பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 24, 2009

சுப்புடுவும் நானும் - கடுகு

நண்பர் கடுகு ( இட்லிவடைக்கு போட்டியாக ) புது வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். அதன் முகவரி கடைசியில் சொல்லுகிறேன்...

'சுப்புடுவும் நானும்' என்ற கட்டுரையை என் பார்வைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு அனுப்பினார். உடனே நான் என்ன செய்வேன் என்று உங்களுக்கு தெரியும் அவருக்கு தெரியாது. இதோ அந்த கட்டுரையை இங்கே போட்டாச்சு. ( அவருக்கு என் நன்றி :-) )

ஏன் இந்த கட்டுரையை அவர் வலைப்பதிவில் போடவில்லை என்று நீங்கள் கேட்கலாம், இட்லிவடையில் போட்டால் என்ன அவர் வலைப்பதிவில் போட்டால் என்ன எல்லாம் ஒன்று தான் :-)

கட்டுரை கீழே....

சுப்புடுவும் நானும் - கடுகு

சுப்புடுவுக்கு சங்கீதத்தில் எவ்வளவு ஆர்வமோ அவ்வளவு ஆர்வம் தமிழ் பத்திரிகைகளின் மீதும் உண்டு. அதிலும்,குமுதம் இதழின் மீது அபார மோகம்.

நான் 1963’ல் டில்லி சென்ற பிறகு குமுதத்தில் தொடர்ந்து கட்டுரைகள், பேட்டிகள் என்று எழுத ஆரம்பித்தேன். நான் டில்லிக்குப் புதுசு. என்பதால் அவரைச் சந்திக்கக் கூட சந்தர்ப்பம் வரவில்லை. சுப்புடுவைப் பற்றி யாரிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை.ஆனால் அவர் என்னைக் "கண்டுபிடிக்க" முயற்சி செய்திருக்கிறார்,. அவருடைய உறவினர் சென்னை கிருஷ்ணகான சபா துணைச் செயலர் வெங்கடேஸ்வரனை விசாரித்திருக்கிறார் என்பது பின்னால் தெரிந்தது.. நான் டில்லி செல்லுமுன் வெங்கடேஸ்வரனும் நானும் சென்னை ஜி.பி.ஓ.வில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.

அவர் சுப்புடுவிடம் பேச்சுவாக்கில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ”அப்படியா? நல்லதாப் போச்சு, அவருக்குக் கடிதம் எழுது. என்னை வந்து பார்க்கச் சொல்,” என்று கேட்டுக் கொண்டார்.

வெங்கடேஸ்வரனிடமிருந்து எனக்குக் கடிதம் வந்ததும் சுப்புடுவிற்கு ஃபோன் செய்து விட்டுப் போய்ப் பார்த்தேன். வேடிக்கை என்ன தெரியுமா? அவர் அலுவலகமும் (நிதி அமைச்சகம்) என் அலுவலகமும் (பி. அண்டி. டைரக்டரேட்) வெகு அருகில் இருந்தன. நடுவே ஒரே ஒரு கட்டடம் தான்!

குமுதம் எழுத்தாளன் என்பதால் எனக்கு தடபுடல் வரவேற்பு. நிறைய பேசினார். "இதோ பாருமய்யா.... உமக்கு மேட்டருக்கு நிறைய ஆலோசனைகளைத் தருகிறேன். உசிதமானவற்றை நீர் எழுதும்" என்றார். கிட்டதட்ட தினந்தோறும் அவரைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டேன்.

டில்லியில் பல முக்கியப் பிரமுகர்களை அவருக்கு நன்றாகத் தெரியும். பல கிசு கிசுக்களும் தெரியும்!. அவரைச் சந்திக்கப் பலர் அடிக்கடி வருவார்கள். அவர்கள் பேசுவதை நான் கேட்டுக் கோண்டிருப்பேன்.
.
ஒரு நாள், "அதிருக்கட்டும் ,,, உங்களுக்கு நாடகம் நடிப்பதில் ஆர்வமுண்டா" என்றார்.
”உண்டு சார். .. டைரக்டர் ஸ்ரீதர் என் கிளாஸ்மேட். பள்ளிக்கூட நாட்களில் நான் ஸ்ரீதரின் குரூப். பிறகு ஜி பி.ஓ.-விலும் நிறைய நாடகங்கள் நடித்திருக்கிறேன். சோ, கே.பாலச்சந்தர் எழுதிய நாடகங்களைப் போட்டிருக்கிறேன் என்று சொன்னதும், என் ரேட்டிங் ரொம்ப உயர்ந்து போய்விட்டது. காரணம் சுப்புடுவின் அபிமானம் மிக்க கலைஞர்கள் அவர்கள்!

டில்லி சௌத் இந்தியன் தியேட்டர் நாடகங்களை சுப்புடு தான் டைரக்ட் செய்வார். தியேட்டர் நண்பர்களிடம் ’ஆஹா ஓஹோ’ என்று என்னை அறிமுகம் செய்து வைத்ததுடன் நாடகத்தில் ஒரு நகைச்சுவை கதா பாத்திரத்தையும் கொடுத்தார். சௌத் இந்தியன் தியேட்டர் மூலமாக எனக்கு கிடைத்த நண்பர்கள், டில்லி கணேஷ், விமல் பாலு, டில்லி குமார், பாரதி மணி,, டி.டி. சுந்தரராஜன், ஆடிட்டர் கிருஷ்ணகுமார் ( பின்னால் மத்திய நிதி அமைச்சகத்தின் ஸ்டேட் மினிஸ்டர் ஆனவர் இவர்) என்று பலர். பின்னால் “பணம் பேசுகிற்து” என்ற தலைப்பில் நான் எழுதிய நாடகத்தை அவர் டைரக்ட் செய்தார்; சௌத் இந்தியன் தியேட்டர் மேடை ஏற்றியது

சுப்புடு அவ்வப்போது "ஏன்யா இவரைப் பற்றி எழுதேன், அவரைப் பற்றி எழுதேன்" என்பார். சிலவற்றில் தாட்சிண்யம் லேசாக இருக்கும். தாட்சிண்யத்துக்கு எழுத எனக்குப் பிடிக்காது. மேலும் குமுதம் எஸ்.ஏ.பி.அவர்களின் கூர்ந்த அறிவுத்திறன் எப்படியாவது கண்டுபிடித்துவிடும். என்பது மட்டுமல்ல, அத்துடன் எனக்குப் பெரிதாக ஒரு "வணக்கம்" போட்டு விடுவார் என்பதும் தெரியும். இருந்தாலும் பல நல்ல ஆலோசனைகளை சுப்புடு எனக்குச் சொல்லியிருக்கிறார். பல சமயங்களில் எனக்குப் பலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

சுப்புடுவுக்கு கர்நாடக இசையின் மேல் அபார ஈடுபாடு உண்டு. கர்நாடக இசையில் நான் பெரிய பூஜ்யம் (இன்னும் பலவற்றிலும் பூஜ்யம்தான். அதை எல்லாம் விவரித்தால் கட்டுரை திசை மாறிவிடும்.) நான் பூஜ்யம் என்று தெரிந்தும் என்னிடம் அவர் மணிக்கணக்கில் பேசி இருக்கிறார். புரியாவிட்டாலும் நான் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

டில்லியில் என் அலுவலகத்தின் பின்பக்கக் கட்டடம் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் அலுவலகம். அங்கு தான் பிரபல யு. என். ஐ. கேன்டீன் இருந்தது. தினந்தோறும் அங்கு சுப்புடு வருவார். சுற்றி 10 , 15 பேர் நின்றுகொண்டு அவருடன் அரட்டை அடிப்போம். கலகலப்புக்குக் குறைவே இருக்காது. சென்னையிலிருந்து வரும் கலைஞர்கள் அவரைப் பார்க்க வருவார்கள். மணி இரண்டு ஆனதும் சபை கலையும். என்னிடம் "வாய்யா ... சர்தார் படேல் சிலைக்குக் கீழ் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசலாம்" என்பார்.

பார்லிமென்ட் வீதியில் சர்தார் படேல் சிலை இருக்குமிடம் ஒரு பெரிய டிராபிக் ஐலண்ட்.. அதன் பீடத்தில், உட்கார வசதியாக மேடைகள் உண்டு. அதில் சுப்புடுவும் நானும் உட்கார்ந்து கொண்டு (”அரே பைய்யா , பசாஸ் பைஸேகோ மூங்க்பலீ தே தோ” என்று கூப்பிட்டு வேர்க்கடலை வாங்குவார்.) வேர்க்கடலையோடு சேர்த்து, பல இசைக் கலைஞர்களையும் டில்லி பிரமுகர்களையும் 10,20 நிமிஷங்கள் மெல்லுவோம். சுமார் 15 வருஷம் அரட்டை விவர்ங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை!

இந்த காலகட்டத்தில் அவர் சென்னைக்கு டிசம்பர் சீசனில் வந்து விமரிசனங்கள் எழுத ஆரம்பித்தார். விகடனிலும் எழுதினார்.

குமுதத்தில் தன் பெயர் வரவேண்டும், தன் படம் வரவேண்டும் தன்னைப் பற்றி ஒரு குறிப்பாவது வரவேண்டும் என்ற பேரவா அவருக்கு உண்டு. எல்லாவற்றிற்கு மேலும் எஸ்.ஏ.பி அவர்களைப் பார்த்துப் பேசவும் பயங்கர ஆசை. (நான் சென்னை வந்தபோதெல்லாம் எஸ் ஏ. பி அவர்களைப் பார்த்துவிட்டுப் போவேன். அந்த சந்திப்பைப் பற்றிய விவரங்களை அவ்ரிடம் சொல்வதுண்டு.) பின்னால் அவர் படம், கட்டுரை எல்லாம் குமுத்தில் வந்தன.

ஒரு சமயம் டிசம்பரில் அவர் சென்னை வந்த சமயம் நானும் சென்னை வந்திருந்தேன்.. "சுப்புடுவைக் கதிருக்கு எழுதச் சொல்லுங்களேன்" என்றார் சாவி.

”ஏற்கனவே விகடனில் எழுதுகிறார். கதிரிலும் எழுதுவது சரியாக இருக்காது. என்பார். கச்சேரிகளின் ஹைலைட்ஸ்களை துணுக்காக எழுதச் சொல்லலாம் விமரிசனங்களாக எழுதினால் சில சமயம் மிக மிக நீண்ட கட்டுரைகளாக எழுதி விடுகிறார்” என்றேன். “ நீங்களே அவரைக் கேட்டு எழுதி விடுங்களேன்” என்று சாவி சொன்னார். சுப்புடு டில்லி திரும்பியதும் அவர் சொன்ன தகவல்களை எழுதி அனுப்பினேன். யார் பெயரும் போடாமல் கட்டுரைகள் பிரசுரமாயின. அவைகளுக்கு நல்ல வரவேற்பு. கிடைத்தது.

பின்னால் சாவி அவரை முழுமையாகக் கபளீகரம் செய்து கொண்டார். கதிரில் அவரே எழுதினார். டில்லியிலிருந்து கட்டுரைகளை அனுப்புமுன் எனக்குக் காட்டுவார். ஏதாவது திருத்தம் சொன்னால் “நீயே அதை எழுதி விடு: என்பார்.(ஏதோ சுப்புடுவுக்காக நான்தான் விமரிசன்ம் எழுதினேன் என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். என் பங்கு ஒரு விழுக்காடு தான்!)

ஹார்மோனியம் வாசிப்பதில் அவர் மன்னன். டில்லியில் பல நடன நிகழ்ச்சிகளுக்கு இவர் ஹார்மோனியம் வாசித்திருக்கிறார். யார் வெளிநாடு போனாலும் “ யமஹா கீ போர்ட் வாங்கி வரும்படி கேட்பார். அந்த காலத்தில் வாங்கி வருவது சற்று கஷ்டமான் காரியம். டாலர் பஞ்சம். கஸ்டம்ஸ் கெடுபிடி. ஆகவே எல்லாரும் சாக்லேட்தான் வாங்கி வருவார்கள். அவர் காலமாவதற்குச் சில வருஷங்களுக்கு முன்பு ஒன்றை வாங்கி விட்டார்.

* * * * * *
அவர் நோய்வாய்ப் பட்டிருந்த சமயம். ஏதோ ஒரு பத்திரிகையில் சுப்புடுவின் உடல் நிலை பற்றி செய்தி வந்திருந்தது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் அவர்கள், செய்தியைப் பார்த்தும், சுப்புடுவைப் பார்க்க அவர் வீட்டுக்கே போய் விட்டார். காலனிவாசிகளுக்கு ஒரே வியப்பு!

கலாமிடம் சுப்புடு சொன்னாரம்:”நீங்கள் என்னை வந்து பார்த்ததுக்கு மிக்க நனறி... உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். நான் காலமானதும். ராஷ்டிரபதி பவன் மொகல் கார்டனிலிருந்து ஒரு ரோஜாப்பூவை எடுத்து வந்து என் உடல் மீது நீங்கள் வைக்க வேண்டும்.”

அதன்படியே, சுப்புடு காலமானத் தகவல் கிடைத்தும், கலாம் அவர்கள் ரோஜாப் பூவுடன் வந்தார்.

சந்தேகமில்லாமல் சுப்புடு ஒரு அசாதாரண விமரிசகர்தான்!
சந்தேகமில்லாமல் கலாம் அவர்கள் ஒரு அசாதாரண குடியரசுத் தலவர்தான்!

சந்தேகமில்லாமல் இட்லிவடை அதிர்ஷ்டம் செய்த வலைப்பதிவு தான்!

கடுகு வலைப்பதிவு முகவரி

23 Comments:

பெசொவி said...

பெரிய மனிதர்களைப் பற்றி பெரிய மனிதர்கள் எழுதுவது மிக அபூர்வம்...இட்லிவடை கொடுத்து வைத்திருக்கிறது, நானும்தான்.

பெசொவி said...

//குமுதத்தில் தன் பெயர் வரவேண்டும், தன் படம் வரவேண்டும் தன்னைப் பற்றி ஒரு குறிப்பாவது வரவேண்டும் என்ற பேரவா அவருக்கு உண்டு.//

பின்னாளில் குமுதத்தின் ஒரு இதழைத் தயாரிக்க அனுமதித்ததன் மூலம் எஸ்.ஏ.பி. இந்த அவாவை நிறைவேற்றி விட்டார்.

சுடுதண்ணி said...

//நண்பர் "கடுகு" ( இட்லிவடைக்கு போட்டியாக ) புது வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். அதன் முகவரி கடைசியில் சொல்லுகிறேன்...//

முதல் வரியிலேயே வலைப்பதிவின் சுட்டியைக் கொடுத்து (hyperlink) விட்டு, கடைசியில் சொல்லுகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.. முதல் வரியில் உள்ள வலைப்பதிவிற்கானச் சுட்டியை நீக்கி விடவும்..

IdlyVadai said...

//முதல் வரியிலேயே வலைப்பதிவின் சுட்டியைக் கொடுத்து (hyperlink) விட்டு, கடைசியில் சொல்லுகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்..//

முதலும் கடைசியுமா சொல்றேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் :-)

Anonymous said...

நனறாக இருக்கிறது. நிறைய விஷயங்களை எழுதாமல் விட்டிருக்கிறார் என்பது என் யூகம்....

blogpaandi said...

சுவையான தகவல்கள்.

blogpaandi said...

சுவையான தகவல்கள்.
இட்லிவடை , கடுகு இரண்டு வலை பதிவுகளின் டெம்ப்ளேட்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறது.
குமுதத்தில் வருவதை போல ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க சொல்லலாம்.

ரிஷபன்Meena said...

சொந்த ஊரிலிருந்து தொலை தூரம் சென்ற பின்பு தான் ஊரின் மீதும் அதன் பழக்க வழக்கங்கள்,மொழியின் மீதும் அதீத ஈர்ப்பு ஏற்படும் போல.

டெல்லியில் செட்டில் ஆன பல தமிழர்கள் இலக்கிய,நாடக உலகில் சொல்லிக் கொள்கிற அளவுக்கு புகழ் பெற்றதும் இதானால் தானோ.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் கடையிலும் சரக்கு வந்திருக்கிறது.
http://rishaban.blogspot.com

வேதநாராயணன் said...

Apt post for டிசம்பர் மியூசிக் சீசன், Something very difficult to find anywhere. இட்லிவடை, உங்கள் ஸ்டோர் ரூமில் ஏகப்பட்ட topics வைத்திருப்பீர் போலும் .

கானகம் said...

மிக நன்றாய் இருந்தது கடுகுவின் “சுப்புடுவும், நானும்” அப்படியே வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு கடுகு அவர்களுக்கு, வலைப்பதிவு மூலமாக.. நிச்சயம் வலையுலகில் ஒரு கலக்கு கலக்குவார்...

பதிந்த இ.வ.க்கு நன்றி

Prakash G.R. said...

இட்லிவடை = கடுகு.

எல்லாரும் கேட்டுகோங்க. நான் தான் மொதல்ல இத கண்டுபுடிச்சது ;-)

Anonymous said...

// டில்லியில் என் அலுவலகத்தின் பின்பக்கக் கட்டடம் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் அலுவலகம். அங்கு தான் பிரபல யு. என். ஐ. கேன்டீன் இருந்தது. தினந்தோறும் அங்கு சுப்புடு வருவார். சுற்றி 10 , 15 பேர் நின்றுகொண்டு அவருடன் அரட்டை அடிப்போம். கலகலப்புக்குக் குறைவே இருக்காது. சென்னையிலிருந்து வரும் கலைஞர்கள் அவரைப் பார்க்க வருவார்கள். மணி இரண்டு ஆனதும் சபை கலையும். என்னிடம் "வாய்யா ... சர்தார் படேல் சிலைக்குக் கீழ் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசலாம்" என்பார்.//

ஆபிஸ் வேலையத் தவிர மீதி எல்லாத்தையும் செஞ்சிருக்காங்க போலத் தெரியுது. ம். கொடுத்து வச்சவங்க. இங்க நெட்டி முறியுது....

- கோபால்சாமி

சைவகொத்துப்பரோட்டா said...

ரசிக்கும்படியான மலரும் நினைவுகள்.

Paleo God said...

சந்தேகமில்லாமல் சுப்புடு ஒரு அசாதாரண விமரிசகர்தான்!
சந்தேகமில்லாமல் கலாம் அவர்கள் ஒரு அசாதாரண குடியரசுத் தலவர்தான்!

சந்தேகமில்லாமல் இட்லிவடை அதிர்ஷ்டம் செய்த வலைப்பதிவு தான்!//

YES SIR YES SIR THREE BAGS FULL..:))
GREAT POST..THANK YOU iv.

யதிராஜ சம்பத் குமார் said...

சுப்புடுவினுடனான நினைவுகளை இட்லிவடை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு கடுகிற்கு நன்றிகள் பல.

பாரதி மணி said...

ரசித்துப்படித்தேன். தில்லி நினைவுகள் மறக்கமுடியாதவை. கடுகு, இட்லிவடைக்கு நன்றி!

எல்லோருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகள்!

பாரதி மணி

IdlyVadai said...

மற்ற கடுகு எழுதியது சைடு பாரில் இருக்கு. பார்த்துக்கொள்ளுங்கள்!

கௌதமன் said...

கடைசிப் பாராக்களைப் படிக்கும்பொழுது மெய்சிலிர்த்தேன்.
மஞ்சள் கமெண்ட் உட்பட - மொத்தம் நான்கு முறை.
சுப்புடு, கலாம், கடுகு - இட்லிவடை எல்லோருக்கும் நன்றி.

Anonymous said...

முன் குறிப்பு: இட்லி வடையில். “.............நானும்” என்ற தலைப்பில் ஒரு சில கட்டுரைகளை எழுதுவேன் என்று நான் தெரியாத்தனமாக முன்பு குறிப்பிட்டு இருந்தேன்..அப்போது கடுகு BLOG ஆரம்பிக்கப்படவில்லை சும்மா பார்வைக்கு “ சுப்புடுவும் நானும்” கட்டுரையை. அனுப்பிருந்தேன் உடனே போட்டு விட்டார்கள். அவர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் மோத என்னால் முடியாது..அதை விடச் சுலபமான காரியம், பின்-லேடனைக் கண்டு பிடிப்பது! மேலும், இட்லி வடை ஒரு BIG BROTHER! ஆகவே இட்லி வடையிடம் சரண்டர் ஆகி விட்டேன். அப்புறம் ஒன்று. அவர்களுக்கு ஏற்கனவே தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குத்து (ஹிட்) கிடைக்கிறது . ஆகவே நான் குத்து! கொடுத்தாலும் அது அவர்களுக்கு ஒரு FLEA BITEதான்!


Idly Vadai... You tooo Cheat.... :(

Regards
Ranga

Anonymous said...

ஏன் இந்த கட்டுரையை அவர் வலைப்பதிவில் போடவில்லை என்று நீங்கள் கேட்கலாம், இட்லிவடையில் போட்டால் என்ன அவர் வலைப்பதிவில் போட்டால் என்ன எல்லாம் ஒன்று தான் :-)


He has planned to put it in his blog. Before that you put it...
It is ok.. please do not do this again....

(-!-) said...

//IdlyVadai said...
"மற்ற கடுகு எழுதியது" சைடு பாரில் இருக்கு. பார்த்துக்கொள்ளுங்கள்!
///

இட்லி வடை தமிழ்ல கொஞ்சம் வீக்!!!

"கடுகு எழுதிய மற்ற பதிவுகள் link" சைடு பாரில் இருக்கு. பார்த்துக்கொள்ளுங்கள்.

:>

படுக்காளி said...

கடுகு -

இலக்கியத்தில் நிறைய பேருக்கு கடுகை பிடிக்கும். வள்ளுவர், ஔவையார், இன்னும் பல. பழமொழிக்கும் பிடிக்கும். சிறுத்தாலும் காரம் குறையாது எனும்

இ.வ. வுக்கும் எங்களுக்கும் அப்படியே....

தெளிந்த நடை, எளிய சொற்கள், பிரமாதம்.

கடுகு கல கலக்குது.
தாளிசம் வெடிக்குது.

பொடிப்பையன் said...

arumaiyana malarum ninaivuhal..nandri idly vadai