பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 29, 2010

ஆனந்த்-டொபலோவ் Game 3 & 4


செஸ் பற்றிய பதிவுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. இ.வ வாசகர்களுக்கு மிக்க நன்றி.

மூன்றாவது, நான்காவது ஆட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் நடந்து முடிந்தன.

முடிந்த ஆட்டங்களைப் பற்றி “கண்டேன் சீதையை” பாணியில் சொல்ல வேண்டுமென்றால்,“வெற்றி ஆனந்துக்கே”.


மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்கள் முதல் ஆட்டத்தை ஒத்து இருக்குமா என்பதே ரசிகர்களின் ஆவலாக இருந்தது. ஆனந்த் முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்குப் பின், Grunfeld-ஐ ஏறக்கட்டிவிட்டு Slav defense-ஐ தேர்வு செய்தார். கடந்த இரண்டு ஆட்டங்களைப் போலவே, 1.d4 என்ற நகர்த்திலிலேயே இந்த ஆட்டமும் தொடங்கியது. ஆனந்தின் ஆட்டங்களை உற்று நோக்கும் போது, அவர் காலம் காலமாக, 1.e4/e5 ஆட்டக்காரராக இருந்துள்ளார். 2008-ல் நடந்த கிராம்னிக்குடனான ஆட்டத்தில்தான் 1.d4-ல் தொடங்கி ஆட ஆரம்பித்தார். அதுவே அவரது வெற்றிக்கு அடித்தளமாய் அமைந்தது. இந்த போட்டியிலும் 1.d4/d5-ல் தொடங்குவது ஆனந்தின் strategy-ஆகப்படுகிறது. இதன் மூலம், 1.e4/e5-க்கு எதிராய் டொபலோவ் தயார்படுத்தியிருக்கும் அனைத்து திட்டங்களும் வீணாகிவிடும் என்பதே ஆனந்தின் எண்ணமாக இருக்கும்.

டொபலோவுக்கு கிராம்னிக்குடனான போட்டி ஒரு கசப்பான அனுபவம். இரண்டாவது ஆட்டத்திலேயே கிராம்னிக் வெற்றிகரமாய் டொபலோவுக்கு எதிராக உபயோகித்த வழிமுறையை ஆனந்தும் கையாண்டதைப் பார்த்தோம். மூன்றாவது ஆட்டத்திலும் கிராம்னிக் கருப்பு காய்ளுடன் விளையாடும் போது பயன்படுத்திய Slav Defense-க்கு ஆனந்தும் தாவினார். இது ஒரு psychological ploy.

மூன்றாவது ஆட்டத்தைப் பொறுத்த மட்டில், ஆனந்த் பொறுமையின் சிகரமாய் திகழ்ந்தார். “எல்லா ரிஸ்கையும் டொபலோவே எடுக்கட்டும், பிரச்னையில் சிக்கிக் கொள்ளாமல் இருந்தால் போதும்.”, என்பதே ஆனந்தின் திட்டம். டொபலோவ் சில காய்களை வெட்டுக் கொடுப்பதன் மூலம், தாக்குவதற்கான புதிய களங்களை உண்டாக்க முயன்றார். ஆனந்த், அவர் அளித்த வாய்ப்புகளை நிராகரித்து, ஆட்டத்தை சமநிலையில் வைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். “எதிராளி தவறு செய்தால் ஒரு புள்ளி, இல்லையென்றால் அரை புள்ளி”, என்று இரு முடிவுகளுக்கும் open-ஆக இருந்தார் ஆனந்த். டொபலோவோ, வெற்றியைத் தவிர வேறெதற்கும் விளையாடுவதில்லை என்பதில் குறியாக இருந்தார். ஆனால், எவ்வளவு முயன்றும் ஆனந்தின் தற்காப்பை டொபலோவால் ஊடுருவ முடியவில்லை. முப்பது நகர்த்தல்களுக்குளேயே ஆட்டம் டிராவில்தான் முடியும் என்பது தெளிவாகியுள்ளது.

எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று முயலப் போய், ஏதேனும் தவறு செய்து, டிராவை தோல்வி ஆக்கிக் கொள்வாரா டொபலோவ் என்பதே ஆட்டத்தை கவனித்தவருக்குக் கிடைத்த ஒரே சுவாரஸ்யம். தான் டிரா offer-கள் கொடுக்கவும் போவதில்லை, ஏற்கவும் போவதில்லை என்று டொபலோவ் கூறியிருந்ததால், வழியே இல்லாமல் சமநிலை ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வேண்டியதாயிற்று. ஆனந்தும், “ஆடும் வரை ஆடிப் பார்”, என்று ஈடுகொடுத்து வந்தார். ஒரு கட்டத்த்ல், போட்டியின் arbiter-ஐ டொபலோவ் அழைத்து வந்தார். அவர் மூலமாக டிராவை தெரிவிக்க நினைத்தார். ஆனந்தோ aribter-ஐக் கண்டுகொள்ளவே இல்லை. தனது நகர்த்தல்களை ஆடி டொபலோவை கடுப்பேற்றினார். ஒரு வழியாய், சில நகர்த்தல்களை மீண்டும் மீண்டும் வைத்து, repetition மூலம் டிராவை அடைந்தனர்.

ஆட்டம் முடிந்ததும் இருவரும் கை கொடுத்துக் கொள்வது மரபு. இந்த ஆட்டம் முடிந்ததும் அது நடக்கவில்லை. Press Conference-ன் போது டொபலோவ் இருவரும் கை கொடுக்க மறந்துவிட்டதாகக் கூறினார். ஆனந்தோ, “அதையும் arbiter மூலமாகத்தான் கொடுக்க வேண்டுமோ என்ற குழப்பத்தால் கொடுக்கவில்லை”, என்று டொபலோவை நக்கலடித்தார்.

ஆட்டத்திலும் சரி, ஆட்டத்துக்கு வெளியிலும் சரி, டொபலோவின் சளும்பலுக்கு எல்லாம் சளைக்கப் போவதில்லை என்பது போல அமைந்தது ஆனந்தின் பதில்.ஆட்டத்தைப் விமர்சித்த கிராண்ட்மாஸ்டர்கள், “இந்த ஆட்டம் கிராம்னிக் ஆடியது போலவே இருந்தது”, என்றனர்.போட்டியின் முடிவில் ஆனந்தின் seconds-களுள் ஒருவராக கிராம்னிக் அறிவிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் இல்லையா? கிராம்னிக்குக்கு இருக்கும் ‘டொபலோவ் வெறுப்பு’ அவரை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும்.

நான்காவது ஆட்டத்தையும், வெற்றி பெற்ற இரண்டாவது ஆட்டத்தைப் போலவே, Catalan Opening-ல் தொடங்கினார் ஆனந்த். இரண்டாவது ஆட்ட தோல்விக்குப் பின், டொபலோவ் மீண்டும் ஒரு முறை அதே சூழலில் சிக்கியிருக்க வேண்டுமா என்பது முக்கியமான கேள்வி. ஏற்கெனவே கிராம்னிக்கிடம் இதே சூழலில்தான் டொபலோவ் பாடாய்ப் பட்டார். ஆனந்த் மெது மெதுவாய், தனது Queen Side-ஐ பலப்படுத்தி வந்தார். ஆட்டத்தின் எந்த ஒரு நேரத்திலும், ஆனந்த் தனது preparation-ஐ விட்டு வெளி வந்ததாகத் தெரியவில்லை. பாதி ஆட்டம் வரை, கிராம்னிக்கின் ஆட்டம் போலவே விளையாடி வந்த ஆனந்த், 23-ஆவது நகர்த்திலில் தனது குதிரையை "castled செய்யப்பட்ட ராஜாவுக்கு அருகில் உள்ள இரண்டு pawn-களுக்காக” தியாகம் செய்தார். இதன் மூலம், டொபலோவின் ராஜா, வெட்ட வெளியில் மாட்டிக் கொண்டார். Queen Side-லேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்த டொபலோவுக்கு திடீரென்று வந்த king side attack அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். அந்த நகர்த்தலைத் தொடர்ந்து, அடுத்த 5-6 நகர்த்தல்களில் சிறிது பிசகியிருந்தால் கூட டொபலோவுக்கு சாதகமாய் ஆட்டம் திரும்பியிருக்கும். ஏனெனில், டொபலோவ் கூடுதல் காய்களுடன் களத்தில் இருந்தார். ஆனந்தோ, கம்ப்யூட்டர்கள் வெற்றிக்கென்று கணித்த நகர்த்தல்களை ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தி டொபலோவை திக்குமுக்காட வைத்தார். இன்னும் சில நகர்த்தல்கள் போனால் check and mate ஆகிவிடுவார் என்ற நிலையில், 32-வது நகர்த்திலில் டொபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதன் மூலம், இரண்டாவது ஓய்வு தினத்துக்குள்ளும் ஆனந்த் நிறைவாய் நுழைந்திருப்பார். இரண்டாவது ஆட்டத்தில் பெற்ற வெற்றியிலாவது டொபலோவின் பிழை ஆனந்துக்கு பெரிதும் உதவியது. பிழையான நகர்த்தல்களை எதுவும் டொபலோவ் வைக்காத போதும், ஆனந்த் வெற்றியை அடைந்தது அவருக்கு பெரிய திருப்தியை அளித்திருக்கும்.

பொதுவாக ஆனந்த் நன்றாக விளையாடும் போது, எதிராளியைவிட வேகமாக ஆடுவார். இந்தத் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் ஆனந்த் டொபலோவைவிட மெதுவாகவே விளையாடி வந்தார். நான்காவது ஆட்டத்தில் பழைய ஆனந்தைப் போல மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தினார். It is a sign that shows Anand is back in his elements.

செஸ் உலகம் இரண்டு விஷயங்களை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.

1. டொபலோவ் இப்போது எப்படி ஆடுவார். இதற்கு முன் பல டோர்னமெண்டுகளில், பின் தங்கிய நிலையிலிருந்து முன்னேறி, இறுதியில் வெற்றியையும் அடைந்திருப்பவர் இவர். கிராம்னிக் உடன் மோதிய ஆட்டத்திலும், இரண்டு புள்ளிகள் பின்தங்கியிருந்த போதும், அபாரமாக ஆடி, ஒரு கட்டத்தில் கிராம்னிக்கைவிட அதிகம் புள்ளிகள் கூட பெற்றிருந்தார். அதனால், அடுத்த சில ஆட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

2. டேனைலோவ் கிராம்னிக்குடனான ஆட்டத்தில் ஏற்படுத்திய Toilet Gate சர்ச்சை போல, புதிதாக எதையாவது கிளப்புவாரா? சர்வ நிச்சயமாய் கிளப்புவார் என்றே பலர் ஊகிக்கின்றனர்.

அடுத்த ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் ஆடுவார். அதற்கு அடுத்த இரு ஆட்டங்களிலும் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள்.(ஆறு ஆட்டங்களுக்குப் பின் odd number ஆட்டங்களில் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள்.) ஆதலால், ஐந்தாவது ஆட்டத்தில் டொபலோவ் எப்படியாவது ஜெயிக்கப் பார்ப்பார். அப்படி முயல்கையில், over-push செய்து தோல்வியுற்றால், சாம்பியன்ஷிப்பைக் கிட்டத்தட்ட ஆனந்த் வென்றுவிட்டார் என்றே வைத்துக் கொள்ளலாம்.


- லலிதா ராம்

பி.கு:
1. அடுத்த அப்டேட் ஆறாவது ஆட்டத்துக்குப் பின்.
2. ஆனந்தின் வெற்றியை நீங்களும் இங்கு ஆடிப் பார்க்கலாம்.
3. படங்கள் இங்கே

எப்படி இவ வாசகர்கள் செஸ் பதிவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று எனக்கு இன்னும் புரியாத புதிராக இருக்கிறது !


Read More...

Tuesday, April 27, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 27-4-2010


இட்லிவடை ஒட்டு கேட்ட சில டெலிபோன் உரையாடல்கள்.

மக்கா முனி,

நல்லா இருக்கயா? இங்கே ஏதோ பரவாயில்லை. ஒரு வழியா IPL முடிஞ்சு போச்சு . டிவி பொட்டிய ஆஃப் பண்ணிட்டு நல்ல பாட்டு ஏதாவது கேக்கலாமுன்னு ஆன் பண்ணா ஒரே பேஜாராப் போச்சுப்பா. முன்ன எல்லாம் ஓலைப் பாயில எதுவோ பெஞ்ச மாதிரி பொண்ணோ, பையனோ பேசுவாங்க. நேத்திக்கு என்னடானா ரொம்ப சுவாரஸ்யமான சம்பாஷனைகள் ஓடிச்சு. என்னமோ டெலிபோன்ல தான் ஒட்டுக் கேக்கறான் அப்டின்னு உபில கூவிக்கிட்டு இருக்காங்க. இங்க என்னடான்னா மக்கள் பேசிக்கறது லைவ் கமெண்ட்ரி மாதிரி ரேடியோல ஓடுது. நாட்டு நடப்ப அப்படியே தரேன். படிச்சுப் பாரு.

"ஹலோ"...."நான் மதுரையிலேர்ந்து பேசறேன்"
"சொல்லுங்க சார்"
"எனக்கு நாளைக்கு சென்னைக்கு ஃபிளைட் டிக்கெட் வேண்டும், அடித்த நாள் ரிடர்ன்"...
"சார் நேற்று தானே போய்விட்டு வந்தீங்க?"
யோவ், டிக்கெட் போடச்சொன்னா போடு, இதே மாதிரி ஒரு ரெண்டு மாசத்துக்கு மொத்தமாப் போடு....இல்லேன்னா நான் யார் கிட்டயும் சொல்லாம ஏதாவது ரிசார்ட்டுக்கு போயிடுவேன்"
"சரிங்க சார்.."

[ இந்த சம்பாஷனைக்கு பிறகு டி.எம்.எஸ் பாடிய பாட்டு ஒன்று வருகிறது ]

"சார் நாங்க ரிப்போட்டரிலேர்ந்து பேசறோம்"
"சொல்லுங்க"
"உடனே ஒரு சீரியல் ஆரம்பிக்க பிள்ளையார் சுழி "உ" போடலாமா ?"
"அதுக்கென்ன உடனே போட்டாப் போச்சு!"
அப்பறம், எல்லாம் சௌக்கியம்தானே?
"சௌக்கியம்தான். என்ன கொஞ்ச நாளா சாப்பாடுதான் சரி இல்லை...பார்வதிபவனும் பல்லிளிச்சுட்டாங்க...டாக்டரும் கொஞ்சம் டையட்ல இருக்க சொல்லி இருக்காரு."
....
.....
.....
(கொஞ்ச நேரம் சைலென்ட் )
(எழுத்தாளர்) ஹலோ...ஹெல்லோஒ, இருக்கீங்களா லைன்ல?
"சார், சாரி சார். ஒரு விஷயம் இப்ப எங்க பத்திரிகை எம்டி வந்தார். உங்க சீரியலை நிறுத்த சொல்லிட்டார்" என்னங்க இப்படி செய்யறீங்க? நீங்க சொன்னதுனால சுடச் சுட இப்போ கிடைச்ச நேரத்துல ஒரு அத்தியாயம் முடித்துவிட்டேன்
(பெருங் குரலில், அதிர்ச்சியுடன்) ஆ! "என்ன அதுக்குள்ளையா? "
"யு சீ, எனக்கு இது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. டிவிட் செய்யறதுதான் கஷ்டம். அதுக்குக் கூட நாலாஞ்சாமத்துலதான் டைம் கிடைக்குது...என்ன பண்ண? இப்பல்லாம் நான் சினிமாவுக்குதான் எழுதறேன். நீங்க கேட்டதுனால சீரியல் எழுத ஒத்துக்கிட்டேன். இப்பிடி எல்லாம் பண்ணறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. கோச்சுகாதீங்க சார். இப்போதிக்கு தொடரும் போட்டுடறேன். மாற்றம் வந்தா முற்றும் வரைக்கும் கொண்டு போயிடலாம். சரியா?

( இதற்கு பிறகு ஏதோ பேசிக்கொண்டார்கள், என்ன பேசிக்கொண்டார்கள் என்று , இலக்கியமாக கூட இருக்கலாம் )

ஓகே. பை.


ஹலோ
....
ஹலோ

தூக்கக் கலக்கத்தில ஒரு பெண் குரல் ...

ஹல்ல்லோஓஓ ..
அங்கே மேடம் இருக்காங்களா? (கிணற்றுக்குள்ளே இருந்து பேசுவது போல்) ரெஸ்ட் எடுக்கலாம் என்று இங்கே வந்தா....... (கொஞ்சம் சத்தமாக) ராங் நம்பர்........

திரும்பவும் அதே நம்பருக்கு ஃபோன்
"இந்த இணைப்பு துண்டிக்கப்படுள்ளது, திரும்பவும் செய்தால் நீங்கள் துண்டிக்கப்படுவீர்கள்...."

ஹலோ...
குழைவான குரலில்) குஜாலானந்தம்!
(அதிகாரமாக யாரோ பேசுகிறார்கள், போலீஸாக கூட இருக்கலாம்) "எங்கே இருக்கீங்க சாமி?
"சாமி எங்கேயும் இருப்பார்."
நான் அந்த சாமியை பற்றி கேட்கலை ஆ'சாமி' பற்றி கேட்கிறோம்.
இப்ப தான் கும்பமேளா முடித்துவிட்டு டையர்டா இருக்கேன் ..
பெங்களூர் வாங்க கும்ம வேண்டும்..
எல்லாம் கலிகாலம்...
உங்களுக்கு களிகாலம் ஆரம்பித்துவிட்டது...சீக்கிரம் வாங்க

ஹலோஹலோ டாக்டரா ?
ஆமாம்நான் மோடி பேசறேன்(உற்சாகமா)
ஜி. குட் மார்னிங். ஆமதாபாத்துல வெயில் எல்லாம் எப்படி?
நான் அந்த மோடி இல்லை ஐ.பி.எல் மோடி(கடுப்பில்)
சீ. நீங்களா என்ன வேணும்? ஒரே அஜீர்ன கோளாறு டாக்டர்.
பின்ன? வராம இருக்குமா? கோடி கோடியா இட்லிவடை சாப்பிட்டா இப்படி தான்.
சரி சரி, உங்களுக்கு ஒரு 200 ml "சஸ்பென்ஷன்" கொடுக்கிறேன். உள்ளே போய் கொஞ்ச நாள் இருந்து, களியோட சேர்த்து இதைச் சாப்பிட்டா எல்லாம் சரியா'ஆயி'டும்.


ஹலோ, யாருயா? வேற மொழிப் படம் பாத்து கதை தேடும் போது போன் பண்ணறது?
சார் உங்களூக்கு பதிவு தபாலில் ஒரு புத்தகம் வந்திருக்கு
என்ன தலைப்பு ?
11 பேர் மட்டுமே நடிக்கும் படியான கதை கொண்ட படமாம்.
எந்தத் தபாலில் வந்திருக்கு ?
பதிவுத் தபால் தான்
நெட்டுக்கு வந்தா பதிவு தொல்லை, வீட்டுக்கு வந்தா பதிவுத் தபால் தொல்லை
கதை எப்படி இருக்கு ?
கதை நல்லா தான் இருக்கு போன முறை தபாலில் வந்ததே அதே போல தான் கதை ஆனா இது சூப்பர்.
சரி, கே.எஸ்.ரவிகுமாருக்கு போன் போடு. வந்துடறேன். நானே பதினொரு ரோலையும் பண்ணிடறேன். படத்துக்கு தசாவதாரம்+1 ஒன்று பேர் பதிவு செய்துவிடுங்கள்.
(தயங்கியபடி)சார், இன்னூரு விஷயம்..சொல்லுயா...சார் உங்க மேல சுப்ரீம் கோர்டுல கேஸ் போட்டிருக்காங்க. உங்க சார்பில் வாதாட எந்த வக்கீலைப் போட?
யோவ், புரியாத ஆளா இருக்கியே? எதுக்குயா வக்கீலு? மாமிக்கு ஒரு ஃபோன் போடுங்க. அவங்க பேசிப்பாங்க.

(போன சம்பாஷனையின் போது வந்த கிராஸ் டாக் )
ஹலோ உங்க பதிவுல ஒரு பின்னூட்டம் போடிருக்கேன்.
நீங்க தானா அது கேவலமா இருக்கே என்று பார்த்தேன். அதை அப்பவே டெலீட் செய்துவிட்டேன்..
நீங்க டெலீட் செய்தால் நான் தனி பதிவா போடுவேன்.
(மறு முனையில் ஏதோ டமால் என்ற சத்தம்)


(ரொம்ப பவ்யமான குரலில்) ஐயா ஒரு விழா........
ஓ, அப்படியா. உடனே வரேன்னு சொல்லுய்யா..
ஐயா, உடனே போகமுடியாது, அப்படியே போனாலும் 101 சிலைகளை நீங்க திறந்து வைக்கணும்...
யோவ், என்னய்யா சொல்லற? 101ஆ?
ஆமாங்கய்யா...மாயாவதி அவங்க சிலைகளை எல்லாம் திறக்க உங்களை கூப்பிட்டிருக்காங்க..
திறந்து வைத்த பிறகு 101 சிலைகளை திறந்து வைத்தவர் என்று அப்படியே ஒரு பாராட்டு விழா நடத்தறாங்களாம்.
பாராட்டு விழா இருக்கா?
அப்போ சரிய்யா...பாவம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்க வேற....போயிட்டு வந்துடலாம்....

இதற்கு பிறகு வீட்டில் மின்சாரம் போய்விட்டதால் மேற்கொண்டு கேட்கமுடியவில்லை.

மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத அவலநிலையில்,
இட்லிவடை

Read More...

Monday, April 26, 2010

ஆனந்த்-டொபலோவ் முதல் இரண்டு ஆட்டங்கள்

சென்ற வார இறுதியில் இரண்டு ஆட்டங்கள் நடந்தன. ஆட்டங்களின் முடிவில் சமநிலை ஏற்படும் என்று பலர் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இருவரும் தலா ஒரு ஆட்டத்தை வெல்வர் என்று அதிகம் பேர் ஊகித்து இருக்க முடியாது.

பொதுவாக, இது போன்ற Match-களில் முதல் சில ஆட்டங்கள் மொக்கையாக இருக்கும். சென்ற முறை ஆனந்த கிராம்னிக்கை எதிர்த்து ஆடிய போது கூட, முதல் ஆட்டம் அப்படித்தான் அமைந்தது. ஆனால், டொபலோவ் அப்படி ஆட மாட்டார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனந்தும் டொபலோவுக்கு இணையாக, முதல் ஆட்டத்திலேயே பல sharp position நிறைந்த Grunfeld Opening-ஐ எடுத்து ஆடியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.



To cut the long story short - முதல் ஆட்டம் டொபலோவுக்கு சுலபமான வெற்றியைத் தந்தது. ஆனந்த் டொபலோவ் போன்ற தேர்ந்த ஆட்டக்காரர்கள் ஆடும் போது, வெற்றி தோல்வி சகஜம்தான். எனினும், ஆனந்த் தோல்வியடைந்த விதம் அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கும்.

செஸ் ஆட்டக்காரர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை tactical players. அதிரடியாய் ஆடி, புதிய கோணங்களை உருவாக்கி, சில காய்களை பலி கொடுத்து, அதற்கு ஈடாய் சிலவற்றைப் பெற்று, ஒரு வழியாய் அமளி அடங்கும் போது, வலுவான நிலையில் இருக்கும் ஆட்டக்காரர்கள் இவர்கள். காஸ்பரோவ், ஃபிஷர், டொபலோவ் போன்றவர்கள் இந்த வகை ஆட்டக்காரர்கள்.

இரண்டாவது வகை Positional Players. இவர்கள் வலிக்காமல் அடிப்பதில் வல்லவர்கள். சிறிது சிறிதாய் முக்கிய கட்டங்களைப் பிடித்து, எதிராளி தனக்கு எந்த பாதகமும் இல்லை என்ற மாயை வலையைப் பின்னி, சிறிது சிறிதாய் ஆட்டத்தை தன் வசப்படுத்தும் ஆட்டக்காரர்கள் இவர்கள். கார்போவ், கிராம்னிக் போன்றவர்கள் இந்த வகை ஆட்டக்காரர்கள்.

ஆனந்தைப் பொறுத்த மட்டில் அவரை ‘universal player' என்றே வகைப்படுத்துகின்றனர். அதாவது இரண்டு வகை ஆட்டத்தையும் சரளமாக ஆடக் கூடியவர் ஆனந்த். எதிராளிக்கேற்ப தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதே ஆனந்தின் பெரிய பலம். கிராம்னிக்குக்கு எதிராக ஆனந்த் பெற்ற மகத்தான வெற்றிக்கும் இதுவே முக்கிய காரணம். Positional Player, நன்கு ஆராயப்பட்ட நிலைகளில் காய்களை வைத்திருக்கவே விரும்புவார். Tactical Player-ஓ அதிகம் ஆராயப்பட்டிராத நிலைகளை நோக்கி ஆட்டத்தை நகர்த்துவார்.

Tactical Player-ஆன டொபலோவுடன் ஆடும் பொது, ஆனந்த் Positional Play-வையே விளையாடி, அவரை பொறுமையிழக்கச் செய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆனந்தோ முதல் ஆட்டத்தில், டொபலோவுக்கு பிடித்த வகையில், complicated சூழலை உருவாக்கினார்.

இருவரும் முதல் இருபது நிமிடங்களுக்குள் 20-க்கும் மேற்பட்ட நகர்த்தல்களை மின்னல் வேகத்தில் நகர்த்தினர். ஆட்டத்தைக் காண்பவர்களுக்கு அங்கு ஒரு ரேபிட் செஸ் ஆட்டம் நடப்பதாகவே தோன்றியது. இரு ஆட்டக்காரர்களும், ஆர அமர கணினியின் துணை கொண்டு வீட்டில் அமர்ந்து உருவாக்கிய திட்டங்களையே செயல்படுத்தி வந்தனர். முதல் 22 நகர்த்தல்களுக்குப் பின்னும் ஆட்டம் சமநிலையிலேயே இருந்தது. 23-ஆவது நகர்த்தலுக்கு ஆனந்த் நேரம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். பிஷப்பை நகர்த்துவதே சரியான தற்காப்பாக இருக்கும் பட்சத்தில், ஆனந்த் சம்பந்தமே இல்லாமல் தனது ராஜாவை நகர்த்தினார். அந்த ஒரு நகர்த்தலே ஆனந்தின் தோல்விக்கு வழி வகுத்தது.

ஆட்டத்தை கவனித்த வல்லுனர்கள், “ஆனந்த் 23-வது நகர்த்தலின், ஆட்டத்தின் எந்த காயை நகர்த்தினால் நல்லது என்று யோசிக்கவில்லை. தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த home preparation-ஐ ஆட முயன்றார். அவர் தயார் செய்திருந்த நகர்த்தல் மறந்து விட்டதால், ஞாபகப்படுத்துக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டார். கடைசியில் ராஜாவை நகர்த்துவதுதான் தான் திட்டமிட்ட நகர்த்தல் என்று நினைத்து அதை ஆடவும் செய்தார். Most probably he mixed up on the order of the moves he memorized.", என்கின்றனர்.

ஆனந்துக்கு இது மிகப் பெரிய சறுக்கல். எதிராளியின் பலத்துக்குள் தானே போய் சிக்கிக் கொண்டு, எண்ணி வந்த ஆட்டத்தை மறக்கவும் செய்வார் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

டொபலோவ் முன்பு சொன்னது போல, ஆனந்தின் வயது அவருக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதா?

40 மணி நேர கார் பயணமும், சாம்பியன் பட்டத்தைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் கொடுக்கும் மன அழுத்தமும் ஆனந்தின் ஆட்டத்தை பாதிக்கின்றனவா?

12 ஆட்டங்கள் மட்டுமே நடக்கும் தொடரில், ஒவ்வொரு தோல்வியும் costly-ஆக அமையக் கூடும். ”இந்த அடியில் இருந்து ஆனந்த் மீள்வாரா?”

போன்ற கேள்விகள் செஸ் உலகெங்கும் எதிரொலித்தன.

“இதே போல ஆடினால், ஆனந்த் மிகப் பெரிய புள்ளி வித்தியாசத்தில் தோற்க நேரிடும்”, என்றெல்லாம் டொபலோவ் ரசிகர்கள் கொக்கரித்தனர். என் போன்ற தீவிர ஆனந்த் ரசிகனுக்குக் கூட, இவர்கள் சொல்வது உண்மையாகிவிடுமோ என்ற எண்ணம் எழாமலில்லை.

அடுத்த நாள் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் வெள்ளைக் காய்களுடன் களமிறங்கினார். ஆனந்த் வெற்றியைக் குறி வைத்து ஆடுவாரா? அல்லது டிராவுக்காக ஆடுவாரா? டிராவுக்கு ஆடப் போய், over defensive-ஆகி அதுவே அவர் வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டால்? இரண்டாவது ஆட்டத்திலும் தோற்றால், கிட்டத்தட்ட இந்தத் தொடரையே தோற்றார்ப் போல்தான். ஆனந்துக்கு, இரண்டாவது ஆட்டம் மிக மிக முக்கியமான ஒன்று.

இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் தனது positional player அவதாரத்தில் களமிறங்கினார். டொபலோவுக்கு எதிராக கிராம்னிக் வெற்றிகரமாக உபயோகித்த Catalan Opening-ல் ஆட்டத்தைத் துவக்கினார். 14 நகர்த்தல்கள் முடிந்த போது, ஆனந்தின் காய்கள் நல்ல நிலைகளை அடைந்திருந்த போதும், அவர் ஒரு pawn-ஐ பலி கொடுத்திருந்தார். டொபலோவின் காய்களின் அமைப்பு முழுவதுமாய் வளர்ந்திராத நிலையில், ராணியை exchange செய்ய ஆனந்த் அழைப்பு விடுத்தார். ஆட்டத்தை live-ஆக அலசிய பலருக்கு இது ஒரு புதிரான நகர்த்தலாக இருந்தது. ஆட்டம் நடக்கும் போது ஆனந்தை ஷார்ட் போன்ற கிராண்ட்மாஸ்டர்கள் திட்டித் தீர்த்தாலும், ஆட்டம் முடிந்த பின், "This was a weaker move. But, this may be pure genius from a psychological point of view.", என்றனர்.

ராணியுடன் ஆடியிருந்தால், டொபலோவ் புதியதொரு நிலைக்கு ஆட்ட்த்தை எடுத்துச் செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம். இருவரிடமும் ராணி இல்லாத போது, பொறுமையாய் முக்கிய கட்டங்களைப் பிடித்தல் அவசியமாகிறது.

டொபலோவை நன்குணர்ந்த ஆனந்த், அவர் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து சமநிலையைத் தகர்க்கும் நகர்த்தலைச் செய்யக் கூடும் என்று ஊகித்திருப்பார். அது, இருபத்தி ஐந்தாவது நகர்த்தலில் நடந்தது.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தான் டிரா offer-கள் கொடுக்கப் போவதில்லை என்று டொபலோவ் அறிவித்திருந்தார். அதனால், எப்படியும் வெற்றியை நோக்கியே ஆட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். டொபலோவின் 25-ஆவது நகர்த்தலுக்குப் பின், ஆனந்தின் கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்கியது. முன்பு பலி கொடுத்த pawn-ஐ மீட்டெடுத்தோடு, இன்னொரு pawn-ஐயும் ஆனந்த் கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் ஆனந்தின் இரண்டு passed pawn-கள் டொபலோவை துன்புறுத்த ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல், 43-ஆவது நகர்த்தலில் டொபலோவ் தோல்வையை ஒப்புக் கொண்டார்.

ஆனந்த் வெற்றி பெற எப்படி ஆட வெண்டும் என்று வல்லுனர்கள் ஊகித்தனரோ அதே வகையில் ஆனந்தின் ஆட்டம் அமைந்தது.

சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்தல், 40 மணி நேர கார் பயணம், எதிரியின் நாட்டில் வாசம், முந்தைய நாள் தோல்வி என்று ஆனந்தின் மனநிலையைக் கெடுக்கும் எண்ணற்ற காரணங்களுக்கிடையில், துல்லியமாய் ஆடிய ஆனந்தின் ஆட்டம் அவரது ரசிகர்களுக்குப் பெறும் நிறைவை அளித்திருக்கும்.

மூன்றாவது ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் ஆடுகிறார். சென்ற முறை ஆடியதை விட, ஆக்ரோஷமாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனந்த் மீண்டும் டொபலோவ் வழிக்கே சென்று அவரை வெல்ல முயல்வாரா அல்லது பொறுமையாய் டொபலோவை தவறு செய்யத் தூண்டுவாரா?

நாளை தெரிந்துவிடும்...


- லலிதா ராம்


தொடரும்... :-)

Read More...

மண்டேனா ஒன்று - 26/4/2010

இப்பத்தான் பிரபாகரன் அட்டைப் படங்களை பத்திரிகைகள் கொஞ்சம் நிறுத்தி இருக்க அவர்களுக்கு அடுத்த தமிழ் ஆதரவு தெரிவிக்கிற விஷயம் கிடைத்துவிட்டது. - பார்வதி அம்மாள்.

பேனையே பெருச்சாளியாக்கிக் காட்டும் நமது மீடியா இப்படியொரு விவகாரம் கிடைத்தால் விடுவார்களா? நக்கீரன் பத்திரிக்கை காட்டமாக விமர்சித்து, கொடூரன்கள் என்ற புதிய விருதை வேறு கொடுத்திருக்கிறது, யாருக்கு என்பதுதான் கேள்விக்குறி. தமிழ் மக்கள் மீது நக்கீரனுக்கு தான் எவ்வளவு அக்கறை !. விரப்பனையே ஹீரோவாகவும், நித்தியானந்தா வீடியோவை பணத்துக்கும் காண்பித்த இவர்களுக்கு என்ன விருது கொடுப்பது என்று யோசிக்கணும்.



சோழர்களுக்கு பிறகு தமிழ்க் கலாச்சாரம் என்றால் போஸ்டர் கலாச்சாரம். சென்னை நகரில் அன்னை பார்வதி அம்மாளைத் திருப்பியனுப்பிய அரசே!! என்று அரசை வசை பாடும்வண்ணம், வித விதமான போஸ்டர்களில், வைகோ, பழ.நெடுமாறன் போன்ற இனமானக் குத்தகைதாரர்கள் காட்சி தருகின்றனர். அமீர், சீமான் போன்றோர் மிஸ்ஸிங்.

கிட்டத்தட்ட அதிமுக, காங்கிரஸ் நீங்கலாக அனைத்து கட்சிகளுமே இவ்விவகாரத்தில் அரசை எதிர்த்துப் பேசி வருகின்றன. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தர்மசங்கட்த்தில் தத்தளித்து வருவது திருமா மட்டுமே. பார்வதி அம்மையாரால் தமிழகத்தில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வராது. எனவே அவரை மறுபடியும் தமிழகத்திற்கு தருவித்து சிகிச்சை அளிக்க அரசு ஆவன செய்ய வேண்டுமென திருமா அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாவம்!! அம்பேத்கர் சுடர் கொடுத்த கையோடு எதிர்த்து பேசவும் முடியாது, காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளவும் திராணி இல்லை. என்ன செய்வார்? பதவி என்று வரும்போது தமிழ் இனமானமாவது மண்ணாங்கட்டியாவது?

சட்டசபையில் இவ்விவகாரம் கிளப்பட்ட போது, அதிமுக அவையிலேயே இல்லை. அரசின் பக்கவாத்ய கோஷ்டியான காங்கிரஸார் அரசின் நடவடிக்கையை வரவேற்று விட்டு கடமையை சிரத்தையாக முடித்தனர்.

இவ்விவகாரத்தில் இன்னும் சில விடை தெரியாத சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கிறது

அவர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு, மலேஷியாவிலுள்ள இந்தியத் தூதரகம் விசா அளித்திருக்கிறது. பார்வதி அம்மாள் இன்னாரென்று தெரியாமல் விசா அளிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறிருக்கையில் அவரை எதற்காக இந்தியா வந்த பிறகு திருப்பியனுப்ப வேண்டும்? இங்கு சிலரால், சில தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க விரும்பி இருந்தால் முன்னமேயே விசா மறுத்திருக்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை ?



ஏற்கனவே பார்வதியம்மாள் மற்றும் வேலுப்பிள்ளை ஆகிய இருவரும் சுமார் இருபதாண்டு காலம் திருச்சி அருகேதான் வசித்தனர். அப்போதெல்லாம் பிரச்சனைகள் கிளப்பப்படாத போது, இப்போது மட்டும் பிரச்சனைகள் கிளப்ப்ப்படுவது எதனால் என்பது அடுத்த சந்தேகம். முதல்வரோ பார்வதி அம்மாள் திருப்ப அனுப்பப்பட அதிமுக ஆட்சியில் எழுதப் பட்ட கடிதம் தான் காரணம் என்று சொன்னார். அவரின் வரிகள் அப்படியே இதோ :

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால், 5.5.2003 அன்று (அதிமுக ஆட்சி காலத்தில் )தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் பத்தி 2 வருமாறு:

Sri Lankan Tamils Velu Pillai and Parvathi Ammal may return to India. Their re-entry into India may not be desirable in view of their association with the LTTE Leader and Tamilar Desiya Iyakkam, banned organisations. Hence, the personal particulars of the above Sri Lankan Tamils are sent herewith to place their names under Black List/Prior Approval Category List, to prevent their re-entry into India through legal/illegal means.”

இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள் எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ மிக முக்கியமான இந்தப் பிரச்சனையில் எல்லா கட்சிக்காரர்களும் குரலெழுப்புகின்ற இந்தப் பிரச்சனையில் அவர்கள் மாத்திரம் (அதிமுகவினர்) வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அந்த அறிக்கையின் முதல் வரியில் இவ்வாறு உள்ளது:பிரபாகரன் தாயார் சென்னைக்கு வந்தது குறித்து தமிழக அரசுக்குத் தெரியாது. அவர் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக அரசு எழுதிய கடிதத்தால்தன் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வர விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறினார்.

அம்மையார் தடை விதித்திருந்தார் அதனால் என்று கலைஞர் சொன்னார். ஆனால் இந்த 5 ஆண்டுகள் இவர் அந்த தடையை நீக்கவில்லை. இப்போது கடிதம் அனுப்புவோம் என்கிறார். இதில் இருந்து என்ன தெரிகிறது? இவர்கள் விரும்பினால் லெட்டர் எழுதி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்/செய்வார்கள் என்பது போல இருக்கு இந்த அறிக்கை.

மூன்றாவதாக, பார்வதி அம்மாளின் வருகை குறித்த விவரம் ஏதும் தெரியாது என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது. "மறுநாள் காலை பத்திரிகைகளைப் படித்தப் பிற்பாடுதான் தனக்கு விவரம் தெரியும்" என்று நாம் சொல்லலாம் ஆனால் தமிழக முதலமைச்சர் சொல்லுகிறார்.
முதலமைச்சர் கருணாநிதியின் அறிக்கையாக செய்தித்தாகளில் வந்த செய்தி:பார்வதி அம்மாள் திரும்ப அனுப்பப்பட்ட முழுத்தகவல் மறுநாள் காலையிலேதான் விவரமாகப் பத்திரிகைகளைப் படித்து தெரிந்துகொள்ள முடிந்தது. பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது பற்றி அவர்களிடமிருந்தோ, அவர்களுக்கு துணை புரிய விரும்புபவர்களிடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ, தகவலோ நேரடியாக வரவே இல்லை. மத்திய அரசுக்கும், பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தி தொடர்பு இருந்திருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.
நிச்சயமாக சொல்கிறேன், அன்றைய இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்கு செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்கு தொடர்பு கொள்கிறேன். அந்த அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்ற அடுத்த செய்தி எனக்கு கிடைக்கிறது.
நெடுமாரனும், வைகோவுக்கு முன்பே இந்த விஷயம் தெரிந்துவிட்டதால் விமான நிலையத்திற்கு வந்த போது அவர்களை உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுத்திருக்கிறார்கள். வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. இதுவும் அடுத்த நாள் காலை பேப்பரில் வந்த பிறகு தான் பாவம் தெரிந்திருக்கும். ஏன் முதல்வர் அவ்வாறு சொல்ல வேண்டும்?

இதை எல்லாம் பார்க்கும் போது வழக்கமா இவர் எழுதும் கேள்வி பதில் அறிக்கைகளைக் கூட அடுத்த நாள் பேப்பரில் பார்த்து தான் தெரிந்துக்கொள்ளும் நிலையில்தான் இருக்காரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இலவசங்களை அடுத்து கலைஞரின் அடுத்த சாதனை பிரதமருக்கு கடிதம் எழுதுவது தான் ஏன் அதை இந்த விஷயத்தில் செய்யவில்லை ?

அடுத்த்தாக, பார்வதி அம்மாளுக்கு பிரபாகரன் தவிர ஓரிரண்டு மகன் மகள்களும் அயல்நாடுகளில் நல்ல நிலைகளில் இருப்பதாக்க் கேள்வி. அவ்வாறிருக்கையில் அவர் அவர்களிடம் செல்லாமல், இம்முதிய வயதில் ஏன் இவ்வாறு அங்குமிங்கும் அலைகழிக்கப்படுகிறார்? இன்னும் வேடிக்கை என்னவெனில், பெற்ற குழந்தைகள் அயல்நாட்டில் இருக்கையிலேயே தந்தை நோய் வாய்ப்பட்டு அகதி முகாமிலேயே உயிர்நீத்தார். தாயார் இப்போது ஆதரவின்றித் தவிக்கிறார். பெற்ற தாய் தந்தையரைப் பேணாத ஒரு குடும்பம், தமிழினத்தைக் காக்கப் புறப்பட்ட்து என்றால் நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கிறது.

ஏற்கனவே முத்துகுமரன் விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேடிய நம் தமிழ் தலைவர்கள் நிச்சயம் பார்வதி அம்மாள் வந்திருந்தால் அவருடைய பெயரால் விளம்பரம் அடைந்திருப்பார்கள், பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு கவர் ஸ்டோரி போட்டிருக்கும். அவ்வளவு தான். மனிதநேயம் என்று நம் ஊரில் உள்ள புலி ஆதரவுத் தலைவர்கள் சொல்லுவது எல்லாம் நல்ல ஜோக்!


முன்பு பிரியங்கா யாருக்கும் தெரியாமல் வந்து சிறை விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு நளினியைப் பார்த்து விட்டுப் போனார். முதலமைச்சர் நினைத்திருந்தால் இதையும் அப்படி செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.


- யதிராஜ்

பிகு: சில பகுதிகள் எடிட் செய்திருக்கிறேன்.

Read More...

Saturday, April 24, 2010

ஐயோடேட்டா



இதற்கும் 'அதற்கும்' ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்காதீங்க. ஆறு இல்லை, அதுக்கு மேலயும் இருக்கலாம்...கண்டுக்காதீங்க....ஹிஹி

Read More...

ஆனந்த் – டொபலோவ் Championship Preview

இட்லிவடை வாசகர்கள் எவ்வளவு பேர் செஸ் விளையாட்டை ஃபாலோ செய்வார்கள் என்று தெரியாது. ஆனந்த் – டொபலோவ் விளையாட்டை பற்றி லலிதா ராம் ஒரு முன்னோட்டம் எழுதியுள்ளார். வாசகர்களுக்கு விருப்பம் இருந்தால் இட்லிவடையில் சில பதிவுகள் எழுதுவார். உங்கள் விருப்பத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.


இனி கட்டுரை...


40 மணி நேர மாரத்தான் கார் பயணத்துக்குப் பின் ஆனந்த் பல்கேரியா அடைந்தார். முதல் ஆட்டம், ஒரு நாள் தாமதத்துக்குப் பின், இன்று தொடங்குகிறது.


ஆனந்தைப் பற்றி இங்கு ஏற்கெனவே விவரமாய் எழுதியுள்ளேன். (ஏனோ இன்று சொல்வனம் வேலை செய்யவில்லை. சீக்கிரம் செய்யும் என்று நம்புகிறேன்) அதனால் டொபலோவைப் பற்றி பார்க்கலாம். 1975-ல் பிறந்தவரான டொபலோவ், World Under-14 & World Under-16 பட்டங்களைப் பெற்று செஸ் உலகில் முன்னேறத் துவங்கி, 1992-ல் கிராண்ட்மாஸ்டர் தகுதியைப் பெற்றார். செஸ்ஸைப் பொறுத்த மட்டில், இந்தியாவுக்கு ஆனந்தைப் போல பல்கேரியாவுக்கு டொபலோவ். உலக விளையாட்டு அரங்கில் பல்கேரியாவின் பெயரை முன்னிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், டொபலோவ் அந் நாட்டின் அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண ரசிகர் வரை அனைவராலும் விரும்பப்படுபவர். (நல்ல காலம் பல்கேரியாவில் ஐபிஎல் நுழையவில்லை).

டொபலோவ் தன் ஆட்டத்தை பெரும்பாலும் அதிரடியாகவே ஆடுவார். நிறைய நேரம் எடுத்துக் கொண்டு உள்ளதில் மிகச் சிறந்த நகர்த்தல்களைக் கண்டுபிடித்து ஆட்டத்தை தொடர்வதை விட, யாரும் பார்த்திராத ஆட்ட நிலைகளை உருவாக்கி, எதிராளியை திக்குமுக்காட வைப்பதில் வல்லவர். இந்த வகை ஆட்டத்தில் ரிஸ்க் ரொம்ப அதிகம். டொபலோவின் மிகப் பெரிய பலம் அவரது துணிச்சல்தான். தன் துணிச்சலான நகர்த்தல்களினால் பல முறைத தோல்வியைச் சந்தித்திருப்பினும் டொபலோவ் தன் aggressive approach-ஐ மாற்றிக் கொள்ளாமல் ஆடி வருகிறார். முதலில் தற்காத்துக் கொள்வோம். எதிராளி தவறு செய்தால், அதை வைத்து ஆட்டத்தை ஜெயிப்போம் என்ற வகை ஆட்டக்காரர்களுக்கிடையில் டொபலோவ் தனித்துத் தெரிகிறார். இவர் தோல்வியை அடைந்த பல ஆட்டங்கள் கூட ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. (உதாரணமாக இந்த ஆட்டத்தைக் கூறலாம்.)

பல மறக்க முடியாத ஆட்டங்களை டொபலோவ் ஆடி வந்த போதும், 1995-லிருந்து 2005-வரை உலக சாம்பியன் ஆகும் கனவு நிறைவேறாமலே இருந்து வந்தது. (இப்போது கூட இவர் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படும் சாம்பியன் அல்ல.) காஸ்பரோவ் ஏற்படுத்திய பிளவால், ஒரே சமயத்தில் செஸ் உலகில் இரு சாம்பியன்கள் இருந்து வந்தனர். 2005-ல் FIDE என்ற அமைப்பின் போட்டியின் மூலம் டொபலோவ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆனந்த் முதலான எட்டு முன்னணி வீரர்கள் ஆடிய டயுள்-ரவுண்ட் ராபின் டோர்னமெண்டில் முதல் ஏழு ஆட்டங்களில் ஆறு வெற்றியைப் பெற்று, சுலபமாக பட்டத்தை வென்றார் டொபலோவ்.

2005-ல் காஸ்பரோவ் ஓய்வு பெற்றார். அதன் பின், செஸ் உலகம் இணைவதற்கான சாத்தியகூறுகள் உருவாகின. 2006-ல் பொதுவாக ஒரு சாம்பியனைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு, அப்போதைய சாம்பியன்களான கிராம்னிக்கும், டொபலோவும் எலிஸ்டாவில் பன்னிரெண்டு ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவது என்று முடிவானது. (போட்டியின் முடிவிலும் முழுமையான unification நடக்கவில்லை. அது 2008-ல் ஆனந்த் கிராம்னிக்கை வென்றவுடன்தான் நடந்துள்ளது).

இந்தக் கட்டத்த்தில், டொபலோவின் மேனேஜர் சில்வியோ டேனைலோவைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

இவர் செஸ் இண்டெர்னேஷனல் மாஸ்டராக இருந்திருக்கிறார் என்பதை விட டொபலோவின் மேனேஜராக இருப்பவர் என்றே அனைவராலும் அறியப்படுபவர். இன்று, டொபலோவை ‘bad boy of chess’ என்று பலர் அழைக்க முக்கிய காரணமாய் விளங்குபவர். அநேகமாய், டோபலோவ் சார்பில் நேர்காணல்கள் இவர்தான் வழங்குவார். பேசும் போது எடுத்தே கவிழ்த்தேன் என்று எதையாவது சொல்வார். எதிராளியைத் தூண்டிவிடுவதில் இவருக்கு நிகரே இல்லை எனலாம். 90-களில் டொபலோவின் கோச்சாக இருந்து பின்பு அவரது மேனேஜர் ஆனவர். இந்தப் பின்னணியின் டொபலோவ் கிராம்னிக்கின் ஆட்டங்களைக் காண்போம்.

முதல் நான்கு ஆட்டங்கள் முடிந்த போது கிராம்னிக் 3-1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தார். அப்போது டேனைலோவ் ஒரு அறிக்கை கொடுத்தார்:

“ஒவ்வொரு நகர்த்தலுக்குப் பின்னும் கிராம்னிக் தன் இருக்கையை விட்டு எழுந்து செல்கிறார். சராசரியாக ஒரு ஆட்டத்தில் 50 முறையாவது relaxation room-க்குப் போகிறார். 25 முறையாவது toilet-க்கு போகிறார். வீடியோ சர்வைலன்ஸ் இல்லாத toilet(!!!)-க்கு அடிக்கடி கிராம்னிக் செல்வது சந்தேகத்தை அளிக்கிறது. இந்த முறைகேட்டை உடனடியாக சீர் செய்யாவிட்டால் டொபலோவ் தொடர்ந்து விளையாடமாட்டார்.”

இந்த அறிக்கையைத் தொடர்ந்து நடந்த பரிசீலனையில், டேனைலோவ் கூறிய குற்றச்சாட்டுகள் மிகப் படுத்தப்பட்டவை என்று தெரிய வந்தாலும், இரு ஆட்டக்காரர்களுக்கு தனித் தனி கழிப்பறைகள் கொடுப்பதை நிறுத்தி, இருவருக்கும் ஒரே கழிப்பறையைக் கொடுப்பது என்று முடிவானது. இதற்கு கிராம்னிக் மறுப்பு தெரிவித்து, ஐந்தாவது ஆட்டத்தை forfeit செய்தார். அதன் பின் இரு பக்கமும் மாறி மாறி அவதூற்றினை வாரி இறைத்துக் கொண்டனர். கடைசியாக, “ஆட்டம் தொடரும். பழைய படியே கிராம்னிக் பிரத்யேக கழிப்பறைக்குச் செல்லலாம். ஆனால், அவர் forfeit செய்த ஆட்டம் செய்ததுதான். அந்த ஆட்டத்தில் டொபலோவ் வென்றதாகக் கருதப்படும்”, என்று முடிவானது. இது நியாயமா? டேனைலோவ் இருக்கும் இடத்தில் எல்லாமே நியாயம்தான்.

அதன் பின் நடந்த ஆட்டங்களில் இரு முறை டொபலோவ் வென்று முன்னணியில் இருந்தார். பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அபாரமாக விளையாடி சமநிலைப் படுத்தினார். 12 ஆட்டங்களும் முடிந்த போது இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனால், ராபிட் ஆட்டங்கள் தொடங்கின. மூன்று ராபிட் ஆட்டங்கள் டிராவில் முடிந்த பின், கடைசி ஆட்டத்தில் கிராம்னிக் வென்று உலக சாம்பியன் ஆனார். அதன் பின், கிராம்னிக்கின் toilet-ன் கூரையில் கேபிள்களைக் கண்டுபிடித்ததாகவும், கிராம்னிக்கின் நகர்த்தல்கள் பல Fritz9 என்ற கம்ப்யூட்டர் பேகேஜ் சிபாரிசு செய்த நகர்த்தல்களாகவே இருப்பதாகவும் டேனைலோவ் புதிய சர்ச்சையைக் கிளப்பினார். ”I believe that his (Kramnik’s) play is fair, and my decision to continue the match proves it” என்று முதலில் சொன்னவரும் டொபலோவ்தான். தோல்விக்குப் பின் பேச்சை மாற்றி அவதூறை இறைக்க ஆரம்பித்தார். இதற்குப் பின்னும் “severe reprimand” உடன் டோபலோவ் தப்பித்துக் கொண்டார்.

2006-ல் கிராம்னிக் சாம்பியன் ஆனாலும், 2005-ஐப் போலவே 2007-லும் டோர்னமெண்ட் நடத்துவதாக FIDE அறிவித்து இருந்தது. கிராம்னிக் உலக சாம்பியன் என்றால், 2007 ஆட்டங்களுக்கு அர்த்தமே இல்லை. இந்தக் குழப்பம் தீர கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார், டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராவின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார். ஆனந்துக்கும் கிராம்னிக்குக்கும் இடையிலான போட்டி 2008-ல் ஜெர்மனியில் நடை பெற்றது. கூடவே இன்னொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

2008-ல் FIDE ஒரு Super GM டோர்னமெண்ட் நடக்கும், அதில் வெற்றி பெறுபவர் டொபலோவுடன் மோதுவார். அந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் ஆனந்த்-கிராம்னிக் போட்டியில் வென்று சாம்பியன் ஆனவருக்கு சேலஞ்சராக ஆடுவார் என்றது ஒப்பந்தம்.

இதெல்லாம், எந்த ஊர் நியாயம் என்றெல்லாம் கேட்கப்படாது. அதான் முன்னாலேயே சொல்லிவிட்டேனே டேனைலோவ் ஜெகஜால கில்லாடி என்று. சென்ற வருடம் டொபலோவும் காம்ஸ்கியும் ஆடிய போட்டியில் டொபலோவ் வென்று ஆனந்துக்கு சாலஞ்சரானார்.

உலக சாம்பியன் போட்டி எங்கு எப்பொது நடத்தலாம் அதற்கு தேவையான பொருளையும் prize money-ம் யார் தருவார்கள்? எவ்வளவு தருவார்கள்? என்றெல்லாம் குழப்பங்கள் தொடர்ந்தன. கடைசியில் பல்கேரியாவின் பிரதமரின் ஆதரவுடன், அந் நாட்டின் தலைநகரில் ஆட்டம் நடக்கும் என்று முடிவானது. போட்டி ஆரம்பிக்கும் சில வாரங்கள் முன், “ஆனந்த் போட்டியை நடத்துவதில் அக்கறையில்லாமல் இருந்தார். அவர் நினைத்திருந்தால் இந்தியாவில் ஸ்பான்ஸர்கள் பிடித்திருக்கலாம். என்னையே எல்லா வேலையும் செய்ய வைத்துவிட்டார்.”, என்று டொபலோவ் புலம்ப ஆரம்பித்துவிட்டார். தன் சொந்த நாட்டில் ஆடுவது மிக மிகக் கஷ்டமான விஷயம். இருப்பினும் வேறு வழியேயில்லாமல் ஆடுவதாக அவர் தெரிவித்த போது சிரிப்புதான் வந்தது.

இன்று தொடங்கவிருக்கும் ஆட்டம், நேற்றே தொடங்கி இருக்க வேண்டியது. ஐஸ்லேண்ட் எரிமலையால் தாமதமாகத் துவங்குகிறது. இருவருக்கும் நடக்கவிருக்கும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்?

இந்தக் கேள்வி, பல முன்னணி செஸ் வீரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையானவரின் பதில், “இருவரும் மிக மிக நல்ல ஆட்டக்காரர்கள். ஆனந்தின் நிதானம் அவரது பலம். வெறும் செஸ் பலத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், ஆனந்த் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆட்டங்கள் பல்கேரியாவில் நடக்கின்றன. அது சிங்கத்தின் குகையில் சென்று சிங்கத்தை அடக்குவதற்கு சமானம். ஒரு சிங்கம் மட்டுமென்றால் பரவாயில்லை. இரண்டு சிங்கங்கள் இருக்கின்றன. உலக சாம்பியன் ஆவதற்கு இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காத என்ற நிலையில் இரு சிங்கங்களும் பசியுடன் இருக்கின்றன. ஜெயிப்பதற்காக அவை எதை வேண்டுமானாலும் செய்யும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது டொபலோவுக்கு வாய்ப்புகள் அதிகம்”.

பல்கேரியாவில் ஆடுவதற்கு ஆனந்த் ஒப்புக் கொண்டதை, “A Terrible Blunder”, என்றே பலர் கருதுகின்றனர். (உதாரணம்: இதையும், இதையும் பார்க்கலாம்) பல்கேரியத் தரப்பு தன் சத்தாய்ப்பை சென்ற வருடமே தொடங்கிவிட்டது. “ஆனந்த் செஸ் ஆடாமல், உலக சாம்பியன் ஆன மிதப்பில் இருக்கிறார். அப்படி அவர் ஆடினாலும், இன்று இருக்கும் இளம் வீரர்களுடன் அவரால் தாக்கு பிடிக்க முடியாது. சாம்பியன்ஷிப்பை தக்க வைக்க ஆனந்த் வேண்டுமென்றே போட்டி நடைபெறாமல் இருக்கும்படி அலைக்கழிப்பார். இதன் மூலம் நாங்கள் nervous ஆகிவிடுவோம் என்பதே ஆனந்தின் எண்ணம்”, என்றெல்லாம் போன வருடமே டேனைலோவ் உளறிக் கொட்டினார்.

ஆனந்தை விட ஐந்து வயது இளையவராதலால், இது போன்ற தொடர்களுக்குத் தேவைப்படும் Stamina தன்னிடம் அதிகம் இருப்பதாக டொபலோவ் சில வாரங்களுக்கு முன் கூறியுள்ளார். இதெல்லாம் ‘part of mind games’. டொபலோவ் ஆட்டத்தின் போது டிரா offer செய்ய மாட்டார். ஆனந்த் பேசினாலோ, draw offer செய்தாலோ அதை சட்டை செய்ய மாட்டார், என்று கூறியுள்ளார். பழம் தின்று கொட்டை போட்டவரான ஆனந்துக்கு இவை எல்லாம் சலனத்தை ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன்.

முதல் சில ஆட்டங்களுக்குள் ஆனந்த் முன்னிலையை அடைந்தால் டொபலோவ் குழுவினர் என்ன செய்வார்கள் என்று பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இதுவரை ஆனந்தும் டொபலோவும் ஆடிய ஆட்டங்களை வைத்துப் பார்க்கும் போது, ஆனந்த் டொபலோவை விட நிறைய வெற்றியைப் பெற்றுள்ளார். கூர்ந்து நோக்கின், அதில் நிறைய வெற்றிகள் வேகமாக ஆடும் ரேபிட் ஆட்டங்களின் வந்துள்ளன. கிளாசிகல் ஆட்டங்களில் டொபலோவ் ஆனந்தை விட ஒரு ஆட்டம் அதிகமாக ஜெயித்துள்ளார். இதிலிருந்து, இரு ஆட்டக்காரர்களும் சம வலிமை கொண்டவர்களே என்பது தெளிவாகிறது.

எது எப்படியோ செஸ் ரசிகர்களுக்கு நல்ல தீனி கிடைக்கப் போகிறது. என்னைப் பொறுத்த மட்டில் ஆனந்த் ஜெயித்தால் ரொம்ப சந்தோஷம் தோற்றால் ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஏனெனில், சென்ற முறை பட்டத்தை வென்றவுடன், ஆனந்தின் கவனமெல்லாம் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே இருந்து வருகிறது. இதனால், இடைப்பட்ட காலங்களின் அவர் ஆடிய ஆட்டங்களின் தற்காப்பாக ஆட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த வருட போட்டியில் ஜெயித்தாலும் தோற்றாலும், ஆனந்த் தன் பெயரை என்றும் நிலைக்கும்படி செய்துவிட்டார். இன்னும் எத்தனை வருடங்கள் தொடர்ந்த ஆட முடியும் என்று டெஹ்ரியாத நிலையில், இந்த உலக சாம்பியன் என்ற பாரத்தைச் சுமக்காமல் இருந்தால், பழைய Tiger from Madras மீண்டும் ரசிகர்கள் அடிக்கடி பார்க்க முடியும்.

இந்த அட்டத்தைப் பற்றிய இன்னொரு கொசுறு செய்தி: 1920-களுக்குப் பின் இரு ரஷ்யரல்லாதவர் ஆடும் முதல் சாம்பியன்ஷிப் போட்டி இதுதான்.




நல்ல வேளை இதில் ஐபில் மாதிரி கோமாளித்தனம் எதுவும் இதுவரை இல்லை. விளையாட்டு விலையாட்டாகியிருக்கும்!. செஸுக்கு மூளை தேவை அதனால் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.

என்ன தான் இருந்தாலும், சியர் லீடர்ஸ் இல்லாத ஆட்டமும் ஒரு ஆட்டமா!


( நன்றி: கிரிக்கெட் தவிர )

Read More...

எங்கே அழகிரி?

நேற்று பாராளுமன்றம் இரு விவகாரங்களில் அமளி துமளிப் பட்டது. ஒன்று வழக்கம்போல் ஐபிஎல் விவகாரம். நாட்டு மக்கள் பல பேருக்கும் ஏன் பாராளுமன்றத்தில் பல பேருக்கும் என்ன பிரச்சனை என்று முழுவதும் தெரியுமா என்பது சந்தேகம் தான். அடுத்த விவகாரம் அழகிரி எங்கே என்பது.


அழகிரியால் சுமார் 15 நிமிஷம் ஒரு சலசலப்பு. கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டு அமளி ஏற்பட்டிருக்கிறது. காரணம், வேறு எதுவுமில்லை!! அழகிரி வழக்கம்போல் அவையில் இல்லை. வழக்கமாக அழகிரி கேள்வி நேரங்களிலும், கேபினட் ஆலோசனைக் கூட்டம் போன்றவற்றில் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கிட்ட்த்தட்ட அவர் அமைச்சரான போதிலிருந்தே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அவருக்கு ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் போதிய பரிச்சயம் இல்லை.

இதற்காக கேள்வி நேரத்தில் தமிழில் பதிலளிக்க அனுமதி கோரி அவர் சபாநாயகரிடம் ஒரு மனு அளித்திருந்தார். ஆனால் ஒரு கேபினட் அமைச்சர் ஆங்கிலத்திலேயோ அல்லது ஹிந்தியிலேயோதான் பதிலளிக்க முடியும், அல்லது விவாதிக்க முடியும் என்பது பாராளுமன்ற விதிமுறை. இவ்விதியை அழகிரியை முன்னிட்டுத் தளர்த்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பருப்புதான் என்னவோ வேகவில்லை.

இந்நிலையில் நேற்று மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அழகிரி எங்கே என்று பிரச்சனையைக் கிளப்பினர். நேற்றைய முன்தினம் கூட கேள்வி நேரத்தில் இப்பிரச்சனை கிளப்ப்ப்பட்ட போது, ப்ரணாப் முகர்ஜி எழுந்து விவகாரத்தை சமாளிக்க முயன்றிருக்கிறார். "அழகிரி வெளிநாட்டுக்கு போயிருக்கார் அதனால் அவையில் இல்லை" இது தான் அவர் சொன்ன சூப்பர் பதில்!.



“சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், அழகிரியை பாராளுமன்றத்தில் பார்த்தே ஒரு வருடம் ஆகிறது என்றிருக்கிறார்.”



இதற்கு பதிலளித்த லோக் சபை சபாநாயகர் மீரா குமார், அழகிரி எங்கு சென்றிருக்கிறார் என்று தெரியவில்லை, தவிர அவரிடமிருந்து எவ்விதமான தொடர்பும் இதுவரை இல்லை. மேலும் அவர் அயல்நாடு செல்வதற்கு முன்பு கூட அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என்னிடம் சொல்லிவிட்டு தான் செல்கிறார்கள் என்று சொன்னார். [ சரியாக சொல்ல வேண்டும் என்றால் Prime Minister Manmohan Singh and other ministers are very particular about it (courtesy and decorum). Whenever they go, they always inform my office.” ]

மேலும் கூறுகையில், அழகிரி எப்போது வந்தாலும் அவரிடம் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைக் கேட்டுத் தெளிவுபடுத்துவதாகவும் மீரா குமார் தெரிவித்திருக்கிறார்.


ராஜ்ய சபையில் இப்பிரச்சனை கிளப்ப்ப்பட்ட போது பதிலளித்த, சபாநாயகர் அன்ஸாரி அவர்கள், இது சற்றே சிக்கலான விவகாரம், இது தனியாக விவாதிக்கப்பட வேண்டும், இதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது என்று பதிலளித்திருக்கிறார்.



ஆக மக்களால் ஜனநாயக்க் கடமைகளை நிறைவேற்ற ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதுவும் ஒரு அமைச்சர், அவைக்கே வருவதில்லை. இது ஜனநாயகத்தின் சாபக்கேடா அல்லது மக்களின் துரதிருஷ்டமா?



நேற்றைய தினம் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன், அழகிரி அவைக்கு வராமல் மக்களை ஏமாற்றுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களாகிய நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை. ஓட்டிற்குத்தான் கணிசமாக்க் கிடைக்கிறதே!! அவர் அவைக்குச் சென்றால் என்ன அல்லது எங்கு சென்றால்தான் என்ன?


மஞ்சள் குறிப்பு: அழகிரி கோடை வெயிலிலிருந்து தப்பித்து குளுமை பெற மாலத்தீவிற்குச் சென்றுள்ளார் அழகிரி. இவரது தந்தையார் ஆட்சியில் கோடையில் மின்வெட்டினால் ஏற்படும் வெக்கையிலிருந்து தப்பிக்க ஸ்ரீமான் பொதுஜன்ங்கள் எந்த தீவிற்குச் செல்வது ?

Read More...

Friday, April 23, 2010

FLASH:குமுதம் எம்.டி. கைது

குமுதம் - என்ன நடந்தது

சில மணி நேரம் முன்பு குமுதம் இதழ் மேனேஜிங் டைரக்டர் வரதராஜன் கைது என்று சன் டிவியில் ஃபிளாஷ் நியூஸ் ( தற்போது நிபந்தனை ஜாமீன், நாளை காலை திரும்பும் ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள். கடைசித் தகவல்: ஆசிரியர் ப்ரியா கல்யாணராமனை ரகசிய இடத்துக்குப் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனராம்).

இந்த பிரச்சனை என்ன என்று தெரிந்துக்கொள்ள எஸ்.ஏ.பி க்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.

குமுதம் நிறுவன முதல் ஆசிரியர் எஸ்.ஏ.பியும், பதிப்பாளர் பார்த்தசாரதியும் நல்ல நண்பர்கள். அவர்களை போலவே அவர்கள் பிள்ளைகளும் - ஜவஹர் பழனியப்பன், மற்றும் வரதராஜன். பழனியப்பன் அமெரிக்காவில் பிரபல மருத்துவர். அவருக்கு குமுதத்தில் கிடைக்கும் வருமானம் பாக்கெட் மணி போன்றது. ஆனால் அவர் அப்பா நேசித்த பத்திரிக்கையை இவரும் நேசித்தார். அதை நடத்தும் முழு பொறுப்பும் தன் உற்ற நண்பர் வரதராஜனிடம் கொடுத்து வைத்தார்.

வரதராஜன் நாம் தான் குமுதத்தை முழுவதும் கவனித்துக்கொள்ளுகிறோம். இவர் வருடத்துக்கு ஒரு முறை இந்தியா வருகிறார் என்று அதை முழுவதும் அபகரிக்கப் பார்த்தார். இது ஜவஹருக்கு அரசல் புரசலாக தெரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர் தங்கை கிருஷ்ணா சிதம்பரம் குமுதத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் வந்த சில நாட்களிலேயே அவரை வரதராஜன் விரட்டினார் என்று சொல்லப்படுகிறது. இவரையே இப்படி விரட்டினால், மற்றவர்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள்.

சரி, இப்போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். நித்தியானந்தா மாட்டிய போது குமுதம் மற்ற பத்திரிக்கையைவிட இதற்கு முக்கியத்துவம் கொடுத்தது எல்லோருக்கும் தெரிந்தது. ஜவஹர் மற்றும் அவரது தாயார் நித்தியானந்தாவின் பக்தர்கள். அதனால் வரதராஜன் ஜஹவரை வெறுப்பேத்த இதைச் செய்தார் என்று சொல்லுகிறார்கள்.

இதை தொடர்ந்து ஜவஹர் பழனியப்பனுக்கு ‘வேண்டபட்ட ஆள்’ என்று அவர் நினைத்த குமுதம் ஊழியர்கள் பலருக்கு டார்ச்சர் கொடுக்க துவங்கினார். கொஞ்ச நாள் முன்னால் பா.ராகவன் எழுதிய தொடர் சொக்கன் எழுதிய தொடர் இரண்டும் ரிப்போர்ட்டரில் தீடீர் என்று நிறுத்தப்பட்டது நினைவிருக்கும். அப்படி நிறுத்திய போது பல வெளியூர்களில் தொடரும் என்று இருந்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் முற்றும்!. இதுவும் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே என்று பேசிக்கொண்டனர்.

திருவேங்கிமலை சரவணன் ஜவஹர் குருப் என்று நினைத்து அவர் மீது பாலியல் குற்றசாட்டை பதிவு செய்தார் என்று சொல்லுகிறார்கள். இதற்கு அப்பறம் திருவேங்கிமலை சரவணன் வரதராஜனின் மீது பல குற்றசாட்டுக்களை பதிவு செய்தார். இது வெளியே வரவில்லை. அதனால் இன்று தன்னை வரதராஜன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக திருவேங்கிட சரவணன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் வரதராஜன் தான் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க வேறு வழியில்லாமல் இன்று ஜஹவர் கேஸ் பதிவு செய்ய இத்தனை டிராமாவும் நடந்திருக்கு. இந்த விளையாட்டில் பல கோடிப் பணம் கையாடல் நடந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

முதல்வர் இந்த வழக்கின்மீது தனி அக்கறை செலுத்துவார் என்று நம்பலாம்.

- குமுதம் ரிப்போட்

நியூஸ்

தினமலர் : நிதி முறைகேடு செய்ததாக வந்த குற்றசாட்டின் பேரில் குமுதம் வாரஇதழின் பதிப்பாசிரியர் வரதராஜன் கைது செய்யப்பட்டார்.குமுதம் வார இதழின் பதிப்பாசிரியராக இருப்பவர் வரதராஜன். இவர் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக குமுதம் இதழின் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வரதராஜன் மீது 323, 344, 341, 342, 365, 307, 25(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது விசாரித்தனர். பின்னர் வரதராஜன் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


குழுமத்தின் குழுவின் எம்.டி வரதராஜன் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குமுதம் குழுமத்தின் முன்னாள் தலைவர் ஜவஹர் பழனியப்பனுக்கும், வரதராஜனுக்கும் இடையிலான பிரச்சனையே இந்த ‘திடீர்’ நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன் குமுதம் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான சிநேகிதி இதழின் ஆசிரியர் லோகநாயகி, சக ஊழயரான திருவேங்கிட சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கே சென்று பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் அளித்துள்ளார்.

அது தொடர்பாக குமுதம் அலுவலகத்திற்கு வந்து காவல் துறையினர் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர். இன்றும் அவ்வாறு வந்த காவல் துறையினருடன் குமுதம் குழுமத் தலைவர் வரதராஜன் பேசியுள்ளார். பிறகு அவர்களோடு கீழிறங்கிவந்து புறப்படும் போதுதான் அவரை காவல் துறையினர் ஏது ஒரு காரணத்தையும் தெரிவிக்காமல் ‘அழைத்து’ச் சென்றுள்ளனர்.

இன்று தன்னை வரதராஜன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக திருவேங்கிட சரவணனை அளித்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.






Read More...

ஐபிஎல் ஜெயிக்க போவது யாரு ?

ஐபிஎல் ஜெயிக்க போவது யாரு ? விஞ்ஞான ரீதியான விளக்கம்



தற்போதுள்ள கிரஹநிலைப்படி செவ்வாய்க்கு புதனும் கேதுவும் நண்பர்கள். எனவே சென்னை அணி இந்த வருட ஐபிஎல் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேற்கண்டவை ஒரு கணக்கு. அவ்வளவுதான்.

Read More...

டாப்-10 ஐபில் 3'ல்லர் ஆல்பம்

ஐபில் பிரபலங்களின் ஆல்பம். எவ்வளவு நாளைக்கு தான் டெண்டுல்கர், தோனி, யுவராஜ் என்று ஆல்பம் தயாரிப்பார்கள். ஒரு மாறுதலுக்கு இந்த ஆல்பம்...

1. லலித் மோதி
இந்த ஆட்டங்களின் மிகப்பெரிய சூத்ரதாரி லலித் மோதி. ஐபிஎல் என்ற ஐடியாவையே இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுத்தது இவர்தான். நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் இவர். கொச்சி அணியின் பங்குதாரர்கள் பற்றி ட்விட்டரில் உளறப் போக இவரே இப்போது இமாலயச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஏற்கனவே ஜெயிலுக்கு சென்று வந்த அனுபவசாலி. பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்களும் இவருக்கு நண்பர்கள்.




2. சுனந்தா புஷ்கர்
சுனந்தா காஷ்மீரத்தைச் சேர்ந்த ஒரு அழகுக்கலை நிபுணர், தற்போது துபாயில் வசிப்பவர். என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுமளவிற்கு இவரது பெயர் ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தில் அடிபட்டது. வேர்வை சிந்தாமல் "sweat equity" என்ற ஓசி பங்குகள் இவருக்கு கிடைத்தது. எப்படி என்று கேட்க கூடாது.





3.சசி தரூர்
தனது நண்பிக்கு இலவச பங்குகள் பெற்றுத் தருவது முதல் கொச்சி அணியையே உருவாக்குவதற்கான சூத்ரதாரி என்று இவர் இவ்விவகாரத்தில் அறியப்படுகிறார். இவ்விவகாரத்தில் இவருக்கு கொலை மிரட்டல் வேறு!! இவ்விவகாரத்திலிருந்து விடுபட தனது பதவியையே விலையாகக் கொடுத்து விட்டார் இவர். அப்போதும் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே இவரது ட்விட்டர் சர்ச்சைகளால் சங்கடத்திலிருந்த காங்கிரஸிற்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைத்திருக்காது. உடனே இவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் ஒரு பொறுப்புடைய கட்சி என்று மார்தட்டிக் கொண்டது. External affairs minister ஆனால் internal affairsல் மாட்டிக்கொண்டார்.




4. சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே மத்திய அமைச்சர் ஷரத் பவாரின் மகள், சதானந்த் அவரது கணவர். இவர்கள் இருவருக்கும் ஐபிஎல்லின் சில அணிகளில் பங்கிருப்பதாகத் தகவல். அவர்களும் அதனை மறுத்தவண்ணம் இருக்கிறார்கள். இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. காரணம், அவரது பின்னணி அப்படி. ஷரத் பவார் பிசிசிஐயில் உயர் பதவி வகித்தவர், இப்போது ஐசிசியின் தலைவர் பதவியை ஏற்கவிருப்பவர். எனவே இவரது மகளுக்கு இதில் தொடர்பிருக்கிறதா என காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அவரது ஆதரவு வேறு காங்கிரஸிற்கு மத்தியிலும் மாநிலத்திலும் வேண்டியிருப்பதால், விவகாரம் முழுமையாக வெளிவருவது சற்றே சிரமம்தான். இவர்களுக்கு 10% பங்கு உண்டு என்று சொல்லுகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பார்களோ ?




5. ப்ரஃபுல் படேல், பூர்ணா படேல்

ப்ரஃபுல் படேலும் ஷரத் பவாரின் கட்சி சகா. இவரது மகள் பூர்ணா படேல், லலித் மோதிக்கு மிகவும் வேண்டியவர். லலித் மோதியின் அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறையினரின் சோதனைக்கு முன்னர் சில முக்கிய ஆவணங்களைக் கடத்திய மர்மப் பெண் என்ற விவகாரத்தில் இவருடைய பெயரும் அடிபடுகிறது. தவிர சசி தரூரிற்கு கொச்சி அணியின் ஏலம் பற்றிய விவரங்களை ரகசியமாக இவரது தந்தை மூலமாக மெயில் அனுப்பினார் என்றும் கூறப்படுகிறது, கொச்சி அணியை யாரும் எதிர்பாராத வகையில் ரந்தேவு ஸ்போர்ட்ஸ் ஏலம் பெற்றதற்கே இந்த மெயில்தான் காரணம் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. பூர்ணா பட்டேலும், சில ஐபிஎல் வீரர்களும் பயணம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சார்ட்டட் ப்ளைட் புறப்படுவதற்காக ஏர் இந்தியா விமானமே புறப்படுவது கேன்ஸல் செய்யப்படுகிறது. அந்த அளவிற்கு ப்ரஃபுல் படேலின் செல்வாக்கு பூர்ணாவிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் எங்களுக்கு எவ்வித பங்கும் இல்லை என்பது வேடிக்கை. மன்மோகன் சிங் பாவம் இவர்கள் என்ன என்ன தப்பு செய்தார்கள் என்று பிரணாப் முகர்ஜியிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறார்.




6. ஷரத் பவார்
ஐபிஎல் விவகாரங்களைப் பொறுத்தமட்டில் ஷரத் பவார் எந்த பதவியையும் வகிக்கவில்லை. லலித் மோதிதான் ஒன்மேன் ஆர்மியாகச் செயல்பட்டு வந்துள்ளார். தவிர ஷரத் பவாரின் முழு ஆதரவும் லலித்தின் பக்கம் இருந்தது. இப்பிரச்சனைகள் வெடித்தவுடனேயே லலித்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார். ஆனால் திடீரென்று எதிர்நிலை எடுத்துள்ளார். காரணம் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்விவகாரத்தில் அடிபட்டதால் சசி தரூர் பதவியிழந்தார். லலித் மோதிக்கெதிராக பல சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்து, தானும் சர்ச்சைக்குள் புக ஷரத் பவார் விரும்பியிருக்க மாட்டார். தவிர வெகு சமீபத்தில் ஐசிசி தலைவர் பதவியேற்கவிருக்கும் இந்நேரத்தில் இது தேவையிற்ற தலைவலி என்று எண்ணியிருக்கலாம்.





7. வருமானவரித்துறை
இந்தியாவைப் பொருத்தமட்டில் ஆயிரங்கள் நடமாடும் இடத்திலேயே ஊழலும், லஞ்ச லாவண்யங்களும் திளைத்திருக்கும். இங்கு ஆயிரக்கணக்கான கோடிகள் புரள்கின்றன. எனவே ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் கேட்க வேண்டியதில்லை. இந்திய அரசு வழக்கம் போல மீடியாவில் வந்த பிறகு உஷார் ஆகிவிடும். இப்போது நடத்தப்படும் வருமானவரித்துறை ரெய்டுகளும் வெறும் கண் துடைப்பா அல்லது உண்மையான நடவடிக்கையா என்பது போகப் போகத்தான் தெரியும். ஏனெனில் முந்தைய லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிபிஐயும், வருமான வரித்துறையும் சிலரின் வாயைப் பூட்டுவதற்கான மிரட்டல் கருவியாகத்தான் பயன்பட்டது. இங்கும் அப்படி சிலரின் வாயை மூடுவதற்காகப் பயன்படுத்தப்படலாம். யார் மாட்டுகிறார்கள் என்பதை பொறுத்து தகவல் வெளியே வரும்.




8. நட்சத்திரங்கள்
ஐபில் அணிகள் சிலவற்றிற்கு சில பாலிவுட் நட்சத்திரங்கள் முதலாளிகளாகவும், பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி மற்றும் ஷாருக் கான் போன்றோர் அவர்கள். இவ்வளவு ஆயிரக்கணக்கான கோடிகள் கொடுத்து ஒரு அணியை விலைக்கு வாங்க அவர்களுக்குப் பணம் எங்கிருந்து கிடைத்தது? ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஷில்பா ஷெட்டி போன்றோர்கள் அதிக பட்சமே வைத்துக் கொண்டாலும் 200 படங்களில் நடித்திருப்பர், ஷாருக் உட்பட (இந்த பட எண்ணிக்கை மிக அதிகம்). அப்படியிருக்க எவ்வாறு இவர்களுக்கு இவ்வளவு பணம் கிடைத்தது? இவர்கள் ஏதேனும் அரசியல்வாதிகளுக்கு பினாமியாக இருக்கலாமோ? அந்த பணத்திற்கெல்லாம் என்ன கணக்கு?அல்லது எல்லாம் அண்டர் கிரவுண்ட் தாதாக்களின் பணமா ? இவர்கள் எல்லோரும் மோடிக்கு சப்போர்ட் வேற செய்கிறார்கள் !




9. ஸ்ரீமான் பொதுஜனம்தான்
ஐபில் பண விவகாரம், இந்தியாவின் ஒருவருடத்திற்கான பட்ஜெட்டை விட அதிகம். இந்நிலையில் அதில் ஊழல் நடைபெறுவதிலும், அதில் அதிகாரம் பெறுவதில் நடக்கும் போட்டிகளிலும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இதில் முழுக்க முழுக்க முட்டாளாக்கப்படுவது, ஒரு போட்டியை ஒண்ணேகால் லட்சம் பெறுமான டிக்கெட் கொடுத்துப் பார்க்கும் ஸ்ரீமான் பொதுஜனம்தான். இதில் சச்சின் அடித்தார், தோனி கேட்ச் பிடித்தார் என்று டிவிட்டும் மக்களை என்ன சொல்லுவது ? பெண்கள் வேற ஐபில் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். கொடுமை!. கிரிக்கெட் பொழுது போக்கு, விளையாட்டு என்ற நிலையெல்லாம் கடந்து, கோடிகளும், சூதுகளும் புரளும் ஒரு மிகப்பெரிய வர்த்தகம் என்ற நிலையை எய்திவிட்டது.







10. நித்தியானந்தா
ஐபில் விவகாரம் சூடு பிடித்ததால் இவர் கைது விஷயம் மீடியாவில் இரண்டாம் பக்கம் சென்றுவிட்டது. பாவம் இவரையும் ஏதாவது ஒரு அணியில் சேர்த்துக்கொள்ளும் படி இட்லிவடை சிபாரிசு செய்கிறது. யார் கண்டது, இன்னும் தோண்டினால் நித்தியா கூட ஓர் அணிக்கு ஓனராக இருக்கலாம்.

Read More...

Thursday, April 22, 2010

ஐஸ்லாந்து எரிமலை

ஐஸ்லாந்து எரிமலை படங்கள்


மற்ற படங்கள் இந்த லிங்கில் இருக்கு. நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. Dont Miss it!
http://www.boston.com/bigpicture/2010/04/more_from_eyjafjallajokull.html

Read More...

ஐ.பி.எல் பற்றி துக்ளக் சோ


பண்டோராவின் பெட்டி ! - துக்ளக் தலையங்கம்


‘ஐ.பி.எல். – மத்திய அமைச்சர் சசிதரூர் – ஐ.பி.எல்.லின் சர்வாதிகாரியான லலித்மோடி’ என்ற முத்தரப்பு விவகாரம் இப்போது அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இப்படி ஒரு சர்ச்சை தோன்றியிருப்பது வியப்புக்குரியதல்ல. இத்தனை நாள் இந்த ஐ.பி.எல்.லில் பெரிய விவகாரம் தோன்றாமல் இருந்ததுதான் ஆச்சரியம்.



உலகின் மற்ற நாடுகளில் எப்படியோ – தெரியவில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில், விரைவு வருமானம் உள்ள சமாச்சாரங்களில், நேர்மைக் குறைவு பெரிய அளவில் இருக்கிறது. பண முதலீடு செய்து, பல வருடங்கள் உழைத்து, தரமான பொருளை உற்பத்தி செய்து, ஆரம்ப நஷ்டங்களைத் தாங்கி, போட்டிகளை எதிர்கொண்டு, வர்த்தகத் திறனைக் காட்டி... பின்னர் லாபத்தைக் காணக்கூடிய தொழில்கள் பல உண்டு. இவற்றில் நேர்மைப் பஞ்சம் அதிகம் இருக்காது.

சூதாட்டம் மாதிரி, முதலைப் போட்டு, உடனடி லாபம் எதிர்பார்க்கக் கூடிய வர்த்தகங்களும் உண்டு; இவற்றில் நேர்மைக்குப் பஞ்சம் அதிகம் இருக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட் இந்த இரண்டாவது ரகத்தைச் சார்ந்தது. முதலீடு அதிகமாக இருந்தாலும், அதன் பின்னர் உழைப்பு அதிகம் இல்லாமலேயே, பெரும் லாபத்தைக் காணக்கூடிய வர்த்தகமாகி இருக்கிறது – ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட்.

சினிமா எடுப்பது கூட உடனடி லாபம் தரக் கூடியதே. ஆனால், அதில் ரிஸ்க் அதிகம். இது அப்படி அல்ல. விலை கொடுக்கிறபோது ஜாக்கிரதையாக இருந்தால், விரைவிலேயே நல்ல லாபத்தைப் பார்க்க வாய்ப்புள்ள வியாபாரம் இது.

இப்படி இருப்பதால்தான், இதில் பண முதலீடு தாராளமாக நடக்கிறது. முதலீடு செய்பவர்கள் ‘கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா இன்னமும் முன்னேற வேண்டும்’ என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டவர்கள் அல்ல. சிலருக்குப் பணம் மட்டுமே குறி; சிலருக்குப் பணத்துடன், கூடவே வருகிற விளம்பரத்திலும் ஒரு கண். இப்படிப்பட்டவர்கள் சேர்ந்து நடத்துகிற ஆட்டத்தை நிர்வகிக்கிற லலித்மோடி, ஏற்கெனவே ‘பிரபலம்’ ஆனவர் என்பது, இப்போதைய செய்தி ஒன்றிலிருந்து தெரிகிறது.

‘போதை மருந்து விற்க முயற்சி, அதில் ஆயுதம் கொண்டு மிரட்டல்.... போன்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்... இரண்டு வருடம் சிறையில் இருந்தவர்...’ என்றெல்லாம் லலித்மோடியைப் பற்றி, சசிதரூரின் உதவியாளர் குற்றம் சொல்ல, அது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைகளில் மட்டும் பிரசுரமானது; ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இந்தச் செய்தியை உறுதியும் செய்திருக்கிறது. ஆனால், மற்ற பல பத்திரிகைகளில் இந்தச் செய்தி வெளியாகவில்லை. லலித் மோடியின் ‘செல்வாக்கு’ அப்படிப்பட்டது போலிருக்கிறது.

இப்போதைய விவகாரம், ஐ.பி.எல்.லில் புதிதாக ‘கொச்சி அணி’ விலைக்கு வாங்கப்பட்டது பற்றியது. இதை வாங்கிய நிறுவனம், கணிசமான அளவு பங்கை, ஒரு பெண்மணிக்குக் கொடுத்திருக்கிறது; அதாவது, அவருடைய உழைப்பிற்காக இந்தப் பரிசு. அந்தப் பெண்மணி, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூருக்கு நன்கு அறிமுகமானவர். அவருக்குப் பங்கு வரும் என்பதாலேயே, சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்தக் கொச்சி அணியைப் பெறுவதற்கு சசிதரூர் தனது அமைச்சர் பதவி செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு வந்திருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டைக் கிளப்பி விட்டவர் லலித் மோடி என்றாலும் கூட, இதில் உண்மை இருக்கக் கூடும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஒரு மத்திய அமைச்சர், ஐ.பி.எல். விஷயத்தில் தலையிடுவானேன்? ‘கொச்சிக்கு ஒரு அணி கிட்ட வேண்டும் என்பதற்காகவே நான் பேசினேன்’ என்கிற சசிதரூரின் விளக்கம், கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கிறது.

அமைச்சரின் நிலை இது என்றால், லலித்மோடியின் நிலையும் கேள்விக்குரியதாக ஆகியிருக்கிறது. கொச்சி அணியை வாங்கிய நிறுவனத்தின் விவரங்களைக் கூறியது போல, மற்ற பல அணிகளைப் பெற்ற நிறுவனங்களின் விவரங்களையும் அவர் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ‘இந்த வர்த்தகத்தில் எல்லாம், மோடி எந்த அளவிற்கு, என்ன ஆதாயத்திற்காக தலையிட்டிருக்கிறார்?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமைச்சர் சசிதரூரைப் பொறுத்தவரையில், அவர் யாருடைய ‘தத்துப் பிள்ளை’ என்று தெரியவில்லை; முக்கியமான ஒருவருடைய பலத்த ஆதரவு இல்லாமல் அவர் மந்திரி சபையில் இத்தனை நாள் தொடர்ந்திருக்க முடியாது; அவ்வப்போது எதையாவது எசகுபிசகாகப் பேசி, அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதை, தனது பொழுதுபோக்காகக் கொண்டவர், இதுவரை அமைச்சரவையில் தொடர்வது விசித்திரம். ஆனால், இந்த விவகாரத்தில் அவர் தவறு செய்திருக்கிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வேண்டும்.

அது ஒருபுறமிருக்க, அமைச்சரையே குறிவைத்துக் கொண்டு, அந்த சுவாரஸ்யத்தில் ஐ.பி.எல்.லின் லலித் மோடியைப் பற்றிக் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. ஒன்பது அணிகளை வாங்கியவர்களைப் பற்றி எதுவுமே பேசாத லலித்மோடி, கொச்சி அணியை வாங்கிய நிறுவனத்தைப் பற்றி மட்டும் கேள்விகளை எழுப்புவானேன்? அவர் விரும்பியபடி வர்த்தகம் நடக்காவிட்டால், அவர் பிரச்சனைகளை எழுப்புவாரா? அப்படி என்றால் அவர் விரும்புகிறவர்கள் எல்லாரும் வெவ்வேறு அணிகளைப் பெறுகிறபோது – அதில் இவருக்குக் கிட்டுகிற ஆதாயம் என்ன?

லலித்மோடி எடுத்து வந்துள்ள முடிவுகள் பற்றி இந்திய கிரிக்கெட் போர்ட் ஒரு விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் கூடவே, இவ்வளவு முடிச்சுகள் உள்ள ஐ.பி.எல். மேட்ச்கள் முறையாகத்தான் நடக்கின்றனவா, அல்லது முன்கூட்டியே செய்யப்பட்டுவிட்ட வர்த்தக அல்லது சூதாட்ட முடிவுகளின்படி பந்தயங்கள் நடந்து முடிகின்றனவா?

கிரேக்க புராணங்களில், பண்டோரா என்று ஒரு பெண்மணியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. மனிதர்களைப் பழி வாங்க கிரேக்க தெய்வத்தால் அனுப்பப்பட்ட பெண் அவள். முதல் பெண் சிருஷ்டி. அவளிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து, அதைத் திறந்தால் பெரும் ஆபத்து என்று கூறி அனுப்பினான் இறைவன். அவள் ஒருவனை மணந்தாள். அவன் அந்தப் பெட்டியைத் திறந்தான்.

இன்று நாம் அனுபவிக்கிற அவ்வளவு தீமைகளும், துன்பங்களும் அந்தப் பெட்டியிலிருந்து வெளியே வந்தவை. அவற்றை மீண்டும் பெட்டியில் அடைக்க முடியவில்லை. அந்தப் பெட்டி, ‘பண்டோராவின் பெட்டி’ (Pandora's Box) என்று புகழ் பெற்றது.


சரி. லலித்மோடி, சசிதரூரை மட்டம் தட்டுவதற்காக ஐ.பி.எல்.லின் பண்டோரா பெட்டியைத் திறந்து விட்டார். இந்திய கிரிக்கெட்டில் பெரும் பணம் புகுந்ததினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் அனைத்தும், இனி பொதுப் பார்வைக்கு வரட்டும். சட்டப்படி தவறுகள் நடந்துள்ளனவோ, இல்லையோ – சமூகத்தின் காதில் நிறையவே பூ சுற்றப்பட்டிருக்கிறது என்பதாவது தெரிய வரட்டுமே!

( நன்றி: துக்ளக் )


ஐபிஎல்-4ல், காதில் பூ சுற்றப்பட்டிருக்கும் இந்த சமூகமே சியர்லீடர்ஸ் ஆகும் வாய்ப்பு இருக்கிறது!

Read More...

Wednesday, April 21, 2010

முடிவல்ல ஆரம்பம் – நாடகம் – மினி விமர்சனம்

சென்ற சனிக்கிழமை, நண்பர் திருமலை ராஜன் புண்ணியத்தில் மணி ராமின் புதிய நாடகமான ‘முடிவல்ல ஆரம்பம்’ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
(இங்கு கலிபோர்னியா – கூப்பர்டினோ டீ-ஆன்சா அரங்கில்)...

நிகழ் கால அரசியலை மையமாக வைத்து நாடகம் போடுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அதுவும் மணி ராம், சில முக்கியமான கதாபாத்திரங்களுக்கு, அவர்களின் நிஜ வாழ்க்கை உண்மைப் பெயர்களையே வேறு கொடுத்து அசத்தி விட்டார். இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான துணை முதல்வர் ரோலில் நடித்து பட்டையைக் கிளப்பியதும் மணிராம் தான். 90 நிமிடம் நம்மை இருக்கையில் கட்டிப்போட்ட இந்த நாடகம் (இடைவேளை கிடையாது) ஹே ராம் படம் மாதிரி, கிளைமாக்ஸில் ஆரம்பித்து, விறுவிறுவென்று பின்னோக்கிச் சென்றது.

எனக்குத் தெரிந்த வரை, இந்த நாடகத்தில் ஒரு சிறிய குறை என்னவென்றால், துணை முதல்வரின் அள்ளக்கைகள் சிலர் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் தான். மற்றபடி, மணி ராமின் ‘அவதார்ஸ்’ நாடகக் குழு, மீண்டும் ஒரு முறை தன் தொழில் முறை நேர்த்தியை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ள நாடகம் இது.

இந்த நாடகம், இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், அரங்கேறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. அப்படித் தப்பித் தவறி அரங்கேற்றினால், உங்கள் இல்லத்துக்கு, ஆட்டோவில் உருட்டுக்கட்டைகள் மற்றும் சர்வாயுதபாணிகளாய், பல அழையா விருந்தாளிகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Any way, மணி ராம் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய Hats off !

இந்த நாடகம் பற்றிய விரிவான விமர்சனத்தை நீங்கள் அடுத்த மாத ‘தென்றல்’ இதழில் எதிர்பார்க்கலாம்.

The new poster for Mudivalla Arambam. Set in a political backdrop, it is an intense drama in which the lives of the common people intertwine with the powers that be.

Chief Minister Ilavendan’s Interview…….


(கூட்டாஞ்சோறு வலைப்பதிவில் வந்த விமர்சனம், நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் இங்கே. நன்றி: http://koottanchoru.wordpress.com )

Read More...

Tuesday, April 20, 2010

மேனேஜ்மெண்ட் குரு சி.கே.பிரஹலாத்

உலகின் மிக முக்கியமான நிர்வாகச் சிந்தனையாளர்களில் ஒருவரான சி.கே.பிரஹலாத் உடல் நலக்குறைவு காரணமாக, அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 68.

சி.கே.பிரஹலாத் தனது கடைசி காலத்தில் மனைவி காயத்ரி, மகன் முரளி, மகள் தீபாவுடன் வாழ்ந்து வந்தார்.

கோயம்புத்தூர் கிருஷ்ணராவ் பிரஹலாத். உலக அளவில் நிர்வாகச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவர். 1941 ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னை - லயோலா கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் படித்த அகமதாபாத் ஐ.ஐ.எம்.-மில் நிர்வாகவியல் படித்தார். பின்னர், பாஸ்டனிலுள்ள ஹாவர்ட் பிஸினஸ் ஸ்கூலில்1975 ஆம் ஆண்டு டி.பி.ஏ. (Doctor of Business Administration) பட்டம் பெற்றார்.

பின்னர் இந்தியா திரும்பியவர், அகமதாபாத் ஐ.ஐ.எம்.-மில் 1976-77 வரை பேராசிரியராக பணியாற்றினார். மிச்சிகனில் உள்ள ரோஸ் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் ஸ்கூலில் நிர்வாகவியல் பேராசிரியராக பல ஆண்டுகாலமாக பணியாற்றி வந்தார்.

நிர்வாகவியல் குறித்து பயனுள்ள புத்தகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். நிர்வாகவியல் குறித்த இவரது கருத்தரங்குகளும், உரைகளும் ஆர்வத்தைத் தூண்டவல்லவை.

கடந்த 2009 -ம் ஆண்டில் பிரவேசி பாரதிய சாம்னம் விருதையும், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பதம பூஷன் விருதையும் பெற்றவர். கடந்த ஆண்டு 'தி டைம்ஸ்' இதழ் வெளியிட்ட உலகின் 50 பிஸினஸ் சிந்தனையாளர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றது சிறப்புக்குரியது.

மேனேஜ்மெண்ட் குரு...

உலகின் மிக முக்கியமான நிர்வாகச் சிந்தனையாளர்களில் முதலிடத்தைப் பெற்றவர் சி.கே.பிரஹலாத். உலக அளவில் உள்ள நிர்வாகப் பேராசிரியர்கள் இவரை 'மேனேஜ்மென்ட் குரு' என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. வியாபாரம் என்பதற்கு புது இலக்கை நிர்ணயித்தவர் இவர்தான். அவரது கருத்தின்படி, வியாபாரம் என்பது பணம் படைத்த சிலரை மட்டுமே மனதில் கொண்டு செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. பெரும்பாலான ஏழை மக்களைக் குறிவைத்து நடத்தப்படுவதாக இருக்கவேண்டும். 'பாட்டம் ஆஃப் த பிரமிட்' என்று இதைக் குறிப்பிடுகிறார்.

இந்த நோக்கில் பிஸினஸ் நிறுவனங்கள் யோசிக்க ஆரம்பித்த பிறகு, விற்பனை பல மடங்காகப் பெருகியது. ஒரு கிலோ பாக்கெட் வெண்ணெய்க்குப் பதிலாக 100 கிராம் பாக்கெட் வெண்ணெய் மார்க்கெட்டுக்கு வருவதும் 20 லட்ச ரூபாய் காருக்குப் பதிலாக ஒரு லட்ச ரூபாய் நானோ கார் விற்பனைக்கு வருவதும் பிரஹலாத்தின் புதிய சிந்தனையால் ஏற்பட்ட தாக்கம்தான்.

இந்தியாவில் பஸ் போகாத இடத்துக்குக்கூட செல்போன்கள் நிறுவனங்கள் செல்ல முடிந்ததற்குக் காரணம் பிரஹலாத்தின் புதிய சிந்தனையே!
( நன்றி: விகடன் )

கொஞ்சம் தொடர்புடைய பதிவு

Read More...

மதி கார்ட்டூன்ஸ் !



விவரங்களுக்கு இங்கே செல்லவும்

மதியின் கார்ட்டூன்ஸுக்கு நான் அடிமை. அவரை கார்ட்டூன் வழியாக தான் பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் கலர்கலராக அவர் கார்ட்டூன் புத்தகங்கள் வெளிவந்தது. புத்தகக் கண்காட்சியில் உடனே வாங்கினேன், அட்டை படத்தில் பார்த்த போது தான் கொஞ்சம் அதிர்ச்சி. மதி சீரியல் நடிகர் மாதிரி அழகாக இருந்தார்.

நான் கட்டாக புத்தகங்கள் வாங்கிய சமயம் புத்தகக் கண்காட்சியில் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தார், அவரிடம் கையெழுத்தைக் கேட்க கூச்சமாகவும் பயமாகவும் இருந்ததால் வந்துவிட்டேன்.

இட்லிவடையில் அவர் கார்ட்டூன் 'சைடு பாரில்' வருவதை பார்த்திருப்பீர்கள். ஒரு நாள் ஒரு பெரிய மனுஷர் "நீங்க மதியின் கார்ட்டூன்ஸை போட அவர் பர்மிஷன் கொடுத்தாரா ?, நீங்க இப்படி போடுவது நியாயமா ?" என்றார். நான் "மதியே சொல்லட்டும் எடுத்துவிடுகிறேன்" என்றேன். இன்றுவரை மதி எடுத்துவிடுங்கள் என்று சொல்லவில்லை ( ஏன் என்றால் அவர் இட்லிவடை பார்ப்பதில்லை :-)

ஆர்.கே.லக்ஷ்மன் அவர்களின் கார்ட்டூன் புத்தகம் ஒன்று வந்திருக்கு இந்தியா 1947-2000 என்று நினைக்கிறேன். அது மாதிரி மதி ஒரு தொகுப்பு கொண்டு வர வேண்டும், நிச்சயம் அது ஒரு வரலாற்று புத்தகமாக இருக்கும்.

மதியின் கார்ட்டூன் புத்தக விளம்பரம் இட்லிவடையில் வருவது எனக்கு சந்தோஷம். யார் கண்டது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இட்லிவடையாக அவரிடம் இந்த புத்தகத்தை நேரில் வாங்கினாலும் வாங்குவேன் :-)

அன்புடன்,
இட்லிவடை

Read More...

Monday, April 19, 2010

எச்சரிக்கை


பொதுவாக மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகும் என்பதும் அந்தக் காலக் கட்டத்தில் ரொம்பக் கஷ்டம் என்பதும் மக்கள் அறிந்ததே. இந்த வருஷம் மே 4-அன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

அனால், அதுக்கு முன்னாடியே ஏப்ரல் 30-அன்றே மக்களுக்கு கஷ்டம் ஆரம்பம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு கஷ்டம் வந்தாலே கஷ்டம். இந்த வருஷம் ரெண்டு.

மக்கள் ஜாக்ரதையா இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.




படத்துக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லை :-)

Read More...

மண்டேனா ஒன்று - 19/4/2010


இது தவறான முன்னுதாரணம்

பொதுவாகவே எந்தவொரு சேவையானாலும் தனியார் நிறுவனங்களுடன் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டியிடுவது சற்றே சிரமமான விஷயமாகும். காரணம் தனியார் நிறுவனங்களைப் போன்று பொதுத்துறை நிறுவனங்கள் கணக்கு வழக்கின்றி விளம்பரத்திற்காக செலவழிப்பது கடினம். காரணம் பொதுத்துறை நிறுவனங்களைப் பொருத்தமட்டில் குறைந்த செலவு அதிக லாபம் என்பதே அவர்களது தாத்பர்யம். ஆனால் தனியார் நிறுவனங்கள் விளம்பர மற்றும் இதர செலவீனங்களைப் பொருட்படுத்துவதில்லை. இப்போது நாம் பார்க்கப்போவது எப்படி ஒரு பொதுத்துறை நிறுவனம் தங்களது வர்த்தகத்திற்காக ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை.





பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் தற்போது தங்களது செல்பேசி சேவைப் பயன்பாட்டை மக்களிடம் அதிகரிக்க, இலவச சிம் கார்டுகளை பெட்டிக் கடைகள் மூலமாக கோவில் சுண்டல் போல் விநியோகித்து வருகிறது. ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஒரு முகவரி அத்தாட்சி நகல் கொடுத்தால் முப்பத்து மூன்று ரூபாய்க்கு பேசிக் கொள்வதற்கான இலவச சிம் கார்டை அளிக்கிறது. முன்பு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுபோல் இலவச சிம் கார்டுகளை வழங்கி வந்தனர். அப்போதே இந்த யுக்தி பலவாறான விமர்சனத்திற்குள்ளானது. காரணம், இவ்வாறு கணக்கு வழக்கின்றியும், அதிக கெடுபிடிகள் இல்லாமலும் விநியோகிக்கப்படும் சிம் கார்டுகள் சமூக விரோதிகள் மூலம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்று விமர்சிக்கப்பட்டது. இது உண்மையும் ஆகும். இதற்கு பல கடந்த கால உதாரணங்கள் இருக்கின்றன.

மேலும் இதுபோன்ற வகையில் வழங்கப்படும் கார்டுகளை ஒருவர் எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கிறது. அதாவது ஒருவர் பத்து புகைப்படங்கள் மற்றும் பத்து முகவரி அத்தாட்சி நகல் கொடுத்தால் அவர் பத்து சிம் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இது எவ்வளவு விபரீதத்திற்கு இட்டுச் செல்லும்? ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுக்களையே அச்சுப் பிசகாமல் அடிப்பவர்களுக்கு போலி முகவரி ஆவணம் தயாரிப்பது எம்மாத்திரம்? இம்மாதிரி ப்ரீ பெய்டு இணைப்புகள் சமூக விரோதிகளால் தவறாகப் பயன்படுத்தபடுகிறது என்பதால் காஷ்மீரில் ப்ரீ பெய்டு இணைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற தனியார் நிறுவனங்கள் இவ்வாறு செய்வதையே தடுக்க வேண்டிய மத்திய அரசு எதற்காக தன்னுடைய பொதுத்துறை நிறுவனம் மூலமாகவே இவ்வாறு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது? இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்னவென்று அரசிற்குத் தெரியாதா?

இது குறித்து ஒரு மொபைல் கடை உரிமையாளரிடம் கேட்டபோது அவர் கூறிய தகவல்கள் வேடிக்கையாக இருந்தன. அவர் கூறியதாவது, " இந்த கார்டுல முப்பத்து மூணு ரூபாய் டாக் டைம் இருக்கறதாலதான் இத பெரும்பாலானவங்க அதிக எண்ணிக்கைல வாங்கறாங்க. பேசி முடிச்சவுடனே அதை தூக்கி போட்டுட்டு வேற ப்ரீ கார்டு வாங்கிட்டு போறாங்க. மத்தபடி இவங்க சேவை நல்லா இருக்குங்கறதுக்காக இதை வாங்கறவங்க யாரும் இல்லை. ஒருத்தருக்கு இத்தனை கார்டுதான் குடுக்கலாம்கற வரைமுறை எல்லாம் எதுவும் இல்லாததால எங்களால குடுக்க முடியாதுன்னும் சொல்ல முடியல. மொத்தத்துல இலவச கார்டுகள்னால பி எஸ் என் எல்லுக்கும் நஷ்டம்தான், தவிர இப்படி எல்லா நிறுவனங்களுமே இலவச கார்டு குடுக்கறதனால, பணம் குடுத்து வாங்க வேண்டிய கார்டெல்லாம் தேங்கி போகிறது என்று அங்கலாய்த்தார்.

எது எப்படியோ? ஏற்கனவே நம் நாட்டில் தீவிரவாத சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை. இதில் இன்னமும் நாம் தீவிரவாதிகளுக்கு வசதி செய்து கொடுக்கும் நோக்கில் எவ்வித உறுதியான ஆவணங்களும், சான்றுகளும் இல்லாமல் சிம் கார்டுகளை சுண்டல் விநியோகம் செய்கிறோம். அதுவும் ஒரு பொதுத்துறை நிறுவனம். இது நல்லதற்கல்ல.

Read More...

Sunday, April 18, 2010

லக்ஷண இலச்சிணையும், அவலக்ஷண ஜால்ராக்களும்.

ஜால்ரா என்றால் ஜோடியாக-இரண்டு இருக்க வேண்டும். இந்த வாரம் கண்ணில்பட்ட ஜால்ரா, விடுதலை சிறுத்தைகள்-கி.வீரமணி காம்பினேஷன். (கி - என்பது கி கொடுத்தால் ஆடும் பொம்மை என்றும் பொருள் கொள்ளலாம் போல).
சில நாட்கள் முன்னாடி போடப்பட்ட பதிவு மக்களுக்கு நினைவிருக்கலாம். இந்தக் கடித்ததில் தமிழக அரசின் கோபுரச்சின்னம் மாற்றப்படலாம் என்ற செய்தி குறித்து எழுதியிருந்தேன். அது நடந்துவிடும் போல இருக்கு.



தமிழக அரசு மதச்சார்பிண்மையை உறுதி செய்யும் விதமாக தமிழக அரசின் இலச்சிணையை மாற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதே போல புது சட்டமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் விடுதலைச் சிறுத்தைகள் ஏதோ தங்களுக்கு உதித்த ஐடியா போல இந்த கோரிக்கையை வைத்துள்ளார்கள். நிச்சயம் கலைஞர் நீங்க கேட்பது போல கேளுங்க நாங்க செய்வதைப் போல செய்கிறோம் என்று சொல்லியிருக்க 100% வாய்ப்பு உள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அரசு சின்னம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டுமாம். இவ்வளவு வருஷம் கழித்து தமிழ்ப் புத்தாண்டு போல மேலும் ஒரு ஞானோதயம்.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை எப்படிப் பார்க்கவேண்டுமோ அதே போலத்தான் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரமும். அதைக் கோயிலாகப் பார்ப்பதை விட்டுவிட்டு தமிழ சின்னமாகப் பார்ப்பது தான் சரி. கோயில்கள் உடனடியாக தமிழகத்தை உணர்த்தும். அந்தச் சின்னத்தில் அசோகரின் சிங்கச் சின்னமும், தேசியக்கொடியும் இருக்கிறது. பாவம் இது எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. கோயில்கள் எல்லாம் வரலாற்றுச் சின்னம், ஆனால் தன் பெயர் வரலாற்றில் வரவேண்டும்/ நிலைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இப்படி எல்லாம் தோழமை கட்சிகளிடம் சொல்லிக்கொடுத்துப் பேச வைக்கிறார் முதல்வர்.

செம்மொழி மாநாடு வருகிறது அல்லவா? அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?
தமிழக அரசின் முத்திரையில் இருக்கும் கோபுரத்துக்கு பதிலாக அய்யன் திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கவேண்டும் என்பது இவர்களின் புதுக் கோரிக்கை. திருவள்ளுவரை யாரும் பார்த்தது கிடையாது, முன்பு பஸ்களிலும், பாலச்சந்தர் படத்திலும் உட்கார்ந்துக்கொண்டு இருந்தார். ஆனால் கன்னியாகுமரியில் நிற்க வைக்கப்பட்டுள்ளார். பாவம். ஏன் என்றால் அப்போதுதானே அவர் பெரிதாகத் தெரிவார்? கலைஞருக்கும் புகழ் கிடைக்கும்? வாழும் வள்ளுவன் புகழ் பெற நின்று கொண்டு எழுத வைக்கப்பட்ட வள்ளுவன் புகழ் வாழ்க!
சரி இரண்டு நாட்களுக்கு முன் பேசியதை பாருங்கள்


"...ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர்.அன்பு போன்ற எம்.ஜி.ஆர்., மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு வந்ததே என்ற வரையில் மகிழ்ச்சி".


இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.


இது 100வது குறள், இதனுடைய விளக்கம் "இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளைஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்" இது கருணாநிதி சொன்ன விளக்கம் தாம். சில மாதங்கள் முன்பு இவர் யாருடைய அறிக்கைக்கும் பதில் அறிக்கை விடமாட்டேன் என்று வசனம் பேசினார். இப்போது இப்படி ஒரு தரம் தாழ்ந்த பேச்சு. இந்த அழகில் இவர் திருவள்ளுவர் சின்னம் வைக்கப் பாடுபடுகிறார். நல்ல கூத்து.

சரி ஜெயலலிதா இப்படி செய்தார் என்றால் நீங்கள் என்ன செய்தீர்கள் ? தேர்தல் பிரசாரத்தில் எம்.ஜி.ஆர் போய் சேர்ந்துவிட்டார், ஆகவே எனக்கு வோட்டு போட்டு முதல்வர் ஆக்குங்கள், அப்படி ஒரு வேளை எம்.ஜி.ஆர் திரும்பி வந்தால் முதல்வர் பதவியை திரும்ப அவரிடமே கொடுத்துவிடுகிறேன் என்று வோட்டு கேட்டதை சுலபமாக மறந்துவிட்டீர்கள்.

85 வயதிலும் அண்ணா சொன்ன கடமை உணர்வுள்ள/ கண்ணியமான/கட்டுப்பாடான பேச்சு. பலே!


முரசொலி 9ஆம் தேதி வெளியிட்ட பட்டிக்காடும் பட்டணமும் என்ற பகுதியில்

பட்டிக்காடு:- "ஏன்தம்பி; தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் உள்ள கோபுரத்துக்குப் பதிலாக திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் - என்ற கோரிக்கை எப்படி?"

பட்டணம்:- "வரவேற்கத் தகுந்த நல்ல யோசனைதான். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியைச் சார்ந்த ஒருவர் - இதற்கான தீர்மானம் கொண்டுவந்து - எல்லாக் கட்சியினரும் ஒருமனதாய் நிறைவேற்றினால் சாத்தியமாகக்கூடிய கோரிக்கைதான்!"
என்கிறார்கள்.


ஆனால் தமிழக அரசு அலுவலகங்களில் இந்த மாற்றதுக்கு முன்பே திருவள்ளுவர் சிலையைக்கொண்ட சின்னம் வந்துவிட்டது. (பார்க்க ஸ்டாலின் படம்).
எல்லாம் நல்லாவே நடக்கிறது, கடைசியில் "வாய்மையே வெல்லும்!"


மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறை போல், கிருஸ்துவ அறநிலையத்துறை, முஸ்லிம் அறநிலையத்துறை என்ற இரண்டு புது துறைகளை புதிய சட்டமன்றத்தில் அறிவிக்கட்டும். வரலாற்று நிகழ்வாக இருக்கும் இதை செய்ய அவருக்கு மனமும் தைரியமும் கொடுக்க எல்லாம் வல்ல மதசார்பற்ற இறைவனைப் பிராத்திப்போம்.

Read More...

Saturday, April 17, 2010

ராவணன்

Read More...

Friday, April 16, 2010

க ஒ கு, ஆ கு க இ

முன் குறிப்பு: க ஒ கு. ஆ கு க இ = கழகம் ஒரு குடும்பம், ஆனால் குடும்பம் கழகம் இல்லை

தி.மு.க. எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றி கட்சி தலைவரை தவிர மற்றவர்கள் பேட்டி அளிப்பது ஏற்புடையது அல்ல" இது நேற்று கலைஞர் வெளியிட்ட அறிக்கை. இதை எச்சரிக்கை என்றும் சொல்லலாம்.

நிற்க.

நேற்று துக்ளக் வெளியிட்ட அட்டை படத்துக்கும் இந்த எச்சரிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் அவர் கொடுத்த அறிக்கை என்னை போன்றவர்களுக்கு, தி.மு.க.வினருக்கும், மு.க.வின் அனுதாபிகளுக்கும் இது எச்சரிக்கை. அந்த விவரம் கீழே...



அப்படி என்ன தான் சொல்லியிருக்கார் கலைஞர் ? என்று பார்க்கும் முன் அழகிரி என்ன சொல்லியிருக்கார் என்று பார்த்துவிடலாம்.

ஆரம்பம் இங்கே
"அண்ணாவுக்குப் பிறகு அப்போதும் இப்போதும் எப்போதும் முதல்வர் கருணாநிதி மட்டுமே எனக்குத் தலைவர்; தலைவர் கருணாநிதிக்குப் பிறகு, தி.மு.க.வில் யாரையும் நான் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்' இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியைக் கேட்டபோது, "எனக்குப் பிறகு எந்த ஆண்டு முதல்... என்பதே எனக்குத் தெரியாது; அழகிரியிடமே கேளுங்கள்' என்றார்.

முதலவர் விடவில்லை "நான் நினைத்ததை அப்படியே செய்து முடிப்பவர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்' என்று முதல்வர் கருணாநிதி ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து வார இதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி அண்மையில் அளித்த பேட்டியில் "அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் உரசல் எதுவும் இல்லை; அப்படி அவர்கள் உரசிக் கொண்டால் அதனால் ஏற்படும் காயமும் அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்துக்குத்தான்' என்று கூறியுள்ளார்.

விடுவாரா அழகிரி விமானநிலையத்தில் பேட்டி கொடுத்தார்

கேள்வி:- தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிடுவீர்களா?

பதில்:- எங்கள் கட்சியான தி.மு.க. ஜனநாயக கட்சி. கட்சி தலைவர் பதவிக்கு போட்டி இருந்தால் நிச்சயம் நான் போட்டியிடுவேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கேள்வி:- மு.க.ஸ்டாலினை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவீர்களா?

பதில்:- மு.க.ஸ்டாலின் தற்போது துணை முதல்-அமைச்சராக இருக்கிறார். தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டால், அந்த பதவிக்கு நான் போட்டியிடுவேன்.

கேள்வி:- மு.க.ஸ்டாலினை உங்கள் தலைவராக (கட்சித்தலைவராக) ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- தற்போதைய சூழ்நிலையில் இந்த கேள்வி எழவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், தெம்புடனும் இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்கத் தேவை இல்லை.


கடைசியாக "மனச்சாட்சியின்படி எனது கருத்தை தெரிவித்து இருக்கிறேன். எதை சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஜனநாயக முறையில் தேர்தல் (தலைவர் பதவிக்கு) வந்தால், நானும் போட்டியிடுவேன்" என்றார்

ஸ்டாலின் தன் பங்கிற்கு ஏதாவது சொல்ல வேண்டாமா ? ஒரு பத்திரிக்கைக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், "எனக்கு அதிரடி அரசியல் தெரியாது' என்று கூறியிருந்தார். அதற்கு மு.க.அழகிரி "அதுபற்றி ஸ்டாலினிடமே கேளுங்கள்' என்றார்

கடைசியாக "'என் தந்தையும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்பினால், எனது மத்திய அமைச்சர் பதவியை கனிமொழிக்காக விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன். ஆனால், கனிமொழிக்காக பதவியில் இருந்து விலகுவேன் என யார் சொன்னது?" என்று அழகிரி நேற்று முன் தினம் கூறியுள்ளார்.

அப்பா இரண்டு மகன்கள் தொலைப்பேசியிலே அல்லது நேரில் பேசாமல் பத்திரிக்கை இவ்வளவையும் பேசியுள்ளார்கள். ஆனால் கலைஞர் நேற்று விடுத்த அறிக்கை எப்படி ஆரம்பிக்கிறது ? ( இங்கெ சில பகுதிகள் தான் தந்துள்ளேன் மீது பகுதியை நீங்களே எங்காவது படித்துக்கொள்ளுங்கள் )

அரசியல் சம்மந்தமான அல்லது அவரவர் சொந்தக்கருத்துகள் பற்றி சர்ச்சைகள் குறித்து பத்திரிகையாளர்களுடன் சந்திப்புகளில் சொன்னவை, சொல்லதவை என்று தங்கள், தங்களது எண்ணங்களுக்கேற்ப செய்திகளை வெளியிடுவதும், அதனால் தேவையற்ற குழப்பங்கள் தூண்டி விடப்படுவதும் - கடந்த காலங்களில் மட்டுமல்லாமல் நிகழ் காலத்திலும் நடப்பவைகளாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.


அப்பா, அண்ணன், தம்பி என்று இந்த மூவருக்கும் நடக்கும் இந்த பேச்சு போட்டியில் பாவம் அண்ணாவும் பெரியாரும் வரவில்லை என்றால் கழக கொள்கை என்ன ஆவது ?

"அதனால்தான் தந்தை பெரியார் அவர்களால் ''என் திராவிட ஜீவரத்தினங்களே'' என்று அழைக்கப் பெற்றவர்களும், அண்ணா அவர்களால், ''ஒரு தாயின் வயிறு இடம் தராத காரணத்தால் பல தாய்களின் வயிற்றில் உதித்த சகோதர்கள் நாம்'' என்று உணர்ச்சி பொங்க குறிக்கப்பட்டவர்களுமான உடன்பிறப்புக்களின் பாசறையாம்

இந்தக் கழகமும் - கழகத்தை வழி நடத்துவோரும் - முன்னணி தளகர்த்தர்களும் - படை நடத்தும் பாங்கறிந்தோரும் - எழுத்தாளர், பேச்சாளர், செயல்வீரர் என்று எண்ணறிந்த அண்ணன் தம்பியரும் - அக்காள் தங்கைகளும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே உறுதியானதும், இறுதியானதுமான இந்த அறிக்கையை நாள் வெளியிட நேர்ந்துள்ளது.


மேலே பாருங்க அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. இப்ப சொல்லுங்க கழகம் ஒரு குடும்பம் தானே ?

சரி கடைசியாக என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள்
"வெறும் வாயை மெல்லுவோருக்கு கொஞ்சம் அவல் கொடுப்பதைப் போல'' நமது கழகத்தினர் யாராயினும், எவராயினும், எந்த அமைப்பில், பொறுப்பில் இருப்பவராயினும் அல்லது அவரது குடும்பத்தினராயினும் கட்சித் தொடர்புடைய செய்திகளை கட்சியின் தலைமை தான் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடப்படும் கருத்துகளை செயல்படுத்துவது மட்டும் தான் தங்கள் பணி எனக் கொண்டு அனைவரும் தொண்டாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


அழகிரியிடம் 1ரூபாய்க்கு ஒரு போன் போட்டு சொல்ல வேண்டியதை இரண்டு பக்க அறிக்கையாக நமக்கு சொல்லியிருக்கார். ஏன் என்றால் ஸ்டாலினை போல கலைஞருக்கு அதிரடி அரசியல் தெரியாது!

Read More...

Thursday, April 15, 2010

ஐ.பி.எல் மோடி வித்தை - பத்ரி சேஷாத்ரி


ஐ.பி.எல் என்னும் பணம் புரளும் கிரிக்கெட் அமைப்பில் சேறும் சகதியும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றதன.

இதுவரை 8 பிராஞ்சைஸ் அமைப்புகள் அனுமதிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய்கள் கொடுத்து வாங்கப்பட்டன. ரிலையன்ஸ் (முகேஷ் அம்பானி), இந்தியா சிமெண்ட்ஸ், டெக்கான் க்ரோனிகிள், சாராய விஜய் மல்லையா, நடிகர் ஷா ருக் கான், ஜி.எம்.ஆர் என்னும் தில்லி விமான நிலையத்தைப் பராமரிக்கும் நிறுவனம், பாம்பே டையிங் நிறுவன நுஸ்லி வாடியாவின் மகன் நெஸ் வாடியாவும் நடிகை பிரீத்தி ஜிந்தாவும் இணைந்து - என்று ஏழு பேர். இத்துடன் ராஜஸ்தான் அணியை மனோஜ் பதாலே என்பவர் தலைமையில் சிலர் வாங்கினர். பின்னர் நடிகை ஷில்பா ஷெட்டி கொஞ்சம் பணம் கொடுத்து குறிப்பிட்ட அளவு பங்குகளை வாங்கிக்கொண்டார்.


ஐ.பி.எல் என்பது கிரிக்கெட் மட்டும் அல்ல. இந்திய கிரிக்கெட்டில் எக்கச்சக்கப் பணம் கொட்டிக் கிடக்கிறது என்றாலும், ஐ.பி.எல் என்பது அதற்கெல்லாம் ஒருபடி மேலே என்று போய்விட்டது. இங்கே அணிகளை வாங்கலாம், விற்கலாம். வீரர்களை வாங்கலாம், விற்கலாம். ஒவ்வொரு அணியின் உரிமையாளரும் தனியாக எக்கச்சக்கமான விளம்பர டீல்களைப் போட்டுக்கொள்ளலாம். ஆட்டம் நடக்கும் இடத்தில் சாராயம் பரிமாறலாம். அரையாடைப் பெண்களை ஆடவிட்டு ரசிகர்கள் நரம்புகளுக்கு முறுக்கேற்றலாம். அவ்வப்போது விளம்பர இடைவேளைக்கு இடையில் ஓரிரு பந்துகளும் போடப்பட்டு கிரிக்கெட்டும் நடக்கும். வியர்வை, வேகம், விளையாட்டு, வெற்றி, இசை, ஆட்டம், உடல், பணம், வேட்கை, பொய், சண்டை ஆகியவற்றுடன் இப்போது ஊழலும் மிரட்டலும் சேர்ந்துகொண்டுள்ளன.

ஏற்கெனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் 2 அணிகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் ராந்தேவு ஸ்போர்ட்ஸ் (தமிழ் பத்திரிகைகள் ரெண்டஸ்வுஸ் என்பார்கள்!) என்ற நிறுவனம் ஒரு அணியை வென்றது. மற்றொரு அணி சஹாராவுக்குச் சென்றது. ராந்தேவு அணி வெற்றிபெற மத்திய அமைச்சர், சர்ச்சைப் பிரியர் சஷி தரூர் பெரும்பாடு பட்டார். கேட்டால், எல்லாம் என் மாநிலம் கேரளாவுக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் வரவேண்டும் என்ற காரணத்தால்தான் என்றார்.

லலித் மோடி என்பவர்தான் (மோதி என்கிறார்கள் வடவர்கள். ஆனால் நாம் மோடி என்றே சொல்வோம்) ஐ.பி.எல் கிரிக்கெட் ஐடியாவை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கொண்டுவந்து அவர்களை அதை ஏற்கச் செய்து இப்போது பணம் கொழித்துக் கொடுப்பவர். ஆனால் அவரது தாய்வீடாகிய ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சியைப் பிடித்ததும் முதல்வர் அஷோக் கெலாட்டின் முதல் வேலை என்ன என்று நினைக்கிறீர்கள்? ராஜஸ்தான் கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி லலித் மோடியை மாநில கிரிக்கெட்டிலிருந்து தோற்கடித்ததுத் துரத்தியதுதான். ஆனாலும் ஐ.பி.எல் பதவியைக் கெட்டியாகப் பிடித்துவைத்துள்ளார் மோடி. ஏனெனில் அவரை விட்டால் ஐ.பி.எல் பற்றிய முழு விவரமும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள வெறு யாருக்கும் சரியாகத் தெரியாது.

மோடி, பதாலே இருவருக்குமான உறவு, மனோஜ் பதாலே யார், இவர் இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர்பாக என்ன செய்துவந்தார் போன்ற பல விஷயங்களுக்குள் போனால் இந்தக் கட்டுரையை முடிக்கமுடியாது. எனவே அதனை எடிட் செய்துவிட்டு மேலே தொடர்வோம்.

சஷி தரூர் உதவியுடன் ராந்தேவு கொச்சி அணியைப் பெற்றாலும், லலித் மோடி அவர்களுக்குக் கெட்டது செய்ய முடிவெடுத்துள்ளார் என்று தெரிகிறது. ராந்தேவு தரப்பினர் சொல்வது இதுதான்: “எங்களை அணியை விற்றுவிட்டு ஓடிவிட்டால் 50 மில்லியன் டாலர் தருவதாகச் சொன்னார் மோடி. இந்த அணியை வேறு யாருக்கோ கொடுக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். நாங்கள் மாட்டேன் என்றதும், விட்டேனா பார் கொச்சியை என்றார். மிரட்டினார். தொல்லை கொடுத்தார். இத்யாதி, இத்யாதி.”

உடனே சஷி தரூர் கொச்சி அணி சார்பில் முறையிட்டுள்ளார் போலும். ஆனால் லலித் மோடி சொல்கிறார்: “என்னை ஒரு மத்திய அமைச்சர் மிரட்டினார். ராந்தேவு ஸ்போர்ட்ஸ் யார் யார் கையில் இருக்கிறது தெரியுமா? சஷி தரூருடைய நெருங்கிய நண்பியான சுனந்தா புஷ்கர் என்பவருக்கு ராந்தேவு ஸ்போர்ட்ஸில் சும்மானாச்சிக்கும் அதாவது ஃப்ரீயாக நிறைய பங்குகளைக் கொடுத்துள்ளனர். அது ஏன்?”

சஷி தரூர், தனக்கும் ராந்தேவுக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதும் இல்லை, தான் எந்த வகையிலும் பணம் சம்பாதிக்கப்போவதில்லை என்கிறார். ஆனால் அவர் சுனந்தா புஷ்கரை மூன்றாவது திருமணம் செய்யப்போகிறார் என்று ஒரு வதந்தி. தினம் தினம் பேப்பரை எடுத்தால் புதிது புதிதாக “எக்ஸ் ஃபேக்டர்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அரைகுறை ஆடைப் பெண்மணி யாரையாவது காண்பிக்கிறார்கள். யாருக்கோ லலித் மோடி விசா கொடுக்காதே என்று சொல்ல, சஷி தரூர் கொடுத்தார் என்று ஒரு செய்தி!

ஐ.பி.எல் என்பதே நாசமாகப் போகட்டும் என்று சொல்வது ஒரு பக்கம். என் கட்சி அது அல்ல. எந்த ஒரு புது முறை புகுத்தப்பட்டாலும் அது சரியாக ரெகுலேட் செய்யப்படவேண்டும். ஃபேர்பிளே இருக்கவேண்டும். பொய், திருட்டு, புனைசுருட்டு, ஏமாற்றல் இல்லாமல் இருக்கவேண்டும்.

1. சஷி தரூருக்கும் சுனந்தா புஷ்கருக்கும் என்ன உறவு என்பது முக்கியமில்லை. ஆனால் சஷி தரூர் நெருங்கி உறவாடி கொச்சிக்கு ஐ.பி.எல் அணி கிடைக்கக் காரணமானவர் என்றால் சுனந்தா என்ற அவருடைய நண்பருக்கு ஃப்ரீ பங்குகள் கிடைப்பது புரைப்பரைட்டி ஆகாது. சொல்லப்போனால் இந்த ஃப்ரீ பங்குகள் என்பதே கொஞ்சம் ‘பஜனை’ மேட்டராக உள்ளது. ஐ.பி.எல் அணிகளின் குறைந்தபட்ச விலையே 70 மில்லியன் டாலர் என்று இருக்கும்போது, ‘இந்தா வைத்துக்கொள் சும்மா. எனக்கு மார்க்கெட்டிங் பண்ண உதவு’ என்று சொல்வது அபத்தமாகத் தெரிகிறது. தால் மே குச் காலா ஜரூர் ஹை!

2. சஷி தரூர் வெளிப்படையாக ராந்தேவு ஸ்போர்ட்ஸுக்கு ஆதரவாக ஈடுபட்டதில் தவறில்லை. ஆனால் சுனந்தா மேட்டரில் கொஞ்சம் கோட்டை விட்டுள்ளார்.

3. லலித் மோடி மிகவும் டேஞ்சரஸ் ஆன ஆள். இவ்வளவுதான் நான் வெளிப்படையாகச் சொல்லமுடியும். மற்றவை எல்லாம் ஆதாரமற்ற வதந்திகள் என்றாகிவிடும். ஐ.பி.எல் மட்டுமல்ல, கிரிக்கெட் ஆணையம் தொடர்பான எதிலுமே இந்த ஆசாமிக்குப் பதவி கொடுக்கக்கூடாது. ஆசாமி வாயைத் திறந்தால் கெட்ட பேசுதான். அமெரிக்கையாகப் பேசவே தெரியாது. பாலிவுட் ஃபிகர்களுடன் ஜல்சா செய்ய விரும்புகிறார் என்றால் இவர் பேசாமல் பாலிவுட் படங்கள் எடுக்கப் போகலாம்.


4. பி.சி.சி.ஐ என்பது ஒரு சாக்கடை. பதவு வெறி பிடித்தவர்கள், விவசாயம் எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு கிரிக்கெட் பவார்தான் முக்கியம் என்பவர்கள், ஏற்கெனவே சீரழித்துவிட்டார்கள் கிரிக்கெட்டை. காரணம் ஒரு பக்கம் எக்கச்சக்கமான பணம். சரியான நிர்வாகிகள் கிடையாது. எனவே ஊழல் மலிந்த அரசியல்வாதிகளும் பவர்புரோக்கர்களும் மட்டும்தான் அங்கே இருப்பார்கள்.

இப்போது என்ன மாற்றம் நிகழலாம்?

* அரசால் நேரடியாக ஒன்றும் செய்யமுடியாது. அதற்கான ‘தில்’ அரசிடம் இல்லை. பாஜகவிடமும் இல்லை, காங்கிரஸிடமும் இல்லை.
* நிலைமை இன்னமும் மோசம் ஆகும். அதன் பின்னர் பி.சி.சி.ஐ உள்ளிருந்தே மாற்றங்கள் ஏற்படும். இப்போது இருக்கும் சில கிழ அரசியல்வாதிகள் மண்டையைப் போடுவதும் அதற்கு உதவலாம்.

* பாலிவுட் ஆசாமிகள் நிறையப் பணம் தோற்கவேண்டும். அவர்களை கையைச் சுட்டுக்கொண்டால், பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓடிவிடுவார்கள். அதற்கு எல்லாம் வல்ல பிராட்மேனை வேண்டிக்கொள்ளுங்கள்.


- பத்ரி


Read More...