இந்த வாரத்திலிருந்து நேசமுடன் இதழ் இட்லிவடையில் வருகிறது.
இடைத்தேர்தல்: சில பாடங்கள்
நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்கள், நாம் புரிந்துகொள்ளவும் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவும் சில செய்திகளைத் தந்திருக்கின்றன. பணம் விளையாடியது, கறிச்சோறு போட்டார்கள் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் இரண்டு பெரிய கட்சிகளின் மேலும் சொல்லப்பட்டாலும் இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. தேர்தல்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில் எல்லாம், மக்களுக்கு சலுகைகள் கொடுப்பதும் வாக்காளர்களை ஈர்க்க முயற்சிப்பதும் நடந்துவருகின்றன. இந்தியாவில் பொதுத் தேர்தல் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த வகை கவனிப்புகள் இருந்திருக்கின்றன. இதையெல்லாம் தவறு என்றோ சரியென்றோ வாதிட முடியுமா என்று தெரியவில்லை.
1. இடைத்தேர்தலில், பா.ம.க. பங்கேற்கவில்லை. தம் தொண்டர்களை, 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தும்படி, அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டு இருந்தார். வந்தவாசி தொகுதியில் பா.ம.க.வினரின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கே முப்பது பேர் மட்டுமே 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஒன்று, மக்களுக்கு 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கவேண்டும். அல்லது, பூத்களில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அந்த வாய்ப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது, 49 ஓ பற்றித் தெரிந்தும், மக்கள் தம் ஓட்டுக்களை வீணாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.
ராமதாஸ் தம் கட்சிக்காரர்களை 49 ஓவைப் பயன்படுத்தச் சொன்னபிறகும் இதுதான் நிலைமை என்றால், எவ்வளவு தொண்டர்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது. தமிழக அரசியலில் தம்மை முக்கிய கட்சியாகக் கருதும் பா.ம.க., எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கவேண்டும்? ஒரு கருத்தை கட்சித் தலைவர் சொன்னால், அதன் தொண்டர்கள் அதை அப்படியே சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா? இங்கே நடந்தாற்போல் தெரியவில்லை. சொந்த பலத்தை விடக் கூட்டணி பலத்திலேயே இத்தனை ஆண்டுகள் அரசியல் நடத்தியிருக்கிறது பா.ம.க. என்று சொல்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வந்தவாசி இடைத்தேர்தல் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
2. புதிய சூறாவளியாகக் கிளம்பிய கேப்டன் விஜய்காந்த்தின் வேட்பாளர்கள், இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கவில்லை. வந்தவாசியில் 7063 வாக்குகளும், திருச்செந்தூரில் 4186 வாக்குகளும் மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, 2006 பொதுத் தேர்தலில், வந்தவாசியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த சிவசண்முகம், 9096 வாக்குகளையும் திருச்செந்தூர் தொகுதியில் கணேசன் 3756 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இரண்டு தொகுதிகளிலும் 75 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கிறது. அதிமுகவின் ஓட்டுகளை விஜய்காந்த் பிரிக்கிறார் என்று தியரி உண்டு. இன்னொரு தியரி, இளைஞர்கள் அவர் பின்னால் திரள்கிறார்கள் என்பது. இரண்டுமே இங்கே நடைபெற்றார் போல் தெரியவில்லை.
3. இரண்டு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயித்திருக்கிறார்கள். பொதுவாக 60, 65 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றால், மக்கள் தீர்மானத்தோடு வாக்களிக்க முன்வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். திருச்செந்தூரில் 82 சதவிகிதம், வந்தவாசியில் 79 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில், அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) 67.8 சதவிகித வாக்கும், கமலக்கண்ணன் (வந்தவாசி) 59.3 சதவிகித வாக்கும் பெற்றிருக்கிறார்கள். வாக்காளர்கள் வாங்கப்பட்டார்கள், பணம் புழங்கியது என்றெல்லாம் பேசுவது இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் அபத்தமாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே மக்கள் ஆர்வத்தோடு வாக்களிக்காவிட்டால், நிச்சயம் இவ்வளவு அபரிமிதமான வாக்குகள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் விவரமானவர்கள். அவர்கள் தங்களுக்கு எது சரியோ அதை உணர்ந்தே வாக்களித்திருக்கின்றனர். அவர்களுடைய முடிவை, தீர்மானத்தைக் குறை சொல்லுவது, பூனை கண்ணை மூடிக்கொண்ட கதைதான்.
4. என் மனத்திருப்திக்கு முக்கிய காரணம், மக்கள் பெருமளவில் வெளியே வந்து வாக்களித்திருப்பதுதான். திருச்செந்தூரில் உள்ள மொத்த வாக்காளர்கள் :1,40,150. வாக்களித்தவர்கள்: 1,10,931. வந்தவாசியில் உள்ள மொத்த வாக்காளர்கள்: 1,58,210. வாக்களித்தவர்கள்:1,32,750. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இன்னும் அரசியல் மேலும், அரசாங்கத்தின் மேலும் ஆட்சியாளர்கள் மேலும் நம்பிக்கை இருக்கிறது. இந்த சிஸ்டத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது. பெருநகரங்களைப் போலல்லாமல், இவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டிருப்பதே கவனிக்கத்தக்க அம்சம். பெருநகரவாசிகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.
2009 - மறக்க முடியாத ஆண்டு 1 : பதிப்பகம்
2009 ஆம் ஆண்டு ஒருவித தொய்வுடன் தொடங்கிய மாதிரி இருந்தது. 2009 சென்னைப் புத்தகக் கண்காட்சி பலருக்கு அவ்வளவு வருவாய் ஈட்டித் தரவில்லை. சிறு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒருவிதமான வருத்தத்தில் இருந்தார்கள். சர்வதேசப் பொருளாதாரத் தேக்கம், வேலையிழப்பு, பணப்புழக்கம் இன்மை ஆகியவை ஒருவகையில் பதிப்பாளர்களை நிரம்ப யோசிக்க வைத்தது.
ஜூன் மாதம் வரை கூட, பல பதிப்பாளர்கள் அதிகம் சுவாரசியம் இல்லாமல் இருந்தார்கள். விகடன் பிரசுரம், நூல்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. நிறைய மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கிழக்கு பதிப்பகம், ரூ. 20 -- ரூ. 25 விலை வரிசையில் ஒரு மார்க்கெட் இருப்பதை ஏற்கெனவே உணர்ந்துகொண்டு இருந்தது. எண்ணற்ற நூல்களை இந்த விலைக்கு ஏற்ப வெளியிடத் தொடங்கியது. பள்ளி நூலகங்கள், பள்ளி விழா பரிசுகளுக்கு இந்நூல்கள் பயனுடையதாக இருந்தன.
2009ல் ஆழி பதிப்பகம் அமைதியாக முன்னுக்கு வந்திருக்கிறது. அதே போல், திருவண்ணாமலையில் இருக்கும் வம்சி புக்ஸும் முன்னுக்கு வந்திருக்கிறது.
செப்டம்பர், அக்டோபருக்குப் பின்னர் ஆர்வம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னர் நடந்த நெய்வேலி புத்தகக் கண்காட்சியை யாரும் அவ்வளவு சுவாரசியமாகச் சொல்லவில்லை. நவம்பர், டிசம்பரில் ஏராளமான நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
சிறிய பதிப்பாளர்கள்தான் ஏராளமான நூல்களோடு வெளியே வந்திருக்கிறார்கள். காலச்சுவடு, உயிர்மை நிறைய நூல்களை வெளியிட்டிருக்கிறது.
திரிசக்தி பதிப்பகம், உயிர் எழுத்து வெளியீடு, அகநாழிகை பதிப்பகம் ஆகியவை இந்த ஆண்டு என் கண்ணுக்குத் தெரிந்த புதிய அறிமுகங்கள். திரிசக்தி 27 நூல்களை வெளியிட்டிருக்கிறது. உயிர் எழுத்து 30.12.2009 அன்று வெளியீட்டு விழா வைத்திருக்கிறது. அகநாழிகை பத்திரிகை நூல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.
நான் நாவல் ப்ரியன். இந்த ஆண்டு என்னென்ன நாவல்கள் வந்திருக்கின்றன் என்று பட்டியல் தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அதை நேசமுடன் மடல் இதழில் வெளியிடுகிறேன்.
இன்று (30.12.2009) நிறைய எதிர்பார்ப்புகளோடு, சென்னைப் புத்தக கண்காட்சி தொடங்குகிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
2009 - மறக்க முடியாத ஆண்டு 2 : பத்திரிகை
2009ல் தமிழில் வெளியான புதிய இதழ்கள் இவை:
1. புதிய தலைமுறை: இதழாளர், எழுத்தாளர் மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். ரூ.5 என்ற விலை ஒரு பெரிய அட்ராக்ஷன். நல்ல விளம்பரம் இன்னொரு அட்ராக்ஷன். இதழ் மிகவும் தரமாக இருக்கிறது. வழக்கமான பத்திரிகை ஃபார்மேட்டில் இல்லாமல், வேறு ஒரு பாதையை உருவாக்குகிறது புதிய தலைமுறை. ஆங்கில டைம் இதழின் சாயல் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் நிறைய உண்டு. இளைஞர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய ஆர்வங்கள் இப்படித்தான் என்று வெகுமன மனத்தில் ஒரு ஸ்டீரியோடைப்பிங் இருக்கிறது. அதை முற்றிலும் மாலன் உடைத்திருக்கிறார். அவர்களுடைய சுவைக்கு ஏற்றார்போல் செய்திகளைக் கொடுப்பதைவிட, எதையெல்லாம் அவர்கள் தெரிந்துகொண்டால் பயனுடையதாக இருக்கும், வாழ்க்கைக்கு உதவும், மேம்பாடுக்கு உதவும் என்ற கண்ணோட்டத்தில் ஒரு தப்படி முன்னே நகர்ந்து யோசித்திருக்கிறார் மாலன்.
2. சூரிய கதிர்: இதழாளர் ராவ்வை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி இருக்கும் இதழ். வெகுஜன ரசனையைப் பின்பற்றி உருவாகியிருக்கும் இதழ். நிச்சயம் மிடில்கிளாஸைச் சேர்ந்த வாசகர்களுக்கு சூரிய கதிர் பிடிக்கும். விளம்பரம் போதவில்லை. விலையும் கூடுதலோ என்ற எண்ணம் இருக்கிறது.
3. திரிசக்தி, தேவதை: கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் சுந்தரராமனின் இதழ்கள் இவை. திரிசக்தி ஆன்மிக இதழ். ஆசிரியர்: பி.சுவாமிநாதன். தேவதை பெண்கள் இதழ். ஆசிரியர்: தயாமலர். இரண்டுமே மிக அற்புதமாக உருவாகி இருக்கின்றன. இன்றைய வாசகர்களின் தேவைகளை நன்கு உணர்ந்து இவ்விதழ்கள் கட்டுரைகளை வெளியிடுகின்றன. தமிழ் இதழ்களிடையே போட்டி மிகுந்திருக்கும் சூழ்நிலையில், திரிசக்தி 70,000 பிரதிகள் விற்பனை ஆவதாக சுந்தரராமன் ஒரு விழாவில் குறிப்பிட்டார். மார்க்கெட்டிங் பலம் என்பது அதுதான். உள்ளடக்கம் நன்றாக இருப்பதோடு, போதிய அளவு ஃபீல்ட் ஒர்க் செய்யவேண்டும். அப்போதுதான், இதழ்கள் மக்களிடம் போய்ச் சேரும். இரண்டுமே நன்கு சேர்ந்திருக்கின்றன. திரிசக்தி தீபாவளி மலரும் வெளியிட்டது.
4. சுபவரம்: இதழாளர் ம.கா.சிவஞானம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் புதிய ஆன்மிக மாத இதழ். தேர்ந்த இதழ் தயாரிப்பு. ஆன்மிக இதழ்களை வாசிப்போரின் தேவைகளை உணர்ந்துகொண்ட உள்ளடக்கம். போதிய விளம்பரமும் மார்க்கெட்டிங்கும் இல்லாததால், அதிகம் இந்த இதழ் தெரியவில்லை.
5. தஞ்சாவூர் கவிராயர், சுந்தர்ஜி : இரண்டுமே தனி நபர்களின் தனி இதழ்கள். அவரவர்களின் வாசிப்பு, ஆளுமை, தேர்ந்த ரசனை ஆகியவற்றை நேரடியாக இவ்விதழ்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நல்ல கான்செப்ட்.
6. அகநாழிகை: பொன்.வாசுதேவனை ஆசிரியராக இருந்து வெளியிடும் இதழ். சிறுபத்திரிகைகளில் படைப்பிலக்கியத்துக்கு மீண்டும் கவனம் திரும்பியிருக்கிறது. அகநாழிகை எனக்கு நம்பிக்கை தரும் இதழாக இருக்கிறது.
2009 - மறக்க முடியாத ஆண்டு 3 : பொருளாதாரம்
1. 2009 தொடங்கியபோது, விலைவாசி உயர்வு கடுமையாக இருந்தது. அக்டோபர், நவம்பர் 2008ல் இருந்தே விலைவாசி கடுமையாக உயரத் தொடங்கியிருந்தது. 2009 இறுதி வரை விலைவாசி இறங்கவே இல்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் எல்லாம் கீழ் மத்திய வர்க்கமும் மத்திய வர்க்கமும் வாங்க முடியாத உயரத்துக்குப் போய்விட்டது. எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
2. சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அதுவும், மக்களுக்கு, அமெரிக்க அரசு கொடுத்த வரிச்சலுகை, பணப்பட்டுவாடா மூலம், மக்கள் கையில் பணப்புழக்கத்தை அரசு மேம்படுத்தியது. இதனால், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், அதன் மூலம் உற்பத்தி பெருகும் என்பது எதிர்பார்ப்பு. எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் வளர்ந்திருப்பதாக, 2009 கடைசி காலாண்டு நிதி அறிக்கைகளில் விவரங்களைத் தெரிவித்திருக்கின்றன.
3. ஆனால், வேலைவாய்ப்பு உயரவில்லை. அமெரிக்காவிலும் உயரவில்லை. இந்தியாவிலும் உயரவில்லை. எல்லா இடங்களிலும் ஒருவித பயமும் தயக்குமும் அப்படியே இருக்கின்றன. உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகளும் ஆரம்பநிலை வேலைகளுக்கே உருவாகியிருக்கிறது. குறைந்த ஊதிய வேலைகள் அவை. அல்லது ஒப்பந்த வேலைகள். இந்திய ஐடி நிறுவனங்கள் இனிமேல் தான் கேம்பஸ் இண்டர்வியூக்களுக்கு வரவேண்டும்.
4. பங்குச் சந்தை, முரட்டுக் குதிரை மாதிரி ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன காரணத்துக்காக ஏறுகிறது என்று முகாந்திரமே இல்லாமல் சென்செக்ஸும், நிஃப்டியும் ஏறுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஜிடிபி 9 சதவிகிதத்தைத் தொடலாம் என்று நிதி அமைச்சர் சொன்னால், அன்றே 500 புள்ளிகள் சென்செக்ஸ் ஏறுகிறது. இதற்கெல்லாம் ஏதாவது அடிப்படை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பல நிறுவனங்களின் லாப விகிதம் இன்னும் உயரவில்லை. உற்பத்தியும் விற்பனையும் உயரவில்லை. ஆட்டோ, வங்கித் துறை, பார்மா துறைகளில் வளர்ச்சி தென்படுகிறது. ஆனால், அரசின் முதலீடு அதிகரிக்கும், கட்டுமான முதலீடுகள் பெருகும் என்ற எதிர்பாப்பில், ஒவ்வொரு நிறுவன விலையும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.
மனநிலை நன்றாக இருக்கும்போது, உற்சாகமாக இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பங்குக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பிரிமியம் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
5. பணவீக்கமும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படாததால், இந்திய மக்களைப் பொறுத்தவரை, 2009 ஒரு வலி நிறைந்த ஆண்டே.
2009 - மறக்க முடியாத ஆண்டு 4 : நானும் நண்பர்களும்
தனிப்பட்ட அளவிலும் நான் ஆர்வம் செலுத்தும் பல செய்திகளின் அடிப்படையிலும் 2009, எனக்கு மறக்க முடியாத ஆண்டு. தனிப்பட்ட அளவில் என்றால், இதெல்லாம் என் மனத்துக்கு மகிழ்ச்சி அளித்தவை:
1. 2009 முழுவதும் பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். ஜூனியர் விகடன், கல்கி, நாணயம் விகடன், புதிய தலைமுறை என்று குறைந்தபட்சம் 25 கட்டுரைகளேனும் பிரசுரம் ஆகியிருக்கும்.
2. நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?
3. கல்கி இணையச் சிறப்பிதழ் தயாரிக்க முடிந்தது நல்லதொரு வாய்ப்பு.
4. இரண்டு புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது.
5. என் பள்ளிக்கால நண்பர்களை மீண்டும் சந்திக்க முடிந்தது. வெளிநாடுகளில், வெளியூர்களில் தங்கிவிட்டவர்களை எல்லோரையும் ஃபேஸ்புக் மூலம் இணைத்தோம். அப்புறம், நேரடி சந்திப்புகள் தொங்கி, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு சந்திப்பு. மிக்க மகிழ்ச்சியான சந்திப்புகள்.
6. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களிடம் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி தனியே கட்டுரை எழுத வேண்டும். ஒரே ஒரு செய்தி மட்டும்: லேட்டஸ்டாக என்ன ஆங்கிலப் புத்தகம் வந்தாலும் வாங்கிப் படித்துவிடுவார் அருட்செல்வர். படிக்கும் வேகமும் மிக அதிகம். அதைப் பற்றிய சுயமான கருத்து ஒன்றையும் அவர் உருவாக்கிக்கொள்ளத் தவறுவதில்லை. அவருக்கு வயது 87.
7. இந்த ஆண்டு, நண்பர் இரா. முருகன் திரைபிரவேசம் செய்திருக்கிறார். உன்னைப் போல் ஒருவன் படத்தில் அவர் வசனம் எழுதியிருக்கிறார். இரா.முருகனுக்கு சினிமா ஆசை இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. சாஃப்ட்வேர் சமர்த்து பிள்ளை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். வசனங்கள் நன்றாக இருந்தன. அவர் பெயரைத்தான் இறுதி வரிசை டைட்டில் கார்டில் போட்டார்கள். சேத்தன் பகத்துக்கும் 3 இடியட்ஸில் இதுதான் நிலைமை. அவருடைய 5 பாயிண்ட் சம்திங் நாவல்தான் 3 இடியட்ஸ். அவர் பெயரும் இறுதி வரிசையில் ஓடுகிறது. சினிமாவுக்கான விதிகள் வேறு போலும்!
8. பா.ராகவன் வசனம் எழுதிய முதல் திரைப்படம், கனகவேல் காக்க, நான் அறிந்து ஒன்றே கால் ஆண்டுகளாக பெட்டியில் இருக்கிறது. டிசம்பரில் ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தேன். வேட்டைக்காரன் முட்டுக்கட்டைக்காரனாகி விட்டான்.
9. அஜயன் பாலாவை பல ஆண்டுகளாகத் தெரியும். சினிமா ஆசையில், பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு, ராஜேஷ்வரிடம் அசிஸ்டெண்ட்டாகப் போய் சேர்வதற்கு முன்பிருந்தே தெரியும். நன்றாக எழுதக் கூடியவர். சினிமா ஆசை பொல்லாதது. துணை இயக்குநர், நடிகர் என்றெல்லாம் முயற்சித்தார். விகடன் மீண்டும் அவரை எழுத வைத்தது. பிரபலங்களின் சாதனைகளை வரிசையாக எழுதினார். எல்லாம் நான்-ஃபிக்ஷன். இப்போது, கல்கி இதழில் ‘பகல் மீன்கள்’ என்றொரு தொடர்கதை எழுதுகிறார். இலக்கியத்துக்குள் மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
10. பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘கொக்காட்டி துலுக்கன்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் நண்பர் கொ.மு. ரியாஜ் அகமது. நல்ல வாசகர். என் சின்ன வயது நண்பர். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை கோவையில் சந்தித்தேன். வாழ்க்கை பல வலிகளை அவருக்கும் வழங்கியிருக்கிறது. அதையும் மீறி உற்சாகமாக இருந்தார். புத்தக வாசிப்பைத் தொடர்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.
செய்து முடிக்காதவை, கஷ்டங்கள் எல்லாம் தனிப்பட்டவை. அல்லது அதெல்லாம் முடிந்துபோய்விட்டவை. அதனாலேயே அதற்கு இனிமேல் ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை.
2010 - செய்ய நினைக்கும் விஷயங்கள்
2010 தீர்மானங்கள் என்று நான் இதைப் போடவில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் கஷ்டம்தாம். அதனால், இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதை எழுதி வைக்கிறேன்.
1. ‘நேசமுடன்’ மடல் இதழை நண்பர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இதை வாரம் இருமுறை இதழாக மாற்றங்களேன் என்று கருத்து சொன்னார்கள். எழுதுவதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. எழுத முடியுமா என்றுதான் தெரியவில்லை. மேலும் ஒருவிதத்தில், போர் அடிக்க ஆரம்பித்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது. 2010ல் வாய்ப்பிருந்தால், நேசமுடன் மடல் இதழை வாரம் இருமுறை இதழாக அனுப்பிவைக்க உத்தேசம்.
2. பல்வேறு நிலைகளில் இருக்கும் இரண்டு நாவல்களை முடித்து, பிரசுரிக்க முடிந்தால், அற்புதமாக இருக்கும். ஒன்று பத்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறது. 1998ல் பா.ராகவனோடு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா போய் உட்கார்ந்து எழுதியது. இன்னும் முடிக்காமல் இருக்கிறது. சோம்பேறித்தனமே காரணம்.
3. மாதம் ஒரு சிறுகதையேனும் எழுதவேண்டும்.
4. மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நாள் ஆசை. மலையாளப் படங்களாகப் பார்த்து வருகிறேன். புரிவது பிரச்னையில்லை. எழுதப் படிக்கத் தெரியவில்லை. அதை 2010ல் செய்ய முடிந்தால் நல்லது.
5. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மிச்சுவல் பண்டு’ நூலை ரிவைஸ் செய்து எழுதவேண்டும். மறுபதிப்பு கொண்டு வரவேண்டும்.
6. விகடன் பிரசுரித்த ‘டிஜிட்டல் உலகம்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக அடுத்த புத்தகம் எழுதவேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், முன்னேற்றங்கள் பற்றி எழுத எண்ணம்.
எல்லாம் நல்லபடியாக நடக்க நான் வணக்கும் பெருமாள் துணையிருக்க வேண்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நேசமுடன் வெங்கடேஷ்
- ( http://nesamudan.com/ )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, December 30, 2009
நேசமுடன் 21 இதழ் - வெங்கடேஷ்
Posted by IdlyVadai at 12/30/2009 11:41:00 AM
Labels: நேசமுடன், விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
அருமையான உபயோகமுள்ள பதிவு. 2010 வெற்றியாண்டாக வாழ்த்துக்கள்.
ADMK vote பூத் agent கைக்குள் (பணம் கொடுத்து) போட்டு கொண்டு , கள்ள vote போட்டால் , voting percentage 70% என்ன, 110 % வரலாம்.
இடைத்தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை திரு. வெங்கடேஷின் கருத்துக்களோடு சற்றே முரண்படுகிறேன். ஓட்டுக்கள் வாங்கப்பட்டன என்று கூறுவது அபத்தம் என்பது சரியாகப் படவில்லை. மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து விட்டனரென்றால், சென்ற பொதுத் தேர்தலின் போது, தமிழகத்தைப் பொருத்தவரை ஏன் 79, 80 சதவிகித வாக்குகள் அனைத்து தொகுதிகளிலும் சராசரியாகப் பதிவாகவில்லை? பொதுத் தேர்தலில் தமிழகத்தில் சராசரியாக 56% வாக்குகள்தான் பதிவாகியுள்ளன.
நீங்கள் கூறுவது சரியென்று வைத்துக் கொண்டால் திருமங்கலத்தில் 92 விழுக்காடு மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து விட்டதாகக் கொள்ள வேண்டும்.
திருச்செந்தூரில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர், மக்களுக்கு வேஷ்டி, சேலையோடு மதுபான பாட்டில்களை விநியோகித்தது ஜெயா டிவியில் காண்பிக்கப்பட்டது. எப்போதுமில்லாத அளவில் இடைத்தேர்தல்களில் மட்டும் மக்கள் விழிப்புணார்ச்சி அடைவதன் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?
தவிர, திமுக இவ்வளவு வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெருமளவுக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இமாலய சாதனைகள் எதனையும் படைத்து விடவில்லை.
>>> சேத்தன் பகத்துக்கும் 3 இடியட்ஸில் இதுதான் நிலைமை. அவருடைய 5 பாயிண்ட் சம்திங் நாவல்தான் 3 இடியட்ஸ். அவர் பெயரும் இறுதி வரிசையில் ஓடுகிறது. சினிமாவுக்கான விதிகள் வேறு போலும்!
Have you read the book & seen 3-Idiots movie? Director has added & changed lots of things from the original story. Writing screen play is different from writing books!
That is a commercial medium and producers give only importance that attract fans! This is unavaoidable now-a-days. Writers should project/market themselves to get their place.
Will they leave anyone after paying them to vote? Surely the partymen will know who didn't vote as they'll have a list and they'll come to their home and start questioning. That's the reason for the turnout. If people haven't accepted money, no one can ask them to vote. I didn't read further as I felt even the first judgement was shockingly wrong.
///
Will they leave anyone after paying them to vote? Surely the partymen will know who didn't vote as they'll have a list and they'll come to their home and start questioning. That's the reason for the turnout. If people haven't accepted money, no one can ask them to vote. I didn't read further as I felt even the first judgement was shockingly wrong.
///
பணம் வாங்கினால் இப்படி ஒரு இக்கட்டான நிலமையா?
என்னை கேட்டால், அடுத்த இடை தேர்தலில், கொஞ்சம் பணத்தை கூட்டி வாங்கிகிட்டு, அவங்களை கொண்டே வோட் போட்டுக்க சொல்லலாம்.
அடுத்த electionல நம்ம அண்ணன் இந்த மாதிரி option கொடுக்கவா மாட்டாரு?
அவங்க அடுத்த ஆட்சியில் இலவச மொபைல் போன் scheme கொண்டு வராங்க, எல்லோரும் வாங்கிகோங்க !
Anonymous at December 30, 2009 4:59 PM - I fully agree with you... I also did not read after the first wrong judgement that money is not the reason...
Post a Comment