பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 28, 2009

சொல்வனத்தில் ஒரு சுகானுபவம்

டிசம்பர் இசை சீசன் சென்னையைத் தொடர்ந்து, பிரபல வலைத்தளங்களான இட்லிவடை மற்றும் பல வலைத்தளங்களிலும் களை கட்டி வருகிறது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய தேதியில் கர்நாடக இசைக்கு ஓர் அறிமுகம் தேவையில்லையென்றாலும், இசை ஆர்வலர்கள் தங்களுடைய ஆர்வத்தை மேலும் ரீசார்ஜ் செய்து கொள்ளவும், கர்நாடக இசையை ரசிப்பதின் ஆரம்ப கட்டத்திலுள்ளவர்களுக்கு புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் இது போன்ற கட்டுரைகள் பேருதவியாக இருக்கும். இதனைத் தொடர்ந்து சொல்வனத்தின் இசைச் சிறப்பிதழ் மிகவும் அமோகம். சொல்வனம் போன்ற வலைத்தளங்களுக்கு அறிமுகமில்லாத என்னைப் போன்ற இணையப் பாமரர்களுக்கும் அதனை விருந்தாக்கிய இட்லிவடைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியைத் தெரிவித்தே ஆக வேண்டும். இட்லிவடை இதனை வெளியிடாமல் போயிருந்தால், நிச்சயம் ஒரு நல்ல கட்டுரைத் தொகுப்பை படிக்க இழந்த துர்பாக்ய நிலைக்கு ஆளாகியிருப்பேன்.

அதிலும் குறிப்பாக கர்நாடக இசையின் மேதா விலாஸங்களான திருமதி. டி.கே.பட்டம்மாள், கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு புதிய முகவரி கொடுத்த உயர்திரு. அரியக்குடி ஸ்ரீ. ராமானுஜ ஐயங்கார் போன்றோர்களைப் பற்றிய (யும்) கட்டுரைகள் மிகவும் அபாரம். உண்மையாகச் சொன்னால் இந்த இயத்திரத்தனமான சமூகத்தில், அதுவும் இணைய தளத்தில் இதுபோன்றதொரு கட்டுரைத் தொகுப்பை எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் அருமை. யதேச்சையான நிகழ்வாக, இன்று மதியம் பொதிகைத் தொலைக்காட்சியில், திரு. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பற்றிய ஒரு டாகுமெண்டரி ஒளிபரப்பினார்கள். அவருடைய இளம் பிராயம் முதல், அவர் எவ்வாறு இசைக்கே தனது வாழ்வை அர்பணித்து இன்றைய தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்று காட்டும் வகையில் சுமார் ஒரு மணிநேர நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அவருடைய சிஷ்யர்கள் முதல் அபிமானிகள் வரை பலரை பேட்டி கண்டு அரியக்குடியுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அரியக்குடியின் குருகுலவாசிகளான கே.வி.நாராயண ஸ்வாமி, திரு. ராஜமய்யர் போன்றோர்களும், அவருடைய சம காலத்திய வித்வான்களான திரு. செம்மங்குடி போன்றோர்களும் த்த்தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது, ஒரு கணம் அவர்களுடைய காலத்திற்கே நம்மை இட்டுச் சென்றது என்று சொன்னால் அது மிகையாகாது (பேட்டிகள் எல்லாமே பழைய வீடியோ பதிவுகள், தவிர பேட்டியளித்தோரில் பலர் இன்று இல்லை).

இடையிடையே அரியக்குடி இசையமைத்த திருப்பாவை பாடல்கள் மற்றும் அவர் கச்சேரிகளில் பாடிய கீர்த்தனைகளை சிறிது சிறிதாக ஒளிபரப்பியது மிக அற்புதமானதாக இருந்த்து. இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதைப் பொருத்தவரையில் பொதிகைக்கு நிகர் அதுவே. தவிர, இட்லிவடை மற்றும் சொல்வனம் போன்ற தளங்களிலிருந்து மென் மேலும் இதுபோன்ற நல்ல கட்டுரைத் தொகுப்புகளை மிகுந்த பிரயாசையுடன் எதிர்பார்க்கிறோம்.

தேசிகனின் கல்யாணி ஆலாபனை மிகவும் அருமை. சீசன் ஸ்பெஷலாக, சீசன் சிறுகதை என அசத்திவிட்டார். கல்யாணியில் சங்கீதம் கற்றுக் கொண்டது பற்றியதான சரித்திர நிரவல் வயிறு வலிக்க வைத்து விட்டது.

இசை ரசிகர்களுக்கும் மற்ற அனைவருக்கும் இட்லிவடையின் சார்பாகவும், என் சார்பாகவும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

- யதிராஜ்

6 Comments:

கௌதமன் said...

நானும் நிறை மனத்துடன் ஆமோதிக்கிறேன். கர்நாடக சங்கீதம் என்பது மிகவும் உயர்ந்த விஷயம். நம் முன்னோர்கள் எல்லோரும் கேட்டு இரசித்தவற்றை நாமும் கேட்கிறோம் என்ற எண்ணமே சந்தோஷமாக இருக்கிறது.

கானகம் said...

நல்ல பதிவு.. சொல்வனம் போன்ற இதழ்களை வாசித்து அதனை விமர்சிப்பதன் மூலம் இன்னும் பத்துப்பேரை ஒரு நல்ல வலை இதழைப் படிக்க வைக்கலாம்.

எனது பதிவு இங்கே..

http://jeyakumar-srinivasan.blogspot.com/2009/12/blog-post_28.html

vethanarayanan said...

I liked the speech by GNB. It is like a carnatic music manual. The article on pattammal is good. I guess no one really write about her in the year of her passing. Thanks for that. This is also a year of MLV's 80th birthday.

முகுந்தன் said...

தேசிகனின் சிறுகதையின் அதிகப்படியாகாத மெல்லிய நகைச்சுவையும், பேப்பர் கட்டிங் உத்தியும் கதையைத் தூக்கி நிறுத்துகின்றன. அதிலும் 'showed his skills in elaborating Kalyani' என்ற வரி மிகவும் நுண்மையான நகைச்சுவையைக் கொண்டது. சுசீலா ராமன் பற்றிய அகிலன் கட்டுரையும் என்னை மிகவும் கவர்ந்தது. எனக்குக் கர்நாடக சங்கீதத்தில் ஆழமான பரிச்சயம் இல்லாதபடியால் பட்டம்மாள், அரியக்குடியைக் காட்டிலும் ராமன்ராஜா, சுகா, அ.முத்துலிங்கம் போன்றோரின் படைப்புகளே பெரிதும் கவர்ந்தன.

பாரதி மணி said...

யதிராஜின் பதிவு சொல்வனம் இசைமலருக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தது.

கடுமையாக உழைத்த ஆசிரியர்குழுவுக்கும் சேதுபதி அருணாசலத்துக்கும் என் நன்றி. திரும்பத்திரும்ப படிக்கத்தூண்டுகிறது.

Ragu said...

Pattammal article was wonderful. Especially the last part moved me to tears. Great!