பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 31, 2007

புத்தாண்டு வாழ்த்துகள் 2008!




பின் நவினத்துவமான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு இங்கே போகவும் ( ஒன்லி ஃபார் அடல்ட்ஸ் )

Read More...

இலக்கிய மாநாடு ?



நேற்று நடந்த புத்தக வெளியீட்டுவிழா. புத்தக வெளியீட்டு விழா என்றால் எவ்வளவு பேர் கலந்துகொள்வார்கள் ? 50 ? 100 ? 150 ? நேற்று நடந்த விழாவில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டார்கள் என்று பேச்சு. அந்த ஆயிரம் பேரில் பத்ரியும் ஒருவர்!

இது இலக்கிய கூட்டமா அல்லது இலக்கிய மாநாடா என்று தெரியலை, நேற்று கொடி எதுவும் ஏற்றினார்களா என்று தெரியலை கொஞ்சம் லேட்டாக போயிட்டேன்.

Read More...

டாப் 5 பதிவுகள் முடிவுகள்

வழக்கம் போல் இந்த வருடமும் இட்லிவடை டாப் 5 பதிவுகள். ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி.


1. பினாத்தலார் - கணினியில் ஃப்ளாஷ் டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தவர், சமீபங்களில் wifeology க்காக ட்யூஷன் எடுத்து, தேர்வுவைத்து, விடைத்தாளை அவுட் ஆக்கி, அனைவரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியாதவர். சர்வே'சனுக்கு நிகராகப் பேசப்படுபவர். இவை எல்லாம் இருந்தால் கூட அரசியல் தமிழ்மணம் இந்த ஆண்டின் சிறந்த பதிவு. இந்த அண்டு இவருக்கு தான் முதலிடம் வாழ்த்துக்கள்

2. ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் ஸ்ரீரங்கத்திலிருந்து மும்பைக்கு போய் அரிசி உப்புமா எப்படி செய்வது என்று பதிவு எழுதுபவர். ரஜினிக்கு சிவாஜியில் மேகப் போடுவது போல் இவர் செய்யும் பதார்த்தகங்களுக்கு இவர் போடும் மேகப்புக்கு(நிச்சயம் கொத்தமல்லி, மிளகாய் மிதக்கும்) நிறைய ரசிகர்கள் உண்டு. சமிபகாலமாக இவர் பதிவைவிட பின்னூட்டத்தில் நடக்கும் 20-20 மேட்ச் படிப்பதற்கு நன்னா இருக்கு. பெண்களிடம் இவர் ஒரு ஓட்டு கூட வாங்காமல் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


3. காயத்ரி : பாலைத் திணை என்பதை
காதலும் காதல் சார்ந்த இடமும், கவிதைகளும் கவிதை சார்ந்த இடமும்,வலைப்பதிவுக் காதலர்களும் காதலர் சார்ந்த இடமும், என்றெல்லாம் இலக்கணத்தை மாற்றிய பதிவு.
ஒருவர்கூட, "கவிதை புரியவில்லையே" என்று சொன்னதில்லை என்பது கூடுதம் சிறப்பு. :)


4. ஆசிப் - அப்துல் ஜப்பாரின் மகன், சிறுகதை எழுத்தாளர், கவிப் பகைவன், இலக்கியவாதி, அமீரக தமிழர்களை ஒன்றிணைப்பது(!), வலைப்பதிவர் மாநாடு நடத்துவது என்று பல அவதாரங்கள் இருந்தாலும், பெண்ணியக் கருத்துகளுக்காக பெண்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் பதிவாக திகழ்கிறது!.

ஐந்தாம் இடதுக்கு இருவர்:

5.1தருமி - நாத்திகப் பதிவுகளால் திரும்பிப் பார்க்கவைத்தவர், ஆன்மிகம், இறைவழிபாடு, ஜோசியம், மூடநம்பிக்கைகள் எல்லாவற்றையும் பதிவுலகத்தை நோக்கிக் கேள்விகேட்டுக்கொண்டிருந்தவர், சாலை வரத்து இடைஞ்சல்கள் முதல் இயந்தரமயமாக்கவேண்டிய மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுவரை அரசையும் கேள்விகேட்கும் அளவு வளர்ந்திருக்கிறார். எழுத்திற்காகவோ அல்லது எண்ணங்களை வலிக்காமல் சொல்லும் பாங்கிற்காகவோ ரசிகர்களை வைத்திருக்கும் மதுரைக்காரர்.

5.2 இலவசம் : மாசத்துக்கு 5-6 பதிவு எழுதினாலும் சளைக்காமல் எல்லோருக்கும்

வணக்கம்,

ஏன் இன்னும் இதை படிக்கலை ?
படிக்க: http://elavasam.blogspot.com/
வந்து கருத்து கந்தசாமிகளா ஆகுங்கப்பா!

அன்புடன்
இலவசம்


என்று எல்லோரையும் அன்புடன் பழிவாங்கும் மின்னஞ்சல். இவர் பதிவுகளைவிட இவர் மெயிலை படித்தவர்கள் தான் அதிகமாம். அப்படியா ?


எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Read More...

பிரபாகரன் மரணமா?

இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார். இந்த செய்தி பல்வேறு பத்திரிகை களின் இணைய தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியான போது பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

ஆனால் விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களான "புதினம்', "தமிழ் நெட்' ஆகியவற்றில் இது பற்றிய செய்தியோ, மறுப்போ இல்லை. இலங்கை ராணுவம் வடக்குப் பகுதியில் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது.

அண்மையில் நடந்த இலங்கை விமானப்படை தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். அதற்கு பின் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகள் மீது கடந்த நவம்பர் மாதம் நடந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளியாயின.

அவர் நீரிழிவு நோயாளி என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க இந்தியா அல்லது வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல புலிகள் முயற்சி செய்ததாக செய்தி வெளியானது. ஆனால், இந்த செய்தியை அப்போது விடுதலைப்புலிகள் இயக்கம் மறுத்தது. தற்போது இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோடபாயா ராஜபக்ஷா, அரசு ஆதரவுடன் செயல்பட்டு வரும் "சண்டே அப்சர்வர்' பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

நவம்பர் 26ம் தேதி புலிகள் பதுங்கு குழிகள் மீது நடந்த தாக்குதலில், பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். "இந்த தாக்குதலில் பிரபாகரன் படுகாயம் அடைந்திருக்க வேண்டும். அல்லது கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று எங்கள் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது' என்று கூறினார்.

இந்த தகவலை விடுதலைப்புலிகள் நீண்ட நாட்களுக்கு வெளியிட மாட்டார்கள் என்றும் அவர்கூறினார். 26ம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு மறுநாள் நடைபெற்ற மாவீரர் தினத்தில் பிரபாகரன் உரையாற்றிய தாக விடுதலைப்புலிகள் தரப்பில் படங்கள் வெளியிடப்பட்டது.

இது போன்ற படங்களை விடுதலைப்புலிகள் வெளியிடலாம். ஆனால், அவர் உயிரோடு இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த படங்கள் அமையவில்லை. பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டால் தான் அவர் உயிரோடு இருக்கிறார் என்று கூற முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.

சண்டே அப்சர்வர் பத்திரிகையில் வெளியான இலங்கை பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ஷேவின் பேட்டியின் மற்றொரு பகுதியை புலிகளுக்கு சொந்தமான "தமிழ் நெட்' இணைய தளம் வெளியிட்டுள்ளது.

ஆனால், பிரபாகரன் கொல்லப்பட்டி ருக்கலாம் என்று அதே பத்திரிகையில் வெளியான பேட்டிக்கு அந்த இணைய தளம் மறுப்பு எதையும் வெளியிடவில்லை. இதனிடையே இலங்கை ராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகா கொடுத்துள்ள பேட்டியில், இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள அனைத்து புலிகள் முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது விடுதலைப் புலிகளிடம் 3 ஆயிரம் வீரர்கள் தான் உள்ளனர். 500 விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர். தற்போது புலிகளின் பலம் பாதியாக குறைந்து விட்டது என்று பொன்சேகா கூறினார்.

பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுவது உண்மையானால், இது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முடிவாக இருக்குமா? என்று அவரிடம் கேட்டபோது, படிப்படியாக அந்த இயக்கம் அழிக்கப்பட்டு விடும் என்று இலங்கை ராணுவ தளபதி கூறினார்.

இதற்கிடையே தங்கள் வசம்முள்ள பகுதி மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலை முறியடிக்கப்பட்டு விட்டதாக புலிகள் கூறியுள்ளனர்.

20 புலிகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுவதையும் அவர்கள் மறுத்தனர்.
வடக்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள பாரப்பகந்தல் கிராமத்தின் ஒரு பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், பாரப்பகந்தல் கிராமத்தைச்சுற்றி இலங்கை ராணுவம் தாக்குதலை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

இரு முனைகளில் அவர்களின் தாக்குதலை முறியடித்து விரட்டி விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். சில பகுதிகளில் சண்டை நடை பெற்று வருவதாகவும், 20 இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்ட தாகவும், 40 பேர் காயம் அடைந்த தாகவும் அவர் கூறினார்.
புலிகள் தரப்பில் 3 பேரே உயிரிழந்ததாகவும் அவர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
(செய்தி: மாலலமலர் )

Read More...

Saturday, December 29, 2007

நம்பிக்கை தரும், இந்த வெற்றி !

மோடியின் வெற்றி பற்றி துக்ளக் தலையங்கம் ( நன்றி துக்ளக் )


நல்லது நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள், ஒரு முதல்வரினுடைய நேர்மையின் வெற்றி; அவருடைய நிர்வாகத் திறனின் வெற்றி. இம்மாதிரி இந்நாட்டில் அடிக்கடி நடப்பதில்லை; இம்முறை இது நடந்திருக்கிறது என்பது திருப்திக்குரிய விஷயம்.

எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்து, மோடியின் தலைமையில் பா.ஜ.க.
இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்தான், இந்த வெற்றியின் முக்கியத்துவம் நமக்குப் புரியும். "சென்ற இடமெல்லாம், பெரும் கூட்டங்களைச் சந்தித்து, பெண்களை எல்லாம் கவர்ந்துவிட்டார்' என்று கூறப்பட்ட
– சோனியா காந்தியின் கடுமையான தாக்குதல்கள்; மோடி மீண்டும் ஆட்சிக்கு
வந்தால், அந்த "மரணத்தின் வியாபாரி' கையில் குஜராத் சிக்கிவிடும் என்று அவர் விடுத்த மிரட்டல்கள்; மிகவும் நல்லவர் என்று எல்லோராலும் அறியப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் தீவிர பிரச்சாரம்; மோடியையும், பா.ஜ.க.வையும் பொய்யர்கள், ஏமாற்றுப் பேர் வழிகள் என்று அந்த நல்லவரே கூறிவிட்ட சூழ்நிலை; பா.ஜ.க.வில் மோடியின் நிர்வாகத்தில் தங்களுக்குப் பயன் கிட்டவில்லை என்பதால், அக்கட்சியை விட்டு வெளியேறி, காங்கிரஸ் வேட்பாளர்களாகவும், சுயேச்சைகளாகவும்
போட்டியிட்டு பா.ஜ.க.வின் ஓட்டுக்களைப் பறித்துவிட முனைந்த, பா.ஜ.க. அதிருப்தியாளர்களின் ஓட்டுப் பிளவு முயற்சிகள்; கோத்ரா ரயில் எரிப்பைத்
தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரங்களும், நிகழ்ந்த கொலைகளும் மோடியினால் நடத்தப்பட்டவை என்று சித்தரிக்க முனைந்த, தெஹல்கா தயாரிப்பு வீடியோ
காட்சிகள்; அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, "மோடி கொலைகாரர் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது' – என்று தீர்ப்பளித்து, அவரை தண்டிக்குமாறு குஜராத் வாக்காளர்களை வற்புறுத்திய டெலிவிஷன் சேனல்களின் அவதூறுகள்; "மோடி வெறியர், பா.ஜ.க. மதவெறிக் கட்சி' என்றெல்லாம் கூறி, குஜராத் தேர்தலை
காங்கிரஸுக்குச் சாதகமாக்கி விட, வரிந்து கட்டிக்கொண்டு, தேர்தல் பிரச்சாரத்தில்
இறங்கிய பத்திரிகை உலகம்; பா.ஜ.க.விலேயே இருந்துகொண்டு, மோடியைத் தேர்தலில் வீழ்த்தி, பா.ஜ.க.வை தோற்கடித்து, தன்னுடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சித்த கேசுபாய் பட்டேலின் துரோகம்; அவரும் அவருடைய ஆதரவாளர்களும் உருவாக்கிய ஜாதி ரீதியான பிரச்சாரம்... என்ற பன்முனைத் தாக்குதலைச் சந்தித்து, மோடியும் அவர் தலைமையில் பா.ஜ.க.வும் கண்டுள்ள
வெற்றி இது.

எதனால் இது சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு; அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண் ஜேட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கும் மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத்தன்மை; அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் – இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்.

ஒரு அதிசயிக்கத்தக்க, பிரமிப்பைத் தரக் கூடிய விஷயம் இந்தத் தேர்தலில்
நடந்திருக்கிறது. மீண்டும் முதல்வர் பதவி ஏற்பதற்காக தேர்தல் களத்தில்
இறங்கியுள்ள, ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க்கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது. வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்தும்
– அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற
அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும், மிகக் கடுமையாக முனைந்தும் – ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர் மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில், ஒரு மாநில முதல்வர் இப்படிப்பட்ட நேர்மையாளராகத் திகழ முடியும் – என்று நரேந்திர மோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி.

சாதாரணமாக நேர்மையாளராகத் திகழ்பவர்கள், செயல் முனைப்பில் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள் என்பது, நம் நாட்டு அரசியலில் உள்ள ஒரு பலவீனம். ஆனால் மோடி இப்படிப்பட்டவரல்ல; அவருடைய செயல் திறன் வியக்கத்தக்கதாக இருக்கிறது. அரசியல் ரீதியாக, எதிர்ப்பைச் சந்திப்பதிலும் சரி; நிர்வாக ரீதியாக துணிவுடனும், உறுதியுடனும் செயல்படுவதிலும் சரி, அவர் புதிய அத்தியாயங்களையே எழுதி வருகிறார்.

அவருடைய நிர்வாகத் திறனையும் உறுதியையும் காட்ட ஒரு உதாரணம் :
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பதை அவர் நிறுத்த முனைந்தபோது, பெரும் எதிர்ப்புக் கிளம்பியது; ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட அவரைக் கடுமையாக எதிர்த்தனர். மோடி, விவசாயிகளிடம், "இலவச மின்சாரம் தந்தால் – அது ஒவ்வொரு தினமும், மின்சார
விநியோகத்திற்கு வசதியான நேரத்தில்தான் உங்களுக்குக் கிடைக்கும்; மாறாக நீங்கள் கட்டணம் செலுத்தி மின்சாரம் பெறுவதாக இருந்தால், அது ஒவ்வொரு தினமும் 24 மணி நேரமும் கிட்டும். எது வேண்டும்? எப்போது வரும், எப்போது போகும் என்று சொல்ல முடியாத இலவச மின்சாரமா? அல்லது எப்போதும் வரும் என்கிற, கட்டணம் செலுத்திப் பெறப்படுகிற மின்சாரமா?' என்று கேட்டார்.

விவசாயிகள், கட்டண மின்சாரத்தையே ஏற்றார்கள்; இலவச மின்சாரம் போயிற்று. அவர்களுக்கு, 24 மணி நேர மின்சார சப்ளை கிட்டியது; ஆனால் சிலர் மின்சாரத் திருட்டில் இறங்கினார்கள். பார்த்தார் மோடி. மின்சாரம் திருடிய ஒரு லட்சம்
விவசாயிகளுக்கு, மின்சார சப்ளை ரத்தாகியது. "ஓட்டு வங்கி' என்று நினைத்து,
அஞ்சி, விவசாயிகள் விஷயத்தில் "வம்பு வேண்டாம்' என்று ஒதுங்கிவிடுகிற
நிர்வாகங்களையே எல்லா மாநிலங்களிலும் கொண்ட நமது நாட்டில் – குஜராத்தில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, மின்சார திருட்டு காரணமாக, மின்சார சப்ளை நின்றது. அவர்கள் தவறை உணர்ந்தனர். நிலைமை சீரடைந்தது. இலவச மின்சாரம் போயிற்று; விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சாரம் கிட்டியது. விவசாயிகளுக்குத் திருப்தி; நிர்வாகத்திற்கு வெற்றி. இது மோடியின், நிர்வாக பாணி.

இம்மாதிரி நிர்வாகம் இருப்பதால்தான் – "குஜராத் மிக நன்றாகச் செயல்படுகிற நிர்வாகம் உள்ள மாநிலம்; நிதி நிர்வாகத்திலும் சரி, நீர் நிர்வாகத்திலும் சரி, சமூகத்தில் செய்கிற பணிகளிலும் சரி, முதன்மையாக நிற்கிற மாநிலம் குஜராத்' என்று திட்டக்கமிஷனே – மத்திய காங்கிரஸ் அரசின் கீழ் இயங்குகிற திட்டக்கமிஷனே
– தனது அறிக்கையில் கூறியது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை – சோனியா காந்தியின் தலைமையில் இயங்குவது; மத்திய அமைச்சர்கள் சிலரை உறுப்பினர்களாகக் கொண்டது. அந்த அமைப்பினால் நியமிக்கப்பட்ட குழு, குஜராத்தை "இந்தியாவின் முதல் மாநிலம்' என்று
தேர்ந்தெடுத்தது. "பொருளாதார சுதந்திரம், ஊழலின்மை, அரசின் குறுக்கீடு இல்லாமை, சட்டம் – ஒழுங்கு, மக்கள் வாழ்விற்குப் பாதுகாப்பான சூழ்நிலை, வேலை நிறுத்தத்தினால் தொழில் நஷ்டம் இல்லாமை – ஆகிய பல அம்சங்களிலும், மிக நன்றாகச் செயல்பட்டு, குஜராத் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது' – என்று அந்த அமைப்பு கூறியது.

"ஹிந்துத்துவம் பேசுகிறார்' என்று வர்ணித்து மோடியை வீழ்த்த காங்கிரஸ் முனைந்து வந்தது; அதுவும் பலிக்கவில்லை. ஹிந்துத்துவத்தில் தான் கொண்டுள்ள நம்பிக்கையை மோடி மறைத்ததில்லை; ஹிந்துத்துவம் என்பது, மதரீதியானது அல்ல – என்று
சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது; மக்கள் மனதிலும் இது ஒரு மதவெறி நிலையாகக் காணப்படவில்லை.

நிர்வாகத்திலும், நேர்மையிலும் மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக மோடி திகழ்கிறார். அப்படிப்பட்டவர் பெற்றிருக்கிற வெற்றி, நேர்மைக்குக் கிடைத்துள்ள வெற்றி.

"நேர்மையாளர்களுக்கும், திறமையாளர்களுக்கும் இனி இடமே கிடையாதா?' என்று நினைத்து மக்கள் விரக்தியுறுகிற வகையில் போய்க்கொண்டிருக்கிற நம் நாட்டு
அரசியலில் – மோடி பெற்றிருக்கிற வெற்றி, மக்கள் மனதில் நம்பிக்கை துளிர்க்க வழிசெய்யும்.


Read More...

Friday, December 28, 2007

இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்: பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது

இமாச்சல பிரதேச தேர்தலுடன் சேர்த்து நடந்த குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றள்ளது!


காங்கிரஸ் ஆளும் மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 14-ந்தேதியும் மீதி உள்ள 65 தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதியும் தேர்தல் நடந்தது. 336 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 67 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

இங்கு காங்கிரஸ்- பாரதீய ஜனதா இடையே நேரடி போட்டி நிலவியது. இன்று ஓட்டு எண்ணிக்கை 41 மையங்களில் நடந்தது. 5 ஆயிரம் பேர் இதற்கான பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. சிறிது நேரத்திலேயே முன்னணி நிலவரங்கள் தெரியவந்தன.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பாரதீய ஜனதா 35 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் முன்னணியில் இருந்தன. இதனால் பாரதீய ஜனதா தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது.

பாரதீய ஜனதா முதல்- மந்திரி வேட்பாளராக பிரேம் குமார்துமால் அறிவிக்கப்பட்டு இருந்தார். இவர் போட்டியிட்ட பாம்சன் தொகுதியில் முன்னணியில் இருக்கிறார். ரோக்கு தொகுதியில் போட்டி யிட்ட முதல்- மந்திரி வீரபத் திரசிங்கும் முன்னணியில் உள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் இங்கு காங்கிரஸ் 43 இடங்களிலும் பாரதீய ஜனதா 16 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

Read More...

நாங்க தான் செய்தோம் - அல்கொய்தா

பேநசீர் பூட்டோ படுகொலை நாங்க தான் செய்தோம் என்று அல்கொய்தா பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ராவல்பிண்டி நகரில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீரின் கடைசி நிமிடங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டு உள்ளது.



* லியாகத்அலி பாக். பகுதியில் மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

* அவர் தனது பேச்சை முடித்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்புவதற்காக 5-30 மணிக்கு காரில் ஏறினார்.

* அப்போது 2 தீவிரவாதிகள் பாய்ந்து வந்து அவரை நோக்கி ஏ.கே.-47 துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பெனாசிரின் கழுத்து, தலை, மார்பு ஆகிய இடங்களில் குண்டுகள் பாய்ந்தன.

* அந்த சமயத்தில் அந்த இருவரில் மனித வெடிகுண்டு தீவிரவாதியாக வந்த நபர் தனது உடலில் கட்டி இருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.

* குண்டு வெடித்த அதிர்ச்சியில் பெனாசிரின் கார் பலத்த சேதம் அடைந்து திரும்பியது. மேலும் குண்டுகள் வெடிக்கலாம் என்ற பயத்தில் சுமார் 10 நிமிடம் பெனாசிரின் கார் அருகே யாரும் நெருங்கவில்லை.

* பின்னர் பெனாசிர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

* அங்கு போய்ச் சேர்ந்ததும் டாக்டர்கள் அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றனர்.

* அங்கு பெனாசிரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உயிர் பிரிந்து விட்டதாக 6-16 மணிக்கு அறிவித்தனர்.

* துப்பாக்கியால் சுடப்பட்ட 40 நிமிடத்தில் பெனாசிர் இறந்து விட்டார்.

Read More...

Thursday, December 27, 2007

FLASH: பெனசிர் புட்டோ சுட்டு கொலை

பெனசிர் புட்டோ சுட்டு கொலை

பாகிஸ்தானில் பெனசிர் புட்டோ சென்ற பேரணியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாக் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான பெனசிர் புட்டோ கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. . ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசி முடித்து விட்டு திரும்பிய சில மணி துளிகளில் இந்த குண்டு வெடிப்பு நிகழந்தது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து கிடைத்த ‌தகவலின்படி பெனசிர் சுட்டு கொல்லப்பட்டதாக பாக்., டி. வி., தெரிவிக்கிறது. முதலில் லேசான காயம் ஏற்பட்டதாக இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என கூறப்பட்டது. ஆனால் அவர் சுட்டு கொல்லப்பட்டதாக பாக்., மக்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதே ரேநத்தில் நவாஸ் ஷெரீப் பங்கேற்ற பேரணியில் சென்ற அவரது ஆதரவாளர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெனசிருக்கு கழுத்து பகுதியில் துப்பாக்கி சூடு விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. ராவல்பிண்டி அருகே பிரசா கூட்டத்தில் பேசி விட்டு புறப்பட்டது.ம் 50 மீட்டர் தூரம் சென்ற பின்னர் பெரும் சப்தத்துடன் குண்டு வெடித்ததாக பாக்., மக்கள் கட்சி பிரமுகர் தெரிவித்தார். பரக்கத்துல்லா கூறுகையில் பெனசிர் புறப்பட்டதும் குண்டு வெடித்தது. ஆனால் அவர் தப்பி விட்டார் என நினைத்தோம் தொடர்ந்து அவர் காயமடைந்ததாக கூறப்பட்டதும் பெரும் பதட்டம் அடைந்தோம் என்றார். ராவல்பிண்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவரது கழுத்து பகுதியில் துப்பாக்கியால் மர்ம நபர் சுட்டதாக ‌கூறப்படுகிறது.


Read More...

Wednesday, December 26, 2007

மீண்டும் "இட்லிவடை" - பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல!!

சம்பவங்கள் நிறைந்த அக்டோபர் 26-- வந்த மெயிலை என் அஜாக்கிரதையால் க்ளிக் செய்து இட்லிவடை அகவுண்ட் பறிபோனது நினைவிருக்கலாம். வலைப்பதிவை மீட்டுவிட்டேன். அது எப்படி முடியும் ? இது நானே செய்த ஒரு செட்டப் என்று சிலர் புழுதியை கிளப்பிவிட்டார்கள். சிலர் ஏன் முடியாது என்று ரிசர்ச் செய்தி பதிவு போட்டார்கள்.

என் மெயில் அகவுண்டை ஹாக் செய்த மகானுபாவர்கள் Secondary email, Secret Question இன்னும் பிற முக்கியமான விஷயங்களை மாற்றிவிட்டார்கள் அல்லது அழித்துவிட்டார்கள்.

கூகிளிடம் கேட்டதற்கு இந்த விஷயம் எல்லாம் இல்லை என்றால் கிடைப்பது கஷ்டம் என்றார்கள். விடவில்லை, எனக்குத் தெரிந்த தகவல்களை - secondary mailல் இருந்த சில ஆதாரங்களுடன்-- அவர்களிடம் சொல்லி திரும்பவும் கேட்டேன். தெரிந்த நண்பர்கள் உதவி செய்தார்கள்.

இன்று, இந்த டிசம்பர் 26ல் அந்தச் சரித்திர முக்கியத்துவமான மெயில் கூகிளிடமிருந்து வந்தது. "இந்தாப்பா உன் மின்னஞ்சல், இனிமேலாவது ஜாக்கிரதையா இரு!" என்று அவர்களிடமிருந்து மெயில் வந்தவுடன், புல்லரித்து, திறந்து, என் தகவல்களை எல்லாம் ஒரு முறை சரிபார்த்துவிட்டு, அதில் ஹாக் செய்தவர் என்ன என்ன வில்லங்கம் செய்திருக்கிறார் என்று பார்த்தேன். புத்திசாலித்தனமாக, தான் என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் ஒரு தடயம் கூட விட்டு வைக்காமல் உடனுக்குடன் அழித்திருக்கிறார்....., ஒரு தடயம் தவிர! :)

அந்தத் தடயத்தை வைத்து யார் என்ற விவரத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கண்டுபிடிக்கப்பட்ட பெயரைக் கேட்டா.....

....தமிழ் வலைப்பதிவே சும்மா அதிருமில்ல!!!!

Read More...

Tuesday, December 25, 2007

அதிமுக, தேமுதிக மோதலுக்கு திமுக தான் காரணம் - விஜயகாந்த்

அதிமுக, தேமுதிக மோதலுக்கு திமுக தான் காரணம். நல்ல கூத்து

மதுரையில் தேமுதிகவும், அதிமுகவும் நேற்று மோதிக் கொண்ட சம்பவத்திற்கு திமுகவின் சதி செயல்தான் காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
.
தேமுதிகவின் வளர்ச்சியை கண்டு அஞ்சியும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விடுவோமோ என்ற பயத்திலும் எங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று இந்த சதி செயல் நடை பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரையில் எங்கள் கட்சி யினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் முழுக்க முழுக்க திமுகவின் சதி வேலையாகும். பெரியார் மற்றும் எம்ஜிஆரின் நினைவு நாள் ஒன்றாக வருவதால் இவர்களுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இதில் கலந்து கொண்டு அமைதியாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

ஆனால் மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தேமுதிகவினரையும், அதிமுக வினரையும் ஒரே நேரத்தில் கலந்து கொள்ள செய்து மோதலை உண்டாக்கியிருக்கிறார்கள்.

மாலை அணிவிப்பதற்கு போதுமான அளவு நேரம் ஒதுக்கீடு செய்திருந்தால், இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது. வேண்டுமென்றே இரு அரசியல் கட்சிகளையும் மோத விட்டு காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக அதிமுகவினர் புகார் கொடுத் திருந்தால், தேமுதிகவினரை கைது செய்திருக்கலாம் அல்லது தேமுதிக வினர் புகார் செய்திருந்தால் அதிமுக வினரை கைது செய்திருக்கலாம்.

ஆனால் இரண்டு கட்சிகளை சேர்ந்த யாருமே புகார் செய்யாத போதும் காவல்துறையினர் சிலரை கைது செய்திருக்கிறார்கள். பொதுமக்கள் தரப்பில் தனிப்பட்ட சிலர் புகார் தந்ததாக காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள். அந்த தனிப்பட்ட நபர்கள் யார் என்பதை காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எந்த இடத்திலும் பிரச்சனை இல்லை. ஆனால் மதுரையில் மட்டும் பிரச்சனை என்றால், அதில் தான் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

முதலில் கல்வீசியது யார் என்பதை போலீசார் கண்டு பிடிக்க வேண்டும். அவர்களை கண்டுபிடித்தால், பிரச்சனையில் ஈடுபட்டது யார் என்ற உண்மை தெரியவரும். தேமுதிக வளர்ந்து வரும் கட்சி. இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். எனவே திட்டமிட்டே எங்களுக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்று மதுரை மோதல் சம்பவத்தை திமுகவினர் நடத்தியிருக்கிறார்கள் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.

தேமுதிக வளர்ந்து வருகிறது என்ற பயம் ஒரு பக்கம்; காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்களோ என்ற பயம் மறுபக்கம். அதனால் தேமுதிகவை ஆளுங்கட்சியினர் அழிக்க பார்க்கிறார்கள்.

மதுரை சம்பவத்தில் தேமுதிகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக தேமுதிக வினரை கைது செய்தது கண்டனத்திற்குரியது என்றார் விஜயகாந்த்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
குஜராத் தேர்தல் வெற்றி என்பது நரேந்திர மோடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அவர் நல்லதை செய்தார்; அதனால் வெற்றி பெற்றார். சொன்னதை அவர் செய்தார்; அதனால் அவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

பொதுவாக கருத்துக்கணிப்புகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த வகையில் லயோலா கருத்துக்கணிப்பு முடிவுகளையும் நான் ஏற்கவில்லை. கிறிஸ்துமஸ் விழாவை நாங்கள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி கொண்டாடி வருகிறோம். பக்ரித் பண்டிகையின் போதும் நாங்கள் ஏழைகளுக்கு இறைச்சி கொடுத்தோம். அதேபோல கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டும் நாங்கள் கேக் மற்றும் பிரியாணி வழங்கி வருகிறோம்.

இதேபோல தமிழர் திருநாளான பொங்கல் விழாவையும் கொண்டாட உள்ளோம். இது தொடரும். இதுபோல செய்தால், வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களிடையே சகோதரத்துவ உணர்வு ஏற்படும். அதற்கான அடித்தளத்தை தேமுதிக ஏற்படுத்தியுள்ளது கூட்டணி குறித்து கேட்கிறீர்கள். என்னுடைய தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன்தான் தேமுதிக கூட்டணி வைத்துக் கொள்ளும்.

முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி அவராகவே எங்கள் கட்சிக்கு வந்தார். இப்போது அவராகவே சென்றுவிட்டார். மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார் விஜயகாந்த்.

( செய்தி: மாலைமலர் )

Read More...

நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா

நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். கலைஞர் என்ன நினைப்பார் ?

குஜராத் மாநில முதல்-மந்திரியாக நரேந்திரமோடி இன்று (செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கிறார். ஆமதாபாத் நகரில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் பகல் 12-40 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

இந்த பதவி ஏற்பு விழாவில் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இந்திய தேசிய லோக்தள தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக நேற்று ஆமதாபாத் நகரில் குஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

Read More...

அனைத்திற்கும் அன்பே அடிப்படை - கலைஞர் கிறிஸ்துமஸ வாழ்த்து

தீபாவளி வாழ்த்து சொல்லாத கலைஞர் கிறிஸ்துமஸ் வாழ்த்து மட்டும் சொல்லுவார். இந்த வருஷம் சொன்ன கிறிஸ்துமஸ் வாழ்த்து. சாண்டா கிளாஸ் அவருக்கு பை நிறைய ஓட்டு போடுவாராக.


தமிழகம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் என் இதயம் கனிந்த இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

தமிழகத்தில் வாழும் அனைத்துச் சமுதாய மக்களும் இணக்கமுடன்கூடி இன்பவாழ்வு காண இயன்ற அனைத்தையும் நிறைவேற்றிட உறுதிபூண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிவரும் தமிழக அரசு இந்த ஆண்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுபோலவே, கிறிஸ்தவர்களுக்கும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிச் சிறுபான்மைச் சமுதாயத்தின் சீரிய நண்பனாகத் திகழ்கிறது.

நல்வாழ்த்துக்கள்

"அனைத்திற்கும் அன்பே அடிப்படை'' என்ற ஏசுநாதரின் தொண்டுள்ளம் காரணமாக, "கிறிஸ்தவம்'' என்ற சொல்லில் எளிமை, மன்னிக்கும் குணம், ஈகை, பரோபகாரம் போன்றவை அடங்கியிருப்பதாகக் கூறுவர். அந்த வகையில் ஏசுபெருமான், "அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்; உன்னைத் தூற்றுபவர்களையும் போற்று'' என்று கூறி மக்களிடம் சகிப்புத் தன்மையை-அன்பை வளர்க்கிறார்.

ஏசுபெருமான் உரைத்த இந்த நெறிபோற்றி அன்பர்கள், நண்பர்கள் மீது மட்டுமல்லாமல், காழ்ப்புணர்வும், அகங்காரமும் கொண்டு நம்மைக் காய்பவர்கள் மீதும் அன்பைப் பொழிவோம்! சமுதாயத்தில் வேற்றுமைகளைக் களைவோம்! அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்போம்!

ஏழை-எளியோர், இயலாதோர், நலிந்தோர், மெலிந்தோர் என எல்லோரும் ஏற்றம்பெற இடையறாது உழைப்போம்! வளம் காண்போம் என இந்த இனிய கிறிஸ்துமஸ் திருநாளில் சூளுரைத்துச் செயல்படுவோமாக!

Read More...

Sunday, December 23, 2007

மோடியின் வெற்றி

மோடியின் வெற்றி யாரும் எதிர்பார்க்காதது. காங்கிரஸ் கட்சியை காட்டிலும் மரண அடி வாங்கியது மீடியாக்கள் தான். அதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். எதிர்க்கட்சியின் பொய் பிரசாரம், இந்துத்துவா என்று ஜல்லி அடித்தாலும், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மோடி பாடுபட்டு வந்ததால் தான் மக்கள் இந்த தீர்ப்பை தந்துள்ளார்கள். மற்ற மாநில முதல்வர்கள் இவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கடந்த 50 ஆண்டுகளில் பெரிசாக ஒன்றும் செய்யவில்லை. நம் நாட்டுக்கு இவரை போல ஒருவர் தான் பிரதமராக வேண்டும்.

வெற்றிக்கு பின் தொண்டர்களிடயே பேசிய கடைசி வார்த்தை "பாரத் மாதாக்கி ஜெ". இந்த ஒரு காரணம் போதும் இவர் பிரதமர் ஆவதற்கு !

Read More...

குஜராத் தேர்தல் முடிவுகள்


மூன்றாவது முறையாக நரேந்திர மோடி முதலமைச்சர்

வரும் 27ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் என்று பிஜேபி மூத்த தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளவருமான எல் கே அத்வானி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.



குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று காலை நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தற்காக தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டதாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றையும் ஜெயலலிதா அனுப்பியிருப்பதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Read More...

Saturday, December 22, 2007

தே.மு.தி.க. தலைமையில் புதிய கூட்டணி- விஜயகாந்த் அறிவிப்பு

நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சியை தொடங்கியபோது எங்கள் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். ஆனால் இப் போது கூட்டணி அமைக்க தயார் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றம், சட்ட மன்றம் எந்த தேர்தல் வந் தாலும் தனித்து போட்டியிடவே நாங்கள் விரும்புகிறோம். இருந் தாலும் கூட்டணிக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

ஆனால் இந்த கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை ஏற்போம். தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத கூட்டணியாக இது இருக்கும். ஜாதிக்கட்சி, மதவாத கட்சிகளுக்கு எங்கள் கூட்டணி யில் இடம் கிடையாது. எந்த கட்சிகள் வேண்டுமானாலும் எங்களுடன் வரலாம். ஆனால் அவர்களை சேர்ப்பதாப இல்லையாப என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்.

காங்கிரசுடன் கூட்டணியா என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் தான் அதுபற்றி முடிவு செய் வோம்.

பொது பிரச்சினைக்காக மற்ற கட்சிகளுடன் சேர்ந்து போராட தயார். ஆனால் பிரச்சினை சரியானதாக இருக்கவேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து கொண்டு சேலம் ரெயில்வே கோட்ட பிரச்சினை யில் தி.மு.க. போராடியது போல இருக்கக்கூடாது.

நாங்கள் தி.மு.க. எதிர்ப்பு கட்சியாக செயல்படவில்லை. அந்த கட்சி ஆட்சியில் இருப்ப தால் அப்படி தெரிகிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவை செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சி கள் கடமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். அதே நேரத்தில் நல்லதை செய்யும் போது பாராட்டுகிறோம்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்? துதான் எங்கள் கட்சி கொள்கை. ஊழலை ஒழிக் கவே முடியாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது ஆளும் தலைமையை பொறுத்தது. ஆட்சியாளர்கள் தங்கள் நிர்வாகத்தை ஊழல் இல்லாமல் நடத்தினால் எல்லா இடங்களிலும் சரியாக நடக்கும்.

வருமான வரி சோதனை மூலமோ அல்லது திருமண மண்டபத்தை இடித்தது மூலமோ எனது கல்லூரிக்கு தொல்லை கொடுப்பது மூலமோ எனது ஊழல் எதிர்ப்பு பிரசா ரத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது.

தே.மு.தி.க. திருப்தியான முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. பெண்கள், இளைஞர் களுடன் படித்தவர்களும் எங் களுக்கு ஆதரவாக உள்ளனர். பல இடங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருக்கும் எங்கள் கவுன்சிலர்கள் சிறப் பாக செயல்படுகின்றனர்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறானது அல்ல. இது ஜனநாயக நாடு. இங்கு யாரையும் மற்றவர்களிடம் இருந்து தனிமை படுத்த முடி யாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.

Read More...

"பயம்' எனது பிறப்பிலேயே கிடையாது - ராமதாஸ்

"பயம்' எனது பிறப்பிலேயே கிடையாது. என் ரத்தத்திலும் கிடையாது. சிலரைப் பற்றிய கேள்விகளை நான் தவிர்ப்பதற்குக் காரணம், நான் அவர்களைப் பற்றி பேசினால், தெருவில் போகிற ஒரு பைத்தியக்காரனைக் கூப்பிட்டு, அதற்குப் பதில் சொல்ல வைப்பர். இந்த அமைப்பைச் சார்ந்த இவர், ராமதாசுக்கு பதிலடின்னு பத்திரிகையில் போடுவாங்க. அந்த வாய்ப்பை ஏன் கொடுக்கணும்?

'மானாட மயிலாடங்கிற நிகழ்ச்சி ஒண்ணு நடக்குது. கூடவே 'மார்பாட' என்கிற வார்த்தையையும் சேர்த்துப் போட்டுக்கலாம்னு... கஷ்டம்!''



மற்ற கேள்வி (நல்ல) பதில்கள் கீழே...

''அரசாங்கத்தின் திட் டங்கள் எதுவும் மக்களைச் சென்றடையவிடாமல் தடுக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன?''

''தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து பண்ணியபோது, அதை ஆதரித்தோம். மற்றபடி, நாங்கள் பாராட்டுகிற அளவுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? தேசியப் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 26 சதவிகிதம். இதில் ஒரு சென்ட் நிலம் வைத்திருப்பவர்களும் உண்டு. ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்று சொன்னார்களே, கொடுத்தார்களா?

துணை நகரம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என விவசாயி களிடம் இருக்கிற நிலங்களையும் பிடுங்குகிற வேலையைச் செய்வதை எப்படி அனுமதிக்க முடியும்? 200 ஏக்கர், 300 ஏக்கரில் பொதுத் துறை நிறுவனங்களே மின் நிலையங்களை அமைக்கும்போது, கடலூ ரில் அமைய உள்ள தனியார் மின் நிலையத்துக்கு ஏன் 1,300 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்க்க வேண்டும் என்று கேட்கிறேன். மக்களிடம் இருக்கிற கொஞ்சநஞ்ச நிலங்களையும் பிடுங்கிவிடத் துடிக்கிற தனியார் முதலாளிகளுக்கு, இந்த அரசு ஏன் துணை போகிறது? இதை எல்லாம் மறைக்க கவர்ச்சிகரமான இலவசங்களை அளிக்கிறார்கள். மக்களுக்குத் தேவை, இலவசங்கள் அல்ல. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சுயமரியாதை போன்ற அடிப்படை உரிமைகள்தான். ஆனால், அது எதுவுமே இங்கே நடக்கவில்லையே!

பாரெங்கும் 'பார்'! இதுதான் இவர்களின் சாதனை! விலை வாசி, சிமென்ட் விலை உயர்வு, அரிசிக் கடத்தல், பண்பாட்டுச் சீரழிவு என என்னால் ஏராள மாகப் பட்டியிலிட முடியும். மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்ட, இவர் களிடம் தெளிவான கொள்கைகளே இல்லை என்பதுதான் என் வருத்தம்!''

''ரிலையன்ஸ் கடைகளை மூடவேண்டும். இல்லாவிட்டால், பா.ம.க. நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் என அறிவித்தீர்கள். ஆனால், ரிலையன்ஸ் தமிழகமெங்கும் கடை விரித்துவிட்டதே?''

''இது லட்சக்கணக்கான சில்லறை வணிகர்களின் பிரச்னை என்பதால், போராட முன்வந்தேன். 30 ரூபாய், 40 ரூபாய்க்குக் காய்கறி வாங்கி, தலையில் சுமந்து விற்கும் ஏழை ஆயாக்களின் பிரச்னை இது.

ரிலையன்ஸ் கடைகளுக்கு முன்னால் சென்று நின்று, கடைக்கு வருபவர்களின் கால் களில் விழுந்து கெஞ்சினோம். சில்லறை வணிகர்களின் வாழ்க்கையைச் சொல்லிக் கதறினோம். அதே ரிலையன்ஸ் கடைகளின் மீது கற்களைவிட்டு அடித்து நொறுக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இப்போதும் சொல்கிறேன், ராம தாசுக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. எனது கட்சியினரும் அப்படித்தான். ஆனால் உரிமை மறுக்கப்பட்ட, கொஞ்சம் கொஞ்ச மாக வாழ்வுரிமையை இழக்கிற மக்கள் பொங்கி எழும்போது, அவர்களும் என்னைப் போலவே அமைதியாகப் போராடுவார்கள் என்று சொல்ல முடியாது!''

''கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க செய்தது 'பச்சைத் துரோகம்' என்றீர்கள். 'தி.மு.கவில் இருவரைத் தவிர, மற்ற அனைவருமே மோசமானவர்கள்.அ.தி.மு.கவில் இருவரைத் தவிர, மற்ற அனைவருமே நல்லவர்கள்' என்றீர்கள். அந்தக் கருத்துக்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?''

''இப்போதும் அப்படித்தான். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆற்காடு வீராசாமி கொடுத்த அறிக்கையைப் பார்த்தாலே, அவர்கள் மாறியது போலத் தெரிய வில்லையே!

'நிர்வாகம் சீரழிந்திருக்கிறது... காவல் துறையின் நுரையீரல் முழுக்கக் கெட்டுப்போயிருக்கிறது... கள்ளச் சாராயம் பெருகியிருக்கிறது' என நான் ஒரு விமர்சனம் சொன்னால், உடனே '7,000 கோடி ரூபாய் டாஸ் மாக்கில் இருந்து வருமானம் வருகிறது. பூரண மதுவிலக்கைக் கொண்டுவந் தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்' என்கிறார்கள். ஒரு அரசு பேசுகிற பேச்சா இது?''

''மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேலும் ஓராண்டு கிராமச் சேவை என்றாலே போராடுகிறார்கள். நீங்களோ கிராமச் சேவையை இரண்டு ஆண்டுகள் ஆக்க வேண்டும் என்கிறீர்களே... ஏன்?''

''மருத்துவ வசதிகள் இல்லாத கிராம மக்கள்தான் இந்தியாவில் அதிகம். அதனால்தான் அரசு மருத்து வக் கல்லூரிகளில் அரசுச் செலவில் படிக்கும் மாணவர்களை, கிராமங் களுக்கு சென்று ஊதியத்துடன் ஓராண்டு வேலை செய்யச் சொல்கிறார் மத்திய அமைச்சர். வேலூரில் உள்ள தனியார் சி.எம்.சி. கல்லூரியில் படிக் கும் மாணவர்கள், படித்து முடித்ததும் இத்தனை ஆண்டு பணியாற்றவேண்டும் என அங்கே எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். சிங்கப்பூரில் 10ம் வகுப்பு படித்த மாணவன்... அவன் பிரதமரின் மகனாகவே இருந்தாலும் கட்டாயம் ராணுவச் சேவை செய்தாகவேண்டும் எனச் சட்டம் இருக்கிறது. ஆனால்,இட ஒதுக்கீட்டின் முழு பலனையும் அனுபவித்த இந்த மாணவர்கள், இட ஒதுக்கீட்டைஎதிர்ப் பவர்களுடன் இணைந்துகொண்டு கிராமச் சேவைக்கு எதிராகப் போராடுவதுதான் வேதனை அளிக்கிறது. ஒரு வருடத்தில் எங் களின் தலை வழுக்கை ஆகிவிடும் என மாதக்கணக்காகப் போராடும் இந்த மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் 27% சதவிகித ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராடியபோது எங்களை ஆதரித்து ஏன் வீதிக்கு வரவில்லை?

வேளாண் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை இரண்டே நாட்களில் முடிவுக்குக் கொண்டுவருகிறது தமிழக அரசு. ஆனால், மருத்துவ மாணவர்களின் போராட்டம் மாதக் கணக்காக நீள்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் யார் என்று தெரியாதா என்ன?''

''காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சேது கால்வாய் ஆகியவற்றில் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் வாய்ப்பு நழுவிப் போகிறதே..?''

''கடந்த 40 வருடங்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தலா 20 வருடங்களைப் பங்கிட்டுக்கொண்டன. ஆனால், எந்த வாழ்வாதாரப் பிரச்னையும் இறுதித் தீர்வை எட்டவே இல்லை. இவை ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் பிரச்னைகள். பல லட்சம் விவசாயிகளின் வயிற்றுப் பிரச்னைகள். ஆனால், ஏனோ தானோ என்று அணுகியதன் விளைவு, காவிரி மீதான நமது உரிமையை இழந்தோம். முல்லைப் பெரியாறு அணையி லும் அப்படித்தான். பாலாற் றிலும் நமது உரிமையைஇழந்து கொண்டு இருக்கிறோம். பிரச்னை வரும்போதெல்லாம், சும்மா பேருக்கு ஒரு வழக்கு போடுகிறார்களே தவிர, உண் மையான அக்கறை இவர்களி டம் இல்லை.

நதி நீர்ப் பிரச்னையில் ஆழ மான அறிவும் தெளிவும் உள்ள நிபுணர்கள், பெரிய வர்கள் இங்கே பல பேர் இருக் கிறார்கள். அவர்களை அழைத் துப் பேசி, பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்... மத்திய அரசுக்கு எதிரான நெருக்கடியைக் கொடுத்து, ஐந்து மாநில முதல் வர்களையும் கூட்டி, பிரதமர் தலைமையில் தீர்வு காண வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. இது விருப்பமோ, வேண்டுகோளோ அல்ல... உரிமைக் குரல்!''

''சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது என ரஜினிக்கும் விஜய்க்கும் கோரிக்கை வைத்தனர். சினிமாவைக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள், அவர்கள் இனி புகைப்பது போல நடிக்க மாட்டோம் என்கிறபோது பாராட்டத் தவறுவது நியாயமில்லையே?''

''மத்திய அமைச்சர் அன்புமணியே ரஜினிக்கும் விஜய்க்கும் நன்றி சொல்லியிருக்கிறாரே! சினிமாவில் உள்ள கலாசாரச் சீரழிவுகளை நான் கண்டித்த போது, 'இந்த ராமதாசுக்கு வேறு வேலையே இல்லை... இவர் என்னவோ கலாசார போலீஸ் மாதிரி நடந்துகொள்கிறார்' என்றார்கள். ஆனால், நாங்கள் சொன்னதன் நியாயத்தை இன்று நடிகர்களே உணர்ந்துவிட்டது நல்ல நாகரிகம். அன்புமணியின் கோரிக்கையை ஏற்று, சினிமாவில் இனி புகைக்கிற காட்சியில் நடிக்க மாட்டோம் என அறிவித்திருக்கிற ரஜினிக்கும் விஜய்க்கும் என் மனமார்ந்த நன்றி. இதை விகடன் மூலமாகவே தெரிவிக்கிறேன்!

''விஜயகாந்த்தைப் பற்றிக் கேட்டால், பேச மறுக்கிறீர்கள்; திருமாவளவன் சினிமாவில் நடிப்பதைப் பற்றிக் கேட்டால், அது அவரது தனிப்பட்ட விஷயம் என்கிறீர்கள். உங்களுக்கு அவர்களைப் பார்த்து பயமா?''

''பயமா?! அது எனது பிறப்பிலேயே கிடையாது. என் ரத்தத்திலும் கிடையாது. நீங்கள் கேட்ட வார்த்தையை வாபஸ் வாங்கணும். சிலரைப் பற்றிய கேள்விகளை நான் தவிர்ப்பதற்குக் காரணம், நான் அவர்களைப் பற்றி பேசினால், தெருவில் போகிற ஒரு பைத்தியக்காரனைக் கூப்பிட்டு, அதற்குப் பதில் சொல்ல வைப்பார்கள். அதையும் பத்திரிகையில் ஒரு பெரிய செய்தியாகப் போடுவார்கள். இந்த அமைப்பைச் சார்ந்த இவர், ராமதாசுக்கு பதிலடின்னு போடுவாங்க. அந்த வாய்ப்பை ஏன் கொடுக்கணும்? அதனால்தான் சில கேள்விகளைத் தவிர்க்கிறேன்.''

''மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்கள் மீது இனப் பாகுபாடு காட்டப்படுகிறது என உலகம் முழுக்கக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நடிகர் சங்கம் அங்கே சென்று கலைவிழா நடத்தி நிதி திரட்டப் போகிறதே?''

''நான் மலேசியாவில் தமிழர் நிகழ்ச்சி ஒன்றுக்காகப் போயிருந்தபோது, 'சினிமா நடிகர்கள் இங்கே வந்தால் சேர்த்துக்கொள்ளாதீர்கள். சினிமா நடிகர்கள் கொஞ்சநஞ்சம் இருந்த தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்நாட்டிலேயே கெடுத்துவிட்டார்கள். இங்கேயும் வந்து உங்களையும் கெடுப்பார்கள்' எனத் தெளிவாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.''

''கலைஞர் தொலைக்காட்சியை நீங்கள் பார்ப்பதுண்டா? அதில் உங்களைக் கவர்ந்த நிகழ்ச்சி என்ன?''

''சினிமா ஏற்கெனவே தமிழர்களின் பண்பாட்டைச் சீரழித்துவிட்டது. இன்னும் கொஞ்சம் இருப்பதையும் வேகமாகச் சீரழிப்பது யார் எனத் தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் போட்டி நடக்கிறது. நான் கூட நகைச்சுவையாகச் சொன்னதுண்டு... 'மானாட மயிலாடங்கிற நிகழ்ச்சி ஒண்ணு நடக்குது. கூடவே 'மார்பாட' என்கிற வார்த்தையையும் சேர்த்துப் போட்டுக்கலாம்னு... கஷ்டம்!''

''தி.மு.கவில் மு.க.ஸ்டாலினைத் தலைமைக்கு கொண்டுவரும் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை, இந்த ஆட்சிக் காலத்திலேயே மு.க.ஸ்டாலினை முதல்வராக்கினால், அதை ஆதரிப்பீர்களா?''

''அவர்கள் யாரை வேண்டுமானாலும் தலைவராகக் கொண்டுவரட்டும். அது அவர்களின் கட்சி எடுக்கிற முடிவு. மற்றபடி, மு.க.ஸ்டாலினை முதல்வராக்கினால் வரவேற்பேன்.''

''தி.மு.கவின் இந்த ஓராண்டு ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கலாம்?''

''மதிப்பெண்கள் போடுகிற மாதிரியோ, பாராட்டுகிற மாதிரியோ என்ன சாதனைகள் செய்திருக்கிறார்கள்? ஒருவேளை, நான் தவறாகப் பேசலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்... அவர்கள் என்ன செய்தார்கள்.?''

''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?''

''சட்டம்தான் இருக்குது. ஒழுங்கு இல்லை!''

( நன்றி: ஆனந்த விகடன் )

Read More...

இளங்கோவனுக்கு அதிகாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் - கலைஞர்

தூக்கு தண்டனை கூடவே கூடாது: முதல்வர் கருணாநிதி கருத்து முழு பேட்டி கீழே...

தி.மு.க.,விற்கு மேலும் வலு சேர்ப்பது குறித்து, டில்லியில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினீர்களே; முடிவு என்ன?

தி.மு.க., என்பது தி.மு.க., அரசையும் குறிக்கும். அதற்கு வலுவூட்டும் வகையில் தான், பிரதமர் மற்றும் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சர்களை சந்தித்து பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு, சில முக்கியமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. உடனடியாக 300 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.எம்., நிறுவனம் துவங்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் நக்சல்கள் ஊடுருவல் எந்த அளவிற்கு உள்ளது?

தேனியுடன் நிற்கிறது. அதைத் தாண்டாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவு தான்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

அவருக்கு அதிகாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஜெயலலிதா தொடர்ந்து குற்றம் சாட்டுகிறாரே?

ஆங்கில பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டியை மீண்டும் படிக்க வேண்டும். "விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆரும், நானும் (ஜெயலலிதா) உதவுகிறோம். அதில் ஒரு துளி கூட கருணாநிதி உதவி செய்யவில்லை' என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

முல்லை பெரியாறு பேச்சுவார்த்தை எப்படி இருந்தது?

பெரியாறு அணையில் நீர்க்கசிவு இருப்பதாகவும், அதனால், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரளா தெரிவித்தது. இரு மாநில இன்ஜினியர்களை தவிர்த்து, வேறு மாநில இன்ஜினியர்களைக் கொண்டு அணையின் நீர்க்கசிவை அளவிட்டு அவர்கள் கூறும் முடிவை இரு சாராரும் ஏற்கலாம் என்று நான் கூறினேன். அந்த முடிவை பரிசீலிப்பதாக கேரள முதல்வர் கூறியிருப்பது, ஆக்கப்பூர்வமானதாக இருக்கிறது.

தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், 15 அம்ச திட்டத்திற்கு பா.ஜ., முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே?

பா.ஜ., முதல்வர்கள் மட்டுமல்ல, அவர்கள் கட்சியே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தி.மு.க.,வைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களான முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அரணாகத் தான் ஆரம்பம் முதல் இருந்து வருகிறது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

தூக்கு தண்டனை கூடவே கூடாது; அது தேவையில்லை என்று பல முறை நான் கூறி வருகிறேன். அந்த கருத்து உடன்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.

Read More...

முடிசூட்டு விழா அழகிரியால் கெட்டது - ஜெ

ஸ்டாலின் முடிசூட்டு விழா அழகிரியால் கெட்டது என்று ஜெ அறிக்கை

கருணாநிதி தனது மகனுக்கு முடிசூட்ட விரும்பி நடத்தப் பட்ட இளைஞர் அணி மாநாடு பெரும் தோல்வியில் முடிந்துள் ளது. அந்த மாநாட்டின் முடிவு, கருணாநிதி குடும்பத்து அண்ணன் "செங்குட்டுவனால்' முறியடிக்கப்பட்டதால், எனக்குப் பிறகு இன்னார் என்று ஸ்டாலினை அடையாளம் காட்டும் விழாவாக மட்டுமே நடந்து முடிந்திருக்கிறது.

நெல்லை நகரத்தையே ஒரு போர்க்கால சூழலுக்கு ஆளாக்கி அங்கு வசிக்கும் மக்கள் வெளியே நடமாடக் கூடாது என்று நகர பஸ்களை ஓடாமல் நிறுத்தினர். வர்த்தக நிறுவனங்களை மூடச் செய்து, ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்கக் கூடாது என்று மிரட்டியதெல்லாம் மக்களாட்சியில் உலகில் எங்காவது நடைபெற்றது உண்டா?

தி.மு.க.,வினர் பயணம் செய்த 186 அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. மேலும், பல பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் பஸ்களுக்கு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் டீசல் நிரப்பிச் சென்றுள்ளனர்.

பஸ்களில் மதுபான பெட்டிகள் வைக்கப் பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. மாநாட்டுக்கு பெரும்பகுதி மின்சாரம் கொக்கி போட்டு திருட்டுத் தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டுப் பந்தலில் தங்க வைக்கப் பட்டவர்கள் காலைக் கடன்களைக் கழிக்க மாநகர டவுன் பஸ்கள் தாமிரபரணி ஆற்றங்கரை வரை இயக்கப்பட்டு, அங்கு இறங்கி, அந்தப் பகுதியையே மாசுபடுத்தி மாபெரும் கழிப்பிடமாக மாற்றி விட்டார்கள். தி.மு.க.,வினரை தங்க வைக்க பள்ளி நிர்வாகிகளை மிரட்டியுள்ளனர். தங்கியவர்கள் பள்ளிகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழ்படுத்தி விட்டனர்.

ஓயாத மழை, தொடர் வெள்ளப் பெருக்கு, சாவு எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்து விட்டது. வீடுகளை இழந்த மக்கள் தங்கும் இடம், உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். வீடுகளில் கழிவுநீர், வெள்ள நீர் புகுந்து வெளியேற்ற முடியாமல் திணறுகின்றனர். சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை.

தமிழகத்தில் அரசாங்கம் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. என் ஆட்சியாக இருந்தால் இந்நேரம் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருப்பேன்.

மாநாடு நடத்திய களைப்பில் அமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் குமரகத்தில் ஓய்வெடுக்கிறார். கருணாநிதி டில்லியில் இருந்து கொண்டே, "உடல் நலமில்லை' என்று கூறி முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுக்கிறார். வெள்ளப் பகுதிகளை எந்த அமைச்சரும் எட்டிப் பார்க்கவில்லை. மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது.

Read More...

Friday, December 21, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி - 1

சென்னை புத்தகக் கண்காட்சி-2008 (4-17 ஜனவரி) பற்றி வரும் நாட்களில் ஒரு கவரேஜ் கொடுக்கலாம் என்று இருக்கேன்.

எச்சரிக்கை: இதனால் நல்ல புத்தகம் எது, அட்டை படம் மட்டும் நல்லா இருக்கும் புத்தகம் எது என்று ஒரு லிஸ்டை தயராகலாம் :-)

வாசகர்கள்(அட நீங்க தாங்க!) புத்தகங்களை பரிந்துரை செய்யலாம், விமர்சனம் செய்யலாம், கொடுத்த பணத்துக்கு காண்காட்சியில் மசால் தோசை சாப்பிட்டிருக்கலாம், என்று எது வேண்டும் என்றாலும் சொல்லலாம்.

சைடுல பரிந்துரைக்கும் புத்தகங்கள் நீங்கள் வாங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, எனக்கு அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதனால் எனக்கு 0.01% கமிஷன் கூட கிடையாது :-)

முதல் பதிவாக கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களின் பட்டியல் கீழே. ( பத்ரி சில புத்தகங்களை பற்றி சொல்லியிருக்கார் பார்க்க )

மற்ற பதிப்பகங்களின் ( உயிர்மை, எனி இந்தியன், காலச்சுவடு ... ) தகவல் கிடைத்தவுடன் தருகிறேன். ( உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் சொல்லலாம் )



முதலில் சூப்பர் ஸ்டார் நியூஸ்

ஜனவரி 11ம் தேதி சிவாஜி சில்வர் ஜூப்ளி செலிபரேஷன் சென்னைல நடக்குது. அகில இந்திய நட்சத்திரங்களும் அன்னைத்தமிழ் நட்சத்திரங்களும் கலந்துகொள்ளும் இவ்விழாவில்
" மேக்கிங் ஆஃப் சிவாஜின்னு" ஒரு புக் ரிலீஸ் பண்றாங்க. புக் மேக்கிங் - கிழக்கு

முதல்முறையா ரஜினிகாந்த் ஒரு புக்குக்காக எக்ஸ்க்ளூசிவ் பேட்டி குடுத்திருக்கார். தெரியுமா ? பத்திரிகைகளில் வராத பேட்டி நூலாசிரியர் - ராணிமைந்தன்.

வண்ணப்படங்களுடன் கூடிய இந்த புத்தகம் சிவாஜி குறித்த வதந்திகள், இண்டர்நெட்ல படம் எப்படி வந்ததுங்கற விவரம், கசமுசாக்கள் - எல்லாத்துக்கும் இதுல பதில் இருக்காம். ரஜினி அரசியலில் குதிப்பாரா என்பதற்கு நிச்சயம் இதில் விடை கிடைக்காது :-)

1. நான், வித்யா - ஒரு திருநங்கையின் வாழ்வியல் போராட்டங்கள், தன் வரலாறாக. - வித்யா

2. பர்வேஸ் முஷரஃப்: 'பாக்'கில் சிக்கிய பல் - பாகிஸ்தான் அதிபரின் பரபரப்பு மிகுந்த வாழ்க்கை வரலாறு. - ஆஸ்தான முஷரஃப் எழுத்தாளர் பா.ரா ( பாராக்கு இது சில்வர் புக் ! )

3. மியூச்சுவல் ஃபண்ட் - முதலீடு செய்வது பற்றிய விரிவான, முழுமையான கையேடு. - நேசமுடன் வெங்கடேஷ்

4. பில் கேட்ஸ் - சாஃப்ட்வேர் சுல்தானின் வாழ்க்கை வரலாறு. - சொக்கன்

5. ஆண்ட்ரூ க்ரோவ் - இண்டெல் நிறுவனத்தின் வெற்றிக்கதை, ஆண்டி க்ரோவின் வாழ்வின் வழியே. - எஸ்.எல்.வி மூர்த்தி

6. யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு

7. இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் - முழுத்தொகுப்பு

8. ஒண்டிக்கட்டை உலகம் - பேச்சிலர்களுக்கான அத்தியாவசிய கெய்ட் - சிபி கே சாலமன்

9. எல்.டி.டி.ஈ - முழுமையான வரலாறு - ( யார் என்ற பெயர் விவரம் தெரியவில்லை )

10. அடடே! - 'தினமணி' மதியின் கார்ட்டூன்கள் தொகுப்பு - 6 பாகங்கள்.

11. எம்.ஆர். ராதாயணம் - எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாறு - முகில்

12. டயானா - ஒரு தேவதைக் கதை - ச.ந.கண்ணன்

13. மகா அலெக்சாண்டர் - உலகம் சுற்றும் வாலிபன் புதிய காப்பி - ஆர். முத்துக்குமார்

14. ஃப்யூச்சர்ஸ்&ஆப்ஷன்ஸ் - அள்ள அள்ளப்பணம் பாகம் 3 - சோம.வள்ளியப்பன

Read More...

Thursday, December 20, 2007

விஜயகாந்த் செல்வாக்கு ?

நண்பர் ஒருவர் சாட்டில் வந்து விஜயகாந்த் செல்வாக்கு நிஜமாக உயர்ந்திருக்கா ? இந்த மாதிரி கருத்துகணிப்பு எல்லாம் நிஜமா என்றார். எனக்கு தெரியாது ஆனால் திமுக மாநாடு நடந்த போது பேசிய சில பகுதிகளை கீழே தந்துள்ளேன்....


"நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த சில காளான்கள் தங்களிடம்தான் இளைஞர்கள் இருப்பதாகக் கூறிவருகின்றனர். ஆனால், இளைஞர்கள் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார்கள். அழைத்தால் வர வேண்டிய இடத்திற்கு வந்துவிடுவார்கள். இன்று இந்த இளைஞரணி பேரணியைப் பார்த்தபோது, எனக்கும் பத்து வயது குறைந்துவிட்டது" - கி. வீரமணி

"இளைஞர்களே... திடீர் தலைவர்களையும், "புரட்சி' என்று பட்டங்களை சூட்டிக்கொள்ளும் மின்மினி தலைவர்களையும் நம்பாதீர்கள். வெறும் கேளிக்கை ரீதியான தலைவர்கள் பின்னால் போகாதீர்கள். தி.மு.க.வில் இணையுங்கள்" - கவிஞர் தமிழச்சி

"இன்று யார் யாரோ, புதிதாக கட்சி துவங்குகிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், தலைவராகலாம். எனவே, இந்த மாநாட்டை அவர்களைப் பற்றி பேச, நான் பயன்படுத்தப் போவதில்லை. தி.மு.க. 1949ல் உருவாகி, 67ல்தான் ஆட்சி அமைத்தது. ஆனால், இன்றைய திடீர் தலைவர்களோ கட்சி துவங்கியவுடனேயே அடுத்த முதல்வர் என்று கூறிக்கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது" – ஸ்டாலின்.

Read More...

விஜயகாந்த் செல்வாக்கு உயர்வு - கருத்துக்கணிப்பு

தமிழக அரசியலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக லயோலா கல்லூரி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
திமுக கூட்டணியில் விரிசல், மூன்றாவது அணி,அடுத்த முதல்வர் யார்?,நாடாளுமன்ற தேர்தல்,அடுத்த பிரதமர்,சேது சமுத்திர திட்டம், அரசு கேபிள் டிவி, எம்ஜிஆரே சிறந்த முதல்வர், விஜயகாந்துக்கு முதலிடம், ரஜினி அரசியலில் ஈடுபடலாமா? போன்ற கேள்விகள்...



திமுக கூட்டணியில் பெருமளவு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதிமுக எதிரணி அரசியலில் முதல் இடத்தில் உள்ளதாகவும் பெரும்பாலோர் தெரிவித்துள்ளனர்.

மாற்று அரசியல் பண்பாடு நோக்கி என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை மாநில அளவில் 6 மாதத்திற்கு ஒருமுறை கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை திரட்டியுள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகால திமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.

75.3 சதவீதம் பேர் ஆதரவாகவும், இதில் தொலைநோக்கு இல்லை என்று 24.7 சதவீதம் பேர் எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர். ரூ.2 அரிசி 90.1, இலவச நிலம்64.5, இலவச டிவி43.3, முதியோர் உதவி தொகை 82.4, சத்துணவு முட்டை92.7, இலவச கேஸ்72.6, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு66.3.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் திருப்தி இருப்பதாக 51.5 சதவீதம் பேரும், திருப்தி இல்லை யென்று 48.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் விரிசல்
திமுக கூட்டணியில் விரிசல் பெருமளவுக்கு ஏற்பட்டுள்ளதாக 73.6 சதவீதம் பேர் கருதுகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டு ஆட்சியில் திமுக சிறப்பாக செயல்பட்டுள்ளது என 51.2 சதவீதம் மக்கள் கருதுகின்றனர்.

எதிர்க்கட்சியாக அதிமுக 52.2 சதவீதமும், தேமுதிக 48.5 சதவீதமும், மதிமுக 39.3 சதவீதமும், பிஜேபி 12.9 சதவீதமும் நன்றாக செயல்பட்டிருப்ப தாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தோழமைக் கட்சியாக பாமக 40.8, காங்கிரஸ் 15.6, இடதுசாரிகள் 39.5 சதவீதம் நல்ல செயல்பாடு என கருத்து நிலவுகிறது.

காங்கிரசின் செயல்பாடு மோசம் என்று 50.7 சதவீதம் பேர் கருதுகின்றனர். திமுக ஆட்சி அடுத்த மூன்றரை ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்று 71.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மூன்றாவது அணி
தமிழகத்தில் காங்கிரஸ்தேமுதிக சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு 36.7 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது. பிஜேபியும், தேமுதிகவும் சேர 12.6 சதவீதமே ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணிக்கு 5.2 சதவீதமும், பிஜேபி, தேமுதிக, பாமக, மதிமுகவுக்கு 4.3 சதவீதமும் ஆதரவு கிடைக்கிறது.

பலமான அணியாக மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என 35.5 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

அடுத்த முதல்வர் யார்?
கருணாநிதிக்கு பின் அடுத்த முதல்வர் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கே அதிகமாக உள்ளது என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அவருக்கு 32.1 சதவீதம் ஆதரவு உள்ளது. ஸ்டாலினுக்கு 27.9 சதவீதம் பேரும், விஜயகாந்துக்கு 24.3 சதவீதம் பேரும், தயாநிதி மாறனுக்கு 6.2 சதவீதம் பேரும், ராமதாசுக்கு 5.7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வராது என 53.8 சதவீதம் பேர் கருதுகின்றனர். குஜராத் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக தேர்தல் வரும் என்று 27.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என 34.1 சதவீதம் பேரும், அப்படி அமைந்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என 21.1 சதவீதம் பேரும் கருதுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் இப்போது வந்தால் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் அணியே வெற்றி பெறும் என 53.4 சதவீதம் பேர் கருதுகின்றனர். பிஜேபி அணி 19.3 சதவீதம், மூன்றாவது அணி 7 சதவீதம், கருத்து சொல்ல முடியாது 20.3 சதவீதம் என்ற அளவிலும் கருத்து நிலவுகிறது.

அடுத்த பிரதமர்
அடுத்த பிரதமராக சோனியாவுக்கே வாய்ப்புள்ளது என 37.8 சதவீதம் பேர் கூறுகின்றனர். வாஜ்பாய்க்கு 15.3, மன்மோகன் சிங்கிற்கு 13.7, ராகுலுக்கு 10.6, அத்வானிக்கு 6.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சேது சமுத்திர திட்டம்
சேது சமுத்திர திட்டம் மிகவும் பயனுள்ளது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று 72.4 பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.

கடல் வளம் பாதிக்கும் என 11.2 சதவீதம் பேரும், வணிக ரீதியில் வெற்றி பெறாது என 8.1 சதவீதம் பேரும், இந்த பணத்தை கிராமப்புற சாலைகளை அமைக்க பயன்படுத்தலாம் என 6.9 சதவீதம் பேரும், மொத்தம் 26.2 சதவீதம் பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு கேபிள் டிவி
அரசு கேபிள் டிவிக்கு ஆதரவு உள்ள போதிலும், அதை தொடங்குவதில் தேவையற்ற சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக 49.3 சதவீதம் பேர் கருதுகின்றனர். அரசின் செயல்பாடு நிதானமாக உள்ளது என 31.8 சதவீதம் பேர் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியில் காலாவதியாகும் இந்த திட்டம் வீண் வேலை என 16.2 சதவீதம் பேர் கருதுகின்றனர். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள் 62.7 சதவீதம் பேர்.

எம்ஜிஆரே சிறந்த முதல்வர்
தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் தாங்கள் அறிந்த வரை சிறந்த முதல்வராக பணியாற்றியவர் எம்.ஜி.ஆரே என 40.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கருத்துக் கணிப்பின்படி முதல்வர்களில் தரவரிசை வருமாறு: எம்ஜிஆர் 40.8, காமராஜர் 29.9, கருணாநிதி 17.4, ஜெயலலிதா 7.6, அண்ணா 4.6.

விஜயகாந்துக்கு முதலிடம்
நடிகர்கள் அரசியலில் ஈடுபட எதிர்ப்பு பெருமளவு உள்ளது. எனினும் அரசியலில் குதித்துள்ள நடிகர்களில் விஜயகாந்துக்கு பேராதரவு உள்ளது.

அவருக்கு 47.9 சதவீதம் பேரும், சரத்குமாருக்கு 4.3 சதவீதம் பேரும், கார்த்திக்கிற்கு 4.1 சதவீதம் பேரும், விஜய டி.ராஜேந்தருக்கு 1.3 சதவீதம் பேரும் ஆதரவு அளிக்கின்றனர்.

நடிகர்கள் தனிக்கட்சி தொடங்க 45.3 பேர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். ஆதரவாக 34.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி அரசியலில் ஈடுபடலாமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபடலாமா? என்ற கேள்விக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லையென்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் தொடர்ந்து முழுநேர சினிமா தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், நேரடியாக அரசியலில் வருவதை விரும்பவில்லை என்றும் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
முழுநேர சினிமா தொழிலில் ஈடுபட 45.2 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என 23.8 சதவீதம் பேரும், சமூக சேவையில் ஈடுபடலாம் என 14.2 சதவீதம் பேரும், நேரடி அரசியலில் குதிக்கலாம் என 11.3 சதவீதம் பேரும் யோசனை தெரிவித்துள்ளனர்.

ரஜினி வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என 51.4 சதவீதம் பேர் கூறுகின்றனர். இதுவரை நடித்தது போலவே நடிக்க வேண்டும் என்று 36.3 சதவீதம் பேரும், படங்களை இயக்கலாம் என 8.9 சதவீதம் பேரும், நடிப்பை சொல்லி தரலாம் என 2.2 சதவீதம் பேரும் கூறுகின்றனர்.

தமிழ் பெயர்களை வைக்கும் திரைப் படங்களுக்கு வரிச் சலுகையை கைவிட வேண்டும் என்று 52.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதற்கு ஆதரவாக 11.6 சதவீதம் பேர் உள்ளனர்.
( நன்றி: மாலைசுடர் )

Read More...

ஒட்டகங்களை வெட்ட தடையில்லை - கோர்ட்

`குர்பானி' கொடுக்க 41 ஒட்டகங்கள் தயார் ! என்ற பதிவை தொடந்து இந்த செய்தி....

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகங்களை வெட்ட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி விருந்து தயாரிப்பதற்காக ஏராளமான ஒட்டகங்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றை வெட்டி, பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி விருந்து தயாரிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் ஒட்டகங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர்கள் எஸ்.எம். சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு

( கடந்த ஆண்டு இதே போல ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்ட போது அவற்றை பலியிட எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. மிருகவதை தடுப்பு சங்கத்தி னரும், வக்கீல் ராஜேந்திரனும் இந்த வழக்கை தொடர்ந்து இருந்தனர்.

அதையடுத்து ஒட்டகம் வெட்ட ஐகோர்ட்டு தடை விதித்தது. பின்னர் சில நிபந்தனைகளுடன் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. )

நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சசிதரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மிருகவதை தடை சட்டத்தின் கீழ் ஒட்டகங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஒட்டகங்களை வெட்ட தடை விதிக்க முடியாது என்று கூறினர். இந்த வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


வைகுண்ட ஏகாதசி அன்று உயிர் விட்ட ஒட்டங்கள் அப்போது சொர்கத்துக்கு போய் இருக்கும்



Read More...

2007 டாப் 5 பதிவுகள்

எப்போழுதும் சதா தமிழ் வலைப்பதிவுகளை படிக்கும் உங்களுக்கு தமிழ் வலைப்பதிவு என்று சொன்னவுடன் நினைவுக்கு வரும் முதல் 5 (நல்ல பதிவுகள்) எது ?

1.
2.
3.
4.
5.

என்று பின்னூட்டதில்(முடிந்தால் சுட்டியுடன் தரவும்), idlyvadai2007 என்ற முகவரிக்கு gmail, gtalk'கும் செய்யலாம்.

வழக்கம் போல் விதிமுறைகள்:
1. அனானிமஸ் பின்னூட்டங்கள் செல்லாத ஓட்டு என்று கருதப்படும்.
2. தமிழ்மணம், தேன்கூடு, கில்லி, இட்லிவடை என்றாலும் செல்லாத ஓட்டு தான்.
3. நீங்கள் தேர்வு செய்யும் வலைப்பதிவில் குறைந்தது 5 பதிவுகளாவது இருக்க வேண்டும். ஐந்துக்கு மேல் இருந்தால் பரவாயில்லை.
4. உங்கள் பெயர், உங்கள் ஓட்டு விவரம் வெளியே யாருக்கும் தெரியாது. அதனால் பயப்படாமல் ஓட்டு போடுங்கள்.
5. கண்டிப்பாக விருதுகள் எதுவும் இல்லை. அப்பறம் விதிமுறை அடிக்கடி அப்டேட் செய்யப்படும் :-)

Read More...

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் போது, கண்டகண்ட போஸ்ட் எல்லாம் படிக்காமல் இன்று மட்டுமாவது நல்ல போஸ்ட் படிக்க இங்கே செல்லுங்கள்..

( தகவல் உதவி: போனவார தினத்தந்தி )

Read More...

Wednesday, December 19, 2007

கருணாநிதியை விமர்சிப்பதா? - ஜெக்கு துரைமுருகன் கண்டனம்!

ஜெ அறிக்கைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்..


நாள் தவறினாலும் அறிக்கை மூலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஜெயலலிதா இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசிலே உள்ளவர்கள் இன்னமும் தன்னுடைய ஆலோசனையைக்கேட்டுக் கொண்டு தான் நடக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு, மத்திய அரசு கூட்டியுள்ள ஒரு கூட்டத்திற்கு தமிழக அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கலைஞரை அழைத்திடக் கூடாது என்ற வகையில் கருத்தினைத் தெரி வித்திருக்கிறார்.

மத்திய அரசோ, அதிலே உள்ள அமைச்சர்களோ யாரும் இந்த அம்மையாரைத் திரும்பிப் பார்க்கத் தயாராக இல்லை. ஆனால் இன்னமும் பழைய நினைப்புடா பேராண்டி என்பதைப் போல தாண்டிக் குதித்து முதல்-அமைச்சர் கலைஞரை பற்றி யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையிலே கையெ ழுத்திட்டு பத்திரிகைகளில் அவை வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

தனது தோழமைக் கட்சிகளை இவர் மதிப்பதைப் போலத்தான் மற்ற கட்சிகளும் மதிப்பார்கள் என்று கருதிக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர், தமிழக முதல்-அமைச்சர் சொல்லித்தான் கூறியிருப்பார் என்றும் ஜெயலலிதா கதை அளந்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு தி.மு.கழக அரசு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருவதைப் போல தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்ததைப் போல கருணாநிதி செய்ய வில்லை என்றும், பங்களா தேஷ் பிரச்சினையில் இந்திய அரசு உதவி செய்ததைப் போல விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு உதவிட முன் வரவேண்டுமென்றும், விடுதலைப்புலிகளின் தலை வரான பிரபாகரனுக்கு ஏதாவது ஒரு தீங்கு நேரிட்டால் அதனை தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும், ஜெயலலிதா கொடுத்த பேட்டிகள் இன்னமும் பழைய ஏடுகளில் அப்படியே உள்ளன. அதையெல்லாம் மறந்து விட்டு தற்போது ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் எதிர்ப் பாளராக மாறி, அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவது மட்டுமல்லாமல், தி.மு.கழக அரசு அவர்களை ஆதரிப் பதைப் போலவும் கூறிக் கொண்டிருக்கிறார்.

ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் 1999-ல் உறுதி செய்து எட்டு ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லையே, அது ஏன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே கேட்டி ருக்கிறார்.

யாரைப்பார்த்து இந்தக் கேள்வியை அவர் கேட்கிறார்ப 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெய லலிதா இருந்தார். அப்போது என்ன செய்து கொண்டி ருந்தார்ப இப்போது யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறார்.

வன்முறையைப்பற்றி ஜெயலலிதா அறிக்கையிலே கூறியிருக்கிறார். வன்முறைக்கு அகராதியை எடுத்துப்பார்த்து அர்த்தம் தேடினால் அதற்கு ஜெயலலிதா என்று போட்டிருந்தால் தானே பொருத்தமாக இருக்கும். இவரது ஆட்சியில் நடக்காத வன்முறைகளா இன்னொரு ஆட்சியிலே நடந்து விடப் போகிறது.

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த வன்னியரசு என்பவர் நீதிமன்றத்தினால் ஜாமீனில் விடப்பட்டதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தான் காரணம் என்றும் தொடர்ந்து ஜெயலலிதா புலம்பி வருகிறார். நீதிமன்றம் ஜாமீனில் ஒருவரை விடுவித் தால் கூட, அதற்கு அரசும் முதல்-அமைச்சரும் தான் பொறுப்பாப ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அப்படித் தான் நடைபெற்றதா?

தமிழக முதல்-அமைச்சர் ஏதோ தேச துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா தொடர்ந்து ஒரு கருத்தைச் சொல்லி வருகிறார். இது குறித்து நீதிமன்றத்திற்கே சென்று அவர் மீது வழக்கு தொடர வேண்டும். கலைஞர் ஆட்சிக்காலத்திலே இருந்த போது ஜெயலலிதாவைப் போல வழக்குகளைச்சந்தித்துக் கொண்டிருக்கிறாரா? அல்லது அரசாங்க நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி தன் பெயரிலும், தன் தோழி பெயரிலும் பட்டா போட்டுக் கொண்டாராப கொடநாடு எஸ்டேட்டை வாங்கினாரா?

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான பால சிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு கருணாநிதி இரங்கல் தெரிவிக்கலாமா என்பதைப்பற்றி ஜெயலலிதா மீண்டும் மீண்டும் பெரிய குற்றமாகக் கூறுகிறார். ஒருவர் இறந்ததற்காக இரங்கல் தெரி விப்பது என்பது மனித நேயப்பண்பாடு. அதற்கும் அம்மையாருக்கும் வெகு தூரம்.

மத்திய அரசைப் பார்த்து முதல்-அமைச்சர் கருணாநிதி எப்படி மத்திய அரசின் கூட்டத்திற்கு அழைத்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு வேறு ஒன்றும் காரணமில்லை. இந்த அம்மையாருக்கு பொறாமை, வயிற்றெரிச்சல், தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக இப்படி யெல்லாம் அறிக்கை விடுகிறார்.ë

தமிழ்நாட்டில் அரசு நன்றாக நடைபெறுகிறது. உதாரணத்திற்கு இன்று கூட மிகப்பெரிய நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு தான் நுழைந்ததாக கூறப்படும் ஐந்து நக்சலைட்டுகள் தமிழக காவல் துறையினரின் திறமையான முயற்சியின் காரணமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் பேசுவதைப் பற்றி அறிக்கை விடும் ஜெயலலிதா, அதே கருத்தை எதிரொலித்து அறிக்கை விடும் வைகோவிற்கு எதிராக வாய் திறக்காமல் இருக்க என்ன காரணம்? இந்தியா இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்யக்கூடாதென்று விடுதலைப்புலிகளுக்கு ஆதர வாக பட்டவர்த்தனமாக வைகோ பிரதமருக்கு கடிதமே எழுதியிருக்கிறாரே, அதைப் பற்றி ஜெயலலிதா அம்மையார் விமர்சிக்காததற்கு என்ன காரணம்ப ஒரேயொரு துணையாக இருக்கும் அவரையும் இழந்து விடக் கூடாது என்பது தானா?

முதலில் ஜெயலலிதா இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு, அதன் பின்னர் தி.மு.கவைப்பற்றியும், தலைவர் முதல்வர் கருணாநிதி பற்றியும் அறிக்கை விட முன் வரட்டும்!

Read More...

`குர்பானி' கொடுக்க 41 ஒட்டகங்கள் தயார் !

வடசென்னை பகுதியில் பக்ரீத் பண்டிகைக்காக `குர்பானி' கொடுக்க 41 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ( இன்று வந்த தினந்தந்தி செய்தி )



முஸ்லிம்களின் `தியாகத் திருநாள்' என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையின் போது முஸ்லிம்கள் ஆடு, மாடுகளை `குர்பானி' (பலியிடுதல்) கொடுப்பது வழக்கம்.

கடந்த 5 வருடங்களாக சென்னையில் பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை குர்பானி கொடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நெருங்கி விட்டதால் ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்களை வரவழைத்து உள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை (சரியான பேர்தான்) சாலையில் உள்ள காலி இடத்தில் குர்பானிக்காக கொண்டு வரப்பட்ட 20 ஒட்டகங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. வண்ணாரப்பேட்டை தவிர தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம், திருவொற்றியூர், மண்ணடி ஆகிய பகுதிகளில் 21 ஒட்டகங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

41 ஒட்டகங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளதால் வடசென்னை பகுதி முழுவதும் கலகலப்பாக காணப்படுகிறது. இந்த ஒட்டகங்களை ஆண்களும், பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்துச் செல்கிறார்கள். சிறுவர்-சிறுமிகள் ஒட்டகங்களுக்கு இலை, தழைகளை சாப்பிடக் கொடுத்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இந்த ஒட்டகங்கள் 25 ஆயிரம் முதல் 32 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு வாங்கி வரப்பட்டு உள்ளதாகவும், 350 கிலோ முதல் 450 கிலோ எடை உடையன என்றும் ஒருவர் கூறினார்.

குர்பானி கொடுக்க ஒட்டகங்கள் தவிர ஆடுகளும் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து ஆயிரக் கணக்கில் கொண்டு வரப்பட்டு உள்ளன. இவை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் 18-வது தெருவில் உள்ள காலியிடத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த இடத்தில் குர்பானியையொட்டி ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.


ஒட்டகங்களை இப்படி பலிகொடுக்கலாமா ?
ஏன் எந்த அரசியல் கட்சியும் இந்த மாதிரி மூடநம்பிக்கையை கண்டுகொள்ளுவதில்லை ? அடுத்த முறை கஞ்சி கிடைக்காது என்பதாலா ? அல்லது ஓட்டு கிடைக்காது என்பதாலா ?
இந்த பதிவை மேனகா காந்தி படிப்பாரா ?



Read More...

முதல்வரே! எங்கள் கலைஞரே! - ஓபன் லெட்டர் வேலுபிரபாகரன்

இரண்டு வாரம் முன் வந்த ஜூவி செய்தி. யாரும் டச் செய்யாததால் இங்கே...

தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் ஒரு துப்பாக்கியின் இரண்டு குழல்களாக இருந்து நெருக்கம் காட்டி வரும் வேளையில்...

'கி.வீரமணி விமர்சனங்களுக்கு உரியவர்... உங்களுக்கு அது தெரியாதா?' என முதல்வர் கருணாநிதிக்கு கடுமையான வார்த்தைகளை அடுக்கி திறந்த கடிதம் ஒன்றை முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பியிருக்கிறார், சினிமா இயக்குநரான வேலு பிரபாகரன்.

''பெரியாரின் உண்மையான அரசியல் வாரிசாகத் தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் வீரமணியின் பாசாங்கை நம்பி ஏமாந்து விட்டேன். என்னைப் போல பலரும் வீரமணியின் வாய்ஜாலத்தை நம்பி இனி மோசம் போய்விடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தோடுதான் முதல்வருக்கு என் மனசைக் கடிதமாக்கி

அனுப்பியிருக்கிறேன். கடிதத்தின் சாரத்தைப் புரிந்து, அவரும் வீரமணியின் சுயரூபத்தைப் புரிந்து கொண்டால், போதும்!"

அந்தக் கடிதத்திலிருந்து சில பகுதிகள் ....

கடிதத்தை படித்து முடித்த பின் வேலுபிரபாகரனை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியலை.. பச்சை நிறத்தில் இருப்பது நம்ம கைவண்ணம்


முதல்வரே! எங்கள் கலைஞரே!

சமீப நாட்களில் நீங்கள் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைப் பாராட்டுவதும் போற்றுவதுமாய் இருக்கிறீர்கள்!

தாய்க் கழகத்தின் நட்பும், பெரியாரின் லட்சக்கணக்கான தொண்டர்களின் அரவணைப்பும் தேவை என்பதால், இதை நீங்கள் செய்யலாம். ஆனால், அது எதிரான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

( கலைஞர் ஒரு அரசியல்வாதி என்பது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? )

நாட்டையும், இளைஞர்களையும் முன்னேற்ற வேண்டிய மகத்தான பணியில் இருக்கும் நீங்கள், போலிகளுக்கு முலாம் பூச வேண்டிய தேவையும் இல்லை; அப்படியரு அவசியமும் இல்லை. வீரமணி தலைவரான பிறகு திராவிடர் கழகம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை நீங்களும் சேர்ந்து விமர்சிக்கவேண்டிய காலகட்டமல்லவா இது!

'தம்பி, பகுத்தறிவைப் பரப்பும்போது,
வழியெங்கும், பாம்புகளும், பூரான்களும்,
கோட்டான்களும், விஷப்பூச்சிகளும் இருக்கும்.
விழிப்போடு இரு!'

- இது 1998-ம் ஆண்டு 'முரசொலி'யில் நீங்கள் எழுதிய சில வரிகள்தானே!

( 'எதுவுமே இல்லை என்று சொல்ல, பகுத்தறிவு தேவையில்லை' - கவிஞர் கண்ணதாசன் )

ஆனால், பகுத்தறிவைப் பரப்ப வேண்டியவர்களே அந்தப் பாதைக்குத் தடையாக இருப்பதை நீங்கள் ஏன் கவனிக்க மறுக்கிறீர்கள்?
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக திரையுலகும் அதன் கலைஞர்களும் பகுத்தறிவையோ நாத்திகத்தையோ மறந்து இருந்த இருண்ட காலம் அது. அந்த நேரத்தில்தான், என் தனிப் பட்ட பிரசாரம் மூலமாக சத்யராஜ் போன்ற கலைஞர்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு மாற்றினேன். 'பாசம் ஒரு வேஷம்' திரைப்படம் மூலமாக முதன்முதலில் பெரியார் வேடமணிந்து அவர் கருத்துக்களைப் பேசினேன். பகுத்தறிவின் ஆணிவேரும் பெரியாரின் உயிர்மூச்சுக் கொள்கையுமான... 'கடவுள் இல்லை' என்கிற உண்மையை அழுத்தம் திருத்தமாக பாமரனுக்கும் புரியும் வகையில் 'கடவுள்' என்கிற திரைப்படத்தை இயக்கித் தமிழகத் தின் பட்டித் தொட்டியெல்லாம் பகுத்தறிவு பிரசாரத்தைக் கொண்டு சென்றேன்.

கமல்ஹாசன் போன்ற திரைஉலகின் மிகப்பெரிய கலைஞர் களையும் பெரியார் திடலுக்கு அழைத்து வந்து மேடை ஏற்றி பகுத்தறிவு கொள்கைக்குப் பலம் சேர்த்தேன். இன்றைக்கும் திரையுலகின் முடிசூடா மன்னன் என புகழப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியை, கடவுள் கொள்கைக்காக எதிர்த்து, ஒரு பெரும் கொள்கைப் போரைத் தைரியமாக நடத்தினேன். பகுத்தறிவுக் கொள்கையில் வீரியமாக இருப்பதை உணர்ந்த வீரமணியின் இயக்கம், என்னைத் தத்தெடுத்துக் கொண்டது.

சினிமாவே ஒரு விதமான மூடநம்பிக்கை, ரஜினியை எதிர்த்தவர் பிறகு அவர் இவர் படத்துக்கு கொஞ்சம் பணம் உதவி செய்தவுடன், ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார். நாங்க மறக்கலை

என்னைப் போன்றவர்களை உள்ளே அழைப்பதும், ஆரத் தழுவிக் கொள்வதும், பிற்பாடு வீண்பழிச் சுமத்தி அவர்கள் தொடர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப முடியாத வண்ணம் திட்டமிட்டுக் காரியங்களை செய்பவர்கள் மீதுதான் என் கோபம்! அவர்களின் சுயரூபம் எனக்கு அனுபவரீதியாக தெரியவந்தபோதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக இருந்தது. 'பெரியாரின் பெயரைச் சொல்லி செயல்படுபவர்களேவா இப்படி...' என்று நினைக்க நினைக்க நெஞ்சம் குமைந்தது! கடந்த ஆட்சியில் நீங்கள் சிறைப்பட்டபோது அதிகாலை 4.30 மணிக்குத் தொலைக்காட்சியில் பார்த்துப் பதறிப்போன நான், அன்று ஆளும்கட்சிக் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரனையும் தோழர் நல்லகண்ணுவையும் தொடர்புகொண்டு, 'கலைஞரின் கைதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்' என்று கதறியதோடு, மேலும் பல திரைக்கலை ஞர்களுக்குத் தொலைபேசி மூலம் இதே கருத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தேன். இடையில் என்னிடம் தொடர்பு கொண்டார் வீரமணியார். 'என்னய்யா! 'சித்தி' தொடர் போய், இப்போது 'கலைஞர்' தொடரா?' என்று கேட்டுச் சிரித்தார்!


'பெரியார் திரைப்படம்' எனது இலட்சியக்கனவு. மாபெரும் புரட்சியையும் மகத்தான சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில், பெரியாரின் வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முடிவெடுத்தேன். அந்த சிந்தனையை 2003-ம் ஆண்டு அறிவித்து, வேலைகளைத் துவக்கினேன்.

( திரும்பவும் எடுங்க, ஸ்கூல் பசங்களை எல்லாம் கூட்டிக்கிட்டு போங்க யார் உங்களை தடுக்க போறாங்க )

அந்தப் பெருமை எனக்கு வந்து விடக்கூடாது என்று நினைத்தார் வீரமணி. உடனே, பெரியாரைப் பற்றியோ, சமூக மாற்றத்துக்கு அவசியமான அந்தக் கொள்கை பற்றியோ துளியும் அறிந்திராத ஒருவருக்கு... 'பெரியார்' படமெடுக்கும் அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். மக்கள் மத்தியில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டிய அந்தப் 'பெரியார்' திரைப்படம் கடமைக்காகவும் கணக்குக்காகவும் பலவீனத்தோடு எடுத்து முடிக்கப்பட்டது. என்னை ஒதுக்குவதாக நினைத்து, பெரியாரையே வஞ்சித்த வரலாற்றுப் பிழைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார் வீரமணி.

அவரோடு நீங்களும் கொஞ்சிக் குலவுவதைப் பார்த்தால்... பெரியாரின் மீது அவருக்கு இருக்கும் அளவுக்குத்தான் உங்களுக்கும் மதிப்பும் மரியாதை யும் இருக்கிறதோ என்கிற குழப்பம் என்னைப் போன்றவர்களுக்கு எழுமா, எழாதா?

( சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கியவரை பார்த்து இப்படி பேசலாமா ? )

அதுமட்டுமா... 'ஆடி வெள்ளி'யிலிருந்து 'பாளையத்தம்மன்' வரை மூடநம்பிக்கைகளையே மூலதனமாகக்கொண்டு திரைப்படங்களை எடுத்து வரும் எனது அருமை நண்பர் ராம.நாராயணனுக்கு 'அண்ணா விருது' கொடுத்து மகிழ்கிறீர்கள்! மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, பகுத்தறிவைப் பரப்புவதையே தன் முழு நேரத் தொழிலாகக் கொண்டு, தன் மொத்த வாழ்க்கையையே தியாகம் செய்த 'அண்ணா'வின் பெயரால் வழங்கப்படும் விருதை, திரைப்படங்களில் பிலிமை விட வேப்பிலையை அதிகமாக பயன்படுத்திய ராம.நாராயணனுக்கு வழங்கியது உங்களுக்கே நியாயமாகப்படுகிறதா?!

( கலைஞர் டிவிக்கு உழைத்த எங்கள் தலைவர் ராம.நாராயணனுக்கு எதிராக இப்படி பேசுவதா, கலைஞர் டிவிக்கு எவ்வளவு படம் வாங்கி கொடுத்துள்ளார். அவர் பேரிலேயே ராமர் + நாராயணன் இருக்கு அதை சொல்லாம வீட்டுவிட்டீர்களே )

ஆனால், தமிழ்த் திரைப்படத்துறையில் பகுத்தறிவை மட்டுமே பரப்புகிற திரைப்படங்களை எடுக்கும் என்னை முழுக்க முழுக்க புறக்கணித்திருக்கிறது உங்கள் அரசு. இது பகுத்தறிவுக்கு நீங்கள் செய்யும் நீதியா? இல்லை, வீரமணியால் ஏற்பட்ட குழப்பமா?

( பகுத்தறிவு குழப்பதால் பெரியாரின் நாய் பால் இல்லாமல் தவித்து போனது. இப்ப இந்த குழப்பம் வேறா நல்லது )

மக்களை மழுங்கடிக்கும் கீழ்த்தரமான திரைப்படங்கள் எல்லாம் எந்த இடையூறுமில்லாமல் தணிக்கை செய்யப் பட்டு வெளிவருகிறது. ஆனால், சமூக பொறுப்போடும் புதிய சிந்தனைகளோடும் எடுக்கப்பட்ட என்னுடைய 'காதல் அரங்கம்' திரைப்படம், டெல்லி டிரிபியூனல் சென்று விளக்கங்களைக் கொடுத்தும் இன்றுவரையில் வெளியிட முடியாமல் முடக்கப்பட்டுக் கிடப்பது யாரால் என்பதை நானும் அறிந்துதான் வைத்திருக்கிறேன்!

( அதையும் சொல்லவேண்டியது தானே இது மாதிரி உதார் எல்லாம் விட வேண்டாம் )

வீரமணி போல மாபெரும் சக்திகள் எத்தனை வந்து என்னை தடுத்தாலும் சரி... என் பகுத்தறிவு பிரசாரம் மட்டும் உயிர் இருக்கும் வரை ஓயாது, ஓயவே ஓயாது..!'

( கலைஞர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார், வைகோ எழுதுகிறார், முரசொலியில் இளைஞருக்கு கடிதம், சரத்குமார் கடிதம், வேலுபிரபாகரன் கடிதம், தேர்தல் கமிஷனுக்கு கடிதம், இப்படி ஏகபட்ட கடித போக்குவரத்து நடக்கும் போது பாடிகாட் முனீஸ்வரனுக்கு நான் எழுதிய கடிதம் எப்படி போய் சேரும் ? )

Read More...

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்தால் பேராபத்து: ஜெயலலிதா எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நிடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா எச்சரித்துள்ளார். முழு அறிக்கை கீழே...

எல்.டி.டி.ஈ., இயக்கத் தின் மீதான தடையை மத்திய அரசு நீட்டிக்கவில்லை, தடை செய்யப் பட்ட எல்.டி.டி.ஈ., இயக்கத்தினரை ஆதரிப்பதில் தவறில்லை என்றும், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நிவடுகளில் இதுபோன்ற செயல்கள் குற்றமாக கருதப்படவில் லை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித் துள்ளார். இது கருணாநதி சொல்லித்தான் திருமாவளவன் பேட்டியாக வெளிவந்திருக்க வேண்டும்.

அதாவது 2007ல் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்படவில்லை என்று திருமாவளவன் சொல்லியிருக்கிறார். இரண்டாண்டுக்கு ஒரு முறை தான் எல்.டி.டி.ஈ., மீதான தடையை மத்திய அரசு நீடிக்கும். தற்போதும் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் தான்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த காரணத்தினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தை மத்திய அரசு தடை செய்தது என்பதை சோனியா உள்ளிட்ட மத்திய, மாநல அரசுகளுக்கு நினைவூட்டுவது எனது கடமை. எட்டாண்டுகளாகியும் கொலைக் குற்றவாளிகள் மீதான தண்டனை நறைவேற்றப்படவில்லை.

ராஜீவை கோரமான முறையில் கொன்றவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சோனியாவுக்கு அக்கறையில்லையா? மத்திய ஆட்சியில் அங்கம் வகித்துக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன் மறைவுக்கு கருணாநதி கவிதாஞ்சலி செலுத்தினார். இந்த செயல் மத்திய அரசுக்கு விடுக்கும் சவால். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் காஷ்மீர், பஞ்சாப், அசாம் மற்றும் வடகிழக்கு மாநலங்களில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய பேராபத்தாக மாறிவிடும். "பொடா' சட்டத்தை ரத்து செய்ததே தவறு என்பதை இனிமேலாவது உணர்ந்து, அதை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுவதே பயங்கரவாதத்தை வேரறுக்க உதவும்.

Read More...

Tuesday, December 18, 2007

கூகிளில் இந்தியர்கள் அதிகம் தேடுவது எது

CNN-IBN'ல் வந்த செய்தி - இந்தியர்கள் அதிகம் தேடும் பட்டியல்

முதல் இடத்தில் Orkut, விளையாட்டில் - சானியா மிர்சா, அரசியல் தலைவர் - காந்தி அப்பறம் இணையத்தில் ஓசி சினிமா எங்கே கிடைக்கும் என்று நிறைய தேடுகிறார்களாம் !

இட்லிவடையில் என்ன தேடுகிறார்கள் என்று இப்ப பார்த்தேன் - அர்த்தமுள்ள இந்து மதம் :-)

Read More...

நெல்லை மாநாடு முடிந்து பிறகு வந்த செய்திகள்

கண்ணில் பட்ட சில செய்திகள்...

ஸ்டாலின் பேச்சு:
* நெல்லை மாநாட்டின் வெற்றி நாங்களே எதிர்பாராதது'
* தொண்டர்களின் கட்டுப்பாடு என்றால் என்ன என்பதற்கு இந்த மாநாடு உதாரணம்.
* "இளைஞர்கள் நடத்த வேண்டிய போராட்டம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம். இளைஞர்களுக்கு பதவி வழங்குவது மட்டும் மகிழ்ச்சி தருவதல்ல; போராட்டங்கள், தியாகங்கள் மேற்கொள்வதும் மகிழ்ச்சி தருவதுதான்" ( முதல்வர் கருணாநிதி தொண்டர்கள் எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும் என்றாரே அது என்ன, எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் )

* - * - *
திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்காக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி திங்கள்கிழமை ஆஜரானார்.

* - * - *
இந்த மாநாட்டின் போது, பஸ் மோதி இறந்த காவலர்கள் இரண்டு பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 2 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அந்த காவலர்களின் குடும்பங்களுக்கு கட்சியில் இருந்து தலா ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

மேலும், மாநாட்டுக்கு வந்துவிட்டு ஊர் திரும்பு போதும் கும்பகோணம் அருகே நிகழ்ந்த விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும்

* - * - *
மு.க.ஸ்டாலின் நல்ல உழைப்பாளி; அவரது உழைப்புக்கு பலனாக தகுதியான தலைவராக வருவார் என, திமுக பொதுச்செயலரான அமைச்சர் க.அன்பழகன் கூறினார்.
* - * - *
நெல்லையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநில மாநாடு திமுக மீது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
* - * - *
உண்மையான ஜாதி ஒழிப்புக்கு திமுக தயாரா என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : நெல்லையில் நடந்து முடிந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதல்வர் கருணாநிதியும், இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலினும் ஜாதி ஒழிப்பு பற்றி தீவிரமாக பேசியுள்ளார்கள்.

ஜாதி தீயை அணைக்க வேண்டிய பெரும் பொறுப்பு திமுக இளைஞர்களிடம் கொடுக்கப் பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். ஜாதிகளை ஒழிப்போம், ஜாதி தீயை அணைப்போம். இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

ஜாதி தீயை மூட்டி அதில் குளிர்காய்ந்து அரசியல் லாபம் அடைந்து வருபவர்கள், ஜாதியையும், பதவியையும் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஜாதி ஒழிப்பை மேடையில் மட்டுமல்லாமல் செயலிலும் (தேர்தலிலும்) காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* - * - *

Read More...

Monday, December 17, 2007

ஆற்காடு வீராஸ்வாமி x ராமதாஸ் - பாகம்-2

ஒரே பதிவில் போடுவதால் படிக்க கஷ்டமாக இருக்கிறது என்று வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த பதிவு பாகம் இரண்டாக

ஆற்காடு வீராஸ்வாமி பேட்டி - ஜூவி
அன்புமணி ராமதாஸ் - பேட்டி



''தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்கிறதா இல்லையா... ஒளிக்காமல் சொல்லுங்கள்?''

''தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என்று நான் எப்போதும் சொல்லவில்லை.

நாம் இப்போது உற்பத்தி செய்யும் மின்சாரத்தைவிட 800 மெகாவாட் நமக்குக் கூடுதலாகத் தேவை. மத்திய அரசின் தொகுப்பிலிருந்து நமக்குக் கிடைக்கவேண்டிய மின்சாரம்... அதாவது நெய்வேலி, கல்பாக்கம், ராமகுண்டம் போன்ற அனல் மின்நிலையங் களிலிருந்து கிடைக்க வேண்டிய 1000 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைக்கவில்லை.

எப்போதும் ஜனவரி இருபதாம் தேதி வரை காற்று நன்றாக வீசும். ஆனால், இந்த வருடம் அக்டோபர் மாதம் முதலே காற்று சரிவர வீசவில்லை. இதனால் காற்றாலை மின்சாரமும் நமக்குப் போதுமான அளவு கிடைக்கவில்லை. இது இயற்கை செய்த சதி!

இன்னொரு தகவலும் உங்களுக்கு சொல்கிறேன்... தமிழகத்தில் செப்டம்பர் மாதம் வரையில் மின்சாரம் உபரியாக இருந்தது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு அதை விற்பனை செய்தோம். இப்போது நமக்கு ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அஸ்ஸாம், ஹரியானா மாநிலங்களுடன் ஒப்பந்தம் போட்டு 300 மெகாவாட் மின்சாரம் வாங்க இருக்கிறோம்.

மின்தடையை முடிந்த மட்டிலும் குறைத்து இருக்கிறோம் என்பதே உண்மை.

இன்னொரு பக்கம், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 700 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகத் தேவைப் படுகிறது. இதற்கு தி.மு.க. ஆட்சியில் புதிய தொழிற் சாலைகள் ஏற்பட்டதும் ஒரு காரணம். தவிர, நம் மாநிலத்தில் மின் இணைப்புக்காக விண்ணப் பிக்கும்போது பயன் படுத்த கேட்கும் மின்சாரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். நடிகர் சரத்குமார்கூட, மின்வெட்டு பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதனைத் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், சரத்குமார் தன் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டபோது எவ்வளவு மின்சாரம் தேவை என்று கேட்டாரோ, அதைவிடப் பத்துமடங்கு மின்சாரம் இப்போது பயன்படுத்துகிறார்! குளிர்சாதன வசதி, வாஷிங் மிஷின், கிரைண்டர், மின்விசிறி, மின்சார மோட்டார் போன்ற பல அத்தியாவசிய வசதிகள் சரத்குமார் போன்றவர்களுக்கு அவசியம்தானே..?

இப்படித்தான் ஒவ்வொருவரும் தனக்கு இவ்வளவு மின்சாரம் தேவை என்று கேட்டு, கனெக்ஷனை வாங்கி, அதன் பிறகு நிறைய மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அப்போது எதிர் பார்ப்பையும்விட கூடுதலாக மின்சாரம் தேவைப்படும்தானே?

டாக்டர் ராமதாஸ் 'மின்தட்டுப் பாட்டை ஏன் முன்கூட்டியே சமாளித்து அதற்கேற்ப திட்டமிடவில்லை?' என்கிறார். நாங்கள் திட்ட மிட்டுத்தான் மதுராந்தகம் அருகே செய்யூரில் மின்சார நிலையம் அமைக்க முன்வந்தோம். உடனே, 'அங்கே அமைக்கக்கூடாது' என்று ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினார். உடன்குடியில் தொடங்கலாம் என்றபோதும், தியாகவல்லியில் தனியார் மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதிக்கலாம் என்றபோதும்கூட இதே கதைதான். அவரைப் பொறுத்தவரையில், தி.மு.க-வுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்ற ஒரே அச்சம்தான்! கடலோர பகுதியில் அமையவிருக்கும் இந்தத் திட்டங்களை 'விளைநிலத்தில் அமைப்பது தவறு' என்கிறார். கடலோரம் எப்படி விளைநிலம் ஆகும்? ராமதாஸ் போராட்டம், அறிக்கையெல்லாம் மக்களுக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது!''

''ராமதாஸ், குறிப்பாக உங்களைக் குறிவைத்து அறிக்கைத் தாக்குதலில் இறங்க, தனிக் காரணம் உண்டா?''

''டாக்டர் எல்லோர் மீதும்தான் குறிவைத்தார். முதலில் லாட்டரி சீட்டு பற்றி பேசினார். இப்போது அதுபற்றிப் பேசுவதில்லை. அதன்பிறகு போதை பாக்கு வியாபாரிகளைப் பற்றிப் பேசினார். இப்போது பேசவில்லை... இதெல்லாம் ஏன்..? அவர்தான் சொல்ல வேண்டும்!

'இருநூற்று ஐம்பது ஏக்கர் ஏரிக்கரை விளைநிலத்தில் கல்லூரி கட்டி இருக்கிறார் ராமதாஸ்' என்று நான் சொன்னதும் 'நூற்றாண்டுக்கு மேல் அந்த இடம் பயன் படாமல் இருந்தது' என்கிறார். 'விளைநிலம் என நிரூபித் தால் அரசியலை விட்டு விலகத் தயார்' என்கிறார். அவர்கள் கல்லூரி அமைந்திருக்கும் இடம் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்டபோதே விளைநிலங்களாகத்தான் இருந்தன. அவற்றின் 'ரெவின்யூ ரிக்கார்டு' என்று சொல்லப்படும் சிட்டா அடங்கல் வாங்கிப் பார்த்தால் தெரியும். இதுபோல, அரசு புறம்போக்கு நிலம்கூட வன்னியர் அறக்கட்டளையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஆனால், அவரோடு லாவணி கச்சேரி பாடுவதற்கு எங்களுக்கு நேரம்தான் இல்லை...''


( சட்டத்திற்கு விரேதமாக புறம்போக்கு நிலங்களை ஆக்கரமிப்பு செய்தார் என்று ஆதாரம் இருக்கு என்றால் ஏன் சட்டபடி நடவடிக்கை எடுக்க கூடாது ? )


''முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை யிலுள்ள தாதாக்களுக்கெல்லாம் நீங்கள்தான் அடைக் கலம் தருவதாக சொல்லியிருக்கிறாரே?''

''எனக்கு தாதாக்கள் யாரையும் தெரியாது. ஜெயக்குமார் போன்றவர்களை மட்டும்தான் தெரியும்!''

''ராமதாஸ் உங்களுக்கு பதில் சொல்லும் அறிக்கையில் 'அப்பு' என்ற பெயரை குறிப்பிட்டுள்ளாரே...! அவர் குறிப்பிடும் 'அப்பு' யார் என்று உங்களுக்குத் தெரியும் தானே...?''

''ராமதாஸ் குறிப்பிடுவது யாரை மனதில் வைத்து என்று புரிகிறது. ஆனால், அவருக்குத் தைரியமிருந்தால் கிசுகிசு பாணியில் சொல்லாமல் வெளிப்படையாக சொல்லட்டும். அதன்பிறகு நான் பதிலடி கொடுக்கிறேன்!''

''சரி... தி.மு.க. கூட்டணி யில் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறதா இல்லையா?''

''இதற்கு பதிலை டாக்டர் ராமதாஸ்தான் சொல்ல வேண்டும். 'தேர்தலுடன் கூட்டணி முடிந்து விட்டது' என்கிறார். அவரேதான், '2011 வரை தி.மு.க. ஆட்சியை ஆதரிப்போம்' என்கிறார்! தினம் ஒரு குற்றச்சாட்டு சொல்லிக் கழக ஆட்சியை விமர்சிக்கிறார். இதற்கு எல்லாம் எங்களுக்கு உண்மையாகவே பொருள் புரியவில்லை! தி.மு.க-வைப் பொறுத்தவரை, நாங்களாக யாரையும் கூட்டணியை விட்டு வெளியேற்றுவது இல்லை. அவர்களாக வாய்க்கு வந்தபடி பேசி வெளியேறினால், நாங்கள் என்ன செய்ய முடியும்?''

''நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்குக் கூட்டணிக் கட்சி என்ற முறையில் டாக்டருக்கு அழைப்பு உண்டா?''

''தம்பி மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி சார்பில் டாக்டர் ராமதாசுக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல... எல்லா தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்!''

''மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேச வாய்ப்பு உண்டா?''

''யார் யார் பேசுவார்கள் என்று முரசொலியில் விளம் பரப்படுத்தி இருக்கிறார்களே... அவர்களுக்கு மட்டுமே பேச அனுமதி. பொருளாளர் என்ற முறையில் எனக்கோ, முதன்மை அமைப்புச் செயலாளர் என்ற முறையில் அமைச்சர் துரைமுருகனோகூட மாநாட் டில் பேச அனுமதி இல்லை.''

''ஸ்டாலினுக்கு எப்போது புரமோஷன்?''

''அதைத் தலைவர் முடிவு செய்வார். தம்பி ஸ்டாலினுக்கு எப்போது பதவி உயர்வு தரவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். 'ஸ்டாலின் தலைமை ஏற்கத் தயார்' என்று கடந்த இரண்டு ஆண்டுகாலமாக பேராசிரியர் சொல்லி வருகிறார். என்னைப் போன்றவர்களுக்கும் தம்பி ஸ்டாலின் தலைமை ஏற்பதில் எந்த சங்கடமும், தயக்கமும், ஆட்சேபணையும் இல்லை. ஆனால், உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது- அவர் தலைவரின் மகன் என்பதால் அல்ல... மிசாவில் எங்களோடு சிறையில் இருந்தபோது அவர் அடிபட்டு, உதைபட்டு சிட்டிபாபு அவர்களால் காப்பாற்றப்பட்டு, இன்றைக்கு மாதத்தில் இருபத்தைந்து நாட்கள் மனைவி மக்களை எல்லாம் விட்டுவிட்டு சுற்றுப்பயணம் செய்து, இந்த நாட்டுக்கும் கட்சிக்கும் உழைக்கிறார். அவர் தலைமை ஏற்க இதைவிட என்ன தகுதி வேண்டும்?''

''கனிமொழி எம்.பி. எப்போது மத்திய அமைச்சர் ஆவார்?''

''இந்த மாதிரி கேள்வி எல்லாம் என்னிடம் நீங்கள் கேட்கக் கூடாது. இதுபற்றி முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பவர் தலைவர் கலைஞர். 'கனிமொழிக்கு அமைச்சராகும் தகுதி இருக்கிறது' என்பதற்கு, சில தினங்களுக்கு முன் மாநிலங் கள் அவையில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து அவர் பேசிய பேச்சே சாட்சி. மற்றபடி யாரை அமைச்சராக்க வேண்டும் என்பதையெல்லாம் தலைவர் கலைஞர்தான் முடிவு செய்வார்!''

''தனியாருக்கான அனல் மின் நிலைய அனுமதி வழங்கக் காரணம், 'உங்களுக்கு வேண்டிய ஒருவருக்குக் காட்டும் சலுகைதான்' என்று டாக்டர் ராமதாஸ் சொன்னார். உடனே நீங்கள், 'இதுபற்றி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று பதில் சொன்னீர்கள். வேல்முருகனிடம் அப்படி என்ன மர்மம் இருக்கிறது?''

''நான் அவசரப்பட விரும்பவில்லை. வேல்முருகன் சொல்கிறாரா என்று கொஞ்சநாள் பார்ப்போமே... அவர் சொல்லவில்லையென்றால், அதன்பிறகு நான் சொல்கிறேன். இப்போதுகூட அனல் மின்நிலையத்துக்கு அனுமதி தர இருந்த இடம் என்று வேல்முருகன் ஏர் உழுவதுபோல் ஒரு படம் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. அதுகூட பொய்தான்! மின் நிலையம் அமைய இருந்த இடத்துக்கு 500 மீட்டர் தள்ளி இருந்த இடத்தில் உழுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அனல் மின் நிலையத்துக்கான இடம் என்று உண்மைக்குப் புறம்பாகக் கூறுகிறார். நான் வம்புக்காக ஆதாரமில்லாத விஷயங்களைப் பேசுவது கிடையாது. எல்லா மர்மத்துக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. தேவையானால், உரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவேன்!''

''தமிழ்நாட்டில் புதிய திட்டப்படி 'ஆறரை ஆண்டு மருத்துவக் கல்வி திட்டம் அமலுக்கு வராது' என்று முதல்வர் சொல்லி இருக்கிறாரே? இந்த சட்டம் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங் களுக்கும் பொதுவானதுதானே..?''

''இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிறகு தானே அமலுக்கு வரமுடியும்..! அங்கே இந்த சட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்காது. பி.ஜே.பி. ஆதரிக்காது. கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கமாட்டார்கள். தி.மு.க-வும் ஆதரிக்காது. அப்புறம் எப்படி இந்த சட்டம் நிறைவேறும்? டாக்டர் அன்புமணி மட்டும் ஐந்தரை ஆண்டு மருத்துவக் கல்வி படித்துவிட்டு டாக்டர் ஆவாராம். மற்றவர்கள் எல்லாம் ஆறரை ஆண்டு, ஏழரை ஆண்டு படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினால் எப்படி..?''

''உத்தரமேரூரில் ஒரு திருமண வீட்டில் உங்களைப் பற்றி, 'மின்வாரியத்தில் கிளார்க்காக இருந்தவர்தானே' என்றும், 'எதிர்க்கட்சிகளுக்கு உளவு சொன்னவர்தானே' என்றும் ராமதாஸ் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறதே?''

''இதுபற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை. அவரை மாதிரி தரம்தாழ்ந்த அரசியல் செய்து எனக்கு ஒருபோதும் பழக்கமில்லை. எல்லாவற்றையும் என் தலைவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் அறிவுரையின்படி நடந்து கொள்வேன்!''





அன்புமணி ராமதாஸ் சேலத்தில் பேட்டி: (17/12/07)

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்களில் நவீன வசதிகளை செய்யவும், விரிவாக்கம் செய்யவும் நடப்பு ஆண்டுக்கு ரூ.450 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பீகார், மத்தியப் பிரதேசம், உ.பி போன்ற பின் தங்கிய மாநிலங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்து மாணவர்கள் கட்டாய கிராமப்புற சேவை குறித்து நான் இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய சாம்பசிவ ராவ் கமிட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 வாரத்தில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

ஆற்காடு வீராசாமிக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் இடையிலான அறிக்கைப் போர் முடிந்து விட்டது. அவர் ஏதோ சொன்னார். அதற்கு ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை வன்னியர் அறக்கட்டளைக்கு நேரில் அழைத்துச் சென்று உண்மையை விளக்கினார்.

திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தாலும், மக்கள் பிரச்சனைகள் சுட்டிக்காட்டும் எதிர்கட்சியாகவே செயல்படும். பொதுமக்கள் பிரச்சனைகளை சொல்ல ஒருபோதும் தயங்கமாட்டோம்.

சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம், துணை நகரம் அமைப்பது தொடர்பாக நாங்கள் நியாயமான எதிர்ப்புகளை காட்டினோம். எந்த ஒரு திட்டத்துக்காகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

துணை நகரம் அமைக்கும் இடத்தை பாமகவினர் ஆக்கரமிப்பு செய்திருப்பதால் தான் அத்திட்டத்தை எதிர்ப்பதாக இப்போது ஆற்காடு வீராசாமி கூறி வருகிறார். அவர்கள் அரசுதானே நடக்கிறது. ஆக்கிரமிப்புகள் நடந்திருந்தால் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே.

ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்துக்கும் ராமதாஸ் தான் பிரதிநிதியா என்று ஆற்காடு வீராசாமி கேட்டுள்ளார். இவரே தான், ஒவ்வொரு வன்னியரும் தங்களது வீடுகளில் ராமதாசின் புகைப்படத்தை வைத்து பூஜிக்க வேண்டும் என்று 2 கூட்டங்களில் பேசியுள்ளார்.

ஆற்காடு வீராசாமி என்ன சொன்னார் என்பதற்கெல்லாம் இனியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நேரம் வந்தால் நாங்களும் சொல்ல வேண்டியதை சொல்வோம்.

கோடை காலத்தில் மின்வெட்டு வரும். ஆனால் தமிழகத்தில் குளிர்காலத்தில் கூட மின்வெட்டு வருகிறது. இதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் தமிழகம் தான் சுகாதாரத்தில் முதல் மாநிலமாக உள்ளது. இதே இப்படி என்றால் மற்ற மாநிலங்கள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.600 கோடியை பசுமை தாயகம் அமைப்புக்கு ஒதுக்கி விட்டதாக என்மீது குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமி என்று ஒருவர் அரசியலில் இருக்கிறார் என்பதையே மக்கள் மறந்து நெடு நாட்களாகிவிட்டது. நானும் அரசியலில் இருக்கிறேன் என்பதை மக்களுக்கு நினைவூட்டவே இப்படி ஏதாவது கூறி வருகிறார். அரசு நிதியில் இருந்து ரூ.600 கோடியோ, 6 கோடியோ அல்லது 6 பைசாவோ கூட எடுக்கவில்லை.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகனும் கூறியுள்ளார். தாதாக்கள், குற்றவாளிகள் எல்லாம் அரசியலில் புகுந்தால் இப்படித்தான் நடக்கும் என்றார் அன்புமணி.

பாகம் - 1

Read More...

திமுகவின் கடிகாரம்

கடிகார முட்கள் பற்றி வைரமுத்து, கலைஞர் பேச்சு.. கடைசியில் இட்லிவடை படம் :-)


கடிகார முட்கள் போல்... வைரமுத்து கவித்துவமான பேச்சு

மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் ஒரு கடிகாரம் போன்றது. கடிகாரம் இயங்க 2 முட்கள் தேவை. சின்ன முள்ளும், பெரிய முள்ளும் தேவை. இரண்டு முள்ளும் இல்லாவிட்டால் காலத்தை காட்ட முடியாது. சின்ன முள் நிதானமானது, நேரம் காட்டும். பெரிய முள் சுறுசுறுப்பானது, வேகமாக ஓடும். எனவே சின்ன முள்ளும், பெரிய முள்ளும் கடிகாரத்திற்கு தேவை.

திராவிட இயக்கத்தின் மீது ஆசை உள்ளவன் என்ற முறையில் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடிகாரத்தின் முட்களைப் போல் நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். அண்ணாவின் வாழ்த்தை பெற்றவர் கலைஞர். தளபதி மு.க. ஸ்டாலினுக்கு கலைஞரின் வாழ்த்து இருக்கிறது. அவருக்கு அண்ணாவின் வாழ்த்தும் இருந்தால் அவர் பெறும் வெற்றி பொன் எழுத்துக்களில் பொறித்துக் கொள்ள வேண்டிய வெற்றியாக இருக்கும்.

வைரமுத்து பேச்சுக்கு கலைஞர் ஸ்டைலில் பதில்

காவியக்கலைஞர் காட்சிக்கு தலைமை தாங்கி வைரமுத்து பேசும் போது, கடிகாரத்தின் சின்னமுள்ளும், பெரிய முள்ளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். நான் எந்த கடிகாரம் என்று கேட்டதற்கு பதில் கூறாமல் சென்றுவிட்டார்.

என்னைப் பொறுத்தவரை எந்த முள் என்பதில் கவலை இல்லை. ஆனால் அந்த கடிகாரம் நன்கு இயங்க வேண்டும், நான் நேரம் பார்க்கும்போது நேரம் சரியாக இருக்க வேண்டும்.

ஆற்காடு வீராசாமியா, அன்பழகனா, துரைமுருகனா என்று பார்ப்பதில்லை. கழகம் நன்றாக இருக்கிறதா, பணி நடக்கிறதா என்று தான் பார்க்கிறேன்.

இட்லிவடை ஸ்டைலில் படம்


Read More...

நோ கமெண்ட்ஸ்




தொடர்புடைய பழைய பதிவு "அப்படியா?"

கடைசி செய்தி: தினமலர் ரமேஷ் விவகாரம் போது என்ன ஆச்சு, அதை பற்றி பதிவு எழுதிய கழக தோழர்கள் என்ன ஆனார்கள் ?

( படம் உதவி: தினமலர் )

Read More...

நான் வளர்ந்து வருவதால் மாநாடு நடத்துகிறார்கள்: விஜயகாந்த் பேச்சு

பா.ம.க. மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சித்தாமூர் எஸ். ஆறுமுகம் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அந்தக் கட்சியில் சேர்ந்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 2000-க்கும் மேற்பட்டோர் சித்தாமூர் ஆறுமுகம் தலைமையில் தே.மு. தி.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேச்சு கீழே....

மக்களிடம் பிரம்மையை ஏற்படுத்தவும், தங்களிடம்தான் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவும் இளைஞர் மாநாடு நடத்துகின்றனர். இந்த மாநாடு தி.மு.க. இளைஞர் அணி மாநாடா? தமிழக அரசின் மாநாடா? என்பதை மக்கள் அறிவார்கள்.

புதிதாக துவங்கிய கட்சியெல்லாம் பகுதி நேரங்களாக வந்து மறைந்து போகும் என்று கூறியுள்ளனர். அவர்கள் பேசியதை பார்த்தால் நான் வளர்ந்து வருவதைக் கண்டும், பயந்தும் இதுபோன்ற மாநாட்டை நடத்துகின்றனர்.

சாதி, மத, சண்டையை வெறுப்பவன் நான். சாதியை பார்த்து சோறு போடுவதில்லை. ஒரே சாதி சங்கத்தினருக்கு எத்தனையோ தலைவர்கள், சாதி அமைப்புகள், பிரிவு இவை எல்லாம் தேவையற்றது என்பதால்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் சாதி, சிறுபான்மை பிரிவு இல்லை.

ஏழ்மையை போக்குவதுதான் அரசாங்கத்தின் பணி. எதையாவது சொல்லி ஓட்டுக்களை வாங்குபவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். மாபெரும் இயக்கங்களை எதிர்த்து தெய்வத்தின் வடிவில் உங்கள் உருவத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நம்பி தே.மு.தி.க.விற்குதான் இனி ஓட்டு என்ற மாபெரும் புரட்சியை உங்களால்தான் உருவாக்க முடியும்.

கொள்கை இல்லையென்று கூறுகின்றனர். 5 வருடத்தில் மாறிமாறி கூட்டணிகளை அமைத்துக் கொள்வது கொள்கையா? என்னை பொறுத்தவரை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவையென்றும் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று யாரை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள். நான் ஏற்கனவே இலவச கலர் டி.வி.க்கள் விற்பனை செய்வதாக கூறியதை கண்டு கொள்ளாதவர்கள், இன்று விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறுகின்றனர்.

50 ஆண்டு காலம் எங்கள் கட்சிதான் பலமாக இருக்கிறது என்று சொல்கிறவர்கள் இடையிடையே காணாமல் போனார்களே ஏன்? குறிப்பாக 1977 முதல் 87 வரைக்கும் மக்கள் மன்றத்தில் தலை காட்ட முடியாது ஏன்? எனவே மக்கள் நினைத்தால் மாற்றம் வரும். புரட்சி மலரும் நீங்கள் ஒவ்வொரும் பிரச்சார பீரங்கிகளாக மாறி அந்த நல்ல மாற்றத்தை உருவாக்கிட வேண்டும்.

அந்த சக்தி உங்களிடம் இருக்கிறது. நமக்கு பக்க துணையாக ஆண்டவனும், மக்களும் இருக்கிறார்கள். மாற்றம் வந்தே தீரும். அது நம்மால்தான் முடியும்.

நேற்றைய செய்தி:

திடீர் கட்சிகளையும், அதன் "மின்மினித்' தலைவர்களையும் இனங்கண்டு ஒதுக்கித் தள்ளுங்கள்' - கவிஞர் தமிழச்சி
( கவிஞர் தமிழச்சி பல காலமாக அரசியலில் இருக்கிறாரா ? யாராவது சொல்லுங்கப்பா !)


Read More...