக்கிறார். நிஜமாகவே மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் நிலை சர்வதேசப் பார்வையில் கேலிக்கிடமாகியுள்ளது. பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் ஹஃபீஸ் சயீத் ஆகியோரின் தொடர்புகளுக்கான அத்தனை ஆதாரங்களை இந்தியா கொடுத்த பிறகும், அவையெல்லாம் சரிதான் என அமெரிக்கா அங்கீகரித்த பிறகும், எல்லாவற்றையுமே பாகிஸ்தான் போதாது என புறந்தள்ளிவிட்டது. இத்தனை அழுத்தமான ஆதாரங்களைக் கொடுத்த பிறகும், அமைதியாகக் கூறுவோம் என சிதம்பரம் கூறுவது நகைப்புக்குரிய விஷயம். பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்வரை பேச்சுவார்த்தையே கிடையாது என மார்தட்டிய மத்திய அரசு பிறகு பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தி, அடுத்த கட்டமாக பாகிஸ்தானுக்கு படையெடுக்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானிய பயங்கரவாதமாகட்டும் அல்லது நக்ஸல் தீவிரவாதமாகட்டும், நம்மால் அமைதியாக மட்டும் கூறத்தான் முடியும். அதற்கும் மேல் ஆணித்தரமாக செயல்பட நமக்கு முதுகெலும்போ, தைரியமோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.

- யதிராஜ்

Read More...

சாய்னா நெஹ்வாலுக்கு வாழ்த்துகள்


சயாகா சாடோவுக்கு எதிரான இறுதிப் போட்டி நேற்று முடிவடைந்தது.

சாய்னா நெஹ்வால் இரண்டாவது முறையாக இந்தோனேஷிய ஓபன் போட்டியை வென்றுள்ளார். மூன்று வாரங்களில் மூன்றாவது பட்டம் வெல்லும் சாய்னா உலக த்ர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

நியோ ஸ்போர்ட்ஸ் தயவில் முழு ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது. சாடோ தர வரிசையில் 26-வது இடத்தில் இருப்பினும் மிகப் பிரமாதமாக ஆடினார்.

கோர்டின் ஒரு பக்கத்தில் காற்று சற்றே சாதகமாக இருந்தது. சாய்னா முதலில் அதைப் பயன்படுத்து 11-5 என்று முன்னணியில் இருந்தார். 11 புள்ளிகள் எடுத்ததும் கோர்ட்டின் எதிர்பக்கத்துக்கு மாற்ற சாடோ ஸ்கோரை சமன் செய்தார். 11-11-க்கு பிறகு இருவரும் மாறி மாறி புள்ளிகள் வென்றனர். ஒரு கட்டத்தில் முதன் முறையாக சாடோ 18-17 என்று லீடைப் பெற்றார். அதன் பின் சாய்னா துல்லியமாக ஆடி 21-19 என்று முதல் கேமை வென்றார்.

சாடோவை பவர் கேம் கொண்டு ஜெயிக்க நினைத்த முயற்சிகள் எல்லாம் வீணாகவே போயின. அடிக்கு அடி கொடுப்பதில் சாடோ வல்லவராகத் தெரிகிறார். அதிகம் வலக்கை ஆட்டக்காரர்களை எதிர் கொள்வதால், இடக்கை ஆட்டக்காரரை எதிர்கொள்ளத் தேவையான மாற்றங்களை உடனுக்குடன் செய்து கொள்வதில் சாய்னாவுக்கு கொஞ்சம் சங்கடம் இருப்பதாகத் தெரிந்தது.

இரண்டாவது கேமில் சாடோவின் டிராப் ஷாட்களும் கடினமான angle-களும் ஆட்டத்தை அவருக்கு சாதகமாக்கின. 6 புள்ளிகள் பின்னடைவு அடைந்ததும் சாய்னா கொஞ்சம் எரிச்சலுற்றவராய் தெரிந்தார். அவப்போது நல்ல புள்ளிகளை சாய்னா வென்றாலும் சாடோ சுலபமாக வென்றார்.

கேம் விவரம் 1-1 என்ற போதும் மொமெண்டம் சாடோவின் பக்கம்.

மூன்றாவது கேமில் சாய்னா பவர் ஆட்டத்தைத் தவிர்த்து பொறுமையாய் எதிராளி தவறு செய்யும் வரை காத்திருக்கும் ஆட்டத்துக்குத் தாவினார். சாடோவும் பிரஷரைத் சரியாக எதிர் கொள்ளத் தெரியாதவராய் நிறைய தவறிழைத்தார். காற்று தன் பக்கம் இருக்கும் போதும் அதனை உபயோகிக்காமல் over push செய்தது சொந்த செல்வில் சூனியம்.

மூன்றாம் கேமை வென்று பட்டம் பெற்ற சாய்னாவுக்கு வயது இருபதே.

அதிகம் படாடோபம் இன்று, மீடியா வலைக்குள் விழாமல், ஆட்டத்தை மட்டும் கவனம் செலுத்தி இமாலய முன்னேற்றம் அடைந்துள்ளார் சாய்னா.

- லலிதா ராம் ( http://cricketthavira.wordpress.com/ )

பிகு: லலிதா ராம் இசை பற்றியும் எழுதுவார். அதன் முகவரி டைம் கிடைக்கும் போது பார்த்துவிடுங்கள் :-)



விரைவில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள்.


Read More...

செம்மொழி மாநாடு - பா.ரா ரிப்போர்ட் !


ஆரவாரமான எதிர்ப்புகள், ஆயிரம் குற்றங்குறைகள், ஏற்பாட்டுக் குளறுபடிகள், கூட்டம், நெரிசல், தள்ளுமுள்ளு, குழப்படி இன்னபிற. இவ்வரிசையில் பட்டியலிட இன்னும் பல நூறு இருந்தாலும் செம்மொழி மாநாடு சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. கணக்கற்ற கோடிகள் செலவில் எதற்காக இப்படியொரு மாநாடு என்று ஆரம்பித்து, இதனால் சாதித்தது என்ன என்பது வரை ஒரு புத்தகமே வெளியிடக்கூடிய அளவுக்குக் கேள்விகள் இருந்தாலும், உலகம் முழுதும் தமிழ்ப்பக்கம் திரும்பிப் பார்க்கும்படியான ஒரு தருணத்தைக் கலைஞர் வழங்கியதை மறுக்க இயலாது. சந்தேகமில்லாமல் இது ஒரு தனிநபர் சாதனை.

மாநாட்டு தினங்கள் முழுதும் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அவரவர் அடுத்த நிலை ஆள்கள், அடுத்ததற்கு அடுத்த நிலை, அதற்கடுத்த நிலை என்று ஆளும் வர்க்கம் முழுதும் கோவைக்குக் குடிபெயர்ந்துவிட்டது. எனவே தொண்டர்களும். அநேகமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திமுகவினர் வழக்கம்போல் வேன் வைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். மேலிடத்து உத்தரவு போலிருக்கிறது. கட்சிக்கொடியை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள்.


கோவை மக்களுக்கு மிரட்சி கலந்த திகைப்பு. இப்படியொரு பிரம்மாண்டத்தை அவர்கள் (வேறு யாருமேகூட!) இதற்குமுன் எதிர்கொண்டதில்லை. என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவே புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்கள். பீளமேடு கொடிசியா வளாகம் கண்ணுக்குப் புலப்படத் தொடங்கும் தொலைவிலிருந்தே பிரமிப்பு ஆரம்பமாகிவிடுகிறது. தோட்டா தரணியின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான கோட்டை முகப்பு. மாநாட்டு அரங்கம் மட்டுமே சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு. செம்மொழியை உள்ளேயும் செம்மொழியானை வெளியேயும் வரவேற்கும் பதாகைகள். காது கிழிக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் செம்மொழிப் பாடல். அதை லூப்பில் போட்டு, ஐந்து நாளும் நிகழ்த்தப்பட்ட செவி வழி பயங்கரவாதத்தோடு ஒப்பிட்டால் வேறு எதுவும் அத்தனை மோசமில்லை.

பொதுமக்களுக்குப் பட்டிமன்றம், கருத்தரங்கம், இசையரங்கம், கண்காட்சிகள் என்றும் ஆய்வாளர்களுக்குத் தனி அரங்குகளில் இடமென்றும் தனித்தனியே ஏற்பாடுகள் இருந்தன. கலைஞரும் அமைச்சர்களும் அடியார் குழாத்தினரும் பெரும்பாலும் அந்த தோட்டா தரணி கோட்டையை விட்டு வரவில்லை என்பதால் கூட்டம் முழுதும் அங்கேயேதான் இருந்தது. கவியரங்கத் தீவிரவாதிகள்வேறு யாரையும் நகரவிடாதபடிக்கு ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை திரும்பத் திரும்ப உரக்கச் சொல்லி மிரட்டிஉட்காரவைத்துக்கொண்டிருந்தார்கள். அப்படியும் மீறி எழுந்து வெளியே வருவோர் கண்காட்சி க்யூவில் சிக்கிக்கொள்ள வேண்டியதுதான்.


தினசரி காலை பத்து மணி முதல் இரவு பத்து மணிவரை அந்த வரிசை குறைந்தது ஒரு கிலோமீட்டர் நீளத்துக்குக் குறையாமலேயே இருந்ததைப் பார்க்க முடிந்தது. போலீசார் ஒரு தவறு செய்துவிட்டார்கள். வளாகத்தில் இரண்டு கண்காட்சிகள் இருந்தன. செம்மொழிக் கண்காட்சி ஒன்று. தமிழ் இணையக் கண்காட்சி ஒன்று. இரண்டுக்கும் தனித்தனி வரிசை அமைத்திருக்கலாம். சற்று நெரிசல் தணிந்திருக்கும். மாறாக, தமிழ் இணையக் கண்காட்சி அரங்குக்குப் போய்விட்டு, அதே வரிசையில்தான் செம்மொழிக் கண்காட்சிக்குச் செல்லவேண்டும் என்று ஏற்பாடு செய்திருந்தபடியால் மக்கள் மிகவும் தவித்துவிட்டார்கள்.

என்னதான் இருக்கிறது உள்ளே என்ற எதிர்பார்ப்புடன் மணிக்கணக்கில் காத்திருந்துவிட்டு, இணையக் கண்காட்சிக்கு உள்ளே வருபவர்கள், வெறுமனே ஆளுக்கு இரண்டு கம்ப்யூட்டர்களும் அழகு போஸ்டர்களுமாக உட்கார்ந்திருந்த தொழில்நுட்ப நிறுவன ஸ்டால்களைக் கண்டு பேய் முழி முழித்ததைக் காணமுடிந்தது. அத்தனை சிரமப்பட்டு உள்ளே வந்ததற்கு ஆளுக்கொரு இலவச சிடியாவது கொடுக்கமாட்டார்களா என்று ஏங்கிய தமிழுள்ளங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதுவுமில்லாதபோது இலவச பேம்ப்லட்களையாவது எடுத்துச் செல்ல மிகவும் விரும்பினார்கள்.

தினமும் அவ்வளவு கூட்டம் வரும் என்று முதல்நாள் எதிர்பாராதிருக்கலாம். இரண்டாவது, மூன்றாவது தினங்களிலாவது கண்காட்சி அரங்குகளுக்கு அருகே டால்லெட்டுகள், குடிநீர் வசதி செய்திருக்கலாம். மக்கள் உண்மையிலேயே தவித்துத் தள்ளாடியதைக் காண முடிந்தது.

ஆய்வரங்குகளைப் பொருத்தவரை நான் செம்மொழி அரங்குகளில் அதிகம் கலந்துகொள்ளவில்லை. கலந்துகொண்ட ஓரிரு அமர்வுகளும் வெத்துவேட்டுகளாக இருந்தன. அபத்தமான ஆய்வுக்கட்டுரைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள், எதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து இந்த ஆசாமிகளை விமானமேற்றி வரவழைத்தார்கள் என்று சில தருணங்களில் கோபமே வந்தது. உள்ளூர் ஆய்வாளர்கள் இன்னமுமே மோசம். அரை மணிநேரம் பேசினால் அதில் இருபது நிமிடங்கள் கலைஞரைப் புகழவே சரியாகப் போய்விடுகிறது. இவ்விஷயம் கேள்விப்பட்டு, தன்னை யாரும் புகழவேண்டாம் என்று அவர் ஓர் அறிக்கை வெளியிட்டால், அது பற்றிப் புளகாங்கிதமடைந்து பத்து நிமிடம் பேசுகிறார்கள். தமிழறிஞர்கள் திருந்தவே போவதில்லை.

மாறாக, தமிழ் இணைய மாநாட்டில் எனக்குப் பல உருப்படியான அமர்வுகள் வாய்த்தன. OCR தொடர்பான ஆராய்ச்சிகள், தமிழ் சொல் திருத்திகள் தயாரிப்பில் எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்கள், புத்தகப் பதிப்பில் யூனிகோட் பயன்படுத்த முடியாதிருப்பதற்கான காரணங்கள், என்ன செய்யலாம் என்கிற ஆராய்ச்சிகள், தமிழ் தரவுத் தளங்கள் - தேடுபொறிகள் தொடர்பான ஆய்வுகள், மொபைல் போனில் தமிழ் பயன்பாடு என எனக்குக் கேட்கக்கிடைத்த உரைகள் பெரும்பாலும் உபயோகமாகவே இருந்தன. தொழில்நுட்பத்தை வெகு எளிமையாக, என்னைப் போல் ஒரு தொழில்நுட்ப அறிவிலிக்கும் புரியும்படியாக விளக்கக்கூடிய சிலரை அங்கே சந்தித்தேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள், பேராசிரியர் தெய்வசுந்தரம். முத்து நெடுமாறன். மைக்கல் காப்லன் [மைக்ரோசாஃப்ட்]. மதன் கார்க்கி [அண்ணா பல்கலை]. இணையமும் பதிப்பும் என்ற பொருளில் ஆழி பதிப்பகம் செந்தில்நாதன் நிகழ்த்திய பிரசண்டேஷனும் தொடர்ந்த விவாதமும் அற்புதமாக இருந்தது. மாநாட்டின் ஆகப்பெரிய லாபம் என்று எனக்குத் தோன்றியது இத்தகு அமர்வுகள்தாம்.

ஞாயிற்றுக்கிழமை இறுதிநாள் நான் கோவையில் இல்லை. அன்று காலையே புறப்பட்டு சென்னை வந்துவிட்டேன். தமிழக அரசு, Tab, Tam குழப்படிகளுக்குத் தலைமுழுகி, யூனிகோடை அரசு அங்கீகாரம் பெற்ற ஒரே பயன்பாட்டுக் குறியீடாக ஏற்றது, தமிழில் படிப்போருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் விருது போன்ற அறிவிப்புகளை அன்று வெளியிட்டதைச் செய்தியாகத்தான் பார்த்தேன்.

கவன ஈர்ப்பு என்னும் தளத்திலிருந்து நகர்ந்து, தமிழ் படித்தல் தொடர்பான ஒரு விழிப்புணர்வை இம்மாநாடு மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். ஒரு தமிழ் எழுத்தாளனாகவும் பதிப்பு நிறுவன எடிட்டராகவும் எனக்கு இது மகிழ்ச்சியளிக்கும் விஷயமே. இன்று ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களில் சேரும் தலைமுறை, பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாசகர்களாக வரும் தருணத்தில், தமிழில் வாசிக்கவே தெரியாதவர்களாக இருக்கக்கூடுமென்ற அச்சம் எனக்குண்டு. அதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளக்கூடிய மனப்பான்மையும் உள்ளதை இப்போதே சில இடங்களில் காண்கிறேன்.

இம்மாதிரியான மாநாடுகள் இம்மனநிலையைக் கண்டிப்பாக மாற்றக்கூடும். சகிக்க ஒண்ணாத கோரம் என்றாலும் அந்த ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ பாடலைத் திரும்பத் திரும்ப ஒரு நாளைக்கு 1008 முறை ஒலிபரப்பி, வந்திருந்த [எத்தனை லட்சம் என்று சரியாகத் தெரியவில்லை. தினசரி குறைந்தது ஒன்றரை லட்சம் பேர் இருக்கலாம். முதல் நாள் கூட்டம் தனி.] அத்தனை பேருக்கும் உளவியல் ரீதியில் ஒரு தமிழ்த்தாக்குதலை அளித்திருப்பதைக்கூட, இந்த வகையில் வரவேற்கத்தான் தோன்றுகிறது!

படங்கள் உதவி: டாக்டர் மதன் கார்க்கி ( இன்னும் நிறைய படங்கள் இங்கே இருக்கு )

அத்தனை பேருக்கும் உளவியல் ரீதியில் ஒரு தமிழ்த்தாக்குதலை அளித்திருப்பதைக்கூட, இந்த வகையில் வரவேற்கத்தான் தோன்றுகிறது!. அட பழ.கருப்பையாவிற்கு செம்மொழி தாக்குதல் தான் நடந்திருக்கு !

Read More...

Monday, June 21, 2010

மண்டேனா ஒன்று 21/6/2010


கால்பந்தாட்டத் துளிகள்
உலகளாவிய கால்பந்தாட்ட ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை கால்பந்தாட்டத் திருவிழா, தென்னாப்ரிக்காவில் துவங்கி, அமர்க்களமாகவும், மிகுந்த பரபரப்பிற்கிடையேயும் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்குத் தோதான ஒரு கால்பந்தாட்ட அணி இல்லை. ஆனால் அதுபற்றிய அரசியலுக்குள் செல்வதற்குண்டான அவசியமோ, எண்ணமோ நமக்கு இல்லை. இக்கட்டுரையும் அதுபற்றியது இல்லை. ஆனால் இந்திய கால்ப்பந்தாட்ட ரசிகர்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடையுமளவிற்கு நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்தியாவிற்கும் அதிக பங்கிருக்கிறது. அதுபற்றி இப்பொழுது பார்ப்போம்.


தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைக்கும், கேரளாவில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்க முடியுமா? ஆம், ஜபுலானி பந்துகள்!(Jabulani என்பது அடிடாஸ் நிறுவனம் தயாரிக்கும் கால்பந்துகள். இவைதான் இந்த உலகக்கோப்பை போட்டிகளில் பயன்படுத்தப்படும் அதிகாரப் பூர்வமான பந்துகள்.) அங்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நூறு கால்பந்துகளிலும், கேரளாவின் ரப்பர் தோட்டங்களிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு விதமான ரப்பர் கூழ் சுமார் 7 கிலோ அளவில் கலக்கப்பட்டிருக்கிறது.

”லேடக்ஸ்” (Latex) என்று சொல்லப்படும் இரப்பர் கூழினால் தயாரிக்கப்படும் ”ப்லாடர்கள்” (Bladders) கால்பந்திற்கு வடிவத்தையும், எழும்பும் (Bouncing) தன்மையையும், வேகத்தையும் அளிக்கிறது. இவை தில்லியிலுள்ள Enkay India Rubber Co, என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. இந்த ப்லாடர்களைத் தயாரிப்பதற்குண்டான மூல பொருளான “லேடக்ஸ்” வகை ரப்பர் கூழை கேரளாவின் ரப்பர் தோட்டங்களிலிருந்து இந்நிறுவமன் கொள்முதல் செய்துள்ளது.

“நாங்கள் இதுவரை சுமார் இரண்டு லட்சம் ப்லாடர்களைத் தயாரித்து ஜபுலானிக்கு அளித்துள்ளோம், இன்னும் சப்ளை செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார் என்கே நிறுவனத்தின் இயக்குனரான திரு.நரேஷ் ஜெயின். இந்நிறுவனம் வெகு காலமாகவே அடிடாஸ் நிறுவனத்திற்கு லேடக்ஸ் வகை ப்லாடர்களைத் தயாரித்து அளித்து வருகிறது. “நாங்கள் இதற்காகக் கொள்முதல் செய்யும் ரப்பர்களில் அதிகபட்சம் கேரளாவிலிருந்தே கொள்முதல் செய்கிறோம். கேரள அரசாங்கத்தின் ரப்பர் தோட்டங்கள் எங்களுக்கு இவ்வகை மூலப்பொருட்களை வழங்கி வருகின்றனர். தரம், மற்றும் இதர வசதிகளுக்காக நாங்கள் கேரளாவையே விரும்புகிறோம் என்று கூறுகிறார் நரேஷ் ஜெயின்.

கேரளாவில் ரப்பர் பயிரிடும் அரசாங்க ஸ்தாபனமும், அந்நிறுவனம் தங்களிடம் வாடிக்கையாக, அதிக அளவில் லேடக்ஸ் ரப்பர்களைக் கொள்முதல் செய்வதாக உறுதிப் படுத்தியுள்ளது. என்கே நிறுவனம் எங்களிடமிருந்து 12 ட்ரக் லோட் ( Truck Loads) அளவிற்கு லேடக்ஸை கொள்முதல் செய்துள்ளது என்று கூறுகிறார், திரு.மோகன் குமார், இவர் இத்தொடர்பான ரப்பர் பயிரிடும் நிறுவனத்தின் பொது மேலாளர்.

காற்றை தன்னுள்ளே இருத்தி வைத்திருப்பது கால்பந்தினுள் உள்ள ப்லாடரின் தனிச்சிறப்பு. ஆனால் பந்தினுடைய எழும்பும் தன்மை, வேகம், வடிவம் முதலானவை பந்து தயாரிப்பு முறை மற்றும் பந்தின் மேலே பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒருவகையான தோலின் தரம், தன்மை மற்றும் உட்புற லைனிங் தையல் சார்ந்த விஷயம் என்கிறார் நரேஷ் ஜெயின்.

நம்முடைய அணி கால்பந்தாட்டத்தில் பங்கேற்கவில்லையென்றால் என்ன? ஆனால் ஜபுலானி பந்துகள் சுவாசிப்பது நம்முடைய லேடக்ஸ் என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தானே?

(நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.)


போர்த்துகீசியர்கள் கோவாவை விட்டு அகன்றாலும், அவர்களுடைய வாசனை இன்னும் கோவாவை விட்டு அகலவில்லை போலும். வாஸ்கோடகாமா இன்று இருந்திருந்தால் இதனை நினைத்து பெருமை அடைந்திருப்பார்.

நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத் திருவிழாவையொட்டி கோவாவை கடுமையான கால்பந்தாட்ட ஜீரம் பற்றியிருக்கிறது. முந்தைய உலகக் கோப்பை போட்டிகளின் போதும் சரி, ஐரோப்பிய உள்ளூர் கால்பந்தாட்ட போட்டிகளாகட்டும், கோவா ரசிகர்கள் வழக்கம் போல் இம்முறையும் சிகப்பு, பச்சை என போர்த்துகீசிய கால்பந்தாட்ட அணியின் வர்ணத்தைப் பிரதிபலிக்கின்றனர்.

அர்ஜெண்டினா, ப்ரேஸில் போன்று போர்ச்சுகல் கால்பந்தாட்ட அணி ஒன்றும் அவ்வளவு தரமான அணி என்று சொல்ல முடியாவிட்டாலும், கோவாவின் ஆதரவு போர்ச்சுகலுக்கே. கோவாவில் நீங்கள் எங்கு சென்றாலும், எங்களுடைய உடை, நடனம், இசை, உணவு, வாழ்க்கைமுறை என அனைத்திலுமே போர்த்துகீசியர்களின் அடையாளத்தையும், தாக்கத்தையும் காணமுடியும். எனவே கால்பந்தாட்டத்தில் மட்டும் போர்ச்சுக்கலை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார் சேவியோ மெஸியாஸ், இவர் கோவா கால்பந்து சங்கத்தின் செயலாளர்.

இவர் போர்ச்சுகலின் ஆதரவாளராயினும், இவருடைய :விருப்ப ஆட்டக்காரர் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி.



உலகக் கோப்பையும், பியர் விற்பனையும்.

நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத் திருவிழா, உலகளாவிய பியர் உற்பத்தியாளர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. சமீபகாலமாக சரிந்திருந்த விற்பனையை இந்த உலகக் கோப்பை தூக்கி நிறுத்தியுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பானில் பியர் விற்பனை இவ்வுலக்கோப்பை துவங்கியதற்குப் பிறகு இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாம். குறிப்பாக ஜப்பான் அணி, கேமரூன் அணியை வென்ற பிறகு ஜப்பானின் பியர் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஜப்பான் ப்ரீவரி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பியர் சந்தையான சீனாவிலும் இதே நிலைதான்.

பியர் விற்பனை உயர்வுக்காவது உலகக்கோப்பை என்ற காரணம் இருக்கிறது. ஆனால் டாஸ்மாக்கிற்கு? நமக்கு வருடம் 365 நாட்களும் உலக்கோப்பைதான்!! செம்மொழி மாநாட்டையொட்டி டாஸ்மாக் விற்பனை அநேகமாக ஐந்து மடங்காக உயரலாம்.


-யதிராஜ சம்பத் குமார்

Read More...

Sunday, June 20, 2010

ஐரோப்பாவில் பெண் சிங்கம்


செய்தி கீழே....

சில வாரங்களுக்கு முன் மதுரையில் தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துவிட்டு வந்த அழகிரி ”என்ன செய்வீர்களோ தெரியாது படம் டாப்பில் இருக்க வேண்டும்” என்று வாய் வழி உத்தரவிட்டு சென்றார்

உடன் பிறப்புக்கள் இது பெரிய விஷயமாக தெரியவில்லை. ’உளியின் ஓசை’யையே ஓசைப்படாமல் ஓட்டியவர்கள் இது எல்லாம் ஜுஜுப்பி!

மேலே உள்ள காட்சி ஐரோப்பாவில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் எடுத்தது. அழகிரி உத்தரவுக்கு எவ்வளவு பவர் என்று நீங்களே பாருங்கள்.

ஆண் சிங்கம் எவ்வளவு கரடியாக கத்தினாலும் டாப்பில் இருப்பது பெண் சிங்கம் தான். (இப்படி எல்லாம் கத்தினால் வசனத்துக்கு பரிசு எதுவும் கிடைக்காது )

நன்றி: ஐரோப்பா மிருகக் காட்சி சாலையிலிருந்து அனுப்பிய பூனைக்கு.

பிகு: ஆண் சிங்கம் ஸ்டூல் போட்டால் தான் அந்த ஹைட்டுக்கு போக முடியும் :-)

Read More...

Friday, June 18, 2010

ராவணன் - சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா

* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள். திடீரென்று இன்றே படம் பார்க்க நினைக்க வைத்த ஊழ்வினை, டிக்கெட் கிடைக்க வைத்து, படம் பார்க்க வைத்து ஊட்டிவிட்டது.

* எதையும் வெளிப்படையாக வெளியில் சொல்லாமல், படம் எடுத்து அனைவரையும் ஏமாற்ற நினைக்கும் மணி ரத்னத்தின் ஏமாற்று வேலை இதிலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்கள் - இதில் வரும் சம்பவம் யாரையும் குறிப்பிடுவன அல்லவாம். தைரியமிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிப் படம் எடுக்கவேண்டும். வெளியில் சொன்னால் அராஜகம் செய்வார்கள் என்று மணி ரத்னம் சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு தடவை கூட அவர் பொதுவில் உண்மையைச் சொல்லிப் படம் எடுத்ததில்லை. இருவர் படத்துக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னவர் மணி ரத்னம். தளபதி கதைக்கு மகாபாரதத்துக்கு நன்றி கார்டு போடாதவர். இதில் ராமாயணத்துக்கும் நன்றி கார்டு போடாமல் விட்டுவிட்டார்.


* கார்த்திக்கை அனுமாருக்கு இணையாகக் காட்ட, முதல் காட்சியிலேயே கார்த்திக்கை குரங்கு போல தவ்வ வைத்தது ‘அட்டகாசமான யுத்தி.’ கார்த்திக்கும் கடைசி வரை தனது குரங்குச் சேட்டையை நடிப்புதான் என்று நம்பி செய்துகொண்டே இருக்கிறார். அதிலும் சீதை ஒரு மரத்தடியில் இருக்கும்போதே மேலே இருந்து அனுமார் பேசும் காட்சி நகைச்சுவையின் உச்சக்கட்டம். அந்த அனுமார்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.

* சீதை உலக அழகி என்பதற்காக கிழவி ஆன பிறகும் நடித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சீதையானாலும் கிழவி அல்லவா! ஒரு சில காட்சிகளில் சரோஜாதேவி போலத் தெரிந்து பல பெரிசுகளின் உயிரை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

* தமிழ் பேசினால் நடிக்க வராது என்பதை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

* நடிகர்களின் முகத்துக்கு அருகில் க்ளோஸ் அப் காட்சி வைத்து போரடித்துப் போன மணி ரத்னம், மூக்கு காது கண் என ஒவ்வொன்றுக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.

* வசனம் பாதி புரியவில்லை, மீதி கேட்கவில்லை.

* சுஹாசினி ஜெயா டிவியில் பேசுவது போலவே நினைத்துக்கொண்டு தனது இண்டலக்சுவல் பேத்தலை வசனமாகக் கொட்டியிருக்கிறார். இது மணி ரத்னத்துக்கும் பிடித்துப் போன விஷயம் என்பதால் பல இடங்களில் வசனங்கள் பல்லை இழித்துக்கொண்டு நிற்கின்றன.

* திடீர் திடீரென மேட்டுக் குடி என்றெல்லாம் வசனம் வருகிறது. ராமாயணம் வழியே தொழிற்சங்க வசனம் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்னவோ. கார்டு போடும்போது நன்றி ரிலையன்ஸ் என்றும் அம்பானி என்றும் போடுகிறார்கள். ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி.

* படம் முழுக்க அருவியின் இரைச்சல். கூடவே ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை இரைச்சல். யாரோ ஒரு பெண்மணி கடைசி வரை படம் முழுக்க ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார். பணம் செட்டில் செய்யவில்லையோ என்னவோ. இசைப்புயலாக நுழைந்த போது சின்ன வயசு என்றார்கள். எத்தனை அனுபவம் வந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சின்ன வயசாகவே அவர் இருப்பது கொஞ்சம் ஓவர்.

* ஒரே ஒரு உருப்படியான பாடலை தேவையற்ற இடத்தில் வைத்து சொதப்பியிருக்கிறார் மணி ரத்னம். வசனமா பாடலா என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும்படியாக மற்ற வசனப் பாடல்கள் வந்து மறைகின்றன. இது போன்ற படத்துக்கு எதற்குப் பாடல் என்னும் தைரியம் இன்னும் மணி ரத்னத்துக்கு வரவில்லை. படம் கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டாமா என்ற எண்ணமாக இருக்கலாம்.

* ராவணன் என்றால் நெகடிவ் கேரக்டர், அதனால் கொஞ்சம் அலட்ட வேண்டும் என்று நினைத்து விக்ரம் அடிக்கும் அலட்டல் தாங்க முடியவில்லை. பக் பக் பக் என்று அவர் என்னவோ செய்யும் காட்சி மனதைப் பிசைகிறது, எப்படி ஒரு நல்ல நடிகரை ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டாரே மணி ரத்னம் என. அதிலும் ஐஸ்வர்யா ராய் கடைசிக் காட்சியில் அதே போலச் செய்யும்போது, மணி ரத்னத்தின் முகம் கிராஃபிக்ஸில் மறைந்து கே.எஸ்.ரவிகுமார் பக் பக் பக்கெனச் சிரிப்பது படத்தின் ஹைலைட்.

* பிரபுவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் கண்மை வேறு. என்ன கொடுமை சரவணன் இது என்று அவர் சீரியஸாகப் பேசிய தமிழ் மக்கள் இப்போதும் அவர் சீரியஸாக நடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறார்கள். இப்படி ஒரு வரம் கேட்டாலும் கிடைக்காதது.

* ரஞ்சிதாவுக்கு ’ஒரு சீன்’ கூட இல்லை. ஏன் வந்தார் என்பதே தெரியவில்லை. ஆனாலும் தமிழக மக்கள் விடாமல் கைத்தட்டுகிறார்கள்.

* அழகான கதாநாயகி வருகிறார்? என்ன ஆகும் அடுத்து? ஆமாம், காதல்தான். அண்ணன் முரட்டு அண்ணன், என்ன ஆகும் அடுத்து? அதேதான், விக்ரம் கொஞ்சம் முறைப்புடன் கொஞ்சம் சிரிப்புடன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். கல்யாணம் நடக்கிறது, என்ன ஆகும்? நாம் நினைப்பது போலவே ப்ரியாமணியைக் கெடுத்து விடுகிறார்கள். அப்புறம் என்ன ஆகும்? அண்ணன் வீறு கொண்டு எழுந்து, தனிப்பட்ட வன்மம் தீர்க்கக் கிளம்புகிறான். பொதுவுடைமை வசனம் பேச மட்டும் மறப்பதில்லை! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை.

* இத்தனை நேரம் ஓடிய படத்தில் ஒன்று கூடவா உருப்படி இல்லை? அந்த சந்தோஷத்தை நமக்குத் தருவது சிவன் மட்டுமே.

* ஐஸ்வர்யா ராயும், விக்ரமும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படலாம். அதெல்லாம் எதோடும் ஒட்டாமல் நிற்பது பெரிய குறை.

* பிரிதிவிராஜ் ஐஸ்வர்யா ராயை நினைத்து உருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய் உருகுவதையெல்லாம் காண்பிக்கவில்லை. எங்கே பின்னர் ஐஸ்வர்யா ராய் விக்ரமை நினைத்து உருகுவது போல் காண்பித்தால் மக்கள் நெளிவார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ. ஆனால் திடீரென்று என் கணவர் கடவுளுக்கும் மேல் என்றெல்லாம் பேசுகிறார் ஐஸ்வர்யா ராய். அங்கே ஏன் கடவுள் வந்தார், ஏன் கடவுள் சிலை வந்தது என்பதற்கெல்லாம் ஒரு லாஜிக்கும் இல்லை. ஒரே ஒரு காரணம், சுஹாசினி தனது இண்டெலக்சுவலைக் காட்டவேண்டும் என்பது மட்டுமே!

* மணி ரத்னம் இப்படி பழங்காலக் கதையை மார்டனாக எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு, பாதி கேட்காத வசனத்தைப் பேசிகொண்டு, சுஹாசினியை வசனம் எழுத வைத்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துக்கொண்டிருந்தால், இனியும் காணச் சகிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தைரியமாக வெளியில் உண்மையைச் சொல்லிப் படம் எடுக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் காதல் கதையை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுப்பதால், சில காட்சிகளில் வரும் நடிகர்கள் தமிழ் முகமாக இல்லாமல் இருப்பது பெரும் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.

* ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.

விக்ரமுக்கும் ஹரன் பிரசன்னாவுக்கு ஒரே ஒற்றுமை இருவருக்கும் வயதாகிவிட்டது !
நல்ல விமர்சனம் படிக்க இங்கே செல்லவும்


Read More...

ராவணன் - FIR

ராமாயணம் காவியத்தில் ராமர் தான் ஹீரோ. ராவணன் படத்தில் ராவணன் தான் ஹீரோ(விக்ரம்).
ராவணனை ஹீரோவாகக் காண்பித்தால் ராமரை வில்லனாகக் காண்பிக்க வேண்டும். காண்பித்துவிட்டார்கள். ராமாயணத்தில் சீதை பத்தினி, ராமர் சந்தேகப்பட்டு கேள்வி கேட்டதால் உடனே அக்னியில் குளித்து தான் ஒரு பதிவிரதை என்று நிருபித்தாள்.( இதனால் சாலமனுக்கும், லியோனிக்கும் இன்றும் பிழைப்பு நடந்துக்கொண்டு இருக்கிறது. )


இது ஜீன்ஸ், டி.சர்ட் யுகம், இதில் ராமர் சந்தேகப்பட்டால் சீதை உடனே டிரயின் செயினை பிடித்து இழுத்து ராவணனே மேல் என்று அங்கே சென்றுவிடுகிறாள். இந்த ஷாக்கை கொஞ்சம் கதையுடன் கொடுத்திருக்கிறார் மணிரத்தனம். நிச்சயம் இந்த படம் ஹிந்து சைட்டில் நல்ல ‘ஹிட்’ வாங்கும். சந்தேகம் இல்லை.

படம் ஆரம்பிக்கும் போது சில காட்சிகளை காண்பித்து நம்மை கதைக்குள் அசால்டாக இழுக்கிறார். அந்த காட்சிகளை போகிற போக்கில் கதையில் காண்பித்துவிட்டு நம்மை பிரமிக்க வைக்கிறார்.

ராவணனின் தங்கையாக வரும் சூர்பனகை (ப்ரியாமணி) குரல் நிஜ சூர்பனகைக்கு டப்பிங்கொடுக்கலாம். சில காட்சிகளில் வந்தாலும் நன்றாகச் செய்துள்ளார். ராமாயணத்தில் லக்‌ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை அறுப்பார். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக போலீஸ்காரர்கள் கூட்டு சேர்ந்து அவளைச் சூறையாடுகிறார்கள். ராவணன் தான் செய்யும் அட்டுழியங்களுக்கு ஒரு பலமான ஃபிளாஷ்பேக் வேண்டமா? அதுதான் இது.

ஐஸ்வரியா ராய் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வருவது போல வருகிறார். முதல் காட்சியில் ஏதோ செம்மொழி வசனம் பேசும் போது தியேட்டரில் சிலர் விசில் அடிக்கிறார்கள். வசனம் சுஹாசினி. கோவைக்கு ஒரு டிக்கெட் பார்சேல்!.

மற்றபடி ஐஸ் வழக்கமாக வரும் மணிரத்தனம் ஹீரோயின். (தமிழ் போலீஸுக்கு வாக்கப்படும் ஹீரோயின் எல்லாம் ஒன்று பரதநாட்டியம்/பாடல் கிளாஸ் எடுப்பார்கள், இல்லை ஸ்கூல் டீச்சராக இருப்பார்கள்). ஐஸுக்கு வயதாகிவிட்டது. இருந்தாலும், விக்ரம், பிரிதிவிராஜ் போன்றவர்களுடன் நடிப்பதால் இளமையாகவே இருக்கிறார்.

பல காட்சிகளில் அந்தப் பூனை கண்களே நடித்துவிடுகிறது. விக்ரம் மீது காதல் (அல்லது Crush?) கொள்ளும் காட்சிகள் கவிதை. (தமிழ் நாட்டுப் பெண்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது வேறு விஷயம்).

பிரிதிவிராஜ் ராமர் வேஷம் போட்டதாலோ என்னவோ மீசை இல்லாத போலீஸ் எஸ்.பி.யாக வருகிறார். ஏனோ மீசை இல்லாதால் வீரம் கொஞ்சம் கம்மியாக இருக்கிறது. சில சமயம் முகம் மொழுக்கு என்று ஐஸுக்கு போட்டியாக கூட இருக்கிறது.

விபீஷணன் கதாப்பாதிரம் கூட வருகிறது. ராவணனின் தம்பியாக. சமாதானம் பேச வரும் இவரை ராமர் போட்டுத்தள்ளுகிறார். ராமரை வில்லனாகக் காண்பிக்கும் இன்னொரு இடம் இது.

கார்த்திக் அனுமான் கதாப்பாதிரத்தில் ஜோக்கராக வருகிறார். சாரி குதிக்கிறார். ஹனுமான் என்ற காரணத்துக்காக ஆரம்பக் காட்சிகளில் தாவித்தாவிக் குதிப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர். பிரபு சில காட்சிகளில் கண்களுக்கு மை தடவிக்கொண்டும் சில காட்சிகளில் தடவாமலும் முதல் முறையாக நடித்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள்.

வழக்கமான மணிரத்தின பாடல் காட்சிகள். சில காட்சிகளில் ஐஸ்ஸின் தலை மயிர் காற்றில் ஆடுவது கூட ஏதோ படத்தில் பார்த்த மாதிரி இருக்கே என்று சொல்ல வைக்கிறது.

விக்ரம் சில காட்சிகளில் கந்தசாமி+பிதாமகன் மிக்ஸ் சேஷ்டை செய்வது கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. காட்டுவாசிகள் எல்லாம் அப்படி தான் இருப்பார்களோ. யார் கண்டது!!

பாடல் கேட்பதைக் காட்டிலும் படத்துடன் பார்ப்பது நன்றாக இருக்கிறது. சில இடங்களில் ரஹ்மான் தெரிகிறார், பல இடங்களில் மணிரத்னம் தெரிகிறார்.

மலைமீது இருந்து விக்ரம் குதிப்பது, ஐஸ் விழுவது, இரண்டு மலைகளுக்கு இடையில் இணைந்த கைகள் படத்தில் வரும் கிளிப் ஹாங்கர் காட்சி சாகசங்கள் எல்லாம் முன்பே நான் பார்த்ததால் ’அட’ என்று சொல்ல வைக்காவிட்டாலும் எடுத்த விதத்துக்கு சபாஷ் சொல்ல வைக்கிறது.

படம் முழுக்க ’ராம்போ’ படம் பார்ப்பது போல இருப்பதாலோ என்னவோ சில ஃபிளாஷ் பேக் காட்சிகள் காண்பிக்கும் போது அப்பாடா என்று ரிலாக்சாக இருக்கிறது. காடுகளில் எப்போதும் மழைக்கொட்டிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ தியேட்டரில் குளிருக்கு அடிக்கடி டாய்லெட் போகிறார்கள். இன்னொரு தமிழ் டைரக்டராக இருந்தால் இந்த மழையில் ஐஸை முழுவது நனைத்து பிழிந்து காயபோட்டிருப்பார்கள். நல்ல வேளை மணிரத்னம் அதை செய்யவில்லை.

உடைந்து போன ரங்கநாதர் சிலைக்கு முன் வரும் வசனங்கள் ரங்கநாதரைப் போல கவர்ச்சியாகவும், கமல் படத்தில் வரும் இண்டலிஜெண்ட் வசனம் போலவும் இருக்கிறது. ஒரு புதுமையான காட்சியும் இருக்கிறது. ஒரு கையை வெட்டி அதை இன்னொரு கையால் பிடுத்துக்கொள்ள வைக்கும் ரத்த காட்சி. பார்க்கும் போது மனம் பதறுகிறது, எப்படி இந்த காட்சிக்கு ’U' சான்றிதழ் தந்தார்கள் என்று.

இட்லிவடை மார்க் 6.5/10

படத்தில் அடிக்கடி கைத்தட்டல் வாங்குவது ரஞ்சிதா தான்! தமிழ் நாட்டு மக்களுக்கு தான் என்ன ஒரு ஞானம்! என்ன ஒரு ஞாபகசக்தி !

மஹாபாரதம், ராமாயணம் முடிந்துவிட்டது அடுத்து என்ன கதை மணி சார் ?

Read More...

ஆனித்திருமஞ்சனம்


செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கி
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லை சிற்றம் பலமேய
செல்வன் சுழல் ஏத்தும் செல்வம் செல்வமே

என்கிறார் தில்லை என்கிற சிதம்பர தலத்தை பற்றி திருஞானசம்பந்தர்.

சித் என்றால் அறிவு, அம்பலம் என்றால் வெட்டவெளி. முன்பு தில்லை என்று வழங்கப்பட்ட இத்தலம் இப்போது சிதம்பரம் என்று அழைக்கபடுகிறது. அப்பர்,சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் என அனைவராலும் பாடல் பெற்ற, சைவர்களின் தலைமை கோவிலாக விளங்குகிறது.

'ஓம்' என்னும் பிரணவ நாதத்தின் வடிவாக நடராஜர் ஆனந்த கூத்தாடும் மூலவரின் பெயர் சபா நாயகர்.தில்லை திருகோவிலுக்கு மேரு என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

சில சிறப்பு அம்சங்களை மட்டும் நான் இங்கே எழுதுகிறேன்.

கோவிலின் அமைப்பு : கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என நான்கு ராஜகோபுரங்கள். இவை நான்கும் ஒரே உயரத்தில் இருப்பது ஒரு சிறப்பு அம்சம் ஆகும். ஒவ்வொன்றும் 135 அடி உயரம்.இந்த கோபுரங்களுக்கு, ஏழு தளங்கள், பதிமூன்று செப்பு கலசங்கள், 40 அடி அகலம் கொண்ட கோபுர வாயில்கள் என்று பொதுவாக அமைந்து இருக்கின்றன. ராஜ கோபுர வாசல்களில், நடராஜ முத்திரை எனப்படும் பரத கலை சிற்ப்பங்கள் காணப்படுகின்றன. நடராஜர் தெற்கு முகமாக திருநடம் புரிவதால், தெற்கு கோபுர வாசலில், கொடி ஏற்றப்பட்டு உள்ளது.புனித மரம் தில்லை மரம்.

சித்சபை : நடராஜர் சந்நிதியை பொன்னம்பலம் என்றும் அழைக்கிறார்கள். இக்கூரையின் மீது, ஒன்பது சக்திகளை குறிக்கும் ஒன்பது தங்க கலசங்கள் அமைந்து உள்ளன.மேலும், இதில், 64 கலைகளை குறிக்கும் வகையில் 64 கைம்மரங்கள், ஒரு நாளில் வெளிவரும் மனிதனின் சுவாசங்களை குறிக்கும் வகையில் 21600 ஓடுகள், மனிதனின் நாடிகளின் எண்ணிக்கையை உணர்த்தும் வகையில் 72000 ஆணிகள் ஆகியவை பொருத்த பட்டு உள்ளன.
மனிதனின் இருதயத்தில் இருக்கும் இறைவனே, இந்த பொன்னம்பலத்தில் இருக்கிறான் என்று உணர்த்தும் விதமாக மனித உடல் போல இந்த பொன்னம்பலம் அமைக்க பட்டுஉள்ளது.

விஷ்ணு சந்நிதி : தெற்கு முகமாக நடராஜர் சந்நிதி, கிழக்கு முகமாக கோவிந்தராஜ பெருமாளின் சந்நிதி என ஒரே இடத்தில தரிசிப்பது இக்கோவிலுக்கு மட்டுமே உள்ள சிறப்புஅம்சம்.

சிதம்பர ரகசியம் : ஆலயத்தின் சித்சபையில், நடன கோலத்தில் இறைவன் காட்சி தர, அவர்க்கு இடப்பக்கம் சிவகாம சுந்தரி அம்பாள் வீற்று இருக்கிறார். வலது பக்கம் திரை போட்ட வாயில் உள்ளது. அங்கு தங்கதினால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்க விட பட்டு உள்ளது. நடராஜருக்கு, ஆரத்தி எடுக்கப்படும் போது, அந்த வாயிலின் திரை விளக்கப்படும். இதன் அர்த்தம், இறைவன் ஆகாய உருவில் அங்கு இருக்கிறார் என்பது. இதையே சிதம்பர ரகசியம்என்கிறார்கள்.

மூலவரே வீதி உலா வரும் இரு பெரும் திருவிழாக்கள் மார்கழி திருவதிரையிலும், ஆணி உத்தரதிலும் நடை பெறுகிறது.

ஆனித்திருமஞ்சனம் :

முதலாவது ஆனி மாதம், உத்திர நட்சதிரதிர்க்கு பத்து நாள் முன் கொடி ஏற்றி, முதல் நாள் முதல் எட்டாம் நாள் வரை உற்சவ மூர்த்திகள் ஒவ்வொரு நாளும், தங்க வெள்ளி வாகனங்களில் வீதி உலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர் திருவிழா. இதில் மூலவரான நடராஜர், சிவகாமி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தேர்களில் உலா வர, பத்தாம் நாள் ஆயிரங்கால் மண்டபத்தில் அர்ச்சனைகள், பூஜைகளுடன் ஸ்ரீ நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்மனின் ஆனந்த நடனம் இடம் பெறும். இதை தரிசனம் என்றுஅழைக்கிறார்கள்.

இம்மாதம், ஜூன் 10 ஆம் தேதி இத்திரு கோவிலில் கொடி ஏற்றப்பட்டு உள்ளது. 18 ஆம் தேதி தேர்த்திருவிழாவும், 19 ஆம் தேதி தரிசனமும் நடை பெற உள்ளது.

"மன்னுக தில்லை ! வளர்க நம் பக்தர்கள்" என்ற சேந்தனாரின் வாக்கை நினைவு கூர்ந்து, ஆனி திருமஞ்சன உற்சவத்தில் கலந்து கொண்டு, வாசக நண்பர்கள் அனைவரும் இறைஅருள் பெறுமாறு வேண்டுகிறேன்.

-இன்பா

Read More...

Thursday, June 17, 2010

செம்மொழி மாநாடும், செல்பேசி மோசடிகளும்..

இன்று காலை என்னுடைய உறக்கத்தைக் கலைத்த செல்பேசி குறுஞ்செய்தி, ஆச்சர்யம், அதிர்ச்சி, திகைப்பு என பலவிதமான உணர்ச்சிகளையும் ஒருங்கே தோற்றுவித்தது. அதிக பீடிகை இல்லாமல் நேராக விஷயத்திற்கு வந்து விடுகிறேன். கீழே இருப்பதுதான் அக்குறுஞ்செய்தி.

“ Tamil sem mozhli manadu 23rd-27th (2010) AT COVAI CODISIA HALL. Frwd thismessage to 15peoples including me. You'l get Rs 199.86 from state government of TAMIL NADU. It's true and I received. see today's hindu news paper. Check your balance after 5 mins...it will safe.."

இதுதான் அக்குறுஞ்செய்தி. அட்சரம் பிசகாமல் கொடுத்திருக்கிறேன். இச்செய்தியைப் படித்தவுடன், செய்தி அனுப்பிய எனது நண்பரைத் தொடர்பு கொண்டு இது உண்மையா? நீங்கள் இச்செய்தியை 15 பேருக்கு அனுப்பியதன் மூலம் உங்களுக்கு அதில் குறிப்பிட்டுள்ள அளவு பணம் கிடைத்திருக்கிறதா என விசாரித்தேன். ஆனால் அவரோ, “எனக்கு வேறு ஒருவர் அனுப்பினார், நானும் 20 பேருக்கு மேல் அனுப்பிவிட்டேன் ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை” என்ற ரீதியில் பதிலளித்தார்.

இது போன்ற “ஃபார்வர்டு” குறுஞ்செய்திகள் பெரும்பாலும் நம்பகத்தன்மையற்றது என்றே வைத்துக் கொண்டாலும், கழகத்தின் கவர் கொடுக்கும் பாரம்பர்யம் சிறிதே ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, தமிழக அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் சகட்டு மேனிக்கு ஐந்து நாட்கள் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதுவும் போதாதென கவர் கொடுத்து கூட்டத்தை கவர் செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது என்னவோ வாஸ்தவம். இது உண்மையென்றால் தமிழுக்கு இதை விட பெரிய அவமானமும், கேவலமும் வேறெதுவும் இல்லை. இது பொய் மற்றும் யாரோ சிலரின் விஷமச் செயல் என்றால், இதில் இரண்டு மதிப்பு மிகுந்த ஸ்தாபனங்களின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று தமிழக அரசு, மற்றொன்று ஹிந்து செய்தித்தாள் நிறுவனம். இவ்வாறான பொய்யான, அரசு மற்றும் மதிப்பு மிக்க செய்தித்தாளின் பெயரால் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடனான வதந்திகள் கடுமையான நடவடிக்கைக்குரியவை.

இது குறித்து, தமிழகத்திலுள்ள ஹிந்து அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வாறான செய்தி ஏதும் ஹிந்துவில் வெளியிடப்படவில்லை என்றும் இது ஏதோ விஷமப் பிரச்சாரம் என்று தெரிவித்தனர். இவ்விஷமத்தை செய்வது யாராக இருந்தாலும், உங்களில் எவருக்கேனும் இதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால், அதனை தயவு செய்து மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்ய வேண்டாம். அதுவே தமிழுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும்.

- யதிராஜ்

இட்லிவடை பற்றி எஸ்.எம்.எஸ் செய்தால் ஒரு ரூபாய் தருகிறேன் :-)


Read More...

திமுகவில் லாலு ?

அமைச்சர் நெப்போலியனின் உதவியாளர் கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் படம் பதித்த மோதிரத்தை தனது விரலில் அணிந்திருந்தார். சில சமயம் டிபன் சாப்பிடும் போது இதை கழட்டி தட்டாகவும் உபயோகப்படுத்துவார் என்று தெரிகிறது. போன வாரம் விமான நிலையத்தில் வந்த போது இவருடைய மோதிரம் லாலுவின் கண்ணில் பட இந்த மோதிரத்தை போட்டு பார்க்கலாமா என்று கேட்டுள்ளார். மேலே உள்ள படம் அது தான். முன்பு பால் கறப்பது மாதிரியும், தன் கிராம மக்களுக்கு கிராப் வெட்டுவது மாதிரியும் போஸ் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


டெல்லி விமான நிலையத்தில் இந்த மோதிரத்தை போட்டுக்கொண்டு திமுகவினரை உற்சாகப்படுத்தினார் என்று செய்தி:-)


மோதிரம் கொடுத்தவர் உற்சாகமாக இருந்தாரா ? லாலு திருப்பி கொடுத்தாரா ? இவ்வளவு பெரிய அழகிய மோதிரத்தில் அழகிரிக்கு ஏன் கொஞ்சம் இடம் கொடுக்கவில்லை போன்ற செய்திகள் இல்லை.


Read More...

Wednesday, June 16, 2010

போபால் கசிவும், பிரிட்டிஷ் கசிவும்.

சில வாரங்களாக ஆங்கில செய்திகளில் மட்டும் இந்த செய்தி வந்து கொண்டு இருக்கிறது. டிவிட்டரில் வழக்கம் போல ஐஃபோன், பிளாக்பெரி, செம்மொழி என்ற ஜல்லியும். என் போஸ்ட் என்ற விளம்பரமும். ஆறுதலுக்கு பேயோன் மட்டும் தான் இருக்கிறார்.

சரி விஷயத்துக்கு வருவோம். பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய்க் கசிவு தொடர்ந்து பரவுகிறது. இதற்கு முன் இது மாதிரி நிறைய நடந்திருக்கு ஆனால் இந்த முறை ஓபாமாவுக்கு கொஞ்சம் கோபம் வந்ததால் இன்னும் பிபிசியில் இந்த நியூஸ் வந்துக்கொண்டு இருக்கிறது.




கடந்த வெள்ளி அன்று இந்த கசிவு புளோரிடாவை வந்து அடைந்திருக்கிறது. தனக்கு வந்தால் தான் பித்தமும் தலைவலியும் என்பது போல அவர்கள் பக்கம் வந்தால் தான் பிரச்சனை புரிய ஆரம்பித்திருக்கிறது.

இந்த மாதிரி எண்ணை கசிவினால் வழக்கம் போல இறந்த மீன்கள் கரைப்பக்கம் ஒதுங்கும். வேறு பல உயிரினங்களும் மடியலாம்.

BP ( பிரிட்டிஷ் பெட்ரோலியம்) நிர்வாகமும் ஓபாமாவும் கசிவை நிறுத்த மற்று திட்டம் பற்றி ஒன்றை வகுத்துள்ளார்கள். ஆனால் அது நடைமுறைக்கு வர ஆக்ஸ்ட் மாதம் ஆகலாம். அதுவரை ஒரு நாளைக்கு 500,000 காலன் முதல் 4 மில்லியன் காலன்கள் வரை கசிவு ஏற்படுகிறது.

இந்த எண்ணை கசிவினால் என்ன பெரிய பாதிப்பு என்றால் அமெரிக்க சுற்றுலா துறைக்கு பெரிய பாதிப்பு. இந்த பழுப்பு நிற தண்ணீரில் நாங்க குளிக்க மாட்டோம் என்று பயணிகள் அடம்பிடிக்கிறார்கள். ஓபாமாவுக்கு வந்துவிட்டது கோபம்.

பெரும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்துக்கெதிராக கடுமையான நிலைப்பாட்டை ஒபாமா நிர்வாகம் எடுத்துள்ளது.

ஆனால் இதே போன்ற நிலைப்பாட்டை நிலைப்பாடு அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் பொருந்தும். ஆனால் நம் அரசு உடனே எதுவும் செய்யாது. மிஞ்சி போனால் ஒரு கடிதம் எழுதும். சில தொண்டு நிறுவன அம்மாக்கள் காட்டன் புடவை கட்டிக்கொண்டு ஆங்கில சேனலில் பொளந்துக்கட்டுவார்கள். லல்லு ஏதாவது ஜோக் அடிக்க உடனே டிவியை அங்கே தூக்கிக்கொண்டு ஓடுவார்கள்.


பிளைட்டில் இறந்தவர்களுக்கு சில லட்சம் நஷ்ட ஈடும், ரயிலில் இறந்தவர்களுக்கு சில ஆயிரம் நஷ்ட ஈடும் கொடுப்பதில்லையா ? போபால் கசிவும், பிரிட்டிஷ் கசிவும் அது மாதிரி தான்.

Read More...

Monday, June 14, 2010

மண்டேனா ஒன்று - 14/6/2010

சென்னைக்குப் பிரியாவிடை கொடுப்பதற்கான கடைசிநேர முஸ்தீபுகளுடன் மூழ்கியிருந்த தருணத்தில், திடீரென என்னுடைய அறையின் சாளரம் வழியாக குடலைக் குமட்டுகின்ற, வார்த்தைகளால் வர்ணிக்கவியலாத துர் வாடை வீசியது. என்னவென்று யோசிப்பதற்கெல்லாம் ப்ரமேயமின்றி போட்டதைப் போட்டபடியே விட்டுவிட்டு, வெளியே வந்துவிட்டேன். நாங்கள் இருப்பது ஆறாவது தளம். கீழே தரைதளத்தில் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின், குடியிருப்போர் சங்க செயலாளர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் என்ன ஏது என்று விசாரித்த போது, கட்டிடத்தின் “கழிவு நீர்” இணைப்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்ய மாநகராட்சி ஊழியர்கள் வந்திருப்பதாகவும் கூறினார். அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், அடைப்பை அகற்ற அறுநூறு ரூபாய் ஆகுமென்றும், முன்பணமாக 200 வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். முன்பணம் எதற்கு என்று சங்க செயலாளர் வினவியபோது, டாஸ்மாக் போய் வருவதற்கு என்று பதிலளித்தார் மாநகராட்சி ஊழியர். நான் ஒன்றும் புரியாமல் வெறும் பார்வையாளராய் இதெல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்த ஊழியர்கள், “மேன் ஹோலிற்குள்” இறங்க ஆயத்தமாயினர். எங்கு சென்றாலும் ஒரே வாடைதான் என்ற நிலையில், என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கலாமென்று, கைக்குட்டையுடன் முக்கைப் பொத்தி நின்ற எனக்கு, அவர்கள் குழிக்குள் இறங்கிய விநாடியில் என்னுடைய உடலின் சகல அவயவங்ளும் ஸ்தம்பித்து விட்டன. சுமார் 160 வீடுகள் கொண்ட எங்களது அடுக்குமாடிக் குடியிருப்பின், அத்தனை வீடுகளின் மலக்கழிவுகளும் சங்கமிக்கும் ஒரு மலக்குழியில், சற்றும் அருவருப்பின்றி இறங்கினார் அம்மாநகராட்சி ஊழியர். இப்போதுதான் எதற்கு டாஸ்மாக் சென்றார் என்று மெதுவாகப் புரியத் துவங்கியது. நம் இருப்பிடங்களில், நாம் பயன்படுத்தும் கழிப்பறையையே சுத்தப்படுத்த அசூயைப் படும் நம்மைப் போன்றோரோடு ஒப்பிடுகையில், எவ்வளவு சஹிப்புத்தன்மையுடன் இருந்தால் இவர்கள் இத்தொழிலைச் செய்ய முனைவர்? இவர்களெல்லாம் கடவுளுக்குச் சமானமாக பூஜிக்கத் தகுந்தவர்கள் என்று கூறினால் அது மிகையல்ல. இவர்களுக்கு அறுநூறென்ன, ஆறாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட போதாது. அதற்கு மேல் அவர்களைப் பார்க்க மனமில்லாமல் அங்கிருந்து அகன்று விட்டேன். எப்பொழுதோ செய்தித் தாள்களில், மனிதக் கழிவுகள் அகற்றுவோர் பற்றிப் படித்திருப்பினும், அதனை நேரில் கண்டபோது, வர்ணிப்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட அதிர்ச்சி ஏற்பட்டது. தவிர உள்ளே விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் பிராணாபாயமும் உண்டு. அரைஜான் வயிற்றைக் கழுவ இவர்கள் படும் அவலம் நேரில் கண்ட பிறகுதான் தெரிந்தது.

காலம் எவ்வளவுதான் நவீனமயமாகி, வாழ்க்கை எவ்வளவுதான் விஞ்ஞான மயமானாலும், சமூகத்தின் ஒருசாரார் இன்னும் கற்காலத்திலேயே இருப்பது, அல்லது இருத்தி வைக்கப்பட்டிருப்பதை அவலமென்று சொல்வது கூட பொருத்தமல்ல. நம் அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை சமூகநீதி, சமத்துவம் என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு என்று திருமாவளவர்கள் இன்னொரு பக்கம் முழங்குகின்றனர். ஆனால் செல்வாக்குடைய ஒரு ஸ்தாபனத்தில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தோடு இருக்கும் இவர்கள் நினைத்திருந்தால், இந்நிலையை சீர்படுத்தியிருக்க முடியாதா? அல்லது சமூகநீதியே மனித உருவாய் முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் கருணாநிதியால்தான் இவர்களது தலையெழுத்தை மாற்றியெழுதவியலாதா? திருமாவளவன் போன்றோருக்கெல்லாம் கனடாவிற்கும், ஐரோப்பாவிற்கும் பறந்து சென்று புலி பஜனை செய்யவே பொழுது போதாமலிருக்கும் நிலையில், அவர்களைக் குற்றம் சொல்லியும் பிரயோஜனமில்லைதான். குறைந்தபட்சம் கோடை காலத்தில் “அஃபிஷியல் ட்ரிப்” என்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பவுசில் ஐரோப்பிய குளிர் தேசங்களுக்கு ஓசிப் பிரயாணம் மேற்கொள்கையில், அங்கு எவ்வாறு மனிதக் கழிவுகள் கையாளப் படுகின்றன என்று தெரிந்து வந்து சொன்னாலாவது அரசாங்கம் ஏதேனும் செய்ய முயற்சிக்க ஏதுவாக இருக்கும்.

இப்போதிருக்கும் கையாலாகாத சூழலில், வர்ணாசிரமத்தையும், மனுதர்மத்தையும் சாடுவதுதான் ஒரே தீர்வு இதற்கெல்லாம்.

அயல் தேசங்களில் இருப்போர், இப்பிரச்சினை அங்கு எவ்வாறு கையாளப்படுகிறது என்று பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் நலம்.

- யதிராஜ்

Read More...

Saturday, June 12, 2010

இரண்டாம் ஆண்டில் சொல்வனம்

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாழ்த்துகள்.

சொல்வனத்தில் எழுதும் ஒருவரிடம் இன்று காலை சாட் செய்துக்கொண்டு இருந்த போது (அவரும் சொல்வன குழுவில் இருக்கலாம், யார் கண்டது) ஒரு வருட சொல்வனம் பற்றி விமர்சனம் எழுதி தங்களேன் என்றேன்.
”நான் மொழிபெயர்ப்பு பகுதிகளை ஸ்கிப் செய்துவிடுவேன்” அதனால் நான் எழுதினால் சரியா இருக்காது என்றார்.
“அட பரவாயில்லை”
”மொழிபெயர்ப்பு பகுதிகளை ஸ்கிப் செய்தால் சொல்வனத்தில் வேறு எதுவும் இல்லை” என்றார் அந்த குசும்புபிடித்தவர்.



அந்த குசும்பர் சொல்வனத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற காரணத்தால் அவர் பெயரை இங்கே தவிர்க்கிறேன்.

சொல்வனத்தில் எழுதும் இவரே இப்படி விமர்சனம் செய்தால் அதை படிக்கும் வாசகர்கள் எப்படி விமர்சனம் எப்படி இருக்கும் ?

விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லலாம். அதாவது திட்டலாம்.

1. சொல்வனம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? ( ஆம்/இல்லை )
2. நீங்கள் சொல்வனத்தை தொடர்ந்து படிக்கீறீர்களா ? ( தொடர்ந்து/எப்பவாவது )
3. இணைய இதழ்களின் வெறுமையை சொல்வனம் போக்கியிருக்கிறதா? ( ஆம்/பத்தோடு 11)
4. சொல்வனம் ஏதேனும் உள்-நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது என நினைக்கிறீர்களா? ( ஆம்/இல்லை )
5. சொல்வனத்தின் கட்டுரைகள் புரிகின்றனவா ( ஆம்/இல்லை/சிலசமயம் )
6. சொல்வனத்தில் நீங்கள் விரும்பிப் படிக்கும் பகுதிகள் எது ( கட்டுரை, கதைகள், கவிதைகள்,மொழிபெயர்ப்பு, அறிவியல், கார்ட்டூன், மற்றவை )
7. சொல்வனம் ஓராண்டு இதழ்த் தொகுப்பு வெளியிட்டால் வாங்குவீர்களா? ( வாங்குவேன்/எதுக்கு வீண் செலவு )
8. நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லலாம் :-)

செல்வனத்தில் எழுத என்ன செய்ய வேண்டும் ? என்று சொல்வன ஆசிரியர் குழு சொன்னால் நன்றாக இருக்கும். பலர் எழுத முன்வருவார்கள். சொல்வனம் ஓர் ஆண்டு இதழ்களை பார்க்கும் போது, எனக்கு தெரிந்து வயதானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிறுவர்கள் ஸ்கூல் சேருவதற்கு பிறந்த தேதியை மற்றி கொடுப்பது போன்ற டெக்னிக்கை இங்கே உபயோகப்படுத்தலாம். இட்லிவடை மாதிரி புதிய எழுத்தாளர்களை சொல்வனம் ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் இதழ் வளர்ச்சி அடையும்.

சொல்வனம் எடிட்டர்கள் யார் என்று வாசகர்கள் யூகிக்கலாம். தப்பில்லை.
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சொல்வனம் பல்லாண்டு தழைக்க வாழ்த்துகள்.

பிகு: இரண்டாம் ஆண்டில் சொல்வனம் என்ற அறிவிப்பில் இட்லிவடையின் பெயரும் வந்த காரணத்தால் அவர்களுக்கு நன்றிக் கடனாக ஒரு சின்ன சர்வே விளம்பரம் இந்த பதிவு.

பிகு1: பின்னூட்டத்தில் பதில் சொல்ல முடியாதவர்களுக்கு ஓட்டு பெட்டி சைடு பாரில் :-)

சரக்கு இருந்தால் தான் நீங்க மாஸ்டர் ஆக முடியும் - இது சரக்கு மாஸ்டர் சொன்னது


Read More...

Friday, June 11, 2010

ஜாஸ்மின் - சாதனை மலர்

"கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன " என்று எழுதினார் கருணாநிதி அவர்கள். கோவில்கள் என்பதற்கு பதிலாக நாம் தனியார் பள்ளிகள் என்று போட்டு கொள்ளலாம்.

பள்ளிகளின் கட்டணத்தை முறை படுத்தி, அரசின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் அல்லது அறிக்கை அளவிலேயே உள்ளது என்பது கண்கூடு. இப்படி ஒரு விஷயம் இருப்பதையே பல தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது காட்டிக்கொள்ளவில்லை.




தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை பற்றி அரசுக்கு அறிவிக்க முறையாக இதுவரைக்கும் ஒரு "ஹெல்ப் லைன்" வசதி ஏன் தொடங்கப்படவில்லை என்று தெரியவில்லை.

தனியார் பள்ளிகள் பற்றி நான் கண்ட, கேட்ட, பார்த்த விஷயங்களை பற்றி இங்கே எழுதிகிறேன். கூடவே பெற்றோர்களின் அறியாமை பற்றியும் நாம் பார்ப்போம்.

1 . ஒரு தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக ரூ. 50 ஆயிரம் கட்டணம் வாங்கினார்கள். ஆனால், பில் ஏதும் தரவில்லை. கட்டட நிதி என்று சொல்லி இருக்கிறார்கள்.

2 . ஒரு பள்ளியில், குழந்தையை சேர்க்க வந்த பெற்றோர்களிடம் தனியாக இன்டர்வீயு நடத்தி, அவர்கள் இருவரும் கண்டிப்பாக டிகிரி படித்து இருக்கவேண்டும் என்றவர்கள்,, அவர்களின் சான்றிதழ் களை வாங்கி சோதனை செய்தும் இருக்கிறார்கள்.

3 . சேர்க்கையின் போது, அரசின் அறிவிப்பை சுட்டி காட்டிய பெற்றோரை, கடுமையாக மிரட்டி இருக்கிறது ஒரு பள்ளியின் நிர்வாகம்.

4 . சென்னையில் உள்ள பத்மா சாரங்கபாணி பள்ளியில் வசூலிக்க படும் கட்டணத்தில், ஒரு மாணவன் BE படித்துவிடலாம் என்று சொன்னார் ஒரு நண்பர். பெற்றோர்கள் இங்கு நடைபெறும் கொள்ளையை எதிர்த்து சாலைமறியலில்இறங்கினார்கள்.

5 . மற்றொரு பள்ளியில், நாங்கள் கட்டணத்தை குறைக்க மாட்டோம், விருப்பம் இல்லை என்றால் உங்கள் குழந்தைகளை கூட்டி கொண்டு போங்கள் என்று வெளிப்படையா அறிவித்துஇருக்கிறார்கள்.

6 . ஒரு நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, ஒரு மிக பெரிய தொகை கொடுத்து, ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு ஒன்பதாவது படிக்கும் தனது மகனை மாற்றினார் ஒருவர். அதற்க்கு அவர் சொன்ன காரணம், " இங்கே கோச்சிங் சரியில்லை சார், வரும் வருஷம் டென்த் ஆச்சே "என்றார்.

7 . ஒன்பதாவது படிக்கும் போதே பத்தாம் வகுப்புக்கும், பிளஸ் ஒன் படிக்கும் போதே பிளஸ் டூ படிப்பிற்கும் சிறப்பு டியுஷன்களை தொடங்கிவிடுகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். நிறைய மார்க் வாங்க வேண்டுமே என்கிறார்கள்.

8 . பள்ளி செல்லும் நேரம் தவிர, குறைந்தது ஆறு மணிநேரம் டியுஷன்களில் செலவு செய்கிறார்கள் பத்தாம் மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள். பள்ளி கட்டணத்துக்கு இணையாக இதற்கும் செலவு செய்கிறார்கள்பெற்றோர்கள்.

9 . ஒரு புகழ் பெற்ற தனியார் பள்ளியில் தம் குழந்தைகள் படிப்பதையே இன்று உள்ள படித்த மற்றும் படிக்காத பெற்றோர்கள் விரும்புவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இவர்கள் அனைவரின் முகத்திலும் தண்ணிரை தெளித்து, அவர்களின் மயக்கத்தை போக்கி இருக்கிறார் ஜாஸ்மின் என்ற மாணவி.

திருநெல்வேலியில், ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்யும் ஏழை தந்தை, படிக்காத தாயார் என்ற சூழ்நிலையில் வளர்ந்து ஒரு பெரும் சாதனை நிகழ்த்தி இருக்கிறார் ஜாஸ்மின்.

நெல்லை டவுன் அருகே உள்ள கல்லணை எம்.பி. ல் மாநகராட்சி பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று இருக்கிறார் ஜாஸ்மின். இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய மற்றும் ஒரு விஷயம்...இவர் தனியாக டியுஷன் எதுவும் படிக்கவில்லை என்பதே.

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தில், அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்த என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இன்று ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இன்னொருவர், முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் படித்து, நாகை அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார்.

ஊட்டி கான்வென்டில் படித்து வீணா போனவர்களும் இருக்கிறார்கள்,மிக சாதாரண அரசு பள்ளியில் படித்து சாதித்தவர்களும் இருக்கிறார்கள்.

"முயற்சியும், ஈடுபாடும் மட்டுமே நான் வெற்றி பெற காரணம் " என்கிறார் சாதனை மாணவி ஜாஸ்மின்.

படிக்கிற பிள்ளைகள் எங்கு இருந்தாலும் படிக்கும் என்பதற்கு இந்த உதாரணங்கள் போதும்தானே?

-இன்பா


Read More...

உலகக் கோப்பை கால்பந்து இன்று துவக்கம்

உலக முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்காவில் துவங்குகிறது. கால்பந்து பற்றி உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும் கீழே உள்ள சுட்டியை ஒரு முறை கிளிக் செய்துவிடுங்கள்.

http://www.marca.com/deporte/futbol/mundial/sudafrica-2010/calendario-english.html

கால்பந்து பற்றி விமர்சனம் எழுத யாராவது இருக்கீங்களா ?

Read More...

Wednesday, June 09, 2010

இன்று வந்த மெயில் ...

வாங்க படிக்க வைக்கலாம்


Hello sir,
I went through the article & comments posted in idlyvadai.blogspot.com related to Dhanasekarapandian. I'm thankful to the moderator & other members for their overwhelming support.
I would like to insist on one thing. Ours is a reputed institution founded by my granddad Mr. Savari Cruz(late), before 5 decades to transfer the values of the society and knowledge to future generations. With his hard work, he founded three educational institutions (Veeramamunivar Middle School, Good Shepherd Matric Higher Secondary School and Holy Angel Higher Secondary School) educating more than 5000 students at present. By God's grace, we are able to continue his service to society. We ourselves manage to run all the three institutions in a conducive environment. We are trying our best to help the poor & downtrodden students in our locality through education.
Now, we are interested in joining hands with kind hearted people for the upliftment of poor & downtrodden students. we won't play any mediator role. Rather we could recomend genuine cases with their personal contact details, and the interested people could contact them and help them directly. I personally request you to post such informations in your blogspot or recomend to your friends personally. The shool or the management will not take a penny from that.
I've attached the details of one such genuine case. Miss. Pechiprema is with us for past 12 years. She is the school topper in the past academic year (2009-10) and she wants to pursue her higher studies in Medicine or Engineering discipline. The teachers and management shared helped her financially to complete her school education. Now, she is looking for some sponsors. Any interested persons could help her.
Once again I thank you for your support.

Regards,
Smiles.

மாணவி பற்றிய தகவல் இங்கே இருக்கு. விருப்பம் உள்ளவர்கள் உதவலாம்.

எல்லோருக்கும் நன்றி!.ஸ்ரீராமுக்கு ஸ்பெஷல் நன்றி

Read More...

Monday, June 07, 2010

(நோ) கமெண்ட்ஸ் :-)

நீங்களே பாருங்க...





நோ கமெண்ட்ஸ் !



Read More...

மண்டேனா ஒன்று - 7/6/2010

நினைவலைகள்


எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் திரு.நீலகண்டன் அவர்களின் பேட்டியொன்று "Memories Of Madras" என்ற தலைப்பில் கடந்த புதன்கிழமை ஹிந்து மெட்ரோ ப்ளஸ்ஸில் வெளியாகியிருந்தது. திரு.நீலகண்டன் அவர்கள் பிரபலமாக நீலு என்று அறியப்பட்டவர். சோ ராமசாமி அவர்களுடைய சகோதரர் அம்பி ராஜகோபாலுடன் இணைந்து விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப்பைத் துவங்கி அக்கால மேடை நாடகங்களில் சக்கை போடு போட்டவர். அவர் ஹிந்துவிற்கு அளித்த அப்பேட்டியினுடைய தமிழாக்கம் உங்களுக்காக....




பல்வேறு காரணங்களுக்காக மதறாஸை என்னுடைய தாயகமாகக் கருதுகிறேன். சுமார் 1941-42 களில் மாஞ்சேரியிலிருந்து (தற்போது கேரளாவிலிருக்கிறது) நம்பர் 25, முத்துக்காளத்தி செட்டித் தெரு, திருவல்லிக்கேணிக்கு குடிபெயர்ந்ததிலிருந்தே இங்குதான் வசித்து வருகிறோம். ராகவேந்திரா எலிமெண்ட்ரி பள்ளியில் என்னுடைய ஆரம்பப் பள்ளி நாட்களும், இரண்டாம் உலகப் போரின் போது எவ்வாறு பதுங்கு குழிகளிலும், மறைவிடங்களிலும் ஓடி ஒளிவோம் என்பதும் இன்றைக்கும் தெளிவான நினைவிருக்கிறது.

மேலும், ஆகஸ்டு 15, 1947 ஐ யாரால் மறக்க முடியும்? அக்காலத்தில் வீட்டில் ரேடியோ வைத்துக் கொள்ளுமளவிற்கு எங்களுக்கு வசதியில்லாத காரணத்தால், பண்டித நேருவின் புகழ்பெற்ற நள்ளிரவு உரையைக் கேட்பதற்காக, ப்ரெஸிடென்ஸி கல்லூரிக்கு எதிரே இருந்த மெரினா கடற்கரைக்கு விரைந்தோம். (இதனால் பின்னர் இதற்கு ரேடியோ பீச் என்ற பெயரும் ஏற்பட்டது).

அந்நாட்களில் கையில் அவ்வளவாக பணம் இல்லாத சூழலிலும், எங்களுடைய இளைய வளரும் பருவங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உல்லாசமுமாகவே கழிந்தன. திருவல்லிக்கேணியில் வரிசையாக அடைசலான வீடுகள் இருந்தபோதிலும், எங்களுக்கு விளையாடுவதற்கு விசாலமான இடங்களும் இருந்தன. அக்காலத்தில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் விடாமல் பார்ப்போம். கிரிக்கெட் மாட்ச்கள் என்றாலே அப்பாவிடம் பணம் கேட்க வேண்டிய தயக்கமான தருணங்கள். இருந்தாலும் கிரிக்கெட் மீதான மோகம் குறைந்தபாடில்லை. காலை ஒன்பது மணிக்கு துவங்கவிருக்கும் மாட்ச்களுக்கு, விடியற்காலை மூன்று மணிக்கே டிக்கெட் வாங்குவதற்கு எங்கள் குழுவினர் ஆஜராகி வசதியான இடங்களைப் பிடித்து விடுவோம். பிறகு எட்டரை மணிவாக்கில் எங்களில் ஒருவர் வீட்டிற்குச் சென்று சாப்பாட்டு பொட்டலங்களைப் பெற்று வந்து, தேங்காய் சாதம், புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை அனுபவிப்போம்.

இது தவிர பிரெஸிடென்ஸி கல்லூரி அருகே அமைந்துள்ள வென்லாக் மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் செல்வோம். பொழுது போகாத தருணங்களில், வேர்க்கடலை சுண்டல், குச்சி ஐஸ், கமர்கட், பஞ்சு மிட்டாய், விதம் விதமான வடிவத்திலிருக்கு ஜவ்வு மிட்டாய் என பலதரப்பட்ட பண்டங்களை சுகாதாரம் பற்றிய கவலையின்று சுவைத்து மகிழ்வோம்.

பெரிய தெருவிலுள்ள ஹிந்து மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்களது பாட்சிற்குதான் முதன் முறையாக மல்டிபிள் சாய்ஸ் கேள்வித்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் தேர்வின்போது வகுப்பிலே படிப்பில் சுட்டியாக உள்ள மாணவன் விடைக்குத் தகுந்தாற்போல் ஒன்று இரண்டு என விரல்களை உயர்த்த நாங்கள் விடையெழுதுவோம். தவிர ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர்கள் வைத்து அழைப்பதுவும் உண்டு. அவ்வாறுதான் வரலாற்றாசிரியர் பஞ்சாபகேசன், ”பங்க்சர்” என்றானது, டிரில் மாஸ்டர் வீரபத்ர நாயுடு, “மேஸ்திரி” ஆனதும்.

எங்கள் பள்ளிப் பருவத்தில், மாணவ சாரணர் இயக்கத்தில் சேர்வது மிகவும் பிரசித்தமானது. இன்னமும் குறிப்பாகச் சொல்லப் போனால் என்னுடைய நாடக தாகத்திற்கு ஊக்கமளித்ததே என்னுடைய சாரணர் இயக்க அனுபவங்கள்தான். ஒவ்வொரு சாரண முகாம்களிலும், சுமார் 200 பார்வையாளர்களுக்கு மத்தியில் 15 நிமிடங்கள் எங்களுக்கு நாடகம் நடத்த அனுமதியளிக்கப்படும். பிற்காலத்தில் மேடை பயத்தைப் போக்க அந்த அனுபவங்கள் மிகவும் உபயோகமாக இருந்தன.

அப்போதெல்லாம் எங்களுக்கு வார, மாதப் பத்திரிக்கைகளை வாங்கிப் படிக்குமளவிற்கு வசதியில்லை. ஆனால் அந்த ஏழ்மை நிலை அப்பத்திரிக்கைகளை நாங்கள் படிப்பதைத் தடுத்து விடவில்லை. பிற்காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய பெரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலு அப்போது எங்கள் பகுதியில் பத்திரிக்கை விநியோகம் செய்பவராக இருந்தார். அவர் எனக்கு, படித்துவிட்டு மதியத்திற்குள் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளைத் தருவார். இரவில் வழக்கமாக அவர் எங்கள் வீட்டு வராண்டாவில்தான் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அவருடன் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருப்பேன். பிற்காலத்தில் அதுவே எனக்கு மதறாஸ் தமிழில் நல்ல பாண்டித்யம் பெறுவதற்கு உதவியது.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தேவனின் மிஸ்.ஜானகி, கல்யாணி, ஜஸ்டிஸ் ஜகந்நாதன் போன்ற நாடகங்களில் நடிப்பதன் மூலம் முழு நேர தொழில்முறை நாடக நடிகனானேன். அந்நாடகங்கள் திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பிற்காக, திரு. “சாம்பு” என்.எஸ். நடராஜன் அவர்களால் இயக்கப்பட்டது. கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு வீட்டில் ஒரு வருட ஓய்வு. அந்நேரத்தில் வீட்டில் நண்பர்களுடன் அரட்டை, சீட்டாட்டம், நாடகம் பார்ப்பது என்று கழிந்தது. எங்கள் வீட்டில் என்னுடைய நான்கு சகோதரர்களில் நானே மிக இளையவன் என்பதால் எனக்கு இதிலெல்லாம் சர்வ சுதந்திரம் உண்டு.

என்னுடைய வாழ்க்கையில் இசை ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். இதன் காரணமாகவே கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக எனக்கு கர்நாடக இசையின் மீது அபரிமிதமான ப்ரேமை. மதுரை மணி ஐயர், எம்.டி.ராமநாதன், ஜிஎன்பி, டைகர் வரதாச்சாரியார், கே.வி.நாராயணஸ்வாமி என அனைத்து மேதைகளின் கச்சேரிகளையும் கேட்டுள்ளேன்.

திருவல்லிக்கேணி நாராயணஸ்வாமி ஹாலில், பார்த்தசாரதி ஸபாவினர் கச்சேரிகளை நடத்துவர். சுமார் முன்னூறு முதல் நானூறு பேர் வரை அமரக்கூடிய அளவிற்கு ஜமுக்காளங்கள் விரிக்கப்பட்டு, கச்சேரி துவங்குவதற்கு வெகுநேரம் முன்பிருந்தே கூட்டம் களை கட்டத் துவங்கும். முன்னணி வித்வானின் கச்சேரியாக இருந்தால் மண்டபம் நிரம்பி, வெளியில் நின்று கொண்டு பலர் கேட்குமளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும்.

ஒரு முறை புல்லாங்குழல் மாலியினுடைய கச்சேரி மாலை ஆறு மணிக்குத் துவங்குவதாக இருந்தது. ஆனால் அவரால் நடு இரவுதான் வரமுடிந்தது என்றாலும், விடியற்காலை 4.30 வரை கச்சேரி நீண்டது.

நாங்கள் சாரணர் இயக்கத்தில் இருந்தபடியால், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக வேண்டி மியூசிக் அகாதமிக்கு அழைக்கப்படுவோம். இது என்னுடைய இசை தாகத்திற்கு மேலும் உரமளித்தது.

நாங்கள் பல இடங்களில் நாடகங்கள் நடத்துவோம். இன்றைய நிலை போலில்லாமல், அன்றைக்கு நகரெங்குமிருந்த ஸபாக்கள் நாடகங்களுக்கு ஊக்கமளித்தன. நாடகம் நடத்துவதற்குண்டான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து, எங்கள் நாடகம் முதல், ஆர்.எஸ்.மனோகரின் சரித்திர நாடகங்களை மேடையேற்றுவதற்குத் தோதான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தன.

அக்காலங்களில் மேடை நாடகங்களில் ஆண்களே பெண் வேடமேற்று நடிப்பதுவும் உண்டு. பி.என்.குமார், ஏ.என்.ராதாகிருஷ்ணன் போன்றோர் எங்கள் நாடகக் குழுவின் பிரசித்தி பெற்ற கதாநாயகிகள். ஒருமுறை சோ கூட பெண்வேடமேற்று நடித்துள்ளார். இதனால் வடசென்னையில் உள்ள சில சபாக்கள் எங்கள் நாடகங்களை நடத்த மறுத்தன. பிறகுதான் சுகுமாரி எங்களது நாடகக் குழுவின் முதல் நிஜ கதாநாயகியானார்.

(1936’இல் பிறந்த நீலகண்டன் என்கிற நீலு அவர்கள் முதலில் வி.டி.ஸ்வாமி & கம்பெனியில் குமாஸ்தாவகச் சேர்ந்து நாற்பதாண்டுகால உழைப்பிற்குப் பிறகு அந்நிறுவனத்தின் பொது மேலாளராக ஓய்வு பெற்றார். இவர் இதுவரை ஏழாயிரத்திற்க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் க்ரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தில் கூட நடித்திருக்கிறார். தவிர இவர், விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் என்கிற சோவினுடைய நாடகக் குழுவின் முக்கிய அங்கத்தினராவார் ( இக்குழுவை சோவினுடைய சகோதரர் அம்பி என்கிற ராஜகோபாலுடன் இணைந்து நிறுவியதே நீலுதான், ஆனால் இங்கு அவ்வாறு பிரசுரிக்கப்படவில்லை.) இவை தவிர இவர் சுமார் 150 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சோ’வினுடைய எங்கே பிராமணன் தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.)

நன்றி : ஹிந்து.

- யதிராஜ்

Read More...

Saturday, June 05, 2010

பள்ளியில் முதலிடம் பெற்றும் படிக்க வழியற்ற வெட்டியான் மகன்

சில நாட்களுக்கு முன் இட்லிவடையில் போட சொல்லி எனக்கு வந்த செய்தி. தாமதத்துக்கு மன்னிக்கவும்...


பத்தாம் வகுப்பில் 474 மதிப்பெண் பெற்ற மயான வெட்டியான் மகன் தனசேகரபாண்டியன் மேல்படிப்புக்கு வழியின்றி தவிக்கிறார்.மதுரை பாக்கியநாதபுரத்தை சேர்ந்த பாண்டி, தத்தனேரி மயானத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார். இவரது மகன் தனசேகர பாண்டியன், கனகவேல் காலனி ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவரது மார்க் விபரம்:தமிழ்-94, ஆங்கிலம்- 89, கணிதம்-100, அறிவியல்-98, சமூகஅறிவியல்- 98.

வறுமை குடும்பம்: தந்தை பாண்டி தத்தனேரி சுடுகாட்டில் வெட்டியான் உதவியாளராக பணியாற்றுகிறார். குடும்ப வறுமையால் பாண்டி மேல்படிப்புக்கு செல்ல முடியவில்லை. பள்ளி முதல்வர் தாமஸ் கிறிஸ்டோபர் கூறுகையில், அனைத்து வகுப்புகளிலும் தனசேகர பாண்டியன் முதலிடம் பெறுவார். எனவே அவருக்கு வகுப்பாசிரியை இந்திரா உட்பட ஆசிரியர்கள் சிறப்பு கவனம் எடுத்தனர். மாவட்ட ராங்க் பெறாவிட்டாலும்,
பள்ளியில் முதலிடம் பெற்றுவிட்டார்'' என்றார்.

தந்தை பாண்டி கூறுகையில், "வேறெந்த வருமானமும் இல்லாத நிலையில், வருவாய் போதவில்லையென்றாலும் எனது மகன், மகள்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறேன். எனது மகன் நல்ல மதிப்பெண் பெற்றதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் மேலும் படிக்க வைக்க வழியில்லை. எனது மகன் நன்கு படிப்பார் என்பதால் எனது தொழிலில் ஒருபோதும் அவரது உதவியை நாடியதில்லை'' என்றார்.

தனசேகர பாண்டியன் கூறுகையில், உயர்கல்வியில் மருத்துவத் துறையை தேர்வு செய்ய விரும்புகிறேன். ஆனால் பிளஸ்2 படிப்பே கேள்விக்குறியாகிவிடும் போல உள்ளதுஎன்றார். இவருக்கு உதவ விரும்பினால், "217, அந்தோணியார் கோயில் குறுக்குத் தெரு, பாக்கியநாதபுரம், தத்தனேரி, மதுரை-18' என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். பள்ளி முதல்வரை 94430 20125 ல் அழைக்கலாம்.

( நன்றி: தினமலர் )



Read More...

Friday, June 04, 2010

Well Done Abba - விமர்சனம்

வடிவேலு ஒரு படத்தில் “என் கிணற்றை காணோம்” என்று போலீஸை டென்ஷன் செய்து காமெடி பண்ணுவார். இந்த படத்திலும் கிணறு காணாமல் போகிறது. காமெடிக்காக அல்ல...சீரியஸாகவே காணாமல் போகிறது.


படத்தின் கதை:
ஆந்திராவின் சிக்கட்பள்ளி கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்று டிரைவர் வேலை பார்க்கும் ஒரு எழுத்தறிவு கூட இல்லாத அர்மான் அலி.த்ரீ-இடியட்ஸில் வாத்தியாராக வருவாரே அவரே தான்.கிராமத்தில் அவருடைய மகள் சித்தப்பா சித்தியுடன் வசிக்கிறாள்.

அவளை பார்க்க சொந்த ஊருக்கு வரும் போது, சொந்த ஊரில் தண்ணீர் கஷ்டம். மகளுக்கு திருமணம் வேறு முடிக்க வேண்டும். இவர் "கிணறை வெட்டி பார்; கல்யாணம் பண்ணி பார்' என்று இறங்குகிறார். அரசாங்கம், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு கிணறு வெட்ட வழங்கும் உதவித்தொகையை பெற முயற்சி செய்கிறார்.

கிராம அதிகாரி, தாசில்தார், MPDO, சர்வே பண்ண வேண்டிய எஞ்சினியர், ரிஜிஸ்தார், காண்ட்ராக்டர் என்று ஆளாளுக்கு கமிஷன் தர வேண்டியாதாகிறது. முதல் இன்ஸ்டால்மண்டில் வந்த தொகை இதற்கே சரியாகிறது. இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வர வேண்டுமானால், கிணறு வெட்ட ஆரம்பித்து விட்டதாக சான்று காட்ட வேண்டும். அத்தனை அதிகாரிகளும் சேர்ந்து பொய் போட்டோ, பொய் ரசீது என்று தயார் செய்து இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வரவழைக்கிறார்கள். அதும் கமிஷனில் காலி.
கட்டவே ஆரம்பிக்க படாத கிணற்றுக்கு "இந்த கிணற்றில் தண்ணீர் மிகவும் இனிப்பாக இருக்கிறது" என்று கூட சர்டிபிகேட் தருகிறார் கிராம அதிகாரி.

இப்படியே ஒவ்வொரு இன்ஸ்டால்மென்ட் பணமும் அதிகாரிகளின் கமிஷனில் கரைந்து விட, தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்து கலங்கி போகிறார் அலி. அப்போது அவருடைய மகள் லஞ்ச திருட்டில் தொலைந்து போன தனது தந்தையின் கிணற்றை மீட்க முடிவு செய்கிறாள்.

அவர்கள் இருவருக்கும் காமிராவின் முன் தலைமுடியை விரித்து போட்டு கொண்டு அடிக்குரலில் பேச வராது; வர்மக்கலை மர்மக்கலை ஏதும் தெரியாது; ஸ்டுடண்ட்ஸ் வைத்து நெட்வர்க் உருவாக்க தெரியாது, அட்லீஸ்ட் டவாலி வேலை பார்த்தாலும் பரவாயில்லை அதுவும் இல்லை, குறைந்த பட்சம் சேவல் வேஷம் கூட போட தெரியாது என்றால் என்ன பண்ணுவார் பாவம் அதனால்...

அதனால் பொறுமையாக போலீஸ் ஸ்டேஷன் சென்று 'எங்கள் கிணறை காணோம்' என்று புகார் கொடுக்கிறார்கள். அவர் வடிவேல் படத்துல வர்ற மாதிரி சிரிப்பு போலீஸ் அல்ல. உண்மையில் டென்ஷன் ஆகி விடுகிறார். அவரிடம் அதிகாரிகள் தயார் செய்து கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் காட்டுகிறார்கள். அதோடு அந்த கிராமத்தில் இது மாதிரி இன்னும் எழுபத்து ஐந்து கிணறுகள் "காணாமல் போய்" இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்கள். பிரச்சனை மந்திரி வரை போகிறது. எப்படி சால்வ் ஆகிறது என்பதையும் நானே சொல்லி விட்டால் நீங்கள் படம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விடும் என்பதால் அதை மட்டும் சொல்லாமல் விடுகிறேன்.

இனி போமன் இராணி பற்றி. இந்த படத்தில் அண்ணன் தம்பி என்று இரட்டை வேடம். தம்பியாக வருபவர் சில காமெடி முயற்சிகளுக்கு மட்டும். அண்ணன் தான் ஹீரோ. எழுத்தறிவில்லாத innocent டிரைவர் / அப்பா. நன்றாக நடித்தார் என்று சொல்வதற்கில்லை. அந்த கதாபத்திரத்தில் வெகு இயல்பாக பொருந்தி போகிறார். படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் இவர் இருக்கிறார். இவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

அடுத்து அவருடைய மகளாக வரும் முஸ்கான் அலி. துருதுரு என்று இருக்கிறது. விளையாட்டுத்தனமான பெண். ஆனால், நாய்க்குட்டியை காணவில்லை என்றதும் மேக்கப் போட்டு கொண்டு கடலில் குதிக்கும் அளவுக்கு லூசு இல்லை. விவரமான பெண். அப்பாவுடன் சேர்ந்து கிணற்றை தேடி போராடுவது ரசிக்கிறது.

இது ஒரு காமெடி படம் அல்ல...படத்தில் காமெடி முயற்சிகளும் கம்மி தான். சட்டசபையில் இந்த கிணறு பிரச்சனையை விவாதிக்க படும் போது, ஆளுங்கட்சி அமைச்சர் சொல்கிறார், "எதிர்கட்சிக்காரர்கள் தான் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கொண்டு ஏதோ சதி பண்ணி கிணறுகளை திருடி விட்டதாக" சொல்கிறார்.

முச்கானுக்கும் ஆரிப் அலிக்கும் ஒரு சின்ன ரொமான்ஸ் டிராக், கிராம அதிகாரியான மனைவியை உப்புக்கு சப்பாணி ஆக்கிவிட்டு முன்னிற்கும் கணவர், புது கல்யாண தம்பதி சர்வே எஞ்சினியரும் அவருடைய மனைவியும், "எங்கப்பா மூணு லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த(?) இன்ஸ்பெக்டர் போஸ்ட்; இன்ஸ்பெக்டர் ஆகியும் இன்னும் நீங்கள் அதை திரும்ப சம்பாதித்து எங்கப்பாவிற்கு திருப்பி கொடுக்க வில்லை" என்று மனைவியிடம் சதா வசை வாங்கும் இன்ஸ்பெக்டர் கணவன் என்று படத்துக்குள் நிறைய குட்டி குட்டி கதைகள். சிலது படத்தோடு ஒட்டியும் சிலது ஒட்டாமலும்.

அதிலும் இந்த கிராம அதிகாரியின் கணவராக வருபவர் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறார்.இன்ஸ்பெக்டரின் மனைவியாக வருபவர் சோனாலி குல்கர்னி. மே மாதம் படத்தில் ஹீரோயின்; இந்த படத்தில் ஊறுகாய் ரோலில் வருகிறார்.

பாடல்கள் படத்தோடு பார்க்க போர் அடிக்க வில்லை.
ஒரு வசனம்: ஆரிப் அலியின் தந்தை சொல்வார். ஒரு போராட்ட ஊர்வலத்தின் போது ஒரு சின்ன பையன் ரோட்டில் அழுது கொண்டு இருந்தான். நான் அழைத்து வந்து வளர்த்தேன். அவனுடைய பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவன்....அதாவது என் மகன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதே எங்களுக்கு தெரியாது"; பிடித்தது.

ஆந்திரா கிராமத்து ஹிந்தி என்பதால் கைக்கூ, நக்கோ, மியா என்றெல்லாம் வட்டார வழக்கில் பேசுகிறார்கள்.வட்டார மொழியின் தமிழ் பேசும் படங்கள் பார்க்கும் போது ஏற்படும் ஒரு ரசனை உணர்வு இதிலும்.

அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்வதாக கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் அத்தனை அதிகாரிகள் லெவலையும் தாண்டி கடைசியில் மக்களுக்கு எந்த லட்சணத்தில் போய் சேருகிறது என்ற மெசேஜை சொல்லும் படம்;

My Verdict: "Very well done" என்று சொல்ல ஆசை; ஆனால் படம் சற்று வேகம் கம்மி என்பதால் "Watchable once என்று சொல்ல வைக்கிறது.
- ப்ரியா கதிரவன்

சிரியஸா உங்க விமர்சனம் காமெடியா இருக்கு!


Read More...

Wednesday, June 02, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 6-2-2010

வணக்கம் முனி.

உங்க கடிதம் கிடைத்தது. கொஞ்சம் பிசி. அதுக்குள்ள, போன கடிதத்துக்கு ஏன் பதில் போடலை? என்னிடம் மன்னிப்பு கேள் என்று இன்னொரு கடிதம். என்ன இது சின்னப்புள்ளைத்தனமா? நான் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்? இல்லை ஏதாவது டிவி கேமராதான் என் முன்னாடி இருக்கா நான் மன்னிப்புக் கேட்க? மன்னிப்பு கேள் என்பது ஏசு நாதர் டெக்னிக். ஆனால் ஃபாலோ செய்வது புத்தரை அப்பறம் எப்படி நான் எதற்கு மன்னிப்புக் கேட்க முடியும் ?

டிவி கேமராவைப் பார்த்தவுடன் மன்னிப்புக் கேட்க விரும்புகிறவர்களுக்கு ஒரு அட்வைஸ். வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் சிவாஜி மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று ஒரு வசனம் பேசுவார். டிவி கேமரா பார்த்தவுடன் அலர்ஜியாகும் எழுத்தாளர்கள் எல்லாம் பேசாமல் இந்த வசனத்தை டப்பா அடித்து ஒப்பித்துவிடலாம். வீர வசனங்களை ரெண்டு நாள் கழித்து எழுதி, கூடவே மற்றவர்களையும் வேண்டி விளம்பரப்படுத்தச் சொல்லி, ஊரு சிரிப்பா சிரிக்கறதை விட கட்டபொம்மன் வசனத்தை டிவில பேசிடறது எவ்வளவோ பெட்டெர். ( அப்படி வசனம் பேசும் போது, வீரப்பாண்டிய கட்டபொம்மன் காஸ்டியும் போடுங்க அப்பறம் யாரும் உங்களை சிகப்பு டி-ஷர்ட் போடாதீங்க என்று சொல்ல மாட்டார்கள் )








சிரிச்சா என்ன செலவா ஆகும் என்று ஒரு பாட்டு இருக்கு. ஆனால் போன வாரம் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி பார்த்த பிறகு ரொம்பச் சிரிச்சு எனக்கு வயத்த வலி வந்து டாக்டரிடம் போனேன். டாக்டர் கேட்டாரு, என்ன சாப்ட்டீங்க? தோசா ஆர் இட்லி? என்று. நான் டிவி பார்த்தேன் என்றதும், அப்படி என்ன பார்த்தீங்க என்றார். கொஞ்சம் விவரித்தேன். நான் சொன்ன மேட்டரை கேட்டு அவருக்கு பைல்ஸே வந்து விட்டது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் தனக்கும் நித்தியாவிற்கு ‘காமென்-ஆக " ஒன்று இருப்பது கண்டுபிடித்தேன் என்றார். நான் பதறிவிட்டேன். பிறகு தான் தெரிந்தது அவருக்கும் நித்தியாவிற்கு காமனாக இருந்தது புத்தராம். நிகழ்ச்சியில் வந்த நித்தியாவின் பெண் சீடர் பார்க்க பாவமாக இருந்தார். அவரும் மஞ்சள் உடையில் வந்த்திருந்தார். மஞ்சள் என்றால் நம் நினைவுக்கு வருவது வேற என்ன? புத்தர் தான்! அட அவர் சொன்னது Laughing Buddhaவை !

புத்தர் பழைய காலத்து ஆள், என்பதால் கொஞ்சம் பழைய நியூஸ் சொல்றேன். கேட்டுகங்க. "2ஜி என்பது பொது வினியோகத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி போன்றது. 3ஜி என்பது பாசுமதி அரிசி போன்றது”. யார் ராசா இதை சொன்னது? என்று கேட்காதீர்கள். இதிலிரிந்து தெரிந்துக்கொள்ளும் உண்மை என்ன? 2ஜி, ரேஷன் அரிசி போன்று மட்டமானது. அவ்வளவு தான் மேட்டர். வாங்கியவர்கள் எப்படி அதிக விலைக்கு விற்றார்கள்? என்று நீங்க கேட்கலாம். தமிழ்நாட்டு ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி விற்பதில்லையா? அது போல தான் இது.

இது கூட பரவாயில்லை, சில நாட்களுக்கு முன் ”பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு – கோவிலுக்குச் செல்வது, வாஸ்து பார்ப்பது முதலியன, பெரியாருக்குச் செய்கின்ற நன்றியாகாது” என்று கலைஞர் சொல்லியுள்ளார். அப்போ, பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு அவர் சமாதிக்கும், சிலைக்கும் மாலை போடுவது? சரி அதை விடுங்க. இதையே எவ்வளவு நாட்களுக்கு நாம பேசிகிட்டு இருக்கிறது.

நம்ம துணை முதல்வர் செய்த காரியத்தை பாருங்க. ஒரு திருமண விழாவில் மணமக்கள் நெற்றியில் திருநீறு பூசி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மற்றவர்கள் நம்பிக்கையை மதித்து, ஸ்டாலினின் முதிர்ச்சியை நாம் பாராட்ட வேண்டும். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு பேசவா கற்றுகொடுக்க வேண்டும்? எல்லாம் அரசியல் பேச்சு. ”இந்தியர்கள் பேசும் அளவிற்கு சீனர்கள் பேசுவதில்லை; அவர்கள் செயல் வீரர்கள்” இதை சொன்னவர் ஜெய்ராம் ரமேஷ். இவர் இப்படி பேச மன்மோகன் சிங் தன் அதிகாரத்தை எல்லாம் உபயோகித்து இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று அவரை செல்லமாக கண்டித்துள்ளார்.

கலைஞர் அவர் லெவலுக்கு ஜெயலலிதாவுடன் சண்டை போடலாம் ஆனால் விஜயகாந்த்தைப் பார்த்து அவர் பகுதி நேர அரசியல் செய்கிறார் என்று ஏதோ தத்து பித்து என்று பேச, அதற்கு விஜயகாந்த் ‘திரைப்படங்களுக்குக் கலைஞர் வசனம் எழுதினால், அது கலைச் சேவை. நான் சினிமாவில் நடித்துக் கொண்டு அரசியலிலும் பங்கு பெற்றால், அது பகுதி நேர அரசியலா? என்று கேள்வி கேட்டுள்ளார் அதற்கு இன்று வரை கலைஞரிடமிந்து பதில் இல்லை. சரி என்ன செய்வது என்று தெரியாமல், இப்ப பதில் சொல்ல குஷ்பு நியமித்துள்ளார். வந்தவர் எல்லாம் பத்திரிக்கையிலும் விஜயகாந்துக்கு குட்டு வைத்துள்ளார் அம்மணி. சபாஷ் சரியான போட்டி!

அரசியலில் காழ்ப்புணர்ச்சியைக் கடந்து, வேறுபாடுகளை மறந்து, தோழமை உணர்வுடன் இருக்க வேண்டும். நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்ப் பண்பாடு இருக்கிறது. அதைக் காப்பாற்ற வேண்டும்”. கருத்து என்றாலே கலைஞர் என்று ஆகிவிட்டது. இதை குஷ்பு கடைப்பிடிக்க மாட்டார் கவலைப்படாதீங்க.

அடுத்த தமாஷ் கலைஞர் சட்டசபையில் பேசியது “எம்.ஜி.ஆர். என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார்; என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்; குறிப்பாக முரசொலி மாறன், நாவலர்தான் ஏற்றவர் என்று சொல்லியதையும், மாறன் வழியிலேயே நானும் நாவலர் பற்றிச் சொன்னதையும் ஏற்க மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்! “இவர்தான் முதலமைச்சராக ஆக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக் கூடாது என்று என்னுடைய வீட்டிலுள்ளவர்களைச் சமாதானப்படுத்த இரண்டு மூன்று நாட்கள் வந்தார்!” என்றல்லாம் சொல்லியிருக்கார்.

இதே கலைஞர் ”புறங்கையைத்தானே நக்கினோம்!’ அதற்கு 14 ஆண்டுகள் அனுபவித்த தண்டனை போதாதா?” என்று மக்களிடம் ஓட்டுக்கு மன்றாடினார். தலையில் ராஜகோபுரம் விழுந்த எஃபெக்ட் கிடைக்கலை?
காளகஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால் 2012 உலகம் அழிய போகிறது என்று சொல்லுவது உண்மையா? நம்ம ஜோசியர்கள் எல்லாம் உடனே கிளம்பிவிட்டார்கள், படிக்கத் தமாஷா இருக்கு. திரும்பக் கட்டும் போது நல்ல சிமெண்ட் போட்டுக் கட்டச் சொல்லணும் என்ற ஒரு அறிவுரையை தவிர மற்ற எல்லா அறிவுரையும் சொல்லிவிடுகிறார்கள். நல்ல சிமெண்ட், நல்ல கலவை போட்டு கட்டினால் தான் பில்டிங் ஸ்டிராங்கா இருக்கும்.



கலவை பற்றி சொல்லும் போது இதை பத்தி சொல்லியே ஆகணும். சில விஷயங்கள் கேட்க நல்லா இருக்காது. பார்க்க நல்லா இருக்கும். நடிகைகளின் பேச்சு மாதிரி. மனசுல அப்டியே ஒட்டிடும். செந்தமிழ் பாடல் கூட அதே மாதிரி தான். ரஹமான் இசை அமைத்த பாடலைப்பற்றி எல்லாம் கும்மிவிட்டார்கள். ஆனால் அதே பாடலை பாருங்க. எவ்வளவு அருமையா இருக்கு என்று. கம்பர் பத்தின வரி வரும்போதானும் ஆடியோ mute பண்ணிட்டு பாருங்க. இன்னும் அருமையா இருக்கும். கம்பருக்கு மாநாட்டுல கடைசியா ஒரு இடம் குடுத்து, பாட்டுலயும் கடைசியா ஒரு வரி போட்டு, அதை ராப் செய்து பாட வெச்சு ராமாயணம் எழுதின அவருக்கு சிறப்பு பண்ணிட்டாங்க.

ராமாயணம் எழுதிய மகரிஷி வால்மீகி உண்மையில் திருடன் இல்லை' என்று பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார். கிபியோ கிமுவோ சரியா தெரியலை ( ஹாய் மதனிடம் கேட்க வேண்டும் ) வாழ்ந்த வால்மீகி பற்றி இப்பதான் தீர்ப்பு வந்துள்ளது. அட ராமா! நேற்று செய்த குற்றங்களை பற்றி எப்ப விசாரிக்க போகிறார்களோ? எப்ப தீர்ப்பு சொல்ல போகிறார்களோ ?கவலைப்படாதீர்கள் வழக்குகளை சீக்கிரம் முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழ் பற்றி இன்னொரு மேட்டர் சென்னையில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பெயர் பலகைகளில் முதலில் தமிழில் பெரிய எழுத்துக்களில் பெயர்களை எழுதவேண்டும். அதற்கு அடுத்ததாக மற்ற மொழிகளில் எழுதி கொள்ளலாம் என்று மாநகராட்சி உத்தரவிட்டது. உலக தம்ழி மாநாடு வருது இல்லை அதனால இந்த உத்தரவு. அப்படி செய்யவில்லை என்றா பெயர் பலகைகள் அகற்றப்படும் என்று மேயர் சொல்லியுள்ளார். என்ன ஒரு தமிழ் பற்று. செம்மொழி பாடல் வெளியிட்ட போது கூட்டமாக இருந்த மக்கள் எல்லாம் என்ன சொன்னார்கள் தெரியுமா ”ஒன்ஸ் மோர்” வாழ்க நம் தமிழ் பற்று!.

இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகை நமீதா திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இலங்கை அரசு பயந்து விட்டது. இந்த பிரச்சனையை ஒபாமாவிடம் சொல்லலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர் நலனுக்கு எதிரான எந்த நிகழ்விலும் நான் பங்கேற்க மாட்டேன் என்று விளக்கம் வேற அளித்துள்ளார். மச்சான்ஸ்களுக்கு எல்லாம் இப்ப சந்தோஷம் தானே? அப்பறம் இந்த மேட்டரை சொன்னது ஒரு பிரபல டிவிட்டர் ஆசாமி. அவருக்கு நமிதா சார்பிலும், இட்லிவடை சார்பிலும் நன்றி.

கீழே உள்ள வரிகள் என்ன? ஏதாவது புரியுதா?
ஏய்
ஜெகன்மோகினி
நீங்கள்
எங்கள் அண்ணா
அழகிய தமிழ் மகன்
பில்லா
இங்கிலீஷ்காரன்

அட, இது கவிதை இல்லை. நமிதா நடித்த படங்களின் பெயர். இப்ப இந்த மாதிரி கவிதை எழுதுவது தான் ஃபேஷனாக்கும்.

மேலே உள்ள கவிதை நன்றாக இருந்தால் எனக்கு ஒரு பாட்டில் அனுப்புங்கள். “எனது பாடல்களை ரசிக்கும்போதெல்லாம் கவிஞர் கண்ணதாசன் எனக்கு பிடுத்த வாட் சிக்ஸ்டி நைன் மது மாட்டிலை அனுப்பி வைப்பார்” இப்படி சொன்னவர் நீங்க நினைக்கும் ஆள் கிடையாது அவர் கவிஞர் வாலி சொன்ன இடம் தான் ஜாலியான மேடை “தமிழ் கடவுள்” நூல் வெளியீட்டு விழாவில்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அன்புமணி ராமதாசின் ராஜ்யசபா எம் பி பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் அவரை மீண்டும் எம் பியாக தேர்ந்தெடுக்க திமுகவின் ஆதரவை பாமக கோரியிருந்தது. அதாவது கூட்டமாக போய் கை கட்டி நின்று கொண்டு பிச்சை கேட்டிருக்கிறார்கள். ராமதாஸ் கட்சியில் இவர்களுக்கு நல்ல வேலை. இதற்கு அவர்கள் போடும் டிராமா அடேய்யப்பா.

கேள்வி:- தி.மு.க.வுடன் கூட்டணி சேருவீர்களா?

பதில்:- தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுவிலேயே பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பது என்று முடிவு எடுத்து விட்டார்கள். எனவே கூட்டணியில் மாறுபாடு இல்லை.

இதை சொன்னவர் ஜி.கே.மணி ஆக திமுக முடிவு செய்துவிட்டால் போதுமாம். டாக்டர் ஒத்துக்கொண்டு விடுவாராம்.

தமிழ்நாட்டில் கொசுவிற்கு மருந்து அடிக்கிறார்கள், ஆனால் ஒழிந்த பாடு இல்லை.

சரி தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு தாவுவோம்.

ஜெகன்மோகன ரெட்டி ராஜசேகர ரெட்டியின் புதல்வர் இப்ப அரசியல் மேக்கப் போட ஆரம்பித்திருக்கிறார். ராஜ சேகர ரெட்டியின் மரணம் தந்த அதிர்ச்சியால் தற்கொலை செய்து கொண்ட தொண்டர்களின் குடும்பத்தை ஆறுதல் படுத்துகிறேன் பேர்வரி என்று அவரது மகனும், கடப்பா தொகுதி எம்பியுமான ஜெகன்மோகன ரெட்டி தெலங்கானா பகுதியில் ஆறுதல் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இப்ப கலவரம், சோனியாவிடம் விளக்கம் என்று போய்க்கொண்டு இருக்கிறது. இப்ப இவர் பிஜேபியில கூட சேர போகிறார் என்று புரளி வேற. நல்லா தான் அரசியல் மேக்கப் போடுகிறார்.

ஒரு முறை என் நண்பன் பியூட்டி பார்லரிலிரிந்து வந்த ஒரு பெண்ணை விசில் அடித்து கூப்பிட்டான். வீட்டுக்கு போன பிறகு அவன் பாட்டியிடம் நல்ல அடி வாங்கினான். ஏன் என்று விசாரித்ததில் பியூட்டி பார்லரிலிந்து வந்த அந்த பெண் அவன் பாட்டியாம். இளைஞர்களே ஜாக்கிரதை!

சற்று முன் கிடைத்த செய்தி:
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
மருத்துவமனைக்காக வீட்டை ஒப்படைத்தது மன நிறைவு அளிக்கிறது என்று கலைஞர் பேட்டி கொடுத்துள்ளார்

இந்த கடிதம் படித்தவுடன்

நீங்க ஆஸ்திகன் என்றால்
ஆத்மா திருப்தி அடைந்து விடுங்க.
நாஸ்திகன் என்றால்
மன திருப்தி அடையவும்.

இப்படிக்கு,
இட்லிவடை

Read More...