பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 31, 2007

திரும்பவும் ஓ. பக்கங்கள்

ஞாநியின் ஓ! பக்கங்கள் இந்த வார ஆனந்த விகடனில் திரும்பவும் ஆரம்பம். !

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 31-10-07

இந்த வாரம் இட்லிவடை முனிக்கு சின்னதாக எழுதும் கடிதம்.

ஹாய் முனி,
எப்படி இருக்க ? சவுக்கியமா ? நாட்டர் தெய்வமான முனியை அப்படியே ஆரியப்படுத்தற மாதிரி இருக்கு!! என்று இலவசமா சிலர் போன வாரம் கேட்டார்கள். எதை எழுதினாலும் இப்ப பிரச்சனை தான்.

தினத்தந்தியில் வரும் 'இன்றைய சினிமா' பகுதி போல 'இன்றைய பெயர் மாற்றம்' ன்னு ஒரு பகுதி ஆரம்பிக்கனும். பாலு, வீராஸ்வாமிக்கு போட்டியா இப்ப எதியூரப்பா!

கர்நாடக மாநில முதலமைச்சராக இருபது தினங்களுக்கு முன் பதவியேற்கும் வாய்ப்பை இழந்த பிஜேபி தலைவர் எதியூரப்பா இப்ப ஜோதிடர்களின் ஆலோசனைப்படி தனது பெயரை மாற்றிக் கொண்டதன் காரணமாக முதலமைச்சராகும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்கிறார்கள். என்னத்த சொல்ல ?

கடந்த 11ம் தேதியிலிருந்து இதை மேற்கொண்டதாகவும் எதியூரப்பாவின் தனிச் செயலர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். நம்ம திராவிட அமைச்சர்கள் போல இவர்கள் ஒளிந்துகொண்டு செய்வதில்லை அவ்வளவு தான் வித்தியாசம். கொஞ்ச நாளுக்கு முன் தான் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் ஜோதிடர்கள் ஆலோசனையை ஏற்று தனது பெயரில் ஒரு எழுத்தை சேர்த்துக் கொண்டார். ஆனால் எதியூரப்பாவை சேர்த்துக்கொள்ளவில்லை. இப்ப Yediyurappa, என்பதை Yeddyurappa என்று மாத்தியுள்ளார். ( I எடுத்துவிட்டு D சேக்கபட்டுள்ளது ). 'மக்கள்' என்பதை முட்டாள் என்று மாத்த்தாமல் இருந்தால் சரி.

அதே போல போன வாரம் idlyvadai என்பதை idlyvadai2007 என்று நான் மாத்தியுள்ளேன். இனிமே கடிதங்களை அதுக்கு அனுப்பவும்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஜெயேந்திரை மீட் செய்ய போயிருக்கிறார் அப்ப என்ன நடந்தது தெரியுமா ? சங்கராச்சாரியா அவரை உள்ளே வராதீங்க என்று சொல்லி வெளியே அனுப்பிட்டார் ஏன் தெரியுமா ? போன மாசம் அவர் ஊட்டியில் ஜெக்கு (ராமர் பாலத்துக்கு எதிராக குரல் கொடுத்ததற்கு) ஒரு சால்வை கொடுத்திருக்கிறார் என்பது தான் காரணம். இப்ப பிஜேபி கட்சியினர் ஜெயுடன் கூட்டணி என்று பேசுபவர்கள் நாளை சுவாமிகளிடம் ஆசி வாங்க போனா அவர்களையும் இதே மாதிரி வெளியே போங்க என்று சொல்லுவார் என்கிறார்கள். முற்றும் துறந்தால் தான் ஞாநி. ஐயோ இது வேற ஞாநி ! எஸ்.வி.சேகர் குமுதம் ஆன்லைன் பேட்டியில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஜெயிலில் போட்டது, ஜெயலலிதா இல்லை, போலிஸ் தான் என்றார். ஐயோ !

பட்டம் பறக்கும் என்று கேள்வி பட்டிருக்கேன், ஆனா படம் எடுக்குமா ? எடுக்கும்போல Nicolas Chorier என்ற ஃபிரன்சுகாரர் பட்டத்தை வைத்து படம் எடுத்திருக்கிறார். அதை பார்க்கனுமா ? லிங்க் இங்கே இருக்கு


சினிமா பத்தி அடுத்த வாரம் எழுதறேன். இப்ப நான் எஸ்கேப்

அன்புடன்,
இட்லிவடை

Read More...

Tuesday, October 30, 2007

கிருஷ்ணசாமி மீது தாக்குதல் - ராமதாஸ், விஜயகாந்த் அறிக்கை

நாட்டில் யாரும் யாரையும் குத்தலாம் என்ற நிலை உள்ளது - விஜயகாந்த்
காவல் துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்றும் காவல் துறைக்கு ஈரலே இல்லை என்று அண்மை காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது - ராமதாஸ்

முழு அறிக்கைக்கு ...


விஜயகாந்த் கண்டனம்

நாட்டில் யாரும் யாரையும் குத்தலாம் என்ற நிலை உள்ளது. இது தவிர்க்கப் பட வேண்டும். எல்லா உயிருக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்.

இப்போது நடைபெற்றுள்ள சம்பவத்தைப் பார்க்கும்போது, சட்டம்ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு உள்ளது என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளலாம். ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்.



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி முதுகுளத்தூர் அருகே நேற்று வன்முறையாளர்களால் தாக்கப் பட்டிருக்கிறார். இந்தக் கொலை வெறித் தாக்குதலில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார். வேறு யாரையோ தாக்கத் திட்டமிட்டவர்கள். அடை யாளம் தெரியா மல் இவரைத் தாக்கியிருக்கிறார்கள் என்று காவல்துறையினர் சந்தேகப்படுவதாகவும், அதனால் இந்தத் தாக்குதல் சம்பவத்தை அவர்கள் மிகக் கடுமையான நிகழ்வு என்று எடுத்துக்கொள்ளவில்லை என்றும் காவல் துறை வட்டாரத் தகவல்களை மேற்கொள் காட்டி சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கிறது. இது உண்மை என்றால் தமிழகக் காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்கு மிக வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு வந்திருக் கிறது. தென் மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை உயர் அதிகாரிகளும் பல முறை கூடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திருக்கிறார்கள். எந்த வித அசம்பாவித சம்பவமும் நடந்து விடாமல் தடுப்பதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றெல்லாம் அதிகாரிகள் அன்றாடம் தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் மீறி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அந்தப் பகுதியில் கொலை வெறி கும்பலால் தாக்கப்பட்டிருக்கிறார். முதுகுளத்தூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்று கொண்டிருந்த போது அவரது பாதுகாப்புக்காக ஒரு காவலர் கூட உடன் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகாமையில் உள்ள ஒரு ஊரில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூட இந்தத் தாக்குதல் பற்றிய சதி செயலை முன்கூட்டியே அறிந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் தெரியவருகிறது.

எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட ஏற்பாடுகள் அனைத்தும் மேலோட்டமாக எடுக்கப் பட்டிருக்கும் நடவடிக்கையை தான் என்பதும் முன்கூட்டியே அறிந்து வருமுன் காக்கும் நடவடிக்கைகள் காவல் துறையினர் கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பது இந்தத் தாக்குதல் சம்பவம் புலப்படுத்துகிறது. உளவுத்துறையினர் சரியாக செயல்பட்டிருந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்தி இருக்கமுடியும். அவருடன் பாதுகாப்புக்காக காவலர்கள் சென்றிருந்தாலும் தாக்குதலைதடுத்திருக்க முடியும்.

பாதுகாப்பு என்பது குறிப்பிட்ட ஓரிரு தலைவர் களுக்கு மட்டும் தான் என்கிற கண்ணோட்டத்துடன் செயல்படும் போக்கை காவல்துறையினர் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுக்கும், ஆட்சியில் இருந்தவர்களுக்கும், குறிப்பிட்ட சில குழுக்க ளால் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கும் மட்டுமே பாதுகாப்பு என்ற பாகுபாடான நிலைமை கூடாது. அத்துடன் ஒவ்வொரு தலைவரும் நீதிமன்றத்திற்குச் சென்றுதான் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பை கோரி பெற வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவது காவல் துறையினருக்கும் அரசுக்கும் இழுக்கைத் தேடித் தரும் என்பதை உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும்.

வேறு யாரோ என்று நினைத்து தவறுதலாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை தாக்கியுள்ள நிகழ்வை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முக்கிய தலைவர்கள் அனை வருக்கும் பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையும், அரசும் முன் வரவேண்டும்.

தமிழகக் காவல்துறை மிக உன்னதமான நிலையில் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கடந்த சில வருடங்களாகக் காவல் துறையைப் பற்றி தெரிவிக்கப்பட்டு வந்துள்ள கருத்துக்கள் அதன் நற் பெயருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. காவல் துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்றும் காவல் துறைக்கு ஈரலே இல்லை என்று அண்மை காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சி என்றால் ஜெயலலிதாவின் ஏவலுக்கு கட்டுப்பட்டு செயல்படும் காவல்துறை என்றும், தி.மு.க. ஆட்சி என்றால் கலைஞரின் கட்டளைக்கு பணிந்து நடக்கும் என்றும் மாறி மாறி தமிழக காவல் துறை குற்றச்சாட்டுக்கு இலக்காகி வந்திருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும். மக்களின் பாதுகாவலர்கள் என்ற பெயர்தான் தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும். இழந்து விட்ட பழைய உன்னத நிலையை அடைய உதவும் என்பதை உணர்ந்து காவல் துறை செயல்பட முன்வர வேண்டும். ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களும் நமது காவல்துறை இழந்து விட்ட பெருமையை மீண்டும் பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.

Read More...

கிருஷ்ணசாமியைக் காத்த ராமர் டாலர்!

கிருஷ்ணசாமியைக் காத்த ராமர் டாலர்! இந்த பதிவுக்கு ஏதாவது நான் கமெண்ட் அடித்தால் அது நாகரிகமாக இருக்காது. ராமர் பத்தியையும், துன்பத்தில் இருக்கும் ஒருவரையும் கிண்டல் அடிப்பது போல இருக்கும். அதனால் செய்தி மட்டும் கீழே...

தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமியை அவர் அணிந்திருந்த ராமர் படம் போட்ட டாலர் தான் காப்பாற்றியுள்ளது. நெஞ்சுக்குப் பாயவிருந்த வேல் கம்பு டாலரில் பட்டதால், வழுக்கி வயிற்றில் பாய்ந்துள்ளது.

மதுரை அருகே நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை ஒரு கும்பல் வழி மறித்து பயங்கரத் தாக்குதல் நடத்தியது. வேல் கம்பால் அவரைக் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணசாமியைக் காத்தது அவர் அணிந்திருந்த ராமர் படம் போட்ட டாலர்தான் என்று காங்கிரஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ராமர்தான் எங்களது தலைவரின் உயிரைக் காத்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது, எங்களது தலைவர் கிருஷ்ணசாமி, பெரிய டாலர் ஒன்றை அணிந்திருந்தார். அதில் ராமர் படம் இருந்தது. வன்முறைக் கும்பல் வேல் கம்பால் குத்தியபோது அந்த டாலர் மீது வேல் கம்பு பாய்ந்தது.

டாலரில் வேல் கம்பு பாய்ந்ததால், நெஞ்சில் குத்துப் படாமல் தலைவர் தப்பித்தார். அந்த டாலர் மட்டும் இல்லாதிருந்தால் நிச்சயம் எங்களது தலைவரின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கும் என்று கூறினர்.

Read More...

லா.ச.ரா. - பா.ரா

"நெருப்புன்னு எழுதினா பொசுங்கற வாசனை வரவழைக்கத் துப்பில்லன்னா எழுதாதே" லா.ச.ரா எழுத்தாளர் பா.ராகவனுக்கு கொடுத்த அட்வைஸ்!

எழுத்தாளர் பா.ராகவன் - லா.ச.ரா பற்றி எழுதியது..


பழைய குப்பைகளைக் கிளறிக் குடைவது போலொரு சுகம் வேறில்லை. முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை காலை அதற்காகவே உட்காருவேன். குளிக்காமல், பூஜை செய்யாமல், சாப்பிடாமல் வியர்வையும் தூசி நெடியும் தும்மலுமாகப் பிற்பகல் வரை என் பிரத்தியேகப் புதையல்களுடன் கழியும் தினம். என்ன தேடுகிறோம் என்பதே முக்கியமில்லை. கிடைக்கிற அபூர்வங்கள் புதிய தேடல்களைத் தொடங்கிவைக்கும். இது என் அனுபவம்.

தவறான ஆங்கிலம் எழுதி அப்பாவிடம் அடிபட்டு எப்போதோ அவரைத் திட்டி எழுதிய கடிதம், டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் பார்த்த பெண்ணைப் பற்றி எழுதிய வெண்பாம்கள் (நன்றி: ஆசாத்), ஊருக்கு எடுத்துப் போகவேண்டும் என்று திட்டமிட்டு எழுதிவைத்த பொருட்பட்டியல், புதிய பேனாவில் போட்டுப்பார்த்த கையெழுத்துகளடங்கிய தனித்தாள், கதைக் குறிப்புகள், கட்டுரைப் பிரதிகள், ஆரம்பித்துப் பாதியில் நிற்கும் நாவல்கள்...

குடையக் குடையக் கொட்டும் பொக்கிஷங்கள்.

நேற்றிரவு, மும்பை வெடிகுண்டு வழக்கு தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைப் பிரதி - ஒரு கட்டுரைக்காக அவசரமாக வேண்டியிருந்தது. பதினொரு மணிக்கு அதைத் தேடத் தொடங்கி, அதைத் தவிர வேறு என்னென்னவோ அகப்பட்டன. அவற்றுள் ஒரு போஸ்ட் கார்டும் அடக்கம்.

சுமார் பதினேழு வருடங்கள் முன்பு எனக்கு ஒரு பெரியவரால் எழுதப்பட்ட போஸ்ட் கார்டு அது. பார்த்ததும் என் கண்கள் நிறைந்து ததும்பிவிட்டன. கால ஓட்டத்தில் எத்தனையோ விஷயங்கள் மனத்தின் ஞாபகத்தட்டுகளிலிருந்து விழுந்து உதிர்ந்தே போய்விடுகின்றன. திரும்ப எடுத்துக் கோக்கும்போது உள்ளம் சொல்லமுடியாத நெகிழ்ச்சியையும் வேதனை கலந்த பரவசத்தையும் அடைந்துவிடுகிறது. அந்த போஸ்ட் கார்டுக்கு அன்று நான் எழுதிய பதிலும் வரி வரியாக நேற்று நினைவுக்கு வந்தது. வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சந்திப்போமா என்று என்னை ஏக்கம் கொள்ளச் செய்த நபர் அவர். என் விருப்பத்தை அவருக்கு எழுதியபோது, அதற்கு பதிலாகத்தான் அவர் அந்த கார்டைப் போட்டிருந்தார். பதிலுக்கு பதிலாக, மறுவாரம் கிளம்பி வந்து அவரைப் பார்ப்பதாகத்தான் எழுதினேன்.

ஆயிற்று, பதினேழு வருடங்கள். இன்னும் போகப்போகிறேன்! ஏன் நான் அவரைச் சந்திக்கப் போகவில்லை என்பதைச் சொல்லுவதற்கு முன் அவரது கடித வரிகள் இங்கே:

அன்புள்ள சிரஞ்சீவி பா.ராகவன்,

உன் கடிதம் கிடைத்தது. என்னை வந்து பார்ப்பதற்கு எதற்கு இத்தனை நடுக்கமும் தயக்கமும்? நீ எப்போது வேணுமானாலும் வரலாம். அம்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ஞானமூர்த்தி நகர் எங்கே என்று கேள். குத்து மதிப்பாக வழி சொல்லுவார்கள். ஆட்டோ பிடித்தால் பத்து ரூபாய் கேட்பான். தவறியும் என் பேர் சொல்லிக் கேளாதே. யாருக்கும் இங்கே என்னைத் தெரியாது. ஸ்ரீக்காந்தின் அப்பா என்றால்தான் தெரியும். நீ, ஸ்ரீகாந்த் வீடு என்றே கேட்கலாம். இந்த ஊரளவில் என் கீர்த்தியைக் காட்டிலும் அவனுடையது பெரிது. நீ வா. நேரில் நிறையப் பேசலாம். பின்புறம் அம்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து ஞானமூர்த்தி நகரை அடைவதற்கு வரைபடம் ஒன்று எழுதியிருக்கிறேன். அதன்படி கிளம்பி வந்து சேர்.

ஆசீர்வாதம்.
லா.ச. ராமாமிருதம்.


நான் ரிஷியென மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் எனக்கெழுதிய கடிதம் அது! காலத்தின் பேய்ப்பாய்ச்சலில் காணாமல் போகாமல் திரும்பக் கிடைத்ததில் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

லா.ச.ராவை எழுத்துமூலம் எனக்கு அறிமுகப்படுத்தியவர் அமரர் நா.சீ. வரதராஜன். அவர் லாசராவின் மிக நெருங்கிய நண்பர் வட்டத்தில் ஒருவர். அவரைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அவரது ஜனனி தொகுப்பைப் படித்துவிட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலத்தில்தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு போஸ்ட் கார்டு போட்டேன். அதற்கு அவர் எழுதிய பதில் தான் மேலே இருப்பது.

லாசராவின் இந்தக் கடிதம் வந்தபின், மீண்டும் அவரது தொகுப்பை எடுத்து வைத்துக்கொண்டு முழுவதுமாக ஒருமுறை படித்தேன். எத்தனை முறை படித்தாலும் ஜிவ்வென்று ஏறும் போதை எழுத்து அவருடையது. அவரது எழுத்துகளினூடாக அவரது பிம்பம் ஒன்றை என் மனத்துக்குள் நான் எப்போதோ வரைந்துவைத்திருந்தேன். எப்போதும் கண்மூடி ஏகாந்தத்தில் லயித்திருக்கும் தோற்றமாக எனக்குள் அவர் அந்தக் காலங்களில் வீற்றிருந்தார். நிஜத்திலும் அவர் அப்படித்தான் இருப்பாரா என்று நா.சீ.வவிடம் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன்.

"ம்ம்..சொல்லலாம். உள்முகமாவே யோசிச்சிண்டிருக்கறவர்தான். ஆனாலும் பேச ஆரமிச்சுட்டா உன் வயசுக்கு, உன் பக்குவத்துக்கே இறங்கி வந்துடுவார்"

அந்த ஆசையில்தான் கடிதம் எழுதிப் போட்டேன்.

ஆனால் அவர் வரச்சொல்லி உத்தரவு கொடுத்தபின் ஏனோ தயக்கம் பற்றிக்கொண்டது. நேரில் பார்க்காமல் நானாக உருவாக்கிக்கொண்ட என் மனத்துக்கான பிரத்தியேக லாசரா எங்கே, நேரில் பார்த்ததும் காணாமல் போய்விடுவாரோ என்கிற பயம் காரணம். ஒருவாரம் தள்ளிப்போட்டேன். அது தானாக ஒருமாதம் ஆனது. பிறகு ஆறுமாதம் ஆனது. ஆறு வருடங்கள். அப்படியே மறந்தும் விட்டேன்.

அந்த ஒரு கடிதம் எனக்குப் போதுமானதாக இருந்தது அப்போது. அன்புள்ள சிரஞ்சீவி பா.ராகவன். ஆசீர்வாதம்.

போதாது? பதினேழு வருடங்கள் கழித்து, நேற்றுக் கிடைத்தது, மீண்டும் அந்தக் கடிதம். லாசராவைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் மீண்டும் எழுந்திருக்கிறது. இப்போதும் ஒரு கடிதம் எழுதிப்போடலாம். வரச்சொல்லி அவசியம் பதில் வரும்.

பார்க்கலாம். என்ன அவசரம்?

( நன்றி: பா.ராகவன் )

Read More...

லா.ச.ரா காலமானார்

லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனிஇடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர்.
.
அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது(ஒரு நாவல் தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார்.

தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916 ஆம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.

அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார்.
இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


குமுதம் ஜங்ஷனுக்கு அளித்த பேட்டி...


Read More...

சீதைக்கு ராமர் சித்தப்பா !

சிடி வடிவில், வாலியின் குரலில் கலைஞர் காவியம் ! விழாவில் கலைஞர், வாலி உரை..

கவிஞர் வாலி எழுதிய கலைஞர் காவியத்தின் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையில் வாலி பேசியிருக்கிறார். இதற்கு எம்எஸ்வி இசையமைத்துள்ளார். 18 நிமிடங்கள் ஓடும் இந்த சிடியை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்ச்சியில் கருணாநிதி பேச்சு..

வாலி என்னுடைய நன்றியுடைய நண்பர். அவர் இந்தக் காவியத்தை எழுதி வெளியிட வேண்டும் என்று நீண்ட காலமாக என்னிடம் சொல்லிவந்தார்.

நான் இப்போது வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தடுத்து நிறுத்தினேன். என்னை அழைத்தால் நான் எப்படியாவது தடுப்பேன் என்பதால், என்னை அழைக்காமல் விழா ஏற்பாடுகளை வாலி செய்தார்.

காதல் திருமணம் செய்து கொள்ளும் உள்ளங்களைப் போல இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது. நான் இல்லாமல் விழா நடத்த திட்டம் தீட்டினார். கடைசியில் சம்மதம் தெரிவித்து நானே விழாவில் கலந்து கொண்டேன்.

வாலி அழைத்ததால் வந்தேன். சுக்ரீவன் அழைத்தால் வந்திருக்க மாட்டேன். ஏனென்றால், சுக்ரீவன் சுயநலத்திற்காக ராமனிடம் நட்பு கொண்டான். இதை நான் சொல்லவில்லை, ராஜாஜி எழுதியுள்ளார். வாலியை ராமர் கொன்றது நியாயமில்லை என்றும் ராஜாஜி எழுதினார். இதை நான் சொன்னால் தலை, கை கால்களை வெட்டுவேன் என்று வட மாநில பயில்வான்கள் சொல்கின்றனர்.
(வாலி மாற்றான் மனைவியை அபகரித்தான், உயிர்விடும் தருவாயில் ராமரிடம் சரணாகதி பெற்றார் என்பதையும் ராஜாஜி எழுதியுள்ளார் )

நான் 14 வயதில் இருந்தே பொதுத் வாழ்க்கையில் ஈடுபட்டவன். திருவாரூரிலேயே பல மிரட்டல்களையும், போராட்டங்களையும் சந்தித்தவன். தஞ்சை மாவட்டத்தில் நிலக்கிழார்களை, பண்ணையார்களை எதிர்ப்பவர்கள் கை, கால்களை இழக்க வேண்டியிருக்கும். அதையெல்லாம் நான் சமாளித்தவன்தான்.

பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் போராட்டங்களைக் கண்டு பயந்துவிடக்கூடாது. அதற்கெல்லாம் பயந்தால் மானம் போய்விடும்.

புராணங்கள் பற்றி இதிகாசங்கள் பற்றி வாலி தவறாக எழுதினால் ஒன்றும் இல்லை. ஆனால் கலைஞர் பற்றி தவறாக எழுதினால் சும்மா விடமாட்டோம் என்று இங்கு பேசிய வீரமணி வீராப்பாக கூறினார். ( இவர் கூட பஞ்ச் டயலாக் பேசுகிறார் )

என்னைப்பற்றி எழுத வாலிக்கு சுதந்திரம் உண்டு. அவர் தவறாக எழுதமாட்டார். அவர் ராமன் பற்றி தவறாக எழுதினால் வீரமணி கேட்க மாட்டார்.

ஏன் என்றால் இந்த ராமாயணம் பற்றி கூறினால், அந்த ராமாயணம் என்பார்.

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் சீதை ராமனின் மனைவி. துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் சீதைக்கு ராமன் அண்ணன். இதை வாலியை சாட்சியாக வைத்து சொல்கிறேன். ( சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொல்லாமல் போனாரே, ராஜாஜி எழுதிய ராமாயணத்தில் சீதை இருக்கிறாரா இல்லையா ? )

காரியத்தில் தவறிருந்தால், சுட்டிக் காட்டும் திறமை வீரமணிக்கு உண்டு. இதுதான் சரியான ராமாயணம் என்று வாதாடும் உரிமை வாலிக்கு உண்டு. நாம் படித்து அறியாத பழைய புராணங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். விஞ்ஞான உலகில் தவறுகளை செய்துவிட்டு தப்பிக்க முடியாது. ஏனென்றால், நாளை இளைஞர்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இந்தக் காவியத்தை வாலி இயற்றி உள்ளார். அவர் என்னுடைய 30 வயது வரையுள்ள நிகழ்ச்சிகளை அதிக அளவில் சுட்டிக்காட்டி உள்ளார். அதைத்தான் நடிகர் சிவகுமாரும் இங்கு பேசும்போது எடுத்துரைத்தார்.

நான் இளமையில் ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து போராடினேன். அப்போது தமிழை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு இளைஞர்களுக்கு இருந்தது. ஆனால், இன்றைக்கு தமிழ் மொழியை காக்க வேண்டும் என்ற உணர்வு இளைஞர்கள் மத்தியில் மங்கிவிட்டது என்றார் கருணாநிதி.

கவிஞர் வாலி பேசுகையில், எனது உயிரை காப்பாற்றியவர் கருணாநிதி. அவரை பற்றி நான் பாடாவிட்டால் என் நாக்கு இருப்பதில் அர்த்தமில்லை. என் பேச்சும் மூச்சும் இருக்கும் வரை அவரை போற்றிப் பாட வேண்டும்.

கருணாநிதி மிக உயர்ந்த மனிதர். மனிதநேயம் கடைப்பிடிப்பவர். தனது இளமைப் பருவம் முதல் கொள்கைக்காக வாழ்ந்து வருபவர். எனக்கு இருக்கும் எல்லா புகழும் கருணாநிதிக்கே என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், முதல்வர் கருணாநிதி ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கிறார். வாழ்க்கையை ரசிக்கிறார். அதனால், அவருக்கு முதுமை ஏற்படவில்லை. இயங்கிக் கொண்டிருப்பவருக்கு முதுமை என்பது வரம். இயங்காமல் இருப்பவருக்கு முதுமை ஒரு சாபம். 84 வயது கொண்ட உங்களுக்கு முதுமை எட்டவில்லை என்றார்.

விழாவிற்கு எம்.ஜி.ஆர்.கழக நிறுவன தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு, நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், இயக்குனர்கள் பாரதிராஜா, வசந்த், கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, பா.விஜய், ரவி பாரதி, பழனி பாரதி, பிறைசூடன், நா.முத்துகுமார், ம.வே.பசுபதி, நடிகை ராதிகா ஆகியோரும் பங்கேற்றனர்.

Read More...

கிருஷ்ணசாமியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலைஞர்

கிருஷ்ணசாமியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை : முதல்வர் கருணாநிதி பேட்டி

மர்ம நபர்களால் தக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்த நலம் விசாரித்த முதல்வர் கருணாநிதியிடம், தாக்குதல் குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், `கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தில் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை இப்போது கூற இயலாது. விசாரணைக்கு பிறகே குற்றவாளிகள் யார் எனத் தெரியவரும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். மு.க. அழகிரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மத்தியமைச்சர் வாசன், அமைச்சர் தங்கம் தென்னரசு, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, மா. கம்யூ., செயலாளர் வரதராஜன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கிருஷ்ணசாமியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Read More...

சிக்குபுக்கு ரயிலே - ரீமிக்ஸ்



-ரீமிக்ஸ்

Read More...

Monday, October 29, 2007

நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்

Read More...

கலைஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாக முதலமைச்சர் கருணாநிதி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி அக்டோபர் 1ந் தேதி அன்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தமிழகத்தில் பந்த் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தன. இதனை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பந்த் போராட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனை எதிர்த்து அதிமுக சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் பந்த் போராட்டத்திற்கு தடை விதித்தது. ஆனால் உச்சநீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் பந்த் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடவில்லை. அரசு அலுவலகங் களுக்கு ஊழியர்கள் வரவில்லை. இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பி. நவ்லாக்கர் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணை நடைபெற்றது. பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சி செயல்பட்டதை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள், பல்வேறு பத்திரிகை செய்திகள் ஆகியவற்றை அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகளை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மிகவும் கடுமையாக விமர்சித்ததையும் அவர் எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அரசு தலைமை செயலாளர் திரிபாதி, தமிழக காவல் துறை தலைவர் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் முக்கிய பிரமுகர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து நீதிபதிகள் விலக்களித்தனர்.

"ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவை எரிக்கப் போகிறோம்' – என்று தமிழ்நாடு முழுவதும் மேடைபோட்டு ஆறுமாதங்களாக முழங்கிவிட்டு, வழக்கு வந்தபோது, "வெறும் காகிதத்தைத்தான் எரித்தோம்' என்று நீதிமன்றத்தில் சொன்னவர்கள். அதனால் பயபட வேண்டாம் தோழர்களே

Read More...

Sunday, October 28, 2007

என் அப்பா கொடுத்த அட்வைஸ் - தி.மு.கவினர் நம்பாதே - கேப்டன் நச் பேட்டி

கேப்டன் படம் நல்லா இருக்கோ இல்லையோ, அவர் பேட்டி எப்போதும் சூப்பர், சரியான பாயிண்டுகளை பிடிப்பார்...

தே.மு.தி.கவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்தி முடித்த கையோடு தனது அடுத்த படமான ‘அரசாங்கம்’ பட ஷூட்டிங்கிற்காக கனடா சென்று சமீபத்தில் திரும்பியிருக்கிறார் விஜயகாந்த். அங்கிருந்தபடியே தமிழக விவகாரங்கள் தொடர்பாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்டார். இப்போது மீண்டும் கட்சி நடவடிக்கைகளில் பிஸியாகிவிட்ட விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம். அதிலிருந்து...



உங்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை நடத்தி முடித்திருக்கிறீர்கள். உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் உங்களுக்கு நெருக்கடிகளும் வந்திருக்குமே?

‘‘நெருக்கடிகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கள் கட்சித் தொண்டர்கள் மீது பொய் வழக்குப் போடுவதாக போலீஸை வைத்து மிரட்டுகிறார்கள். இட்லி கடை வைத்திருந்தால் சுகாதாரம் சரியில்லை என்று சொல்லி, சுகாதார அதிகாரிகளை வைத்து மிரட்டுகிறார்கள். இரும்புக் கடை வைத்திருந்தால் திருட்டு வழக்குப் போடுவதாக மிரட்டுகிறார்கள். இதுதவிர, எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று விலை பேசுகிறார்கள். ஆளுங்கட்சி தரும் இந்த நெருக்கடிகள் ஒருபுறம் இருக்க, தி.மு.கவின் தோழமைக் கட்சித் தலைவர்கள் சிலரும் கலைஞரிடம் போய் ‘விஜயகாந்தை எந்த வகையிலாவது கட்டுப்படுத்த வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். வளர்ந்து வரும் கட்சியை நசுக்க நினைப்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தி.மு.கவுக்கு கைவந்த கலை. நான் மக்களுக்குச் சேவை செய்ய வந்திருக்கிறேன். இவர்களின் மிரட்டலுக்கெல்லாம் நான் அடிபணிய மாட்டேன். அப்படி அடி பணிந்திருந்தால் போன சட்டமன்றத் தேர்தலிலேயே நான் யாருடனாவது கூட்டணி வைத்திருக்க வேண்டும்.’’

‘இன்று புதுக்கோட்டை, நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ என்ற உங்கள் கட்சியினரின் கோஷத்தை, தி.மு.க முரசொலியில் கிண்டலாக விமர்சித்திருக்கிறதே?

‘‘அவர்கள் ஐம்பது வருட கட்சியை வைத்திருக்கிறார்கள். அதை வைத்து ஆண்டு அனுபவித்து வருகிறார்கள். அதற்கு பாதிப்பு என்றால் கிண்டலடிக்கத்தான் செய்வார்கள். அவர்கள் அனுபவித்து வரும் சுகத்தை இழக்கப் போகிறார்கள் என்பது தெரிந்ததால்தான், அதை இழந்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில் இப்படி கிண்டலடிக்கிறார்கள். ‘குள்ளர் சாஸ்திரி, குழப்பத்தின் மேஸ்திரி’ என்று சாஸ்திரியையும், ‘பக்தவத்சலம் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சு?’ என்று பக்தவத்சலத்தையும் கிண்டலடித்தவர்கள்தான் இவர்கள். இப்போது மட்டும் விலைவாசி எப்படி இருக்கிறதாம்.? ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்டுதான், அணுசக்தி விவகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்தை ஏற்கிறேன்’ என்றெல்லாம் சொல்லும் கலைஞர், விலைவாசி உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பாரா?. 1967_க்கு முன்பாக தி.மு.கவினர் என்னவெல்லாம் கோஷம் போட்டார்களோ, அது அத்தனையும் அவர்களுக்கே இன்று பொருந்தும். அந்தளவுக்கு ஊழலும் பெருகியிருக்கிறது. வறுமையும் ஒழிந்தபாடில்லை. அதில் எல்லாம் இவர்கள் கவனம் செலுத்தவில்லை. இவர்களின் கிண்டலை எல்லாம் நான் பொருட்படுத்தப் போவதில்லை.’’

உங்களைச் சிறையில் தள்ள முயற்சி நடப்பதாக சொல்லியிருந்தீர்களே.. எதை வைத்து அப்படிச் சொன்னீர்கள்?

‘‘ஏதாவது ஒரு வகையில் என்னுடைய செல்வாக்கை, என்னுடைய நற்பெயரைக் கெடுக்க, குறைக்க தி.மு.க தொடர்ந்து முயற்சிக்கிறது. இதையெல்லாம் தாண்டி எங்கள் கட்சியை நோக்கி இளைஞர்களும், மாற்றுக் கட்சியினரும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதை அவர்களால் தடுக்க முடியவில்லை. என்னுடைய குதிரை மண் குதிரை, பொய்க்கால் குதிரை என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. நான் சொல்லும் கருத்துக்களுக்கு இவர்கள் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதை வைத்தே, நானும், எனது கட்சியும் வளர்ந்து வருகிறோம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது அவர்களுக்கும் புரிந்ததால்தான் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, என்னை சிறையில் தள்ள முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். அதைத்தான் சொன்னேன்.’’

தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அகற்றும் வல்லமை கொண்ட கட்சியுடன்தான் கூட்டு என்று தீர்மானம் போட்டீர்களே... அப்படி என்ன அநீதி நடந்துவிட்டது?

‘‘சில நாட்களுக்கு முன்பு கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டு நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும்தான் தான் எந்த முடிவையும் எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் பி.ஜே.பி, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி கூட்டு வைத்து செல்வாக்கோடு இருக்கிறாரே.. காவிரித் தண்ணீரை இவரால் பெற்றுத்தர முடிந்ததா? தன்னுடைய சொந்தப் பிரச்னை தீர வேண்டும் என்பதற்காக இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்த கச்சத்தீவை இவரால் மீட்டுத் தர முடிந்ததா? இதுமாதிரியான உரிமைகளைக் காப்பாற்ற முடிந்ததா? நான் எவ்வளவு சொன்னாலும் அவர்(கலைஞர்) பயப்பட மாட்டார். போஸ்டர் அடித்து ஒட்டினாலும் பயப்பட மாட்டார். ஆனால், ஒரு துண்டு சீட்டைப் பார்த்து பயந்துவிடுவார். பின்னாளில் தேசியக் கட்சிகளோடு கூட்டணி சேரும் நிலை வந்தால் இதுபோன்ற உரிமைகளை தமிழகத்திற்கு பெற்றுத் தர வேண்டும் என்று நிர்ப்பந்திப்போம். கலைஞராலும் இந்த நிர்ப்பந்தங்களைச் செய்ய முடியும். ஆனால், அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோமே, பொறுமையாகத்தான் போக வேண்டும் என்று சாக்குச் சொல்வார். காவிரிக்காக தனது அமைச்சர் பதவியை வாழப்பாடியார் தூக்கி எறிந்தாரே, அந்தத் துணிவோடு நீங்களும் பதவியைத் தூக்கி எறிய வேண்டியதுதானே? தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் இந்நேரம் அதைச் செய்திருப்பார்கள். ஏன் செய்யவில்லை?’’

நீங்கள் சொல்லும் இந்த அநீதிகளை களையும் வல்லமை காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளுக்குத் தானே இருக்கிறது? ‘‘ஏன் மக்கள் நினைத்தால் கம்யூனிஸ்ட்டுகள்கூட அந்தப் பட்டியலில் வருவார்களே? ஆனால் நாங்கள் அந்தத் தீர்மானத்தைப் போட்டபோது எங்கள் மனதில் எந்தக் கட்சியும் இல்லை. அதற்கான சூழ்நிலை வரும்போது அதுபற்றிப் பேசலாம்.’’

‘கூட்டணி விஷயத்தில் நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது’ என்று சொன்னீர்கள். நீங்கள் என்ன நினைத்தீர்கள்? தெய்வம் என்ன நினைத்தது?

‘‘தனியாக நான் ஒன்றும் நினைக்கவில்லை. விஜயகாந்த் தனியாக நின்றால் எந்தக் காலத்திலும் வெற்றிபெற முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தெய்வம் நினைத்தால் தனித்து நிற்கும்போதே எனக்கு வெற்றியை தேடித்தர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கட்சி ஆரம்பித்து இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு பொதுத்தேர்தல், ஒர் உள்ளாட்சித் தேர்தல், இரண்டு இடைத் தேர்தல்கள் என போதுமான அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம். அந்த நேரங்களில் மக்களின் நாடித்துடிப்பை நேரில் சென்று பார்த்து உணர்ந்தவன் என்ற அடிப்படையில்தான் நான் பேசுகிறேன். அதனால் யாருடைய விமர்சனத்தைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். நான் தெய்வத்தையும், மக்களையும் நம்புகிறேன்.’’

பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் பற்றிய உங்களின் பார்வை எப்படி இருக்கிறது?

‘‘பி.ஜே.பியை மதவாதக் கட்சி என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் இவர்கள் (தி.மு.க) கூட்டு வைக்கும்போது மட்டும் அதை மறந்துவிடுவார்கள். ராமர் பற்றிய சர்ச்சை பெரிதானதும் காங்கிரஸ் காரர்களும்போய், ராமருக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். பொதுவில் பார்த்தால் இந்த இரண்டு கட்சிகளாலும் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதன் தோழமைக் கட்சிகளால்தான் பிரச்னையே. மற்றபடி, காங்கிரஸைப் பற்றி என் அப்பா என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார். நானும் கவனித்து வருகிறேன். கருப்புச் சட்டைக்காரர்களை(தி.மு.கவினர்) நம்பாதே என்று சொன்னதை நான் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறேன்.’’

‘தி.மு.க, அ.தி.மு.க இருவருமே திருடர்கள்’ என்று நீங்கள் சொன்னது கொஞ்சம் அதிகப்படியாகத் தெரியவில்லையா?

‘‘லஞ்சம், ஊழலை வைத்துத்தான் அப்படிச் சொன்னேன். கோயில் உண்டியலில் போட்ட பணத்தை எடுத்துக் கொள்பவரை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? அதேபோல அரசு கஜானாவில் உள்ள மக்களின் வரிப்பணத்தை ஊழல் செய்து எடுப்பவர்களை வேறுமாதிரியா சொல்ல முடியும்? நான் சொன்ன வார்த்தை கொஞ்சம் கடுமையாக இருக்குமே தவிர, அதற்கான காரணம் அப்பட்டமான உண்மை.’’

தமிழ்நாட்டில் ஆறு முதலமைச்சர்கள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

‘‘பத்திரிகைக்காரர்களுக்கே அது தெரியும். நீங்களே யார் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். அந்தளவுக்கு இப்போது முதலமைச்சரைத் தாண்டி அதிகார மையங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.’’

திராவிடர்_தமிழர் பிரச்னை மீண்டும் கிளம்பியிருக்கிறது. இதன்மூலம் உங்களை தனிமைப்படுத்த முயற்சி நடப்பதாக நினைக்கிறீர்களா?

‘‘திராவிடர் என்றால் யார்? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளைப் பேசுபவர்கள்தான் திராவிடர்கள். பண்டையத் தமிழர்தான் இன்றைய திராவிடர். அப்படியானால் இந்த விமர்சனத்தைச் செய்பவர்கள் உண்மையான தமிழர்கள் இல்லையா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். எம்.ஜி.ஆரையே மலையாளி என்று விமர்சித்து அவரை தனிமைப்படுத்த முயற்சித்தார்கள். என் மீது குற்றம் சாட்ட அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதற்கு பதிலடி தருவதற்காக நான் பேச ஆரம்பித்தால் நிறைய விஷயங்களைப் பேச வேண்டியிருக்கும். உண்மையைச் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் மீது செய்யப்பட்ட விமர்சனம், என் மீதும் செய்யப்படுவதில் எனக்கு சந்தோஷம்தான்.’’

ராமர்பால விவகாரத்தில் நடக்கும் சர்ச்சைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் உங்களின் நிலை என்ன?

‘‘சேது சமுத்திரத் திட்டம்தான் முக்கியம் என்றால் ராமர் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதத்தை ஆரம்பித்திருக்கக்கூடாது. தி.மு.க தலைவராக கலைஞர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான முதலமைச்சர் பதவியில் அமர்ந்த பிறகு, அப்படி பொதுவானவராக நடந்து கொள்வேன் என்று சத்தியப் பிரமாணமும் எடுத்த பிறகு, விமர்சனங்களை ஜாக்கிரதையாக வெளியிட வேண்டும். அனைத்து மத மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி பேசும்போது ‘அது திரிசங்கு சொர்க்கமாகவே இருக்கட்டும்’ என்று சொல்லும் கலைஞர், சொர்க்கத்தையும் நரகத்தையும் நம்புகிறாரா? ஆக, தனக்கு வேண்டுமென்றால் ஒரு விமர்சனம்.. வேண்டாமென்றால் இன்னொரு விமர்சனம்... என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த திட்டத்தைப் பொறுத்தவரை சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததுபோல, அவசியமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கியவர் கலைஞர்தான். எனவே, இந்தத் திட்டம் தாமதமானாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அதற்குக் கலைஞர்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.’’

ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்ததை தவறு என்று சொல்லியிருக்கிறீர்களே?

‘‘கடந்த ஆட்சியின்போது எங்கள் மீது இப்படி கொண்டுவரவில்லையா என்று தி.மு.கவினர் கேட்கிறார்கள். அப்போது கொண்டுவரப்பட்ட மூன்று உரிமைப் பிரச்னைகளுமே சட்டமன்றத்திற்கு வெளியே சட்டமன்றத்தைப் பற்றி எழுதியதாலும், பேசியதாலும்தான் கொண்டுவந்தார்கள். இப்போது ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டில் சட்டமன்றம் தொடர்பான எந்த வார்த்தையும் இல்லை. அதனால்தான் தி.மு.கவின் முடிவை விமர்சித்தோம். ஜெயலலிதாவின் குற்றச்சாட்டால் இவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம். அப்படியே கடந்த ஆட்சியில் ஜெயலலிதா தவறு செய்திருந்தாலும் அந்த தவறான முன்னுதாரணத்தை இவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?. மூத்தவர், பெரியவர், மூதறிஞர், அனுபவம் உள்ள முதல்வர் என்றெல்லாம் அழைக்கப்படும் கலைஞர் இந்த தவறான தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று யோசித்திருக்க வேண்டாமா?. முதலில் ஆட்சியாளர்கள் தனது எதிரிகளைப் பழிவாங்குவதைக் கைவிட வேண்டும். பழைய சம்பவங்களை மேற்கோள் காட்டி அடுத்த சந்ததியினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடாது. வருங்கால தலைமுறையினருக்கு நல்ல எண்ணங்கள் பிறக்கும் வகையில் செயல்பட வேண்டும்.’’

தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக உருவாகி வருகிறீர்கள். இந்த நேரத்தில் புதிய கட்சிகளின் வரவு உங்களை பாதிக்குமா? உங்களுக்குப் போட்டியாக அவர்களை நினைக்கிறீர்களா?

‘‘எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் வரட்டும். யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கட்டும். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரை மக்கள் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் இழக்கமாட்டேன். மக்களுக்கும் யார் யார் எப்படி என்ற விவரங்களெல்லாம் நன்றாகவே தெரியும்.’’

ஜெயலலிதாவின் பாதுகாப்பு விஷயத்தில் எழுந்துள்ள சர்ச்சை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘இவர் தனக்கு குண்டு துளைக்காத கார் வேண்டும் என்கிறார். அவர்களோ கொடுத்ததை வாங்க மறுத்தார் என்கிறார்கள். இதுமாதிரியான கூத்துக்கள் வெளிவருவது நல்லதுதான். மக்களும் நடந்ததைத் தெரிந்து கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை நியாயமான பாதுகாப்பை அரசு தரும்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதமருக்கே அம்பாசிடர் கார்தான் தருகிறார்கள். அதை ஏற்க மறுத்து வேறுமாதிரி கேட்பதில் நியாயம் இல்லை என்றே நினைக்கிறேன்.’’

எந்தவித காரணமும் சொல்லாமல் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது. இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

‘‘இதே விஷயத்தை ஜெயலலிதா செய்தபோது தி.மு.கவினர் விமர்சித்தார்கள். அதில் நியாயம் இருந்தது. ஆனால் இவர்களும் அதையேதான் இப்போது செய்கிறார்கள். இப்போது மட்டுமல்ல எப்போதுமே இவர்கள் இப்படித்தான். வந்தவர், போனவர், சொந்தம், பந்தம் என்று யார் சொன்னாலும் அதைக் கேட்டுக்கொண்டு இலாகாக்களை மாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் முதலமைச்சருக்கு பிரத்யேக உரிமை இருக்கிறது என்றாலும் ஓர் அமைச்சர் என்ன தவறு செய்தார்.... எதற்காக மாற்றுகிறோம்... என்பதை மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்லாமல் இப்படி மாற்றுவது ஆரோக்கியமானது அல்ல. ஆனால், அப்படிச் சொன்னால் ஊழல் விவகாரம் வெளியில் வந்துவிடுமே என்பதால் அதைச் செய்ய இவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கூட்டணிக் கட்சிகளும் இதைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். இந்த ஆட்சியில் தவறு நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே ஐந்தாண்டுகளுக்கு ஆதரவு தொடரும் என்கிறார்கள். அப்படியானால் ஐந்தாண்டுகள் வரை இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு ஜால்ரா தட்டப் போகிறார்களா? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.’’

கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாதது பற்றி பிரதமர் விரக்தி தெரிவித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘ஏற்கெனவே ஒப்புக் கொண்ட திட்டங்களில் தோழமைக் கட்சிகள் சரிவரக் கை கொடுக்கவில்லை என்பது இந்தப் பேச்சின் மூலம் தெரிகிறது. அமைச்சரவையில் இடம்பெற்று, அமைச்சரவைக் கூட்டத்தில் சில விஷயங்களை ஒப்புக் கொண்டுவிட்டு வெளியில் எதிர்ப்பது நியாயம் இல்லை. அணுசக்தி விவகாரத்தில் இவ்வளவு நாட்களாக வாய் திறக்காமல் இருந்த கலைஞர், இப்போது கம்யூனிஸ்ட்டுகளை மேற்கோள் காட்டி நழுவலான கருத்துக்களைச் சொல்கிறார். அணுசக்தி முக்கியமல்ல. ஆட்சி, பதவி தான் முக்கியம் என்கிறார். பதவி வெறியும், மோகமும்தான் இதற்குக் காரணம். அடிக்கின்ற கொள்ளையை மொத்தமாக அடித்துவிட வேண்டும் என்று நினைப்பதால்தான் ஆட்சி முக்கியம் என்கிறார் கலைஞர். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் எல்லா அமைச்சர்களும் இப்போது வசூலை வாரிக் குவிக்கிறார்கள். டிரைவர், கண்டக்டர் தொடங்கி போலீஸ் வேலை வரை எல்லாவற்றுக்கும் லஞ்சம் தந்தால்தான் வேலை கிடைக்கிறது. ஏதாவது ஒரு சொத்தை ஏலத்தில் விட்டால் அதை அமைச்சர்கள்தான் பினாமி பெயரில் வாங்குகிறார்கள். இவர்கள் இப்படி ஊழல் செய்வதைப் பார்த்து அதிகாரிகளும் தைரியமாக ஊழலில் ஈடுபடுகிறார்கள். ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன்கள் சொந்தமாக மின் உற்பத்தி நிலையம் அமைக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் என்று நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். கடந்த ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இன்று முதல்வர் அலுவலகம் வரை முக்கியப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் ஊழல்தானே காரணம். இந்த ஊழல்களைச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வினால்தான் ஆட்சி போகக்கூடாது என்று சொல்லி, நாட்டுநலன் சார்ந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இவர்களை நினைத்து பிரதமர் விரக்தி அடைந்ததில் வியப்பில்லை.’’

அடுத்த தேர்தலுக்கு தி.மு.க, அ.தி.மு.க இல்லாத மூன்றாவது அணியை அமைக்கப் போவதாக ராமதாஸ் சொல்லியிருக்கிறார். நீங்களும் அதில் இணைய வாய்ப்புண்டா?

‘‘நிச்சயமாக நான் யாருடனும் கூட்டு வைக்க மாட்டேன். தனித்து நின்றால் வெற்றி பெற முடியுமா என்று கேட்கிறார்கள். மக்கள் நினைத்தால் யாரும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும். மக்கள் புரட்சி, மவுனப் புரட்சி என்று இவர்கள் அடிக்கடி சொல்கிறார்களே, அப்படி ஒன்று நடந்தால் நாங்களும் ஆட்சியைப் பிடிக்க முடியும். அது நடக்கத்தான் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.’’

( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

Read More...

இன்றைய கர்நாடகா செய்தி

கிரிக்கெட் மாதிரி Ball by Ball அப்டேட் கொடுக்க வைக்கும் கர்நாடகாவின் அரசியலில் இன்றைய செய்தி. நாளை என்ன நடக்கும் என்று தெரியலை..

மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.பி.பிரகாஷ் பிஜேபியோடு இணைந்து ஆட்சியமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசியல் திடீர் திருப்பம் ஏற்பட்டு பிஜேபி ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று முன்னாள்முதல்வர் குமாரசாமி நேற்று அறிவித்தார்.
.
இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மூத்த தலைவரும்,முன்னாள் உள்துறை அமைச்சருமான எம்.பி.பிரகாஷ் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிஜேபியோடு இணைந்து ஆட்சியமைக்க கூடாது என்று கூறியுள்ள அவர், பிஜேபியின் கோரிக்கையை ஏற்க வேண்டாம் என்று மாநில கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன்னுடன் 57 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதில்லை என்று கூறிய அவர், கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் சட்டவிரோதமாக நடைபெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியமைக்க முற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் குமாரசாமி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் கட்சி உடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஒன்றாக திரட்டி அவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

Read More...

`தசாவதாரம்' - ரஜினி 5 நிமிடங்கள் கைதட்டினார், 15 நிமிடங்கள் புகழ்ந்தார்

`தசாவதாரம்' பட காட்சிகளை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார் 15 நிமிடங்கள் கமலஹாசனை புகழ்ந்து தள்ளினார்

ரஜினிகாந்த் நடித்த `சிவாஜி' படத்தை அடுத்து, தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கும் படம், `தசாவதாரம்.' இந்த படத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின், ஜெயப்பிரதா, இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் ஆகிய மூவரும் நடித்து இருக்கிறார்கள்.

கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இப்போது `டப்பிங்' வேலைகள் நடைபெறுகின்றன.

ரூ.60 கோடியில்...

ரூ.60 கோடி செலவில் தயாரான இந்த படம், பல பிரமாண்டங்களை தாங்கி வெளிவர இருக்கிறது. படத்தில், கமலஹாசனின் சில வேடங்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உள்ளன. 8 அடி உயர மனிதன், 90 வயது பாட்டி, நீக்ரோ போன்ற அடர்த்தியான கறுப்பு நிறத்தில் தொழிலாளர்களின் தலைவர், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகிய வேடங்களில், ``இவர் கமலஹாசனா?'' என்று நம்பமுடியாத அளவுக்கு அவருடைய `மேக்கப்' அமைந்துள்ளது.

இதற்காக, ஹாலிவுட் மேக்கப் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கமலஹாசனுக்கு ஒப்பனை செய்தார்கள். அதிகாலை 3 மணிக்கு தொடங்கி, காலை 9 மணிக்கு `மேக்கப்'பை முடித்துக்கொண்டு, தினமும் ஒரு மணி நேரம் மட்டும் கமலஹாசன் நடித்தார். அந்த அரிய வகை `மேக்கப்' ஒரு மணி நேரத்துக்குத்தான் தாங்கும். அதன்பிறகு உருக ஆரம்பித்து விடும்.

ரஜினி பார்த்தார்

`தசாவதாரம்' படத்தில் கமலஹாசன் நடித்த சில அபூர்வ காட்சிகளை பார்ப்பதற்காக ரஜினிகாந்த், சென்னை அசோக் நகரில் உள்ள டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் அலுவலகத்துக்கு வந்தார்.

கே.எஸ்.ரவிகுமார், அவருடைய பிரத்யேகமான `எடிட்டிங்' அறைக்கு ரஜினிகாந்தை அழைத்து சென்றார். அங்கு `தசாவதாரம்' பட காட்சிகளை ரஜினிகாந்துக்கு, கே.எஸ்.ரவிகுமார் திரையிட்டு காண்பித்தார். கமலஹாசனின் வித்தியாசமான வேடங்களை பார்த்து வியந்துபோன ரஜினிகாந்த், ``இதெல்லாம் ஒரிஜினலாக கமலே நடித்ததா... `மாஸ்க்' போட்டு எடுத்ததா?'' என்று விசாரித்தார். ``ஒரு சீனில் கூட `மாஸ்க்' வேலை இல்லை'' என்று கே.எஸ்.ரவிகுமார் சொன்னதும், ``வொண்டர்புல்'' என்று ஆங்கிலத்தில் ரஜினி பாராட்டினார்.

கைதட்டினார்

பின்னர், `தசாவதாரம்' படத்தில் கமலஹாசன் நடித்த ``கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது...கடவுளை மட்டும் கண்டால் கல்லை தெரியாது'' என்ற பாடல் காட்சி, ரஜினிகாந்துக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

அந்த பாடல் காட்சி முடிந்ததும், ரஜினிகாந்த் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டினார். பிறகு, கமலஹாசனுடன் `செல்போன்' மூலம் தொடர்புகொண்டு அவருடைய நடிப்பை பாராட்டி, 15 நிமிடங்கள் பேசி புகழ்ந்து தள்ளினார்.

ஒரு உச்ச நடிகர், இன்னொரு உலக நடிகரை மனம் திறந்து பாராட்டியதை பார்த்து, டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் மனம் நெகிழ்ந்தார்.

Read More...

Saturday, October 27, 2007

தெஹல்கா ஆபரேஷன்

குஜராத் கலவரம் குறித்த பல பரபரப்புத் தகவல்களுடன் கூடிய ஸ்டிங் ஆபரேஷனை தெஹல்கா இதழ் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்டிங் ஆபரேஷன்
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு `கோத்ரா' ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் பற்றி `தெகல்கா' இணைய தளம் கடந்த 6 மாதமாக விசாரணை நடத்தியது. விசாரணை முடிவை வெளியிட்ட அந்த இணைய தளத்தில் "குஜராத் கலவரம் திட்டமிட்ட சதி, முதல்-மந்திரி நரேந்திர மோடி கலவரத்தை தூண்டி விட்டார்.

கலவரத்துக்குபயன் படுத்தப்பட்ட ஆயுதங்கள் பஜ்ரங்தள் மற்றும் விசுவ இந்து பரிஷத் தலைவர்களுக்கு சொந்தமான தொழிற்சாலை யில் தயாரானது என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் `தெகல்கா' நடத்திய விசாரணையில் இந்த தகவல்களை தெரிவித் ததாகவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நரேந்திர மோடி மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இருட்டடிப்பு
இந்த ஆபரேசனை தெஹல்காவுடன் இணைந்து நடத்திய இந்தியா டுடேவின் ஹெட்லைன்ஸ் டுடே டிவி மற்றும் அதன் இந்தி டிவியான ஆஜ் தக் ஆகியவையும் நேற்று முதல் குஜராத் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

அதே போல இந்த செய்திகளை வெளியிட்ட சிஎன்என்-ஐபிஎன், டிவி 18 ஆகிய டிவிக்களின் ஒளிபரப்பும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் கரண் தாப்பர் நரேந்திர மோடியை பேட்டி கண்டபோது கலவரம் குறித்து கேட்க கோபமடைந்த மோடி பாதியில் எழுந்து சென்றுவிட்டார். அந்தப் பேட்டி ஒளிபரப்பானபோதும் அந்த சேனலின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.

தேர்தலில் சீட்டு
குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது அதில்,பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள 9 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கும் காங்கிரஸ் சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

Read More...

குமாரசாமி = குழப்பசாமி

கர்நாடகாவில் பா. ஜ., ஆட்சி அமைக்க ஜனதாதளம் ஆதரவு வழங்க முடிவு
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக எடியூரப்பா தலைமையில் பிஜேபி அரசு அமைய ஆதரவளிக்க தயார் என்று மதச் சார்பற்ற ஜனதா தள கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக ஆதரவு கடிதத்தை இன்று மாலை குமாரசாமி கவர்னரிடம் அளிக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீர் திருப்பமாக (அடிக்கடி) எடியூரப்பா தலைமையில் பிஜேபி அரசு அமைக்க ஆதரவு கொடுப்பது என மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவெடுத்துள்ளது.

இதற்கான ஆதரவு கடிதத்தை கவர்னர் ராமேஸ்வர் தாக்கூரிடம் குமாரசாமி இன்று மாலை 4 மணியளவில் அனுப்பவிருப்பதாகவும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிஜேபி இதை ஏற்றுக்கொள்ள கூடாது. பார்க்கலாம்


குமாராசாமி அறிவிப்பை தொடர்ந்து பிரகாஷ் உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசுகிறார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களும் பிரகாசுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பிரகாஷ் தலைமையில் புதிய ஆட்சி அமையும் சூழ்நிலை உருவானது.

கடைசி அப்டேட்:

மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர் தேவகவுடா , பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் போனில் பேசினார். மேலும் பா. ஜ., வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று பா. ஜ., வலியுறுத்தியுள்ளது. சட்டசபை பா.ஜ.க. தலைவர் பி.எஸ்.எடியூரப்பா புதிய முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்பார் என்று தெரிகிறது.

தீபாவளி டைம் பட்டாசு வெடிக்கதான் செய்யும்.

Read More...

கலைஞர் பேட்டி

நாஞ்சில் சம்பத் தாக்க்கபட்டது, கனிமொழிக்கு அமைச்சர் பதவி, அழகிரிக்கு பதவி, சேது திட்டம், குஜராத் கலவரம் - மோடி...

கேள்வி: நாஞ்சில் சம்பத், சிறையில் தாக்கப்பட்டதாக செய்தி வந்திருக்கிறதே. இது தொடர்பாக வைகோ தந்தி அனுப்பி இருக்கிறாரே?
பதில்: எனக்கு தெரிந்த வரை அவரை (நாஞ்சில் சம்பத்) யாரும் தாக்கியதாக தெரியவில்லை. வைகோ வந்து பார்த்து விட்டு சென்ற பிறகு தான் இப்படி நடந்ததாக சொல்கிறார்கள். உடனே நாஞ்சில் சம்பத் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

(அப்போது அருகில் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும் நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோப்புகள் வரும். அவற்றை அலட்சியப்படுத்துங்கள் என்று தான் முதல்வர் தெரிவித்தார். இவ்வளவு மட்டமாக ஒருவன் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்காமல் இது பற்றி தந்தி அனுப்ப வைகோவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. இப்படி பேசினால் ஒரு தொண்டனால் எப்படி பொருத்துக் கொள்ள முடியும்.

ஒரு முறை அண்ணா இருந்த போது திமுகவின் மூத்த தலைவர் என்.வி.என்.நடராஜன் பேசுகையில், காங்கிரஸ் அமைச்சர்களை கல்லால் அடியுங்கள் என்று தெரிவித்தார். உடனே அதே மேடையிலேயேஅவரை மன்னிப்புக் கேட்கச் செய்தார் அண்ணா.அதே போல நாஞ்சில் சம்பத்தின் செயலுக்காக வெட்கப் படுவதாக வைகோ கூறியிருந்தால் அவருடைய யோக்கியதை தெரியும் என்றார் துரைமுருகன்).

கே: சேது சமுத்திர திட்டம் நிறைவேறாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அது நிறைவேறியே தீரும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கூறுகிறார்களே? இதன் உண்மை நிலை என்ன?

கருணாநிதி பதில்: நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

கே: நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று மட்டுமே வைகோ வலியுறுத்தியுள்ளாரே


ப: எங்கள் கட்சியில் இதுபோல பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அண்மையில் திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் பேசிய வாகை முத்தழகன் எதிர்க்கட்சித் தலைவரை தாக்கி பேசினார். அது ரசக்குறைவான பேச்சு என்று செய்தி வந்ததும், அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். கட்சியில் இணைந்து தொடர்ந்து பணியாற்ற அவர் அனுமதி கேட்டும் இன்னும் அவரை சேர்க்கவில்லை.

கே: மதிமுகவைப் பொறுத்தவரை அதிமுக வழியிலேயே திமுகவுக்கு எதிரான ஒரு பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அது (மதிமுக) திட்டமாக கொண்டுள்ள சேது சமுத்திர திட்டத்தில் நீர்த்துப்போய் விட்டதா?
ப: இவர்கள் திட்டம்தான் நீர்த்துப்போய் உள்ளது.

கே: ராமர் பாலத்தை இடிக்காமல் சேது திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று டி.ஆர்.பாலு சொல்கிறார். ஆனால் மத்திய அரசோ உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கமிட்டி போட்டிருக்கிறது. மத்திய அமைச்சரின் உறுதிப்படி பார்த்தால், இந்த கமிட்டியே வீணானதுதானே.
ப: அது எப்படி வீணானதாக கருத முடியும். இந்த கமிட்டி ஆய்வு நடத்தி டி.ஆர். பாலு சொல்வது சரியா இல்லையா என்பதை சொல்லலாம். வாஜ்பாய் போன்ற அறிஞர்கள் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த 6வது வழிதான் இது. பிஜேபி அரசின் கேபினட் அமைச்சர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். இந்த பிரச்சனையில் ராமரைக் கொண்டு வந்தது நானா? அவர்கள் தானே.

ராமர் என்ற பெயருக்காக நாங்கள் எதிர்க்கவில்லை. அப்படியென்றால் கிருஷ்ணா பெயருள்ள திட்டத்தை எதிர்க்கிறோமா? அந்த திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக புட்டபர்த்தி சாய்பாபாவை கூட அணுகி உதவி கேட்டு நிறைவேற்றி வருகிறோம்.
இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி இந்த திட்டத்தை கெடுப்பதை இந்த திட்டத்தால் நிரம்ப பயனடையும், இது வரும் என்று எதிர்பார்க்கும் தமிழ் மக்கள் விரும்பவில்லை. இந்த
திட்டத்தை இழக்க மக்கள் தயாராக இல்லை.

கேள்வி: அண்மையில் டெல்லியில் நடைபெற்ற அணுசக்தி தொடர்பான கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஆதரவு இல்லையே என்று பிரதமர் வருத்தம் தெரிவித்ததாக செய்தி வெளியானதே?பதில்: இது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன். அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குக் கூட பேட்டி அளித்திருக்கிறேன்.

கேள்வி: தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து?

பதில்: மத்தியிலா? மாநிலத்திலா?

கேள்வி: மாநிலத்தில் தான். அண்மையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இலாக்கா மாற்றப்பட்டதே?பதில்: அமைச்சர்கள் மாற்றம் என்பது அமைச்சர்களின் சவுகரியத்திற்
காகவும், முதலமைச்சர் வசதிக்காகவும் செய்வது.

கேள்வி: மழைவெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறதே?
பதில்: இதுபோன்ற மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் உடனடியாக சென்று நிலைமைகளை ஆய்வு செய்து தலைமை செயலக அதிகாரிகளுக்கு தகவல் தர உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுமனவரை நிலைமைக்கு தகுந்தவாறு அங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவிகளை வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.

கேள்வி: திமுக, அதிமுக அல்லாத ஒரு அணி தான் அடுத்த ஆட்சியை பிடிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே?
பதில்: இது குறித்து நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: கனிமொழி மத்திய அமைச்சர் ஆவாரா?
பதில்: எப்போதாவது வரலாம்.

கேள்வி: இதேபோல மு.க.அழகிரிக்கும் கட்சி பதவி கிடைக்குமா?
பதில்: (முதலமைச்சர் பலத்த சிரிப்பு).

கேள்வி: குஜராத் கலவரத்தில் அந்த மாநில முதல்வர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதே?
பதில்: பத்திரிகைகளில் தான் இது பற்றி படித்து வருகிறேன். மேலும், இது குறித்து பேசவிரும்பவில்லை. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

Read More...

நாம ராமாயணம் !

Get this widget Track details eSnips Social DNA


புதுசா எதை ஆரம்பிச்சாலும் ஸ்ரீராமஜெயம் என்று தான் ஆரம்பிப்போம், அதனால் நாம ராமாயணம் கேட்டு மகிழுங்கள்..

லிங்க் இங்கே

Read More...

FLASH: திரும்பவும் இட்லிவடை

நண்பர்களுக்கு வணக்கம் !

இன்று மதியம் என் பாஸ்வோட் களவு போனது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதை பற்றி பல பதிவுகளில் பார்த்தேன்.

அதை பற்றிய சில அப்டேட்

* என் வலைப்பதிவை மீட்டுவிட்டேன். எப்போதும் போல் இயங்கும். ( எப்படி செய்தேன் என்று பொதுவில் சொல்லி அதையும் அந்த ஹாக்கருக்கு சொல்லிதர வேண்டாம் என்று பார்க்கிறேன் )

* என் gmail மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அதுவும் நடக்கும் என்று நினைக்கிறேன்.


* இனி என் மெயில் ஐடி : idlyvadai2007 ( gmail, gtalk ) அன்பர்கள் பயபடாமல் முன்பு போல் பேசலாம். சந்தேகம் இருந்தால் என்னிடம் Secret கேள்வி கேட்கலாம் :-)


* மதியம் முழுக்க நண்பர்கள் எனக்கு பல Tips தந்த வண்ணம் இருந்தார்கள், அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

* "உங்களுக்கு பிடித்த அடுத்த முகவரி" என்ன என்று இதுவரை ஓட்டு போட்டவர்களுக்கு என் நன்றி.

முக்கிய எச்சரிக்கை: idlyvadai@gmail.com மற்றும் idlyvadai கூகிள் டாக்கில் யாராவது ஏதாவது அனுப்பித்தால் அதை டெலிட் செய்யவும். நன்றி.


பிகு:

என் பதிவுக்கே FLASH நியூஸ் தர வேண்டியிருக்கிறது என்ன செய்ய. அப்பறம் அக்டோபர் 27, 2003 இதே நாள், நான் நான் போட்ட முதல் பதிவு :-) Coincidence !

Read More...

Friday, October 26, 2007

என் புதிய வலைப்பதிவு + எச்சரிக்கை

idlyvadai.wordpress.com அல்லது idlyvadai2007.blogspot.com

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க சைடுல ஓட்டு போடுங்க.


எச்சரிக்கை: If you get mails from idlyvadai or gtalk from idlyvadai then it is not the original idlyvadai :-) be careful...


இந்த பிரச்சனை சரி செய்ய முடியலை என்றால் இந்த முகவரியில் கடைசி பதிவாக இருக்கும்.. தங்கள் வேலையை விட்டுவிட்டு எனக்கு ஐடியா கொடுத்த அனைவருக்கும் நன்றி.

Read More...

என் புதிய மெயில் கணக்கு

இந்த பிரச்சனை சரியாவதற்கு கொஞ்ச நேரம் ஆகலாம் போல அதனால் அதுவரை என் மெயில் ஐடி - idlyvadai2007@gmail.com

Read More...

எனக்கு வந்த மெயில் இது தான்

From: holyox@gmail.com [mailto:holyox@gmail.com]
Sent: Friday, October 26, 2007 12:34 PM
To: idlyvadai@gmail.com
Subject: Please read this (About Gnani)

Dear Idlyvadai,

I start a topic about Gnani in Orkut community. There alot of our friends
share their opinions without any caste feelings. So please read and write
a post then add their main points to your post.

Please login and read. Orkut also gmail web same as like blogger. We can
login through our gmail account.

http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html

Anbudan,
Selvan

Read More...

பாஸ்வோர்ட் களவு - நீங்க செய்ய வேண்டியது

இங்கே போய் பாருங்க http://groups.google.com/group/Gmail-Help-Discussion/search?q=hacked&start=0&scoring=d&

5-15 நாள் வரை ஆகும் என்கிறார்கள். பார்க்கலாம்.

login session இருக்கும் வரை யாருக்காவது உபயோகமா இருக்கலாம் என்று எண்ணம் :-)
அன்புடன்,
இட்லிவடை

Read More...

அறிவிப்பு

I have one login session and I am using that to post it here, I dont have access to my gmail account. If you receive any mails from my account then it fake. Be cautious.

இனிமேல் அப்டேட் செய்ய முடியாமல் போகலாம்.

அதே போல் என்னிடம் gtalk உள்ள அன்பர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.
நன்றி.
இட்லிவடை

Read More...

Google password hacking

என்னுடைய idlyvadai account பாஸ்வோர்ட் ஹாட் செய்யபட்டது :-(

உஷார் என் பாஸ்வேர்ட் திருட்டு நடந்துவிட்டது., என் பெயரில் மெயில் வந்தால் உஷார்... இந்த சைட்டினுள் நுழையாதீர்கள் Orkut Fake site http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html

வந்தால் உள்ளே போகாதீங்க

Read More...

பாஸ்வோர்ட் ஹாக் செய்யபட்டது

என்னுடைய idlyvadai account பாஸ்வோர்ட் ஹாட் செய்யபட்டது :-(

உஷார் என் பாஸ்வேர்ட் திருட்டு நடந்து விட்டது, என் பெயரில் மெயில் வந்தால் உஷார்... இந்த சைட்டினுள் நுழையாதீர்கள் Orkut Fake site http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html

வந்தால் உள்ளே போகாதீங்க

Read More...

ஷங்கர்-ஷாருக்கின் ரோ(போனது)

ஷங்கரின் ரோபோ படம் திடீரென கைவிடப்பட்டு விட்டது. இப்படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான ஷாருக் கான் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஷாருக்கான் நேற்று கூறுகையில், ரோபோட் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. ஷங்கர் என்னிடம் கதையைச் கூறியபோது இது எனக்கான கதை என்று உணர்ந்தேன்.

இப்படி ஒரு கதையை ஹாலிவுட்டில்தான் எடுப்பார்கள். ஆனால் கதையில் சில மாற்றங்களை ஷங்கர் செய்துள்ளார். இதனால் நான் எதிர்பார்த்தது போன்ற ஹாலிவுட் எபக்ட் கிடைக்காது என்று உணர்ந்தேன். அதனால்தான் படத்திலிருந்து விலகத் தீர்மானித்தேன் என்றார் ஷாருக்கான்.

Read More...

துக்ளக் அட்டை படம் சில விளக்கங்கள்

இந்த வார துக்ளக் அட்டை படத்தில்


"ராமர் தெய்வம்தாம், எனக்கு ராமர் மீது நிறைய மரியாதை உண்டு"
முதல்வர் பேச்சு, செய்தி

என்று வந்துள்ளதே, எப்போது கலைஞர் அப்படி சொன்னார் ? என்று சிலர்(5 பேர்) என்னிடம் கேட்டார்கள்( ஏதோ நான் தான் அந்த கார்டூனுக்கு ஐடியா கொடுத்த மாதிரி ).

எனக்கு தெரிந்த வரையில் (உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டதில் சொல்லலாம்) கலைஞர் ஜெயலலிதா புகாருக்கு பதில் சொல்லும் போது இதையும் சொன்னார். அதன் விவரம் இங்கே...


New Indian Express
New Indian Express செய்தி

தினத்தந்தி செய்தி:
(அக்டோபர் 18)சட்டசபையில் கலைஞர் பேச்சின் முழு விவரம்


திட்டமிட்டே நடந்த சம்பவம்
விரும்பத் தகாத, நேரடியாக சொல்ல வேண்டுமேயானால் வெறுக்கத்தக்க ஒரு நிகழ்ச்சி அவையிலே எதிர்பாராமல் நடந்தது என்று சொல்ல மாட்டேன் - எதிர்பார்த்ததற்கிணங்க நடைபெற்று அது இன்று மாலையில், நாளை காலையில், பத்திரிக்கைகளிலே செய்தியாக வர இருக்கிறது. ஆனால், அமைச்சர் ஸ்டாலின் இங்கே பேசியதையட்டி எழுந்த தகராறு - அந்தத் தகராறின் விளைவாக கூச்சல் குழப்பம் - அதன் விளைவாக இத்தகைய நடவடிக்கை என்று பத்திரிக்கைகளிலே செய்தி வரப் போகிறது.
உண்மை என்னவென்றால், இந்த உரிமை மீறல் பிரச்சினையின் மீது அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கே பேசி இந்தக் கருத்துக்களைச் சொல்லியிருக்கா விட்டாலுங் கூட இது நடந்திருக்கும். இந்தக் குழப்பமும், கூச்சலும், இந்தத் தகராறும், பரபரப்பும், பத்திரிக்கைகளிலே வருகின்ற அளவிற்கு நடந்திருக்கும். காரணம், திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் இது. என்றைக்கு அவையின் மழைக் காலத் தொடர் கூடும் என்று அறிவிக்கப்பட்டதோ அன்றைக்கே எப்படி இந்தச் சபையிலே நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதற்குத் தயாராகிவிட்டார்கள்.
பாதுகாப்பு குறைப்பா?
அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் என்னவென்றால் - Ôபாதுகாப்பு இல்லைÕ. ஒரு முன்னாள் முதல்-அமைச்சருக்குத் தர வேண்டிய பாதுகாப்பு தரப்படவில்லை என்பது. இந்த முகாரி ராகத்தை கடந்த இரண்டாண்டு காலமாக அவர்கள் பாடி வருகிறார்கள். அது உண்மையா என்பதை நடுநிலையிலே உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். காவல் துறையிலே உள்ளவர்கள் அறிவார்கள். அரசுத் துறையிலே உள்ளவர்களுக்கு தெளிவாகவே புரியும். இருந்தாலும், அவ்வப்பொழுது நம்முடைய மக்களுக்கு மறதி என்ற ஒன்று இருந்து விடுகிற காரணத்தால் நினைவூட்ட வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஆகவே, நினைவூட்ட விரும்புகிறேன்.
உள்ளபடியே, முன்னாள் முதல்-அமைச்சருக்கு - இன்றைய எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லையா என்றால், ஏற்கனவே இதே அவையில் உறுப்பினர்களுக்கெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அந்தப் பட்டியலை அறிவித்திருக்கிறேன். அவருக்குரிய எந்த பாதுகாப்பும் அவர் முன்னாள் முதல்-அமைச்சராகிவிட்ட காரணத்தாலோ இன்றைக்கு எதிர்க் கட்சித் தலைவர் என்ற நிலையினாலோ குறைக்கப்படவில்லை என்பதை நான் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா விருப்பப்படியே
அவர் 'இசட் பிளஸ்' மற்றும் தேசிய பாதுகாப்புப்படை (என்.எஸ்.ஜி.) பாதுகாப்புக்கு உரியவர் என்பதால், நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி, அவருக்கு போதிய பாதுகாப்பு பின்வருமாறு வழங்கப்பட்டு வருகிறது.
அவரது மெய்க்காவல் அலுவலில் 3 காவல் ஆய்வாளர்கள்- என்.பி. விஜயகுமார் (வயது 44), ஜி. முத்துமாணிக்கம் (வயது - 37) மற்றும் வி. குப்புராஜ் (வயது 48 ) முதலியோர் உள்ளனர். இதிலே வேடிக்கை என்னவென்றால் கடந்த ஆட்சியின்போது முன்னாள் முதல்வர், அம்மையார் அவர்களின் பாதுகாப்பு பணியில் இவர்கள் இருந்து வந்துள்ளனர்.
தற்போது அவர்களுடைய விருப்பப்படியே அவரது மெய்க் காவல் பணியில் தொடர்ந்து உள்ளனர். ஆட்சி மாறி, அவர்களின் பாதுகாப்புப் பணி பற்றி பரிசீலித்த போது, அதே பாதுகாவலர்கள் தான் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று அம்மையார் அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களே அந்தப் பாதுகாப்புப் பணியிலே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 9 எம்.எம். பிஸ்டல் வகை துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணி புரிகின்றார்கள்.
பாதுகாப்பு அதிகாரிதான் பொறுப்பு
இந்த மூவரில் வி.குப்புராஜ் என்பவர் தான் அன்றையதினம் வீட்டிற்குள் ஒருவர் நுழைந்ததாக பத்திரிகைகளிலே செய்தி வந்து, வந்தவர் ஊமையாக நடித்தார் என்றெல்லாம் செய்தி வந்து, பிறகு அவரைப் பார்த்தால் வேலை கேட்க வந்தார் என்றெல்லாம் செய்தி வந்து, அ.தி.மு.க. வின் அனுதாபி தான் அவர் என்றெல்லாம் செய்தி வந்ததே, அவர் அந்த வீட்டிற்குள் நுழைந்த அந்த நாளில் பாதுகாப்பு பணியிலே இருந்தவர் குப்புராஜ் என்பவர். எனவே எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுப் பாதுகாப்பில் அன்றையதினம் ஏதாவது குறை இருக்குமேயானால் அதற்கு இந்த அதிகாரி தான் பொறுப்பானவர்.
அந்த முழுப் பொறுப்புக்குரிய அதிகாரி எந்த முறையில் விசாரிக்கப்பட வேண்டுமோ அந்த முறையில் விசாரிக்கப்படுவார் என்பதை; ஏன் அந்தப் பாதுகாப்பிலே இந்த வழுக்கல் ஏற்பட்டது என்பது தெளிவாக்கப்படும் என்பதையும் நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'இசட் பிளஸ்' பாதுகாப்பில் இருந்தவன்
இது மாத்திரமல்ல, கூடுதல் மெய்க் காவல் பணியில் இரண்டு தலைமைக் காவலர்கள் - எஸ். கிருஷ்ணம ராஜ் (வயது-46), ஆர்.அசோகன் (வயது-39) மற்றும் ஒரு காவலர் - எம். கோதண்டபாணி (வயது-33) முதலியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் விருப்பப்படியே தொடர்ந்து அந்தப் பணியில் உள்ளனர். இவர்கள் ஏ.கே.47 (ரைபிள்) துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பதையும் நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
ஐந்தாண்டு கால அ.தி.மு.க.ஆட்சியில் நான் Òஇசட் பிளஸ்ÕÕ மற்றும் தேசிய பாதுகாப்புப் படை பாதுகாப்புக்கு உரியவனாக இருந்திருக்கிறேன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் கருணாநிதிக்கு இசட் பிளஸ் பிரிவுக்கான பாதுகாப்பு என்றைக்குமே இருந்ததில்லை, தனக்குத் தான் அந்தப்பாதுகாப்பு என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை அது என்னுடைய மதிப்புக்கு குறைவாக இருக்கட்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். அந்த மதிப்புக் குறைவு எனக்கு ஏற்படுவதைப் பற்றி நான் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். தற்போது அவருக்கு அளித்திருப்பதைப் போலவேதான் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எனக்கு மெய்க்காப்பாளர்களாக மூன்று காவல் ஆய்வாளர்களும், கூடுதல் மெய்க் காவல் பணியில் மூன்று பேரும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
அரசியலில் பயம் கூடாது
அவர் ஆட்சி புரிந்த அந்த ஐந்தாண்டுகளில் கூட என் வீட்டிற்கு அல்லது அறிவாலயத்திற்கு அல்லது நான் பணியாற்றுகின்ற கோட்டை அலுவலகத்திற்கு எத்தனையோ முறை எத்தனையோ பேர் தங்கள் கோரிக்கைகளை முறையிடுவதற்காக தனியாகவும் வந்திருக்கிறார்கள், நான்கு பேர், ஐந்து பேர் என்று சேர்ந்தும் வந்திருக்கிறார்கள். நான் அவர்களையெல்லாம் என்னைக் கொலை செய்ய வந்திருப்பார்கள் என்று யூகித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்ட என்றைக்கும் நான் முன்வரவில்லை, அதுவும் உங்களுக்குத் தெரியும்.
இப்படி வருகிறவர்கள் எல்லாம் கொலை செய்யத் தான் வருகிறார்கள் என்கின்ற இந்தப் பயம் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு பயம், அரசியலிலே இருப்பவர்களுக்கு இருந்தால் அதை ஏதோ ஒரு நோய் என்று சொல்வார்கள். நான் அதையெல்லாம் விவரிக்க விரும்பவில்லை.
மேலும், 12 பேர் அடங்கிய தேசிய பாதுகாப்பு படையினர் (நேஷனல் செக்யூரிட்டி கார்டு) இரண்டு வாகனங்களில், எம்.பி.5 நவீன ரக துப்பாக்கியுடன் வழிக்காவல் பணியில் உள்ளனர். இதைப் போல பல பேர் ஒரு ஷிப்டுக்கு இத்தனை பேர் என்று மூன்று ஷிப்டுக்கும் சேர்த்து சுமார் 55 பேர் அந்த அம்மையாருக்காக காவல் பணியிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையிலே இன்னும் பாதுகாப்புத் தேவையென்றால் இப்போது கூட இந்த அவையிலே சொல்ல விரும்புகிறேன். இன்னும் பாதுகாப்பு தேவையென்றால் கொடுக்கக் கூடத்தயாராக இருக்கிறோம். பாதுகாப்பு எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளுங்கள், பாராளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்று தான் நான் சொல்ல விரும்புகிறேன்.
பத்திரிகைகளிலே
இதற்கிடையே நேற்று பத்திரிகையிலே மக்கள் குரல், இந்தியன் எக்ஸ்பிரஸ், அவர்களுடைய கட்சிப் பத்திரிகை நமது எம்.ஜி.ஆர். என்று இத்தனையிலும் நானும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் ஏதோ பேசிக் கொண்டோம், அவருக்கு ஒரு முடிவு ஏற்படுத்துவதைப் பற்றி பேசிக் கொண்டதாக அந்த அம்மையார் பேட்டி அளித்ததாக செய்தி வந்து, அதைப் பற்றித் தான் ஸ்டாலின் உரிமைப் பிரச்சினை இங்கே கொடுத்திருக்கிறார். அவரும் இங்கே ஒரு அமைச்சராக இருக்கிறார். அமைச்சராக இருக்கிறாரோ இல்லையோ, ஒரு உறுப்பினராக இருந்தால் கூட, அவரைப் பற்றி இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான செய்தி வரும்போது இந்த அவை யிலே இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாதுகாப்பு தேவை.
பாராளுமன்றத்தில் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு இழுக்கும் பழியும் ஒரு அமைச்சர் மீது சொல்லப்பட்டால் இப்படித் தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். அவைத் தலைவராகிய தங்களுடைய அரவணைப்பும், அவையிலே உள்ள ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ள மற்றக் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையும், ஆறுதலும் இல்லாமல் எப்படி நாங்கள் இங்கே இயங்க முடியும் என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
பொறாமையால் வீண்பழி
இங்கே இருக்கின்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல, பத்திரிகையாளர்களும் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களும் இந்தக் காட்சியை நேரடியாகப் பார்த்திருக்கிறார்கள். பார்த்தவர்கள் என்ன நடந்தது என்பதை அறிவார்கள். ஸ்டாலின் என்ன பேசினார்? இது உங்களுக்கு வாடிக்கையாகப் போய் விட்டது என்று ஒரு வார்த்தையைச் சொன்னார். வாடிக்கையாகப் போய் விட்டது என்றால் இதே போல கொலைக் குற்றம் சாட்டுவது, மோரிலே விஷம் கலக்கப்பட்டதா? பாலில் கலக்கப்பட்டதா? அது இன்றைக்கு நேற்றா நடக்கிறது. நீண்ட காலமாக நடக்கிறது.
எதிலே கலந்து யாரைக் கொன்றார்கள் என்பது வீட்டு வாசலிலே பிரேதம் கிடக்கும்போதே - என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.
அவர்கள் இறந்த போது அவருடைய சவம் எடுப்பதற்கு முன்பாகவே அவருக்கு விஷம் வைத்துக் கொன்றது யார்?
அந்த விஷத்தை மோரில் கலந்தார்களா? அல்லது பாலில் கலந்தார்களா என்ற இந்தப் பட்டிமன்றமே நடந்ததை நீங்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தப் பழக்க தோஷம் தான் இப்போதும் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவதற்காக செய்கிறார்கள். எல்லோருக்கும் பொறாமை வருவது சகஜம்தான்.
சேது சமுத்திரத் திட்டம்
திடீரென்று பெரிய பெரிய விழா நடக்கிறது, மக்கள் எல்லாம் வருகிறார்கள், சேது சமுத்திரத் திட்டத்திற்காக நாம் உண்ணா விரதம் என்று முன்கூட்டியே அறிவிக்காமல் இருக்கும்போதே செய்தி கேள்விப்பட்டு, அவர்களாக லட்சக்கணக்கிலே வந்து கூடுகிறார்கள், சென்னையிலே மாத்திரமல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் வந்து கூடுகிறார்கள். சேது சமுத்திரம் வேண்டுமென்று சொன்னவர்கள், இப்போது வேண்டாமென்கிறார்கள். இது என்ன வேடிக்கை என்று பார்க்கிறார்கள். வேண்டும் என்று தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டு விட்டு சேது சமுத்திரத் திட்டம் வராவிட்டால் ஒரு கை பார்ப்பேன் என்றெல்லாம் சூளுரைத்தவர்கள், வந்தால் ஒரு கை பார்ப்பேன் என்று சொல்கின்ற அளவிற்கு இன்றைக்கு மாறியிருக்கிறார்கள்.
அதற்குக் காரணம் நாம் செய்யக் கூடாது, மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் அரசும், இங்கேயிருக்கின்ற நம்முடைய அரசும் இணைந்து இந்தப் பெயரைப் பெற்று விடக் கூடாது என்பதற்காக இந்தத் திட்டத் தையே சீர்குலைக்க தேவையில்லாமல் ராமனைப் பிடித்திழுத்து - ஏதோ ராமன் என்றால் எனக்கோ, பேராசிரியருக்கோ பிடிக்காது என்பதைப் போல - ராமரைப் பிடிக்காதா என்பது வேறு விஷயம்.
ரஜினிகாந்த்
நண்பர் ரஜினிகாந்த் ஒரு விழாவிலே பேசும்போது இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னார். ராமரை உங்களுக்குப் பிடிக்காது என்று ஊரெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள், வடக்கே நான் போனேன், அங்கெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள் என்று சொன்னார். அதற்கு நான் சொன்னேன், நீங்கள் அவர்களிடம் சொல்லுங் கள், உங்களுக்குத்தான் அந்தச் சாமியார்கள் எல்லாம் பழக்கமாயிற்றே, அவர்களிடம் சொல்லுங் கள்,
அப்படியெல்லாம் எங்களுக்கு ராமர் மீது விரோதம் கிடையாது என்று தான் நான் அவரிடம் கூடச் சொன்னேன். மேடையிலேயே சொன்னேன். எங்களுக்கு ராமர் மீது ஒன்றும் கிடையாது.

வேண்டுமானால் 'சேது ராமன்' திட்டம் என்றே கூட பெயர் வையுங்கள். எங்களுக்கு வேண்டியது திட்டம். எங்களுக்கு வேண்டியது அந்த வழி, அந்த வாய்க்கால். எங்களுக்கு வேண்டியது தமிழ்நாட்டின் வளம். எங்களுக்கு வேண்டியது தமிழன், காலத்திலே அயல்நாடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்தானே, வேலைத் தேடி சென்றானே அந்த நிலைமை இல்லாமல் தமிழன் இங்கேயே வாழ வேண்டும் என்ற அந்த நிலை பிறக்க வேண்டுமென்பதற்காகத் தான், அதற்காகத் தான் இந்தத் திட்டங்களை நாங்கள் இன்றைக்குச் சொல்கிறோமே தவிர,
ஏதோ வீண் பிடிவாதத்திற்காக ராமனை இழிவுபடுத்த வேண்டுமென்பதற்காக யாரும் இதைச் சொல்லவில்லை.

ராமன், ஏசு, நபி எல்லாம்ஒன்றுதான்

எங்களுக்கு ராமன் என்றாலும் ஒன்றுதான், ஏசு என்றாலும் ஒன்று தான், நபிகள் என்றாலும் ஒன்று தான், எல்லாம் ஒரே கடவுள்தான். எனவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அறிஞர் அண்ணா அவர்களுடைய அந்தப் பொன்மொழியை மனதிலே பதிய வைத்துக் கொண்டு நடை போடுகின்ற இந்த அரசு யாரையும் புண்படுத்த வேண்டுமென்று விரும்பு கின்ற அரசல்ல.

எதிர்க்கட்சிக்காரர்களை கொன்று தீர்த்து விட்டு, வாழ வேண்டுமென்று விரும்புகிற அரசு அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யாராவது விரும்பினால் அதற்கு ஆளுங்கட்சியாக இருக்கின்ற எங்கள் மீது அவர்கள் பாய்கிறார்கள் என்று சொன்னால், அதிலே எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை நீங்கள் தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அணு அளவும் யாருக்கும் ஒரு துன்பமும் விளைவிக்காமல், ஜனநாயகத்திற்கு ரணம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த மாமன்றத்திலே உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
ஜனநாயகம் காக்க சபதம்
எனவே அனைவரும் ஒத்துழைத்து இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புகின்றவர்களை நீங்கள் தான் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும், உங்கள் செயல்கள் மூலமாக என்று கேட்டுக் கொண்டு, இன்றையதினம் நடைபெற்ற இந்தச்சம்பவங்கள் இனிமேல் தொடராமல் இனியாவது ஜனநாயகத்தை அனைவரும் காப்பாற்ற சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த விளக்கத்தை ஏன் இந்த உரிமை பிரச்சினை வந்தது, என்ன காரணத்தால் வந்தது, வரவேண்டிய அவசியம் என்ன என்பதற்கான விளக்கத்தையும், பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்கிற ஒரு பயங்கரமான குற்றச்சாட்டு இன்றைய ஆளுங்கட்சி மீது பழி போடுவது போல போடப்படுகிறதே.
அது எவ்வளவு தவறானக் கூற்று, உண்மைக்கு மாறான கூற்று என்பதை விளக்கவும் இதைப் பயன்படுத்திக் கொண்டேன் என்பதைக் கூறி இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

Read More...

Thursday, October 25, 2007

டோனிக்கு கிடைத்த (Surprise) பரிசு என்ன ?

ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் டோனிக்கு இன்று என்ன பரிசு என்று பலர்(அப்படி தாம்பா எழுதனும்) ஆர்வமாக யோசித்தார்கள். என்ன பரிசு வழங்கப்படும் என்பது நேற்று வரை ரகசியமாக இருந்தது. சரி அந்த பரிசு என்ன ? ....




* தலைமுடியை ஒட்ட வெட்டியதால் அவருக்கு போலீஸில் DSP வேலை தரலாம் என்று சில கூறினார்கள்.

* அவருக்கு டெஸ்ட் போட்டியில் கேப்டன் பதவி என்று சிலர் கூறினார்கள்.

ஆனால் அவருக்கு கிடைத்த பரிசு ..

Toyota Corolla + 5 லட்சம் பணம் + ஜார்கண்ட் ரத்னா விருது

இது நிஜமான Surprise, எனக்கு :-) உங்களுக்கு ?


Read More...

ஞாநி கட்டுரை - சோ கருத்து

எனக்கு வியப்புதான் ஏற்படுகிறது

கே : கருணாநிதிக்கு ஓய்வு தேவை என்கிற அளவிற்கு உடல்நலம் மிகவும் குன்றியிருப்பதால், அவர் முதல்வராக நீடிப்பது நல்லதல்ல – என்ற கருத்து பற்றி?

ப : ஓய்வெடுப்பதும், எடுக்காததும் அவர் இஷ்டம். ஆனால் இவரை விட உடல்நலம் மிக நன்றாக இருக்கிற முதல்வர்கள் பலரைவிட, கலைஞர்தான் அதிகம் உழைக்கிறார்; ஞாபக சக்தி உட்பட எந்த ஒரு விஷயத்திலும் மற்ற முதல்வர்களை விட அவர் பின்தங்கியிருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் முதல்வர் பதவியை வகிக்க இயலாத அளவிற்கு, அவருக்கு உடல்நலம் குன்றிவிட்டதாக நான் நினைக்கவில்லை. "இந்த வயதிலும் இவ்வளவு உழைப்பா?' என்ற வியப்புதான் எனக்கு ஏற்படுகிறது.


ஞாநிக்குள் ஓளிந்திருக்கும் சோ என்று பிதற்றியது ? அச்சச்சோ !

Read More...

சிடி வடிவில், வாலியின் குரலில் கலைஞர் காவியம் !

முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு ஒலிப்பேழை வடிவில் வாலியின் குரலில் விரைவில் வெளிவர உள்ளது. தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை புதுக்கவிதை வடிவில் கலைஞர் காவியம் என்ற பெயரில் வார இதழ் ஒன்றில் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

தற்போது அந்த கலைஞர் காவியம் ஒலிப்பேழையாக தயாரிக்கப் பட்டுள்ளது. சிவம் பவுண்டேஷன் சார்பாக கமல்ராஜ் இதனை தயாரித்துள்ளார். இந்த ஒலிப்பேழைக்கு சங்கரா இசையமைத்துள்ளார்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கவிஞர் வாலி தனது சொந்தக்குரலில் அத்தனை கவிதைகளையும் பேசியிருப்பது தான். முதல்முறையாக திரைக்கதை வடிவில் ஒரு கவிதையை இசையோடு தயாரித்துள்ளார் கமல்ராஜ்.

கவிஞர் வாலி இது பற்றி கூறுகையில், "உடல் நிலை கோளாறு காரணமாக என்னால் சரியாக பேச இயலாவிட்டாலும் கூட கலைஞர் காவியம் உருவக்கத்தின் போது என்னை
அறியாமல் ஒரு தெய்வீக சக்தி
என்னை இயக்கி வைத்தது என்றார்.

இது பற்றி தயாரிப்பாளர் கமல்ராஜ் கூறுகையில், "எதிலும் புதுமையை புகுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த நான், கலைஞர் காவியத்தை படித்த போது இதனை வாலியின் குரலில் இசையோடு கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்ததின் விளைவு தான் இந்த ஒலிப்பேழை' என்றார்.

ஒலிப்பேழை குறித்த அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா, "ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒலிப்பேழை இந்த கலைஞர் காவியம் என்றார்.

இந்த ஒலிப்பேழை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'கலைஞர் காவியம்' முன்னுடையில் சோ

வாலியும் , போலி அல்ல.மனதில் எழுந்த எண்ணங்களைத் தான் அவர் எழுத்தில் வடித்திருக்கிறார்.உயிருடன் உள்ள வேறு எந்த ஒரு அரசியல்வாதியையும்-அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்-வாலி இப்படி வியந்து பாராட்டியது இல்லை.

வாலி ஆன்மீகவாதி,கடவுள் நம்பிக்கை உடையவர்.கலைஞர் நாத்திகவாதி,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.அப்படியிருக்க இவர்களிடையே எப்படி ஒரு அசாதரணமான நட்பு நிலவுகிறது? தமிழ் தான் காரணம்.தமிழ்ப்பற்று தான் காரணம்.தமிழால் இணைந்தவர்கள் இவர்கள்.அதன் விளைவாக இந்த நூல் பிறந்திருக்கிறது.



நாளும் படிக்கிறேன்; சும்மா
நச்சுன்னு இருக்கு; உடனே -
இடத் தோன்றும் ஒரு முத்தம் -
இச்சுன்னு உனக்கு

- கவிஞர் வாலி
( கலைஞர் காவியம் )

Read More...

4 வழக்கு, 60 பேருக்கு ஆயுள் தண்டனை

நேற்று மட்டும் நான்கு நீதிமன்றங்களில், 60 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. விவரம் கீழே...





Read More...

தலைமுடி அலங்காரத்தை மாற்றினார், டோனி

செய்தி கீழே...

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை பார்த்தவர்கள் அவரது தலைமுடியை நிச்சயம் மறக்க முடியாது. சிங்கத்தின் பிடரியில் நீளமாக முடி இருப்பது போல் டோனியின் கழுத்தில் நீண்ட சிகை தொங்குவதை காண முடியும்.

மிக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி சிம்மாசனம் அமைத்து கொண்ட டோனியின் முடி அலங்காரம் பாகிஸ்தான் அதிபர் முஷரப்பை கூட கவர்ந்ததாகும். கடந்த ஆண்டில் பாகிஸ்தான் பயணத்தின் போது ஜொலித்த டோனியை பாராட்டிய முஷரப், அவரது தலை முடியையும் வர்ணிக்க தவறவில்லை. டோனியின் தலைமுடி அலங்காரம் நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபல ஸ்டைலாக விளங்கி வருகிறது.

டோனி நேற்று தனது சொந்த மாநிலமான ஜார்கண்டில் உள்ள ராஞ்சிக்கு திரும்பினார். அப்போது அவர் தலைமுடியை தாரை வார்த்து இருப்பதை அறிந்த புகைப்படக்காரர்கள் அவரை வளைத்து படம் எடுத்து தள்ளினார்கள்.

ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் டோனிக்கு இன்று (வியாழக்கிழமை) பாராட்டு விழா நடக்கிறது. இதில் முதல்-மந்திரி மதுகோடா கலந்து கொண்டு டோனியை பாராட்டி பரிசு வழங்குகிறார். என்ன பரிசு வழங்கப்படும் என்பதை அவர் ரகசியமாக வைத்துள்ளார்.



இந்நிலையில் இவர் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 3 டெஸ்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் ஆக 10 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.



ஆஸ்திரேலியா அணி இதனால் பதட்டம் அடைந்துள்ளது. எங்க ஊரில் நடக்கும் போட்டியில் நாங்க வெட்டலாம் என்று இருந்தோம், ஆனால் அதற்குள் டோனி முந்திக்கொண்டுவிட்டார் என்று வருத்தபட்டதாக விவரம் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் :-)

Read More...

Wednesday, October 24, 2007

தசாவதாரம் படத்தில் முதல்வர் கருணாநிதி

தசாவதாரம் படத்தில் முதல்வர் கருணாநிதி

230 நாட்களாக நடந்த 'தசாவதாரம்' படப்பிடிப்பு, நேற்று இரவு முடிவுக்கு வந்தது. உத்தண்டியில் நேற்று நடந்த படப்பிடிப்புடன் பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார்.
இப்படத்தின் மொத்த பட்ஜெட் அறுபது கோடி. தமிழை பொறுத்தவரை இது சாதனை. ஐந்தாயிரம் பேர் ஒரே நேரத்தில் கலந்து கொண்ட டப்பிங், கமலின் பத்து வேடங்கள், படத்தில் இடம் பெறும் 12-ம் நூற்றாண்டு காட்சிகள், சுனாமி பிரளயம்.... இப்படி படத்தின் ஆச்சரியங்களை அடிக்கிக் கொண்டே போகலாம்.

தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த கமல், தனது பத்து அவதாரங்களின் புகைப்படங்களை காட்டினார். பிரமிப்பும் மகிழ்ச்சியும் அடைந்த முதல்வர், கமலின் கன்னத்தை கிள்ளி தனது பாராட்டை தெரிவித்தார்.

'தசாவதாரம்' யூனிட்டிலிருந்து கசிந்திருக்கும் புதிய தகவல், முதல்வர் கருணாநிதியும் படத்தில் இடம் பெறுகிறாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதல்வரைபோல் தோற்றம் கொண்ட நடிகர் ஒருவரை வைத்து எடுத்திருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் மட்டும், கமலுடன் தமிழக முதல்வரும் தோன்றுகிறாராம்.

அது என்ன காட்சி?

தசாவதாரத்தின் பிற விஷயங்களைப் போல இதுவும் ரகசியம்!

பிராமணர், குள்ள மனிதர், விஞ்ஞானி, சண்டை வீரர், கருப்பர், டூரிஸ்ட் கைடு, திருடன், வயதான பெண், சக்கரவர்த்தி, இளம் பெண் ஆகிய 10 விதமான ரோல்களில் நடித்துள்ளார் கமல்.

தசாவதாரம் என்பது தமிழ் டைட்டிலா ? இதற்கு தமிழக அரசு வரி விலக்கு கிடைக்குமா ?


Read More...

கனிமொழி பேட்டி - ஜெக்கு பதிலடி

கலைஞர் ஓய்வெடுக்க வேண்டும், மாறன் குடும்ப பிரச்சனை, ராமர் பாலம், மத்திய அமைச்சர் பதவி, விஜயகாந்த் கட்சி, ஜெ விமர்சனம்...


ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்ற பின்பு மாநில அரசு நிகழ்ச்சிகள் தொடங்கி, அறக்கட்டளை நிகழ்ச்சிகள் வரை தினசரி ஏதோ ஒரு மேடையில் கனிமொழியைப் பார்க்க முடிகிறது. கலைஞருக்கு எதிராக உச்சநீதிமன்றமோ, தனிநபர்களோ, யார் விமர்சனம் செய்தாலும், அதை, தான் சார்ந்த இலக்கிய மற்றும் நட்பு வட்டங்களைப் பயன்படுத்தி பதிலடி தருகிறார் கனிமொழி. இந்த நிலையில், அவரைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து.......



டெல்லி அனுபவங்கள் எப்படி இருக்கின்றன?

“நான் கலந்து கொண்ட முதல் கூட்டத்தொடர் கூச்சலும், குழப்பமுமாகத்தான் நடந்தது. உரையாற்றும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. மற்றபடி டெல்லி அனுபவங்கள் நன்றாகவே இருக்கின்றன. செய்திகளில் மட்டுமே பார்த்தும், கேள்விப்பட்டும் வந்த மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிர, இளம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி, ஒட்டுமொத்த இந்தியாவில் நிலவும் முக்கியமான பிரச்னைகள் பற்றி விவாதிக்கவும், அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. ‘டெல்லி அரசியலில் கவனமாக இருங்கள்’ என்று சில நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். அதை நானும் மனதில் இருத்தி இருக்கிறேன்.’’

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்த உடனேயே வெகுண்டெழுந்து, அதுகுறித்து தனியாக கருத்தரங்கு நடத்தினீர்கள். ஏன்.. அப்பா மீது அல்லது உங்கள் தலைவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம் என்பதாலா?

“இன்றைய காலகட்டத்தில் யாருமே கேள்வி கேட்கமுடியாத இடத்தில் எவர் ஒருவரும், எந்த அமைப்பும் இல்லை. இந்த அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் செய்த விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்ப விரும்பினேன். அப்பாவைப் பற்றி ஆயிரக்கணக்கானவர்கள் தினசரி விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதையே தொழிலாகவும் சிலர் செய்து வருகிறார்கள். அதைப்பற்றி அப்பாவும் கவலைப்படவில்லை. நானும் கவலை கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த விமர்சனம் நிச்சயமாக வரம்பு மீறிய ஒன்று. மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதும்கூட. இந்த உணர்வுகளைத்தான் உரிய முறையில் வெளிப்படுத்த நினைத்தேன். இத்தோடு நில்லாமல் பல தளங்களிலும் இந்த விஷயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நீதிமன்ற அவமதிப்பு என்ற ஒன்றே அவசியம் இல்லாதது என்பதை இப்போது மட்டுமல்ல; எப்போதும் நான் சொல்லி வந்திருக்கிறேன். இப்போது அதைச் சொல்லவும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அவ்வளவுதான்.’’

சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி மட்டும் விவாதம் நடத்தாமல், ராமர் உள்பட வேறு விஷயங்களைப் பற்றியும் விமர்சனம் செய்ததால்தான் பிரச்னை திசை திரும்பிவிட்டதா?

“ஆமாம்.. ஆதம் பாலம் என்று சொல்லப்பட்டு வந்ததை திடீரென்று ராமர் பாலம் என்று சொல்ல ஆரம்பித்ததால்தான் பிரச்னை வேறு வடிவம் பெற்றது. சுற்றுச்சூழல், பொருளாதார நன்மை தீமைகள் பற்றி கருத்துக்களை எடுத்துச் சொல்லி விவாதம் செய்திருந்தால் அதில் நேர்மை, உண்மை உண்டு என்று ஒப்புக் கொள்ளலாம். எல்லாவற்றையும் அரசியல் ஆதாயத்திற்காக மாற்ற நினைப்பதை ஏற்க முடியாது இல்லையா? தவிர, வால்மீகி ராமாயணம் எழுதிய காலத்தில் ராமர் தென்னிந்தியாவிற்கே வரவில்லை. வட இந்தியாவில் அவர் இருந்திருக்கத்தான் வாய்ப்பு உண்டு என்று ரொமீலா தாப்பர் என்ற வரலாற்று ஆய்வாளரும்கூட எழுதியிருக்கிறார். இவர் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு உரிய பதிலைத் தராமல், வால்மீகி எழுதிய சில விஷயங்களை மேற்கோள் காட்டினார் என்பதற்காக, தலைவரை(கலைஞர்) மட்டும் ஏன் குறிவைக்கவேண்டும். அறிவுபூர்வமான வாதங்களை முன் வைக்க வேண்டியதுதானே?’’

ராமர் பாலம் என்ற ஒன்று இருந்ததா, இல்லையா? என்பதே சர்ச்சையாக இருக்கும்போது, அந்தப் பாலத்தில் ஆதம் நடந்து போனார் என்று சொல்லி புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறீர்களே?

“ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்பதுபோல, ஆதம் அந்தப் பாலத்தில் நடந்துபோனதாகவும் இன்னொரு மதத்தினர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் உண்டு. கலைஞரின் விமர்சனத்தை, குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக சிலர் மாற்ற முயன்றபோது, எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவர் சில வாதங்களை முன் வைத்தார் என்பதற்காக இதைச் சொன்னேன். இதுபற்றி என்னிடம் கேள்வி கேட்கப்பட்டதால்தான் இதையும் சொன்னேன். வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் அறிவியல் உண்மைகளை மதங்கள் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தபோதும், பிற்காலத்தில் உண்மையை உணர்ந்து, மதங்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டதைக் காண முடியும். அறிவியல் ரீதியான காரணங்களை முன்வைத்து தங்கள் கருத்துக்களைச் சொல்லாமல், மத நம்பிக்கைகளை முன்வைத்து நாட்டு முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுத்துபவர்களுக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.’’

கலைஞரின் தலையை வாங்குவோம்.. நாக்கை அறுப்போம் என்றெல்லாம் வேதாந்தி செய்த விமர்சனம் உங்கள் கவனத்திற்கு வந்தபோது, அதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

“வேதாந்தி போன்றவர்கள் இருக்கும் கலாசாரத்திற்குள் இருந்து இதுமாதிரியான வார்த்தைகளைத் தவிர, வேறு நாகரிகமான விஷயங்களை எதிர்பார்க்க முடியாது. இதை நான் அப்பாவின் மீதான விமர்சனமாகப் பார்க்கவில்லை. திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு, சுயமரியாதைக் கருத்துக்களுக்கு, பகுத்தறிவுக்கு எதிரான ஒன்றாகவும், அச்சுறுத்தும் முயற்சியாகவும்தான் அதைப் பார்த்தேன். இதைச் சாதாரணமாக விட்டுவிடக்கூடாது என்ற இயல்பான கோபம் எனக்கு வந்தது. மற்றபடி இந்த வயதிலும் மதவாதிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும் கலைஞருக்கு நான் மகளாக இருப்பதிலும், அப்படிப்பட்டவரை என் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்.’’

கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்ற சிறுவயதில் கேட்ட கோஷங்களை இப்போது மீண்டும் கேட்கிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“பெரியாரின் கொள்கைகள், வார்த்தைகள் இன்றைக்கும் விட்டுவிட முடியாத விஷயங்கள் என்பதை உணர்த்துகின்றன. ‘அந்தக் கருத்துக்களுக்கு எல்லாம் அவசியம் இல்லை. அதற்கான காலம் முடிந்துவிட்டது’ என்று சிலர் சொல்வது உண்மையல்ல. எனவே, பகுத்தறிவுக் கொள்கை என்ற ஆயுதத்தைக் கீழே போட முடியாத நிலை இன்றும் தொடர்கிறது. மீண்டும் மீண்டும் வலிமை சேர்க்க வேண்டிய அரண்களாக அவை இருக்கின்றன என்பதும் புரிகிறது.’’

கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தயாநிதிமாறன் பற்றி விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.. அந்தச் சம்பவத்தால் கலைஞர் வேதனை அடைந்தார் என்று சொல்லியிருக்கிறீர்கள்.. மாறன் குடும்பத்துடன் விரிசல் வந்ததால் கலைஞர் வேதனை அடைந்தாரா? இல்லை.. அவர்களால் கலைஞர் வேதனையை அனுபவித்ததால் விரிசல் வந்ததா?

“இரண்டுமே காரணமாக அமைந்தது என்றுதான் நினைக்கிறேன். உடலில் ஒரு பாகத்தில் பிரச்னை.. அதனால் வேதனை என்றால் அதற்காக அறுவை சிகிச்சை செய்வோம். இந்த சிகிச்சையால் சிலகாலம் வேதனையை அனுபவிப்பது உண்டு. இப்போது வேதனைக்குக் காரணம், அந்த நோயா? அல்லது அறுவை சிகிச்சையா? என்று பிரித்துப் பார்க்க முடியாது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.’’

புதிய கட்சிகள் வரவுக்குப் பிறகு தி.மு.கவில் இளைஞர்களின் வரவும், இருப்பும் குறைந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

“அரசியல் கட்சிகளில் முழுமையாக இணைந்து இளைஞர்கள் செயல்படுவது என்பது எல்லாக் கட்சியிலுமே குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். ஆனால், தி.மு.க.வில் இருந்து பெருமளவு இளைஞர்கள் வெளியே போகிறார்கள் என்பது உண்மையல்ல. அண்ணன் ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குப் பெருந்திரளாகக் கூடும் இளைஞர்களைப் பார்ப்பவர்கள் இத்தகைய விமர்சனங்களைச் செய்யமாட்டார்கள்.’’

தே.மு.தி.க., அ.இ.ச.ம.க. போன்ற புதிய கட்சிகளின் வளர்ச்சி தி.மு.க.வை எந்தவகையிலும் பாதிக்காது என்று நம்புகிறீர்களா?

“தி.மு.கழகம் தோன்றிய பிறகு எத்தனையோ கட்சிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. அவை எதுவுமே தி.மு.க.வை பாதித்ததாக வரலாறு கிடையாது. அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த இயக்கமும் பலமான எதிர்க்கட்சியாகக்கூட வரவில்லை. அந்தக் கட்சியாலும்கூட தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. தி.மு.க.வின் பலத்தைக் குறைக்க முடியவில்லை. மற்றபடி எந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், முடிவையும் காலம்தான் முடிவு செய்யும்.’’

நாடறிந்த நடிகர்களுக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்காது என்று சொல்ல வருகிறீர்களா?

“நீங்கள் எந்த நடிகர்களைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. எதிர்பார்ப்புகளை மட்டும் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் பற்றி மக்கள் தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.’’

கலைஞர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கோஷம் ஒலிக்க ஆரம்பித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“சிலருக்கு ஐம்பது, அறுபது வயதுக்குள்ளாக மனரீதியான பிரச்னைகள் வந்து அவர்கள் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட சிலர் செய்யும் வாதங்களையும், கோஷங்களையும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.’’

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். அதில் இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. நீங்கள் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறதா?

“மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரலாம். அது என்னையும் சேர்த்த மாற்றமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை.’’

கர்ப்பப்பை பாதுகாப்பு கருத்தரங்கு முதல் காவலர் குடியிருப்பு திறப்பு வரை, இசை நிகழ்ச்சி தொடங்கி, இஃப்தார் விருந்து வரை எல்லா இடங்களிலும் உங்களைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம், அன்புத் தொல்லையா? இல்லை ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறதா?

“இரண்டும் இல்லை. நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி அழைக்கிறார்கள். தேர்ந்தெடுத்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். எல்லோரையும் போலவேதான் நானும் இதைச் செய்கிறேன்.’’

ஸ்டாலின் தன்னைக் கொலை செய்ய நினைத்தார் என்று ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“இதேதொனியில் அபத்தமான ஒரு குற்றச்சாட்டை ஜெயலலிதா முன்பு கூறியபோது, ‘ஜெயலலிதா அவர் வீட்டு மாடிப்படியில் ஏறும்போது இடறிவிழுந்தால்கூட, கருணாநிதிதான் படிக்கட்டில் எண்ணெய் ஊற்றிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு எதற்கெடுத்தாலும் நானே காரணம் என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்’ என்று தலைவர் ஒருமுறை முரசொலியில் எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது. அண்ணன் ஸ்டாலினைப் பொறுத்தவரை அவருக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு இடையில் இவரைப் பற்றிய நினைவுகூட வருமா என்று தெரியவில்லை. எதிரிகளை களத்தில் சந்தித்துப் பழக்கப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர் அண்ணன் ஸ்டாலின். இப்படிப்பட்ட தரக்குறைவான சிந்தனை அவருக்கு இருப்பதாக எவர் சொன்னாலும் அது அபத்தமான ஒன்றாகும். பொதுவாகவே, அரசியலை அரசியலால்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, இப்படித் தரக்குறைவான குற்றச்சாட்டுகள் கூறுவதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.’’

நன்றி: குமுதம் ரிப்போட்டர்

Read More...

டி.ஆர். பாலு - ஆற்காடு வீராசாமி - பெயர் மாற்றம் ஏன் ?

குமுதம் ரிப்போட்டரில் வந்த கட்டுரை. ஃபுரூப் கேட்வர்கள் படிப்பார்கள் என்று நம்புவோம்.


ஒரு பக்கம் பகுத்தறிவு முழக்கம்; மறுபுறம் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் அவலம். இதுதான் சில பகுத்தறிவாளர்களின் நிலை என்பதுதான் வேதனை!

ஆம். தி.மு.க.விலுள்ள முன்னணித் தலைவர்கள் இருவர், தங்கள் பெயர்களில் புதிதாக எழுத்துக்களைச் சேர்த்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் எண்கணித ஜோதிடம்தான் என்று வரும் செய்திகளே நிஜமான பகுத்தறிவாளர்களை வேதனைப்பட வைக்கின்றன!



ஒருவர், தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி. இன்னொருவர், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு. இதுவரை ஆற்காடு என். வீராசாமி என்று குறிப்பிட்டு வந்த ஆற்காட்டார், தற்போது தனது பெயரில் ‘W’ என்ற எழுத்தைச் சேர்த்து வீராஸ்வாமி என்று மாற்றி, அதை அரசிதழிலும் வெளியிட்டு இந்த மாற்றத்தை அதிகாரபூர்வமாக்கியிருக்கிறார்.

1989_91_ல் அமைச்சராக இருந்தபோது இடையிலேயே அமைச்சர் பதவி இழந்ததில் தொடங்கி பல்வேறு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்த ஆற்காட்டாரின் பழைய பெயர் எண் _ 5 (பெயரை ஆங்கிலத்தில் எழுதி, அதன் மதிப்புப்படி வரும் கூட்டுத்தொகை) தற்போது மாற்றம் செய்த பிறகு அது ‘2’ என்று ஆகியிருக்கிறது.

‘‘தன் இருப்பையே உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருந்த பழைய சூழ்நிலை மாறி, தற்போது கலைஞர் குடும்பத்து விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் அளவுக்கு அண்ணனின் நிலை உயர்ந்திருக்கிறது. முதலமைச்சர் ஆக ஆசைப்படுகிறார் என்று சொல்வதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, இப்படி ‘பெரிய’ அளவில் விமர்சனம் வருவதே ஒரு முன்னேற்றம் தானே? ஆனால் இதற்கெல்லாம் காரணம், இந்தப் பெயர் மாற்றம் தானா என்று தெரியாது’’ என்கிறார்கள் ஆற்காட்டாரின் ஆதரவாளர்கள்.

அடுத்தது டி.ஆர்.பாலு. இந்தமுறை மன்மோகன்சிங் பிரதமராகப் பதவியேற்றபோது, பாலுவுடன் சேர்த்து தயாநிதியும் அமைச்சரானார். பாலு சீனியர் என்றாலும், மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு, அரசியல் விவகாரம் என அனைத்துக் குழுக்களிலும் பாலு புறக்கணிக்கப்பட்டு தயாநிதியே முன்னிறுத்தப்பட்டார்.

அந்தச் சமயத்தில் ரொம்பவே வேதனைப்பட்ட பாலு, ‘நான் சாகும் வரை உங்கள் மீதான விசுவாசத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று கண்ணீர் விட்டுக் கலைஞர் முன்பு சொன்னார். அந்தக் காலகட்டத்தில் இருந்துதான் ஆங்கிலத்தில் தன் பெயரை எழுதும்போது ஒரு ‘A’ சேர்த்து எழுத ஆரம்பித்தார் பாலு. அதாவது, பெயர் எண் ஒன்பது என்று இருந்ததை ‘ஒன்று’ என்று வரும்படி மாற்றினார். சமீப காலமாக பாலு தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது இரண்டு ‘A’க்கள் வரும்படி பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார்.

‘‘இப்போ பார்த்தீர்களா அண்ணனின் செல்வாக்கை. சேது சமுத்திரத் திட்டத்தில் அண்ணனை நோக்கித்தான் இந்தியாவின் பார்வையே இருக்கிறது. தயாநிதியின் மூலமாக வந்த இடைஞ்சலும் காணாமல் போய் விட்டது’ என்று சந்தோஷமாகச் சொல்கிறார்கள் பாலுவின் ஆதரவாளர்கள்.

‘‘ஐந்தை பெயர் எண்ணாகக் கொண்ட ஒருவர் இரண்டாக மாற்றுகிறார் என்றால், இப்போதுள்ள நிலையை விட உயர்நிலையை அடைய விரும்புகிறார் என்று அர்த்தம். ஏனென்றால், ஐந்து என்பதே நல்ல எண்தான். அதுபோல ஒன்பதை ஒன்றாக மாற்றியதும், ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத்தான். ஒன்பது என்பது யுத்த எண். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையாக அமைய வாய்ப்பு உண்டு. ஒன்றாம் எண், குறிப்பாக 19 (டி.ஆர்.பாலுவின் புதிய எண்) என்பது மூன்று லோகத்தையும் வசீகரிக்கக் கூடிய எண். ஆனால் வெறும் பெயரை மற்றும் மாற்றினால் நினைத்தது நடந்து விடாது. பிறந்த தேதி, ஜாதகம், ரேகை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து மாற்றம் செய்தால்தான் நினைத்தது நடக்கும்’’ என்கிறார் பிரபல ஜோதிடர் மற்றும் எண் கணித நிபுணர் ஒருவர்.

பகுத்தறிவில் நம்பிக்கை உள்ள இவர்கள் எதை எதிர்பார்த்து இந்த மாற்றங்களைச் செய்தார்களோ தெரியவில்லை. ஆனால் பெண்ணடிமை, ஜாதிக்கொடுமை, சமூக ஏற்றத்தாழ்வு போன்ற விஷயங்களில் நல்ல மாற்றங்களை எதிர்பார்த்த தந்தை பெரியார், நல்லவேளை இந்த மாற்றங்களைப் பார்க்க உயிரோடு இல்லை என்பதுதான் ஆறுதலான விஷயம்!
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

Read More...

கோவை குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு - பாஷாவிற்கு ஆயுள் - அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இத்தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பல்வேறு கட்டங்களாக தண்டனை அறிவிக்கப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளிகளான அல்-உம்மா நிறுவனர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும் என்று தனிக்கோர்ட் நீதிபதி உத்ரபதி ‌அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அல்-உம்மா தலைவர் பாஷாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. முகமது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

Read More...

அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி

தற்போது நாங்கள் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆன கூட்டணியில் இருந்து வருகி றோம். அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை இந்த கூட்டணி நீடிக்கும். - ராமதாஸ் பேட்டி

அடுத்த சட்டசபை தேர்தலில் நாங்கள் புதிய கூட்டணி அமைப்போம். தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணியை அமைத்து சட்டசபை தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்.



கேள்வி:- தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டு வைத்து பா.ம.க. போட்டியிட்டு வந் துள்ளதே?

பதில்:- 1967-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்களில் கூட்டணியை மாற்றி மாற்றி அமைத்துள்ளன. இதில் பா.ம.க.வை மட்டும் குறை கூறுவதில் நியாயம் இல்லை.

கே:- சென்னை அருகே துணை நகரம் அமைப்பது, சென்னை விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட் டங்களுக்கு முட்டுக் கட்டை போடுவதாக கூறப்படு கிறதே?

ப:- ஒரு ஆண்டுக்கு முன்பு துணை நகரம் அமைப்பது தொடர்பாக அப்போதைய மத்திய மந்திரி தயாநிதி மாறன், அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் என்னை சந்தித்து இந்த திட்டம் பற்றி பேசினார்கள். 5000 குடும்பங்களை வெளி யேற்றும் திட்டம் இது. இது பற்றி எனது கருத்துக்களை தெரிவித்தேன். மறு நாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இந்த திட்டத்தை எடுத்துக் கொள்வது பற்றி அறிவித்தார்.

அதன் பிறகு நான் பாதிப்புக்கு உள்ளாக இருந்த மக்களை சந்தித்தேன். இதனை அடுத்து இந்த திட்டம் கை விடப்படுவதாக இந்த திட்டத்தை தொடரப்போவது இல்லை என்று முதல்- அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார். மக்களை பாதிக்கும் எந்த வளர்ச்சி திட்டங்களும் தேவை இல்லை. இது ஒரு மைனாரிட்டி அரசு, குறைந்த பட்ச பொதுத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்தும் விஷயத்தை பொறுத்த மட்டில் ஒரு திட்டத்துக்கு மக்களாக விரும்பி தங்கள் நிலத்தை கொடுக்க முன் வந்தால் எங்கள் கட்சிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவை அமைக்க உபயோகப்படுத்தாத நிலங்களை பயன்படுத்தலாம், விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. ஒரு திட்டத்தை நிறைவேற் றும் போது அந்த பகுதி யில் பாதிக்கப்படுபவர்களுக்கு வேலை, அதிக இழப்பீடு போன் றவை வழங்க வேண்டும்.

பெரிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழை வதால் சிறு வணிகர்கள் பாதிக்கும் நிலை வரக்கூடாது. அந்த பெரிய நிறுவனங்களின் மிகப் பெரிய அளவிலோ அல்லது நடுத்தர அளவிலான வர்த்தகத்திலோ ஈடுபடலாம்.

சேது சமுத்திர திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். ஆனால் குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தினரின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மக்களின் உணர்வுகளுக்கு எங்கள் கட்சி மதிப்பு கொடுக்கிறது.

செய்தி: The Hindu

Read More...