பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 23, 2007

பெரியாரின் பேரன் X பெரியரின் சீடன்

மத்திய அமைச்சரும் பெரியாரின் பேரனு மான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். மற்றும் பெரியாரின் சீடருமான கீ.விரமணிக்கும் நடக்கும் பகுத்தரிவு சண்டை



'திடீரென்று 'பெரியார்' பட விவ காரத்துக்குள் நுழைந்து வீரமணியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறீர்களே..."


இளங்கோவன்: "பெரியார் உலக வரலாற்றில் ஒரு ஒப்பற்ற நாயகர். மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி மறுப்பு, தமிழ் உணர்வு என்று பல்வேறு விஷயங்களில் தமிழனைத் தட்டியெழுப்பி உணர்வுகளை விதைத்தவர். அவரது வாழ்க்கை வரலாறு படமெடுக்கப்படுகிறது என்று அறிந்ததும், அதனை வரவேற்று மகிழ்ந்த எத்தனையோ பேரில் நானும் ஒருவன். பெரியாரின் கொள்கைகள்-கோட்பாடுகள், அவர் வாழ்ந்த வாழ்க்கை இதெல்லாம் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் படம் மூலமாக எளிதாகச் சென்று சேரும் என்று நினைத்தேன். தமிழக முதல்வர் கலைஞர், அரசு சார்பில் பெரியார் படமெடுப்பதற்காக 96 லட்ச ரூபாய் வழங்கி இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். ஆனால், 'பெரியார்' படத்தில் பெரியாரின் மனைவி நாகம்மையார் குறித்த வரலாறுகள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது. நாகம் மையார் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர். இருந்தும் அவர் பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் அப்படியே ஏற்று வாழ்ந்திருக்கிறார். கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டதும் உடனே அந்தப் போராட்டத்துக்கு நாகம் மையார் தலைமை தாங்கினார். வைக்கம் போராட்டத்துக்கு தமிழகத்திலிருந்து பெரும் திரளாகச் சென்ற தொண்டர்கள், கையில் காசில்லாமல் பசியோடு இருந்தபோது வீதிகளில் பாடல்களைப் பாடி அதன்மூலம் கிடைத்தப் பணத்தை வைத்து அவர்களது பசியாற்றியவர் அவர். அதேபோல், பெரியார் நடத்திய கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டத்திலும் தீவிரமாக பங்கேற்றவர். பெரியாரின் துணைவியார் கண்ணம்மாவும் பெரியாரோடு இணைந்து போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். பெரியாரின் கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்திருக்கிறார். சொல்லப்போனால், அவர்களெல்லாம் தியாக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். நாட்டு நலனுக்காக நிறைய பாடுபட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள்பற்றிய சம்பவங்கள் பெரியார் படத்தில் இல்லையாம். அதனால்தான் வீரமணியிடம் கேள்வி கேட்கிறேன். பெரியார், திராவிட இயக்கங்களுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல... ஆரம்பத்தில் கிராமம் கிராமமாகச் சென்று காங்கிரஸ் பேரியக்கம் வளரக் காரணமாக இருந்தவரும் பெரியார்தான். அவரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி குடியரசு பத்திரிகையின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்தார். பெரியார் அன்றைய அரசியல் சூழ்நிலைகளைக் கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் குடியரசு பத்திரிகையில் எழுதி விடுவார். அதற்காகத் தானே பொறுப்பேற்று பலமுறை சிறை சென்றவர், ஈ.வெ.கிருஷ்ணசாமி. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர் எனது தந்தையார் ஈ.வெ.கி. சம்பத். அவர் பெரியாரின் அன்புக்கு பாத்திரமானவர். இப்படி பெரியாரோடு நெருங்கிய சொந்தங்களாக மட்டு மல்லாமல், அவரது கொள்கைக்கு உறுதுணையாக நின்றவர்களின் வரலாற்றை மறைத்துத்தான் பெரியார் படம் எடுக்க வேண்டுமா? அதைத்தானே வீரமணி செய்து கொண்டிருக்கிறார். வரலாற்றை மறைத்தும் திரித்தும் மோசடி செய்தால் மக்கள் மன்றத்தில் அவர்களின் முகமூடி கிழிக்கப்படும். அதுமட்டுமல்ல, தமிழக அரசு தாராளமாக இந்தப் படத்துக்காக நிதி உதவி செய்த பிறகும் ஊர் ஊராகச் சென்று பெரியார் படத்துக்கு நிதி திரட்டுகிறார் வீரமணி. சமீபத்தில் டெல்லியில்கூட ஒரு நிகழ்ச்சி மூலம் இப்படிப் பணம் வசூலிக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் வசூல் வேட்டை நடந்திருக்கிறது. ஆனால், பெரியார் படம் வெளியிடுவதில் மட்டும் தாமதம் காட்டுகிறார்கள். இது ஏன்? இன்னும் வசூல் வேட்டை பாக்கி இருக்கிறதா? பெரியார் படம் தொடர்பாக வீரமணி வசூலித்த பணம் பற்றி வெளிப்படையாக அவர் கணக்குகளை வெளியிட வேண்டும். இல்லையென்றால், பெரியார் சொத்துக்கள் மற்றும் டிரஸ்ட் தொடர்பான விவகாரங்களுக்குள் நான் தலையிட வேண்டியிருக்கும். இதனைப் பெரியாரின் பேரனாக மட்டுமல்லாமல், பெரியார் நேசித்த காங்கிரஸின் ஒரு தொண்டனாகவும் கேட்கிறேன்."

இளங்கோவன் ஏன் ஆத்திரப்படுகிறார்?

'பெரியார்' படம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்குக் கருத்துக் கேட்டு திராவிடர் கழக தலைவர் வீரமணியைத் தொடர்புகொண்டோம். அவர் சார்பில் நம்மிடம் பேசினார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன். ''இது தொடர்பாக திராவிடர் கழகம் சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறோம். அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள்தான் எங்கள் தரப்பு விளக்கம். அதனால், அதனையே எங்கள் விளக்கமாக போட்டுக் கொள்ளுங்கள்...'' என்றார். அந்த அறிக்கையின் சுருக்கம் - ''பெரியார் திரைப்படத்துக்காக உள்ளன்போடு மக்கள் நிதி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பத்து ரூபாய் நன்கொடையாக கொடுத்தால்கூட அதனை விடுதலையில் பெயருடன் வெளியிடுகிறோம். மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் விடுதலையை படிக்காவிட்டாலும், எங்கள் மீது குற்றம் சொல்வதற்கு முன்பாகவாவது அதுபற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள முயற்சி எடுத்திருக்கவேண்டும். வாய் புளித்ததோ-மாங்காய் புளித்ததோ என்ற போக்கில் அவர் பேசியிருப்பதைக் கண்டு பரிதாபப்பட வேண்டியுள்ளது.

'பெரியார்' திரைப்படத்தில் இந்த இந்தக் காட்சிகள் இல்லை; சம்பவங்கள் இல்லை என்கிற குற்றச் சாட்டையும் வைத்திருக்கிறார். எவை எவை இடம் பெற்றுள்ளன என்பதை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள பெரியாரின் பேரன் முயற்சி எடுத்தாரா? அடுத்து 'பெரியார்' படம் எப்போது வெளிவரும் என்பதில் கட்டுக்கடங்கா ஆர்வம் அவரைத் துளைத்து எடுத்திருக்குமானால் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமே?

ஆத்திரப்பட்டு இளங்கோவன் இப்படி அள்ளித் தெளிப்பதற்குக் காரணம் என்ன? வேறு காரணம் இருக்கிறது. அது என்ன என்பது தேவைப்படும்போது வெளியிடப்படும்."

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்(இன்று) அளித்த பேட்டி:

"பெரியார்' திரைப்படம் குறித்து நான் கேட்ட சில கேள்விகளுக்கு வீரமணி தன்னிடம் இருக்கக் கூடிய விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரில் ஒருவரை விட்டு பதில் சொல்ல வைத்துள்ளார். என்னுடைய பின்னணி பற்றியும், நான் கேட்ட கேள்விகளுக்கு பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்தும் தேவைப்படும்போது வெளிப் படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

வீரமணியைப் பார்த்து நான் கேட்கிறேன். இருவரும் ஒரே மேடை யில் உங்களுடைய பின்னணி பற்றி யும் என்னுடைய பின்னணி பற்றியும் விவாதிக்க தயாரா? இந்த விவாதத்தின் போது, செயற்கையாக ஏற்படுத்தப் பட்ட தீவிபத்து பற்றியும் பேசுவேன். வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு பற்றியும் பேசுவேன். இதற்கெல்லாம் வீரமணி பதில் சொல்ல தயார் என்றால் அவர் சொல்கிற இடத்தில், சொல்கிற நேரத்தில் விவாதிக்க நான் தயார்.

"பெரியார்' திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் பெரும் முயற்சி எடுத்து சிறப்பாக நடித்திருந்தபோதிலும், அந்தப் படத்தை வெளியிடாமல் இருப் பதற்கு சிலர் செய்யும் குளறுபடிகள் தான் காரணம் என்று குறிப்பிட்டு, விளக்கம் கேட்டேன்.

பெரியார் ஈரோடு என்ற வட்டத்திற் குள் அடங்கி விட்டாரா என்று வீரமணி கேட்கிறார். கடலூர், வேலூர் வட்டத் தில் மட்டும் பெரியார் அடங்கி விட்டாரா என்று நான் கேட்கிறேன். இதற்கெல்லாம் நேரடியாக வீரமணி யிடமிருந்து நான் பதில் எதிர்பார்க்கி றேன்.

"பெரியார்' திரைப்படம் பிப்ரவரி 2ம் தேதி வெளியீடு என்றார்கள். இப்போது அது பற்றிய சத்தமே இல்லை. மேலும் அந்தத் திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் ஆற்றிய தொண்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒருவ ருடைய வாழ்க்கை வரலாறு என்றால் அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற வேண்டும்.

இந்தத் திரைப்படத்தை வாங்குவ தற்கு விநியோகஸ்தர்கள் இல்லை என்று சொன்னாலும் கூட வீரமணி தன்னிடம் வைத்துள்ள பணத்தைக் கொண்டு படத்தை திரையிட முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவருக்கு மகுடம் சூட்டி, சமூக நீதி காத்தவர் என்று பட்டம் சூட்டி விடுகிறார்கள்.

தமிழக அரசு சார்பாக முதல்வர் கருணாநிதி, "பெரியார்' திரைப்படத் திற்கு 96 லட்சம் ரூபாய் கொடுத்திருக் கிறார். இப்போது படம் வெளியீடு தள்ளிக் கொண்டே போவதால், தேவையான நேரத்தில், தேவையான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார் என்று நம்புகிறேன்.

படத்தை வெளியிட என்னிடம் பணம் இல்லை என்று வீரமணி எங்களிடம் கையேந்தினால் கணக்கு வழக்குகளைப் பார்த்து உதவிட நாங்கள் தயார். மதுரை மேற்கு தொகுதியில் காங்கிரஸ்தான் நிச்சயம் போட்டி யிடும். திமுக அரசில் எந்தத் தவறையும் காங்கிரஸ் பார்க்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி வருகிறது. தவறு தெரிந்தால் சுட்டிக் காட்ட காங்கிரஸ் தயங்காது. தமிழகத்தில் 6 ஜவுளிப் பூங்காக் களை அமைக்கத் திட்டமிட்டு அவற்றில் 4 ஏற்கனவே அமைக்கப் பட்டு விட்டது. விரைவில் மதுரை, கரூர் ஆகிய இடங்களில் ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

( பழைய படம் புதிய காப்பி - காப்பி அடித்த தளங்கள் periyar.org, vikatan.com )
( செய்தி உதவி, ஜூவி, மற்றும் சில செய்திதாள்கள் )

2 Comments:

இலவசக்கொத்தனார் said...

என்னங்க இன்னும் உங்க அனானி நண்பர் வரலையா? இன்னிக்கு அவர் சார்புல நானே அந்த ஸ்டாண்டேர்ட் பின்னூட்டம் போட்டுடறேன்.

இந்த செய்தியை வெளியிடும் இந்தப் பதிவு பாப்பாரப் பதிவு!!

:))))

Arun said...

Ha ha ha.. :))