பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 29, 2006

சட்டசபையில் விஜயகாந்த் பேச்சு

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் பேசியது:

இப்பேரவையில் கலந்து கொள்ளும் வாய்ப்பளித்த விருத்தாச்சலம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் நான் சார்ந்திருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 28 லட்சம் வாக்குகள் அளித்த தமிழகத்தின் வாக்காளப் பெருமக்களுக்கும் முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஆளுநர் உரையின் மீது எனது கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.

ஜனநாயகம் என்பது வேண்டாத ஆட்சியை நீக்கவும், வேண்டிய ஆட்சியைக்கொண்டுவரவும் மக்களுக்கு தரப்படும் சாதனமாகும். அந்த சாதனத்தின் மூலம் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க ஜனநாயகம் வழிவகுக்க வேண்டும்.

ஆனால் இன்றைய ஜன நாயகம் என்ற கருவியில் பணநாயகம் என்ற துரு பிடித்துள்ளது. அரசியலில் ஊழல் செய்து பணம் சேர்க்கவும், அதில் ஒரு பகுதியை தேர்தலில் செலவிட்டு மீண்டும் பதவிக்கு வருவதும் அந்தப்பதவியை வைத்து மேலும் பணம் சேர்ப்பது என்ற நிலைக்கு ஆளாகிவிட்டது. இதனால் ஏழைகள் ஓட்டு போட முடியுமே தவிர, தேர்தலில் நின்று வெற்றிபெற முடியாது.

நல்லவர்கள் நாட்டுக்கு தொண்டு செய்ய விரும்பு பவர்கள் ஏழைகளானாலும், அரசியலில் பங்குகொள்ளும் அளவிற்கு பணநாயகத்தை வீழ்த்தி உண்மையான ஜன நாயகத்தை உருவாக்குவது அனைவரது கடமையாகும்.

பொது வாழக்கையில் ஈடுபட்டு ஊழல்கள் மூலம் சொத்துக்களைச் சேர்த்து ஜனநாயகத்தை மாசுபடுத்தும் சக்திகளை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக் கவும் அந்த சொத்துக்களைக் கைப்பற்றவும் எவ்வித ஊழல் தடுப்பு நடவடிக்கையும் ஆளுநர் உரையில் குறிப்பிடாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக் கிறது.

தேசிய முற்போக்கு திரா விட கழகம் ஏழைகளுக்கு தரப்படும் இலவச திட்டங்களை வரவேற்பதோடு அவர் களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களிலும் அக்கறை செலுத்துவதை கொள் கையாகக் கொண்டுள்ளது. மலிவு விலையில் அரிசி வழங்குவது, மண்எண்ணை தருவது போன்ற திட்டங்களை வரவேற்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் தொழில் பயிற்சியைப் பெறவும் பின்னர் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும், ஆளுநர் உரையில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் இல்லாதது வருத்தத்தைத் தருக்கிறது.

பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் அடிப் படை கல்வியும், வேலை வாய்ப்பும் இன்றி வறுமையில் உழல்வதை நாம் அறிவோம். வறுமையில் இருந்துஅவர்களை மீட்க அவர்களை ஊக் கப்படுத்துவதற்கான குறிப் பிட்ட திட்டங்கள் எதுவும் கூறப் படவில்லை.

படிக்காத மற்றும் படித்த பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் உழைப்பை நாட்டுக்கு தர தயாராக இருந்தும் அவர் களை பயன்படுத்திக் கொள்ள எந்தத் திட்டமும் சுய உதவிக் குழுக்களைத் தவிர காணப்படவில்லை. ஒருவேளை அரசு அளிக்கும் வரவு செலவு திட்டத்தில் இத்தகைய திட்டங்கள் இடம் பெறுமானால் வரவேற்கத் தயாராக உள்ளேன்.

கடந்த 38 ஆண்டுகளாக தீர்க்கப்படாத காவிரி பிரச்சினை ஆனாலும் சரி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் உயர்த்த முடியாத முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பிரச்சினை ஆனாலும் சரி, பாலாற்றை மணல் ஆறாக ஆக்கிய பிரச்சினை ஆனாலும் சரி, கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்ததோடு மட்டுமல் லாமல், மீன் பிடிக்கும் உரிமை களையும் இலங்கைக்கு விட் டுக் கொடுத்தது ஆனாலும் சரி, தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோனதாகத்தான் வரலாறே தவிர எதையும் இதுவரை நாம் பெறவில்லை.

இந்த அரசு இழந்த உரிமைகளைப் பெற எத்தகைய முயற்சி மேற்கொண்டாலும்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதி அளிக்கிறேன்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட விவசாய முன்னேற்றம் இன்றியமையாதது. விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க ரூ. 7,000 கோடி கடனை ரத்து செய்ததை வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் இதர வங்கிகளில் பெற்ற கடன் சுமை இதை விட அதிகமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவ்வப்போது விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் அளிப்பதை விட விவசாயப் பொருளாதாரத்தை சீர் திருத்தி அவர்களின் விளை பொருள்களுக்கு கட்டுபடி ஆகக்கூடிய விலையைப் பெற்றுத்தருவதின் மூலமே அவர்களை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற முடியும்.

என்னுடைய விருத்தாச்சலம் தொகுதியில் சாலை வசதி, குடிதண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. விருத்தாசலம் அரசு பள்ளிகளில் போதிய கட்டிட வசதி இல்லை. அரசு மருத்துவமனை மிகவும் வசதியற்ற நிலையிலே உள்ளது. எக்ஸ்ரே ïனிட் இருந்தும் நிறுவப்படவில்லை.

மகளிர் கல்லூரி இன்றியமையாத தேவையாக உள்ளது. விருத்தாசலம் நகரத்தில் பாலம் இன்னும் அமைக்கப்படவில்லை. ஒரு பொறியியல் கல்லூரி அவசியத் தேவையாக உள்ளது. இவையெல்லாம் அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசின் மூலம் கடலூர் மாவட்டத்தில் முந்திரி ஏற்றுமதி வளாகத்திற்கு 10.36 கோடி அனுமதி கிடைத்தும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

15 Comments:

sivagnanamji(#16342789) said...

லாவணிக்கு இடம் கொடாமல்
நன்றாகப் பேசி உள்ளார்.நன்று

Kuppusamy Chellamuthu said...

நல்ல மாற்றங்களை விஜயகாந்த் உண்டாக்க உதவினால் சரி.

-குப்புசாமி செல்லமுத்து

ப்ரியன் said...

நல்ல கருத்துக்களைத்தான் சொல்லியுள்ளார்..

johan -paris said...

பரவாயில்லை! கன்னிப்பேச்சே! நன்றாக உள்ளது.
மாற்றுக்கட்சி; எதிர்க்கட்சி என்று ; பாராமல்; 'விருத்தாசல" மக்களுக்கும் ,கலைஞர் ;வேண்டியதைச் செய்து பேர் வாங்க வேண்டும்.
யோகன் - பாரிஸ்

johan -paris said...

பரவாயில்லை! கன்னிப்பேச்சே! நன்றாக உள்ளது.
மாற்றுக்கட்சி; எதிர்க்கட்சி என்று ; பாராமல்; 'விருத்தாசல" மக்களுக்கும் ,கலைஞர் ;வேண்டியதைச் செய்து பேர் வாங்க வேண்டும்.
யோகன் - பாரிஸ்

(துபாய்) ராஜா said...

நாகரிகமாகப் பேசியுள்ளார்.

பொன்ஸ்~~Poorna said...

பரவாயில்லைங்க.. புள்ளி விவரங்களைக் குறைச்சு மத்த விவரங்கள் நிறைய பேசி இருக்காரு.. அதுக்கே பாராட்ட வேண்டியது தான் !!

gosthoso said...

//பொது வாழக்கையில் ஈடுபட்டு ஊழல்கள் மூலம் சொத்துக்களைச் சேர்த்து ஜனநாயகத்தை மாசுபடுத்தும் சக்திகளை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக் கவும் அந்த சொத்துக்களைக் கைப்பற்றவும் எவ்வித ஊழல் தடுப்பு நடவடிக்கையும் ஆளுநர் உரையில் குறிப்பிடாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக் கிறது

பிறகு எப்படி கட்சி நடத்த முடியும்.சொந்த பணத்திலா நடத்த முடியும்?

Swamy Red Bull said...

**சட்டசபையில் விஜயகாந்த் பேச்சு**

emmandi vaaru telugulathane mathuladunuchu

துளசி கோபால் said...

நல்லாத்தானே பேசியிருக்கார்.
மக்களுக்கு நல்லது நடந்தாச் சரி.

Anonymous said...

Where from you got this info? could u pls gimme the link if you dont mind.
Thanks
Raji

Hari said...

பஞ்ச் டயலாக் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

அரவிந்தன் said...

//அவ்வப்போது விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் அளிப்பதை விட விவசாயப் பொருளாதாரத்தை சீர் திருத்தி அவர்களின் விளை பொருள்களுக்கு கட்டுபடி ஆகக்கூடிய விலையைப் பெற்றுத்தருவதின் மூலமே அவர்களை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற முடியும்.//

இந்த கோணத்தில் எந்த கட்சியும் பேசியதாகவோ இல்லை சிந்தித்ததாகவோ காணமுடியவில்லை.

இவர் பேச்சில் மட்டுமில்லாமல் செயலிலும் தன்னாலானதைச்செய்தாள் தமிழ்நாட்டுக்கு நன்மைதான்.(அவரது கட்சிக்கும் சேர்த்துதான்)

Nakkiran said...

மிக நன்றாக பேசியுள்ளார். தொடர்ந்து நியாயமான முறையில் மக்கள் பணியாற்றிட வி.கா வை வாழ்த்துவோம்

S. அருள் குமார் said...

நன்றாக பேசியிருக்கிறார். இதேபோல் எங்கள் தொகுதிக்கு நன்றிசொல்ல வந்தபோது அவர் பேசியவை எங்கள் தொகுதி மக்களை பெரிதும் பாதித்திருக்கிறது! "நான் இந்த தொகுதிக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகமே கவனிக்கும்படி இந்த தொகுதியை மாற்றிக்காட்டுகிறேன். யார் தடுத்தாலும் எனது சொந்த செலவிலாவது, பல மாற்றங்களைக்கொண்டுவருவேன்(பொன்ஸ் கவனிக்க!). அரசு மருத்துவமனையை மிகச்சிறந்த தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக கொண்டுவருவேன். உங்கள் சொந்த குடும்பப்பிரச்சனைகள் தவிர மற்ற அனைத்து பிரச்சனைகளையும் என்னிடம் சொல்லுங்கள். நான் தீர்த்துவைக்கிறேன்." என்றேல்லாம் சொல்லியிருக்கிறார். அத்துடன், எங்கள் தொகுதியில் இருக்கும் கம்மாபுரம் என்ற ஊரில் தீவிபத்தில் எரிந்துபோன சில வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு உதவித்தொகையும், அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி ஆறுதல் சொல்லி வந்திருக்கிறார். பரவாயில்லை, அவர் அங்கு சோன்னதை நடத்திக்காட்டும் எண்ணத்துடந்தான் சட்டசபையில் பேசியிருக்கிறார் என்று அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பொருத்திருந்து பார்க்கலாம்.