பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 30, 2009

பெண்ணெடுக்க சில வழிகள் - ச.ந. கண்ணன்

முதியோர் தின'க்கொண்டாட்டம் என்று பாரதி மணி சொன்னவுடன் என்ன செய்வது என்று தெரியலை. சரி நம்ம புது மாப்ளே சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன் கண்ணன், அதாங்க ச.ந.கண்ணன் எழுதி தர சொன்னேன். இதோ...

பெண்ணெடுக்க சில வழிகள்

சமீபத்தில் திருமணம் ஆனவன் நான். எனக்குக் கிடைத்த அனுபவங்கள் வழியாக நாளைய மாப்பிளைகளுக்கு சில ஆலோசனைகள் :

* முப்பது வயதுக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள். கல்யாண சந்தையில் 29 வயதுவரைக்கும்தான் நல்ல மார்க்கெட். வயது அதிகமாக ஆக உங்கள் கல்யாணத் தகுதிகளின் காலாவதி தேதி காலியாகிக்கொண்டே வரும்.

* மேட்ரிமோனியல் போன்ற ஊடகம் மூலமாக சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது கயிற்றில் நடப்பதற்குச் சமம். அவற்றில் வெங்கி, நாராயண மூர்த்திக்கு இணையான தகுதியை எதிர்பார்க்கும் வரன்கள்தான் அதிகம். பெரிய ஃபாரம் வேறு ஃபில்அப் செய்யச் சொல்வார்கள். சிறந்த வழி, உறவினர், நண்பர்கள் சிபாரிசு செய்யும் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது. இதில் கிடைக்கக்கூடிய நம்பிக்கை நிம்மதியாக திருமணம் செய்துகொள்ள வைக்கும்.

* சுஜாதாவின் தேஜஸ்வினி கதை நாயகிபோல இருவருக்கும் ஒரே ஐக்யூ, அவளுக்கும் சச்சின் பிடிக்கவேண்டும் என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து சம்பந்தத்தை நிராகரிப்பது பெரிய தவறு. எதிரும் புதிருமான துணை கிடைக்கப் பெற்றால் அதைக் கொண்டாடுங்கள்.

* தம், தண்ணி பழக்கம் உள்ளவர் என்றால் வினையே வேண்டாம். இவை பெரிய எதிரி. வெளியே தெரியாது என்றால் பாதகம் இல்லை.

* உறவினர் வட்டாரத்தில் நல்ல பையன், தங்கமான பையன் என்கிற சான்றிதழ் பெற்றவர் என்றால் கவலையை விடுங்கள். அவர்களே உங்களுக்கு ஏற்ற மீனாட்சியைத் தேடிப் பிடித்து கையில் ஒப்படைத்து விடுவார்கள். படிப்பு, பணத்தை விடவும் இந்தத் தகுதிக்குத்தான் ஏக டிமாண்ட்.

* அழகான பெண்ணா, படித்த பெண்ணா, பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். எந்தப் பெண்ணைப் பார்த்தால் மனத்துக்குள் மணி அடிக்கிறதோ அவள்தான் உங்களுக்காகப் பிறந்த பெண். மணி ஒலிக்காமல் பெண்ணைத் தேர்வு செய்யாதீர்.

* புகைப்படத்தில் ஓகே. பெற்றோருக்கும் முழு சம்மதம். எல்லாம் சரியாக இருக்கிறது என்று திருப்தி கிடைத்த பிறகு பெண்ணைப் பார்க்க நேரில் செல்க. நேரில் பார்த்த பெண்ணை நிராகரிப்பது பாவத்திலும் பெரிய பாவம்.


* சொந்தக் காலில் நிற்பவர், நிற்க ஆசைப்படுவர் என்றால் இதைக் கட்டாயம் செயல்படுத்திக் காட்டுங்கள். பெண் வீட்டாரிடம், ‘நாங்க நகை பத்தி பேசப்போறதில்லை. இது உங்க பொண்ணு. உங்களுக்குத் தெரியாதா, எவ்வளவு போடணும்னு’ என்கிற வசனத்தைக்கூட உங்கள் வீட்டில் பேசச் சொல்லவேண்டாம். அப்படியே நகை போட்டாலும் அதை லட்சியம் செய்யாதீர்கள். ’உங்கப்பா பொட்டுநகைகூட கேட்கலை தெரியுமா. எல்லாமே அவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது’ என்று நாளை உங்கள் மகன் - மகளிடம் பெருமிதம் கொள்ள மனைவிக்கு வாய்ப்பு அளியுங்கள்.


* சே, காதலி, காதல் திருமணம் எதுவும் அமையவில்லையே என்றெல்லாம் நொடிந்துபோகவேண்டாம். பாக்கியவான் நீங்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் ஏராளமான ’கிக்’குகள் உண்டு.

- ச.ந. கண்ணன்
www.sanakannan.com

[ ஆசிரியர் குறிப்பு: சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன் கண்ணன் என்கிற ச.ந.கண்ணனின் வயது 31.( 6 மாதம் முன்பு திருமணம் ஆனவர்). கல்கி வார இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருபவர். தற்போது கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை துணையாசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய அடுத்தப் புத்தகம், அப்துல் கலாமின் வாழ்க்கை. ஏர் டெல் சூப்பர் சிங்கர் பார்ப்பது இவர் பொழுதுபொக்கு.]

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் ஏராளமான ’கிக்’குகள் உண்டு - எந்த 'கிக்' என்று தெளிவு படுத்தவும் :-)

Read More...

Thursday, October 29, 2009

அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! - பாரதி மணி

"நீங்கள் எழுத்தனுபவமே இல்லாத என்னிடம் ஒரு கட்டுரை கேட்டது, உண்மையிலேயே
மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் தளத்தை தினமும் தவறாமல் பார்த்துவருபவன். பல ‘ஜாம்பவான்கள்’ கலந்துகொள்வதால், எனக்கு எழுத கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. எனது
‘நுனிப்புல்’ ஞானம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான்" என்று சொல்லி , சமீபத்தில் அமுதசுரபி தீபாவளிமலரில் வெளிவந்த ஒரு கட்டுரையை எனக்கு அனுப்பியுள்ளார் நண்பர் பாரதிமணி. அதை இட்லிவடை வாசகர்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.



அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! - பாரதி மணி

ஆதெள கீர்த்தனாரம்ப காலத்திலிருந்தே, -- அரசியல்வாதிகள், மேடைப்பேச்சாளர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் ‘கல் தோன்றி மண் தோன்றாக்காலத்திலிருந்து’ என்ற தேய்ந்து துரும்பாய்ப்போன பிரயோகத்தை தவிர்த்து -- மாமியாருக்கும் மருமகளுக்குமிடையே இருக்கும் உறவுமுறைகளைப் பற்றி ஆயிரக்கணக்கில் ஜோக்குகளும், சிறுகதைகளும், சீரியல்களும் வந்துவிட்டன. ஆனால் மாமனார்-மருமகன் உறவுமுறைகளை இன்னும் கொச்சைப்படுத்தாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்! இந்தக்கட்டுரையில் என் மாமனார் க.நா.சு.வைப்பற்றிய சில நினைவுகளைப் பதிவு செய்கிறேன்.

தில்லியில் என் திருமணத்திற்குப்பிறகு தனியாக வீடு பார்க்க முனைந்த என் மாமனார் கநாசுவிடம், ‘எனக்கு இப்போ அப்பா இல்லை. என்னை மகனாக நினைத்து நீங்கள் என்னுடன் சேர்ந்து இருக்கக்கூடாதா? தனியாப்போகணுமா?’ என்று நான் கேட்ட கேள்வி அவரை மிகவும் பாதித்தது. ஒரு மாமாங்கத்துக்கும் மேலாக ஒரே வீட்டில் எந்த உரசலுமின்றி மாமனாரும் மருமகனும் சந்தோஷமாக இருந்தோம். இதற்கு முக்கிய காரணம் இருவருமே மற்றவருக்கான உரிய இடத்தை விட்டுக்கொடுத்து, எந்த அநாவசிய தலையீடுகளும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கத்தெரிந்ததால் தான். அவர் கடைசிக்காலத்தில் சென்னையில் வசித்தாலும், சாவதற்கு அவருக்குப்பிடித்தமான தில்லியில் என் வீட்டுக்கே வந்துவிட்டார். ஒரு மகனாக நான் தான் அவரை நிகம்போத் சுடுகாட்டில் எரியூட்டினேன்.

என் குழந்தைகளிடம் மிகவும் அன்பாக இருப்பார். வெளியூருக்குப்போனால், என் மனைவி ஜமுனாவுக்கு எழுதும் எல்லாக்கடிதங்களிலும், ‘குழந்தைகளை ‘க’டிக்காதே’ என்ற வாக்கியம் நிச்சயம் இடம்பெறும். ஆம், அவர் கையெழுத்தில் ‘அ’ பார்ப்பதற்கு ‘க’வைப்போலவே இருக்கும்! குழந்தைகளும் அவரிடம் ஒட்டுதலோடு பழகும். அவர்கள் இன்று இருக்கும் நல்ல நிலைமைக்கு அவர் ஒரு முக்கிய காரணம். சின்னவயதிலேயே ‘அமர் சித்ர கதா’, ‘ட்வின்கிள்’ போன்ற சிறுவர் பத்திரிகைகளுக்கு ஆண்டுச்சந்தா கட்டிவிடுவார். குழந்தைகளுக்கான புத்தகங்களை தேடித்தேடி வாங்கிவருவார். அவ்வப்போது British Council, American Library-யிலிருந்து குழந்தைகள் படிக்கும் புத்தகங்களைத்தேர்வு செய்து எடுத்துவந்து படிக்கச்செய்வார். அவருக்குப் படிக்க புத்தகங்கள் எதுவுமில்லையென்றால், என் குழந்தைகள் பாடபுத்தகங்களை கொண்டுபோய் படிக்க ஆரம்பித்துவிடுவார். He was a voracious reader! என் இரு குழந்தைகளுமே –ரேவதியும் அனுஷாவும் -- படிப்பதில் தாத்தாவைக் கொண்டிருக்கிறார்களென்பதில் எனக்குப்பெருமை! ரேவதி கல்யாணத்துக்குப் பிறகும் அவரது எல்லா புத்தகங்களையும் சரிவர பராமரித்துவந்தாள். சென்னை வந்தபிறகு கநாசுவின் எல்லா புத்தகங்களையும் ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு கொடுத்துவிட்டேன்.

அப்போது இந்தியாவில் வெளிநாட்டு Portable Typewriters கிடைப்பது அரிது. அதனால் நான் வெளிநாடு போகும்போது, ஆறு மாதத்துக்கொருமுறை, Brother, Olivetti, Remington என்று புது மாடலில் வந்திருக்கும் தட்டச்சுகளை வாங்கிவருவேன். (பழைய டைப்ரைட்டரை வாங்கின விலையை விட அதிக விலைக்கு விற்றுவிடுவேன்!) அதில் ஒரு குழந்தையைப்போல இரவுபகல் பாராது, இரு சுட்டுவிரல்களால் தட்டிக்கொண்டேயிருப்பார். அவர் அறையிலிருந்து ‘டப்..டப்’ என்று டைப் அடிக்கும் சப்தம் கேட்டவாறிருக்கும். அவர் எப்போது தூங்குவாரென்று அவருக்கே தெரியாது! கையில் செலவுக்குப் பணமில்லையென்றால், யாரிடமும் கேட்கமாட்டார். அடிக்கொருதரம் வாசலை எட்டிப் பார்த்து, ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தாச்சா?’ என்று கேட்டுக்கொண்டேயிருப்பார் ஏதாவது மணியார்டர் வராதாவென்று எதிர்பார்த்து. வெளியில் போவது சுத்தமாக நின்றுவிடும். பேப்பர்க்காரனிடம் குவிந்திருக்கும் பழைய பேப்பர் பத்திரிகைகளைப்போட்டு காசு வாங்குவார். அவர் நிலைகொள்ளாமல் தவிப்பது எனக்குப்புரியும். என் மனைவியிடம், ‘உங்கப்பாட்டே பணமில்லைனு நினைக்கிறேன். இதை நீயாகக் கொடுத்ததாக அவரிடம் கொடு’ என்று நூறோ இருநூறோ கொடுப்பேன். (அப்போது இது பெரிய தொகை). அன்று மாலையே பி்ரிட்டீஷ் கெளன்ஸில், யூ.என்.ஐ. கான்டீன் என்று கிளம்பிவிடுவார். தில்லியில் ஞானபீடம் ஜெயின், குஷ்வந்த் சிங், குல்தீப் நய்யர், வாத்ஸ்யாயன், ஸ்டேட்ஸ்மன் இரானி போன்றவர்கள் ஆதரவில் எல்லா ஆங்கிலப்பத்திரிகைகளுக்கும் எழுதிவந்தார். வசதியாகவே வாழ்ந்தார்.

ஒரு சமயம் குமுதம் பத்திரிகை மூத்த எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில், ‘வைரமோதிரக் கதைகள்’ என்று தொடராக வெளியிட்டது. மூத்த எழுத்தாளர்களிடம் ஒரு கதை பெற்று, அதற்கு சன்மானமாக ஒரு வைரமோதிரம் பரிசளித்தார்கள். தி. ஜானகிராமன், சாண்டில்யன் போன்றோர் எழுதினார்கள். குமுதம் பிரதிநிதி ஒருவர் வீட்டுக்கு வந்து, ‘எடிட்டர் உங்க விரலுக்கு அளவெடுத்துக்கிட்டு வரச்சொன்னார்; அடுத்தவாரம் வந்து கதை வாங்கிட்டுப்போறேன்’ என்று பணிவாகச்சொன்னார். கநாசு பதிலுக்கு ‘செட்டியார் உங்களுக்கு ஒழுங்காக சம்பளம் தருகிறாரா?’ என்று சீரியஸாகக் கேட்டதும், வந்தவர் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியே போய்விட்டார். பிறகு கநாசுவின் மனைவி, ‘வந்து கேட்டவனுக்கு எதையாவது எழுதிக்கொடுத்து ஒரு வைரமோதிரம் வாங்கத் துப்பில்லே......நானோ பாப்பாவோ அதை போட்டிண்டிருப்போம்! வீட்டுக்கு வந்தவனை விரட்டிட்டேளே!’ என்று அரற்றியது தான் மிச்சம்!

கநாசு அடிக்கடி வெளியில் போய் ஹோட்டல்களில் சாப்பிட விரும்பியதற்கு என் மாமியார் தான் காரணமென்று என் மனைவி ஜமுனா கூறுவார். அதில் உண்மை நிறையவே உண்டு! ‘ராஜி Boiled Vegetables பண்ணினா அது ஏன் Spoiled Vegetables-ஆவே போகிறது?’ என்று கேலியாகக்கேட்பார். என் சமையல் அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னிடம் யாராவது ‘உனக்கு நடிக்கத் தெரியவில்லை......எழுதத்தெரியவில்லை’ யென்று சொன்னால் மகிழ்ச்சியுடன் ஆமோதிப்பேன். அது உண்மை! ஆனால் சமையலில் நளனுக்கு வாரிசு நான் தான்! என் தாயார் சிவகாமியின் கொடுப்பினை அது! வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பமாக வீட்டில் என் குழந்தைகள் உட்பட எல்லோரும் என்னை சமைக்கச்சொல்லுவார்கள். அன்று வெளியில் போய்விட்டு கநாசு மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது, ‘ராஜி, இன்னிக்கு ஞானபீடம் ஜெயின் மத்தியானம் ஹோட்டலில் சாப்பிடக்கூப்பிட்டார். மொதல்லே சரீன்னேன். அப்புறம் தான் இன்னிக்கு மணி சமையல்னு ஞாபகம் வந்தது. ஒரு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்துட்டேன். இந்த சின்னவெங்காய சாம்பாரும், அவியலும், கூட்டும், துவரனும் ஓபராய் ஹோட்டல்லே கெடைக்குமோ?’ என்று சொல்லிக்கொண்டே என் சமையலை ருசித்துச்சாப்பிடுவதை பல முறை தள்ளி நின்று ரசித்திருக்கிறேன்! என் மசால் வடைகளை விரும்பிச்சாப்பிடுவார்.

தில்லிக்குளிர்காலத்தில் சாப்பாட்டுக்குப்பிறகு வேர்க்கடலை உடைத்து கொறிக்க ஆரம்பித்தால், மாலைக்குள் அரைக்கிலோவுக்கும் மேலாக முடித்திருப்பார். நடப்பதற்கு அஞ்சாதவர். பக்கத்திலிருக்கும் அம்பாரம் போல் குவித்த வேர்க்கடலை வண்டியை விட்டுவிட்டு, நேரு ப்ளேஸ் வரை நடந்துபோய் வேர்க்கடலை வாங்குவார். நடையில் ‘சிதம்பர நடராஜர்’ தான்! வயோதிகத்துக்கான எந்த உபாதைகளும் அவருக்கு இருந்ததில்லை. தலைவலி, ஜலதோஷமென்று வந்தால், ஜாம்பெக் தான் அவரது சர்வரோக நிவாரணி! அதைப்பற்றி வேடிக்கையாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்!

ஒரு தடவை கலைமகள் தீபாவளிமலரில் அவரது கதையொன்று வெளிவந்தது. என்னிடம் படிக்கக் கொடுத்தார். மூன்று பக்கக்கதையில் 42 தடவை ‘தான்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அவன் தான்....அதைத்தான்... கீழே தான்....சொன்னதைத் தான்....இப்படி. அவைகளை ஒரு பென்சிலால் அடிக்கோடிட்டு ஜமுனாவிடம் காட்டினேன். பிறகு என் காது கேட்க, ‘ஆமா, இன்னொரு தடவை பார்த்திருக்கணும்... நிறையவே ’தான்’ இருக்கு.....சாம்பாருக்கு போடற அளவுக்கு!’ என்று சொன்னார்.

ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் எப்போதாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவர் தில்லிக்கு வரும்போது அவரது குல்மோஹர் என்க்லேவ் வீட்டில் சிலசமயம் விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒருதடவை அமிதாப் பச்சன் வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh ‘என்று அறிமுகப்படுத்தினார். கநாசு அமிதாப் பச்சனிடம், What are you doing? என்று கேட்டார். அதற்கு அமிதாப் பணிவாக ’ I am in the Film industry’ என்று பதிலளித்தார். அதில் திருப்தியடையாத கநாசு கேட்ட அடுத்த கேள்வி: Writing songs like your Father? அமிதாப் இன்னும் பணிவாக No, I am an Actor என்று பதிலளித்தார்.

வீட்டுக்கு வந்ததும், என் மனைவி ஜமுனா, ‘ஏம்ப்பா! உனக்கு அமிதாப் பச்சனைத் தெரியாதா? போனவாரம் தானே இந்தியா டுடேலே படிச்சே! இந்த தஞ்சாவூர் கிருத்திரமம் தானே வேண்டாங்கிறது!’ என்றதற்கு கநாசுவின் பதில் ஒரு நமுட்டுச்சிரிப்பு தான்! பத்திரிகைகளுக்கு பலவருடங்கள் பேட்டியே கொடுக்காத அமிதாப் பச்சன் முதல் தடவையாக பம்பாய் பிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்த நீண்ட நேர்காணலில் இது ஒரு கேள்வி: What was the most embarrassing moment in your life? அதற்கு அமிதாப் அளித்த பதில்: ’என் தந்தையைப்பார்க்க வந்திருந்த தென்னிந்திய எழுத்தாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) கேட்ட கேள்வி தான் என்னை திக்குமுக்காட வைத்தது. அதற்கு ஒரு வாரம் முன்னால் தான் ‘இந்தியா டுடே’ பத்திரிகை என் படத்தை அட்டையில் போட்டு ‘Hundred Crores in One Man Industry’ என்று பல கட்டுரைகளுடன் வெளிவந்த நேரம். ஆனந்த், தீவார் போன்ற வெற்றிப்படங்களுக்குப்பிறகு, என்னை இந்தியாவில் சிறுகுழந்தைக்கும் தெரியும் என்ற இறுமாப்புடன் இருந்த என்னைப்பார்த்து, ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று ஒரு கிழவர் அப்பிராணியாக கேட்ட கேள்வி என்னை உலுக்கிவிட்டது. விளையாட்டுக்காகக் கேட்கிறாரோவென்று அவரை உற்றுப்பார்த்தேன். இல்லை.....ரொம்ப சீரியஸான முகம். அவர் உண்மையாகவே நடித்திருந்தாரென்றால் அவர் என்னைவிட சிறந்த நடிகர்!’

அவரிடமிருந்த மற்றொரு நல்ல குணம் பிறருக்குத்தரும் மரியாதை. வயதில் மிகச்சிறியவர்களையும் பன்மையிலேயே அழைப்பது. இதை அவர் Political Correctness-க்காக செய்வதில்லை. தில்லியில் அவருக்கு சீடராக இருந்த எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி இல்லாத நேரங்களிலும், ‘ராஜி, இன்னிக்கு ராஜாமணி வந்தாரா?’ என்று பன்மையில் தான் கேட்பார். இந்த விஷயத்தில் நான் அவருக்கு நேர் எதிர்! மனதுக்குப்பிடித்த புதிய நண்பர்களிடம் ஒரு வாரத்துக்குள் ‘வாடா....போடா’ லெவலுக்கு இறங்கிவிடுவேன். தெற்கே வந்தால் சென்னையில் சி.சு. செல்லப்பாவும், சிதம்பரத்தில் ’மெளனி’யும் என்னிடம் பேசும்போது வாக்கியத்துகொரு தடவை வாய்நிறைய ‘மாப்பிளே....,மாப்பிளே’ யென்று அன்போடு கூப்பிடுவார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் என் சொந்த மாமனார் என்னை இதுவரை ஒருதடவை கூட ‘மாப்பிளே’ என்று அழைத்ததில்லை. அதில் எனக்கு உண்மையிலேயே வருத்தம் தான்!
( அமுதசுரபி அக்டோபர் 2009 தீபாவளி மலரில் வெளிவந்தது )

[
ஆசிரியர் குறிப்பு: ஒரு நாடக, திரைப்பட கலைஞராக அறியப்பட்ட மணி, 'பாரதி' படத்தில் பாரதிக்கு அப்பாவாக நடித்த பிறகு 'பாரதிமணி' என்ற பெயரை பெற்றார். ( பாபா படத்தில் இவர் சி.எம்'க நடித்திருப்பார் நல்ல வேளை பாபாமணி என்று பெயர் வாங்கவில்லை :-). எனக்கு எழுத தெரியாது என்று கலக்கும் இவருக்கு வயது 72. இளைஞர். தில்லி வாழ்க்கையில் இவருடைய அனுபவ கட்டுரைகள் பலர் கேட்டிராதவை. க.நா.சுப்ரமணியத்தின் மருமகன். எழுத்தாளர் ஜெயமோகனும் இவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் - பார்வதிபுரம். போனவருடம் ரிலீஸ் ஆன இவருடைய 'பல நேரங்களில் பல மனிதர்கள்' கட்டுரை தொகுப்பு படிக்க வேண்டிய ஒன்று. ( ஜெயகாந்தனிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு தான் இந்த டைட்டிலை வைத்துள்ளார்). 'காந்திபாய் தேசாய் - தலைவர்களும் தனயர்களும்' என்ற கட்டுரையை இப்படி முடிக்கிறார் "‘இன்னும் நிறைய இருக்கிறது, எழுதப்போனால் எனக்குப் பிடித்தமான டெல்லியில் பிடிக்கவே பிடிக்காத திஹார் ஜெயிலில் நிரந்திரமாக எனக்கு ஒரு இடம் நிச்சயம். "அங்கே..ஏ...ஏ எனக்கோர் இடம் வேண்டும்" என்று இந்த வயதில் நான் பாடத் தயாரில்லை! )

அவருடைய முகவரி: bharatimani90@gmail.com

]



Read More...

Wednesday, October 28, 2009

இது எங்க ஏரியா !

இட்லிவடை 6 ஆம் ஆண்டு கொண்டாட்ட பதிவுகளில் பல நல்ல எழுத்தாளர்களின் படைப்பை பதிவாக போடலாம் என்று பார்த்தால் நம்மளை விட மாட்டார்கள் போல.

போகிற போக்கைப் பார்த்தால் பபாஸி தேர்தல் நம் அரசியல் தேர்தலை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா என்று அவர்கள் பாணியில் அவர்களையும் மிஞ்சி விடுகிறார்கள் இந்த பதிப்பாளர்கள். தேர்தலில் செயலாளராக நிற்கிறார் செண்பகா பதிப்பகத்தின் சண்முகம். இவர் சென்ற ஆட்சிக்குழுவிலும் செயலாளராக இருந்தவரே.
கடந்த சில நாள்களில் எல்லா பதிப்பாளர்களுக்கும், இவரை எதிர்த்து ஒரு மொட்டைக் கடுதாசி வந்திருக்கிறது. ( அது என்ன என்று கீழே கொடுத்திருக்கிறேன், கவலைப்படாதீங்க )

இவரை எதிர்த்து நிற்கும் அணியினர் காந்தி கண்ணதாசன் அணியினர். யார் மொட்டைக் கடுதாசி அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. வழக்கம் போல எதிர் அணி மேலேயே எல்லாரும் சந்தேகத்தோடு பார்க்கிறார்களாம்.

உடனே சண்முகமும் தன் பங்குக்கு பதிலை அனுப்பியிருக்கிறார். என்னவோ நடக்குது 'இது எங்க ஏரியா' என்று சுட்டி டிவியில் வருவது மாதிரி இருக்கு இவர்கள் செய்யும் லூட்டி !

மொட்டை கடிதம்


பதில் கடிதம்




இந்த கடிதங்களை எனக்கு அனுப்பிய 'அந்த மொட்டை' மாமாவிற்கு நன்றி. அனானி விளையாட்டு எல்லா இடத்திலும் இருக்கு :-) ( கிளிக் செய்து படித்துப்பாருங்க )

பின்குறிப்பு: பத்ரியும் தேர்தலில் நிற்கிறாராம் - சுயேச்சையாக! :-)

Read More...

சாவியும் நானும் - கடுகு

பரிசாக ஒரு கட்டுரை என்ற பதிவை போட்ட பத்து நிமுஷத்தில் எண்ணையில் போட்ட கடுகு மாதிரி வெடித்து தள்ளிவிட்டார்கள் மக்கள்.... எல்லோருக்கும் என் நன்றி.

கட்டுரை கீழே...


சாவியும் நானும் - கடுகு

புது டில்லி ரயில்வே ஸ்டேஷனில் எழுத்தாளர் சுந்தாவும் நானும் ஜி.டி. எக்ஸ்பிரஸை வரவேற்கக் காத்திருக்கிறோம். வருஷம் 1968.. ரயிலில் வரப்போகிறவர் எழுத்தாளர் சாவி. அவரை முதன் முதலாகச் சந்திக்கப் போகிறேன். அப்போது தான் சில மாதங்களுக்கு முன்பிலிருந்து தினமணிக் கதிரில் தொடர்ந்து எழுதத் துவங்கி இருந்தேன். (தினமணி கதிரில் எழுத ஆரம்பித்தது ஓரு தனிக்கதை. அதை விவரித்தால் சுயப்பிரதாபமாக இருக்கும். ஆகவே தவிர்க்கிறேன்.)

ரயிலில் இருந்து சாவி இறங்கியதும், அவரிடம் சுந்தா என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு சகஜமான புன்னகையுடன் "ஹலோ” சொல்லியபடி எனக்குக் கைகொடுத்தார்.

கைகொடுத்தவர்
நாற்பது வருஷம் கழித்து இந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது என் மனதில் நெகிழ்ச்சி எற்படுகிறது. அன்று மட்டுமல்ல, பின்னால் அடுத்த முப்பது வருஷங்களுக்கு மேலாக எனக்குப் பலவிதத்தில் கைகொடுத்து, எழுத்துலகில் என் தகுதிக்கு மீறிய உயரத்தில் என்னை வைத்துவிட்டார்.

சாவி நல்ல நகைச் சுவை எழுத்தாளர். அதைவிட நல்ல நகைச்சுவைப் பேச்சாளர். அதைவிட மிக நல்ல நகைச்சுவை ரசிகர்.

"அடடா.... என்னமாய் எழுதி இருக்கிறார் சும்மா கல கல என்று! எப்படி ஓடுகின்றது நடை!” என்று பாராட்டி ரசிப்பார்.

அவர் புதுமை விரும்பி. அதனால் குமுதம் செய்யும் புதுமைகளை ரசிப்பதுடன், அதுமாதிரி புதுமைகளைக் கதிரிலும் செய்ய விரும்பினார். நானும் ஏராளமான புதுமைகளுக்கு ஐடியா கொடுத்தேன். அவற்றை அவர் உடனுக்குடன் செயல்படுத்தி வந்தார். (என் புதுமைகளில் எண்பது பங்கு உமியும், இருபது பங்கு அவலும் இருந்தன என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறேன்.)

குமுதத்தில் ஒருத்தர் எழுதிவிட்டால் போதும், அவரை எப்படியாவது கதிரில் பிடித்துப் போடவேண்டும் என்று பரபரப்பார். நானும் 1963-லிருந்து குமுதத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்ததால் 1968-ல் என்னை தினமணி கதிரில் வளைத்துப் போட்டார்.

”பால்யூ என்னமா செய்கிறார்!. எவ்வளவு சுறுசுறுப்பாக செய்கிறார்!... ரா. கி. ரங்கராஜன் மாதிரி சரளமாக எழுதுவதற்கு ஆளே கிடையாது.... பாக்கியம் ராமசாமி நகைச்சுவையில் அபாரமாய் வெளுத்து வாங்குகிறார்" என்றெல்லாம் வியப்பார். இப்போது ஒரு சின்ன ரகசியத்தை இங்கே உடைத்தால் தவறில்லை. "பால்யூ தான் உமக்கு நல்ல நண்பராயிற்றே, கொஞ்சம் நம்ம கதிருக்கும் ஏதாவது எழுதச் சொல்லுங்களேன். அவர் எழுதுகிறார் என்பதை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொள்கிறேன்" என்று என்னிடம் பல தடவை சொல்லியிருக்கிறார். ஒரு சமயம் ரா. கி. ரங்கராஜனையே தூண்டில் போட விரும்பினார். பிற்காலத்தில் தன் சாவி பத்திரிகையில் பாக்கியம் ராமசாமியை உதவி ஆசிரியராக அமர்த்திக்கொண்டு புளகாங்கிதமடைந்தார்.

சாவி தனது இருதய பைபாஸ் ஸர்ஜரியைப் பற்றி ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதினார். அதை அச்சில் பார்த்ததும் அவர் அடைந்த புளகாங்கிதத்திற்கு அளவே இல்லை. காரணம், அந்தக் கட்டுரை அவரது அபிமானப் பத்திரிகையான குமுதத்தில் வெளியாகியிருந்தது.

குமுதத்தில் சுஜாதா ஒரு கதை எழுதியிருந்தார். அவர் டில்லியில் இருக்கிறார் என்று தெரிந்ததும் எனக்குக் கடிதம் எழுதினார். அதன்படி சுஜாதாவிடம் கதை கேட்டு வாங்கி அனுப்பினேன். பின்னால் சுஜாதா கதிரில் தொடர் கதை எழுத ஆரம்பித்தார். கதையை வாராவாரம் சுஜாதா என்னிடம் கொடுப்பார். அதை டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் கொடுத்து, விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பேன். எழுபதுகளில் சுஜாதாவை ஒரு சினிமா நடிகர் அளவுக்குப் பாபுலராக்கியவர் சாவிதான்.


சாவியின் கோபம்
சாவியின் கோபம் சற்று பிரபலமானது. " ”எனக்கு முன் கோபம் உண்டு என்ன செய்வது? அது என்னோடு பிறந்தது” என்பார்.

ஒரு சமயம் வாரியார் ஸ்வாமிகள், காமராஜர் ஆகியவர்களைச் சேர்த்துக் கொண்டு ’சத்ய சபா’ என்ற அமைப்பை சாவி துவங்கினார். காமராஜரிடம் சபா பற்றி முதலில் பேச போனபோது, காமராஜர் "சபாவெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுண்ணேன். என்னை எதுக்கு இழுக்கறே? எனக்கு முன்கோபம் கொஞ்சம் ஜாஸ்தி" என்றார். உடனே சாவி "ரொம்ப நல்லதாப் போச்சு. எனக்கும் முன்கோபம் ஜாஸ்தி. நமக்குள் நல்ல பொருத்தம் இருக்கும்" என்றார். காமராஜர் உடனே சிரித்துவிட்டு "சரி....சரி....நான் வர்றேன்” என்று கூறிவிட்டார்.

சாவியின் கோபத்திற்கு மற்றொரு சின்ன சம்பவம். தன்னை அலட்சியப் படுத்தினாலும் சாவி கவலைப்படமாட்டார். ஆனால் தினமணி கதிரை யாரும் குறைவாகப் பேசக்கூடாது, அலட்சியப் படுத்தக்கூடாது.

ஒரு பிரபல இயக்குனர் தன் திரைப்படத்தில் கிட்டத்தட்ட இப்படி ஓரு வசனத்தை எழுதியிருந்தார். கதாநாயகியை ரயில் நிலையத்தில் வழியனுப்பும் கதாநாயகன் "இந்தா, இந்த வார குமுதம், கல்கி, விகடன் எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன் படித்துக்கொண்டே போ" என்கிறான். படத்தைப் பார்த்துவிட்டு வந்த சாவி, நேரே கதிர் ஆபீசுக்குச் சென்றார். அச்சுக்குப் போகத் தயாராயிருந்த ப்ரூஃப்களை வரவழைத்து, அதில் இடம் பெற்றிருந்த அந்த குறிப்பிட்ட படத்தின் விமரிசனத்தை எடுத்துவிட்டார். அந்த இடத்தில் நாலைந்து ஜோக்குகளைப் போட்டு, அச்சுக்கு அனுப்பிவிட்டார்!

"மூன்று பத்திரிகைகளின் பெயரை எழுதிய டைரக்டர், ஏன் நம் தினமணி கதிரின் பெயரைச் சேர்க்காமல் விட்டார்? சரி, அது அவர் இஷ்டம். படத்தின் விமரிசனத்தை நீக்கி விடுவது என் இஷ்டம்" என்றார்.

(படம் ரிலீசாகி மூன்று, நான்கு வாரங்களாகியும் கதிரில் விமரிசனம் வராததால், சாவியை டைரக்டர் அணுகி சமாதானம் செய்ததெல்லாம் தனிக்கதை.)
!

கட்டுரைகளைக் கிடப்பில்....
சாவிக்கு என் எழுத்தின்மேல (தவறான?) மோகம் இருந்ததால், தினமணி கதிரின் ஆஸ்தான எழுத்தாளனாக நான் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தேன். என் எழுத்து வராத இதழே இல்லை என்று பெருமையடித்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார். இருந்தும் ஒரு சமயம் என் மூன்று கட்டுரைகளைக் கிடப்பில் போட்டுவிட்டார். அவரது கேரக்டர் கட்டுரைகளைப் போல, நானும் மூன்று கேரக்டர் கட்டுரைகளை எழுதி அனுப்பியிருந்தேன். பல மாதங்களாகியும் அவை வெளியாகவில்லை. நானும் அவரிடம் அதைப் பற்றி கேட்கவில்லை. ஆறு மாதம் கழித்து திடீரென்று முதல் கட்டுரை வெளியாயிற்று. தொடர்ந்து கேரக்டர் கட்டுரைகளை அனுப்பும்படி கடிதம் எழுதியிருந்தார். நானும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். இருபத்து மூன்று வாரங்கள் வெளியாயின. "அடுத்த வாரத்துடன் கேரக்டர் கட்டுரையை நிறுத்திவிடுங்கள்”என்று அவரிடமிருந்து ஒருவரிக் கடிதம் வந்தது. ஐம்பது, அறுபது கட்டுரைகள் எழுத நினத்திருந்தேன். அவர் சொன்னபடி இருபத்தி நாலாவது கட்டுரையுடன் நிறுத்திவிட்டேன்.

சில மாதங்கள் கழித்து நான் சென்னை சென்ற போது அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் கேட்டார் "உங்கள் கேரக்டர் கட்டுரையை இருபத்து நாலு வாரத்துடன் நிறுத்திவிடச் சொன்னேனே, ஏன் என்று நீங்கள் கேட்கவில்லையே!”

”பத்திரிகையில் போடுவதும் போடாமல் இருப்பதும் உங்கள் ஊரிமை, நான் கேட்பது சரியாக இருக்காது என்பதால் கேட்கவில்லை" என்றேன்.

”சரி, நீங்கள் கேட்டமாதிரி வைத்துக்கொண்டு நான் பதில் கூறிவிடுகிறேன் நான் இருபத்தைந்து கேரக்டர் கட்டுரைகள்தான் எழுதியிருக்கிறேன், என்னை நீங்கள் மிஞ்சக் கூடாது என்பதால் நிறுத்தச் சொன்னேன்" என்றார், இப்படிச் சொன்னாரே தவிர, பின்னால் குங்குமம் இதழில் மேற்கொண்டு இருபத்தைந்து கேரக்டர் கட்டுரைகளை எழுதியபோது, வெகுவாகப் பாராட்டினார்.

பின் குறிப்பு
சாவி அவர்களைப் பற்றி நூறு பக்கக் கட்டுரை எழுதுமளவுக்கு பல தகவல்கள், சம்பவங்கள் உண்டு. பலவற்றில் நானும் இடம் பெறுவேன் என்பதாலும், சந்தடிசாக்கில் கந்தகப்பொடி வைப்பது போல், என் பிரதாபத்தையும் கூற வேண்டியிருக்கும் என்பதாலும் இப்போது இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையைப் பாராட்டி எழுதினீர்கள் என்றால் ஆபத்து. ஏனென்றால் தொடர்ந்து கல்கியும் நானும், தேவனும் நானும், குமுதம் எஸ். ஏ. பி. யும் நானும், ரா. கி. ரங்கராஜனும் நானும், பாக்கியம் ராமசாமியும் நானும், புஷ்பா தங்கதுரையும் நானும், டைரக்டர் ஸ்ரீதரும் நானும், டைரக்டர் கே. பாலச்சந்தரும் நானும், சித்ராலயா கோபுவும் நானும், சுப்புடுவும் நானும், டில்லி கணேஷும் நானும் என்று எழுதித் தள்ளிவிடுவேன். எச்சரிக்கை!
இட்லிவடையும் நானும் என்பதை விட்டுவிட்டீர்களே :-)

(ஆசிரியர் குறிப்பு: கடுகு, அகஸ்தியன் என்ற புனைபெயரில் எழுதும் பி.எஸ்.ரங்கநாதன் விரல்விட்டு எண்ணக்கூடிய நகைச்சுவை எழுத்தாளார்களில் ஒருவர். 77 வயது ஆகும் இளைஞர்.

கடுகுக்கு 'பேஷ்' என்று சொன்னவர்களின் பட்டியல்:

- 'பேஷ்' என்று ராஜாஜி இவருக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்துள்ளார்
- இவர் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு 'பேஷ்' என்று பாராட்டினார் கல்கி
- இவர் எழுத்தை பாராட்டி எஸ்.ஏ.பி ஒரு கடிதம் எழுதி தந்துள்ளார்
- சாவி இவரை நிறைய பாராட்டியுள்ளார்.
)

தொடர்புடைய மற்ற கட்டுரைகள்:
கடுகு
போதுமடா டில்லி !

Read More...

Tuesday, October 27, 2009

பரிசாக ஒரு கட்டுரை !


இட்லிவடை வாசகரில் இவர் இருக்கிறார் என்பதே எனக்கு பெரிய பெருமை. இங்கே பாருக்கும் படங்கள் நான் கேட்காமலே அவர் எனக்கு செய்து அனுப்பியதின் சாம்பிள்கள்.

6 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இட்லிவடைக்கு ஸ்பெஷல் கட்டுரை எழுதி தர முடியுமா என்று கேட்டதற்கு உடனே ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினார். கூடவே "You can edit everything except my name" என்று எழுதியிருந்தார்.

அவர் யார் இந்த எழுத்தாளர் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா ?( வேண்டாம் என்று சொல்லிடாதீங்க ) மேலே இட்லிவடை டைட்டிலில் அவர் பெயர் இருக்கிறது. கண்டுபிடியுங்கள்!
( படம் சரியா தெரியலை என்றால் Refresh செய்து பாருங்கள் )

சரியான முதல் பின்னூட்டம் வந்த உடன் அவர் கட்டுரை பிரசுரமாகும். அந்த கட்டுரை வருவதும் வராமல் இருப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

பிகு: இந்த டைட்டில் கூட அவர் செய்து அனுப்பியது தான் :-)

ஒரே 'ஸ்டிரியோ டைப்' பதிவுகளுக்கு இடையில் இந்த மாதிரி ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. தயவு செய்து யாரும் க்ளூ கேட்காதீர்கள் !

Read More...

இட்லிவடை - திரை விமர்சனம் - இன்பா

ஆறு வருஷங்களாய் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் (அ)வலுக்கட்டாயமாக 'ஓட்ட'பட்டுகொண்டிருக்கும் இட்லிவடை 'படம்' பற்றிய திரை விமர்சனம்.

பட ஆரம்பத்தில், கதை,வசனம், இசை, இயக்கம்,தயாரிப்பு மற்றும் office boy எல்லாமே இட்லிவடை என்று 'டைட்டில்' போடுகிறார்கள். படத்தின் கதாநாயகனும் இட்லிவடையே. படத்தின் டைட்டில் பொருந்துவதற்கு இதைவிட என்ன வேண்டும்?

50% ஜாலி..50% லொள்ளு..Total கலாட்டா என்று விளம்பரங்களில் படத்திற்கு caption போட்டுஇருக்கிறார்கள். படத்தின் ஹீரோ இட்லிவடை முகம் காட்டாத ஒரு மர்ம மனிதர். அதே சமயம் பயந்த சுபாவம் உள்ளவர். அதுவும், அம்மணிகள் என்றாலே 'குலை' நடுங்குபவர். தன்னுடைய கேரக்டர் காமெடியா இல்லை சீரியஸா என்று அவருக்கே புரியாதவர். எதாவது எடக்கு மடக்காக (நன்றி கோபி) பேசி, ஏடாகூடமாக மாட்டிக்கொ(ல்)ள்பவர். அடி,உதைக்கு பயந்து படம் முழுக்க முகத்தை மறைத்துகொள்கிறார்.


சரி, 'கிளைமாக்ஸ்'சிலாவது அந்த மூஞ்சியை பார்க்கலாம் என்று பார்த்தால், படம் முடியும்போது 'விற்பனை தொடரும்' என்று போட்டுத்தொலைக்கிறார்கள்.

படம் முழுக்க யாரென்றே தெரியாத இவரை, யார் யாரோ ஆட்டோக்களில் தேடுகிறார்கள்.

படத்தின் கதைப்படி, ஆரம்ப காட்சிகளில் காமெடியாக தோன்றுபவர், 'இடைவேளைக்கு' பின் சீரியஸ் விஷயங்களில் ஈடுபட முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் அவர் ஜெயித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மொக்க ச்சே மொத்த கதை. மீதியை திரை(வலை)யில் காண்க.
.
இட்லிவடையை தவிர, அவரது நண்பராக மானஸ்தன் என்பவர் நடித்து இருக்கிறார். இவரது பெயர்க்காரணம் சொல்லாமல் விட்டு விட்டார்கள்.எதாவது வித்தியாசமாய் பெயர் வைத்துக்கொள்வது என்று 'கொலை வெறி'யோடு ஒரு கூட்டமே, இட்லிவடை தலைமையில் அலைகிறது. நம் ஹீரோ எது செய்தாலும், 'ஆஹா,ஒஹோ' என்று புகழும் காமெடி நடிகரின் இலக்கணங்களுக்கு சரியாய் பொருந்துகிறார் மானஸ்தன். சில சமயம் குணச்சித்திரமும் செய்கிறார்.

முகம் தெரியாத ஹீரோவுக்கு ஹீரோயின் எப்படி? எல்லாம் திரை 'மறைவில்' தான் போலிருக்கிறது. ஆங்காங்கே நமீதா, லக்ஷ்மி ராய் போன்ற நடிகைகள் தலை(மட்டும்தான்!) காட்டுகிறார்கள்.

'பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா,பன்ச் வெச்சா இட்லி தாண்டா','ஊர்ல சொல்றது சொலவடை உண்மையைச் சொல்றது இட்லிவடை' என்றல்லாம் படம் முழுக்க தேவையில்லாத இடங்களில் மற்ற மாஸ் ஹீரோக்களை போல இவர் 'பன்ச்' டயலாகுகள் பேசுவது, ஒருவேளை இவர் quick gun முருகனுக்கு அண்ணனோ என்று நினைக்க தோன்றுகிறது.

கூட்டம் சேர்க்கவா இல்லை நிஜமாலும் ஹீரோ கமல் ரசிகனா என்று தெரியவில்லை.பல காட்சிகளின் பின்னணியில் கமல் படம் தெரிகிறது (குறிப்பாய் உன்னை போல் ஒருவன்) .

'கிளீன்ஷேவ்' தலையுடனும், சோடாபுட்டி கண்ணாடியுடனும் உள்ள ஒரு வயதான மனிதர், நம் கதாநாயகனுக்கு ஆலோசனை சொல்பவராக வருகிறார். அடிக்கடி ச்'சோ'..ச்'சோ' என்று மானரிசம் வேறு செய்கிறார்.

படத்தின் ஒரு பெரிய ஹைலைட்டான விஷயம்... வில்லன் கேரக்டர்தான்...வித்தியாசம் காட்டுகிறோம் என்ற பெயரில் ஒரு கூத்தே அடித்து இருக்கிறார்கள்.


ஆனாலும், ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கு உரிய எல்லா அம்சங்களும் இந்த 'படத்தில்' குறைவில்லாமல் இருக்கிறது.


மொத்தத்தில், இட்லிவடை ஒரு பூரி(ப்பான) 'மசாலா'

நம்ம மார்க்கு 0.9/0.10

சீரியஸ் மேட்டர் : ஆறு வருஷம் ஒரு வலைப்பதிவை தொடர்ந்து நடத்துவது என்பது, அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் வெற்றிகளுக்கு ஒப்பானது. இட்லிவடைக்கு,எனது கடை(த)தெரு வலைப்பதிவு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
இன்பா



இந்த மாதிரி போஸ்ட் இது தான் லாஸ்ட் போஸ்ட் - I Say !

Read More...

அவனா நீ ?

இட்லிவடை! வலைமேயும் வாசகர்கள் அனைவரும் அறியத் துடிக்கும் - ஆராய்ந்து கொண்டே இருக்கும் மவராசன்! நேற்றுடன் (26.10.2009) அண்ணன் கடை போட்டு ஓஹோ என்று ஆறு ஆண்டுகள் முடிவடைகின்றன. எனக்கு இட்லிவடை வலைமனை பரிச்சயம் ஆனது சமீபத்தில்தான். அதுவும் quite accidentally! நான் இட்லிவடையைத் துரத்திக் கொண்டுஇருக்கும் இந்தக் குறுகிய காலத்தில், அவர் கடந்த ஆறு வருஷமாக அரியணையில் அமர்ந்து காட்டும் ஆட்டம் பார்த்து பிரமித்துப்போனேன்.


கடந்த ஆண்டு, இதே நேரம் இட்லிவடை ஐந்து ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விதமாக பல மிகப்பிரபல பதிவர்கள் இட்லிவடையை வலை உலக கிருஷ்ண பரமாத்மா ரேஞ்சில் எழுதி உள்ளனர். அவற்றில் திரு பா.ரா. எழுதிய மேட்டர் நச் ரகம். முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு, அதுவும் இந்த டெக்னாலஜி யுகத்தில், வலைமனையில் "விளையாடுவது" அவ்வளவு சுலபம் அல்ல. இன்று பலரும் "அவனா நீ" என்று வார்த்தை விளையாட்டு ஆட திருவாளர் இட்லிவடை முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை. அடிக்கடி கேட்கப்படாத கேள்விகளுக்குக் கூட scientific-ஆக பதில் சொல்லி கலக்கி இருந்தாலும், இன்றுவரை விடை தெரியாத இட்லிவடை யார் என்ற கேள்விக்கு, "கேள்விக்குறியை" மட்டுமே நமக்கு திரும்ப பதிலாகத் தரும் உலக நாயகன் படத்துலவந்த invisible-common man போல, நம்மைப் போல ஒருத்தனான, ஸ்ரீமான் இட்லிவடையாரின் பயணம், ஒரு பார்வை - இதோ உங்களுக்காக.
நான் யார் ? இட்லி வடைக்குள் ஒளிந்து கொள்ள நான் சாம்பார் அல்ல - உங்களில் ஒருவன், உங்கள் நண்பன், உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் சில சமயம் உங்கள் மனசாட்சி.
27th அக்டோபர் 2003 சுக்லபக்ஷ த்ரிதீயை அனுஷ நக்ஷத்ரத்துல இப்படி சொன்னது யாரு? ஷாட்சாத் நம்ம இட்லிவடைதான். இப்படி அவர் clue குடுத்ததுக்கு அப்புறமும் இட்லிவடை "யார்" என்று தெரியவில்லை என்றால் நான் என்ன செய்வது?? மேலே படியுங்கள்.

கடை திறந்து முதல்ல கொஞ்ச நாளைக்கு சரியாகப் போணியாகவில்லை என்றும், சரக்கு சுமாராக இருந்தாலும் மக்கள் வருகை குறைவாகவே இருந்ததாகவும் அறியப்படுகிறது. வந்தவர்களும் பாத்துட்டு சைலெண்டா எஸ்கேப் ஆகி உள்ளனர். பின்னூட்டம் போட்டு encourage பண்ணக்கூட யாரும் தயாராக இல்லை போல. இருந்தாலும் நம்ம அண்ணன் அசராமல் கடையைத் தொடர்ந்து நடத்தினார். ஆள் பிடிக்க அப்போ அப்போ புதிர்-போட்டி என்று நடத்தி இருக்கிறார். பல அஸ்திரங்களையும் விட்டுப் பார்த்துட்டு பலன் கிடைக்கவில்லை என்றாலும்கூட கொஞ்சம் கூட மனம் தளராமல், 2005-ஆம் வருஷத்தின் கடைசிப்பதிவில் சினிமா விமர்சனம் என்ற போர்வையில் சக பதிவர்களை செமையாக வாரி, மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறார்.

2006-ல் நடந்த தமிழக தேர்தலை ஒரு தொலைக்காட்சி போல கவர் செய்தாராம். முக்கியமாக தேர்தல் நேரத்தில் கேப்டன் இவர் கீ-போர்ட்ல நல்லா விழுந்து புறப்பட ஆரம்பித்தது இன்றும் தொடர்கிறது. உலகநாயகன் படங்களில் வந்ததைப் போல் தீர்க்ததரிசியாக பன்றிக்காய்ச்சல் பற்றி 2006 அக்டோபர் மாசத்துலயே எழுதி வைத்துள்ளார். தனது நக்கல் - நையாண்டி வேலைகளையும் தொடர்ந்து ரொம்பவே அதிரடியாகச் செய்து, நெறைய ஆச்சர்யம்-அதிர்ச்சி கலந்த பாராட்டுகளையும், கூடவே கொஞ்சம் அர்ச்சனைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

22nd April, 2007 அன்று நடந்த நடேசன் பூங்கா பதிவர் சந்திப்பு முடியறதுக்கு முன்னாடியே FIR போஸ்ட் ஒன்றைப் பதிவு பண்ணி தனக்குப் பல சைஸ்களிலும், எல்லா இடங்களிலும் ஆள் உள்ளனர் என்று நிரூபித்து சக வலை பதிவர்களை மீண்டும் ஒருமுறை கலவரப்படுத்தி இருக்கிறார்.

மூன்றாம் ஆண்டு துவக்க விழாவைச் சரியாகச் செய்யாததாலோ என்னவோ, அந்த ஆண்டின் கடைசி தினத்தில் (26.10.2007) இட்லிவடையின் கடவுச்சொல் திருடப்பட்டு ஆப்பு அடிக்கப்பட்டார் என்றும், இருந்தாலும் அதை உடனே சரி செய்து
ராம நாம சங்கீர்த்தனத்துடன் நல்ல advertisement குடுத்ததன் மூலம் இட்லிவடை நான்காம் ஆண்டு துவக்கத்திலேயே கடை மிகவும் களை கட்டியது என்பதும் வரலாறு.

தமிழுக்கு (சோ)சாதனையா?ன்ற பதிவில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் "வளைத்தளம்" அமைத்தார் என்று போட்டதில் என்ன உள்குத்து என்று மக்கள் ஆராய்ச்சி செய்ததாகக் கேள்வி. அதே போன்று வார்த்தை - விழா காட்சிகள் என்று ஒரு பதிவில் படங்களை மட்டுமே போட்டு வேறு "வார்த்தை" எதுவும் எழுதாத பதிவிலும் என்ன உள்குத்தோ என்று இன்றும் பேசுகிறார்கள். சரி, இதை இப்போ ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம மேல படிங்க!

பாம்பைப் பார்த்து எனக்கு பயம் கிடையாது என்ற நாட்டுக்கு முக்கியமான நமீதா நியூஸ் போட்ட இட்லிவடைக்கு மாமிகளைக் கண்டால் பயம் என்பது ஊரறிஞ்ச விஷயம். "அம்மணி சொன்னால் பதிவை எடுப்பேன் அல்லது போடுவேன்" என்ற இட்லிவடையின் வேதவாக்கு இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது. 2009 பொதுத்தேர்தலுக்காக தொகுதிவாரியாக ஆள் பிடித்து, கருத்து கணிப்பு நடத்தினார். இட்லிவடையின் இந்த கருத்துக் கணிப்பு "மரணஅடி" வாங்கினாலும், மிகவும் பாராட்டத்தக்க வகையில் interactive live-coverage குடுத்தார். உலகநாயகனின் "உபோஒ" படம் வந்தாலும் வந்தது, அதை வைத்து ஒரு "பதினைந்து பதிவுகள்" போட்டார். கடையில் ஓஹோ என்று நல்ல சூடாக வியாபாரம் ஓடியது. இந்த ஆண்டில் "ஆஸ்தான சரக்கு மாஸ்டருடன்" கை கோர்த்த இன்பாவும், யதிராஜ சம்பத்குமாரும் கடையில் கல்லாப்பொட்டி ரொம்ப உதவினர் என்றால் அது மிகையில்லை.

2008 அக்டோபர் மாசம் ~100 பேரால் மட்டுமே துரத்தப்பட்ட இட்லிவடைக்கு இந்தப் போஸ்ட் எழுதும்போது 750 registered வாசகர்கள். என்னே ஒரு அபரிமிதமான வளர்ச்சி!!! இவ்வாறாக இட்லி(க)வடை வளர்ந்து வீறுநடை போடும் நேரத்தில் யாரு போட்ட கண்ணோ (என் கண்ணு இல்லீங்கோ!), இட்லியோட கணினி கந்தல் ஆகி, ரெண்டு நாட்கள் கடையே திறக்க முடியவில்லை. அதுக்கு பரிகாரமா, இட்லிவடைய ஒரு போட்டி நடத்தச்சொல்லி பரிசு குடுக்க பரிந்துரை செய்கிறேன். எங்க ஊர்ப் பக்கம் "நாக்க புடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வின்னு" சொல்லுவாங்க. அதனால அதே மாதிரி இதோ போட்டிக்கான "மிகவும் சுலபமான" நாலு கேள்விகள்:

1. இட்லிவடை பதிவு-1000 என்பதை விளம்பரப்படுத்தாமல், 1008-ஆம் பதிவை "நம்பர் போட்டுப்"
பதிந்ததில் உள்ள உள்குத்து என்ன?
2. இதுவரை இட்லி போட்ட 2720 பதிவுகளில் "ஒருபடம்" நிறைய முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது எந்தப்படம்? எத்தனை முறை? காரணம் என்ன?
3. சண்டேன்னா ரெண்டு ஆரம்பிக்கப்பட்டது எப்போது?
4. கடைசிக் கேள்வி. ரொம்ப ரொம்ப ஈஸி. இத எழுதினது யாரு?

இந்த நாலு கேள்விகளுக்கும் மிகச் சரியான பதில் சொல்பவர்களுக்கு என்றைக்காணும் ஒருநாள் இட்லிவடை அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் குடுப்பாருன்னு நம்பறேன். என்னது, கியாரண்டியா?? அதெல்லாம் என்னால தர முடியாதுங்க. பலனை எதிர்பார்க்காம முயற்சி பண்ணுங்க, வெற்றி உமதே. இட்லிவடை மனசு வெச்சா நீங்க அவரை கண்டிப்பா மீட் பண்ணலாம். அதுக்கு முன்னாடி இட்லிவடையோட statistics கொஞ்சம் தெரிஞ்சு வெச்சுக்கங்க. (நமக்காக இட்லிவடை நெறைய "வெட்டி-ஒட்டி" போஸ்ட் போடறாரு. அதுனால ஏதோ என்னால முடிஞ்ச "பரமவெட்டி" வேலை).

Status as on 24th October, 2009 (1615 hours IST)
இட்லிவடையின் பதிவுகள்


பின்னூட்டங்கள்






ரொம்பப் பேர் இட்லிவடை ஒரு "கூட்டம்"; "யார் என்ன புலம்பினாலும்-free-யா-எப்பவும் பாசத்தோட-பிரகாசமா-நிழலில் ஒக்காந்துண்டு-பத்தி பத்தியா" மாறி மாறி எழுதினா இட்லிவடைக்கு மேட்டர் ரெடி" என்று சொல்லிக் கொண்டு உள்ளனர். சந்தேக வட்டத்தில் கட்டம் கட்டப்பட்ட அந்தப் பிரபலங்களும் "நான் அவன் இல்லை" என்று ரொம்பத் தெளிவாகச் சொல்கின்றனர். என்னைப் பொறுத்தவரை, என்னதான் நம்மைச்சுற்றிப் பகுத்தறிவுப் பகலவகன்களும், நாத்திகம் பழகுபவர்களும் இருந்தாலும், இந்த "டிகிரி தோஸ்துகளுக்கு" தோஸ்தான "கடவுள் மாதிரி ஒருத்தர்தான்" இட்லிவடை என்பது நிச்சயம். திரு பாராவே கூட இட்லிவடை "வெங்கடாஜலபதி" போன்ற ரொம்பப் பரிச்சயமான பெயர் கொண்டவராக இருப்பார் என்று சொல்லி இருக்காரு. எது எப்படியோ, "அவனா நீ" விளையாட்டு கண்டிப்பாகத் தொடர வேண்டும் என்பதே என் மற்றும் எல்லாரது விருப்பமும். அவ்வாறு தொடர வசதியாக, தேவைப்பட்டால், ஒரு புதிய முகமூடி ஒன்று வாங்கித் தரவும் நான் தயார் என்று இந்த சபையில் உறுதிகூறுகிறேன்.

கடை ஆரம்பித்த அன்று முதல் - இன்றுவரை செய்த(வ)தைப்போல "என்றென்றும்- இட்லிவடையார்" சமுதாய அக்கறையுடன்-தொடர்ந்து சிந்தனையைத் தூண்டி, என்னை மாதிரி விசிலடிச்சான் குஞ்சுகள் முதல், மதிப்பிற்குரிய மாமிகள் வரை, எல்லா வாசகர்(கி)களின் மனதை மகிழ்விக்கக் கூடிய பதிவுகளைப் போட, இன்று பொய்கை ஆழ்வாரின் திருநட்சத்திரமான திருவோணம் என்பதால் அவரோட சில "பாசுரங்களையும்", மற்றும் கந்தசஷ்டி முடிஞ்சு முதல் செவ்வாய்க் கிழமையாக இருப்பதால் கொஞ்சம் நேம நிஷ்டையோட "சஷ்டிகவசமும்" சேவித்துப் பிரார்த்திக்கிறேன்.

இட்லிவடையும்-வாசகர்களும் வாழ்க வளமுடன்!
இப்படிக்கு "என்றென்றும் அன்புடன்" ,
கி.அ.அ. அனானி மாதிரியே வேற ஒரு அனானி


நீங்க யாரு அதை சொல்லுங்க முதல்ல. படத்தில இருக்கும் இருவரில் ஒருவர் தானே நீங்க :-)


(பிகு: இன்றுடன் கலைஞர் கவியரங்கம் 'மாதிரி' பதிவுகள் முடிவடைகிறது. நாளை முதல் சில ஸ்பெஷல் பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன். இப்ப ஸ்கூலுக்கு லேட்டாச்சு வரட்டா. ஆறு வயது ஆனால் எலிமெண்டரி ஸ்கூல் போகும் சமயம் என்று சொல்லுவார்கள்...


Read More...

Monday, October 26, 2009

நீங்க ஒரு உலகப்பதிவர் இட்லிவடை!

இதோ ஆச்சு இருபத்தேழாம் தேதியோட ஆறு வருஷம். இனி ஆளாளுக்கு, நீங்க சூப்பர், உங்க கடை இட்லி படு சாப்ட், வடை ரொம்ப மொறு மொறுப்பு ன்னு புகழ ஆரம்பிச்சுடுவாங்க. தப்பி தவறி யாராவது எழுத மாட்டேன்னு சொல்லிட்டா, உடனே இவரே அவங்கள மாதிரி தாளிச்சு கொட்டிடுவார். சரி இந்த கொடுமைக்கு எல்லாம் நாமளே புள்ளையார் சுழி போட்டு வைக்கலாம் ன்னு....

இட்லிவடை அபிமானியாக அறியப்படுவது இணையத்தில் அச்சப்பட வேண்டிய விஷயம் என்று சில நண்பர்களால் அறிவுறுத்தப் பட்டேன். இருந்தாலும் டைப் அடிச்ச கை சும்மா இருக்குமா? அச்சம்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது. 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்துக்கு அருண் வைத்யநாதன் கூட இவ்வளவு விளம்பரம் பண்ணி இருக்க மாட்டார். அச்சமுண்டு stills, கேள்வி பதில், CD பரிசுன்னு பின்னிட்டார்.நான் கூட அந்த படம் பாக்குறப்போ, டைட்டில்ல, "Official Advertisement partner - Idlyvadai" இப்டி ஏதாவது கார்டு வருதா ன்னு தேடி தேடி பாத்தேன். அப்டி ஒண்ணையும் காணும். அதான் இப்போல்லாம் "சினிமாக்கள்ல முக்கியமானவங்களை எல்லாம் இருட்டடிப்பு பண்றாங்கன்னு" பொலம்பல் சத்தம் ஜாஸ்தியா கேக்குது கவனிச்சீங்களா?

சினிமா தியேட்டருக்குள்ள ஒரு டப்பா போன் எடுத்துட்டு போனாலே பயங்கரமா செக் பண்றாங்க. இவரு என்னன்னா ரிலீஸ் அன்னைக்கு போய், லைவ் விமர்சனம் எழுதறார். அநேகமா ஒரு லேப்டாப், wireless data card அல்லது குறைந்த பட்சம் ஒரு ஹை-டெக் செல்போன் எடுத்துட்டு போய் இருக்கணும்.
இல்ல சொந்தமா தியேட்டர் எதுவும் வெச்சுருக்கீங்களா இட்லி? எங்களுக்கு எந்திரன் படத்தை live-streaming பண்ண முடியுமா?

சரி அப்போ 'கனகவேல் காக்க' படத்துக்கும் இதே மாதிரி எழுதுவீங்களான்னு கேட்டேன். "மாட்டேன்"ன்னுட்டார். ஒரு கண்ணுல வெண்ணெய் மறு கண்ணுல சுண்ணாம்பா?
இது தெரியாம ஒருத்தர் இவருக்கு ஐந்தாண்டு பதிவும் எழுதி அதோட இவரை மாமி மெஸ்ஸுக்கு லஞ்ச் சாப்பிட வேற கூப்பிட்டார் பாவம்.

இட்லிவடை லிங்க்ல இருந்து கிளிக் பண்ணி, CD ஆர்டர் பண்ணா, கிழக்குல discount தராங்களாம். அவங்க நல்லவங்க. நானும் இவர் கிட்ட சாட்ல சொல்லிப்பாத்தேன். "உங்க கடைலயும் பாதி sales அவங்களை வெச்சு தான் பண்றீங்க, புத்தக விமர்சனம், ஆடியோ CD விமர்சனம், அது மட்டுமில்லாம அங்க இருக்க தலையில் இருந்து வால் வரை எல்லாரையும் சகட்டுமேனிக்கு சாத்தி தான் உங்க கடை நடக்குது. You must pay them some royalty" அப்டின்னு. வழக்கம் போல் smiley போட்டு எஸ்கேப்.

சரி இவர் கொஞ்சம் (கவனிக்கவும், கொஞ்சூண்டு தான்) நல்லா எழுதுறதுனால, கூட எழுதுற சகாக்களை கிண்டல் பண்றார், போனா போகுதுன்னா, "எனக்கு மட்டும் தான் ஹிந்துத்வம் தெரியும், வேற யாராச்சும் ஹிந்துத்வம் பேசினீங்களோ, தொலைச்சுடுவேன் ஜாக்கிரதை" என்கிற ரீதியில் monopoly பண்ணுவது :-( :-(

இவருக்கு என்ன? பதிவுக்கு மேட்டர் இல்லைன்னாலும், ஒரு பதினாறு பேர் கொண்ட விருந்தினர் குழு இருக்கு, எழுதி தர!

எங்களுக்கு எல்லாம் அப்டியா? ஏதோ கெடைச்ச மேட்டரை வெச்சு கேள்வி பதில் தொடர்பதிவு எழுதிட்டு இருந்தோம். உடனே எல்லாருக்கும் கொக்கி காய்ச்சல்ன்னு கெளப்பி விட்டுட்டார். உண்மை என்னன்னா, அந்த தொடர்பதிவுல இவர யாருமே கோர்த்து விடல...அந்த கடுப்பு.

Election வந்தாலும் வந்துச்சு. நம்ம IV ஒரே happening தான்.தொகுதிக்கு ஒரு ஆளைப்பிடிச்சு அலசல், கருத்து கணிப்பு, தேர்தல் அன்னைக்கு லைவ் discussion ன்னு பின்னி பெடலெடுத்தார்.ஆனா பாவம், ரிசல்ட் தான் ஊத்திக்கிச்சு. அட்லீஸ்ட் பாராளுமன்றம் இட்லிவடைக்கு பிடித்த மாதிரி இருக்க முனி தான் எதாவது பண்ணனும்.

Airtel சூப்பர் சிங்கர் finale லைவ் அப்டேட் பண்ணார். சரி நம்ம IVக்கு டிவி பாக்குறது, லைவ் அப்டேட் பண்றது எல்லாம் ரொம்ப பிடிச்சுருக்கேன்னு, "கலைஞர் டிவி" யில் ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சி வருது, அதை கண்டு களித்து அப்டியே லைவ் அப்டேட் பண்ணுங்கன்னு சொன்னேன். முடியாதுன்னா முடியாது ன்னு சொல்லணும். அதை விட்டுட்டு 'நீங்க உமாக்கு சொந்தமா'னு கேட்டு பிரச்னையை திசை திருப்பிட்டார்.

யானை இறந்தாலும் ஆயிரம் பொன் ன்னு ஒரு பழமொழி இருக்கு. நம்ம இட்லிவடை எதாவது போஸ்ட் போட்டு, அப்றோம் யாராவது திட்றாங்கன்னு அதை தூக்கிட்டாருன்னு வெய்யுங்க, "அது என்ன போஸ்ட் என்ன போஸ்ட்" ன்னு ஊரு முழுக்க பேச்சா இருக்கும்...நல்லா மார்க்கெட்டிங் பண்றீங்க இட்லி!

போன வருஷத்துக்கும் இந்த வருஷத்துக்கும் ஒரே difference தான். கேப்டனை freeயா விட்டுட்டார். 2011இல், நம்பிக்கை போய்டுச்சு போல. இல்ல '734 followers வந்தாச்சு, நாமளே கட்சி ஆரம்பிச்சுடுவோம்'ன்னு நெனைச்சுருக்கலாம். மானஸ்தன், இன்பா, யதிராஜ் மூணு பேரும் முறையே உள்துறை, கல்வி, திருப்பணி மந்திரிகள் ஆனதும் விமானத்துல போவீங்களா, ரயிலா?

அப்பறம் ஒரு நல்ல முன்னேற்றம், spelling mistakes வெகுவாக குறைந்து இருக்கிறது. எனக்கு தெரிஞ்சு nhm, ekalappai யில் எல்லாம் spellcheck இல்லை. ஒரு நல்ல தமிழ் வாத்தியார் அல்லது spellcheck assistant கெடைச்சுருக்கணும்.

ராசிபலன் எழுதும் ராமகிருஷ்ணன் கிட்ட தான் கேக்கணும். 'ஒரு நல்ல மந்திரவாதி தெரிந்தால் சொல்லுங்கள். வெற்றிலையில் மை போட்டு இட்லிவடை யார்ன்னு தெரியுதான்னு பாக்கணும்'.

இது விருதுகள் சீசன். அதனால இட்லிவடையோட ஆறாண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நானும் அவருக்கு ஒரு விருது குடுக்கலாம்ன்னு இருக்கேன்.
அவருக்கு உலக நாயகனை தான ரொம்ப பிடிக்கும்.So, on the similar lines,இட்லிவடைக்கு 'உலகப்பதிவர்' விருது வழங்குகிறேன்(Sorry Jsri!)
அட, இது உள்குத்து விருது அல்ல.(அண்ணா விருது மாதிரி) ஒரு அக்மார்க் விருது.

பின்குறிப்பு: ஏழாவது ஆண்டிலாவது சமத்தா இருக்க முயற்சி செய்யவும்.
( நன்றி: Mrs.ப்ரியா கதிரவன் )

மானஸ்தன், இன்பா, யதிராஜ் மூணு பேரும் முறையே உள்துறை, கல்வி, திருப்பணி மந்திரிகள் என்றால் இவர் தான் கொள்கை (பரபரப்பு) பரப்பு செயலாளர். எப்போதும் பெண்கள் தான் அந்த பதவிக்கு லாயக்கு :-)

Read More...

Sunday, October 25, 2009

அதிரடியான அழகிரி பத்திரிக்கை !

எந்தக் கழகம் ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைமை மற்றும் அமைச்சர்களைப் புகழ்ந்து சிலர் பத்திரிகை நடத்துவதும், அதன் மூலம் விளம்பரங்கள் பெறுவதும், அமைச்சர்களிடம் காரியம் சாதித்துக் கொள்வதும் வழக்கமானதுதான். ஜெயலலிதா ஆட்சியில் சில பத்திரிகைகள் அப்படி முளைத்ததுண்டு. தற்போதும் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை புகழ்வதற்கென்றே சில பத்திரிகைகள் வருகின்றன.


இதில், மு.க. அழகிரியைத் துதி பாடுவதற்காக வரும் ‘கலைஞரின் மு.க. அழகிரி’ என்ற மாதமிருமுறை இதழ் வித்தியாசமாக இருக்கிறது. சமீபத்தில் அதன் இரு இதழ்களை வாசிக்க நேர்ந்தபோது, வேடிக்கையாகவும், அதிரடியாகவும் இருப்பதை உணர முடிந்தது. அந்த அழகிரி இதழிலிருந்து சில பக்கங்களைப் பார்ப்போம்:

இதழின் முதல் பக்கத்திலேயே,

“இந்த இதழில் எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். தி.மு.க. தலைமையே கூட கொஞ்சம் எரிச்சல் அடையலாம். அதற்காக நாங்கள் வருத்தப்படப் போவதில்லை. எங்களுக்கு கலைஞர் மற்றும் அழகிரிதான் முக்கியம். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும், அவர்களை நேர்சீர்களை தூக்கிப் பார்த்துத்தான் எழுதுவோம்”

– என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்தப் பக்கத்தில் அமைச்சர் கே.என். நேருவைப் பாராட்டி விட்டு,

“அரசியலில் தன்னைத் தக்க வைத்து கொள்வதற்காக அவர் சில விதிகளை மீறலாம், கலைஞரைப் போல! அதனால் அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை. அதுதான் நியாயமும் கூட; தர்மமும் கூட”

– என்று குறிப்பிடுகிறது அழகிரி பத்திரிகை.

‘மு.க. அழகிரியின் தியரி’ என்ற கட்டுரையில்,

“ஓட்டர்களையே விலைக்கு வாங்கும் பணம் தியரி யாருக்கு வரும்? தாதா, ரௌடியிஸம் எதுவும் இல்லாமல், அவரால் எப்படி ஒரு புது தியரியை உருவாக்க முடிந்தது என்று எதிரிகளே அசந்து போய்விட்டார்கள். பெயருக்குக் கூட காசு அவிழ்க்காத கலைஞரின் வாரிசில் இப்படியொரு பிள்ளையா? பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணம் மக்களின் மனம் வரை பாயும் என்பதை, அழகிரி ஒருவரால்தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் சொல்கிறோம், கலைஞரின் மைந்தா வா! தலைமை ஏற்க வா!”

– என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி போலீஸ் கமிஷனர், திருச்சியில் பல கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆளும் கட்சி என்ற பாகுபாட்டைப் பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. அவரைக் கண்டித்து ஒரு கட்டுரை அழகிரி பத்திரிகையில் உள்ளது. ‘போலீஸைக் கட்டவிழ்த்து விட்டது கலைஞரா, துணை முதல்வரா?’ என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில்,

“தலைமை மட்டும் சூட்கேஸ் மாற்றிக் கொண்டால் போதாது. தொண்டன் ஒரு சுருக்குப் பையையாவது மாற்றிக் கொள்ள வேண்டாமா? ஒரு தொண்டனைப் போஸ்டர் ஒட்டுவதற்கும், நோட்டீஸ் ஒட்டுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு, அவனைப் பசை தின்னவா சொல்ல முடியும்? தலைவன் பிரியாணி தின்றால், தொண்டன் பழைய சோறாவது தின்ன வேண்டாமா?”

– என்று கேட்கும் கட்டுரை மேலும் விரிகிறது.


“துணை முதல்வர் பதவி வந்ததற்குப் பின்தான், இப்படி தி.மு.க.வின் பலத்தைக் குறைக்கிறார்கள். வட இந்தியப் போலீஸ் அதிகாரி வரும்போது ஆளும் கட்சிக்கே சவால் விடுகிறான். கேட்டால், நேரடியாக துணை முதல்வர் கண்காணிப்பில் வந்தவன் என்கிறார்கள். வடஇந்தியர்களின் கையில் தமிழகம் போய்விட்டதா? தயாநிதி மாறன் வீட்டில் தி.மு.க. கரைவேட்டிக் கட்சியினரை விட, வடநாட்டு மார்வாடிப் பயல்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது. இது எப்படி?

“ஜெயலலிதா ஆட்சிதான் போலீஸ் ஆட்சியாக இருந்தது. ஜெயலலிதா போல துணை முதல்வர் செயல்படுவதாக அறிகிறோம். மக்களுக்கு நலத் திட்டங்கள் அறிவித்தால் மட்டும் போதாது. தி.மு.க.வினரின் நலன்களையும் பார்க்க வேண்டும். மேல்மட்டத் தலைவர்கள் தேனை நக்கும்போது, தொண்டன் விரல் சூப்பிக் கொண்டா இருக்க முடியும்? ஸ்ரீரங்கம் 4-ஆவது வட்டச் செயலாளர் ராம்குமார், அமைச்சர் நேருவுக்காகப் பாடுபடும் தொண்டன். இவரை ஆன்லைன் லாட்டரி நடத்தினார் என்று போலீஸ் வழக்குப் போட்டுள்ளது. ‘காவல்துறை தன் கடமையைச் செய்யட்டும்’ என்று துணை முதல்வர் விட்டுவிட்டாராம். இது எதைக் காட்டுகிறது? துணை முதல்வரின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. நேருவின் கையை யார் கட்டிப் போட்டது? அஞ்சா நெஞ்சனிடம் இது நடக்குமா?”

– என்று போகிறது அந்தக் கட்டுரை.

அழகிரி பத்திரிகை, பக்கத்துக்கு பக்கம் அழகிரியின் படத்தோடு, அழகிரி பற்றிய செய்திகளையும் வெளியிட்டுள்ளது. இந்த அழகிரி பத்திரிகையின் பதிவு அலுவலகம் திருச்சியில் இருந்தாலும், மதுரையில் அழகிரியின் கல்யாண மண்டபம் அருகே ஒரு அலுவலகமும், டெல்லியில் ஒரு அலுவலகமும் இருப்பதாக இம்ப்ரின்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அஞ்சா நெஞ்சன்தான் கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும்’ என்று பல இடங்களில் குறிப்பிடும் இப்பத்திரிகையில், அழகிரியின் பேட்டி ஒன்றும் வெளியாகி இருப்பதால், அழகிரியின் ஆசியுடன் இந்தப் பத்திரிகை வெளிவருவதாகவே கருத வேண்டியுள்ளது.

(நன்றி: துக்ளக்)

அழகிரி நேர்மையானவர் என்று இப்பவாவது புரிஞ்சிக்கோங்க! இது செய்தியா இல்லை ஒப்புதல் வாக்குமூலமா ?

Read More...

சண்டேனா இரண்டு (25-10-09) செய்திவிமர்சனம், இன்பா

இந்த வார இரண்டு செய்திகள்...

செய்தி # 1
ஒட்டு மொத்த ஹிந்து மதத்தின் கூடாரமாக, மதத்தை வளர்ப்பதற்கு, பெருமைகளை கட்டிகாப்பதற்கு உருவாக்க பட்டது காஞ்சி சங்கர மடம். தனிமனித ஒழுக்க குறைபாடுகளோ..இல்லை ...அரசியல் காரணங்களோ என்ன காரணம் என்று என் சிற்றறிவுக்கு தெரியவில்லை..இன்று அந்த மடம் சங்கட மடம் ஆகி....ஈ ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பது நான் நேரில் கண்ட உண்மை.

கடந்த 22 ஆம் தேதி அன்று, மதுரை சங்கர மடத்திற்கு வந்த ஜெயேந்திரர் கூறியதாவது:

"சமுதாயத்தில் இன்று நிறைய பக்தி வளர்ந்து வருகிறது. நல்ல பண்புகள் குறைந்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும், பள்ளிகளிலும் நற்பண்புகளை வளர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். குழந்தை பருவத்தில் நல்ல பண்புகளை வளர்த்தால் தான் பெரியவர்களாகியும் நிற்கும். மனித வாழ்க்கையில் இரு கண்கள் தேவை. ஒரு கண் பக்தி. இரண்டாவது கண் நற்பண்புகள். நற்பண்புகள் வளர்ந்தால்தான் மனித வாழ்வு அமைதி, சாந்தி, சந்தோஷம் மிக்கதாகும்.

ஐந்தாண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் மழை வேண்டி பூஜை நடத்தப் பட்டது. அப்போது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது திருநாவுக்கரசர் மழை வேண்டி பாடிய பதிகத்தை மக்களை படிக்க செய்ய வேண்டும். இயற்கை மாற்றங்கள் விரைவில் சரியாகும் " என்றார் அவர்

இதை படித்தவுடன்..உங்களுக்கு தோன்றிய உணர்வு என்ன என்பதை பின்னூட்டத்தில் எழுதுங்கள்


செய்தி # 2

குறை கூறுவதையே தனது அரசியல் கொள்கையாக வைத்து இருக்கும் விஜயகாந்த் இங்கே குறை சொல்லிஇருப்பது... உலக தமிழ் மாநாட்டை...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான உயர்ந்த கருத்துக்களை கொண்டது தமிழ்மொழி. அம்மொழியின் சிறப்புக்களை அறியவும், ஆராயவும் இன்றைய உலகுக்கு ஏற்ற வகையில் எடுத்துரைக்கவும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் சார்பில் நடத்தப்படுவதே உலக தமிழ் மாநாடு.

முதலில் மலேசியாவிலும், பின்னர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் முதல்-அமைச்சர்களாக இருந்தபோது தமிழ்நாட்டிலும். உலக தமிழ் மாநாடு சிறப்பாக கொண்டாடப்பட்டது, பின்னர் வழி வழியாக எட்டு மாநாடுகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. தற்பொழுது தமிழ்நாட்டில் ஒன்பதாவது உலக தமிழ் மாநாடு நடத்தப்போவதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

ஆனால் இப்பொழுது அதற்கு மாறாக, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். உலக தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள அகில உலக தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டது. அந்த கால அவகாசத்தை தந்து உலக தமிழ் மாநாடு 2011-ம் ஆண்டு நடத்துவது தானே முறை.

உலக தமிழ் மாநாடு நடத்தும் சூழ்நிலை தற்பொழுது உலக தமிழர்களிடையே உள்ளதா? ஒரு புறத்தில் இலங்கையில் இலங்கை அரசு தமிழினப்படுகொலை நடத்தியுள்ளது. இன்றும் சிங்கள இனவெறி அரசின் தலைவர் ராஜபக்சே போர் குற்றவாளி என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்.

அவரை போர் குற்றவாளியென்று ஆர்ப்பாட்டம் நடத்தி, அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழர்கள் நாடற்றவர்களாகவும், நாதியற்றவர்களாகவும் உலகநாடுகள் அனைத்திலும் பிழைக்க வழியின்றி தினம் தினம் செத்துமடிகிறார்கள். தமிழராக பிறந்த ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்களின் துயர் துடைக்க தங்களை அர்ப்பணித்து கொள்வது தலையாய கடமையாகும்.

இப்பொழுது பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டுகிறது. முல்லைப்பெரியாறு நீர் தேக்க அணையை புதிதாக கட்ட கேரள அரசு சர்வே செய்கிறது.

கோவையில் நடத்தவுள்ள இந்த மாநாடு தமிழ் மக்களை ஏமாற்றும் போக்கு என்று கருத்து தெரிவித்துள்ள சில தமிழறிஞர் பெருமக்களை ஏற்கனவே காவல்துறையை விட்டு மிரட்டுவதாக அறிகிறேன்.

தமிழர்களுக்காக தமிழர்கள் சார்பில் தமிழர்களின் நன்மதிப்பைப்பெற்ற ஒரு தலைவர் நடத்துவது தான் உண்மையான உலக தமிழ் மாநாடு. அதற்கு பதிலாக இத்தகைய போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என்று தமிழ் மக்களையும், இத்தகைய முயற்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று தமிழ் அறிஞர் பெருமக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் இப்படி சொன்னது ஓரளவுக்கு நியாயமாகபடுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் அகதிமுகாம்களில் வாடும்நிலையில் மாநாடு நடத்தி தமிழ்மொழியை கொண்டாடுவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது?

இந்த வார உலக செய்தி :

பாகிஸ்தான் எல்லைப்பகுதியான தெற்கு வாஜிரிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் நடந்து வரும் சண்டையில் தாலிபானின் தாக்குதல் மற்றும் தடுப்பு உத்திகளால் ராணுவத் தாக்குதல் பின்னடைவு கண்டுள்ளது.

இதுவரை முக்கியப் பகுதியான கோட்காய் என்ற இடத்தின் ஒரு சில பகுதிகளை மட்டுமே ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சுமார் 115 தாலிபன்கள் பலியாகியுள்ளனர்.

கோட்காய் பகுதியில் உள்ள தாலிபானின் தலைவர் ஹாகிமுல்லா மெஹ்சூத் என்பவரின் வீட்டை ராணுவத்தினர் தகர்த்தனர். முக்கிய தாலிபான் தளபதியாக கருதப்படும், தற்கொலைப் படை பயிற்சியாளருமான குவாரி ஹுஸைனின் வீடும் தகர்க்கப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.

கோட்காயை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகள் செய்து வருகின்ற்னர். ஆனால் தாலிபான் தடுப்பு உத்திகள் பாகிஸ்தான் ராணுவத்தினரை திணறடித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதம் என்பது, பிடி இல்லாத இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி...அது தன்னை பிடித்தவனையும் கண்டிப்பாக கொல்லும் என்று எப்போது பாகிஸ்தான் உணரப்போகிறது??

(நன்றி...இனி அடுத்த வாரம்)

- இன்பா

Read More...

Friday, October 23, 2009

:-)

யார் கண் பட்டதோ தெரியவில்லை, எனது கம்ப்யூட்டருக்கு இரண்டு நாளா உடம்பு சரி இல்லை. பெருங்குளம் இராமகிருஷ்ணன் "இவ்வளவு நாளாக இருந்த வேலைப்பளு நீங்கும்" என்று என் ராசிக்கு கணித்த போது அதை நம்பவில்லை. ஆனால் இப்போது நம்புகிறேன்.


சரி விஷயம் இது தான், என் கம்ப்யூட்டருக்கு கொஞ்சம் பெரிய லெவல் வைத்தியம் செய்யவேண்டி உள்ளது. அதனால், அது சரி ஆகும் வரை கடையில் வியாபாரம் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். சந்தோஷப்பட வேண்டாம், விரைவில் உங்களை சந்திக்கிறேன். வேலை இல்லாதவர்கள், கமெண்ட் வந்திருக்கா, போஸ்ட் வந்திருக்கா என்று அடிக்கடி வந்து பார்த்துவிட்டு போங்க.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று விளம்பரம் செய்கிறார்கள். தமிழ் வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் இதில் சேர்ந்து, பயன் பெறலாம். இட்லிவடையையும் இந்த திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துவிட்டேன்.

தொடர்ந்து ஆதரவு தரும் இட்லிவடையின் வாசகர்களுக்கும், மெயில் மற்றும் சாட் மூலம் விசாரித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ( என் பெருமையை பின்ன எப்படி சொல்லுவது )

படம்: இன்றைய தேதியிட்ட ஹிந்து நாளிதழில் இடம்பெற்றுள்ள தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் பற்றிய விளம்பரம் இது! திட்டம் பரவலாக நல்ல திட்டம் என்று அறியப்படுகிறது. ஆயினும் விளம்பர வாசகங்கள் பகுத்தறிவின் வளர்ச்சியை எண்ணி வியக்க வைக்கிறது.

காலம் வீசும் கயிற்றைத் "தடுக்கும்" கலைஞரின் காப்பீட்டுத் திட்டம்.

கலைஞர் தமிழகவாசிகளுக்கு சாகாவரம் ஏதும் அளிக்கப் போகிறாரா?? எப்படித் தடுப்பார் என்று விவரமறிந்தவர்கள் கூறலாம். இந்த திட்டம் முன்பே இருந்திருந்தால் பலர் கலைஞர் கனவில் வராமல் தடுத்திருக்கலாம்.

முடிவாக, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற வாசகம்!

பகுத்தறிவே - RIP !

அன்புடன்
இட்லிவடை


மஞ்சள் பிட்: இந்த முறை இட்லிவடைக்கு வேலை வைக்கவில்லை கலைஞர். விளம்பரப் படத்தில் ஹைலைட்....யமன் பாசக்கயிற்றை வீசுவதை "மஞ்சள் துண்டு" அணிந்த கையொன்று கேடயத்தைக் கொண்டு தடுக்கிறது. :)) சின்ன மஞ்சள் பிட் என்றாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

படம், மற்றும் தகவல் உதவி: யதிராஜ சம்பத் குமார்

Read More...

Tuesday, October 20, 2009

சில கேள்விகள் சில பதில்கள்

இந்த வார பத்திரிகையில் வந்த சில கேள்வி சில பதில்கள்

துக்ளக் கேள்வி பதில்

கே: பெண்களால் ரகசியத்தை காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளதே ?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹா பாரதத்தில் இது மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருகிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது ஆரய்ச்சியின் முடிவு. இதை ஏற்காதவன் மூட நம்பிக்கையில் உழல்பவன்.
அப்படியா ? பெண்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் ?

ஜூவி - திருமாவளவன் பேட்டியிலிருந்து...
கே: நான்காம் நாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தீர்களே... அப்போது எப்படி இருந்தது உங்களின் மனநிலை?

பதில்: அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும் முன்னரே, முகாம்களின் நிலை குறித்துப் பேசுவதற்காக பாதுகாப்புத் துறை ஆலோசகரான கோத்தபய ராஜ பக்ஷேவைச் சந்தித்தோம். 'எனக்கு பாதுகாப்பு பணி மட்டும்தான் தெரியும். முகாம் நிலை குறித்து அறிய நீங்கள் அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக்ஷேயை பாருங்கள்' எனச் சொன்னார். பசில் ராஜபக்ஷேயிடம் பேசியபோது, 'முகாம்களில் தற்போது 3,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவெடுத் தோம். ஆனால், 268 கர்ப்பிணிகளைத்தான் அனுப்ப முடிந்தது' என்றார். இதற்கெல்லாம் பிறகே அதிபருடனான சந்திப்புக்கு ஏற்பாடானது.

அனைத்து எம்.பி-க்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள்' எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், 'நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம்' என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா?' எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.

சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, 'இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...' என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி-க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், 'நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்' என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். 'ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே' என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, 'அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன்' எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.''

நாயை அடிப்பானேன்?, ----சுமப்பானேன்?

உதயநிதி ஸ்டாலின் பேட்டியிலிருந்து

கேள்வி: நீங்க சினிமாவுக்கு வர்றீங்க... உங்க ஃப்ரெண்ட் விஜய் கட்சி ஆரம்பிச்சுடுவார் போலிருக்கே?''


''ஆமாங்க. அவருக்கு பாலிடிக்ஸ்னா அவ்வளவு இஷ்டம். காங்கிரஸ்ல அவர் சேரப் போறதா பரபரப்புகள் இருந்த சமயம், நான் தென்னாப்பிரிக் காவில் இருந்தேன். அவர் பிறந்த நாள் அன்னிக்குத் தான் திரும்பி வந்தேன். அன்னிக்கு பிரஸ் மீட்ல சார் பிஸி.

போன்ல வாழ்த்து சொல்லிட்டு, 'அண்ணா, பார்ட்டிலாம் இல்லையாங்ணா?'ன்னு கேட்டேன். 'வைப்போம்ண்ணா'ன்னார். 'ஆமாம்... இப்ப நீங்க வேற பார்ட்டியில இன்ட்ரெஸ்ட் ஆயிட்டீங்க போல இருக்கே'ன்னதும், 'கிண்டல் பண்ணாதீங்ணா'ன்னு ஜாலியாப் பேசிட்டு இருந்தார். அவரோட 51-வது படத்தை எனக்கு பண்ணித் தர்றேன்னு சொல்லியிருக்கார். பார்ப்போம்!''

அண்ணா நூற்றாண்டு விழா அதற்காக இவ்வளவு அண்ணா சொல்லணுமாங்கணா ?

அரசு பதில்கள்...
கேள்வி: பெண்கள் எப்படி உட்கார்ந்தால் அழகு?

நம் முதுகில் ஏறி உட்காராத வரை எப்படி உட்கார்ந்தாலும் அழகுதான்.

பழமொழியை பதில்களை அனுபவிக்கணும்! ஆராய்ச்சி பண்ணக்கூடாது!.

Read More...

Monday, October 19, 2009

அரசியலில் சீமானின் நாம் தமிழர் இயக்கம்!

சீமான் தொட‌ங்கும் "அதிர‌டி" அர‌சிய‌ல் க‌ட்சி


திருவண்ணாமலை: நாம் தமிழர் இயக்கம் மே மாதம் அரசியல் இயக்கமாக மாறுகிறது. திமுக, அதிமுகவை எதிர்த்து வெற்றி பெறுவோம். அடிக்கு அடி, உதைக்கு உதை என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் சேரலாம் என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.

நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து அதை தற்போது அரசியல் பாதைக்குக் கொண்டு சென்று வருகிறார் சீமான். அதற்கு முதல் படியாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று விளக்கக் கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் உணர்ச்சிகரமாக பேசினார்.

அப்போது சீமான் பேசுகையில், திமுக, அதிமுக கட்சிகளை விட இந்த இயக்கதை வலுப்படுத்திவிட்டுத்தான் தேர்தலில் இறங்க வேண்டும். இந்த இயக்கம் திராவிட கட்சிகள் போல் செயல்படாது. முற்றிலும் வேறுபடும். மக்களுக்காக தமிழனுக்காக பாடுபடும். திமுக,அதிமுகவை விட இந்த இயக்கம் வெல்லும்.

பிரபாகரனைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தமிழ் இன உணர்வாளர்கள் இதை நம்புகிறோம். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று மட்டும் கேட்காதீர்கள். நான் சொல்ல மாட்டேன்.

அப்படி சொல்லி பிரபாகரனை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை.

நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற போகிறோம். மே-17ல் இதற்கான மாநாடு நடைபெறும். அதன் பிறகு அடிக்கு அடி; உதைக்கு உதைதான்.

அடி, உதை கொடுக்க தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள்.

தமிழனின் இன உணர்வை அரசியல்வாதிகள் குறைத்துவிட்டார்கள். தமிழனை இன உணர்வுள்ள தமிழனாக வாழ வைப்பதற்குத்தான் நாம் தமிழர் இயக்கம் உருவாயிற்று.

உலகில் தமிழனுக்கு எங்கே பிரச்சனை என்றாலும் அங்கே நாம் தமிழர் இயக்கம் நிற்கும்.

தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்பது பெரியார் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவோம்.

முன்னதாக கூட்டம் நடந்த மாசிலாமணி திருமண மண்டபத்திற்கு வெளியே ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அக்ற போலீஸார் உத்தரவிட்டனர். ஆனால் அதற்கு நாம் தமிழர் இயக்கத்தினர் முடியாது என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவற்றை அகற்ற போலீஸார் முடிவு செய்தனர்.

இதை எதிர்த்து நாம் தமிழர் இயக்கத்தினர் சாலை மறியலில் குதித்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும் தொண்டர்களை அமைதிப்படுத்திய சீமான். மறியல் வேண்டாம். வேறு மாதிரியாக இவர்களுக்குப் பதிலடி கொடுக்கலாம் என்று கூறி அனைவரையும் போராட்டத்தைக் கைவிடச் செய்தார்.


- R.Gopi

முன்பு ராமதாஸ், இப்ப சீமான்!

Read More...

மீனம் ராசி பலன்கள்


மீனம் இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை 6வது ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி ஸப்தமஸ்தானத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை தீராத பிரச்சனை, முடிவெடுக்க முடியாமல் குழப்பம், மருத்துவச் செலவுகள் என இருந்ததல்லவா, இனி அந்த நிலை மாறும். கணவன் - மனைவிக்குள் எந்த பிரச்சனையானாலும் மனம் விட்டு பேசி உங்கள் பிரச்சனைகளை நீங்களே முற்றுப்புள்ளி வையுங்கள். மூன்றாம் மனிதரின் தலையீடு வேண்டாம். பிள்ளைகளின் உணர்விகளுக்கும் இடம் கொடுங்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடல்நிலையிலும் அக்கறைசெலுத்தவும். தலைவலி மற்றும் வாயு சம்பந்தமான நோய்கள் வந்து குணமாகும். பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிரியமானவர்களிடம் அடிக்கடி உரையாடுங்கள். சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும். பணத்தட்டுப்பாடு குறையும். தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள். முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிருங்கள். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும். பல சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது. பங்குதாரர்களை அனுசரித்து போகவும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுச்செலவுகள் இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம், மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு உயர்கல்வி கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம். கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள். மொத்தத்தில் சகிப்புத்தன்மையையும், தன்னடக்கத்தையும் தருவதாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

பூரட்டாதி 4ம் பாதம் : உங்களுக்கு ஏற்றத்தையும், பொலிவையும் கொடுக்கும் காலமிது. வெளியூர் பயணங்களால் அனுகூல்யம் உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியையும் மகான்களையும் வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்து வாருங்கள்.

உத்திரட்டாதி : ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தடைகள் விலகும். எதிரிகளின் பலம் என்ன என்று உங்களுக்கு தெரிய வரும். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். அனுமன் காயத்ரியை சொல்ல சொல்ல வாழ்வில் இனிதே நடக்கும்.

ரேவதி : உடல்நலம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வும் இடமாறுதலும் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கலைஞர்களுக்கு இது சிறப்பான காலம். ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஆராதனம் செய்தால் எல்லா நலமும் கிடைக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: விநாயகர் அகவல், ஸ்லோகம் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மீனம் 60/100 சண்முக கவசம் படிப்பது
ரிஷபம் மீனம் 65/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் மீனம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் மீனம் 70/100 ஸ்ரீசியாமளா தண்டகம் சொல்வது
ஸிம்ஹம் மீனம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி மீனம் 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் மீனம் 60/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது
விருச்சிகம் மீனம் 70/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது
தனுசு மீனம் 65/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் மீனம் 75/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் மீனம் 50/100 துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் மீனம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது மீனம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மீனம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மீனம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 55% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது. . எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மீனம் இராசி என்பவர்கள் தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் பூரட்டாதி 4 உத்திரட்டாதி ரேவதி
இராசி மீனம் மீனம் மீனம்
இராசியாதிபதி வியாழன் வியாழன் வியாழன்
நக்ஷத்திர அதிபதி வியாழன் சனி புதன்
அதிதேவதைகள் அஜைகபாத் அகிர்புத்னியன் பூஷா
கணம் மனுஷ கணம் மனுஷ கணம் தேவ கணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய நாடி பார்ஸுவ - இடது
மிருகம் சிங்கம் பசு யானை
பக்ஷி உள்ளான் குயில் வல்லூறு
விருக்ஷம் மாமரம்(தோமா) வேம்பு இலுப்பை
இரஜ்ஜு வயிறு தொடை இரஜ்ஜு பாதம்
வேதை நக்ஷத்ரம் உத்திரம் பூரம் மகம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, மேற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

குறிப்பு:

[1] ஜோதிடக் குறிப்புகள் தனி பதிவாக தரப்போகிறேன். காத்திருங்கள்.

[2] சில நண்பர்கள் "ஐயா, ஏதேதோ ஸ்லோகங்கள் போட்டிருக்கிறீர்களே, சிலது எங்களுக்கு தெரியவில்லை" என்றனர். அவர்களுக்காக சிறப்பு PDF FILE ஒன்றும் தயாரித்து வருகிறேன். காத்திருங்கள்.




இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இறைவனுக்கும், எனது குரு ப்ரும்மஸ்ரீ பெருங்குளம் குப்பு ஜோஸ்யரவர்களுக்கும் மற்றும் இட்லிவடைக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

பெருங்குளம் இராமகிருஷ்ணன்.


Read More...

கும்ப ராசி பலன்கள்

கும்பம் இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை ஸப்தம ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி அஷ்டமஸ்தானத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை ஏழ்மையும், ஏமாற்றமும் தந்துவந்தார். எதை எடுத்தாலும் காரியத்தடை, உடல்நிலை குறைபாடு என கடந்த 2 1/2 வருட காலமாக அப்பப்பா சொல்லமுடியாத வருத்தங்கள். இனி உடல்நிலையில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன கண்டங்களிலிருந்து தப்பித்து இருப்பீர்கள். எதையுமே முழுதாக அனுபவிக்க முடியாமல் ஏதாவது தடை இருந்து வந்திருக்கும். அது இனி மாறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இருந்த மனக்கசப்புகளும் நீங்கும். தடைபட்டிருந்த கல்வி இனி சிறப்புறும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும். பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி போடவும். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீர்நிலைகளில் செல்லும்போதும் கவனம் தேவை. எதிலும் யோசித்து செயல்படவும். நீங்கள் நல்லது சொன்னாலும், செய்தாலும் விமர்சனம் செய்யப்படலாம். கவனம். நீங்கள் யாருக்கெல்லாம் நல்லது செய்தீர்களோ அவர்களில் சிலர் அதையெல்லாம் மறந்து விட்டு சண்டையிடலாம். முடிந்தவரை ஆன்மீகப்பாதையில் செல்லவும். தியானம் மற்றும் யோகாசனம் செய்யவும். அவற்றையும் பொறுமையாக கையாளவும். யாரிடமும் அளவாகப் பழகுங்கள். ஆடை அணிகலன்கள் சேரும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க அனுகூல்யம் கிடைக்கும். சிலர் உங்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். கடன் வாங்குவதையோ மற்றும் கொடுப்பதையோ தவிர்க்கவும். வெளிநாட்டு தொடர்புகள் அதிகரிக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையை சந்தேகப்படும் அளவுக்கு உங்களது நடவடிக்கைகள் இருக்காவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். குல தெயவபிரார்த்தனையை கைவிடாதீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் பல பேரிடம் ஆலோசனைகளை கேளுங்கள். அதன்பின் முடிவெடுங்கள். பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். வியாபாரத்தில் அதிரடியாக புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமூக உறவு இருக்கும். உண்மையான நன்பர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தவும். நல்ல நண்பர்களிடம் நட்பு வையுங்கள். பெற்றோர் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள். முன்கோபம் கூடவே கூடாது. கலைஞ்ர்கள் பரபரப்பாக இருப்பார்கள். அந்நிய வாய்ப்புகள் தேடிவரும். பொதுவாக கடந்த கால இழப்புகளிலிருந்து மீண்டு புதிய தன்னம்பிக்கையும், துணிவும் தருவதாககைந்தபெயர்ச்சி அமைந்திருக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

அவிட்டம் ,3,4ம் பாதம் : சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை. முருகனை வணங்குங்கள், முன்னின்று அனைத்தையும் நடத்துவான்.

ஸதயம் : இடையூறுகள் எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. துர்க்கையை வணங்கினால் எதிலும் சக்ஸஸ்தான்.

பூரட்டாதி 1,2,3 ம் பாதம் : பிள்ளைகளால் தொந்தரவு நேரலாம். வெளிவட்டாரபழக்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும். வியாழபகவானை மனதில் நினைத்துக் கொண்டேஇருந்தால் மனதிடம் அதிகரிக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஸரஸ்வதி ஸூக்தம் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் கும்பம் 60/100 சஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் கும்பம் 55/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் கும்பம் 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் கும்பம் 70/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் கும்பம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி கும்பம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் கும்பம் 55/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் கும்பம் 65/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது
தனுசு கும்பம் 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம். கும்பம் 60/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் கும்பம் 50/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது.
மீனம் கும்பம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம், காயத்ரி சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது கும்பம் 50/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது.
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து கடகம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கும்பம் இராசி என்பவர்கள் கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் அவிட்டம் 3,4 ஸதயம் பூரட்டாதி் 1,2,3
இராசி கும்பம் கும்பம் கும்பம்
இராசியாதிபதி சனி சனி சனி
நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு குரு
அதிதேவதைகள் வஸுக்கள் வருணன் அஜைகபாத்
கணம் இராக்ஷஸ கணம் இராக்ஷஸ கணம் மனுஷ கணம்
நாடி மத்ய பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது
மிருகம் பெண் சிங்கம் பெண் குதிரை சிங்கம்
பக்ஷி வண்டு அண்டங்காக்கை உள்ளான்
விருக்ஷம் வன்னி கடம்பு மாமரம்(தோமா)
இரஜ்ஜு சிரோ கழுத்து இரஜ்ஜு வயிறு
வேதை நக்ஷத்ரம் மிருகசீர்ஷம், சித்திரை ஹஸ்தம் உத்திரம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

இன்றைய ஜோதிடக் குறிப்பு:

இன்று நாம் பார்க்கப் போகும் தலைப்பு:

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது? - பாகம் 4

[ குறிப்பு: திருமணமானவர்கள் இதை பிரயோகப்படுத்தி பார்க்க கூடாது, மிக முக்கியமாக திருமணம் முடிவானவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பிரயோகப்படுத்தி பார்க்காதீர்கள்]

எத்தனை ஸ்டெப்ஸ் உள்ளன?

[1] நக்ஷத்ர விஷயாதி - தசவிதப் பொருத்தம் - நாம் ஏற்கனவே விருச்சிக ராசி பலன்களில் பார்த்து விட்டோம்

[2] திசா விஷயாதி - இருவருக்கும் உள்ள திசையை வைத்து பார்ப்பது.

[3] பாப ஸாம்மிய விஷயாதி.

[4] செவ்வாய் தோஷ விஷயாதி - நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம்

[5] தோஷ நிவர்த்தி விஷயாதி.

என 5 விதமான ஸ்டெப்ஸ் உள்ளன.

இப்போது நாம் பார்க்கப் போவது 3வது ஸ்டெப்பான பாவஸாம்மிய விஷயாதி மற்றும் 5வது ஸ்டெப்பான தோஷ நிவர்த்தி விஷயாதி.

பாப ஸாம்மிய விஷயாதி ( WHICH MEANS PAAVASAMYAM NOT BHAVASAMYAM - இதற்குண்டான வித்தியாசங்களை பிறகு விவரிக்கிறேன் ) :-

கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மறுபடியும் படிக்க படிக்க புரியும்.

கீழ்க்கண்ட இரு ஜாதகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் பெண் குழந்தை பிறந்தது.

DOB: 12-05-1972; 11:17 am; Trichy

ஆண் குழந்தை பிறந்தது

DOB: 18-11-1967; 02:55 am; Tirunelveli

பாவ ஸாம்மியம் பார்ப்பது எப்படி?

பெண்ணுக்கு:

லக்னம் 1ம் இடம் 7ம் இடம் 8ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 1 1 0 2
சந்திரன் 0 0 0 0
சுக்ரன் 1/2 0 1/2 1
ஆக மொத்தபாவம் 3

லக்னம் 1ம் இடம் 7ம் இடம் 8ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 1 0 0 1.0
சந்திரன் 3/4 3/4 0 1.5
சுக்ரன் 0 0 0 0.0
ஆக மொத்தபாவம் 2.5

ஆணுக்கு:

லக்னம் 1ம் இடம் 2ம் இடம் 7ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 0 1 0 1
சந்திரன் 0 0 0 0
சுக்ரன் 0 1/2 0 1/2
ஆக மொத்தபாவம் 1 1/2 (1.5)

லக்னம் 1ம் இடம் 2ம் இடம் 7ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 1 0 1 2.0
சந்திரன் 0 3/4 0 3/4
சுக்ரன் 0 0 1/2 1/2
ஆக மொத்தபாவம் 3.25

இனி:

* பாவகச்சக்கரம் நவாம்ஸம்
ஆண் 1.5 3.25
பெண் 3.5 2.50

ஆக நமக்கு மேற்சொன்ன டேபிள் விடையாக வந்திருக்கிறது. இதில் ஆணுக்கு பெண்ணை விட பாவம் அதிகமாக இருக்க வேண்டும். பாருங்கள் - நமது விடையில் பெண்ணின் பாவகச்சக்கரம்(BHAVA CHART) பாவம்(PAAVAM) ஆணை விட அதிகமாக உள்ளது. எனவே சேர்க்கக் கூடாது. மற்றபடி சேர்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த பதிவில்....

இனி மீனம் இராசிக்குண்டான பலன்களில் சந்திபோம். நன்றி


[ கணிப்பவர் பெருங்குளம் இராமகிருஷ்ணன் ( rameshramky06.venkat@gmail.com ) ]

Read More...