பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 12, 2009

கலைஞரின் டைரி குறிப்பு

மருத்துவமனையில் "ஓ" வென அலறிய கலைஞர் ( நன்றி: முரசொலி )
மருத்துவமனை பற்றி ஓ-பக்கங்களில் அலரும் ஞாநி... ( நன்றி: குமுதம் )

எச்சரிக்கை: பெரிய பதிவு

முரசொலி கடிதம்
(ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டது முதல் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சைகள் இவற்றினூடே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக் கிறேன், இந்த தொடர் கட்டுரை மூலம்)

*****

உடன்பிறப்பே,

கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக மருத்துவமனையிலும், வீட்டிலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அபாயகரமான அறுவை சிகிச்சை செய்து கொண்டு, சிகிச்சைக்கு இடையிலேயும் தவறாமல் பொதுப் பிரச்சினை குறித்தும், அரசுப் பிரச்சினை குறித்தும் அவ்வப்போது உடன்பிறப்பு மடல்கள் மூலமும், அறிக்கைகள் மூலமும் உன்னோடு தொடர்பு கொண்டு வருகிறேன் என்றபோதிலும், என்னுடைய உடல் நிலை என்ன, எனக்கு என்ன ஏற்பட்டது, என்ன செய்தார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி நான் உனக்கு எதுவுமே தெரிவிக்கவில்லை.

நான் செய்து கொண்ட சிகிச்சைகள் பற்றி என்னைச் சந்தித்த - பார்க்க வந்த முக்கியஸ்தர்களுக்கு எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கினார்கள். ஆனால் உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு நான் தெரிவிக்கவில்லையோ என்ற குறைபாடு எனக்கு இருந்தது. அதன் காரணமாக தற்போது சற்று உடல் நிலை தேறி வருகின்ற நிலையில் எனக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி தேதி வாரியாக உனக்கு விளக்கிட விரும்பு கிறேன்.

26-1-2009

கடந்த ஓரிரு மாதங்களாக என்னுடைய முதுகுப் புறத்தில் தாங்க முடியாத வலியிருந்த போதிலும், அதனைப் பொறுத்துக் கொண்டு - அதைப் பெரிதுபடுத்தினால் மருத்துவர்கள் படுக்க வைத்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டே வெளியே யாரிடத்திலும் சொல்லாமல் - குடும்ப டாக்டர் கோபால் அவர்களிடம் கூறி - அவர் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மயில்வாகனன் அவர்களை வீட்டிற்கு வரவழைத்து - வலிக்கின்ற இடத்தில் மின் ஒத்தடம் கொடுக்கச் செய்தும் - தற்காலிக வலி நீக்கத்திற்கான மாத்திரைகளைப் போட்டுக் கொண்டும் காலம் கடத்திப் பார்த்தேன்.

இதற்கிடையே தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததை யொட்டி இரண்டு ஆண்டுகளாக தம்பி துரைமுருகனும், தம்பி ஜெகத்ரட்சகனும் இணைந்து, ஒரு நாள் முழுவதும் வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, ஆயிரக் கணக்கான மக்களைக் கூட்டி கவியரங்கம், பட்டி மன்றம், வாழ்த்தரங்கம் போன்றவைகளை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் இந்த ஆண்டும் அதற்கான நாளைக் கேட்டார்கள். நான் கூட அவர்களிடம் அப்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருப்பதால் பிறிதொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிப் பார்த்தும் கேட்காமல், சட்டமன்றம் இல்லாத ஒரு நாளில் வைத்துக் கொள்வதாகக் கூறி ஒப்புதல் பெற்று விட்டார்கள்.

தமிழின் பெயரால் எடுக்கப்படும் அந்த விழாவின் பல நிகழ்ச்சிகளையும் நான் கண்டு மகிழ்வதில் அவர்களுக்கு "ஆத்ம திருப்தி’’. அதனால் அந்த விழா நிகழ்ச்சியில் ஒரு நாள் முழுவதும் அங்கேயிருந்து - நம்மை மதித்து மற்றவர்கள் நம்முடைய உரையினைக் கேட்பதைப் போல - அவர்களைப் பெருமைப்படுத்த நாமும் அமர்ந்து அவர்களுடைய உரைகளைக் கேட்பதென்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது என்பதை உணர்ந்த நான் - வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அந்த விழா நிகழ்ச்சியில் பத்து மணி நேரம் என்னுடைய முதுகு வலியை மறந்து விட்டு அமர்ந்திருந்தேன். தமிழின் இனிமையில் முதுகு வலி தெரியவில்லை, ஆனால் விழா முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு தாங்கொணா வலி. நான் துடிதுடிப்பதைப் பார்க்க முடியாமல் வீட்டார் ஏன் அவ்வளவு மணி நேரம் விழா நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தீர்கள் என்று கடுமையாகக் கோபித்துக் கொண்டார்கள்.

25-1-2009

அன்று நள்ளிரவு நேரம் ஆக ஆக, வலி குறைவதற்கான அடையாளம் தெரியவில்லை. குடும்ப மருத்துவர் கோபாலும் என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டர் மயில்வாகனன் அவர்களின் யோசனையையும் பெற்று, ராமச்சந்திரா மருத்துவமனையின் எலும்புச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே. மார்த்தாண்டம் அவர்களை வீட்டிற்கு வரவழைத்தார். டாக்டர் மார்த்தாண்டம் அவர்கள் என்னை வந்து பார்த்து விட்டு, நான் படும் வேதனையைக் கண்டு உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். அப்போது இரவு மணி 1. எனவே உடனடியாகப் புறப்பட்டு, ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இரவு 2 மணிக்கு சென்றடைந்தோம்.

இரவு 2 மணி அளவில் மருத்துவ மனையைச் சென்றடைந்த நான் - டாக்டர் தணிகாசலம் அவர்களாலும், தம்பி வெங்கடாசலத்தாலும் வரவேற்கப்பட்டேன். டாக்டர் தணிகாசலம் அவர்களை கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக நான் அறிவேன். அவர் சென்னை பொது மருத்துவமனையிலே பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, பதவி உயர்வு குறித்து அவருக்கு தீங்கிழைக்கப் பட்டதாக என்னிடம் முறையீடு செய்தபோது, அதனையேற்று உடனடியாக நியாயம் வழங்கியதன் பேரில் என்னிடம் அவருக்கு தனி மரியாதை உண்டு. அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ராமச்சந்திரா மருத்துவமனையில் பணிபுரிந்த போதிலும் அடிக்கடி என்னைச் சந்திக்கக் கூடியவர். அந்த முறையில் நான் அங்கே உள் நோயாளியாக சேருவதற்காக வருகிறேன் என்ற செய்தி சென்றதுதான் தாமதம், வாசலிலேயே வந்து காத்திருந்தார்.

மருத்துவமனைக்குச் சென்றதும் நேராக அறைக்கு அழைத்துச் செல்லப்படாமல் - காரிலிருந்து இறங்கிய அளவிலேயே எக்ஸ்ரே எடுப்பதற்காகவும் - எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்காகவும் அழைத்துச் செல்லப் பட்டேன். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதைப் பற்றி அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்கள் நன்றாக அறிவார்கள். கூண்டு போன்ற ஒரு இயந்திரத்திற்குள் முழு உடம்பையும் தள்ளி, அங்கே கை கால்களையெல்லாம் அசைக்காமல் படுக்க வைத்து உடலின் பல்வேறு பாகங்களின் செயல்பாடுகள் குறித்து இயந்திரத்தின் மூலம் சோதனை செய்வார்கள். அந்த இயந்திரத்தின் சத்தமே மிகவும் பயமுறுத்துவதாக இருக்கும். யாரும் விரும்பி அந்தச் சோதனைக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அன்றையதினம் எம்.ஆர்.ஐ. சோதனை கூட எனக்குப் பெரிதாக அல்ல. தள்ளிக் கொண்டு போகும் நாற்காலியிலே என்னை அமர வைத்து அழைத்துச் சென்றவர்கள் - எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்காக படுக்க வைக்க முயன்ற போதே வலி தாங்க முடியாமல் "ஓ" வென அலறி விட்டேன். "எக்ஸ்ரே எல்.எஸ். ஸ்பைன்" மற்றும் "எம்.ஆர்.ஐ. ஆப் எல்.எஸ். ஸ்பைன்" எடுக்கப்பட்டதில் - முதுகுத் தண்டில் எல்.2 மற்றும் எல். 3 இடையே உள்ள ஜவ்வு (டிஸ்க்) ஒரு கணு விலகி, நரம்புப் பகுதியை அழுத்திக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எழுதுவதற்காக நீண்ட நேரம் உட்கார்ந் திருக்கின்ற காரணத்தாலும் மற்றும் வயதான காரணத்தால் முதுகு தண்டு வடத்திலும் தேய்மானம் ஏற்பட்டிருப்பது நன்கு தெரிய வந்தது. (X Ray L-S Spine and M.R.I. of L.S. Spine was done which revealed Disc Prolapse at L2-L3, Spinal Canal Stenosis and degenerative Spondylosis). இந்தச் சோதனைகள் முடிந்து டி.7 வார்டில் இருந்த என் அறைக்கு விடியற்காலை 4.30 மணி அளவில் தான் அழைத்துச் செல்லப்பட்டு படுக்க வைக்கப்பட்டேன். வலி கொஞ்சம் கூட குறையாத அளவிற்கு என்னை துடிக்க வைத்துக் கொண்டே இருந்தது. எந்தப் பக்கமும் புரள முடியவில்லை. மருத்துவர்கள் வலி நிவாரணத்திற்கான மாத்திரைகளை அளித்தார்கள். அந்த மாத்திரைகள் ஓரளவிற்குத்தான் என் வலியைக் குறைத்தன.

4.30 மணி அளவிலேயே மருத்துவ மனையில் இருந்தபோதே - உதவியாளரை அழைத்து காலையில் குடியரசு நாளையொட்டி - ஆளுநருடன் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாது. எனவே பேராசிரியரை தொடர்பு கொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு அவரை அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்வதோடு, அந்தத் தகவலை ஆளுநருக்கும், தலைமைச் செயலாளருக்கும் தெரிவித்து விடு என்று கூறினேன்.

காலை 7 மணி அளவில் டாக்டர் தணிகாசலம் அவர்கள் என் உடம்பின் பொதுவான நிலைமைகளையெல்லாம் பரிசோதித்தார். இரத்த சோதனைகள் செய்ததில் புரதச் சத்து குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நான் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டது அதற்குள் பத்திரிகையாளர்கள் வாயிலாக வெளி உலகத்திற்குத் தெரிந்து தொலைபேசிகள் வாயிலாகவும், பல பேர் நேரிலும் மருத்துவ மனைக்கு வரத் தொடங்கி விட்டனர்.

தமிழக அரசின் சார்பாக மருத்துவ மனை யிலே நான் அனுமதிக்கப்பட்ட செய்தியினை தெரிவித்தும் - ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவித்தும் ஒரு செய்திக் குறிப்பினைக் கொடுக்கச் செய்தேன்.

27-1-2009

மருத்துவமனையிலே எனது இரண்டாவது நாள் வாழ்க்கை தொடங்கியது. வலியைக் குறைப்பதற்காக "பிசியோதெரபி" (டென்ஸ்) சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்றிலிருந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கொடுத்தார்கள். அன்று காலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டித் தலைவருமான திருமதி சோனியா காந்தி அவர்கள் - மாநிலங்களவை உறுப்பினர், என் மகள் கனிமொழியை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, என் உடல் நலம் குறித்து கேட்டறிந்ததோடு, நான் விரைவில் நலம் பெற்று பணி தொடர்ந்திட தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து டெல்லிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நான் சென்று பிரதமரைச் சந்தித்தபோது, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க - இலங்கைக்குச் செல்வதாக உறுதி அளித்திருந்த மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் 27ஆம் தேதி இலங்கை செல்வதற்கு முன்பு மருத்துவமனையிலே இருந்த என்னிடம் தொடர்பு கொண்டு என் உடல் நலம் விசாரித்தார். நான் உடல் நலம் குறித்து அவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாக, அவர் இலங்கைச் செல்வதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். விரைவில் உடல் நலம் பெற வேண்டுமென்ற அவருடைய வாழ்த்தினை தெரிவித்தார். பிரணாப் முகர்ஜி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்ததையும், இலங்கைக்குப் புறப்பட்டு செல்வதாக கூறியதையும் பேரவையில் அவை முன்னவர் பேராசிரியர் அவர்கள் அறிவித்தார்.

28-1-2009

அன்றையதினம் என்னால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மருத்துவர்கள் உடனடியாக விரைந்து வந்து வலியைக் குறைப்பதற்காக ஊசி போடலாம் என்று முடிவு செய்து ஊசி போட்டார்கள். அன்று மாலையில் பிரபல எலும்பு சிகிச்சை நிபுணரும் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான டாக்டர் மோகன்தாஸ் அவர்கள் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்த்தார். அங்கிருந்த மருத்துவர்களோடும் கலந்துரை யாடினார். அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முறைகளை தொடருமாறும் விரைவில் உடல் நலம் பெறும் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

29-1-2009

விடியற்காலையிலேயே வலி என்னால் தாங்க முடியவில்லை. மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு அன்று காலையிலும் மாலையிலும் வலியைக் குறைப்பதற்கான ஊசிகள் போடப்பட்டன.

30-1-2009

எனது கல்லீரல் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி ஒரு சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகளில், கல்லீரல் முறையாகவும் நன்றாகவும் செயல்படுவதாகவும் அங்கே எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடுமையான முதுகு வலி, விலாப்புற வலிகளால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையிலே நான் இருந்த நிலையிலே கூட - என்னை இயங்க வைக்க வேண்டுமென்ற அக்கறையோடு - எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா பல்வேறு கேள்விகளைக் கேட்டு - என்னை மிகவும் கடுமையாகத் தாக்கி - தன் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தார். என் தாங்க முடியாத வலியைக் குறைப்பதற்கு - மருத்துவர்களின் மருந்துகளை விட சக்தி வாய்ந்தது எழுத்துதான் என்பதால் - ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பதில் கூறி - மருத்துவமனையில் படுத்துக் கொண்டே எழுதினேன். முடியாத நிலையில் பதில்களை உதவியாளர் மூலமாக "டிக்டேட்" செய்தேன்.

இன்று என் மகன் மு.க. அழகிரியின் 58வது பிறந்த நாள் என்ற வகையில் காலையிலேயே என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு என் வாழ்த்துகளைப் பெற்றார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைக்கு செல்வதாக என்னிடம் கூறி விட்டுச் சென்றதைத் தொடர்ந்து 30ஆம் தேதி யன்று எனக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில்

"தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மருத்துவச் சோதனைகளும் சிகிச்சைகளும் பெற்று வருவதை அறிந்து நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் விரைவில் முழுமையாக குணம் அடைவீர்கள் என்றும் நம்புகிறேன்.

கடந்த ஜனவரி 27 அன்று கொழும்பில் இலங்கை அதிபர் ராஜ பக்சேயுடன் எனது பேச்சு வார்த்தை குறித்து நான் முன்னர் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். நேற்று மாலை, அதிபர் ராஜபக்சே, மோதல் பகுதியி லிருந்து தமிழர்கள் பாதுகாப்பையும், பத்திரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சுதந்திரமாக வெளியேற 48 மணி நேரம் அவகாசம் அளித்து அழைப்பு விடுத்துள்ளார். மோதல் பகுதியில் சிக்கிக் கொண் டுள்ள பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வதை அனு மதிக்கத் தேவையான உத்தரவுகளை இலங்கை அரசு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் நான் எழுப்பிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்பதையும், அதன்படி பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற வகை செய்ய வேண்டும் என்று இந்திய அரசு குரல் எழுப்பியது என்பதையும் தாங்கள் அறிவீர்கள். அதிபர் ராஜபக்சே மற்றும் நமது வெளி உறவுத் துறை செயலாளர் ஆகியோரது அறிக்கைகள் தங்கள் தகவலுக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விரைவில் அமைதி திரும்புவதற்காகவும், அங்கு நல்ல அரசியல் தீர்வு ஏற்படுவதற்கும் இந்திய அரசு தொடர்ந்து பாடுபடும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்கள் நலனுக் காகவும், அவர்களுடைய நிலை மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்."

என்று எழுதியிருந்தார். மருத்துவமனையில் இருந்தவாறே அந்தக் கடிதத்தை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி பேரவையில் அவை முன்னவர் பேராசிரியரைக் கொண்டு அறிவிக்கச் செய்தேன்.


31-01-2009

தொடர்ந்து நான்கைந்து நாட்களாக படுத்தே இருந்த காரணத்தினால் இருமல் தொந்தரவு வேறு அதிகமாக இருந்தது. அதனால் அதற்குரிய மருத்துவரை அழைத்துக் காட்டினார்கள். இருமலுக்கான "ஸ்ரப்'' அருந்தினால் நல்லதென கூறியதன் பேரில் அதனையும் அருந்தினேன்.

நான்கைந்து நாட்களாக வலி குறையாததாலும் - அவ்வப்போது திடீர் திடீரென வலி அதிகமாகி என்னால் பொறுத்துக் கொள்ள முடியாமையாலும் - மருத்துவர்கள் ஆய்வு செய்து - என்னுடைய முதுகுத் தண்டிலேயே வலி குறைப்புக்கான மருந்தினை ஊசியின் மூலம் போட முடிவு செய்து - அதுகுறித்து என் வீட்டாரோடும், உறவினரோடும் கலந்து கொண்டு - 4.2.2009 அன்று போடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 4-ந் தேதி அந்த ஊசியைப் போடுவதென்றால் 1-ந் தேதியிலிருந்தே சில மருந்துகளை தவிர்க்க வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

என்னுடைய உடல் வலியையும் மீறி - உள்ளத்தை வலிக்கச் செய்கின்ற அளவிற்கு சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர், முத்துக்குமார் என்பவர் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மாண்டுவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையிலே உள்ள என்னை அடைந்து மனதை பெரிதும் பாதித்தது. கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, அத்தகைய தற்கொலைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்தேன்.

பொருளாளர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, பேரவையில் அவர் உரையாற்றும்போது - தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன். ஆனால் அவரது மறைவுக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் செலுத்தச் சென்ற வடசென்னை மாவட்ட செயலாளர் மீது அரசியல் கண்ணோட்டத்தோடு அதிமுக, மதிமுக வினர் கற்களை வீசி தாக்க முயன்றதாகவும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியினைக் கூட வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வந்து, ஒரு இளைஞரின் தியாகச் செயலைக் கூட அரசியல் ஆக்குகிறார்களே என்றெண்ணி வேதனையடைந்தேன்.

1-02-2009

ஜனவரி சென்று பிப்ரவரியும் வந்தது. ஆனால் வந்த வலி மட்டும் சென்றபாடில்லை. இரவு 9 மணியளவில் திடீரென உடல் சோர்வும், வியர்வையும் அதிகரித்தது. இதயத்தில் ஏதாவது பிரச்சினையோ என்று மருத்துவர்களின் யோசனையின் பேரில் ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டு, டாக்டர் தணிகாசலம் அதன் முடிவுகளைப் பார்த்து விட்டு அதிலே எந்த விதமான மாறுதலோ, பயப்படுவதற்கான நிலையோ இல்லை என்று கூறினார்.

3-ந் தேதியன்று அண்ணா நினைவு நாள். அண்ணா மறைந்த 1969-ம் ஆண்டிலிருந்து ஒரு ஆண்டு கூட நான் தவறாமல் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வந்தவன் என்ற முறையில் - இந்த ஆண்டு எப்படியும் அங்கே சென்று வந்து விட வேண்டுமென்ற விழைவினைத் தெரிவித்தேன். பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழக முன்னோடிகளும் உடல் நலிவு இந்த நிலையில் இருக்கும்போது நான் வர வேண்டாமென்றும், என் சார்பில் மற்றவர்கள் எல்லாம் சென்று வருவதாகவும் கூறினார்கள். இருந்தாலும் என் மனம் கேட்கவில்லை.

மருத்துவர்களையெல்லாம் அழைத்து எப்படியாவது நான் அண்ணா நினைவிடத்திற்குச் சென்று வந்தாக வேண்டுமென்று உறுதியாகக் கூறினேன். அவர்களால் என் வலியுறுத்தலை மறுக்க இயலவில்லை.

ஆம்புலன்ஸ் வேன் ஒன்றில் - நான் பயணம் செய்வதற்கேற்ற வகையில் மாறுதல் செய்து - மருத்துவர்கள் உடன் வர - நேரில் அண்ணா நினைவிடத்திற்கு மருத்துவமனையிலிருந்து காலை 9 மணி அளவில் புறப்பட்டுச் செல்வதென்றும் - அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, நேராக அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்று நிதிநிலை குறித்த அமைச்சரவைக் கூட்டத்திலே கலந்து கொள்வதென்றும், அதன் பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்று இலங்கைத் தமிழ் இனப் படுகொலை குறித்து அவசரமாகக் கூட்டப்பட்ட கழகச் செயற்குழுவிலே கலந்து கொண்டு விட்டு, மருத்துவமனைக்குத் திரும்பி தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த செய்தியை அறிந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் வெங்கடாசலம் இரவோடு இரவாக - ஆம்புலன்ஸ் வண்டியில் பொறியாளர்களைக் கொண்டு நான் பயணம் செய்வதற்கேற்ற வகையிலும், மருத்துவர்கள் உடன் வரத்தக்க வகையிலும் மாற்றங்களைச் செய்து - வாகனத்தைத் தயார் செய்து விட்டார்.

2-02-2009

அன்றையதினம் எந்த விதமான முன்னேற்றமோ பின்னடைவோ இல்லை. டாக்டர் தணிகாசலம் உடல் முழுவதையும் குறிப்பாக இதயத் துடிப்பை நன்கு பரிசோதனை செய்து விட்டு, எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை என்று கூறினார்.

அன்று புதுவை மாநில முதல் அமைச்சர் வைத்தியலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய மந்திரியுமான வெ.நாராயணசாமி ஆகியோர் மருத்துவமனையில் என்னைச் சந்தித்தனர்.

மருத்துவமனையிலே இருந்தபோதும், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்த நிலை வேறு மனதிற்கு மிகவும் வேதனை கொடுத்துக் கொண்டிருந்தது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக மருத்துவமனையிலேயே அனைத்து தமிழ் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தேன்.

மாலை 6 மணி அளவில் மருத்துவமனையில் எனது அறைக்குப் பக்கத்து அறையிலேயே அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அந்தக் கூட்டத்தில் பேராசிரியர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஓய்வு பெற்ற நீதியரசர் மோகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மதிமுக (செஞ்சி) சார்பில் எல்.கணேசன் எம்.பி., தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கே.செல்லமுத்து, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, விவசாயத் தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்.குமார், சமூக நீதி இயக்க நிறுவனர் எஸ்றா சற்குணம், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மற்றும் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், மத்திய மாநில அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கவிஞர் கனிமொழி எம்.பி., பொன்முடி, எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் - மறுநாள் 3-ந் தேதி நடைபெறவிருந்த கழகச் செயற்குழுவில் கொண்டு வரப்பட வேண்டிய தீர்மானங்களையெல்லாம் எழுதி முடித்தேன்.

3-02-2009

இன்று அண்ணா நினைவு நாள். ஒரு வார காலமாக தொடர்ந்து மருத்துவமனையிலே படுக்கையிலேயே இருந்த காரணத்தால் - ஏற்கனவே திட்டமிட்டபடி, பயணத்திற்கேற்றவாறு - உடல் நிலையை தயார் செய்து கொண்டு - சரியாக 9 மணிக்கு ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வேனில் படுத்துக் கொண்டே அண்ணா நினைவிடத்திற்குப் புறப்பட்டு விட்டேன்.

டாக்டர் மார்த்தாண்டம், டாக்டர் கோபால் மற்றும் குழுவினரும், உதவியாளர்களும் உடன் வந்தனர். அண்ணா நினைவிடத்தில் பேராசிரியரும், கழக முன்னணியினரும் குழுமியிருந்தனர். அனைவரோடும் சேர்ந்து அண்ணாவுக்கு; சக்கர நாற்காலியிலே அமர்ந்தவாறே அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது பற்றியும், அதில் முக்கியமாக எதையெதை இணைக்க வேண்டுமென்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்று கழகச் செயற்குழுவிலே கலந்துகொண்டேன்.

செயற்குழுவில், இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத் தர, அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றிட ஒத்த கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'' என்ற அமைப்பின் பெயரால் தமிழகம் எங்கும் மக்களைத் திரட்டி விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மனிதச் சங்கிலிகள் போன்ற பிரசாரச் சாதனங்களைப் பயன்படுத்தி அறப் போராட்டங்களை நடத்தி எழுச்சிப் பணிகளைத் தொடர்வது'' என்றும்,

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முழுமையான அதிகாரப் பகிர்வும், சுயாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பிரசார விளக்கப் பொதுக் கூட்டங்கள், பேரணிகளை பிப்ரவரி 7 அன்று சென்னையிலும், 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு கூட்டத்திற்குப் பின் அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்தேன். பின்னர் 1 மணி அளவில் அண்ணா அறிவாலயத்திலிருந்து புறப்பட்டு நேராக ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் திரும்பினேன்.

2-ந் தேதி கழகச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றம் தருவதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை விடுத்திருந்தார். அதைப்பற்றி சில செய்தியாளர்கள் மருத்துவமனையில் என்னிடம் கேட்டபோது, ஆட்சியிலிருந்து விலகி விடுவதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது என்று கூறினேன். இத்தகைய விமர்சன செய்திகள் என் முதுகு வலியை அதிகப்படுத்தியபோதிலும் - அதே நாளில் ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் மருத்துவமனைக்கே எழுதியிருந்த ஒரு கடிதம் என் உள்ளப் புண்ணைப் பெரிதும் ஆற்றுகின்ற வகையிலே அமைந்திருந்தது. என் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு, "ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம், ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது'' என்று எழுதியிருந்தார்.

4-ந் தேதியன்று என் முதுகுத் தண்டிலேயே வலியைக் குறைப்பதற்கான ஊசியைப் போடலாம் என்று ஏற்கனவே எடுத்த முடிவின்படி - 3-ம் தேதியன்று டாக்டர்கள் எல்லாம் என்னை அணுகி அதைப் பற்றிய சாதக பாதகங்களையெல்லாம் விவரித்தார்கள். என்னுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான் அந்த ஊசியைப் போடலாமென்றும் தெரிவித்து, அதற்கான அனுமதியையும் பெற்றார்கள். அதற்கான ஒப்புதல் கையெழுத்தை என்னிடமும், ஸ்டாலினிடமும் பெற்றார்கள்.

இந்த ஊசியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு என் இதயம் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய 3-ந் தேதியன்று "எக்கோ-கார்டியோகிராம்'' சோதனை செய்யப்பட்டது. மயக்க மருந்து அளிக்கும் மருத்துவர்களும் என்னைச் சோதனை செய்து அவர்களும் தங்களுடைய ஒப்புதலைத் தெரிவித்தார்கள்.

3-ந் தேதியன்று மாலையில் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மருத்துவமனைக்கு வருகை தந்து என் உடல் நலம் விசாரித்தார்.

4-02-2009

முதுகுத் தண்டில் இன்று தான் எனக்கு ஊசி போடப்பட்டது. அந்த ஊசியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்று அங்கே தான் போடவேண்டுமென்று கூறி - படுக்க வைத்த நிலையிலேயே அறுவை சிகிச்சை அரங்கிற்கு காலை 6 மணி அளவில் அழைத்துச் சென்றார்கள். வெற்றிகரமாக என் முதுகுத் தண்டில் ஊசி போடப்பட்டது. பெரிய அளவில் வலி தெரியாமல் அந்த ஊசி போடப் பட்டது. 7 மணி அளவில் நான் மீண்டும் என் அறைக்குத் திரும்பினேன். அதன்பின்னர் அந்த ஊசியின் விளைவு என் உடல் நிலையில் ஏதாவது மாற்றத்தை உண்டாக்குமோ என்று சோதிப்பதற்காக அன்று நாள் முழுவதும் சோதனையிலேயே வைக்கப்பட்டேன்.

இதன் பின்னர் மருத்துவர்கள் சார்பில் விடப்பட்ட அறிக்கையில் - முதல் அமைச்சருக்கு எலும்பு சிகிச்சை நிபுணர், டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில், அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு - குறிப்பிட்ட உடல் பகுதியில் ஊசி போடப்பட்டு முதுகெலும்பில் வலியை ஏற்படுத்தி வரும் தசைப் பிடிப்பை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் தணிகாசலம், டாக்டர் மகேஷ், டாக்டர் கோபால், டாக்டர் அருணா ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு முதல்-அமைச்சர் ஒரு வாரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நேரில் வருவதைத் தவிர்த்து முதல்-அமைச்சர் விரைவில் முழு உடல் நலம் பெற்று பணியைத் தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் - அந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இணையான சம உரிமையும் - அதிகாரப் பகிர்வும் பெற்றிடும் இனமாகத் தமிழ் இன மக்களும் சுமூக சூழலில் வாழ்ந்திட வகை காணும் ஒப்பந்தங்களும் நிறைவேறிட; தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகச் செயற்குழுவில் தீர்மான வடிவில் சுட்டிக்காட்டியுள்ள குறிக்கோள் நிறைவேறிட,இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கு துணை அமைப்பாக - உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்ட குழு ஒன்றினை மருத்துவமனையில் இருந்தவாறே அறிவித்தேன். அந்தக் குழுவிற்கு தமிழகச் சட்ட அமைச்சர் துரைமுருகன் அமைப்பாளராகவும், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மத்திய மந்திரி ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயலாளர்களாகவும் இருப்பார்கள் என்றும், அவர்கள் பல்வேறு நாடுகளிலே உள்ள ஆர்வலர்களோடு தொடர்பு கொண்டு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவார்கள் என்றும் அறிவித்தேன். அந்தக் குழுவில் நீதியரசர்கள் மோகன், பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், பாஸ்கரன், ஏ.கே.ராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

5-02-2009

இன்றையதினம் கடுமையான வலி. வலியைக் குறைப்பதற்கான ஊசி உடனடியாக போடப்பட்டும், வலி குறையவில்லை. நேரம் அதிகமாக அதிகமாக வலியும் அதிகமாகவே, நரம்பியல் நிபுணர் டாக்டர் வேல் முருகேந்திரன் வரவழைக்கப்பட்டார். அவர் என் உடல் நிலையைப் பரிசோதித்து - நரம்புகள் தளர்ச்சி அடையாமல் இருக்க - அதற்காக ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஊசி போட வேண்டுமென்று பரிந்துரை செய்தார். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவ்வாறே ஊசி போடப்பட ஒப்புக் கொள்ளப்பட்டது.

காலை ஏடுகளில் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. எதையும் செய்ததில்லை என்பதைப் போல ஒரு சிலர் அறிக்கைகளை விடுத்திருந்ததைப் படித்து விட்டு - வலியைப் பொருட்படுத்தாமல் - பல்வேறு காலங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. என்னென்ன செய்தது, எந்தெந்த போராட்டங்களில் ஈடுபட்டது என்பதையெல்லாம் நினைவிலே கொண்டு வந்து பட்டியலிட்டு கட்டுரை எழுதினேன்.


6.2.09

6-2-2009

மாயவரம் காந்தி என்று இளமைக் காலத்தில் எனக்கொரு நண்பர். கழகத் தோழர். அவர் இப்போது இல்லை. அந்தப் பகுதிகளுக்கு பெரியார் வரும்போதெல்லாம் அவர் வீட்டில் தான் தங்குவார். மாயவரம் காந்திக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவர் சம்பத், மற்றொருவருக்கு "கருணாநிதி" என்று என் பெயரைத்தான் வைத்திருந்தார். சம்பத் தற்போது பால் வளத் துறை அமைச்சரிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறார். அவர் மகளுக்கு என் இல்லத்து வாயிலிலேயே இன்று திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் மருத்துவமனையிலே நான் இருந்த தால், மணமக்களை அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்கே வந்து திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டுக் கொண்டார். நானும் படுத்த படுக்கையில் இருந்தவாறே அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தேன்.

மருத்துவமனையிலே நான் இருந்தபோது, பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழக முன்னணியினரும், அமைச்சர்களும் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து என் உடல் நிலையை கேட்டறிந்தும் அன்றாட அரசியல் நிலவரங்கள் குறித்து நிலைமைகளை விளக்கியும் சென்றனர். என் துணைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரும், என் மகள்கள் செல்வி, கனி ஆகியோரும் செவிலியர்களோடு செவிலியர் களாக என்னைக் கவனித்துக் கொண்டார்கள். செல்வி பெங்களூரையே மறந்து விட்டு இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவ மனையிலேயே தங்கி என் கோபத்தையெல்லாம் தாங்கிக் கொண்டது. கனி பொது நிகழ்ச்சிகள், பாராளு மன்றம், மகன் ஆதி என்ற பொறுப்புகளுக் கிடையே நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் எனக்குத் துணையாக இருந்தது. என் மருமகள்கள் பகல் நேரங்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருத்துவ மனைக்கு வந்து மாமியாருக்கு உதவியாய் இருந்தனர். தம்பிகள் பொன்முடி, எ.வ. வேலு, ஆ. ராஜா ஆகியோர் அன்றாடம் இரவில் மருத்துவ மனையிலேயே தங்கி, ஒத்துழைப்பாக இருந்தனர். வேறு சில நாட்களில் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், கே.என். நேரு ஆகியோரும் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு ஆகியோரும் மருத்துவ மனையிலே தங்கியிருந்தனர்.

முதுகுத் தண்டில் ஊசி போடுவதற்காக இடையில் நிறுத்தப்பட்டிருந்த Anti-Platelet மாத்திரையை மீண்டும் கொடுக்கத் தொடங் கினார்கள். இன்று மதியம் 2 மணி அளவில் தூங்க முயன்றபோது - வலி கடுமையான அளவிற்கு என்னைத் தாக்கியது. என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. மருத்துவர் களுக்கும் என்ன செய்வதென்று தோன்ற வில்லை. மீண்டும் ஒரு முறை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்று டாக்டர் மார்த்தாண்டம் எண்ணியதன் பேரில் - எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன். அய்யோ; மீண்டும் ஒரு "எம்.ஆர்.ஐ" எடுப்பதா? குடும்பத்தாரும், நண்பர்களும் நடுங்கிச் சோர்ந்து போயினர்.

கடுமையான வலிக்கிடையிலே எம்.ஆர்.ஐ. மீண்டும் எடுக்கப்பட்டது. அப்போது எல்.2 - எல்.3 ஆகியவற்றுக்கிடையே விலகியிருந்த டிஸ்கின் நீளம் மேலும் அதிகமாகியிருப்பது கண்டறியப்பட்டது. அதுதான் வலி அதிகமான தற்குக் காரணம் என்றும் மருத்துவர்கள் விளக்கினார்கள். வலிக்கு காரணம் தெரிந்து என்ன பயன், அதனை குணம் ஆக்குவதற்கு என்ன வழி என்று கேட்டேன். "முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை ஒன்றுதான் அதற்கு வழி" என்றார் டாக்டர் மார்த்தாண்டம். மற்ற மருத்துவர்களும் அதனை ஆமோதித்தனர். டாக்டர் மோகன்தாஸ் அவர்களையும் அழைத்து அவருடைய கருத்தையும் கேட்டபோது, அவரும் அறுவை சிகிச்சைதான் நல்லது என்று அபிப்பிராயம் கூறினார்.

மருத்துவர்கள்; - குடும்பத்தார் அனை வரையும் அழைத்து - "என் வயதை எண்ணிடும் போது - இந்த அறுவை சிகிச்சை மிகவும் அபாயகரமானது என்றும் - ஆனால் வலியைப் போக்க வேறு வழியில்லை என்றும் - மிகுந்த துணிச்சலோடுதான் அறுவை சிகிச்சைக்கு முன்வர வேண்டும்" என்றும் கூறினார்கள். நான் வலியால் படுகின்ற துன்பத்தை பார்க்க சகிக்காமல், அதனைப் போக்குவதற்கு வேறு வழியும் இல்லை என்று மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறியதால் - குடும்பத்தார்; இந்த விஷயங்களையெல்லாம் என்னிடம் சொல்வதற்கு முன்வராமல் - அறுவை சிகிச்சை மிகவும் சாதாரணமானது என்றும், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும், செய்து கொள்ளலாம் என்றும் சமாதானப்படுத் தினார்கள். குறிப்பாக கலாநிதி மாறன் "தாத்தா, இதிலே பயப்படுவதற்கு ஒன்றுமில்லை தாத்தா, செய்து கொள்ளலாம்" என்று அவருடைய தந்தையைப் போலவே கூறினார். அவர்களின் வாய்கள்தான் எனக்கு சமாதானம் கூறின. ஒருவரின் முகத்தைப் பார்த்தவுடன் அவர்களைப் பற்றி எடை போடக் கூடிய திறமை எனக்கு உண்டு என்பதால், அத்தனை பேருடைய முகங் களையும் ஒரு முறை பார்த்தவுடனேயே உண்மையைப் புரிந்து கொண்டேன். நான் ஏதாவது விசாரித்தால் ஒவ்வொருவருடைய விழிகளிலிருந்தும் வெடித்துக் கொண்டு வர கண்ணீர் காத்திருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நானே அவர்களுக்கெல்லாம் தைரியம் அளித்தாக வேண்டிய கட்டாயத் திற்கும் ஆளாகி - "சாதாரண அறுவை சிகிச்சைதானே, ஏன் இப்படி முகத்தை வைத்துக் கொண்டு பயப்படுகிறீர்கள்" என்று ஆறுதல் கூறியதோடு, அறுவை சிகிச்சைக்குத் தயார் என்றும் எப்போது வைத்துக் கொள்ளலாம் என்றும் கேட்டேன்.

இரவு எட்டு மணி அளவில் மீண்டும் மருத்துவர்கள் எல்லாம் கூடி, அறுவை சிகிச்சையை எங்கே வைத்துக் கொள்ளலாம், வெளி நாட்டிற்கு அழைத்துச் செல்லலாமா, அல்லது டெல்லிக்குச் செல்லலாமா என்றெல்லாம் பேசப்பட்டது. நரம்பியல் டாக்டர் ஏ.வி. சீனிவாசன் அவர்கள் அங்கிருந்தவாறே "டெலி-மெடிசின்" மூலமாக அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு - இந்த அறுவை சிகிச்சை பற்றிய விவரங்களை யெல்லாம் அறிந்தார். இறுதியாக டெல்லியிலே உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பணியாற்றும் டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் அவர்கள் இந்த அறுவை சிகிச்சை யில் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதால், அவருடன் தொடர்பு கொண்டு அவரை வரவழைக்கலாம் என்று பேசி முடிவெடுக்கப் பட்டது.

தம்பி தயாநிதி மாறன் உடனடியாக டெல்லியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தம்பி அன்புமணியிடம் தொடர்பு கொண்டு - டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தம்பி அன்புமணி உடனடியாக அந்த நிறுவனத்தின் இயக்குநரிடம் பேசி அடுத்த நாளே டாக்டர் ஜெய்ஸ்வால் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக தகவல் அனுப்பினார்.

7-2-2009

அப்பல்லோ மருத்துவமனையில் பணி யாற்றும் முதுகெலும்பு டாக்டர் சாஜன் ஹெக்டே அவர்களை அழைத்து என் உடல் நிலை குறித்து கருத்து கூறுமாறு கேட்கப்பட்டது. அவரும் என்னை சோதித்து விட்டு, நடைபெறும் சிகிச்சை முறைகள் சரியாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியானது என்றும் கருத்து தெரிவித்தார்.

அன்றையதினம் மாலையில் டெல்லியி லிருந்து டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் ராமச்சந்திரா மருத்துவமனை வந்தடைந்தார். அவரும் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த போது, முதுகிலே தொடங்கும் வலி எதுவரை பரவியுள்ளது என்று கேட்டனர். இது "தை மாதம்" அல்லவா, எனவே என் "தை (கூhiபா) (தொடை) வரை நீடிக்கிறது என்று சிரித்துக் கொண்டே கூறினேன். டாக்டர் ஜெய்ஸ்வால் என்னை நேரடியாக பரிசோதித்ததோடு, அனைத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே படங்களையும் பார்த்தார். அறுவை சிகிச்சை செய்வது என்று முடிவெடுத்த நிலையில், மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழு அமைப்பதுதான் சரியானதென்று தீர்மானிக்கப் பட்டது. டாக்டர் மார்த்தாண்டம் அவர்கள் தலைமையில் டாக்டர் தணிகாசலம் (இருதய நிபுணர்), டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் கோபால் (குடும்ப டாக்டர்), டாக்டர் கார்த்திக் கைலாஷ் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் ஏ.எஸ். நாயுடு (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் மகேஷ் வகாமுடி (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் ஏ.வி. சீனிவாசன் (நரம்பியல் நிபுணர்), டாக்டர் கே.ஆர். பழனிசாமி (குடல் மற்றும் இரைப்பை நோய் நிபுணர்), டாக்டர் ராஜ் பி. சிங் (நுரையீரல் நிபுணர்), டாக்டர் மயில்வாகனன் (எலும்பு சிகிச்சை நிபுணர்), டாக்டர் சண்முகம் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் பாஸ்கர் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் சவுந்தரராசன் (சிறுநீரகவியல் நிபுணர்) ஆகிய 14 பேரைக் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப் பட்டு, அது அறிவிக்கப்பட்டது.

மருத்துவக் குழுவினர் அனைவரும் அமர்ந்து அறுவை சிகிச்சையை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று நீண்ட நேரம் யோசனை செய்து - 11.2.2009 அன்று வைத்துக் கொள்வதென்றும், சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையிலே அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும், டெல்லி மருத்துவர் ஜெய்ஸ்வால் அவர்கள் 10ஆம் தேதியன்றே சென்னைக்கு வந்துவிட வேண்டு மென்றும் பேசி முடிவெடுக்கப் பட்டது.

மத்திய உள் துறை அமைச்சர், அருமை நண்பர் ப. சிதம்பரம் அவர்கள் மருத்துவ மனைக்கு இன்று வந்திருந்தார். சிவகங்கை யில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தி - அரசின் சார்பில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லூரிக்கு

நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்த வேண்டுமென்று அவர் விருப்பப்பட்டு என்னிடம் தேதி பெற்றிருந்தார். மருத்துவ மனையிலே என்னை வந்து நேரிலே கண்ட பிறகு - மருத்துவமனையில் நான் இருந்த வாறே

"வீடியோ கான்பரன்ஸ்" மூலமாக அடிக்கல் நாட்டவேண்டு மென்றும், மாநில அமைச்சர்கள் இருவரை சிவகங்கைக்கு அதே நாளில் அனுப்பி வைத்தால் அங்கே விழாவினை நடத்திக் கொள்வதாகவும் கூறினார். நானும் அதற்கான ஒப்புதலை அளித்தேன்.

8-2-2009

மருத்துவமனையில் இருந்த போதிலும் - தாங்கொணா வலி உடலை வறுத்திக் கொண்டிருந்த நிலையிலும் - ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் ஏடுகளைப் படிக்க நான் தவறியதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சகோதர யுத்தம் இங்கும் கூடாது என்றும் குறிப்பாக தமிழகத்திலே உள்ள அனைவரும் இலங்கைப் பிரச்சினை யிலே மட்டுமாவது ஒற்றுமையாக இருந்திட வேண்டுமென்றும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே" என்ற தலைப்பில் எழுதி யிருந்தேன். என்னுடைய அந்த வேண்டு கோளை அலட்சியப்படுத்தியதோடு மட்டு மல்லாமல், என்னை சிலர் மிகவும் இழிவுபடுத்தி பேசியும், எழுதியும் இருப்பதை காலை ஏடுகளில் காண நேர்ந்தது. அதனால் எனக்கு அணுவளவு வருத்தமும் இல்லை என்றும், அவர்கள் என்னைத் தாக்கியிருப்பது அவர்கள் மனச்சாட்சிக்கு சரியென்று பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சிதான் என்றும் அவர்கள் தூற்றியிருப்பதை என் உடல் தாங்குகிறதோ இல்லையோ - இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித் தானே ஆக வேண்டுமென்று எழுதினேன்.

ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில் விவசாயிகளுக்காக கழக ஆட்சியில் குறிப்பாக நான் எதுவும் செய்யவில்லை என்று குற்றஞ் சாட்டியிருந்தார். ஆளுநர் உரைக் காகவும், அதன் பதில் உரைக்காகவும் தயாரித்து வைத்திருந்த குறிப்புகளிலேயிருந்த ஜெயலலிதாவின் அறிக்கைக்கு விரிவாக பதில் எழுதி, ஏடுகளுக்கெல்லாம் அனுப்பச் செய்தேன்.

இதற்கிடையே Nerve Conduction Study and Electro Myography என்று சொல்லப்படும் ஒரு சோதனை - நரம்பின் செயல் திறனைக் கண்டறிவதற்கான சோதனை செய்யப்பட வேண்டுமென்று டெல்லி மருத்துவர் அரவிந்த் ஜெய்ஸ்வால் கூறிய அறிவுரைப்படி, நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் இன்று அதனை மேற்கொண்டார். இந்தச் சோதனை நடைபெறவே இரண்டு மணி நேரத்திற்கு மேலானது
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை சார்பில் தென் சென்னை தி.மு.க. சார்பில் அன்றைய தினம் ஏற்பாடாகியிருந்த எழுச்சிப் பேரணி எவ்வாறு உள்ளது என்று தொலை பேசியிலே பேசி விவரம் கேட்கச் சொன்னேன்.

தஞ்சை மாநகரத்தின் ஒவ்வொரு அங்குல எழிலுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டு உழைத்த தஞ்சை சுல்தான் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்தது. மிகவும் வருந்தி நானே என் கைப்பட ஒரு இரங்கல் செய்தியினை எழுதிக் கொடுத்தேன்.

மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் மருத்துவ மனைக்கு வந்து எனது உடல் நலம் விசாரித்தார்.

9-2-2009

மத்திய அமைச்சர் தம்பி டி.ஆர். பாலு இன்று காலையிலேயே என்னை மருத்துவமனையில் சந்தித்து டெல்லி அரசியல் நிலவரங்களை யெல்லாம் எடுத்துக் கூறி சில பிரச்சினைகள் பற்றி என் அறிவுரைகளைப் பெற்றுச் சென்றார்.

இதயத் துடிப்பு எவ்வாறு இருக்கிறது, அதுவும் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு இதயத் துடிப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக - Holter E.C.G. என்று கூறப் படும் ஒரு இயந்திரத்தை என் உடலிலேயே பொருத்திவிட்டார்கள். அது மறுநாள் தான் என் உடம்பிலிருந்து அகற்றப் பட்டது. இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டுமென்பதற்காக Tablet Betaloc மாத்திரை தரப்பட்டது.

நிதித் துறை செயலாளரையும், மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளையும் மருத்துவ மனைக்கு அழைத்து நிதி நிலை அறிக்கை தயாரிப்பது குறித்து தனி அறையில் அன்று காலை முழுவதும் விவாதித்தேன். காலை 10.45 மணிக்கு தொடங்கிய அந்தக் கூட்டம், நண்பகலைத் தாண்டியும் நீண்டதால், டாக்டர்கள் வந்து பரிசோதனைகளைச் செய்யவும் மாத்திரைகள் சாப்பிடவும் நேரமாகி விட்டது என்பதை நினைவூட்டினர்.

இந்து நாளிதழின் செய்தியாளர் ராதா கிருஷ்ணன் காலையிலேயிருந்து மருத்துவ மனையிலே தங்கி என்னுடைய செயல் பாடுகளைப் பற்றி கவனித்து வருவதாகவும், என்னை ஐந்து நிமிடங்கள் சந்திக்க விரும்பு வதாகவும் இந்து நாளிதழின் முன்னாள் செய்தியாளரும், என் மகளுமான கனிமொழி பரிந்துரைத்ததின் பேரில் வரச் சொன்னேன். ஐந்து நிமிடங்கள் என்று கூறி வந்தவர் ஐம்பது நிமிடங்களுக்கு மேல் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். மருத்துவ மனையிலே இருக்கும்போதே இவ்வளவு பணிகளை மேற்கொள்ள வேண்டுமா என்று இந்து ராதாகிருஷ்ணன் உரிமையோடு கேட்டார். செய்யத்தானே வேண்டுமென்று கூறினேன். மக்கள் எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை நம்பிக் கொடுத்திருக்கும்போது, படுக்கையிலே இருப்பதாலேயே நான் மக்களுக்காகப் பணியாற்றுவதை நிறுத்த முடியுமா என்று கூறினேன்.

என்னுடைய அறுவை சிகிச்சை பற்றி அவர் மிகுந்த கவலையோடு விசாரித்த போது, நீங்கள் எல்லாம் இருக்கீங்களே, அப்புறம் என்ன என்றபோது கண் கலங்கி விடைபெற்றார்.

அரசு செயலாளர்களுடன் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் மாலையிலும் தொடர்ந்தது. என் கையெழுத்திற்காக காத் திருந்த முக்கிய கோப்புகளை மட்டும் மருத்துவ மனைக்கே வரவழைத்து கையெழுத்திட்டேன்.

10-2-2009

மிகப் பெரிய அறுவை சிகிச்சையை நாளையதினம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற நினைவுடன் காலை ஏடுகளை வரவழைத்தேன். ஏடுகளைப் படித்தவுடன் அறுவை சிகிச்சை மறந்து விட்டது. அந்த அளவிற்கு அன்றைய தினம் என் மீது தாக்குதல். இலங்கைத் தமிழர் பிரச்சினைக் காக நானும், பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ஒரு காலத்திலே ராஜினாமா செய்தோம் என்று எழுதியதைப் பற்றிக் குறிப்பிட்டு, ஒரு கட்சியின் தலைவர் "அவ்வாறு பதவி விலகியதால் என்ன பயன் ஏற்பட்டு விட்டது, ஒட்டு மொத்தமாக ஆட்சியை விட்டே விலகினால்தான் பயன் ஏற்படும்" என்று என்மீது மிகுந்த அக்கறையோடு வழக்கம்போல் அறிக்கை விட்டிருந்தார். அதே தலைவர், தி.மு.கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போது தான் இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியதே தவிர, ஆளுங் கட்சியாக இருந்த போது எதையும் செய்யவில்லை என்றும் எழுதியிருந்தார். ஆளுங்கட்சியாக இருந்த போது எவ்வெப்போது என்னென்ன போராட்டங்களை தி.மு. கழகம் செய்தது என்பது பற்றி விவரமான பட்டியலை எழுதினேன். அதற்கு "மறுப்பும் - விளக்கமும்" என்று தலைப்பிட்டுவிட்டு, அதன் கீழே "பின்வரும் மறுப்பும் விளக்கமும் மருத்துவமனையிலிருந்து எழுதப்பட்டது, பிழையிருப்பின் மன்னித் தருள்க!" என்று குறிப்பும் எழுதித்தான் ஏடுகளுக்கே அனுப்பச் செய்தேன்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் வழி காட்டும் தலைவருமான திருமதி சோனியா காந்தி அவர்கள் 10ஆம் தேதி மாலையில் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்ததோடு, அடுத்த நாள் நடைபெறவுள்ள அறுவை சிகிச்சை பற்றி யெல்லாம் விவரமாகப் பேசினார். அறுவை சிகிச்சை முடிந்து நலம்பெற்று விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டுமென்று வாழ்த்தினார்.

Echo-Cardiogram எடுக்க வேண்டுமென்று டாக்டர் தணிகாசலம் அறிவுறுத்தியதின் பேரில், என் அறையிலேயே அதை எடுப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றன. இதன் முடிவு களைக் கணக்கிலே கொண்டும், 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 64 slice C.T. Angio gram முடிவுகளைக் கணக்கிலே கொண்டும், E.C.G. முடிவுகளைக் கணக்கிலே கொண்டும் டாக்டர் தணிகாசலம் 11ஆம் தேதியன்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும், ஆனால் என்னுடைய வயதை உத்தேசித்துப் பார்க்கும் போது அது மிகவும் அபாயகரமானது ((High Risk)) என்றும் தெரிவித்தார்.

மாலையில் மயக்க மருந்து நிபுணர், டாக்டர் மகேஷ் வகாமுடி தலைமையில் மயக்கம் கொடுப்பதற்காக மட்டுமே நியமிக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவினர் என்னைப் பரிசோதனை செய்தனர். கிருமி தொற்று வராமல் இருப் பதற்காக அன்று மாலையிலிருந்தே நரம்பு மூலம் செலுத்தப்படும் ஊசி மருந்து ஆரம்பிக் கப்பட்டது. மறுநாள் அறுவை சிகிச்சை என்ப தால் பார்வையாளர்கள் அனைவரையும் தவிர்க்க வேண்டுமென்று கூறியதோடு - என்னுடைய அறை, மற்றும் பக்கத்து அறைகள் எல்லாம் கூட கிரிமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. தவிர்க்க முடியாத பார்வையாளர்களும், வீட்டாரும், மருத்துவர்களும் கூட முகமூடி அணிந்த பிறகே என் அருகே வர அனுமதிக்கப்பட்டனர்.

சிறுநீரகத் துறை நிபுணர் டாக்டர் சவுந்தரராசன் வந்து தனது சோதனையை நடத்திவிட்டு எந்த அளவிற்கு நான் நீர் அருந்த வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகள் வழங்கினார். மருத்துவக் குழுவினர் 14 பேரும் என்னுடைய குடும்பத்தாரை அழைத்து, அறுவை சிகிச்சை பற்றியும், அதன் பின் விளைவுகள் பற்றியும் விவரமாக எடுத்துக் கூறி, அறுவை சிகிச்சைக் கான ஒப்புதலையும் கையெழுத்தையும் குடும்ப மருத்துவர் டாக்டர் கோபால் அவர்கள் மூலம் முறைப்படி பெற்றார்கள்.

""Ailing but active ‘Kalaignar’ turns Hospital into Chief Minister’s Office" என்ற தலைப்பில் "தி டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு 10ஆம் தேதி பின்வருமாறு எழுதி யிருந்தது.

"ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் ஏழாவது மாடியில், வெள்ளைக் கோட்டுகளுக்கு (மருத்துவர்களுக்கு) மத்தியில் முதல்வர் கலைஞர் அனுமதிக்கப் பட்டுள்ள வார்டுக்குள் - உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக மூத்த அரசு அதிகாரிகள் கோப்பு களைக் கையில் தாங்கியவாறு - திட்டங்களை முதல்வருடன் விவாதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள அந்த இடம், தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகம் போல் காட்சி அளிக்கிறது.

நிதித் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி, "இங்கு நாங்கள் விவாதம் நடத்துகிறோம். நிதி நிலை அறிக்கை மீது கலந்துரையாடி பல முடிவுகளை எடுத்துக் கொண்டிருக் கிறோம்" என்றார். மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, "முதலமைச் சருடன் முக்கியமான சந்திப்பு களுக்காக அமைச்சர்களும், தி.மு.க. முன்னணி உறுப்பினர்களும், அதிகாரிகளும் இங்கு வருகிறார்கள். அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரைப்பட பிரமுகர்கள், கட்சியின் தொண்டர்கள் என்று பார்வையாளர்களின் பட்டியல் மிக நீளமானது. முதலமைச்சர் யாரையும் சந்திக்காதபோது செய்தித்தாள்களை ஒரு வரிவிடாமல் படிக்கிறார். அல்லது கட்சியின் நாளேடான முரசொலிக்காக எழுதுகிறார். மொத்தத்தில் அவர் எங்களது மிகவும் செயல் துடிப்பான நோயாளிகளில் ஒருவர்" என்றார். தான் சுகவீனமாகி உள்ளதால் எந்தக் கோப்பும் காத்திருக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் அவர் கூறியிருக் கிறார். "

என்று எழுதியிருந்தது.

விடிந்தால் எனக்கு அறுவை சிகிச்சை என்பதால் - மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையிலும் என் மகன் அழகிரி சென்னை வந்து மருத்துவமனையிலேயே தங்கினார். மேலும் என் மகன் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் அங்கேயே தங்கிவிட்டனர்.

11.2.2008

இன்றுதான் எனக்கு அறுவை சிகிச்சை. காலை 5 மணிக்கெல்லாம் அன்றாடம் என்னிடம் வரக் கூடிய நாளேடுகள் அன்று வரவில்லை. எங்கே ஏடுகளைப் படித்து விட்டு, நான் உணர்ச்சி வயப்பட்டு விடுவேனோ என்பதற்காக ஏடுகளை எனக்குத் தரவில்லை போலும்.

டாக்டர் 6 மணிக்கு என்னிடம் வந்து புறப்படலாமா என்ற போது, முதலில் நாளேடுகள் வரட்டும், ஒரு பார்வை பார்த்து விட்டு புறப்பட்டு விடலாம் என்று கூறி, அவ்வாறே படித்து விட்டுத் தான் அறுவை சிகிச்சை அரங்கிற்குப் புறப் பட்டேன்.

அறுவை சிகிச்சைக்கு பின் என்னை ஐ.சி.யு. அறையில் வைக்க வேண்டும் என்று கூறினார்கள். மருத்துவமனையின் உரிமையாளர் தம்பி வெங்கடாசலம் மற்ற நோயாளிகள் எல்லாம் இருக்கக் கூடிய பொதுவான ஐ.சி.யு. அறையில் நான் தங்கக் கூடாது என்றும், நான் மட்டும் தங்கக் கூடிய அளவிற்கு ஒரு ஐ.சி.யு. அறையை இரவோடு இரவாக தயாரித்து விட்டார்.

மதியம் 1 மணிக்கு நினைவு வந்து, மிகவும் வறட்சியாக இருந்ததால் தண்ணீர் வேண்டு மென்று கேட்டேன். உதடு கூட நனையாத அளவிற்கு செவிலியர் ஒருவர் தண்ணீர் கொடுத்தார். நான் அவரிடம் உன் பெயர் காவிரியா? என்றேன்.

"இல்லையே அய்யா, எதற்காக கேட்கிறீர்கள்'' என்றார். "கர்நாடகா கொடுக்கின்ற காவிரியைப் போலவே நீயும் கொடுக்கிறாயே'' என்றவுடன் ஐ.சி.யு. அறை என்பதைக் கூட மறந்து என்னைச் சூழ்ந்திருந்த மருத்துவர்கள் சிரித்தனர்.

12-2-2009

இன்றைக்கும் நான் ஐ.சி.யு. அறையிலே தான் இருந்தேன். தொலைக்காட்சி பெட்டியிலே நாடாளு மன்றத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரையை கேட்டேன். இலங்கைத் தமிழர் பிரச்சினை இடம் பெற்றதைக் கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று எக்கோ-கார்டியோ கிராம் எடுக்கப்பட்டு, அதுவும் சரியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

13-2-2009

அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்திற்குப் பிறகு (டி.7) வார்டுக்கு நான் மாற்றப்பட்டேன். தொடர்ந்து படுத்துக் கொண்டே இருப்பதால் முதுகுப் பக்கம் புண்கள் வந்து விடாமல் இருப்பதற்காக இரண்டு பக்கங்களிலும் மாறி மாறி என்னை படுக்க வைத்துப் பார்த்துக் கொண்டனர். மாறி மாறி நான் படுக்க உதவி செய்த சிப்பந்தியின் பெயரே "மாரி'' தான்!

14-2-2009

நிதித் துறை செயலாளரை வரவழைத்து நிதி நிலை அறிக்கை 17-ம் தேதி தாக்கல் செய்யப்படுவது குறித்துப் பேசினேன். நான் மருத்துவ மனையிலே இருந்த காலத்திலும், வீட்டிற்குத் திரும்பிய பின்னரும் டாக்டர்கள் ஜம்பு, சமீர், பூபேஷ் கார்த்திக் ஆகியோர் எனக்கு ஆற்றிய பணியை நான் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு முறை டாக்டர் ஜம்பு என் பக்கத்தில் நின்று கொண்டு, அவர் பக்கம் என்னைத் திரும்பிப் படுக்குமாறு கூறினார். அவரிடம் நான், மற்றவர்களை எல்லாம் என் பக்கம் திரும்பிட நான் முயற்சிகளை மேற்கொள்கிறேன், ஆனால் நீயோ என்னை உன் பக்கம் திரும்பச் சொல்கிறாயே என்று சிரித்துக் கொண்டே கூறினேன்.

செவிலியர்கள் என்று எடுத்துக் கொண்டால், செந்தாமரை, ஜாக்குலின், ப்ளோரா, சித்ரா, சாந்தி, அமீனா ஆகியோர் 24 மணி நேரமும் மாறி மாறி என்னுடனே இருந்து தங்களுக்கு வேண்டிய நெருங்கிய உறவினரைக் கவனிப்பது போல உதவி புரிந்தனர். அதைப் போலவே வார்டு பாய் மாரிமுத்துவும், என்னுடைய தனி உதவியாளர் நித்யாவும் கடந்த ஒரு மாத காலமாக என்னை விட்டு அங்கும் இங்கும் அகலாமல் ஆற்றிய பணிகளை நான் இந்தத் தொடரிலே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

குறிப்பாக என் குடும்ப மருத்துவர் கோபால், அவரே இதய நோயாளி என்ற போதிலும் அனைத்து மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களை யெல்லாம் கலந்து கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டதை நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.


15-2-2009

அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று தான் திடீரென்று என் கால்களில் ஒரு எரிச்சலான வலி ஏற்பட்டது. வலி நிவாரணத்திற்கான ஊசி உடனே போடப்பட்டது.

வலி சற்று குறைந்த போதிலும் இரவு 8 மணி அளவில் உடம்பெல்லாம் அதிக வியர்வையும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

உடலின் வெப்ப நிலையும் குறைந்தது. பேராசிரியர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களையும் கழக முன்னோடிகளையும் பார்க்க வேண்டும் போல் எனக்கு எண்ணம் ஏற்பட்டது.

உதவியாளரை அழைத்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ மனைக்கு வருமாறு கூறினேன். ஸ்டாலினை அழைத்து, என்னமோ என்னை செய்கிறது, எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

நிதி நிலை அறிக்கை பற்றியே எண்ணம் வருகிறது. தமிழக மக்களுக்கு இன்னும் உழைக்க வேண்டுமென்று நினைத்தது நடக்காது போல் இருக்கிறது.

நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு பத்தியும் நான் எண்ணி எண்ணி எழுதியது. அதையே நான் எழுதிய இறுதி சாசனமாக வைத்துக் கொள். என்றெல்லாம் கூறினேன். "அப்பா, அப்பா'' என்று கதறிவிட்டான். "இப்படியெல்லாம் பேசாதீர்கள் அப்பா, ஒன்றும் ஆகாது'' என்றான்.

உடனடியாக "ஆக்சிஜன்'' செலுத்தப்பட்டது. "ஈ.சி.ஜி.''யும் எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் அனைவரும் என்னை தீவிரக் கண்காணிப்பில் வைத்துக் கொண்டனர்.

என் மகள் செல்வி தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது. அருகிலே அழைத்தேன். கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மருத்துவ மனையிலே இருந்த நாட்களிலேயே இன்று தான் நான் சற்று உணர்ச்சி வயப்பட்ட நாள் என்று சொல்ல வேண்டும்.

டாக்டர்கள் மார்த்தாண்டம், தணிகாசலம், மகேஷ் போன்றவர்கள் யாரும் வீட்டிற்குச் செல்லவே இல்லை. என் அறையிலேயே அன்று இரவு முழுவதும் தூங்காமல் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

என் தலையைப் பிடித்துக் கொண்டே நின்ற தயாளுவிற்கு சில நிமிடங்கள் கூட நிற்க முடியாது, ஆனால் அப்போது இரண்டரை மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே இருந்தது. தொலைபேசியில் செய்தியை கேட்டு ராஜி அழுது கொண்டே உள்ளே நுழைந்தது. எனக்கு ஆறுதல் கூறுவதற்கு பதிலாக அதற்கு நான் ஆறுதல் கூற வேண்டியதாயிற்று!


4.30 மணிக்குப் பின்னர் நான் உறங்கி விட்டேன். சில மணி நேரங்கள் உறங்கி எழுந்த போது நான் சாதாரண நிலைக்கு திரும்ப வந்ததை உணர்ந்தேன்.


16-2-2009

இன்று எனக்கு ரத்த பரிசோதனை மற்றும் இதய எக்ஸ்ரே போன்றவை எடுக்கப்பட்டு, அனைத்தும் சரியாக இருப்பதாக தெரிய வந்தது.

17-2-2009

அறுவை சிகிச்சை முடிந்து இன்றோடு ஆறு நாள். இந்த ஆண்டு மருத்துவ மனையிலே நான் இருந்த காரணத்தால், நிதி நிலை அறிக்கைக்கு முதல் நாள் தலைமைச் செயலகம் செல்லவில்லை. ஆனால் பல முறை நிதித் துறை செயலாளரோடு தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு அப்படி மாற்றுங்கள், இப்படி மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு தான் இருந்தேன். ஆனால் அவர்களும் அலுப்பு படாமல், ஒத்துழைப்பு கொடுத்ததைப் பாராட்டத் தான் வேண்டும்.

என்னுடைய வாழ்க்கையில் நான் எப்போதும் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதில்லை. நிதி நிலை அறிக்கை குறித்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும்போதே, சென்னை உயர் நீதி மன்றத்திற்கு, வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழுகிய முட்டையால் தாக்கப்பட்டார் எனக்கு செய்தி வந்தது. அதற்குப் பிறகு அன்று முழுவதும் நான் தூங்கவில்லை.

18-2-09:


அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து ஏடுகளில் பாராட்டுகள் வந்திருந்தன. எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை சொல்ல வேண்டுமே என்பதற்காக ஒன்றிரண்டை சிரமப்பட்டு தேடி அறிக்கையாக கொடுத்திருந்தார்கள்.


சிலர் குறை கூற முடியாமல், தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறி, மறைமுகமாக அது நல்ல அறிக்கைதான் என்பதை ஒப்புக்கொண்டார்கள். ஜெயலலிதா நீண்ட அறிக்கை விடுத்திருந்தார். அவரும் தேர்தலை மனதிலே கொண்டு தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறியிருந்தார்.


‘திருமணத்திற்காக எடுத்த பட்டுப் புடவைதான்’ என்ற தலைப்பில் எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்த குறைபாடுகளுக்கு விளக்கங்களை எழுதினேன்.


டெல்லி சென்ற இலங்கை தமிழர் நல உரிமை பேரவை துணைக் குழுவினர் சோனியா காந்தியை சந்தித்து மனு கொடுத்துவிட்டு, அங்கிருந்து தொலைபேசி மூலமாக தகவல் கூறினர்.


மக்களவையில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கான உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறியதாகவும் எனக்கு தகவல் கூறினார்கள்.


ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நீதி மன்றத்தில் தாக்கப்பட்டது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் கே.பி. ஜெயினை தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த முகோபாத்யாயாவிடம் வருத்தம் தெரிவிக்கக் கூறினேன்.


அந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து கேட்டபோது, சம்பவம் தொடர்பாக சட்டக் கல்லூரி போலீசார் 20 வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும், இரவு 10.30 மணி அளவில் வழக்கறிஞர் கினிலியோ இம்மானுவேல் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.


புலனாய்வுத் துறை ஐ.ஜி.யை அழைத்து, சுவாமியை தொடர்பு கொண்டு, உயர்நீதிமன்ற சம்பவத்திற்காக நான் வருத்தம் தெரிவித்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறச் செய்தேன்.


சில நாட்களாக சரியான உறக்கம் இல்லாததாலும், வலது காலில் எரிச்சல் இருந்ததாலும் நரம்பியல் நிபுணர் ஏ.வி. சீனிவாசன் வரவழைக்கப்பட்டார். அவர் பழைய மருந்துகள் சிலவற்றை மாற்றி விட்டு புதிய மருந்துகள் கொடுத்தார்.


மார்த்தாண்டம் குழுவினர் அறுவை சிகிச்சை புண்ணை பரிசோதித்து விட்டு நன்றாக ஆறி வருவதாக கூறினர்.


19-2-09:


இன்று காலையிலிருந்து உடல் நிலை நன்றாக இருந்தது. டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்ட முதுகுத்தண்டு கவசத்தை பொருத்தி சரி பார்த்தார்கள். அதற்காக முதன் முதலாக உட்கார வைக்கப்பட்டேன்.


பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்த செய்திகள் சரியாக இல்லை. உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல். தொலைபேசி வாயிலாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.


சுப்பிரமணியன் சுவாமி தாக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 20 வழக்கறிஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதை தவிர மீதமுள்ள வழக்கறிஞர்கள் சரண் அடைவதாக கூறி, காவல் நிலையத்திற்கு வந்த பிறகு ‘நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம். ஆனால் வழக்கறிஞர்களை தாறுமாறாக பேசிய சுவாமி மீதும், அவருடன் வந்த ராதாராஜன் மீதும் நாங்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


காவல் துறையினர் அதற்கு ஒப்புக்கொள்ளவே, வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அதனை பெற்று வழக்கு பதிவு செய்து நகல் கொடுத்துள்ளனர்.


‘உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம். இப்போது கைதாக வேண்டியவர்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என காவலர்கள் கேட்டபோது, ‘சுவாமியை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தால்தான் நாங்கள் கைதாவோம்’ என்று புதிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதையட்டித்தான் வாக்குவாதம் தொடங்கி மோதலில் முடிந்தது.


நிலைமை மோசமாவதை அறிந்து நானே புறப்பட்டு செல்லலாமா என்று யோசித்தேன். மருத்துவர்கள் கண்டிப்பாக அந்த நிலையில் செல்லக் கூடாது என்றார்கள்.



தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளரை உடனடியாக நீதி மன்றத்திற்கு சென்று தலைமை நீதிபதியை சந்தித்து பேசும்படி கூறினேன். அவர்களும் அவ்வாறே சென்றார்கள். டி.ஜி.பி., கமிஷனர் ஆகியோரையும் போகச் சொன்னேன். கமிஷனர் அங்கேதான் இருப்பதாக தகவல் கிடைத்தது.


தலைமை நீதிபதியுடன் தொலைபேசியில் பேச முயன்றேன். போன் கிடைக்கவில்லை. ஒரு கடிதம் எழுதினேன். எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுவிட்டது.

இது பற்றி எடுத்துக் கூற தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை அனுப்பியுள்ளேன். தாங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வரத் தயாராக இருக்கிறேன் என்று எழுதி பேக்ஸ் மூலம் அனுப்பினேன்.



தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் நீதி மன்றத்திலிருந்து போன் செய்து, தலைமை நீதிபதி இதுபற்றிய வழக்கினை சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டுமென்று எண்ணுவதாக கூறினர். உடனடியாக அதற்கு ஒப்புக் கொள்ள சொன்னேன். அதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.


இதற்கே இரவு 10 மணியாகிவிட்டது. தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கமிஷனர், புலனாய்வுத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து நீதிமன்ற நிகழ்ச்சிகளை பற்றி விளக்கினார்கள். அடுத்த நாள் சட்டமன்றத்தில் நிலைமைகளை விளக்கி அறிக்கை வைக்க இரவே அறிக்கை தயாரித்தேன்.


20-2-09:


இன்றைய ஏடுகளில் நீதிமன்ற நிகழ்ச்சிகள் அதிக இடம் எடுத்துக் கொண்டிருந்தன. எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை கொடுத்திருந்தார்கள். அதிமுக பொதுச்செயலாளர் 356வது பிரிவை பயன்படுத்தி, ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தார்.


சட்டப் பேரவையிலும் நீதி மன்ற சம்பவங்கள் பெரிதாக எழுப்பப்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரினர். விதி இடம் கொடுக்காது என்று கூறியும் கேட்கவில்லை. அதிமுக வினர் வெளிநடப்பு செய்தனர். பாமக தொடர்ந்து குரல் எழுப்பியதால் வெளியேற்றப்பட்டனர். சட்டத்துறை அமைச்சர் விரிவான அறிக்கை படித்த போதிலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்த முயற்சித்ததால் வெளியேற்றப்பட்டனர்.


20ம் தேதி ஏடுகளில் கொட்டை எழுத்து செய்தி வந்திருந்தது. ஜெயலலிதா ஒரு திருமண விழாவில் பேசியதை அனைத்து ஏடுகளுமே காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு என்று தலைப்பிட்டு வெளியிட்டு இருந்தன.


காங்கிரஸ் கட்சியை பிடிக்காமல் இந்திய கம்யூனிஸ்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து ஜெயலலிதா வீட்டிற்கு சென்று பேச்சு நடத்தியிருக்கிறார்கள். அந்த நிலையில், ஜெயலலிதா திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு என்ற பெயரில் பேசியிருந்தார்.


சைவப் பெருமாட்டி உப்புக் கண்டத்தை பறி கொடுத்ததை போல இரண்டு கம்யூனிஸ்ட் காரர்களாலும் என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியாத நிலை. அதைப்பற்றி அன்று நான் அறிக்கை எழுதி முடிக்கவே நீண்ட நேரம் ஆகிவிட்டது.


மாலையில் தொலை ஒளிபரப்பு மூலமாக பாடி மேம்பாலத்தினை திறந்து வைத்தேன். அதில் பேசும்போது, திமுக அரசை கவிழ்க்க நினைக்கும் சதிகாரர்களின் திட்டத்திற்கு பயப்படாமல் நமது பயணத்தை தொடர்வோம் என்று கூறினேன்.



அறுவை சிகிச்சை முடிந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. முதுகு தண்டு கவசம் பொருத்தப்பட்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து, அறை உள்ளேயே சிறிது நேரமும், பின்பு அந்த ஏழாவது தளத்தையும் சுற்றி வந்தேன். பார்வையாளர்களில் சிலரை நாற்காலியில் அமர்ந்தவாறே சந்தித்தேன்.



காவல்துறை அதிகாரிகளை அழைத்து உயர் நீதிமன்றத்தில் அன்று என்ன நிலைமை என்று கேட்டேன். பதற்றம் நீடிப்பதாகவும், நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் யாரும் அங்கே வரவில்லை என்றும், வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, என் உருவப்படத்தையும் சிலர் எரித்தார்கள் என்றும், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும் விளக்கினார்கள்.


என் படத்தை எரிக்கிற அளவுக்கு நான் வழக்கறிஞர்களுக்கு என்ன வஞ்சனை செய்தேன் என்று யோசிப்பதிலேயே இரவு முழுதும் கழிந்தது. விடிந்து ஏடுகளில் வழக்கறிஞர்கள் என் படத்தை கொளுத்தியதாக வந்த செய்தி கண்டதும் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொல்லும் பாணியில், வாழ்க வழக்கறிஞர்கள்என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

21-2-2009

சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் சட்ட அமைச்சர் துரைமுருகன் அறிக்கை படித்த பிறகு, அதன் மீது விவாதம் நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் எல்லாம் கூச்சல் எழுப்பி, அதன் காரணமாக அவையிலிருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 21ஆம் தேதி காலையில் எழுந்ததும் உடன்பிறப்பு மடல் எழுத உட்கார்ந்தேன். அதிமுக ஆட்சிக் காலத்தில் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்திருந்த நிலையில், அதனை ஏற்காமல் அரசின் சார்பில் 110வது விதியின் கீழ் அறிக்கை மட்டுமே படிக்கப் பட்டது என்பதையும், அதன் மீது கேள்வி கேட்கவோ, பேசிடவோ யாரும் அனுமதிக்கப் படவில்லை என்பதையும் உதாரணத்தோடு எடுத்து அந்தக் கடிதத்தில் எழுதினேன்.

விளக்கத்தை எழுதி விட்டு, அதே கடிதத்தில் எப்படியோ நடந்தது நடந்துவிட்டது, இனியாவது அவை அமைதியாக, முறையாக நடைபெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். நீதி மன்றச் சம்பவங்கள் பற்றி அந்த மடலில் எழுதும்போது, சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முறைப்படி விசாரணை நடைபெறும். தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதிலே வழக்கறிஞர்களா, காவல் துறையினரா என்ற வேறுபாடு கருதாமல் இருவரும் நம்மவர்கள் என்ற எண்ணத்தோடு செயல்படுவோம். ஒருவர் காக்கி உடையிலும், ஒருவர் கறுப்பு உடையிலும் இருந்தாலும் இருவரும் நம்முடையவர்களே! என்றும் எழுதியிருந்தேன்.

இன்று மாலையில் இளைஞர் அணி சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட "இளைஞர் சங்கிலி"யில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டதாக தொலைபேசியில் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. இளைஞர் அணியில் பங்குபெற வந்த 154 வது வட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பகுதிக் கழகப் பிரதிநிதி, சிவப்பிரகாசம் என்பவர் தீக்குளித்து விட்டதாகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் படுவதாகவும் தகவல் வந்ததைத் தொடர்ந்து அவர் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடும்படி ஸ்டாலினிடம் கூறினேன். ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கழகத்தின் சார்பில் அவரது குடும்பத்தாருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிதிஉதவி அளிக்கக் கூறி, அதனை பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், பெ.வீ. கல்யாணசுந்தரம், தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கொண்டு சென்று நேரில் அளித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர், நண்பர் ப.சிதம்பரம் அவர்கள் கேட்டுக் கொண்டபடி, மாலையில் மருத்துவமனையில் இருந்தவாறே சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவிலே தொலை ஒளிபரப்பு (வீடியோ கான்பரன்ஸ்) மூலமாக கலந்து கொண்டேன். அந்த விழாவில் சென்னையில் என்னுடன் தம்பி துரைமுருகனும், சிவகங்கை யில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோரும் மற்றும் சுதர்சன நாச்சியப்பன், எம்.பி., ராமசாமி, எம்.எல்.ஏ., சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழா முடிந்ததும், பொதுப்பணித் துறை அமைச்சர் தம்பி துரைமுருகன் கேட்டுக் கொண்டவாறு, தொலை ஒளிபரப்பு முறை மூலமாகவே - தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத் தொடக்க விழாவிலே கலந்து கொண்டேன். நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், பி. கீதாஜீவன், ராதிகா செல்வி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்பாவு, வேல்துரை, வசந்தகுமார், ராணி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று இரவு டெல்லி டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் சென்னை வந்து மருத்துவ மனையில் என்னைப் பரிசோதித்தார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் கூறினார். மேலும் நான்கு வார காலம் ஓய்வு தேவை என்றும், படிப்படியாக உட்கார்ந்து, நின்று, நடக்கலாம் என்றும் அறிவித்தார்.

22-2-2009

இன்றைய தினம் காலை ஏடுகளில் மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர், பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேசிய பேட்டி ஒன்று வெளி வந்திருந்தது. அந்தப் பேட்டியில் "விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. இது கவலை அளிக்கும் விஷயமாகும். விடுதலைப் புலிகளின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தான் தீர்வு காண வேண்டும். ராணுவ நடவடிக்கையால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றே வழியாகும். இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும். முதலில், பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஏற்ற சுமூகமான அமைதிச் சூழல் அங்கே உருவாக்கப்பட வேண்டும். அப்படியொரு சூழல் உருவாகாத வரை எதிர் காலத்தில் தாக்குதல், பதில் தாக்குதல் என்ற நிலை அங்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்த மட்டில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. போர்முனைப் பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டிருக்கிறோம். அவர்கள் கொல்லப் படுகிறார்கள். அவர்களது இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கும் மறைந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே 1987ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின்படி அதிகாரங் கள் பரவலாக்கப்பட வேண்டும். மாகாண கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு சட்ட ரீதியிலான உரிமைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையின் பிராந்திய ஒற்று மைக்கும் இறையாண்மைக்கும் பாதகம் இல்லாத வகையில் அந்த நாட்டின் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு இவை நிறைவேற்றப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வின் மூலம்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று இந்தியா கருதுகிறது. பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டால்தான் இலங்கையில் இயல்பு நிலை திரும்பும்" என்று கூறியிருந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அமைச்சர் கூறிய வாசகங்கள் மகிழ்ச்சியை அளித்தபோதிலும், போரினால் தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ள 36 ஆயிரம் பேரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உடல் நலம் குன்றியுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் தொடர்ந்து செய்தி வந்ததையொட்டி, 22ஆம் தேதியன்றே பிரதமருக்கும், சோனியா காந்தி அம்மையாருக்கும் விவரமாக ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு மருத்துவக் குழுவையும் மருந்துகளையும் அனுப்புவதற்கு தயாராக இருக்கிறது என்றும், பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு உதவிட மருந்து மற்றும் மருத்துவக் குழுக்களை உடனடியாக அனுப்ப விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

வழக்கறிஞர்கள், காவல் துறையினர் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்றும், வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்ப மறுக்கிறார்கள் என்றும் செய்தி வந்தது. அவர்களுக்கிடையே ஆன மோதுதல் தீர்ந்து விடக் கூடாது என்பதில் சிலர் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்கள். வழக் கறிஞர்கள்பால் அவர்களுக்கு உண்மையில் அக்கறை உண்டோ, இல்லையோ இந்த அரசுக்குக் கெட்ட பெயர் வர வேண்டுமென்ற அக்கறையோடு அவர்கள்தான் வழக்கறிஞர் களின் தீவிர ஆதரவாளர்கள் என்பதைப் போலச் சொல்லிக் கொண்டு காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடு, காவல் துறை யினருக்காக இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தனர்.

எனவே உண்மை நிலவரங்களை விவரங்களாக ஒரு நீண்ட அறிக்கை விடுத்தேன். அதன் முடிவில் இரு தரப்பின ரும் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில் - மருத்துவ மனையிலே இருக்கிற நான் உண்ணா நோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன் என்று அறிவித்தேன். இந்த அறிக்கை வெளியிட்டது தான் தாமதம், இரு தரப்பினரும் ஒன்றுபட்டார் களோ இல்லையோ, தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், நமக்கு வேண்டியவர்களும் மருத்துவமனையில் இந்த நிலையிலே இருக்கும்போது எப்படி உண்ணாவிரதம் இருக்கலாம் என்று கடுமையாகக் கோபித்துக் கொண்டார்கள். அரசியல் ரீதியாக ஒத்த கருத்து இல்லாத பெரியவர் ராம கோபாலன் அவர்கள் கூட மருத்துவமனைக்கே வந்திருந்து நீண்ட நேரம் காத்திருந்து என்னிடம் உண்ணா விரதம் கூடவே கூடாது என்றார்.

மருத்துவர்கள் குழுவினர் அனைவரும் இன்று என்னைச் சோதித்தனர். ஊசி மருந்துகளை குறைத்துக் கொண்டு அதற்குப் பதிலாக மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவமனையில் சேர்ந்தது முதல் 100 ஊசிகள் போட்டு என் உடலில் "சதம்" அடித்து விட்டனர் மருத்துவர்கள் என்றால் மிகையாகாது.

அன்று பிற்பகலில், மருத்துவமனையிலிருந்த வாறே, தொலை ஒளிபரப்பு மூலமாக பி.எஸ்.என்.எல்., 3 ஜி மூன்றாம் தலைமுறைக் கான தொலைபேசி சேவையைத் தொடங்கி வைத்தேன். அதற்கான முதல் தொலைபேசி அழைப்பினை நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை அண்ணா சாலை தொலைபேசி நிலையத்தில் மத்திய அமைச்சர் ராஜா இருந்தவாறு பெற்றுக் கொண்டார்.

23-2-2009

இன்று காலை முதல் ஏராளமான தொலைபேசிகள். உண்ணா விரதம் பற்றி பல கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் முரசொலிக்கு "உடன்பிறப்பு" மடல் எழுதினேன். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த செய்தியினை தொலைக்காட்சியில் அறிந்து உடனடியாக வாழ்த்துச் செய்தி கிடைத்து, அவர் இருக்குமிடத்திற்கே அனுப்பி வைக்கச் செய்தேன்.

முதுகில் உள்ள அறுவை சிகிச்சை புண் மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. ஐந்தில் மூன்று தையல்களை டாக்டர் மார்த்தாண்டம் இன்று பிரித்தார்.

24-2-2009

இன்று காலையில் மருத்துவமனைக்கு கவிப்பேரரசு தம்பி வைரமுத்து வந்தார். ஆஸ்கர் விருதுக்காக அனைவரையும் முந்திக் கொண்டு ரகுமானுக்கு வாழ்த்து அனுப்பியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். "சூரியனுக்கு சுகமில்லை" என்ற தலைப்பில் அவர் எழுதி வந்த கவிதையை அவரே எனக்குப் படித்துக் காட்டினார். அருமையான கவிதை. அதைப் படித்தவுடன் அவருக்கு நான் ஒரு அன்பு முத்தம் கொடுத்தேன்; அவர் கையில்தான்! ரகுமானுக்குக் கிடைத்த ஆஸ்கரை விட உயர்ந்த விருது எனக்குக் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி பெருகிடக் கூறிக் கொண்டே திரும்பினார்.

உண்ணா விரதம் இருப்பதற்கான முயற்சியில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருவதை அறிந்த மருத்துவக் குழுவினர் என்னிடம் வந்து சமாதானமாகப் பேசத் தொடங்கி, நான் கோபமாக மறுத்ததைக் கேட்டுக் கொண்டு போனதோடு, அவர்கள் எல்லாம் இணைந்து நான் உண்ணா விரதம் இருந்தால், அது செய்து கொண்ட அறுவை சிகிச்சையிலிருந்து தேறி வருகின்ற நிலையின் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்றும், உடல் நலம் முழுவதுமாக தேறிய பிறகு உண்ணாவிரதம் பற்றி முடிவு செய்வதுதான் உசிதமாக இருக்குமென்றும் அறிக்கை ஒன்றை ஏடுகளில் கொடுத்து விட்டனர்.

அன்று இரத்த அளவும், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல் திறனை கண்டறிவதற்கான இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் சரியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

25-2-2009

அறுவை சிகிச்சை முடிந்து 14வது நாள். டெல்லி டாக்டர் ஜெய்ஸ்வால் அன்று என்னை மீண்டும் சந்தித்தார். பிரிக்கப்படாமல் இருந்த இரண்டு தையல்களும் இன்று பிரிக்கப்பட்டன. அறுவை சிகிச்சை புண் நன்றாக ஆறி உள்ளதாகத் தெரிவித்தார்கள். என்னை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வைத்தார்கள். இருக்கையிலே அமரவும் வைத்தார்கள். மருத்துவர்கள் அன்று விடுத்த அறிக்கையில் நான் மேலும் நான்கு வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டு மென்றும், மார்ச் 1ந் தேதியன்று இல்லம் திரும்பலாம் என்றும் அறிக்கை விடுத்தார்கள்.

வேளாண்மைத் துறை அமைச்சர் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் - நான் எனது உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால், அவர் சாகும்வரை உண்ணா விரதம் இருப்பேன் என்று ஏடுகளிலேயே அறிக்கை வெளியிட்டு விட்டார்.

தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் என்னுடைய உண்ணா நோன்பு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்றும், வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் நல்ல தீர்வுக்கு ஒத்துழைத்து மனித நேயக் கடமையாற்றிட முன் வர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதோடு, மருத்துவமனைக்கே வந்து எனக்கு வேண்டுகோளும் விடுத்தார்.

காயமடைந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடைக்கால உடனடி நிவாரணமாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பேரவையில் அறிக்கை கொடுக்கச் செய்தேன். வழக்கறிஞர்களின் முக்கிய கோரிக்கையான - குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள திருத்தத்தை தமிழகம் ஏற்காது என்றும், அதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் என்று பேரவையில் அறிவிக்கக் கூறினேன். விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர்கள் திருமாவளவன், ரவிக்குமார் மருத்துவமனையிலே என்னைச் சந்தித்து உடல் நலம் கேட்டதோடு, கடலூரைச் சேர்ந்த அவர்களுடைய கட்சிக்காரர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்து விட்டார் என்றும், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். அந்தத் தொகுதியின் கழகச் சட்டமன்ற உறுப்பினர் தம்பி அய்யப்பனும் அதற்காக கோரிக்கை மனு கொடுத் திருந்ததை ஏற்று, கழகத்தின் சார்பில்

ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிடக் கூறினேன்.

நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு இன்று பேராசிரியர் நீண்ட, விளக்கமான பதிலுரை அளித்தார். நகைச்சுவையும் - நாகரிகமும் கலந்த, நாட்டோர்க்குப் பயன்படும் நல்லதோர் பதிலாகும் அது!

26-2-2009

இன்றையதினம் சட்டப் பேரவைக்கு செல்ல வேண்டுமென்று பிடிவாதத்தோடு இருந்தேன். ஆனால் கண்டிப்பாக செல்லக் கூடாது என்று மருத்துவர்கள் தடுத்து விட்டார்கள். காரணம் அன்று சட்டமன்ற கூட்டத் தொடர் கடைசி நாள் என்பதால் அல்ல, நான் அன்று கடிதத்திலே "இன்று என் வாழ்விலோர் திருநாள்" என்று எழுதியிருந்ததைப் போல - அன்றையதினம் சட்டமன்றத்திலே அருந்ததியர் சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நாள். அந்த மசோதாவை நானே முன்மொழிந்து நிறைவேற்றப்பட வேண்டுமென்று கருதித்தான் அன்று சட்டப் பேரவைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன். மருத்துவர்கள் தடுத்து விட்ட காரணத்தால் - காலையிலே நானே எழுந்து - நான் அவையிலே இருந்தால் மசோதாவை முன்மொழிவதற்கு முன்பாகவே என்ன உரை ஆற்றுவேனோ அந்த உரையை என் கைப்பட எழுதினேன். அந்த உரையை பேரவைக்கு அனுப்பி தம்பி மு.க. ஸ்டாலினை விட்டு தீர்மானத்தை முன்மொழியும்படி கூறிவிட்டு, என்னுடைய உரையை அவையிலே படிக்கவும் கேட்டுக் கொண்டேன். அந்த என் உரை நகல்கள் எடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் வழங்கப்பட்டு, ஏடுகளுக்கும் தரப்பட்டது.

காலை ஏடுகளில் மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதாக செய்தி வந்திருந்தது. நிதித் துறை செயலாளருடன் தொடர்பு கொண்டு நம்முடைய மாநில அரசு அலுவலர்களின் நிலை என்ன என்று விசாரித்தேன். நம்முடைய அரசு அலுவலர்களுக்கும், அந்த அகவிலைப் படி உயர்வினை இரண்டொரு நாட்களில் அறிவிக்கலாம் என்று தொலைபேசியில் கூறினார். எதற்காக இரண்டொரு நாட்களுக்கு பிறகு அறிவிக்க வேண்டும், இன்றைக்கே அறிவித்தால் என்ன என்று கேட்டேன். செய்யலாம் என்று உறுதி அளித்தார். உடனடியாக மருத்துவமனையில் இருந்தவாறே அறிவிக்கை தயார் செய்து ஏடுகளுக்கு அனுப்பினேன். அதன்படி மத்திய அரசு கொடுத்ததைப் போல அகவிலை உயர்வு மாநில அரசு அலுவலர்களுக்கும் முன் தேதியிட்டு வழங்கப் பட்டது. மறுநாளே அந்தச் செய்தியைப் பார்த்து விட்டு அரசின் பல்வேறு சங்கத்தினர் நன்றி அறிக்கைகளை ஏடுகளுக்கு கொடுத்ததோடு, ஒருசிலர் மருத்துவ மனைக்கே வந்து நன்றி தெரிவித்தார்கள்
புதிய பிரச்சினையாக வாயிலும், நாக்கிலும் சிறு சிறு புண்கள் ஏற்பட்டன. காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் இரவிக்குமாரும், வயிறு மற்றும் குடல் சார்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர் பழனிசாமி அவர்களும் என்னைப் பரிசோதித்து மேலும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு புதிய மருந்துகளை உட்கொள்ளச் செய்தனர்.

இன்றைய தினம் மாலையில் சக்கர நாற்காலியில் (இதனை கட்டிலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம், சாய்வு நாற்காலியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்) அமர வைத்து தரைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். மருத்துவ மனைக்கு எதிரே உள்ள அழகான தோட்டத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் தங்கியிருந்து, மருத்துவர் களுடனும், அமைச்சர்களுடனும் தேநீர் அருந்தினேன்.

27-2-2009

வாயிலும், நாக்கிலும் உள்ள புண்ணின் காரணத்தினால் சரிவர உணவு அருந்த முடியவில்லை. எல்லாம் மருந்துகளின் வேகம்!

இன்று மாலையும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கீழ்த்தளத்திற்குச் சென்று தோட்டத் தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தேன். என்னைப் பார்ப்பதற்காக வந்த முக்கியஸ்தர்களை அங்கிருந்தவாறே சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

28-2-2009

ஒரு மாதத்திற்கு மேலான மருத்துவமனை வாசம் முடிந்து நாளை இல்லம் திரும்பலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்ததால் இன்று மனம் மகிழ்ச்சியாக இருந்தது. ராமச்சந்திரா மருத்துவமனைக்கான இருதயப் பிரிவில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இதய மின் அலை பிரிவினை என் அறையில் இருந்தவாறே திறந்து வைக்க வேண்டுமென்றும் இதய சிகிச்சை நிபுணர், டாக்டர் தணிகாசலமும், உரிமையாளர் வெங்கடாசலமும் கேட்டுக் கொண்டதின் பேரில் அறையில் இருந்தவாறே அன்று மாலையில் அதனைத் திறந்து வைத்தேன்.

அதைத் தொடர்ந்து மறுநாள் மார்ச் 1 அன்று வீடு திரும்புவதையொட்டி மருத்துவமனை டாக்டர்கள், துணை மருத்துவர்கள், சிப்பந்திகள் அனைவரிடமும் அன்பினைப் பரிமாறிக் கொண்டு, பிரியா விடைபெற்ற நிகழ்ச்சி - அது மருத்துவமனையல்ல, நம் சொந்த இல்லம் என்பதையே என் மனத்தில் பதியச் செய்வதாக இருந்தது.

மறுநாள் 1ஆம் தேதி இல்லம் திரும்புகின்ற வழியில், கழகத்தின் பொருளாளரும், இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி ஸ்டாலின் பெரு முயற்சியெடுத்து கட்டியிருந்த "அன்பகம்" கட்டிடத்தை நான் திறந்து வைத்து விட்டுச் செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டதற் கிணங்க அதற்கும் ஒத்துக் கொண்டேன்.

1-3-2009

அன்று காலையில் விரைவில் எழுந்து விட்டேன். 33 நாட்களுக்குப் பின் இல்லம் திரும்புகிறோம் என்ற நினைவு. அன்று இல்லம் திரும்புகின்ற செய்தி அறிந்து வழியெங்கும் வரவேற்புகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப் பதாகவும், வேனில் இருந்தவாறே அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் மாவட்டச் செயலாளர்கள் கூறினர். அந்த வரவேற்புக் கூட்டம் ராமச்சந்திரா மருத்துவ மனை வரையிலும் சேர்ந்துவிட்டது.

அமைச்சர்களும், கழக முன்னணியினரும் என்னை வரவேற்று அழைத்துச் செல்ல மருத்துவ மனைக்கே வந்து விட்டனர். இல்லம் திரும்பும் வழியில் புதுப்பிக்கப்பட்ட "அன்பகம்" கட்டிடத்தை வேனில் இருந்தவாறே திறந்து வைத்தேன்.

இல்லத்தின் வாயிலில் என் அக்காள் மற்றொரு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு என்னை வரவேற்கக் காத்திருந்தார். இன்று என்னைப் பெற்ற தாயும், தந்தையும் இல்லை. என் பெரிய அக்கா பெரிய நாயகமும் இல்லை. என் முதல் பிள்ளையைப் போல நானே வளர்த்த என் கண்மணி முரசொலி மாறன் இல்லை. மிச்சம் இருப்பது என் சின்னக்கா ஒருவர்தான். குழந்தை பருவத்தில் என்னைத் தூக்கி, தூக்கி அவருடைய இடுப்பே வளைந்து விட்டது என்று ஊரார் அப்போதே பேசுவார்கள். அந்த என் சின்னக்கா, வாயிலில் எனக்காக காத்திருந்ததைக் கண்டதும் நாங்கள் இருவரும் பேச முடியாமல் உருகி விட்டோம்.

இல்லம் திரும்பி பத்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு - 13.3.2009 அன்று தலைமைச் செயலகத்திற்கும் சென்றேன். செய்தியாளர் கள் குழுமியிருந்தனர். 2006ஆம் ஆண்டு மே திங்களில் நான் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக வந்து அமர்ந்து கையெழுத்திட்டதும் 13ஆம் தேதிதான். இன்றும் 13ஆம் தேதி தான் என்று கூறிவிட்டு உலமாக்கள் வாரியத்திற்கான கோப்பிலே கையெழுத்திட்டேன். செய்தியாளர்களைச் சந்தித்தேன், அதிகாரிகளுடன் பிரச்சினை களை விவாதித்தேன். காங்கிரஸ் சார்பில் என்னை வாழ்த்த வந்த சுதர்சனம் அவர் களையும், பீட்டர் அல்போன்ஸ் அவர்களையும் சந்தித்தேன். தொடர்ந்து உழைக்கத் தயாராகி விட்டது "மறுபிறவி" எடுத்ததாகக் கூறப்பட்ட இந்த இயந்திரம்.


அன்புள்ள,

மு.க

( முற்றும் )
( அப்பாடா, டாவு தீர்ந்துவிட்டது )




மருத்துவமனைகள்

அடிபட்ட வக்கீல்கள் பலரும் தனியர் மருத்துவமனையிலும் போலீசார் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகிறார்களாம்.

எல்லாருமே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அரசு செலவை சந்திக்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அவமானம் ! இதற்கு பேசாமல் எல்லா அரசு மருத்துவமனைகளையும் மூடிவிட்டுப் போகலாம். தன் மருத்துவமனைகள் மீது தனக்கே மரியாதை இல்லாமல் ஓர் அரசு !

முதல்வர் கருணாநிதி முதுகுத் தண்டு அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டது இன்னொரு அவமானம். அதைச் செய்ய அழைக்கப்பட்டவர் டெல்லியில் அரசு மருத்துவமனையான எய்ம்ஸின் பிரபல மருத்துவர் என்பது இன்னொரு அவமானம். மருத்துவர் மட்டும் அரசு மருத்துவமனையிலிருந்து வரலாமாம்.

அண்ணா காலம் வரை அமைச்சர்கள் அதிகாரிகள் எல்லாரும் அரசு மருத்துவமனைக்குத்தான் சென்றார்கள். அதன் பிறகுதான் தனியார் மருத்துவமனைகளை அரசு ஊக்குவிக்கும் காலமாகிவிட்டது.

சென்ற வாரம் நள்ளிரவுக்குப் பின் சுமார் 2 மணிக்கு எனக்கு இதய அதிர்ச்சியின் சில அறிகுறிகள் தோன்றவே, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றேன். சுமார் 15 நிமிடங்களுக்குள் ஈ.சி.ஜி எடுத்தது முதல் மருத்துவர் சோதித்து, எனக்கு இதய அதிர்ச்சி வரும் வாய்ப்பு எதுவும் இப்போதைக்கு இல்லை என்று நம்பிக்கையளித்து அனுப்பும் வரை, மருத்துவமனை ஊழியர்களின் சேவை திருப்திகரமாக இருந்தது. எந்த இடத்திலும் யாரும் என்னை பத்திரிகையாளன் என்று அடையாளம் தெரிந்திருக்கவில்லை. சாதாரண பொதுமக்களில் ஒருவனாகவே கருதி நடத்தினார்கள்.

அரசு மருத்துவமனைகளை முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பயன்படுத்தத் தொடங்கினால், அவை மேலும் மேம்படும். அடுத்த முறை முதுகுவலி வந்தால் ( வரவேண்டாம் !) தயவுசெய்து ஜி.ஹெச்சுக்கு செல்லுங்கள் முதல்வரே...!

( நன்றி: குமுதம் 6-3-2008, ஓ-பக்கங்கள் )


26 Comments:

Anonymous said...

'எந்த இடத்திலும் யாரும் என்னை பத்திரிகையாளன் என்று அடையாளம் தெரிந்திருக்கவில்லை. சாதாரண பொதுமக்களில் ஒருவனாகவே கருதி நடத்தினார்கள்.'

Does it mean that they dont read his columns :)

பெசொவி said...

ஒரு சிறிய கவிதை.

அரசு பேருந்தில் சென்றால்
அவரசத்திற்கு ஆகாது,
தனியார் பேருந்தில் வேகமாக
ஏறினார்
அந்த அரசாங்க அதிகாரி.

நிற்க!
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்"
என்று பாடிய எம்.ஜி.ஆர். அவர்களே
ப்ருக்லின் மருத்துவமனை சென்றார்.

எல்லோரும் தனியார் மருத்துவமனை செல்ல காரணம் என்னவென்று யோசித்து
பார்த்தேன். ஒரே காரணம் தான் இருக்க முடியும். அரசாங்க மருத்துவமனையில் இருப்பவர்கள் எல்லாரும் இவர்களால் appoint செய்யப்பட்டவர்கள் என்பதாலோ?

Anonymous said...

//Does it mean that they dont read his columns :)//

It means GNANI is not KNOWN as pictorial format!

seethag said...

couldnot help laughing looking at mr.m.k's long letter.who on earth has time or interest to read it?it reflects his narcissim.

Anonymous said...

Manjal thundu not only avoids his own govt. hospitals and needs the state of the art hospitals... he also makes sure his doctor is a meritorious non-quota guy.

vijay said...

ஐயா, இது எந்த வகை குசும்பில் சேர்த்தி?? ;)
ஆனாலும் ஞானி சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கு!

Anonymous said...

வர வர கலைஞரின் டைரி குறிப்பை எல்லாம் வெளியிட்டு இட்லி வடையை குப்பையாக்கி வருகிறீர்கள்.

Krish said...

தமிழ் நாட்டை ஆள கருணாநிதியை விட்டால் வேறு ஆளே இல்லையா. ஏன் இந்த பதவி வெறி? உடல் நிலை சரி இல்லை என்றல் வேறு யாரிடமாவது பொறுப்பை ஒப்படைக்கலமே?
அரசு மருத்துவமனை பற்றி ஞானி சொன்னது மிக உண்மை. கருணாநிதி மட்டும் அல்ல, ஜெயலலிதா, ராமதாஸ், சோனியா, மன்மோகன் உட்பட ஏறும் அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை.

பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே நல்ல உணவு, இருப்பிடம் ,கல்வி, மருத்துவ வசதி என்று இருக்கும் வரை இந்த நாடு உருப்படாது.

கொடும்பாவி-Kodumpavi said...

போன பதிவு ஒரு வரி இந்த பதிவு ஒன்பது பக்க வரி.. இதுக்கு ஒரு தொடர் பதிவுன்னு சொல்லி ஒரு முக்கிய கட்டத்துல கட் செஞ்சி இன்னும் ஆர்வத்தை உண்டு பண்ணியிருக்கலாம். ரொம்ப மெனக்கிடுறீங்க.. ஆமா வண்ணத்துப்பூச்சியார் எங்கே?.. ஓ இன்னும் பதிவ படிச்சிக்கிட்டு இருக்காரோ?

கலைக்கோவன் said...

ஞானி நல்லாதான் சொல்றாருய்யா..,
ஆனா யாரு நல்லது
சோன்னா கேட்கறான்...,

Anonymous said...

Hats off to our CM, Mr M Karunanidhi. This is a wonderful diary narration. At some places, notably on the 15th Feb entry, my eyes became moist. Even though MK may not like it, I pray to God for his speedy and full recovery.

Rajaraman said...

IV இந்த புலம்பல் டயரி விளக்கமெல்லாம் தேவைதானா? தொடர்கதை போன்று தொடரும் போட்டு வெளியிடும் புலம்பல்களின் மூலம் அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை.

Anonymous said...

A law should be enacted making it mandatory for all the MPs/MLAs, who voted FOR reservation to compulsorily get treated only in Govt. Hospitals & only by RESERVED DOCTORS.

Like this, if Mullai Mullaal Aruthaal, our country will benefit by succesfully getting rid of unscrupulous politicians who promote casteism & vote bank politics for their own benefit at the cost of the country.

Anonymous said...

ஆஆஆ........வ்வ்வ்வ்...!!

IdlyVadai said...

மக்களே இதுக்கே இப்படி என்றால் இன்னும் ஒரு வார குறிப்பு இப்ப சேர்த்திருக்கிறேன். நாளை இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம் என்று இருக்கிறேன் :-)

Rajaraman said...

\\மக்களே இதுக்கே இப்படி என்றால் இன்னும் ஒரு வார குறிப்பு இப்ப சேர்த்திருக்கிறேன். நாளை இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம் என்று இருக்கிறேன் :-)//

IV, வேண்டாம் எங்கள் மேல் கருணை வைத்து விட்டு விடுங்களேன். புண்ணியமாக போகட்டும்.

Anonymous said...

>>>>>>>>>>>>>>
தயாநிதிமாறன் எம்.பி. மத்திய மந்திரி டாக்டர் அன்புமணியிடம் பேசி டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அடுத்த நாளே டாக்டர் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக அன்புமணி தகவல் அனுப்பினார்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மருத்துவமனையில் கஷ்டப்பட்ட விஷயங்களையும் கட்டுரையாக்கி காசு பார்க்கும் பேரன் - அடிக்கடி மருத்துவமனை போட்டோக்களில் தென்பட்டார். ஆனால் கடைசியில் அவரைப் பற்றி தாத்த வெறும் ஒரு வரி மட்டுமே எழுதியுள்ளார். ஆனால் துணைவியர், மகள்கள் பற்றி பல வரிகள். மதுரை மருமகள் வந்த மாதிரி தெரியவில்லையே ? உள்ளே விடமாட்டார்களோ ? அது என்னங்க இது மனைவியரையும் மகளையும் 'அது' 'நின்றுகொண்டிருந்தது' என அஃறிணையில் எழுதுகிறார் ?




----
என் மகள் செல்வி தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது. அருகிலே அழைத்தேன். கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
.............

என் தலையைப் பிடித்துக் கொண்டே நின்ற தயாளுவிற்கு சில நிமிடங்கள் கூட நிற்க முடியாது, ஆனால் அப்போது இரண்டரை மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே இருந்தது. தொலைபேசியில் செய்தியை கேட்டு ராஜி அழுது கொண்டே உள்ளே நுழைந்தது. எனக்கு ஆறுதல் கூறுவதற்கு பதிலாக அதற்கு நான் ஆறுதல் கூற வேண்டியதாயிற்று!
-----------


செவிலியர்கள் என்று எடுத்துக் கொண்டால், செந்தாமரை, ஜாக்குலின், ப்ளோரா, சித்ரா, சாந்தி, அமீனா ஆகியோர் 24 மணி நேரமும் மாறி மாறி என்னுடனே இருந்து தங்களுக்கு வேண்டிய நெருங்கிய உறவினரைக் கவனிப்பது போல உதவி புரிந்தனர். அதைப் போலவே வார்டு பாய் மாரிமுத்துவும், என்னுடைய தனி உதவியாளர் நித்யாவும் கடந்த ஒரு மாத காலமாக என்னை விட்டு அங்கும் இங்கும் அகலாமல் ஆற்றிய பணிகளை நான் இந்தத் தொடரிலே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

Viji Sundararajan said...

எதுக்கு resource எல்லாம் வேஸ்ட் பண்ணறிங்க இந்த 80+ தாதா (தாத்தா) வோட முதுகு புராணம் எல்லாம் போட்டு :-?

Be environment friendly :-)

ஞானி லெட்டர் படிச்சேன். அவர் சொல்லறது சரி !!

மாயவரத்தான் said...

ஜப்பானில ஜாக்கிசான் கூப்பிட்டாங்க, அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்பிட்டாங்கன்னு ஏன்டீ கலர் கலரா கதை விடுறன்னு கவுண்ட்ட்ஸ் கேக்குற கேள்வி ஏனோ இங்கே நியாபகத்துக்கு வந்து தொலைக்குது.

IdlyVadai said...

மக்களே ஒரு தவறு நடந்துவிட்டது 6.2.09 - 10.2.09 வரை போட்ட டைரி குறிப்பு எடிட் செய்தது என்று எனக்கு சற்று முன் தான் தெரிந்தது. தற்போது விரிவான டைரி குறிப்பு போட்டிருக்கிறேன். படித்து பாருங்க நன்றி

Guruprasad said...

As usual Mr. CareNoNidhi invites wrath of people precisely because of his personal experience narration. For a moment, let us forget he is a public figure, let us forget he went to a private hospital, instead of Govt Hospital etc etc;
let us think only about the resillience and the sufferings they undergo,at such an age; it is actually heart rendering...a couple of days back I read about the hip operation performed on a 99 year old; and my grandpa had a leg operation performed on him at the age of 85...cant help but imagine the many risks in the operations for them. I am sure at any other country abroad, mostly they would neither be covered by insurance nor would the doctors take a risk on their professions...that says something about the confidence of our own doctors, and the care they take to do such operations. Having seen the analysis done by the dotors for my grandpa, I can vouch for this. They cannot be under full anesthesia, as it may affect their heart/brain. The sugar levels and protein levels have to be controlled, but not so much with lot of insulin or diabetic medicines because it may adversely affect their sugar levels; etc etc (any medical professional should be able to explain this further...)
Another important things about this n-2 generation people - they have been quite mobileand agile by virtue of their lifestyle, that they can withstand such operations...may it be Dr. manmohansingh at 70+, CareNoNidhi at 85+, 99-year, old, er, old man, or for that matter, my grandpa at 85, or Vajpayee at 80+ with knee replacement operation...and can we forget the numerous operations that Writer Sujatha had at his age, and how he survived all of them?
kudos to both the old generation, and the efficient team of doctors.
And we "waste-bandwidth-increase waistband" generation have some message there, and it is good one of the thatha actually chronicled this.
[oops...huge comment, maybe I will post this in my blog too as a Post]

Anonymous said...

ஐயா டைரி குறிப்பு படிச்சவுடனே நெஞ்சல்லாம் அடைக்குது ஒரு ஆம்புலன்ஸ் அனுப்புங்க...

அரசு மருத்துவமனைக்கு போறதா? இல்ல தனியார் மருத்துவமனைக்கு போறதா?

Anonymous said...

Kalaingar Karunathiya illa Thenali Karunanithiyaa.

R.Gopi said...

அந்த நாலு பேருக்கு நன்றி.

டாக்டர் மயில்வாகனன்
எலும்புச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே. மார்த்தாண்டம்
செவிலியர் செந்தாமரை
வார்டு பாய் மாரிமுத்து

Anonymous said...

முரசொலியில் போடுவதற்க்கு வேற மேட்டர் கிடைக்கலியா என்ன? கஷ்டம் கஷ்டம்!

Anonymous said...

/முரசொலியில் போடுவதற்க்கு வேற மேட்டர் கிடைக்கலியா என்ன? கஷ்டம் கஷ்டம்!//

முரசொலியிலா அல்லது இட்லிவடையிலா?