"எனக்குத் துணையாக இருக்கின்ற முதல்வர்" என துணை முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி சென்னை பெரம்பூர் மேம்பாலத் திறப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை கலைஞர் பேசியதைத் தொடர்ந்து தி.மு.க.வில் ஸ்டாலின் தரப்பு உற்சாகத்தில் இருக்கிறது
‘கலைஞருக்குப் பிறகு தலைவராக யாரையும் ஏற்க மாட்டேன்’ என்ற அழகிரியின் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து சகோதரர்களுக்கு இடையிலான விரிசல் மேலும் வலுப்பெற "நீயா நானா" என்ற ரீதியில் மோதல் ஆரம்பம் ஆனது.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி "நான் கொடுத்த பேட்டியில் தலைவர் கலைஞரை தவிர வேற ஒரு தலைவரை ஏற்க யாருக்கு மனம் வரும் ? என்று சொன்னதை அந்த பத்திரிக்கை திரித்துக் பிரசுரித்துள்ளார்கள். 'தலைவர் கலைஞர், அடுத்தது யார் என்று அடையாளம் காட்டியிருப்பது முதலமைச்சர் பதவியை தானே ஒழிய அது கட்சி தலைவர் பதவி இல்லை. கட்சி தலைவர் பதவி என்பது பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டும். முதலமைச்சர் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அது யார் வேண்டும் என்றாலும் இருக்கலாம்" என்று அழகிரி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
பொன்னாகரம் இடைத்தேர்தல் பற்றி கேள்வி கேட்ட போது "இனி வரும் தேர்தலில் எவ்வளவு வித்தியாசத்தில் திமுக ஜெயிக்கும் என்று கேளுங்கள் நான் சொல்லுகிறேன்" என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
( நன்றி: தினமலர் )
ஏப்ரல் 1 :-)
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Wednesday, March 31, 2010
நான் தலைவர், தம்பி முதல்வர் - அழகிரி அதிரடி
Posted by IdlyVadai at 3/31/2010 10:46:00 PM 17 comments Links to this post
பொன்னாகரம் வெற்றி யாருக்கு ?
எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. திமுக தோல்வி அடைந்திருந்தாலும், அல்லது அதிமுக வெற்றி பெற்றாலும் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது, ஏன் விஜயகாந்த் கட்சியே வெற்றி பெற்றிருந்தாலும் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் பா.ம.க இந்த இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு வந்தது பெரிய அதிசயம். அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அவர்களின் வெற்றியாகவே அதை நினைத்துக்கொள்ளலாம்.
ஜனவரி மாத மத்தியிலேயே தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளின் ஏகோபித்த எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட்து. திமுக முதலில் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிறகு அது சாதகமாகவே அமைந்து விட்டது.
இடைத்தேர்தலில் அமைச்சர்களின் வேலை என்னவோ அதை ஒழுங்காக செய்தார்கள். களத்தில் இறங்கி பணம், பொருள் என்று விளையாடினார்கள். பிறகு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டவுடன் முழு மூச்சுடன் இரண்டாம் கட்ட இலவச விநியோகத்தில் இறங்கியதோடல்லாமல், அவசர அவசரமாக சில அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து நல்ல பெயர் சம்பாதிக்க திமுக முனைந்த்து. இதைத் தவிர, பணம் வாங்கியவர்கள் மாற்றி ஓட்டுப் போட்டால் தெரியவரும் என்ற மிரட்டல் வேறு!
நரேஷ் குப்தா இந்த முறை டெலிவிஷனில் தோன்றி வாக்குப் பதிவு வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும், யார் யாருக்கு ஓட்டுப் போடுகிறார்கள் என்ற விஷயம் தெரியாது என்றும், அதனால் மக்கள் பயமில்லாமல் தங்கள் ஓட்டைப் பதிவு செய்யலாம் என்றும் கூறினார். ஆனால் இவ்வளவு கூறும் இவரது அரசாங்க இயந்திரத்தால் இலவச விநியோகத்தை மட்டும் தடுக்க இயலாமற் போனது ஜனநாயகத்தின் துரதிருஷ்டமே.
இனி திராவிடக் கட்சிகள் பா.ம.கவை விரட்டியடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு, இந்த இடைத்தேர்தல் திரும்பவும் பா.ம.கவை கூப்பிட பிள்ளையார் சுழியாக அமைந்துவிட்டது.
பத்திரிக்கைகள் சமீபகாலத்தில் ராமதாஸுன் காமெடி பேச்சுக்களை போடுவதை நிறுத்திவிட்டது. இனிமேல் அது மீண்டும் தொடரும்.
எந்த கட்சியுடனும் கூட்டு இல்லாமல் பா.ம.க. 41,285 வாக்குகளைப் பெற்றுள்ளது. திமுக தனித்து நின்றால் சரியான போட்டியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். போன முறை அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது, மக்களவைத் தேர்தலில் பொன்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் கிடைத்த வாக்குகள் 32,753. ஆனால் தற்போது தனித்து கிடைத்த வாக்குகள் 41,285. நிச்சயம் அதிமுக அதிர்ச்சியில் இருக்கும்.
மற்ற தொகுதிகளில், இதே கணக்கு சரிப்பட்டு வருமா என்று தெரியாது ஆனால் 2011 தேர்தலில், பா.ம.க பேரம் பேச இந்த கணக்கு நிச்சயம் உதவும். ஒரு வேளை அதிமுக இந்த தேர்தலையும் புறக்கணித்து இருந்தால், அவர்களுக்கு லாபமாக இருந்திருக்கும். அட்லீஸ்ட் டெபாஸிட் தொகை போகாமல் இருந்திருக்கும். அதிமுக வாக்குகள் பா.ம.கவிற்கு சென்றது என்று கூறியிருக்கலாம். இப்ப அம்மா இருக்கும் நிலமைக்கு அவர் கொடா நாடு சென்று நல்ல ரெஸ்ட் எடுப்பது தான் நல்லது. அங்கே கூட்டணியை பற்றி ஒழுங்காக சிந்தித்து ஏதாவது முடிவு எடுத்தால் அடுத்த முறை எதிர்கட்சியாக இருக்கலாம்.
அடுத்த தேர்தலில், அதிமுக ஒரு மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள், திமுக, காங்கிரஸ் ஒரே கூட்டணியில் இருக்கும் வரை நிச்சயம் அவர்கள் தான் ஆட்சி அமைக்கப் போகிறார்கள். இந்த தேர்தல், நிச்சயம் காங்கிரஸை சற்றே யோசிக்க வைக்க உதவும்.
Posted by IdlyVadai at 3/31/2010 12:30:00 PM 18 comments Links to this post
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Tuesday, March 30, 2010
10 பேர் 10 டிவி நிகழ்ச்சி
இந்த வாரம் டிவி நிகழ்ச்சி
1. பாரதி மணி ( எழுத்தாளர், நடிகர் ) Cyrus Broacha's 'The Week that wasn't' and Karan Thapar's Devil's Advocate...and NDTV's We The People. சத்தியமா, தமிழ் சானல் எதுவும் பார்ப்பதில்லை, நண்பர்கள்கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத்தவிர!
2. டோண்டு ராகவன் ( வலைப்பதிவர், மொழி பெயர்ப்பாளர் ) எங்கே பிராமணன்(ஜெயா டிவி ), மேகலா ( சன் டிவி )
3. ச.நா.கண்ணன் ( கிழக்கு பதிப்பகம் ) - நீயா நானா ( விஜய் டிவி), ஐ.பி.எல்.
4. Blogeswari ( விளம்பரத்துறை, வலைப்பதிவர் ) - நீயா நானா ( விஜய் ), Story Board ( CNBC )
5. இரா.முருகன்( கணினி வல்லுனர், எழுத்தாளர் ) - I was an avid watcher of 'Panorama' (BBC) and Channel 4 news by Jon Snow. Now it is watch while you work out - UTV World Movies - gems like Iranian films
6. DR.புருனோ ( மருத்துவர் ) - 2007க்கு அப்பறம் டிவி பார்ப்பதில்லை. இப்ப மெஸ்ஸில் சாப்பிடும் போது என்ன வருகிறதோ அதை பார்க்கிறேன்.
7. பா.ராகவன் ( எழுத்தாளர், Chief Editor -கிழக்கு ) - எப்பவாவது ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்ப்பேன்
8. ஜெய் ஹனுமான் ( சினிமா பார்ப்பவர், விமர்சனம் என்று கதையை சொல்லுபவர் ) - 10 நிமிடங்கள் நகைச்சுவை, 15 நிமிடங்கள் செய்தி, எப்போதாவது சேனலைத் திருப்பும்போது பழைய இளையராஜா பாடல்கள் வந்தால் அது அவ்வளவுதான் நான் டி.வி.பார்ப்பது
9. இடம் காலியாக இருக்கிறது
10. இது எப்போதும் காலி தான் :-)
Posted by IdlyVadai at 3/30/2010 05:14:00 PM 14 comments Links to this post
Monday, March 29, 2010
மண்டேனா ஒன்று
இருண்ட இதயங்கள்
”ஒருவருக்கு நமது இதயத்தில் இடமளித்துவிட்ட பிறகு அவரை எவ்வாறு மறக்க இயலும்?” இது ஏதோ ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனமாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். இல்லை!! இதுவரை வாழ்நாளில் திரைப்பட்த்தையே பார்த்தறியாத 25 வயது படைத்த பெண்ணினுடைய வார்த்தைகள். இவர் வீட்டில் தொலைக்காட்சியும் கிடையாது; தனது குடும்பத்தார் மற்றும் அண்டை வீட்டு சிறுமிகள் இருவர் தவிர இதுவரை யாருடனும் பழகியதும் கிடையாது.
சமியா முல்லாஹ் என்ற இப்பெண் தனது எதிர்காலக் கணவருடைய வருகைக்காக கடந்த ஏழு ஆண்டுகளாக்க் காத்திருக்கிறார். அவரின் எதிர்காலக் கணவர் வேறு யாருமல்ல, மும்பை செண்ட்ரல், முல்லுண்ட் மற்றும் வில்லே பார்லே ரயில் குண்டு வெடிப்புகளில் (2003) முக்கியத் தொடர்புடைய தீவிரவாதி!
இன்னும் 19 நாட்களில் நடைபெறவுள்ள அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பொழுது 27 வயதுகள் நிரம்பியிருந்த அத்னான் முல்லா, மே 5, 2003 இல் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் பம்பாய் உயர்நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மாநில அரசு உயர்நீதி மன்றத்தின் ஜாமீன் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளது.
இதற்கிடையில், மறுபடியும் திருமண ஏற்பாடுகள் மணமகள் வீட்டில் துவங்கி விட்டன. அத்னான் இன்னும் சில நாட்களில் ஜாமீனில் வெளி வந்து, தன்னை திருமணம் செய்து கொள்வார் என சமியா உறுதியாக நம்புகிறார். மேலும் தான் சென்ற வருடம் மேற்கொண்ட ஹஜ் யாத்திரைக்கு அது அல்லாஹ் தரும் பரிசாக இருக்கும் எனவும் நம்புகிறார்.
“இதுதான் என்னுடைய விதி. எங்களுடைய விதியானது 80,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டுவிட்ட்தாக எங்களுடைய இமாம் கூறியிருக்கிறார்”, என்று சமியா சொல்கிறார். விதி என்பது எப்பொழுதுமே ஒரு வசதியான வார்த்தை, முட்டாள்தனமான வாதங்களுக்கு பைத்தியக்காரத்தனமான வர்ணங்கள் கொடுப்பதற்கு.
தீவிரவாதம், பொதுவாக நாம் அறிந்தது போல், ஆண்களுடைய குரலையும், முகத்தையும் காரணிகளையும் உடையது. அவர்களுடைய நோக்கங்களையும் நாம் அறிவோம். ஆனால் அவர்களைச் சார்ந்துள்ள பெண்களைப் பற்றி? அறிந்தோ அறியாமலோ, சட்டரீதியான சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தீவிரவாதிகளுடன் கட்டுண்டுள்ளவர்கள் பற்றி? இவர்கள் தங்களுடைய கறை படிந்த வாழ்க்கைத் துணைகளை மறுதலிக்கிறார்களா அல்லது அவர்களுக்குத் துணை நிற்பதில் உறுதியாக இருக்கிறார்களா அல்லது ஒரு மறுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்களா?
இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடி, உத்திரப் பிரதேசத்தின் மேற்கில் அமைந்துள்ள, “தீவிரவாதிகளின் ஆரம்பப்பள்ளி” என்றழைக்கப்படும் மாவட்டமான “ஆஸம்கார்க்” ற்குப் பயணம் மேற்கொண்டோம். அங்கு முதலில் செல்வதே பெரிய விஷயம், பிறகு அங்குள்ள பெண்களிடம் பேசுவது. அங்குள்ள பெண்கள் பேசா மடந்தைகளாகவும், அணுகுவதற்கே கடினமானவர்களாகவும் இருந்தனர். இவ்வாறான இடங்களில் அவர்களை நேரடியாக அணுகவும் முடியாது. அவர்களுக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதை விட எதுவும் தெரியாது என்பதே நிதர்ஸனம், அவர்கள் கதறி அழுவதை மட்டுமே நாம் காண இயலும்.
அங்கு நாம் ஆயிஷா என்பவரைச் சந்தித்தோம். அவருடைய கணவர், தாரிக் முகமது கஸ்மி, 32 வயதாகும் யுனானி மருத்துவர். 2007 இல் நடைபெற்ற பைசாபாத், பராபங்கி மற்றும் லக்னோ குண்டு வெடிப்புகளின் மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர். இவர்தான் உத்திரப் பிரதேச ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமியின் பிராந்தியத் தளபதியாக போலீஸாரால் கருதப்படுபவர்.
தாரீக் தற்போது லக்னோ அருகிலுள்ள உன்னாவ் சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கிறார். ஆயிஷா தற்போது சமோபூர் மற்றும் அன்வாக் கிராமங்களுக்கிடையே, அவருடைய தாய் வீட்டிற்கும் மாமியார் வீட்டிற்குமாக பந்தாடப்படுகிறார். 22 வயதேயுடைய அவர் இப்போது நான்கு குழந்தைகளுக்குத் தாய். மூத்த மகனுக்கு வயது 7, இளையவனுக்கு 3.
2007 இல் தாரீக் கைது செய்யப்பட்ட்திலிருந்து இதுவரை ஆயிஷா இவரை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. “சந்தித்தும் என்ன செய்யப் போகிறாள்?” இவர்கள் இருக்கும் கிராமத்திலிருந்து லக்னோ சிறைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்வதற்கு அரை நாள் தேவைப்படும். மிகவும் சிரம்மான பயணம் என அவரது தந்தை முகமது அஸ்லம் கூறுகிறார்.
அவரைப் பேச வைப்பதே மிகுந்த சிரம்மாக இருந்த்து. வெகு நேரம் மெளனமாகவே இருந்தார். “உங்களுக்குத் திருமணமாகி எவ்வளவு காலம் ஆகிறது?” என்று கேட்டேன். ஒன்பது ஆண்டுகள் என பதிலளித்தார். அப்பொழுது அவருடைய மகள் ஜோஹா வந்து அவரை அணைத்துக் கொண்டார். அப்பொழுதுதான் பள்ளிலியிலிருந்து திரும்பியிருந்தாள். நீங்களும் உங்கள் மகளைப் போன்று கல்வி கற்பதற்கு விரும்பவில்லையா என்று கேட்ட்தற்கு, நான் கல்வி கற்க மிகுந்த விருப்பமுடையவளாக இருந்தேன்; தவிர என் தந்தையிடம் அதற்காக மன்றாடியிருக்கிறேன் ஆனால் அவர் என்னை அனுமதிக்கவில்லை, என்று அவரது தந்தையைப் பாராமலேயே கூறினார்.
அவருடைய தந்தைக்கு தாரீக்கினுடைய தந்தையைத் தெரியும். ஆயிஷா தனது ஐந்தாம் வகுப்பு படிப்பை முடித்த்துவுமே இருவருடைய திருமணத்தையும் அவர்களுடைய தந்தையர் நிச்சயித்து விட்டனர். ஆனாலும் ஆயிஷா தனது திருமணத்திற்குப் பிறகே தாரீக்கை முதன் முறையாகப் பார்த்தார். ஆனாலும் அவர்களுடைய உறவு எவ்வித ச்ச்சரவுகளும் இல்லாமல் மிகுந்த சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது. இயல்பாகவே அவர் மிகவும் நல்லவர் என்கிறார் ஆயிஷா.
தாரீக் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்கு பத்து நாட்கள் பிறகே அவரைக் கைது செய்த்தாக போலீசார் கூறுகின்றனர். இதே போன்று இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், RDX வெடிமருந்து வைத்திருந்த குற்றத்திற்காக.
இந்தியாவில் தினமும் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு ஆசம்கார்கில் இருக்கும் இளம் முஸ்லிம் சிறுவர்கள்தான் காரணம் என்று சொல்லி உங்களை போலீசார் நம்ப வைத்து விடுவார்கள். ATS என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன Anti-Muslim Squad ஆ? என்று அப்துல் ரஹ்மான் என்பவர் குமுறுகிறார். இவருடைய 22 வயது மகனான சஃபியுர் ரஹ்மான் அஹமதாபாத், சூரத், ஜெய்ப்பூர் மற்றும் தில்லி குண்டுவெடிப்புகளில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரசாங்கம் ஒரு சட்டப்பூர்வமான விசாரணை நட்த்தி ஏன் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க்க் கூடாது?? இவ்வாறு கேட்பவர், முகமது ஹனீஃப் என்ற ஒரு கல்லூரி விரிவுரையாளர். எலெக்ட்ரானிக் இஞ்சினியரான இவரது மகன் முகமது சர்வார், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளி. அவருடைய மகன் கைது செய்யப்பட்ட்திலிருந்து, ஹனீஃப் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
டாக்டர்.ஜாவேத் அக்தர் என்பவருடைய மகன் தில்லி குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, இப்போது தலைமறைவாக இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் இதர உதவிகள் பெற்றுத் தருவதற்காக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார். நாங்கள் எங்களது சட்டரீதியான மற்றும் சமூக ரீதியான போராட்டங்களை கூட்டாகச் சந்திக்க முடிவெடுத்துள்ளோம் என்று கூறுகிறார் ஜாவேத் அக்தர். எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணரான இவர் கடந்த லோக் சபை தேர்தலில் போட்டியிட்டவர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மிகவும் ஆவேசமாக விவாதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், அவர்களைச் சார்ந்த பெண்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அவர்களுக்காகப் ப்ரார்த்தனை நிகழ்த்திக் கொண்டும், ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக் கொண்டும் இருக்கின்றனர். அவர்களது எண்ண ஓட்டங்களை அறிவது மிகவும் கடினமான விஷயம்.
அவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை. என்றாவது ஒருநாள் அவர் சிறையிலிருந்து வெளி வருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆயிஷா. ஒவ்வொரு தினமும் அவருடைய குழந்தைகள் அவரைப் பற்றிக் கேட்கும்போது நான் என்ன சொல்வேன்? சில வேளைகளில் பள்ளியில் அவர்களுடைய நண்பர்கள் கேட்கும்போது என்ன சொல்வது? அல்லது அவர்களுக்கு அவர்களது தந்தையை நினைவுதான் இருக்கிறதா? என்று கண்ணீரைத் துடைத்தபடியே வேதனையுடன் கூறுகிறார் ஆயிஷா.
டிசம்பர் 12, 2007 இன் நிகழ்வுகள் ஆயிஷா துயிலெழும் முன்பாகவே நடந்து முடிந்து விட்டன. அவருக்கு அது ஒரு சாதாரண தினமாகவே இல்லை. வழக்கத்திற்கு மாறாக உணவு கூட உட்கொள்ளாமல் அவருடைய கணவர் விடியற்காலை 6 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு சென்று விட்டார். அவர் எப்போதுமே உணவைத் தவிர்த்த்தில்லை. அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்ட்தாக நான் உணர்ந்தேன். அவரிடமிருந்து ஒரு அழைப்பு கூட இல்லை. மொத்த்த்தில் அன்று அவர் அவராகவே இல்லை.
அதற்கு மறுதினமும் அவர் வீடு திரும்பாத நிலையில், ரானி கி சராய் காவல் நிலையத்தில் அவரைக் காண்வில்லை என புகார் அளிப்பதாகத் தீர்மானித்தோம். அவரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லை, டிசம்பர் 22 ஆம் தேதி அவரைத் தொலைக்காட்சி செய்தியில் சிலர் பார்த்த்தாகத் தெரிவித்தனர். ஏதோ ஒரு குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார், என நினைவு கூர்கிறார் ஆயிஷா.
அவருடைய கணவர் மீது எவ்விதமான குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன என்பது ஆயிஷாவிற்கு சரியாகத் தெரியவில்லை. அவரும் அவரை தொலைக்காட்சி செய்தியில் பார்க்கவில்லை. தொலைக்காட்சி என்ற பொருளை இதுவரை ஆயிஷா பார்த்த்தே கிடையாது. சில ஹிந்தி மற்றும் உருது நாளேட்டுச் செய்திகளைப் படித்து விட்டு, எப்படி இவ்வாறான அடிப்படையற்ற பொய்ச் செய்திகளை இவர்கள் எழுதுகிறார்கள்?? என்று கோபத்துடன் கேட்டார்.
மீடியா வெளியிட்ட செய்திகள் சமியாவையும் அதிருப்தியுறச் செய்தன. அவர்கள் எவ்வாறு இவ்வாறான பொய்யான ஜோடிக்கப்பட்ட செய்திகளை வெளியிடுகிறார்கள்?? இவர்கள் சித்தரிப்பது போன்றதான மனிதரில்லை அவர். அவர் எவ்வளவோ பேருக்கு பல உதவிகள் செய்துள்ளார், நீங்கள் ஏன் அதெல்லாம் எழுதக்கூடாது? என்று குமுறினார்.
இப்பெண்கள், எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களது கணவன்மார்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதை தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாக நினைக்கிறார்கள். சில வேளைகளில் இவ்விஷயத்தில் அவர்கள் தவறுவதும் உண்டு. முகமது காலித் முஜாஹித் என்பவர் பைஸாபாத், லக்னோ மற்றும் பாராபங்கி குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக்க் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட போது, அவரது மனைவி ஷப்னம் பானு தான் ஏமாற்றப்பட்டதாகவே உணர்ந்தார்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே ஆகியிருந்தன. தனது கணவர் விசாரணைக் கைதியாக உன்னாவ் சிறையில் இருந்த போது தனது புகுந்த வீட்டிலேயே வசிப்பதாக ஷப்னம் முடிவு செய்திருந்தார். ஆனால் இம்முடிவு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர் நிரந்தரமாக தனது பெற்றோர் வீட்டிற்கே திரும்பி விட்டார். “ இப்போதிருக்கும் நிலையில் அவள் திரும்பி வருவாள் என்று நினைக்கவில்லை. அவள் தன்னுடைய எல்லா உடமைகளையும் எடுத்துச் சென்று விட்டார். சமாதானம் என்ற நிலையெல்லாம் இப்போது கடந்து விட்ட்து.” என்கிறார் ஜஹீர் ஆலம் சலாஹி, இவர் காலித் முஜாஹித்தினுடைய மாமா, தவிர, ஜமாத்-ஈ-இஸ்லாமியின் உறுப்பினர். அவளது துரோகத்தால் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. அவளால் விளைந்த மன உளைச்சலால் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இப்போது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன் என்கிறார்.
மனைவி என்பவளுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. கணவர், அவர் சார்ந்தவர்கள் மற்றும் அண்டை அயலில் இருப்போர் அவர் வரும்வரை காத்திருக்குமாறு கூறுகின்றனர். அந்த நாள் எப்போது வரும் என்று அவர்களுக்குத் தெரியுமா அல்லது அந்த நாள்தான் வருமா என்றாவது தெரியுமா?
வீட்டிலேயே அமர்ந்திருப்பது சஹிக்க இயலாத்தாய் இருக்கிறது. “ பழைய நினைவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன, அது நம்மை பைத்தியமாக அடித்து விடுகின்றன, என்கிறார் 23 வயதாகும் ஷஹிபா. அவர் அச்சூழலில் இருந்து வெளியேற நினைக்கிறார். ஆனால் எப்படி? தனது கணவன் மற்றும் புகுந்த வீட்டின் எதிர்ப்புகளுக்கிடையில் அவர் அங்கிருந்து வெளியேறி இப்போது ஆங்கிலத்தில் பட்டமேற்படிப்பிற்காக சேர்ந்துள்ளார்.
நிதான புத்தியுடன் இருப்பதற்கு இது ஒன்றுதான் வழி. ஆனால் இவர்கள் இதனைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அதிருஷ்டவசமாக எனது பெற்றோர் என்னைப் புரிந்து கொண்டனர். ஆனாலும் அவளது பெற்றோர், அவள் தன் திருமண உறவை முறித்துக் கொள்வாள் என்று நம்பவில்லை. அவளுடைய கணவர் வெகு விரைவில் திரும்பிவிடுவார் என்று நம்புகின்றனர். ஆனால் ஷஹிபாவிற்கு சந்தேகம்தான். இதற்கிடையில் ஷஹிபா ஒரு வங்கியில் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். அவளது புகுந்த வீட்டினர் அதனை விரும்பவில்லை. ஆயினும் வேலை கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன், ஏதும் செய்யாமலேயே காலம் கட்த்த விரும்பவில்லை என்கிறார் ஷஹிபா.
எல்லாவற்றையும் விட அவர்கள் தனித்து விடப்பட்ட நிலையிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள். எப்போதுமே உங்களுடைய வாழ்க்கை ஒருவரைச் சுற்றியே இருக்கும்போது, அவருடைய இல்லாமை நிலை, உங்களுடைய வாழ்க்கையை நிலையற்றதாக்கி விடுகிறது. நாம் பற்றிக் கொள்ள ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் நம்பிக்கை.
ஆயிஷா, தனது கணவரின் சிறு நூலகத்தில் இருக்கும் மதம் தொடர்பான புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நிம்மதியை அடைகிறார். அவர் நிறைய நூல்களை வைத்திருக்கிறார். ஆனால் அவர் இங்கிருந்தபோது நான் எதையுமே படிக்க முயற்சித்த்தில்லை. இப்போது அவை எனக்கு நிம்மதியையும் ஆறுதலையும் தருகின்றன. “உங்கள் கணவருக்கு உண்மையிலேயே அந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளது என்பதை நீங்கள் அறிய நேர்ந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? என்று ஆயிஷாவிடம் கேட்டேன். அதற்கு அவர், “ அவரை அறிந்த யாரிடம் வேண்டுமானாலும் அவரைப் பற்றி நீங்கள் கேட்கலாம். இருக்கவே முடியாது என்றுதான் அனைவருமே கூறுவர், என்று ஆயிஷா பதிலளித்தார்.
சமியாவும் இவ்வாறேதான் பதிலளித்தார். இதே கேள்வியை அவரிடமும் கேட்ட போது, “ அவர் குற்றவாளியே அல்ல!” என்று தனது முகத்தைத் தனது துப்பட்டாவால் மூடியபடியே பதிலளித்தார். அவர் மிகவும் அன்பானவர், அவரால் யாரையுமே காயப்படுத்த முடியாது, என்றார்.
சமியா, தனது கணவருடைய அப்பாவித்தனத்தைப் பற்றி உறுதியாக இருக்கிறார். அவர்களது திருமணம் பத்தாண்டுகளுக்கு முன்னரே நிச்சயிக்கப்பட்டுவிட்ட படியால், அனைவரையும் விட சமியா அவரை நன்கறிவார்.
பொதுவாக அனைத்து சட்ட வழக்குகளிலுமே பாலின பேதம் காணப்படுகிறது என்கிறார் ஃபர்ஹானா ஷா, பம்பாய் உயர்நீதிமன்ற வழக்கறிஞர். அவர் சில தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறார். குறிப்பாக, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு. சில சமயங்களில் விவாகரத்து வழக்குகளினால் குடும்ப நீதிமன்றங்கள் நிறைந்திருக்கும் போது, இந்த தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய மனைவிகள் தனிப்பட்டு உயர்ந்து நிற்கின்றனர், என்கிறார். இவர்கள் பொதுவாகவே பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தட்டு நிலையில் இருப்பவர்கள், தவிர போதுமான கல்வியறிவும் கிடையாது. ஆனால் தங்களது திருமண பந்த்த்தை நிலைக்க வைப்பதில் அவர்களுக்கு இருக்கும் முனைப்பு அலாதியானது, என்கிறார்.
சமியாவிற்கு, வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வது என்பது அறவே நடவாத செயல். தன்னைத் தீவிரவாதியின் மனைவி என்று சமூகம் அழைத்தாலும் அதனைப் பொருட்படுத்த்த் தயாராக இல்லை. இதுதான் அவருடைய காதலின் பரிசு. அவர் தனது வாழ்க்கையில் பல துன்பங்களைக் கடந்து வந்தவர், இளவயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டார். நான் எப்படி அவரை நிர்க்கதியாக விட முடியும்? அவருடைய வலியோடு ஒப்பிடுகையில் என்னுடையது ஒன்றுமே இல்லை, என்கிறார் சமியா.
தானே சிறையில் தன்னுடைய கணவரை சந்திக்கச் சென்றதை சமியா நினைவு கூர்கிறார். அவர் கேட்டாராம், என்னோடு இருந்தமைக்காக நீ வருத்தப்படுகிறாயா?. “ நான் சொன்னேன், “உங்களை எனது வாழ்க்கையில் அடைந்த்தை விட எனக்கு அதிர்ஷ்டம் ஏதும் இருக்க முடியாது”, என்று, என்று புன்முறுவலுடன் தெரிவிக்கிறார் சமியா.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, சமியா வீட்டில்தான் இருக்கிறார், ஏதும் செய்வதற்கில்லாமல். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கும் செல்லவில்லை. ஏனெனில் அவரது தந்தை அதற்கு உடன்படவில்லை.
சமியாவிற்கு அவளது சினேகிதிகளைப் போன்று திருமணமாகியிருந்தால், ஒரு குடும்பம் இருந்திருக்கும். ஆனால் அவள் இப்போது அவளது பெற்றோர் வீட்டில். அவளது சகோதரர்களின் மனைவிமார்களோடு சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வது மற்றும் அவர்களுடைய குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது என்று இருக்கிறார். தற்போது, அரபு மொழி இலக்கணத்தைப் பயின்று வருகிறார். அதுவும் திருமணம் வரைதான், பிறகு அத்னான் சம்மதித்தால் தொடர்வேன், என்கிறார். வேறு ஏதேனும் பொழுதுபோக்குகள் உண்டா என வினவினேன். ஆம் படிப்பேன், குரான், என்றார். வேறு ஏதேனும் படிப்பீர்களா என்று கேட்ட்தற்கு, படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் குரானிலேயே இருக்கும்போது வேறு எதையும் படிக்கத் தேவையில்லை, என்று மன உறுதியுடன் கூறினார்.
[ இக்கட்டுரை சென்ற வார, “The Week” வாராந்திரியில் கவர் ஸ்டோரியாக வெளியிடப்பட்டிருந்தது, தமிழில் யதிராஜ் ]
பிகு: சண்டேனா இரண்டு வரும் வரையில் மண்டேனா ஒன்று என்று யதிராஜ் எழுதுவார் ( இன்னும் அவரிடம் கேட்கவில்லை, எழுதுவார் என்ற நம்பிக்கையில் )
Posted by IdlyVadai at 3/29/2010 09:10:00 AM 43 comments Links to this post
Labels: கட்டுரை, யதிராஜ சம்பத் குமார்
Sunday, March 28, 2010
சன்டேனா இரண்டு (28-3-10) செய்திவிமர்சனம்
இந்த வார செய்திகள் - இட்லிவடையில்,எனது 50 வது சிறப்பு பதிவாக, 'இட்லிவடை ஸ்பெஷலாக' உங்களுக்கு.
செய்தி # 1
எனது பக்கத்து வீட்டுக்காரர் என்னை ஒரு நர்சரி பள்ளியின் ஆண்டு விழாவுக்கு அழைத்தார். சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் நர்சரி அது. அங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் சியாமளா டான்ஸ் ஆட போவதாக சொன்னார். புது டிரஸ், மேக்கப் என்று ஏக தடபுடலோடு குழந்தையை அழைத்து வந்தார். நானும் அவருடன் சென்றேன்.
உலகத்திலயே மிகவும் சிரமமான பணி..நர்சரி ஸ்கூலில் 'மிஸ்'ஸாக இருப்பதுதான். ஒரு குழந்தையின் குறும்புத்தனத்தை சமாளிக்கவே படாத படும் போது, பல குழந்தைகளை ஒரு வகுப்பில் வைத்து, கட்டி காப்பது எவ்வளவு சிரமம்? எனக்கு தெரிந்து, தன் குறும்பு செய்த குழந்தையை கண்டித்தமைக்கு, அந்த குழந்தையின் அப்பா, ரவுடிகளோடு டீச்சரை அடிக்க வந்த சம்பவங்கள் உண்டு. அதுவும், ஆண்டு விழா போன்ற கலை நிகழ்ச்சிகளில், குழந்தைகளை மேடையேற்றி, ஆடவைத்து.....நமது தமிழ்நாட்டின் நர்சரி ஸ்கூல் டீச்சர் ஒவ்வொருவரும் ஒரு ராஜு சுந்தரிகள்.பிரபு தேவிகள்.
கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. மேடை ஏறும் குழந்தைகளை விசில் அடித்து உற்சாக படுத்துவதற்காக, அந்த பகுதி இளசுகள் 'உற்சாகம்' ஏற்றி,வந்து இருந்தார்கள். ப்ரி.கே. ஜி. முதல் ஒவ்வொரு வகுப்பு குழந்தைகளாய் மேடை ஏற்றினார்கள். ப்ரி.கே.ஜி குழந்தைகள் மேடையில் ஆளுக்கு ஒரு திசை வேடிக்கை பார்த்தபடி நிற்க, பின்னணியில் ஒரு 'ரைம்ஸ்' ஓடியது.
பின்னர் அவர்களை வரிசையில் நிற்கவைத்து, போட்டோக்கள் எடுத்தனர்.
அதன் பின்தான் அந்த கொடுமை தொடங்கியது. எல்.கே.ஜி குழந்தைகள் ஆடிய பாடல்...'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா...'
யு. கே.ஜி குழந்தைகள் ஆடிய பாடல்...'உன் உச்சி மண்டையில சுர்ருங்குது'
வகுப்பு ஏற ஏற பாடல் வரிகளின் 'மெச்சுரிட்டியை (!?) ' ஏற்றி கொண்டு போனார்கள்.
அடுத்ததாக ஒன்றாம் வகுப்பு, நம் நண்பரின் குழந்தை 'ஹீரோயின்' ஆக ஆடிய பாடல்..'வாடி வாடி நாட்டுக்கட்டை, வசமா வந்து மாட்டிக்கிட்ட'.
என் நண்பருக்கு உற்சாகம் தங்கவில்லை. தான் கொண்டு வந்த, டிஜிட்டல் கேமராவில் ஒரு ஷூட்டிங்கே நடத்த தொடங்கினார். " என்ன சார் இது. இந்த மாதரி குத்து பாட்டுக்கெல்லாம் குழந்தைகளை ஆட விடறாங்களே" என்றேன் அவரிடம் நான்.
"அட நீங்க வேற. அந்த குழந்தைக முகத்தை பாருங்க. எவ்ளோ சந்தோசம். அதுங்களுக்கு அர்த்தம் எல்லாம் புரியவா போகுது " என்றார் அவர். "சரி. 'நாட்டு கட்டை'ன்னா உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?" என்றேன். அவர் ஹி..ஹி என்றதில் சட்டை நனைந்தது(அவரோட சட்டைதாங்க!).
பரிகாரத்துக்காக ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், 'பாளையத்தம்மா பாச விளக்கு' என்று அம்மன் பாட்டுக்கு ஆடினார்கள். மற்றது எல்லாம் குத்து பாட்டுக்கள்தான்.
நர்சரி தொடங்கி கல்லூரிகள், கலை நிகழ்ச்சிகள் வரை சினிமா குத்து பாடல்கள்தான் வியாபித்து இருக்கின்றன. நான் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த போது, கல்லூரி தொடங்கி முதல் கலை நிகழ்ச்சிகளை நாங்கள்தான் அரங்கேற்றினோம். எங்களுக்கு போடப்பட்ட கட்டளை என்ன தெரியுமா? "அனைத்தும் உங்கள் சொந்த சரக்காக இருக்க வேண்டும். சினிமா ஆடல், பாடல்களை முடிந்த வரை தவிருங்கள்". நாடகங்கள் மற்றும் மாணவர்கள் சொந்த டியுன்னில் உருவான பாடல்களுக்கு, நடனங்கள் புதிதாக அமைத்தோம். இன்றைக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது பள்ளிகளில் படிபடியாக குறைந்து வருவதாக, என்னிடம் கூறி வருத்தப்பட்டார் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.
சரி.நம் கதைக்கு வருவோம்.அந்த அந்த வகுப்பு டான்ஸ் முடிந்த உடனே, தத்தம் குழந்தைகளோடு பெற்றோர்கள் சென்றுவிட, சிறப்பு விருந்தினராக அழைக்க பட்டு இருந்த, 'உள்ளூர் அரசியல் பிரபலம்' கடைசியாக வந்த போது, பள்ளி ஊழியர்கள், இரண்டு ஆயாம்மாகள் மற்றும் நான்(ஆர்வ கோளாறு!) மட்டுமே இருந்தோம்.
"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " என்ற ரீதியில், ஆளில்லா கூட்டத்தில்(?) அவர் எழுச்சி உரை நிகழ்த்தினார்( விரைவில் 'அமைச்சர்' ஆகும் தகுதிகள் அவரிடம் கண்டேன்).
அப்புறம் நடந்தது என்ன தெரியுமா? என் நண்பர் என்னிடம் சொல்லி வருத்தபட்ட விஷயம் ஒன்று நடந்தது...ஆண்டு விழா நிகழ்ச்சிகள் முடிந்து, பள்ளி தொடங்கிய பின்னர், நண்பரின் குழந்தையை, சக வகுப்பு குழந்தைகள் என்னவென்று அழைக்கிறார்கள் தெரியுமா?.
" ஏய்...நாட்டுக்கட்ட சியாமளா".
செய்தி # 2
பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற மனோதத்துவ டாக்டரை பார்ப்பதற்காக போகவேண்டி வந்தது. ஆம், எனக்கு சில மாதங்களாக ஒருவிதமான மனோவியாதி...அதன் காரணமாக உடல் உபாதைகள். அதற்க்கு ட்ரீட்மென்ட் எடுக்கவே, மனோதத்துவம் தெரிந்த இந்த டாக்டரை அணுகினேன்.
என்னுடைய இந்த 'திடிர்' மனோவியாதிக்கு காரணம்....சமிபத்தில் எனக்கு ஏற்ப்பட்ட ஒரு விசித்திரமான பழக்கம். விலாவாரியாக சொல்கிறேன்.
அந்த பழக்கம் என்னவென்றால்...பஸ்சிலோ அல்லது வேறு ஏதாவது வாகனத்திலோ போகும்போது, கண்ணில் படும் அனைத்து போஸ்டர்கள்,பேனர்கள், சுவர் விளம்பரங்கள், ப்ளெக்ஸ் ஆகியவற்றை கூர்ந்து கவனிப்பது அல்லது படிப்பது.
பாருங்கள்.ஒரு பிரம்மாண்டமான பேனரில் "தென்னாட்டு பிரபாகரனே" என்று போட்டு, பக்கத்தில் திருமாவளவன் மற்றும் ஒரு சிறுத்தை(!) இருவரும்
ஒரே சமயத்தில், வாய் பிளந்து உறுமுவதாக(?) ஒரு படம். அதை, பார்த்தது முதல் என் மனோநிலை பாதிக்க தொடங்கிவிட்டது.
"என்னை தென் சென்னை அ.தி.மு.க செயலாளர் ஆக தேர்வு செய்த சிங்கதாய்க்கு(?) நன்றி" என்று சிக்னல் அருகே ஒரு பேனர். அதில், ஒரு தாடிக்கார அரசியல்வாதி கைகூப்பி நன்றி சொல்ல, அவர் காலுக்கு கிழே பம்மிக்கொண்டு இருந்த ஒரு பயங்கர சிங்கம்(?), என் மீது பாய்வதாக இரவில் கனவு கண்டு அலறினேன்.
"மருத்துவர் அய்யா மாலடிமையே வருக" என்று ஒரு போஸ்டர் பார்த்தேன். யாரு அது புதுசா என்று விசாரித்ததில்,டாக்டர் 'ராமதாசை'தான் திராவிட உணர்வோடு(?) 'மால் அடிமை' என்று அழைக்கிறார்களாம். ஹ்ம்ம்..முடியல.(உங்க 'இன உணர்ச்சிக்கு' ஒரு அளவே இல்லையாப்பா!)
ஒரு மிக நீளமான சுவர் விளம்பரத்தில் "தமிழ் தேசிய பாதுகாவலரே" என்று எழுதிவிட்டு, 'தல'யின் பெயரை குறிப்பிடாமலே விட்டுவிட்டார்கள்(உணர்ச்சிவசபட்டுட்டாங்க போல). 'அவர்' யார் என்று கடுமையாக யோசிக்க தொடங்கியதில் என் நோய் முற்ற தொடங்கி விட்டது. (யாராவது சரியா சொன்னிங்கனா,இ.வ. பரிசு தருவார்).
கலைஞர் அண்ட் கோ பங்கேற்கும் நிகழ்ச்சிக்களில் உடன் பிறப்புக்கள் வைக்கும் பேனர்களை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. செல்வி ஜெ,. அவர்களை, சிங்கதாய்,புரட்சி தாய், மீட்பு தாய்,வீரத்தாய் என்று போட்டு, அவரை கடைசியில் ஒரு 'விளம்பர தாய்' என்று ஆக்கி விட்டார்கள் கழக ரத்தங்கள்.('தங்க தாரகை' ன்னு போடுகிறார்களே, அது 'அம்மாவுக்கா' இல்லை அவரது 'உடன்பிறவா சகோதரி'க்கா?).
எல்லா அரசியல்வாதிகளுமே 'தமிழின தலைவர்','இனமான காவலர்', 'தன்மான சிங்கம்' ஆகிய மூன்று அடைமொழிகளை, தங்களின் பொதுமொழியாக பயன் 'படுத்தி' கொள்கின்றனர்.அதிலும்,முதலிடம் பெறுவது 'தன்மான சிங்கம்'தான் .(டாக்டர்(ரேட்) இன்பா வாழ்க). .
ஆனால், என்னுடையே 'கருத்து கணிப்பின்' படி (என்ன ஒரு சர்வே) , நம் தமிழ் நாட்டில் அதிகபடியான திருநாமங்களில் அழைக்கபடுவது, தொல்.திருமா அவர்கள்தான். எழுச்சி தமிழர், மின்சார தமிழர், கூர்வாள், இடிமுழக்கம் இப்படி பல.(உக்காந்து யோசிப்பாங்களோ?).
போதாகுறைக்கு,'திருமா' வின் முதல் எழுத்தில் ஒரு வீச்சரிவாளை(!) வேறு சொருகி வைக்கின்றனர்.
அஜித் ரசிகர்களால், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் வீடு தாக்க பட்டபோது, அவர் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் இதோ.
"நடிகர் அஜித், எங்கள் தலைவனை வீடு புகுந்து தாக்கிய உன்னை வன்மையாக கண்டிக்கிறோம் "
-- இவன், மாவீரன்(?) ஜாகுவார் தங்கம் நாடார் (!) பேரவை.
(அண்ணாச்சி, நீங்களே சொல்லுங்க, உதைத்தது மாவீரமா அல்லது உதை வாங்கியது மாவீரமா).
சரி இந்த போஸ்டர் அலம்பல்கள் அரசியல்வாதிகள், நடிகர்கள் ஆகியவரோடு முடிந்து விடுகிறது என்று பார்த்தால், புண்ணாக்கு வியாபாரிகள் முதல் சாமானிய மக்கள் வரை 'இதை' விடுவதாக இல்லை.
உள்ளூர் பிரபலங்களின் வீட்டில் விசேஷம் என்றால், உடனே மனித நேயமே, கொடைவள்ளலே, நட்பின் இலக்கணமே, இதய தெய்வமே என்று போஸ்டர் அடித்து விடுகிறார்கள்.
எதற்குதான் போஸ்டர் ஒட்டுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
ஹனிமூன் சென்ற ஒரு தம்பதிகளை வாழ்த்தி "இன்று தேன்நிலவுக்கு செல்லும் இரு நிலாக்களே..வெற்றியுடன்(?) திரும்பிவருக" என்று வாழ்த்து போஸ்டர் ஒட்டியிருந்தார்கள்.
சென்னை - பாண்டி சாலையில், ஒரு ப்ளெக்ஸ் பார்த்தேன்.
ஒரு வாலிபர், டை சகிதம் பல்சர் பைக் மீது ஒய்யாரமாக அமர்ந்து இருக்க, அவர் தோளை தொட்டபடி, 'இளைய தளபதி' விஜய் நின்று கொண்டு இருந்தார். பிறகுதான், தலைப்பை பார்த்தேன். " எங்கள் ஆருயிர் நண்பனுக்கு, இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி".
இப்போது புரிகிறதா என் மனோவியாதிக்கான காரணம் (இதை படித்தவுடன், உங்களுக்குகே 'மைல்டாக' உங்கள் மீது சந்தேகம் வந்தால்,அதற்க்கு நான் பொறுப்பல்ல).
பரிசோதனைக்கு பின் காரணத்தை புரிந்து கொண்ட அந்த டாக்டர் இவ்வாறு சொன்னார், " முதல்ல இட்லிவடை போன்ற ஆசாமிகளோட(?) பழகறத நிறுத்திட்டு, எங்கையாவது ஒரு வெளிநாட்டுக்கு போயிட்டு வாங்க. அதுதான், ஒரு உங்களுக்கு ஒரே மருந்து".
"போஸ்டரோபோபியா(?)" என்று என் மனோவியாதிக்கு பெயர் சொன்ன(வைத்த) ஒரே காரணத்துக்காக, டாக்டரிடம் பீஸை அழுதுவிட்டு, வெளியே வந்தபோது 'அது' என் கண்ணில் பட்டது.
"மனநோய் தீர்க்கும் மாமருந்தே, உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" ௦-- இங்ஙனம் மருத்துவமனை ஊழியர்கள்.
தனக்கு தானே பட்டபெயர் வைத்து கொள்வது, துக்கம் உட்பட எல்லா நிகழ்வுகளுக்கும் போஸ்டர் அடிப்பது, பேனர் வைப்பது இவை எல்லாம் இருபதாம் நூற்றாண்டு தமிழர்களின் தவிர்க்க முடியாத கலாச்சாரம் ஆகி விட்டது.
முதல் முறையாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், போஸ்டர் மற்றும் பேனர்களை தவிர்த்து விடும்படி, தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். எல்லா அரசியல்வாதிகளும்,தொழிலதிபர்களும், பொது மக்களும் இதை பின்பற்ற வேண்டும் என 'பாடி கார்ட் முனி'யை வேண்டுவோம். (நிறைவேற்றினால், அவருக்கும்
வாழ்த்து போஸ்டர் ஒட்டுவோம்).
இதற்க்கு மேலும், இதை பற்றி விரிவாக எழுதினால், "போஸ்டர் கலாச்சாரத்துக்கு எதிரான போர்கொடியே..புரட்சிப்புயல் இன்பாவே" என்று எனக்கே, வாசகர்கள் யாராவது பேனர் வைத்து விடுவார்கள் என்பதால் (ஒரு அல்ப ஆசைங்க), அடியேன் இத்துடன்.......எஸ்கேப்ப்.
குறிப்பு: 'சன்டேனா இரண்டு' பகுதி இத்துடன் தற்காலிகமாக நிறைவு பெறுகிறது. சில வாரங்களுக்கு பின், இட்லிவடையில் மீண்டும் இதே பகுதியில் உங்களை சந்திக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
இன்பா
சண்டேனா இரண்டு 50 வாரம் எப்படி இருந்தது என்று வாசகர்கள் செல்லலாம். ஓட்டு பெட்டி சைடு பாரில் இருக்கிறது
Posted by IdlyVadai at 3/28/2010 03:54:00 AM 46 comments Links to this post
Labels: இன்பா, செய்தி விமர்சனம்
Saturday, March 27, 2010
அங்காடித் தெரு - நாம் வாழும் தெரு
பிகு: பிகு கடைசியில் இருக்கிறது
வெகு சிலமுறை நான் சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருக்கிறேன். எல்லாம் நம்ம ஊருப் பசங்க என்பதைக் கேட்டு, பெருமையுடன் காணச் சென்ற எனக்கு அங்கே முதலில் தோன்றியது குழந்தைத் தொழிலாளர் சட்டம் இருக்கிறதா என்பதுதான். பின்னர் அதுவே பழகிவிட்டது. ஒருதடவை ஒரு பையனிடம் என்னப்பா வயசு என்ற கேட்டபோது பதினாறு என்று சொல்லிவிட்டு, உடனே சட்டென்று மாற்றி பதினேழு என்று சொன்னான். ஆனால் அவன் வயது உண்மையில் 14வது இருக்குமா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. பதினாறுன்னு சொன்னாலும் பதினேழுன்னு சொன்னாலும் ரெண்டும் ஒண்ணுதான் என்றேன். அந்தப் பையன்களை நினைக்கும்போது பாவமாக இருக்கும். எனக்குத் தோன்றும் பாவம் வெறும் ஒரு வரிப் பாவம். ஆனால் வசந்தபாலன் இவர்களுக்குப் பின்னே இருக்கும் உலகத்தையே காட்டிவிட்டார். சென்னையில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் இந்தப் படம் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பாதிக்கும். அடுத்த முறை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற இடத்துக்குச் செல்பவர்களது எண்ணம், பார்வையில் கொஞ்சமாவது மாற்றம் இருக்கும். இந்தப் பசங்களோட கஸ்டமர் சர்வீஸ் மோசம் என்றெல்லாம் யாரும் சொல்வார்களா எனக்கூடத் தெரியவில்லை.
செந்தில் முருகன் ஸ்டோர்ஸின் களமும் ரெங்கநாதன் தெருவும் ஒரு மிகப்பெரிய வில்லனைப் போலத் தோற்றம் அளிக்க வைக்கும் முயற்சியில் வசந்தபாலன் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையின் சிரிப்பில் தென் தமிழ்நாட்டு இளைஞர்கள் செந்தில் முருகன் ஸ்டோர்ஸால் விழுங்கப் படுகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், காதல், காமம், கும்மாளம் என எல்லாவற்றையும் இத்திரைப்படம் சிறப்பாக முன்வைக்கிறது. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைக்காரர்களின் உலகத்தில் நமக்குத் தெரியாத பலவற்றை நாம் பார்த்ததுபோல, இத்திரைப் படத்தில் இது போன்ற இளைஞர்களுக்கு நடக்கும் நமக்குத் தெரியாத பல்வேறு காட்சிகள் நம் கண்முன் விரிந்து நம்மைப் பதற வைக்கின்றன.
ஒவ்வொரு சிறிய காட்சியையும் முக்கியக் கதையோடு இணைப்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் ஆர்வம் பழைய உத்தி. சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் தன்னம்பிக்கையைக் காட்டுவதற்கோ, அல்லது பின்னர் கதாநாயகன் நாயகிக்கு உதவுவதற்கோ சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற சில குறைகள் நிறையவே இருக்கின்றன. படத்தின் பின்பாதியில் கொஞ்சம் இழுவை அதிகம். தேவையற்ற, செயற்கைத்தனம் கூடிய வசனங்கள் உண்டு. படம் முடிந்த பின்பு மீண்டும் இழுக்கப்படும் திரைப்பட உச்சக்கட்டக் காட்சி உண்டு. உச்சக்காட்சி என்ற ஒன்றில்லாமல் தமிழர்களுக்கு முழுத்திரைப்படம் பார்த்த உணர்வு வராது என்பதாலோ என்னவோ வசந்தபாலன் இப்படி செய்திருக்கவேண்டும். அதிலும் நல்ல ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார். படத்தோடு தொடர்பே இல்லாத ஒரு கிளைமாக்ஸை முதலிலேயே காட்டிவிட்டு, உச்சக்காட்சிக்கு முன்னரே வந்துவிடும் உச்சக்காட்சி மனோபாவத்தைக் குறைத்துவிட்டார்.
கதாநாயகியின் தங்கை பெரியவளாகும் கதையெல்லாம் சுற்றி அடிக்கிறது. இக்காட்சி இல்லாமலேயே, கதாநாயகி கதாநயாகனை மீண்டும் எற்பதற்கான சரியான முகாந்திரங்கள் உள்ளன. ஜெயமோகனின் கூர்மையான வசனங்கள் அசத்துகின்றன. கதாநாயகன் கதாநாயகியிடன் மிகக் கோபமாகப் பேசும் வசனமே போதுமானது கதாநாயகி மனம் மாறுவதற்கு. கதாநாயகியின் தங்கை வரும் காட்சிகளெல்லாம் வலிந்து சேர்க்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதிலும் அந்தப் பெண் இருக்கும் வீடு - தமிழ்த் திரையுலகில் அது யார் வீடாக இருக்கமுடியும்? அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள் சேர்க்கமாட்டேன் என்கிறார்கள். நாய் கட்டிப்போட்டிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் தட்டுமுட்டுச் சாமான்களோடு அவள் கிடக்கிறாள். ஆமாம், அது பிராமண வீடு.
பின்னணி இசையைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் கர்ண கொடூரம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்றால் நம்பிக்கைத் துரோகம் என்று சொல்லலாம். இத்தனை ஆழமான, உணர்வு ரீதியான படத்துக்கு பின்னணி இசை செய்யும் மாபாதகத்தை மன்னிக்கவே முடியாது. ஒரு காட்சி தரவேண்டிய சோகத்தை, பதற்றத்தை இசை வழியாகத் தந்துவிட நினைத்து இசையமைப்பாளர்(கள்) செய்யும் குரங்குச் சேட்டைகளை என்னவென்று சொல்ல. தலையெழுத்து. இரண்டு பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளன.
கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அடுத்த படங்களில் புருவத்தை இப்படி நெறிக்கவேண்டியதில்லை. கதாநாயகி - அசத்தல். இவர் கற்றது தமிழ் படத்தில் நடித்தவர் என நினைக்கிறேன். அந்தப் படத்திலேயே நன்றாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அசுரப் பாய்ச்சல். சிரிப்பு, வெட்கம், கோபம் எல்லாவற்றையும் நினைத்த மாத்திரத்தில் முகத்தில் கொண்டு வருகிறார். இதுவே படத்தின் பலம். என்னைக் கவர்ந்த விடுகதை நீனா, மின்சாரக் கனவு கஜோல், சிதம்பரத்தில் அப்பாசாமி நவ்யா நாயர் வரிசையில் அங்காடித் தெரு அஞ்சலியும் சேர்ந்துகொள்கிறார்.
நடிகர்களைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரும் குணச்சித்திர தொழில்முறை நடிகர்களே அசரும் வண்ணம் நடிக்கிறார்கள். அவள் பெயர் தமிழரசி படத்தில் தியடோர் பாஸ்கரனும் வீரச்சந்தானும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தமுறை பழ. கருப்பையா. இப்படத்தில் அண்ணாச்சியாக வந்து அட போட வைக்கிறார்.
இன்னொரு பலம் ஜெயமோகன். பல வசனங்கள் மிகக்கூர்மையாக உள்ளே இறங்குகின்றன - காட்சியோடு. காட்சியோடு இறங்கும் வசனம் என்பதுதான் முக்கியம். காட்சி உக்கிரமாக இல்லாமல் வசனம் மட்டும் முழித்துக்கொண்டு நிற்கும் படங்கள் பாலசந்தர்த்தனப் படங்களாக எஞ்சிவிடும். அந்த அபாயம் இப்படத்துக்கு நேரவில்லை. எத்தனை ஆழமாக எழுதினாலும் எப்போதும் ஜெயமோகனுக்குள்ளே விழித்திருக்கும் பெரும் நகைச்சுவையாளர் ஒட்டுமொத்த படத்தையே ஹைஜாக் செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டுன். நான் கடவுள் படத்தில் எப்படி இதே நகைச்சுவையாளர் படத்தை வேறு தளத்துக்கு மாற்றினாரோ அப்படி இங்கேயும் மாற்றுகிறார். ஜெயமோகன் கதை வசனம் எழுதும் படத்தில் இதுவும் முக்கியமான படமாக இருக்கும். ஒன்றிரண்டு இடங்களில் வரும் தேவையற்ற வசனங்கள், இயக்குநரால் மக்களின் புரிதலுக்காக சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.
நிச்சயம் நல்ல படம். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் வெட்டித் தள்ளியிருந்தால் மிக நல்ல படமாக இருந்திருக்கும். விருதுத் திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களைப் போலவே, இது போன்ற நல்ல திரைப்படங்களும் தேவை. அந்த வகையில் இத்திரைப்படம் முக்கிய இடத்தைப் பெறும். சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரு முதலைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால் என்ன உணர்வு அடைவார்கள் என்பதை யோசிக்க யோசிக்க இப்படம் இன்னும் பிடிக்கத் தொடங்குகிறது.
(இந்த விமர்சனத்தை இட்லிவடைக்கு அனுப்பியிருந்தேன். அவர் திடீரென்று காணாமல் போய்விட்டதாலும், இதை இதுவரை வெளியிடாததாலும் நானே வெளியிடுகிறேன். வழக்கம்போல இட்லிவடைக்கு நன்றி!)
நேற்று இந்த படம் பார்த்துவிட்டு எனக்கு விமர்சனம் அனுப்புவதாக சொல்லியிருந்தார் என் அருமை எளக்கிய வாதி. ஆனால் சில நிபந்தனைகளை சொல்லியிருந்தார், அதை எல்லாம் பொது சொல்லுவது நல்லா இருக்காது இருந்தாலும் சரக்கு மாஸ்டருடன் எதற்கு லடாய் என்று அவர் விமர்சனம். ஒரு சில மணி நேரம் என்பது சினிமா விமர்சனத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று இன்று தெரிந்துக்கொண்டேன், அவர் சொன்ன நன்றியுடன் என் நன்றியையும் சேர்த்து இங்கே பதிவாக.
Posted by IdlyVadai at 3/27/2010 05:13:00 PM 18 comments Links to this post
Labels: சினி்மா, விமர்சனம், ஹரன்பிரசன்னா
Wednesday, March 24, 2010
கலைஞருக்கு பின் ? - அழகிரி பேட்டி

ஜூவி பேட்டி, NDTV செய்தி...
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அழகிரி, அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா கிளம்பும் அவசரத்தில் இருந்தார். விமானத்தில் பறக்க மூன்று மணி நேரமே இருந்த அந்த அவகாசத்திலும்கூட, பேட்டிக்கு ஒப்புக்கொண்ட அழகிரி, ''என்ன கேள்வி கேட்கப் போறீங்க?'' என்றார் முதலில்! அடுத்த கணமே, ''என்ன வேணும்னாலும் கேளுங்க... எப்படி வேணும்னாலும் கேளுங்க... எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் அதிரடி பதில் இருக்கு!'' என்றபடி கேள்விகளை எதிர்கொண்டார். குரலில் பிசிறில்லாத தீர்மான ரேகை!
? ''பென்னாகரம் இடைத்தேர்தல் களம் எப்படியிருக்கு?''
''தலைவர் கலைஞரின் நல்லாட்சியைப் பற்றி எங்களை நாங்களே எடை போட்டுக்கொள்ள இந்த இடைத்தேர்தல்கள் உதவுது. எங்கள் ஆட்சி குறித்த மக்களின் விமர்சனங்களும், சந்தோஷங்களும், கவலைகளும்தான் எங்களை வழிநடத்திக்கிட்டு இருக்கு. நேற்றைக்கு எம்.எல்.ஏ-வாக இருக்கறவங்க இன்றைக்கு எதுவும் செய்யாமல், நாளைக்கு தொகுதிக்குள் போக முடியாதுங்கறதுதான் இன்றைய ஜனநாயகத்தின் நிலைமை. அந்தப் பயமும், கவனமும் எப்பவுமே எங்ககிட்ட இருக்கு. எல்லா இடைத்தேர்தல்களிலுமே மக்களோட ஆரவாரமான வரவேற்பைப் பார்க்கும்போது, 'அப்பாடா, நம்ம தலைவர் செஞ்சிருக்கற நல்ல விஷயங்கள் மக்களைப் போய்ச் சேர்ந்திருக்கு'ன்னு நிம்மதி பெருமூச்சுவிட முடியுது. ஒரே ஒரு விஷயத்தை செஞ்சுட்டு, அதையே அஞ்சு வருஷமும் சாதனையா சொல்லிப் பெருமைப்பட்டுக்கிற ஆட்சியாளர்களுக்கு மத்தியில், தலைவர் தன்னோட சாதனைகளை சில மாதங்களுக்கு மேல் பேச விடறதில்லை. ஏன்னா, அதுக்குள்ள அடுத்த சாதனையை செஞ்சு அதைப் பத்தி பேச வச்சிடுறார்! தலைவரோட சாதனைகளால் பென்னாகரத்தில் கழகத்தோட வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது!''
?''இடைத்தேர்தல் நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்புகிறீர்களே?''
''தேர்தல் களத்துக்குச் சென்றால்தான் அங்கு எனது செயல்பாடுகள் இருக்கும் என்று அர்த்தமில்லை. நான் அங்கு செல்லாமலேயே அமைச்சர்கள் பலரும் பம்பரமாய் தேர்தல் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்துகொண்டு வீடியோ கான்ஃபரன்ஸ் உதவியோடு சென்னையில் ஆபரேஷன் செய்வதில்லையா? அதேபோன்று ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டும் பென்னாகரம் தேர்தல் களத்தை என்னால் கவனிக்க முடியும்.''
?''பா.ம.க. கடும் நெருக்கடி கொடுப்பதால்தான் முதல்வர் கருணாநிதியே நேரடியாகப் பிரசாரத்துக்குச் செல்கிறாராமே?''
''யாருக்கு யார் நெருக்கடி கொடுப்பது? இந்தமுறை தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ இடைத்தேர்தல்களை சந்தித்து விட்டோம். இதில் ஒன்றிலாவது பா.ம.க-வினால் குறிப்பிடத்தக்க சாதனையை செய்ய முடிந்ததா? கடைசியாக நடந்த வந்தவாசி இடைத்தேர்தலில்கூட '49-ஓ பிரிவில் வாக்களித்து எங்கள் பலத்தை நிரூபிப்போம்' என சவால் விட்டார் ராமதாஸ். 49-ஓ பிரிவில் மொத்தமே 49 பேர்கூட வாக்களிக்கவில்லை. 'வன்னியர் சமுதாய மக்களுக்காக கட்சி நடத்துகிறோம்...' என்ற ஏமாற்று வார்த்தையை சொல்லி, இனிமேலும் அந்த சமுதாய மக்களை ராமதாஸால் ஏமாற்ற முடியாது. எத்தனையோ வன்னியர் சமுதாய மக்களின் தியாகத்தில் உருவான அந்தக் கட்சியின் மூலமாக சுகபோகம் அனுபவிப்பதென்னவோ ராமதாஸ் குடும்பம் மட்டும்தான். இதனால் பென்னாகரத்தில் பா.ம.க-வுக்குத்தான் நெருக்கடி!
மற்றபடி, தலைவர் பிரசாரத்துக்கு போவதென்பது, சாதாரணமான நிகழ்வுதான். தென் மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடக்கும்போதெல்லாம்கூட தலைவர் பிரசாரத்துக்கு வருவதாகத்தான் சொல்வார். நாங்கள்தான் அவரை வரவேண்டாம் என மறுத்து விடுவோம்.''
?''அ.தி.மு.க. எப்படியிருக்கிறது?''
''எப்படியிருக்குன்னு கேட்காதீங்க... எங்கே இருக்குன்னு கேளுங்க? ஜெயலலிதா எப்ப கட்சிக்கு லீவு விடுவாங்க, எப்ப கட்சி நடத்துவாங்க என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. அந்தக் கட்சியோட தொண்டர்கள் பாவம்...''
?''தமிழகம் முழுவதும் தி.மு.க-வுக்கு எதிராக, தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாரே வைகோ?''
''முல்லை பெரியாறு பிரச்னைக்காக கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை மறிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் வைகோ. அவர் போராட்டம் அறிவித்த தினத்தன்று கேரளாவிலேயே பந்த் அறிவிக்கப்பட... ஒரு சைக்கிளைக்கூட மறிக்க முடியாமல் திண்டாடிப் போனார் வைகோ! ஏதாவது ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தியாவது மாற்றுக் கட்சிகளுக்குத் தாவும் தன் கட்சியினரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கிறார். ஆனாலும், அவரது கட்டுப்பாட்டில் அவரது கட்சியினர் இல்லை. கடந்த முறை உறுதியாக ஜெயிக்க முடியாது என தெரிந்து, பெரிய மனதோடு ஒரு ராஜ்ய சபா எம்.பி. ஸீட்டை வைகோவுக்கு ஜெயலலிதா வழங்க... அதை மீண்டும் அ.தி.மு.க-விடமே ஒப்படைத்தார் வைகோ. இந்த முறை மீண்டும் அ.தி.மு.க-விடம் ராஜ்ய சபா ஸீட் கேட்கும் ஆசையோடு ஜெ-வை சந்திப்பதற்காக மாதக் கணக்கில் காத்துக்கிடக்கிறார்...!''
?''டெல்லியில் கடந்த முறை நடந்த கேபினெட் கூட்டத்தில் பாதியிலேயே நீங்கள் வெளிநடப்பு செய்ததாக செய்திகள் வெளியானதே?''
''இப்படியரு கதை பரவியிருக்கறது எனக்குத் தெரியாதே..! உண்மையில் அந்த கேபினெட் கூட்டம் பல்வேறு துறைகளிலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகக் கூட்டப்பட்டது. அதில், எனது உரத் துறை சார்பாகவும் உர இறக்குமதி, உர மானியம் மற்றும் உர விலை உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. உர விலையை உடனடியாக உயர்த்தவேண்டும் என்ற விவாதங்கள் கிளம்பியபோது, நான் குறுக்கிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏற்கெனவே, பருவ மழை பொய்த்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் நொந்து போயிருக்கும்போது, உர விலையை உயர்த்துவது என்பது விவசாயிகளை மேலும் துயரத்துக்கு உள்ளாக்கும். அதனால், உர விலையை உயர்த்தக் கூடாது என தலைவரின் சார்பாக ஒரு கோரிக்கையை வைத்தேன். அதன் பின்னரும் உர விலையை உயர்த்துவது குறித்து வாதங்கள் தொடர்ந்தபோது, விலையை உயர்த்தக் கூடாது என உறுதியாக எனது கோரிக்கையை எடுத்து வைத்தேன். உண்மையில் நடந்தது இதுதான்.''
?''ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனிக்கு கடந்த முறை அரசு முறைப் பயணமாகப் போக முடிவெடுத்தபோது, உங்களுடன் பயணம் செய்யவிருந்த குறிப்பிட்ட சிலரின் பின்னணியைப் பார்த்து பிரதமரே அந்தப் பயணத்துக்குத் தடை போட்டதாக செய்திகள் வெளியானதே?''
''இப்படி வேற கிளம்பியிருக்காங்களா..? கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் கிளம்ப முடிவெடுத்த சமயம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. அமைச்சர் என்ற முறையில் அந்த சமயத்தில் நான் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியிருந்ததால், அந்தப் பயணத்தை சற்று தள்ளிப் போடும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து கேட்டுக்கொண்டனர். அப்போது தள்ளிப் போடப்பட்ட பயணத்தை இதோ இப்போது செயல்படுத்துகிறேன். இதுதான் உண்மை!''
?''டெல்லியிலிருந்து தமிழக அரசியலுக்கு வரும் உங்களின் ஆசை என்னவாயிற்று?''
''இப்பவும் நான் தமிழகத்தில்தானே இருக்கேன்! தமிழகத்திலிருந்துதானே டெல்லிக்கு போனேன்! பத்திரிகைகளில்தான் எதையாவது எழுதிக்கிட்டிருக்காங்க. அழகிரியை பொறுத்தவரைக்கும் உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுபவன் அல்ல. டெல்லியைவிட்டு வர நான் ஆசைப்பட்டிருந்தால், நானே வெளிப்படையாகச் சொல்லி யிருப்பேன். என்னைப் பொறுத்த வரைக்கும் மதுரை எம்.பி-யாக மகிழ்ச்சியாக, திருப்தியாக இருக்கிறேன். அதேநேரத்தில் டெல்லியைவிட்டு தமிழக அரசியல் களத்துக்கு வர விரும்பினால், அதனை சந்தோஷமாக வரவேற்பது தலைவர் கலைஞராகத்தான் இருக்க முடியும்..!''
?''நாடாளுமன்றத்தில் உரத் துறை தொடர்பான விவாதங்களின்போது நீங்கள் மாயமாகி விடுவதாக எதிர்க்கட்சிகள் புகார்கிளப்புகின்றனவே?''
''இதுவரை எந்த அமைச்சரும் செய்யாத உர மானியத்தை விவசாயிகளிடமே நேரடியாகக் கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருக்கிறேன். இந்தியா முழுவதும் நலிவடைந்து மூடிக்கிடக்கும் எண்ணற்ற உரத் தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து உர இறக்குமதியை அதிகப்படுத்தி, உரத் தட்டுப்பாடுகளை முற்றிலும் தவிர்த்திருக்கிறேன். ஏழைஎளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக மருந்து கம்பெனிகளுடனும், மருத்துவ ரசாயன கம்பெனிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். இத்தகைய சாதனைகளை மறந்து விட்டு, 'அழகிரி பதில் சொல்லவில்லை' என்பது நியாயமா?''
?''திடுதிப்பென்று உங்கள் மகன் துரைதயாநிதிக்கு திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டீர்களே?''
''என்னதான் கட்சி, பதவி என சுத்திக்கிட்டிருந்தாலும் நானும் ஒரு தகப்பன்தானே... எனக்கும் சில கடமைகள் உண்டு. துரையை விரல்பிடித்து நடக்கவைத்த முதல் கடமையில் தொடங்கி, துரை விரும்பிய படிப்பைப் படிக்க வைத்தது, விரும்பிய தொழிலை செய்ய அனுமதித்தது வரைக்குமான எனது கடமைகளை சரியாகவே செய்திருக்கிறேன். ஒரு மகனுக்கு தந்தை செய்யும் முக்கிய கடமை, திருமணம் செய்து வைப்பதுதான். அந்தவகையில் நானும் எனது மனைவி காந்தியும் சேர்ந்து ஒரு நல்ல பெண்ணை துரைக்காகத் தேர்ந்தெடுத்தோம். துரையிடம் கேட்டு அவருக்குப் பிடித்து, அதன் பின்பு தற்போது நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. எனது கடமைகளைத் திருப்தியாக நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன்.''
?''ஒரு அண்ணனாக கனிமொழியின் எதிர்காலத்துக்கு எந்தவகையில் உதவியாக இருக்கப் போகிறீர்கள்?''
(பலமாகச் சிரிக்கிறார்) ''இந்த அழகிரியைப் பொறுத்தவரைக்கும் என்னுடைய எதிர்காலத்தையே நான் முடிவு செய்வதில்லை. காலம் விட்ட வழியில் போய்க் கொண்டிருக்கிறேன். இதில் மற்றவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் உரிமையும், அதிகாரமும் என் கையில் இல்லை. அவரவர் எதிர்காலத்தை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில் தனிப்பட்ட முறையில் ஓர் அண்ணனாக கனிமொழிக்கு எனது அன்பும், ஆதரவும் என்றைக்கும் இருக்கும்.''
?''கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வில் யாரைத் தலைவராக ஏற்றுக்கொள்வீர்கள்?''
''எனக்கு 10 வயதிருக்கும்... அப்போதுதான் திராவிட கலாசாரத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் தலைவர் என்னிடம் விளக்கினார். அப்போது, பெரியார்தான் எனக்குத் தலைவராகத் தெரிந்தார். அதன் பிறகு அறிஞர் அண்ணாவின் பேச்சும், எழுத்தும் என்னைக் கவர, அண்ணாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன். அண்ணாவுக்குப் பிறகு அப்போதும் இப்போதும் எப்போதும் தலைவர் கலைஞர் மட்டுமே எனக்குத் தலைவர்! தலைவர் கலைஞர் இருக்கும்போது, மற்றவர்களைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், தலைவர் கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை..!''
- பட்டென்று முடித்துக்கொள்கிறார் பேட்டியை!
( நன்றி: ஜூவி )
NTDV - செய்தி
( நன்றி: NDTV )
இரட்டை குழல் துப்பாக்கி மாதிரி இரண்டு நியூஸ் !
Posted by IdlyVadai at 3/24/2010 02:39:00 PM 39 comments Links to this post
அன்புடன், மன்னார்குடி !
எனக்கு மன்னார்குடி அனுப்பிய கடிதம் !
அன்புள்ள இட்லிவடை,
மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா பற்றிய தங்களது பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுடைய வலைத்தளத்தில் மன்னார்குடி பற்றிய செய்திகள் வருவதில் மிக்க மகிழ்ச்சி. பங்குனி திருவிழா செய்திகளை திரட்டி வெளியிட்ட 'பெயர் சொல்ல விருப்பமில்லை' அவர்களுக்கும் நன்றி.
என்னுடைய வலைத்தளத்திலும் பங்குனி திருவிழா புகைப்படங்கள மற்றும் காட்சிகள் சிலவற்றை பதிவு செய்துள்ளேன்.
முகவரி : http://rajamannargudi.blogspot.com
தாங்கள் என் வலைதளத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
மன்னார்குடி
உங்க வலைதளம் என்ன மன்னார்குடிக்கே வந்து உங்களை பார்க்கிறேன் !
Posted by IdlyVadai at 3/24/2010 01:01:00 PM 9 comments Links to this post
Labels: அறிவிப்பு, ஆன்மிகம், விருந்தினர்
ராமன் எத்தனை ராமனடி!

போட்டி கீழே
ஸ்ரீராமரை வைத்து சினிமாவில் என்ன என்ன பாடல் வந்திருக்கிறது ? நினைவில் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அட்லீஸ்ட் ராமரை இப்படியாவது நினைத்துக்கொள்ளுவோம் :-)
முதல் போனி என்னுடையது :
பாடல்:
ராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீரகுராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
படம்: சிப்பிக்குள் முத்து
எல்லோருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள் !
ஒரு 100 பாடல் இருக்குமா ?
Posted by IdlyVadai at 3/24/2010 11:30:00 AM 39 comments Links to this post
Tuesday, March 23, 2010
ஒரு வீடு, ஒரு குடும்பம் - ஒரே அரசியல்
முலாயம் சிங், கல்யாண் சிங், ராஜ்நாத்சிங், மன்மோகன்சிங், மாயாவதி, ஜெயலலிதா, பால் தாக்கரே இவர்கள் ஒன்றாக சந்தித்தால் ? மித்தாய் லால் - சந்திரசேனா தம்பதிக்கு ரொம்ப தான் தைரியம் ஜாஸ்தி இவர்களை சந்திக்க வைத்துள்ளார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்த தம்பதிகளுக்கு ஏழு குழந்தைகள். முலாயம் சிங், கல்யாண் சிங், ராஜ்நாத்சிங், மன்மோகன்சிங், மாயாவதி, ஜெயலலிதா, பால் தாக்கரே இப்படி தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளார்கள்.
ஏன் இந்த மாதிரி விபரீத ஆசை என்று கேட்டால், "எங்க மிகவும் ஏழை. எங்களுடைய குழந்தைகளாவது எதிர்காலத்தில் வசதியாக இருக்க வேண்டும் என்று இந்த பெயர்களை வைத்தோம்" என்கிறார்கள்.
"டேய் மன்மோகன் சிங் ... ஊர்சுற்றாதே, மாயவதிக்கு திமிர் ரொம்ப ஜாஸ்தி, ஏன் ஜெயலலிதா சேட்டை பண்ணாதே" என்றபடி தன் குழந்தைகளை செல்லமாக வளர்க்கிறார். ஏன் சார் சோனியா காந்தி மட்டும் மிஸ்ஸிங் என்று கேட்டாள் அதற்கும் பதில் வைத்திருக்கிறார் - "என் மனைவி இப்போதே கர்ப்பமாக இருக்கிறாள், இந்த தடவை நிச்சயம் பெண் குழந்தைதான் பிறக்க போகும் குழந்தைக்கு சோனியாவின் பெயரை ரிசர் செய்து வைத்துள்ளேன் என்கிறார்.
இவருக்காக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
பிகு; இது கொஞ்சம் பழைய நியூஸ், இவருக்கு ஆண் குழந்தை பிறந்ததா பெண் குழந்தை பிறந்ததா என்று நீங்கள் விசாரித்துக்கொள்ளலாம்.
Posted by IdlyVadai at 3/23/2010 07:59:00 AM 18 comments Links to this post
Monday, March 22, 2010
மன்னார்குடி வெண்ணைத்தாழி விழா
பெயர் சொல்ல விருப்பமில்லை மன்னார்குடியில் இருக்கிறார். அங்கே பங்குனியில் இராஜகோபாலசுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி என்ற ஒரு உற்சவம் மிக பிரசித்தம். நேற்று நடந்த இந்த விழாவை எடுத்த படங்கள், மற்றும் சில குறிப்புக்களுடன் சுட சுட நேற்று இரவே எனக்கு அனுப்பிவிட்டார். நான் தான் கொஞ்சம் லேட்.... அனுப்பிய அவருக்கு நன்றி.
மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனிப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தமிழகக் கோவில்களில் தொடர்ந்து முப்பது நாட்கள் திருவிழா என்றால் அது இந்தக் கோவிலில் தான்.
முதல் நாள் கொடியேற்றத்தில் துவங்கி பதினேழாம் நாள் திருத்தேர் பவனி வந்து முப்பதாம் நாள் கோவில் திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
முதல் பதினாறு நாட்களில் தினமும் காலையில் பல்லக்கிலும் இரவில் விதவிதமான வாகனங்களிலும் திருவீதி புறப்பாடு நடைபெறும்.
முதல் நாள் - கொடிச் சப்பரம்
இரண்டாம் நாள் - புன்னை மர வாகனம்
மூன்றாம் நாள் - அன்ன வாகனம்
நான்காம் நாள் - கோவர்த்தன கிரி
ஐந்தாம் நாள் - பஞ்ச முக அனுமார் (கருடன், சிங்கம், வராகம், குதிரை மற்றும் அனுமார் முகங்களுடன்) ஆறாம் நாள் - கண்ட பேரண்ட பட்சி (இருதலைப் பட்சி) ஏழாம் நாள் - முத்துப் பல்லக்கு எட்டாம் நாள் - ரிஷிய முக பர்வதம் (இந்த மலையில்தான் வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் ஒளிந்திருந்ததாக ராமாயணம் கூறுகிறது) ஒன்பதாம் நாள் - சிங்க வாகனம் பத்தாம் நாள் - சூரிய பிரபை பதினொன்றாம் நாள் - சேஷ வாகனம் பன்னிரண்டாம் நாள் - கருட சேவை (இரவு நடைபெறும் இரட்டைக் குடை சேவை மிக பிரபலம்) பதின்மூன்றாம் நாள் - அனுமந்த வாகனம் பதினான்காம் நாள் - யானை வாகனம் பதினைந்தாம் நாள் - கோரதம் பதினாறாம் நாள் - காலையில் வெண்ணைத்தாழி மற்றும் இரவில் குதிரை வாகனம் பதினேழாம் நாள் - திருத்தேர் பதினெட்டாம் நாள் - சப்தா வர்ணம் (கொடி இறக்கம். ) பத்தொன்பதாம் நாள் தொடங்கி இருபத்தொன்பதாம் நாள் வரையில் விடையாற்றி உற்சவம்.
முப்பதாம் நாள் - தெப்ப உற்சவம்.
இன்று (21.03.2010) காலையில் வெண்ணைத்தாழி வழக்கம்போல் நடைபெற்றது.
உங்களுக்காக சில படங்கள் இங்கே: (Pl. see attachments)
முதல் போட்டோ : பெருமாள் ருக்மணி, சத்தியபாமாவுடன்
இரண்டாம் போட்டோ : இரட்டைக் குடையின் கீழ் கருட வாகனத்தில் பெருமாள்
மூன்றாம் போட்டோ : வெண்ணைத் தாழி
இது தவிர வெண்ணைத்தாழியின் போது பக்தர்கள் எறிந்த வெண்ணையினால் மேனி முழுதும் வெண்ணையுடன் கண்ணன் வீடியோவில்.
அன்புடன்
- பெயர் சொல்ல விருப்பமில்லை.
படங்கள்...

Posted by IdlyVadai at 3/22/2010 01:23:00 PM 14 comments Links to this post
Labels: ஆன்மிகம், விருந்தினர்
Sunday, March 21, 2010
சன்டேனா இரண்டு (21-3-10) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்...சில ஆச்சரியங்கள்.
செய்தி # 1
ஒரு வீட்டின் கிரக பிரவேச நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அங்கு நான் கண்ட ஆச்சரியமான(!) விஷயம்..நடுத்தர வயதில் இருக்கும் வீட்டின் உரிமையாளர் , அவரது வயதான தந்தை மற்றும் கல்லூரியில் படிக்கும் அவர் மகன் அனைவரும் 'உற்சாக பானம்' அருந்திவிட்டு , தள்ளாடியபடி இருந்தனர். (தலைமுறை இடைவேளை காணோம்!) .
இன்று குடிக்கும் வழக்கம் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே பரவ தொடங்கி இருக்கிறது என்கிறது ஒரு சர்வே. 'தண்ணி அடிக்கறது தப்பு இல்லை. ஆனா, சைலண்டா வந்த படுத்தா போதும் ' என்று பெண்களும் புரட்சிகரமாக சிந்திக்க தொடங்கி விட்டனர்.விரைவில் அவர்களும் களத்தில்(?) இறங்குவார்கள் என தெரிகிறது. அண்ணாமலை பலகலை கழகத்துக்கு உட்பட்ட ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்கு 'பீர்' கேன்கள் ரகசியமாக ஆட்டோவில் சென்றதை நான் பார்த்து இருக்கிறேன்.
ஆச்சாரமான ஐயர் குடும்பத்து கல்யாணத்தில் கூட, 'பக்கத்துக்கு ஹோட்டல இருக்கு. போயிட்டு வந்துடுங்கோ' என்று 'சரக்கு' பார்ட்டி நடைபெறும் அளவுக்கு பெரும் மறுமலர்ச்சி ஏற்ப்பட்டு உள்ளது. டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழ் நாட்டில் ''குடிகாரர்களின்' எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து இருப்பதை தி.மு.க வின் சாதனை பட்டியலில் குறிப்பிட்டே ஆக வேண்டும்..
இதில் புழங்கும் கோடிக்கணக்கான வருவாயை கருத்தில் கொண்டு, யாரும் வாய் திறக்காத நிலையில், பென்னாகரம் தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் ராமதாஸ் மட்டும் ஜோக் போன்று ஒன்று சொன்னார். " நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல் படுத்துவோம்' என்று தொடர்ந்து கூறி வருகிறார் அவர்.
த.மு.மு. க எனப்படும் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் அரசியல் முகமான மனித நேய மக்கள் கட்சி, மார்ச் முதல் வாரம் முதல் பெரிய அளவிலான போராட்டத்தில் குதித்தன. "மதுகடை மறியல் போர் " என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள் நடந்தன.
"மனித நேயத்துக்கு, மனித தன்மைக்கு எதிரான மது கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு " என்கிறார் த.மு.மு.கவின் தலைவர் திரு.,ஜவஹிருல்லா.இதில் ஹைலைட்டான விஷயம்...முஸ்லிம் பெண்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
பொதுவாக, த.மு.மு.க. ஒரு போராட்டம் நடத்துகிறது என்றால் அது, டிசம்பர் 6 நினைவு நாள் அல்லது முஸ்லிம் சமுக பிரச்சினை சார்ந்துதான் இருக்கும்.
ஆனால், மதுக்கடைகள் ஒழிப்பு போன்ற ஒரு பொது பிரச்சினைக்கு, அவர்கள் போராடுவது ஆச்சரியம் தானே?
இன்னொரு ஆச்சரியம் : கடந்த வாரம் சேஷாசலம் என்கிற பெரியார்தாசன் என்கிற சித்தார்த்தன் என்கிற நபர் , டாக்டர் அப்துல்லா என்று முஸ்லிம் மதத்தை தழுவினார்.
இது தனது பத்து ஆண்டுகள் கனவு என்று கூறிய அவர் "உலகத்தில் இருக்கும் எல்லா வேதங்களையும் அடுக்கி வைக்கலாம். இந்து மதம் பின்பற்றும் வேதங்கள், யூதர்கள் பின்பற்றும் தவ்ரா வேதம், கிறித்தவர்களின் பைபிள் வேதம் இவற்றையெல்லாம் அறிவு பூர்வமாக ஆராய்ச்சி செய்து பாத்தால் இவற்றில் இறைவன் நேரடியாக சொன்னதாக ஏதாவது வேதம் உள்ளதா? கிருஷ்ணசாமி சொன்னதாக முனுசாமி சொன்னதாக சின்னசாமி சொன்னதாக தான் உள்ளது.
1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன் தான். இப்போது அறிவு ஜீவிகள் எந்தப் பக்கம் வரவேண்டும் என்பதை புரிய வேண்டும்".
என்று கூறி இருக்கிறார் 'கருத்தம்மா' புகழ் அப்துல்லா.
"முருகன் கொலை செய்தால், முருகன் கொலை செய்தான் என்றும், நெல்சன் கொள்ளை அடித்தால், நெல்சன் கொள்ளை அடித்தான் என்றும் சொல்கிறார்கள். ஆனால், முகமது தவறு செய்தால், இஸ்லாமிய தீவிரவாதி என்கிறார்கள். அதற்குதான் நான் களத்தில் இறங்கி இருக்கிறேன் " என்று பேசி இருக்கிறார் அவர் .
பெரியார் கொள்கைகளை கடை பிடிப்பதில், வீரமணியை விட அதிகம் நம்பிக்கை தந்த பெரியார்தாசன், டாக்டர் அப்துல்லா ஆன ஆச்சரியம் நடந்து இருக்கிறது.
செய்தி # 2
அடித்தட்டு மக்களுக்கு இலவச கல்வி, சேவை உணர்வோடு பணி புரியும் ஆசிரியர்கள், ஒழுக்கமுடன் சிந்தனைக்கு இடம் தரும் கல்வி, தூய தமிழ் வழி கல்வி, அதே சமயம் ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு சிறப்பு வகுப்புகள் தரும் பள்ளி....எதோ கனவு திட்டம் போல இருக்கிறதா?
மேலே சொன்ன அனைத்தும் நடைமுறையில் சாதித்து காட்டி இருக்கிறது திண்டிவனம் அருகே உள்ள உரோசனையில் இருக்கும் தாய் தமிழ் பள்ளி. தாய்தமிழ் பள்ளிகள், பேராசியர் கல்யாணி மற்றும் தோழர் தியாகு ஆகியோரால் தொடங்கபட்டு, இன்று தமிழ் நாடு முழுவதும் இருக்கின்றன.
இங்கு படிப்பவர்கள் அனைவரும் ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளே. ஒரு பைசா கூட கட்டணம் இல்லை. அறிஞர் அ. மார்க்ஸ், சட்ட மன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் நடிகர் சூர்யாவின் அகரம் போன்றவர்களின் நன்கொடைகள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை கொண்டு இப்பள்ளிகள் நடை பெற்று வருகின்றன.
"இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு தங்கள் சமுக நிலை, பெற்றோர்கள் படும் கஷ்டங்கள் அனைத்தும் தெரியும். இவர்களது திறமை மற்றும் ஒழுக்கம் கண்டு திண்டிவனம் பகுதி முழுவதும் எங்கள் மாணவர்களுக்கு நல்ல பெயர் உள்ளது " என்கிறார் உரோசனை தாய்த்தமிழ் பள்ளியின் மேலாளர் திரு. முருகப்பன். ஆனால், சரியான நிதி வசதிகள் மற்றும் அரசின் ஆதரவு இல்லாததால் இன்னும் தொடக்க பள்ளி நிலையிலேயே இருக்கின்றன இந்த பள்ளி..
"ஆண்டு தோறும் 750 கோடி வண்ண தொலைகாட்சி பெட்டிகளுக்கு செலவு செய்யும் அரசு, ஒரு 15 கோடி ஒதுக்கினாலே சுமார் 456 தாய்தமிழ் பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக மற்ற முடியும் " என்கிறார் பேராசிரியர் கல்யாணி.
"வோட்டு கண்ணாடி' யை கழற்றிவிட்டு, தொலை நோக்கு பார்வையோடு என்றைக்குதான் பார்க்க போகிறார் நம் முதல்வர்?.
தாய் தமிழ் பள்ளிக்கு நீங்கள் உதவிட விரும்பினால் அல்லது சென்று பார்வையிட விரும்பினால் 94426 22970 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் (நன்றி : புதிய தலைமுறை, மார்ச் இதழ்). நானும் விரைவில் அங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவிக்கும் தாய் தமிழ் பள்ளிக்கு சென்று சிறு உதவி செய்ய முடிவு எடுத்து உள்ளேன்.
கூடுதல் ஆச்சரியம் : முல்லை பெரியார் விவகாரத்தில், கேரளாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றாக உள்ளன. காவிரியில் கர்நாடகாவின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றே. ஆனால், நம் தமிழகத்தில் அவ்வாறு இல்லாததே நம் அனைத்து மாநில அளவிலான பிரச்சினைகள் 'கன்னிதீவாய்' தொடர்வதறுக்கு காரணம்.
முதல் முறையாக ஒரு 'ஆச்சரியம்', மாமல்லபுரத்தில் நடந்து இருக்கிறது. அங்கு உள்ள அண்ணா நகர் மக்கள் , பட்டா கேட்டு போராட, அதற்க்கு ம.தி.மு.க ஏற்ப்பாடு செய்தது. அதில், உள்ளூர் தி.மு.க மற்றும் அ. தி.மு.க பிரநிதிகள், பா.ம.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள, கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் மற்றும் பாஜகவில் இருந்து டாக்டர் தமிழிசை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மக்கள் பிரச்சினைக்காக, அனைத்து அரசியல்கட்சிகளும் பாகுபடு இன்றி கலந்து கொள்ளும் இதை போன்ற 'ஆச்சரியமான' போராட்டங்கள் தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஆச்சரியங்கள் தொடருமா?
(நன்றி..இனி அடுத்த வாரம்).
- இன்பா
Posted by IdlyVadai at 3/21/2010 08:04:00 AM 43 comments Links to this post
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Saturday, March 20, 2010
தலை தப்பிய ஹெட்லி, தலை குனியும் இந்தியா !
கட்டுரை கீழே..
இது எங்களுக்குப் பின்னடைவு அல்ல. மீண்டும் வலியுறுத்துவோம். – திரு. ப. சிதம்பரம்.
அவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தால், அது இந்திய அரசைத் திருப்தி படுத்தும். திரு. ஜி.கே.பிள்ளை.
மேற்கூறிய இரண்டு கருத்துக்களும், பிடிபட்டுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கத் தீவிரவாதி டேவிட் ஹெட்லி குறித்து நம்மவர்கள் கூறியவை. இவ்வளவு நாட்களாக பிடி கொடுக்காமலிருந்த டேவிட் ஹெட்லி, தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரியுள்ளார். அமெரிக்க சட்டப்படி ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டால், மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையிலிருந்து தப்பிக்கலாமாம்.
நவம்பர் 26, 2008 இல் நடந்த மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு லஷ்கர்-ஈ-தொய்பாவிற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த்திலிருந்து, பல வசதிகளையும் டேவிட் ஹெட்லி செய்து கொடுத்துள்ளார். இது அமெரிக்க FBI ஆல் கண்டறியப்பட்டு, டிசம்பர் 8, 2009 இல் அதிகாரப் பூர்வமாக அவரை மும்பைத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாக அறிவித்த்து. இதற்கு முன்னமே டென்மார்க்கிலுள்ள பத்திரிக்கையலுவலகம் தாக்கப்பட்டு, அதில் சில அமெரிக்கர்கள் உயிரிழந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
மும்பை தாக்குதலில் டேவிட் ஹெட்லிக்கு இருந்த தொடர்பால், அவரை இந்தியாவிற்கு கொணர்ந்து விசாரணை நட்த்த வேண்டுமென இந்தியா வலியுறுத்தி வந்த்து. ஆனால் அமெரிக்கர்களைக் கொன்ற வழக்கிலும் அவர் சிக்கியிருந்த்தால், அவரை இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே மறுத்து வந்த்து. இங்கு செய்த தவறுகளுக்கே அவர் மரண தண்டனையோ அல்லது பல நூறு ஆண்டுகள் சிறை வாசத்தையோ கழிக்க வேண்டியிருக்கும். அதன் பிறகே அவரை இந்தியா அனுப்புவது பற்றி பரிசீலிக்கப்படும் என அமெரிக்கா கைவிரித்து விட்டது.
இது போன்ற கையறு நிலை இது இந்தியாவிற்குப் புதிதல்ல. இந்திய மண்ணில் குற்றம் இழைத்து விட்டு அந்நிய மண்ணிற்குத் தப்பியோடிய எவரையுமே இதுவரை இந்தியாவிற்கு கொண்டு வர முடிந்த்தில்லை. தாவூத் இப்ரஹீம் துவங்கி, குவாட்ரோக்கி, இப்பொழுது டேவிட் ஹெட்லி. தாவூத் இப்ரஹீம் இங்கே காலடியிலுள்ள பாகிஸ்தானில் சர்வ சுதந்திரமாக உலவுவதோடு, நக்மாவோடு ஷார்ஜாவில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை இந்தியாவிற்குத் தர வேண்டுமென இன்றுவரை நமது அரசாங்கம் கெஞ்சி வருகிறது. குவாட்ரோக்கிக்கு பாதுகாப்பளிப்பதற்கு பெரிய குடும்பமும், அதன் எடுபிடியுமான சிபிஐ துணையிருப்பதால் அவரை இந்தியா கொண்டு வருவதும் பகல் கனவாகி, இப்பொழுது அவர் சுதந்திரம் பெற்று விட்டார். அடுத்த கெஞ்சும் படலம் பாகிஸ்தானிடம், லஷ்கர் தலைவரை ஒப்படைக்க வேண்டி!! அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த பரிதாபமான நிலையில், டேவிட் ஹெட்லியையும் இப்பொழுது இந்தியாவிற்கே கொண்டு வர இயலாது என்ற நிலை தோன்றி விட்ட்து. டேவிட் ஹெட்லி மன்னிப்பு கோரி விட்ட்தால் அவரது தண்டனை குறைப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்ட்து. அவருடைய வக்கீலும், அவரை எங்கேயும் அனுப்ப இயலாது, அந்நிய அரசாங்கங்கள் வேண்டுமாயின் இங்கு வந்து விசாரணை நட்த்தலாம் என போனால் போகிறதென்று கூறியிருக்கிறார். இதையேதான் அமெரிக்க அரசாங்கமும் கூறுகிறது. காரணம், என்னை வெளிநாட்டிற்கு அனுப்பக் கூடாது என டேவிட் ஹெட்லி கோரிக்கை விடுத்திருக்கிறானாம். இப்பொழுது யார் குற்றவாளி என்றே தெரியவில்லை.
இந்த அவலங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், நாம் தீவிரவாத்த்திற்கெதிரான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டுவதில்லை என்பதே. இதுவரை இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதிகளின் மீது நாம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம்?? பல குண்டுவெடிப்புகள் துப்பு துலங்கவே இல்லை. இவர்கள் காரணமாக இருக்கலாம், அவர்கள் காரணமாக இருக்கலாம் என்ற ஹேஷ்ய நிலையிலேயே இருக்கின்றன. துப்பு துலங்கி பிடிபட்ட தீவிரவாதிகளையும் அரசாங்கம் ஓட்டு வங்கியை முன்னிட்டு காருண்யத்தோடு நோக்குவதால் வருடா வருடம் கருணை மனுவில் காத்திருப்போர் பட்டியலில் அவர்களுடைய பெயர் பின்தங்கிக் கொண்டே போகிறது. இன்னொருவருக்கு இன்னும் விசாரணை முடியவில்லை. அது முடிந்தாலும் முன்னவருக்குத் துணையாக அவரும் இருப்பார். ஆக இந்தியாவைப் பொருத்தவரை தீவிரவாத்த்திற்கெதிரான நடவடிக்கை வெறும் வாய்ச் சவடால்களும் கண்டன்ங்களும் மட்டுமே.
Enough is enough என்று மும்பை தாக்குதலின் போது தொண்டை வரள மீடியாக்களும் மக்களும் கதறினர். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற புனே தாக்குதலில் தொடர்புடையவர்கள் யார் என இன்றுவரை தெரியவில்லை. குற்றவாளிகள் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. நமது அரசாங்கமும் கண்டனம் செய்து விட்டு, விசாரணை நட்த்திக் கொண்டிருக்கிறோம் என இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கிறது. நாமும் அதனை மறந்து விட்டோம். இதுதான் லட்சணம்.
உலகிலுள்ள பல நாடுகளும் இன்றைக்கு இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டுப் பயணிகளை, சுற்றுலாவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றன. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு இது எவ்வளவு பெரிய தலைகுனிவு? இவையனைத்திற்கும் காரணம் தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கையில் நமது அலட்சியமான போக்கு. இதை இந்தியா எப்போது உணரப் போகிறது?
ஆக இதே போன்று தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கை விஷயத்தில் இந்திய அரசு சர்வ அலட்சிய மனோபாவத்துடனும், ஓட்டு வங்கியே குறிக்கோள் என்ற நோக்கத்துடனும் இருக்கும் வரை, இந்தியாவிற்கும், அதன் குடிகளுக்கும் தீவிரவாத்த்திலிருந்து விடிவில்லை
ஹெட்லி பற்றி ஓர் அளவு தெரிந்துக்கொள்ளலாம் இங்கே ஹெட்லீ, மதானி, The Departed
- யதிராஜ்
Posted by IdlyVadai at 3/20/2010 09:39:00 AM 13 comments Links to this post
Labels: செய்திவிமர்சனம், யதிராஜ சம்பத் குமார்
Friday, March 19, 2010
தமிழக பட்ட்2010 - சில குறிப்புகள்
# தமிழக பட்ட்2010: புதிய மணிமண்டபங்கள்
# தமிழக பட்ட்2010: திரைப்பட சலுகை
# தமிழக பட்ட்2010: அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.
# தமிழக பட்ட்2010: புதிய கல்வித்திட்டங்கள்
# தமிழக பட்ட்2010: வரிகுறைப்பு பெற்றவை
# தமிழக பட்ட்2010: வரிவிலக்கு பெற்றவை
# தமிழக பட்ட்2010: உணவு மானியம் 3750 கோடி
# தமிழக பட்ட்2010: பயிர்க்கடன் 2500 கோடி
# தமிழக பட்ட்2010: விவசாயிகளுக்கு வட்டியில்லாக்கடன்
# தமிழக பட்ட்2010: மாணவர்களுக்கு இலவச டிக்சனரி
# தமிழக பட்ட்2010: இலங்கை தமிழர் நலன் காத்திட 100 கோடி
# தமிழக பட்ட்2010: ஊனமுற்றோர் நலம் காத்திட கூடுதல் நிதி
# தமிழக பட்ட்2010: பாக்குமர இலைத் தட்டுகளுக்கு வரிவிலக்கு.
# தமிழக பட்ட்2010: வீடு கட்டப் பயன்படும் பனைச் சட்டங்களுக்கு வரி விலக்கு.
# தமிழக பட்ட்2010: பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் சீரமைக்க ரூ.127.5 கோடி ஒதுக்கீடு.
# தமிழக பட்ட்2010: தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்திக்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு
# தமிழக பட்ட்2010: காவிரி ஆற்றில் கதவணை அமைக்க ரூ.103 கோடி ஒதுக்கீடு
# தமிழக பட்ட்2010: தமிழக ஆறுகளில் வெள்ளத்தடுப்புத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி.
# தமிழக பட்ட்2010: நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கும் திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
# தமிழக பட்ட்2010: ஏரிகளைப் சீரமைக்க ரூ.439 கோடி
# தமிழக பட்ட்2010: முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை
# தமிழக பட்ட்2010: வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
# தமிழக பட்ட்2010: சேது சமுத்திர திட்டப் பணிகளை உடனே நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
# தமிழக பட்ட்2010: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு
# தமிழக பட்ட்2010: உணவு மானியத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கீடு
# தமிழக பட்ட்2010: இலங்கை அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
# தமிழக பட்ட்2010: காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.2962 கோடி ஒதுக்கீடு.
# தமிழக பட்ட்2010: ரூ. 120 கோடி நிதியில் 2000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்
# தமிழக பட்ட்2010: 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
# தமிழக பட்ட்2010: பள்ளிக்கல்விக்கு ரூ.10 ஆயிரத்து 148 கோடி ஒதுக்கீடு.
# தமிழக பட்ட்2010: 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச அகராதிகள் வழங்கப்படும்
# தமிழக பட்ட்2010: 1 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
# தமிழக பட்ட்2010: மதுரையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
# தமிழக பட்ட்2010: அரசுக் கல்லூரிகளில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து.
# தமிழக பட்ட்2010: வர்த்தகச் சின்னம் இடப்படாத காபித்தூளுக்கு வரிக் குறைப்பு
# தமிழக பட்ட்2010: பெயிண்ட் பிரஷுக்கு வரிக் குறைப்பு
# தமிழக பட்ட்2010: சென்னை வெளிவட்டச் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
# தமிழக பட்ட்2010: கோவை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேற்கு வெளிவட்டச் சாலை ரூ. 284 கோடி செலவில் 4 வழிச் சாலையாக 26 கி.மீ.தூரத்துக்கு பொதுத்துறை சார்பில் அமைக்கப்படும்.
# தமிழக பட்ட்2010: கோவை - மேட்டுப் பாளையம் இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்படும்
# தமிழக பட்ட்2010: கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் ரூ. 1800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
# தமிழக பட்ட்2010: கோவை தொழில்நுட்பப் பூங்கா பணிகள் மே மாதத்தில் நிறைவடையும்.
# தமிழக பட்ட்2010: விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
# தமிழக பட்ட்2010: மேலும் புதிதாக 36 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
# தமிழக பட்ட்2010: மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்புக் கட்டணம் ரத்து
# தமிழக பட்ட்2010: மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளுக்கு வரிவிலக்கு
# தமிழக பட்ட்2010: மனநோயாளிகளைப் பராமரிக்கும் மறுவாழ்வு இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி.
# தமிழக பட்ட்2010: புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
# தமிழக பட்ட்2010: திருவண்ணாமலையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
# தமிழக பட்ட்2010: மாற்றுத் திறனுடையோருக்கென தனித்துறை முதல்வர் கருணாநிதி தலைமையில் செயல்படும்.
# தமிழக பட்ட்2010: மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.200-ல் இருந்து 450-ஆக உயர்வு.
# தமிழக பட்ட்2010: சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.
# தமிழக பட்ட்2010: பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க உதவி செய்வதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு
# தமிழக பட்ட்2010: தையல் பொருள்களுக்கு வரிக்குறைப்பு.
# தமிழக பட்ட்2010: தேனியில் ரூ. 10 கோடி செலவில் சிறப்பு மனநலை மருத்துவமனை அமைக்கப்படும்.
# தமிழக பட்ட்2010: கர்ப்பிணிகளுக்கு அயோடின் கலந்த உப்பு இலவசம்.
# தமிழக பட்ட்2010: தியாகி வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணி மண்டபம்.
# தமிழக பட்ட்2010: விருப்பாச்சியில் கோபால் நாயக்கருக்கு மணி மண்டபம்.
# தமிழக பட்ட்2010: விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரனுக்கு நெல்லையில் மணி மண்டபம்.
# தமிழக பட்ட்2010: கோவையில் தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்
# தமிழக பட்ட்2010: எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
# தமிழக பட்ட்2010: அரவானிகள் நலத்திட்டங்களுக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு.
பட்ஜெட்டில் வழக்கம் போல ஜெ இல்லை.
Posted by IdlyVadai at 3/19/2010 06:14:00 PM 18 comments Links to this post
வெள்ளி விமர்சனம் -சொர்க்கத்தின் குழந்தைகள்
நீங்கள் முதன் முதலாய் எப்போது நல்ல ஷூ அணிந்தீர்கள்? ஞாபகமிருக்கிறதா?
காலுக்கு ஏன் ஷூ அணிந்து வரவில்லை அல்லது பள்ளியின் சீருடையை ஏன் அணிந்துவரவில்லை என கல்லூரியிலோ, அல்லது பள்ளியிலோ வெளியே நிறுத்தப் பட்டிருந்தால்...
ஓரிரு வயது வித்தியாசத்தில் அன்பான தங்கை உங்களுக்கு இருந்திருந்து, அவளுடன் பள்ளிக்குச் சென்று வரும் இன்பத்தை அனுபவித்தவராய் இருந்திருந்தால்..
பெற்றோரின் கஷ்ட நஷ்டத்தை உணர்ந்த குழந்தையாய் இளமையைக் கழித்திருந்தால்...
வறுமையில் செம்மையாய் உங்களின் பெற்றோர்கள் உங்களை வளர்த்ததாக உங்களுக்கு மனதில் இனிமையான நினைவுகள் இருந்தால்..
அப்பா உங்களுடன் சமமாய் பழகி இருவரும் சேர்ந்து ஏதேனும் வேலை செய்து , உங்கள் திறமையை அவர் மெச்சியது உங்கள் மனதில் பசுமையாய், இனிமையாய் அவ்வப்போது நினைத்துப் பார்க்கும்படி இருந்தால் இது உங்களுக்கான படம்.
ஒரு எளிய குடும்பத்தில் இரு குழந்தைகள். அண்ணனும், தங்கையும். ஒருநாள் அண்ணன் தங்கையின் பள்ளிக்கு செல்லும் காலனியை சரி செய்ய எடுத்துச் சென்று திரும்பி வரும் வழியில் தொலைத்து விடுகிறான். அதை பெற்றோரிடம் சொல்லாமல் அண்ணனின் காலனியை வைத்தே இருவரும் சமாளிப்பதும், ஒரு நல்ல ஷுவைப் பெறக்கூடிய பெரும் கனவிற்காக காத்திருப்பதும் படம்.
இதர திரைப்படங்களைக் கேவலப்படுத்துவதற்காகவும் ஈரானிய திரைப்படங்களை பாராட்டுவதன் மூலம் கிடைக்கும் அறிவுஜீவி பிம்பத்திற்காகவும் இப்படி விமர்சனம் செய்கிறார்களோ என நினைத்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் வரும் மன மகிழ்ச்சியும், நமது திரையுலகம் போகவேண்டிய தூரத்தையும் நினைத்தால் ஆயாசம் வராமல் இல்லை. மொத்தம் நாலே நாலு பாத்திரங்களையும், ஒரே ஒரு ஊரையும் வைத்து இவ்வளவு அருமையான படத்தைத் தந்த மஜித்மஜிதியை எவ்வளவு பராட்டினாலும் தகும்.
அந்த நாலுபேரில் இரு குழந்தைகளைச் சுற்றியே மொத்தப் படமும் சுழல்கிறது. அலியும், ஸாஹ்ராவும் வாழும் இரானிய குடியிருப்புகள் கிட்டத்தட்ட 30 ஆண்ட்டுகளுக்க்கு முந்தைய தமிழ்நாட்டின் கிராமங்களை நினைவுபடுத்துகிறது. அழுக்கான, சிமிட்டி பூச்சுகள் இல்லாத சுவர்களைக் கொண்ட சந்துகள் நிறைந்த குடியிருப்பும், எப்போதும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் மரங்களும் நிறைந்த பள்ளிச் சூழ்நிலையும், நமக்கு வழக்கமான தமிழக கிராமப்பள்ளிகளை நினைவுக்குக் கொண்டுவரும். ஈரானிய நாட்டு ஆசிரியர்களும் தமிழக ஆசிரியர்களைப் போலவே அறிவுரை வழங்குகின்றனர்.
இரு குழந்தைகளும் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வது அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம். அப்படியே வாழ்ந்திருக்கின்றன இருகுழந்தைகளும். ஒரு குடும்பத்தின் கதையை அப்படியே செல்லுலாய்டில் எந்தவித அலங்காரங்களுமின்றி தந்திருக்கிறார் இயக்குனர்.
காணாமல் போன ஷூவை அணிந்திருக்கும் மாணவியின் வீட்டை அடையாளம் கண்டு அண்ணனிடம் சொல்வதும், இருவரும் சென்று அதை வாங்கி வரச்செல்லும்போது, அந்தக் குழந்தையின் தகப்பனுக்கு கண் தெரியாது என்பதும், இவர்களைவிட அவர்கள் வறுமையில் இருப்பதைக் கண்டு கேட்கமல் திரும்பி வருவதும், அந்தப்பெண்ணுடன் நட்புகொள்வதும் என குழந்தைகள் குணத்தால் மனதை அள்ளுகின்றன.
அப்பாவும், மகனுமாக தெஹ்ரானின் நகர்ப்புறங்களில் இருக்கும் பெரிய பெரிய வில்லாக்களில் தோட்டவேலை செய்யச் செல்வதும், ஒரே ஒருவீட்டில் கிடைக்கும் அன்பான வரவேற்பையும், கிடைக்கும் ஊதியத்தையும் வைத்து, இதுபோல பலவீடுகளில் சம்பாதித்து என்னென்ன வாங்கலாம் என கனவுகளில் மிதப்பதும், கடைசியில் சைக்கிள் பிரேக் பிடிக்காமல் பள்ளத்தை நோக்கி ஓடி நிலைதடுமாறி விழுந்து சைக்கிள் வீனாகப் போவதும் அப்படியே ஏழைகளின் நாளைய நம்பிக்கை குறித்த ஏக்கங்களை காட்டுகிறது, அது சிதைவதும் அப்படியே..
வீட்டு வாடகையைக்கூட சரிவரக் கொடுக்க முடியாத வறுமையிலும், மளிகைக்கடையில் பாக்கி இருக்கும் சூழ்நிலையிலும், மசூதிக்கு கொடுக்க வேண்டிய சர்க்கரையிலிருந்து ஒரு சிறு கட்டியைக்கூட நாம் எப்படி எடுத்துக்கொள்வது எனக் கேட்கும்போதும், மசூதியில் நடக்கும் பிரார்த்தனைப்பாடலால் மனம் இளகி அழும்போதும் அலியின் தகப்பன் மீது நமக்கு மரியாதை வந்து விடுகிறது. ( தேநீரில் சர்க்கரை போடுவதில்லை, தனியாகக் கொடுக்கின்றனர்)
நோயாளி அம்மா, குறைந்த சம்பளம் வாங்கும் அப்பா, ஒரு சிறு குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலைகளையும் கவனிக்க வேண்டிய நிலை, ஒரே ஷூவை அண்ணனும் தங்கையும் மாற்றி மாற்றி போட்டுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை, எல்லாவற்றையும் குடும்ப சூழ்நிலைக்காக தாங்கிக்கொள்வதும், தகப்பனிடம் பணம் இல்லை என்பதை உணர்ந்து அதைக் கேட்காமலிருப்பதும், அருமை..
படத்தின் இறுதியில் ஒரு மாரத்தன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவதாக வந்தால் ஒரு ஷூ கிடைக்கும் என்பதற்காக பி.ஈ.டி வாத்தியாரிடம் போட்டியில் சேர்த்துக்கொள்ளச் சொல்லி மன்றாடி போட்டியில் சேர்வதும், மூன்றாம் பரிசு வாங்குவதற்காக பின்னால் ஓடிவரும் இருவரை தனக்கு முன்னால் ஓட விடுவதும் இறுதியில் தோற்றுவிடப் போகிறோம் என்ற பயத்தில் கொஞ்சம் வேகமாக ஓடி முதல் பரிசை தட்டியவுடன் எல்லோரும் பாராட்ட , அலி, சார் நான் மூணாவது ஆளா வந்தேனா எனக்கேட்கும்போது நமக்கே பாவமாய் இருக்கும்.
படத்தின் இசையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், எப்போது அடங்கி இருக்க வேண்டும், என்ன மாதிரியான இசை எந்த சூழ்நிலைக்கு என பர்த்துப் பார்த்துச் செய்துள்ளனர். கிளைமாக்ஸில் வரும் ஓட்டப்போட்டியில் பந்தயத்தில் ஓடுபவர்களுடன் சேர்ந்து நாமும் மூச்சு வாங்குகிறோம், மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு தந்தி வாத்தியம் மயக்குகிறது.
அண்ணனும், தங்கையுமாக படத்தில் நடித்திருக்கும் இரு குழந்தைகளுக்கும் வாழ்க்கை முழுதும் திருஷ்டி சுற்றிப்போட்டால்கூட தீராது. அவ்வளவு அழகு மற்றும் நிஜமான அண்ணன் தங்கையாகவே ப்டம் முழுதும் நடிப்பு என்பதையே நாம் நினைக்காதபடி செய்திருக்கிறார்கள்.
அலியின் அப்பாவின் சைக்கிளில் இரண்டு ஜோடி ஷுக்கள் அலிக்கும், ஸாஹ்ராவுக்குமாக வாங்கி இருப்பதை நமக்குக் காட்டும்போது, அலியின் ஷூ இனிமேல் பயன்படுத்தவே முடியாத அளவு நைந்துபோய் இருப்பதை கழட்டிவீசுவதும், அலி போட்டியில் மூன்றாவதாய் வராததல் இனிமேல் நமக்கு ஷூ கிடைக்காது என நினைக்க, படம் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியுடன் குழந்தைகள் இருவருக்கும் ஷூ கிடைத்த மகிழ்ச்சியுடன் படம்பார்த்து முடிப்பர்.
படம் முழுக்க உண்மைத்தன்மையைக் கொண்டுவர இந்தப்படம் ரகசியமாகவே படம் பிடிக்கப் பட்டிருக்கிறது. 1998ல் சிற்ந்த வெளிநாட்டுப் படங்கள் வரிசையில் ஆஸ்காருக்குப் போட்டியிட்ட்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்திடம் தோற்றது, இருப்பினும் பல விருதுகளை வென்றதுடன் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளது இந்தத் திரைப்படம்.
இப்படி அழகான குடும்பமும், பெற்றோரும் கொண்ட இந்தக்குழந்தைகள் நிச்சயம் சொர்க்கத்தின் குழந்தைகளே.
- ஜெய் ஹனுமான்
( சொர்க்கத்தின் குழந்தைகள் - Children of Heaven ( Iranian Movie) 1997 )
Posted by IdlyVadai at 3/19/2010 04:10:00 PM 8 comments Links to this post
Labels: சினி்மா, ஜெய் ஹனுமான், விமர்சனம்
ராகுல் மேஜிக் வேலை செய்யுமா ?
காங்கிரஸில் இரண்டு வகை உண்டு. டெல்லி காங்கிரஸ், மாநில காங்கிரஸ். டெல்லியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வரும் காங்கிரஸுக்கு ஒரு மரபு உண்டு அது தமிழகம் வரும் போது தமிழகத்தில் இருக்கும் கூட்டணி தலைவர் கலைஞரை மரியாதை நிமித்தம் அவரது வீட்டில் சந்தித்துவிட்டு வெளியே இருக்கும் பிரஸுக்கு போஸ் கொடுப்பது.
முதல் முறையாக அது செப்டம்பர் மாதம் மீறப்பட்டது. அப்படி மரபை மீறியவர் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தி. இதற்கு முன்பு விஜய் தான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்று நியூஸை கசிய செய்தார்கள், பிறகு திமுக கொடுத்த பிரஷர் காரணமாக வேட்டைக்காரனின் அப்பா விஜய் பால் குடிக்கும் குழந்தை என்பது போல அறிக்கைவிட்டார்.
ஐந்து மாசம் கழித்து மீண்டும் ராகுல், பிரியங்கா தனி விமானம் மூலம் ( சிக்கன நடவடிக்கை ) திருச்சிக்கு வந்திருக்கிறார். இவர் திருச்சி வந்த வீடியோ காட்சிகளை பார்த்தால் ராஜிவ் காந்தியின் ஸ்டைல் நிறைய தெரியும்.
சரி இவர்கள் எதற்கு வந்தார்கள் ?
இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த. கிட்டத்தட்ட 13 லட்சம் இளைஞர்கள் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்கள். ( இலவசமாக பேட்ஜ் வாங்கியவர்கள் எல்லாம் உறுப்பினர்கள் என்று முடிவுக்கட்டிவிட்டார்கள். நம்ம மக்களுக்கு இலவசமா எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ).
அப்போது இளைஞர் காங்கிரஸாரின் பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்களிடையே உரையாடியிருக்கார் ராகுல். வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே அவர்களது அனைவரின் ஏகோபித்த கருத்தாக இருந்திருக்கிறது. இதற்கு ராகுல் அளித்த பதில் “YES”. இது இளைஞர் காங்கிரஸாரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராகுல் காங்கிரஸ் தலைமையை சரிகட்டிவிட்டால் இது நடக்கக் கூடியதே!! இதில எந்த கஷ்டமும் இல்லை, காங்கிரஸின் அடுத்த தலைமையே இவர் தான் என்று மன்மோகன் சிங்கே நினைக்கிறார்.
பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழகத்திற்கு அடிக்கடி வருவேன் என்று ராகுல் கூறியது பொய்க்கவில்லை. மிகவும் குறுகிய காலத்தில் இது தமிகத்திற்கு அவருடைய நான்காவது விஸிட். இதில் மிகவும் குறிப்பிட்த்தக்க அம்சம், அவர் ஒருமுறை கூட கோபாலபுரத்திற்கு செல்லவில்லை. ராஜிவை போலவே இவர் செல்லும் இடம் எல்லாம் மீடியா இவரை துரத்துகிறது.
இன்னொரு நியூஸ் படித்தேன் அது - புதிய சட்டமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்க துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர், சோனியா மற்று சில காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பை கொடுத்தார். ராகுலையும் சந்திக்க விருப்பம் தெரிவித்த போது, ராகுல் ஸ்டாலினை "வாங்க நாடாளுமன்ற காண்டீனுக்கு" அழைத்து அங்கெ அழைப்பை வாங்கியிருக்கிறார்.
நம்மை அலுவலகத்தில் சந்திக்க யாராவது விசிட்டர்கள் வந்தால் அவர்களை வாங்க காண்டீணுக்கு என்று அழைத்து சென்று பேச மாட்டோமா ? அது மாதிரி நடந்திருக்கிறது. ( இந்த மாதிரி நடந்திருந்தால், அது ராகுலுக்கு தான் இழுக்கு )
இந்த முறை சோனியாஜி திறப்பு விழாவிற்கு வந்த போது, அவர் முதல் முறையாக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றுள்ளார். அதற்கு பிறகு தான் விழாவிற்கு போய்யுள்ளார். இதனால் திமுகவை விட காங்கிரஸ் கட்சிகாரகள் மிகுந்த ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். பத்திரிக்கை கழுகு, குருவி எல்லாம் ஓவர் டைம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. சோனியா காந்தி ராகுல் காந்தி பேச்சை கேட்டுக்கொண்டு தான் இந்த மாதிரி செய்தார் என்றும் சொல்லுகிறார்கள்.
இன்னொரு விஷயமும் பத்திரிக்கையில் வந்துள்ளது அது ராகுல் காந்தி மத்திய அமைச்சர்கள் எல்லாம் ஊழல்கறை படியாதவர்களாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார் ஆனால் திமுக இந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை அதனால் ராகுல் கொஞ்சம் அப்செட் என்கிறார்கள்.
அடுத்த 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கட்சி ஆரம்பித்துவிடுவார்கள். முதல்வர் பதவி திமுகவிற்கு (ஸ்டாலின்?) , துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி என்று ஆரம்பித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
புதிய சட்டமன்ற கட்டிடத்துக்கு எவ்வளவு மூட்டை சிமிண்ட் தேவைப்பட்டது என்று தெரியாது ஆனால் கூட்டணியை ஒட்ட வைக்க சில மூட்டை வஜ்ரம் சிமிண்ட் தேவைப்படும்.
Posted by IdlyVadai at 3/19/2010 02:04:00 PM 27 comments Links to this post
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
எந்த ஊர் மண்டபம்
Posted by IdlyVadai at 3/19/2010 09:00:00 AM 24 comments Links to this post
Labels: புதிர்
Thursday, March 18, 2010
10 பேர், 10 புத்தகம்
புத்தகம் பேசுது புத்தகத்தில் பிரபலங்கள் புத்தகம் என்ற தலைப்பில் ஒரு பட்டியல் தந்துள்ளார்கள். அதே போல நாமும் செய்தால் என்ன என்று ராண்டமாக சிலரை தேர்வு செய்து இந்த தயாரித்த பட்டியல்...
1. பத்ரி(கிழக்கு பதிப்பகம்) - Outliers by Malcolm Gladwell
2. லலிதா ராம்/ராமசந்திரன் மகாதேவன் ( varalaaru.com, சங்கீத ரசிகர்) - ல.சா.ரா சிந்தா நதி ( நனவோடை )
3. கல்யாண்ஜி ( இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் திரைக்கதை விவாதக்குழுவில் பணிபுரிகிறார், ’புதிய தலைமுறை’ வார இதழின் உதவி ஆசிரியர் ) - ஜாகிர் ராஜா - துருக்கி தொப்பி ( நாவல் )
3. நேசமுடன் வெங்கடேஷ் ( சிஃபி, விகடனில் பணிபுரிந்தவர், தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில், எழுத்தாளர் ) - வெட்டுப்புலி தமிழ்மகன் ( நாவல் )
4. வால்பையன் ( வலைப்பதிவர் )- கிமு.கிபி மதன் ( கட்டுரை )
5. ஹரன்பிரசன்னா ( கவிஞர் ) - நிழல் வீரர்கள் - ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள் - பி.ராமன் ( கட்டுரை )
6. பினாத்தல் சுரேஷ்( வலைப்பதிவர் )- ஆதிமங்கலத்து விசேஷங்கள் - க சீ சிவகுமார் ( சிறுகதைகள் )
7. மாலன் ( புதிய தலைமுறை ஆசிரியர், எழுத்தாளர்.. ) - Tehelka As Metaphor: Prism Me A Lie Tell Me A Truth, Madhu Trehan மற்றும் 'ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும், ஆ.சிவ சுப்ரமணியன் எழுதியது- காலச் சுவடு வெளியீடு
8. கௌதமன் ( (ரிடையர்ட்)மேளாலர் அஷோக் லேலண்ட், வலைப்பதிவர் ) - சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - விகடன் வெளியீடு. சி சரவணன்
9. சுரேஷ் கண்ணன் ( இலக்கிய, சினிமா விமர்சகர், பதிவர் ) - மாய விளக்கு - தமிழாக்கம் உமர் - இங்மர் பெர்க்மன் - தன்வரலாறு - நிழல் பதிப்பகம்
10. நீங்க என்ன புத்தகம் என்று பின்னூட்டதில் சொல்லலாம்.
இந்த பட்டியலில் பெண்கள் யாரும் இல்லை அதனால் இந்த படம் ஹிஹி!
Posted by IdlyVadai at 3/18/2010 08:59:00 PM 23 comments Links to this post
Labels: புத்தக அலமாரி, புத்தகம்
Wednesday, March 17, 2010
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 17-3-2010
நேற்றே இந்த கடித்தை எழுத வேண்டும் என்று நினைத்து இன்று எழுதும் கடிதம். பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளிவிழாவை பார்த்தீரா? ஜெயலலிதா எல்லாம் தோற்று விடுவார் போலிருக்கிறது இவரிடம்.
இந்த கூட்ட்த்தில் எல்லோரையும் கவர்ந்தது மாயாவதிக்கு போட்ட மாலை. It was really noteworthy!. ஆமாம் எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாலான மாலை. இதில் எவ்வளவு ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறது என்று யாராவது சொன்னால் பரிசு கூட கொடுக்கலாம். சில 2 கோடி என்கிறார்கள், சிலர் 5 கோடி என்கிறார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் 20 கோடி என்றார்கள். அவர்களுடைய ரேன்ஞ் அப்படி. இந்த மாலை யார் போட்டார்கள் என்பது தான் ஹாட் டாப்பிக். முதலில் கர்நாடக மாநில பகுஜன் சமாஜ் கட்சியினர் அணிவித்தார்கள் என்றார்கள். வருமானவரித்துறை நடவடிக்கை என்றவுடனேயே அவர்கள் நாங்கள் போடவில்லை என்று எஸ்கேப் ஆகிவிட்டார்கள். கடைசியாக இந்த மாலையை கட்சி தொண்டர்களிடம் வசூலித்து போட்டார்கள் என்று சொன்னார்கள். இவர்களின் கட்சி தொண்டர்கள் எல்லாம் தலீத் இனத்தை சேர்ந்தவர்கள்.
இந்த மாலையை போடும் போது கூட்டதில் இருக்கும் தலீத் மக்கள் எல்லாம் கோரஸாக
”ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே”
என்ற பாடலை பாடியிருக்கலாம். என்ன ஒன்று, மாலையில் பூக்களுக்கு பதில் பணம்! பூக்கள் பூத்தவுடன் அவை சாமிக்கும் போகலாம் சாவுக்கு போகலாம் என்பார்கள் எவ்வளவு நிஜம்! தலித் மக்களுக்காகப் போராடுவதே தனது வாழ்நாள் லட்சியம் என்று வேறு மாயாவதி இந்த கூட்டத்தில் முழங்கியுள்ளார். ஐயோ பாவம் தலித் மக்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
(லேட்டஸ்ட் : முதல் மாலை சர்ச்சையே இன்னமும் முடிந்தபாடில்லை. அதற்குள் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள அடுத்த மாலையை கட்சித் தொடர்கள் இன்று அணிவித்துள்ளனர்.)
மாயாவதி மாநாட்டில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தேனீக்கள் கூட்டம் மேடைக்கு வந்து மாயாவதி தலைக்கு மேல் சுற்றியபடி வந்து தொல்லை கொடுத்தன.
அப்போது மாயாவதி தன்னை சுற்றி அரசியல் சதி நடக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட தொண்டர்கள் இந்த தேனீக்கள் கூட எதிர்க் கட்சிகள் கூறியதால்தான் மேடைக்கு வந்துள்ளன என்று பேசிக் கொண்டனர். இது எப்படி இருக்கு. எல்லாவற்றையும் அரசியல் செய்ய நாம ரெடியா இருக்கோம். இப்ப எப்படி இந்த தேனிக்கள் வந்தது என்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாயாவது. பரவாயில்லை IAS, IPS படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கு. முதலில் இந்த மாதிரி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
கதையல்ல நிஜம் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பித்துவிட்டது. லக்ஷ்மி வழக்கம் போல. அதில் கலைஞரை பார்க்க வேண்டும் என்று தன் கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொண்ட அந்த நோயாளியின் நிகழ்ச்சி நெகிழ்வாக இருந்தது. விஜய் டிவி என்பதால் இருக்கலாம். இதே கலைஞர் டிவியில் காண்பித்திருந்தால் திரைப்பட விழா போல தேனும் பாலும் ஓடியிருக்கும். நல்ல வேளை!
எதெதெற்கெல்லாமோ தடை வருகிறது. லண்டனில் வசிக்கும் ஒரு தம்பதியர் மீது வித்யாசமான தடையொன்று விதிக்கப்பட்டுள்ளது அந்த நாட்டு அரசு. பக்கத்து வீட்டு சிறுவன் தனது ஆசிரியையிடம் அளித்த புகாரால், அத்தம்பதியர் இரவு பத்து மணி முதல் காலை ஏழு மணி வரை தாம்பத்ய உறவில் ஈடுபட்த் தடை விதித்துள்ளது. இம்மாதிரியெல்லாம் கூட தடை விதிக்க முடியுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும், அத்தடையை எதிர்த்து அத்தம்பதியர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நம்மூரில் போலீசில் புகார் அளித்தாலே நடவடிக்கை வராது, இங்கிலாந்தில் ஆசிரியையிடம் அளித்த புகாருக்கு உடனடி நடவடிக்கை!! அதுவும் எதற்கு?? இத்தனைக்கும் அவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் கிடையாது. நம்ம ஊரில் தான் பழைய தம்பதிகளுக்கு விகடனில் டாக்டர் நாராயண ரெட்டி அட்வைஸ் தருகிறார். அங்கே எல்லாம் அந்த மாதிரி கிடையது போல..
இந்த ஜோக் எனக்கு ஒரு பிரபல வலைப்பதிவர் அனுப்பியிருந்தார்.
Before wedding...
He: I waited so long for this.
She: Do you want me to leave?
He: No, dont even think of it.
She: Did you love me?
He: Yes, I did, I'm doing and I'll do.
She: Did you ever cheat me?
He: I'll die than doing it.
She: Will you kiss me?
He: Surely, thats my pleasure.
She: Will you hurt me?
He: No way, I'm not such kind of person.
She: Can I trust you.
He: Yes
She: Oh, dear!
To know after wedding, read it from bottom to top.
அவருடைய அனுபவமாக கூட இருக்கலாம் யாருக்கு தெரியும்?இந்த ஜோக்கை படித்தால்தான் சிரிப்பு வரும், பார்த்தால் சிரிப்பு வராது. ஆனால் கண்ணை பார் சிரிப்பு வரும், எப்படி என்று கேட்க கூடாது. குமுதம் ரிப்போர்ட்டரில் இரண்டு தொடர்களை திடீர் என்று நிறுத்தி விட்டார்கள். ஒன்று 'உ' என்று பா.ராகவன் எழுதும் தொடர், மற்றொன்று 'கண்ணை பார் சிரி' என்று சொக்கன் எழுதும் தொடர். What is common in them ? Common man wants to understand ! ஒரே குழப்பமா இருக்கு.
பாகிஸ்தான் அரசியல்தான் குழப்பம் என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் அதை விட குழப்பம். பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு கடந்த ஆறு மாத காலமாகவே அடுக்கடுக்கான படுதோல்விகள். ஷார்ஜாவில் நடைபெற்ற நியூசிலாந்திற்கெதிரான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியதையடுத்து அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் நீக்கப்பட்ட்தோடல்லாமல் அணியிலிருந்தும் கல்தா கொடுக்கப்பட்டார். பிறகு பொறுப்பு முகமது யூசூப்பிடம் அளிக்கப்பட்ட்து. பிறகு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 என அனைத்திலும் படுதோல்வி. அணியினரிடையே ஒற்றுமையில்லை என கேப்டன் முகமது யூசுப் வெளிப்படையாக்க் குற்றம் சாட்டியதையடுத்து அணியினர் ஒருவர் மீது ஒருவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். இப்பொழுது யூசூப், யூனிஸ் ஆகிய இருவருக்கும் காலவரையற்ற தடையும், அக்மல் சகோதர்ர்களுக்கு ஓராண்டு தடை மற்றும் 30 லட்சம் அபராதம் ஆகியவற்றை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் சூதாட்டப் புகார் வேறு பெரிதாக்க் கிளம்பியுள்ளது. ஆஸ்திரேலியத் தோல்விகள் அனைத்துமே சூதாட்ட்த்தால்தான் என குற்றச்சாட்டு வெடித்துள்ளதால் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? பாக்கிஸ்தான் அணிக்கு என்ன கவலை, அவர்களை சப்போர்ட் செய்ய தான் ஷாருக் கான் இருக்கிறாரே!
முன்னாள் ஆந்திர கவர்னர் என்.டி.திவாரியை அநேகமாக யாரும் மறந்திருக்க முடியாது. இவர் ஏற்கனவே ஒரு பெண்ணிடம் கள்ள உறவு கொண்டதன் மூலம் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாம். அக்குழந்தை நான் தான், இதனை சட்டப் பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ரோஹித் ஷர்மா என்ற 30 வயது நபர் தில்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 30 ஆண்டுகள் கடந்துவிட்டபடியால் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அது சரி, இப்படி ஒருவர் தனது தந்தை என்று கூறி ரோஹித் ஷர்மா ஏன் அசிங்கப்பட விரும்புகிறாரோ?
பி.ஜே.பி ராஜ்ய சபாவில் பெண்களுக்கு 33% சட்டத்தை சப்போர்ட் செய்துவிட்டது. பிறகு கட்சிக்காரர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை செய்ததில் நாம் சப்போர்ட் செய்தால் காங்கிரஸ் நல்ல பெயர் வாங்கிவிடும் என்று ஞானோதயம் பெற்று எப்படி 33% சட்டத்தை சமாளிக்கலாம் என்று யோசனையில் இருக்கிறதாம். இது ஒருபுறமிருக்க, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.கவின் ஆதரவின்றி இச்சட்ட்த்தை நிறைவேற்றியிருக்க முடிந்திருக்காது. ஆனால் காங்கிரஸ் மட்டுமே தனியாக நின்று இச்சட்ட்த்தை நிறைவேற்றியிருப்பதுபோல் அக்கட்சியினரும் அதன் அடிப்பொடிகளான சில வட இந்திய மீடியாக்களும் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. முன்னரே சமஸ்கிருத்த்தில் ஒரு பழமொழி ஒன்று இருக்கிறது....”பால நாயகம், பகு நாயகம், ஸ்த்ரீ நாயகம், அநாயகம் என்று; அதாவது சிறுவன் செய்யும் ஆட்சியும், கூட்டணி ஆட்சியும், பெண்கள் செய்யும் ஆட்சியும், நல்ல ஆட்சியாக இருக்காது என்று.
பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் இப்ப பெண்கள் பேயை பாட்டிலில் போட்டு வைத்துள்ளார்கள். செண்ட் பாட்டில் அளவு பாட்டிலில் நீல கலர் திரவத்தை ரொப்பி, அதில் பேய் சிறைப்பட்டிருக்கிறது என்று சொல்லி இரண்டு பாட்டிலை சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். இவை எல்லாம் தன் வீட்டில் பிடித்த பேய்களாம். ஒரு பேய்க்கு 90 வயசாம். எதற்கு வம்பு என்று இந்த பேய்கள் தானாகவே பாட்டிலில் உள்ளே போயிருக்கும். எவ்வளவு ஆண்கள் பாட்டில் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இப்ப வாங்கியவர்கள் சும்மா இல்லை, பாட்டிலை திறந்து பேய்களுக்கு விடுதலை தரலாமா, இல்லை பாட்டிலை புதைக்கலாமா என்று ஆலோசனை செய்கிறார்கள். எது எப்படியோ நல்ல பிசினஸ்.
பெண்கள் என்று சொன்னவுடன் தான் நினைவுக்கு வருது. நாகர்கோயில் பெண்கள் எல்லாம் புடவை கட்ட தெரிந்தவர்கள் என்று நடிகை சோனாவிற்கு ஒரு அற்புத ஞானோதயம் இப்பொழுது பிறந்திருக்கிறது. இனி புடவைதான் கட்டப் போகிறாராம். அம்மணிக்கு புடவை கட்ட தெரியுமா என்று கேட்டவுடன் கோபமாக "நாகர்கோயில் பொண்ணுக்கு புடவை கட்ட தெரியாதா ?" என்று கேட்டிருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன ? நாகர்கோயிலுக்கு பெண்களால் இப்படி கூட ஒரு பெருமை இருக்கு.
பெண்களுக்கு சிகப்பு கலர் பிடிக்குமா என்று தெரியாது. ஆனால் மம்தா ரயில் நிலையங்களில் இருக்கும் சிகப்பு நிறத்தை அகற்றுவதற்காக திட்டமிட்டுள்ளார். ஏன் இவருக்கு சிகப்பு கலர் என்றால் இத்தனை அலர்ஜி?? கட்சிதான் விரோதிகள் என்றால் அவர்களுடைய கலர் கூடவா? டெல்லி செங்கோட்டை நிறத்தையும் ரயில்வே சிக்னல் நிறத்தையும் மாற்றாமல் இருந்தால் நல்லது. பெண்கள் முடிவு செய்தால் அதற்கு அப்பீல் ஏது?
ஆனால் பெண்கள் சுயேச்சையாக முடிவெடுக்கத் தெரியாது என்று லாலு சொல்லியுள்ளார். "நான் என் மனைவியை கூப்பிட்டு இப்படிதான் ஓட்டு போட வேண்டும்" என்று சொன்னால் அவர் மாற்றி ஓட்டு போட மாட்டார் என்று அடித்து சொல்லியுள்ளார். லாலுவை பார்த்தால் பாவமா இருக்கு.
காதில் வந்து விழுந்த செய்தி ஒன்று இருக்கு புதிய சட்டமன்றம் திறப்பு விழாவுக்கு பாதுகாப்பு செலவு மட்டும் 24 கோடியாம். நம்பும்படியாக இல்லை ஆனால் அபப்டி இருந்தால் சட்டசபை கட்டிட செலவில் 10% இந்த செலவு. நம்ம பணம் எப்படி எல்லாம் வீணாகிறது என்று பாருங்கள். தொப்பி போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் 2கோடி ரூபாய் செலவில் நமக்கு எல்லாம் சேர்ந்த்து தோட்டா தரணி மூலம் பெரிய தொப்பியாக போட்டிருக்கிறார்கள். நம்ம தொகுதி எம்.எல்.ஏ தண்ணி வரலை, லைட் வரலை என்றால் இவ்வளவு செலவு செய்வாங்களா ?
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த தகவல் உரிமை சட்டத்தில் "எங்க தொகுதி எம்.எல்.ஏ யாரு?" என்று அறிய மனு கொடுக்கலாமா ?
பதிலை எதிர்ப்பார்க்கும்,
இட்லிவடை
Posted by IdlyVadai at 3/17/2010 04:34:00 PM 20 comments Links to this post
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்

நன்றி: தினமணி









