பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 08, 2006

விஜயகாந்த் தேர்தல் அறிக்கை

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேர்தல் அறிக்கையை விருத்தாசலத்தில் அதன் கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதிய சென்னை

வளர்ந்து வரும் மக்கள் தொகை நெருக்கடியினால் சென்னை மாநகரம் சீரழிந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் சுமார் 40 மைல்களுக்கு அப்பால் மிகப்பெரிய நிலப்பரப்பில் உலகத் தரத்திற்கு இணையான நவீன வசதிகளுடன் கூடிய "புதிய சென்னை'' என்ற பெயரில் நிர்வாக நகரம் உருவாக்கப்படும்.

எல்லாவிதமான நீர் நிலைகளையும் இணைத்து தமிழக தண்ணீர் தேவையில் தன்னிறைவு காண நடவடிக்கை எடுப்போம்.

ஒரு கிராமத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கி தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களும் முதல் ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் முதன்மை கிராமங்களாக உருவாக்குவோம்.

நவ தானியங்களுடன் கூடிய சத்தான, தரமான, சுத்தமான அளவு குறையாத ரேஷன் பொருட்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வினியோகிக்கப்படும்.

சுகாதாரத்தை முன் நிறுத்தி கிராமங்கள் தோறும் பொது கழிப்பிடங்கள் கட்டிதரப்படும்.

கிராமங்களில் லாரி தண்ணீர்

நீர்நிலை ஆதாரமே இல்லாத கிராமங்களுக்கு லாரிகள் மூலம் நகரங்களில் விநியோகிப்பது போல குடி தண்ணீர் வழங்கப்படும்.

மாவட்டம் தோறும் "முதியோர் இல்லம்'' அமைத்து அவர்களுக்குரிய அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு பெற்ற தாய் தந்தையைப் போல பாதுகாப்போம்.

இடம் விட்டு இடம் பெயரும் மாநில அளவில் செல்லத்தக்க நடமாடும் குடும்ப உணர்வுப் பங்கீடு அட்டை வழங்கப்படும்.

வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிப்போம்.

மாவட்டந்தோறும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைத்து படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பைத் உருவாக்கி தருவோம்.

சுற்றுலா மையங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் 10 மாவட்டங்களில் சிறு விமான தளங்கள் அமைத்து அரசு தனியாரோடு சேர்ந்து சிறு விமானங்களை வாங்கி போக்குவரத்து வசதி செய்து தருவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும்.

வேலை வாய்ப்பு

சூரிய வெப்பத்தைக் கொண்டு கடல் நீரை குடிநீராக மாற்றி அதை மறுசுழற்சி முறையில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தி வெளியேறும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி குறைந்த மூலதனத்தில் அதிக வருமானத்திற்கு வழிவகை செய்யப்படும்.

முதல் ஐந்தாண்டு காலத்தில் மேற்கூறிய அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுவதன் மூலம் குறைந்தபட்சம் 1 கோடியே 80 லட்சம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்று சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு வருமானத்தைப் பெருக்கி தன்னிறைவு கண்டு வறுமைப் பிடியிலிருந்து விடுபட்டு சுபிட்சமான வாழ்வு வாழ வழிவகை செய்வோம்.

லஞ்சம்-ஊழல்

பொதுவான, நேர்மையான நல்லாட்சி தர உறுதி அளிக்கிறது. அரசின் நிர்வாகத்தில் லஞ்ச ஊழலைத் தடுக்க லஞ்ச, ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளைத் தண்டிக்க அவர்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஐந்தாண்டுக்கால வரையறையோடு கூடிய அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற்பட்ட குழு அமைத்து செயல்படும்.

15 கிலோ இலவச அரிசி

ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ரூ.500 வீதம் குடும்பத் தலைவியின் பெயரில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் குடும்ப நிதியாக வழங்கப்படும்.

தாய் சேய் நலம் காக்கும் வகையில் ஏழைத்தாய்மார்கள் கருவுற்ற காலம் முதல் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகள் வரை இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் ஊட்டச்சத்துத் தொகையாக மாதம் தோறும் ரூ.500 வழங்கப்படும்.

மாதம் தோறும் ஏழைக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 15 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.

ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் ரூ.10,000 வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்படும்.

அனாதைப் பிள்ளைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தங்கும் வசதிகளோடு கூடிய காப்பகங்கள் ஏற்படுத்தப்படும்.

ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை

மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

காலையில் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியாத மாணவ-மாணவிகளுக்கு மாலை நேர பள்ளிக்கூடங்களை இயக்குவது மூலம் அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

தமிழைப் பயிற்று மொழியாகவும், தொடர்பு மொழியாக ஆங்கிலத்தையும், தொழில் ரீதியாக பிற மொழிகளில் ஏதாவது ஒன்றை விருப்பப்பாடமாக மாணவர்கள் ஏற்றுப்படிக்க உறுதி அளிக்கப்படுகிறது.

3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவுடன் பாலும் வழங்கி கல்வியை அறிமுகப்படுத்தும் குழந்தைகள் நல மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தொழிற் கல்விக்கான நுழைவுத்தேர்வுப் பயிற்சியை அந்தந்தப் பள்ளிக் கூடங்களிலேயே அளித்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

இலவச ரெயில் பாஸ்

மேல்நிலை பள்ளிக்கூடம் மற்றும் ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் நிறப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிறப்பப்படும்.

ரெயிலில் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச ரெயில் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

தனியார் பள்ளிக்கூடங்களில் வரம்பு மீறி கட்டணங்கள் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் ஒழுங்குமுறை வாரியம் அமைத்து நியாயமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். ஏழை மாணவர்களும் பயன்பெற அவர்கள் கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும்.

உயர் கல்விகளில் படிக்கும் போதே பகுதி நேர வேலை பார்க்க மாணவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இலவச பஸ் பாஸ்

கல்லூரி வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பட்டப்பயிற்சி மற்றும் பட்டயப்பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கிராமப்புற அரசு பள்ளிகளில் 2 ஆண்டு வேலை வாய்ப்பு உதவித்தொகையுடன் வழங்கப்படும். இவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஏற்கனவே செயல்படும் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் செம்மைப்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகள் வழங்கிய கடனை படிப்படியாக ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல் துறையினரின் குறைகளையும், அத்துறையை நவீனப்படுத்துவதற்கும் ஆய்வு செய்ய ஒரு போலீஸ் கமிஷன் ஏற்படுத்தப்படும்.

இயற்கை உரம் தயாரிக்கும் முறையை வீடுதோறும் அமல்படுத்துவோம். அதோடு குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிறப்பு-இறப்பு சான்றிதழ்

கிராம மக்களுக்குத் தேவைப்படும் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பு-இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவைகள் வீடு தேடி வந்து வழங்கப்படும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

கிராமம் தோறும் கணிப்பொறி மையம் அமைத்து மக்கள் தங்களுடைய தேவைகளையும், குறைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்து தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்திக்க வழிவகை காணப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்னையில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பனைமரத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

தீப்பெட்டித் தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்களின் வேலைக்கேற்ற ஊதியம் பெற அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும்.

கட்டிட தொழிலாளர்கள்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் வழங்கும் நல உதவிகளை உயர்த்தி வழங்கிடவும், 60 வயது நிரம்பிய கட்டிடத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.500 பென்ஷன் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்படும்.

திரைப்பட தொழில்

திரைப்பட தொழிலுக்கு மாநில அரசு மூலம் பல்வேறு சலுகைகள் அளிப்பதுடன் வெளிப்புற படப்பிடிப்புக்குரிய கட்டணத்தை குறைத்தும் அத்துறையை வளர்க்கவும் பாடுபடுவோம்.

திருட்டு வி.சி.டி., டி.வி.டி. மற்றும் வீடியோ கேசட்டை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திரைப்படங்களுக்கு மானியமும், திரைப்படத்துறையினருக்கு விருதுகளும் ஆண்டுதோறும் தவறாமல் வழங்கப்படும்.

திரைப்படங்களுக்குத் தரப்படும் மானியத்தை ரூ.10 லட்சமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

தமிழ்நாட்டின் பழம்பெரும் கலைகளான கிராமியக் கலைகள் அனைத்தும் அழியாமல் காப்பாற்றும் வண்ணம், அந்த கலைஞர்களுக்கு ஊக்கத் தொகை தந்து, பேருந்து, ரெயில் பயணங்களுக்கு இலவச "பாஸ்'' வழங்குவோம்.

சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட நகரை புதுப்பிப்போம்.

டெஸ்மா சட்டம்

அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட அனைத்துச் சலுகைகளும் திரும்ப அளிக்கப்படும்.

"டெஸ்மா'' சட்டம் திரும்பப்பெறப்படும்.

கிறிஸ்தவ ஏழைகளுக்கு இலவசமாக பைபிளும், முஸ்லீம் ஏழைகளுக்கு இலவசமாக குரானும், இந்துக்களுக்கு இலவச கீதையும் வழங்கப்படும்.

அரவாணிகள்

அரவாணிகளுக்கு அனைத்து மக்களைப்போல எல்லா உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படும்.

திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

தமிழ் மறையாம் திருக்குறளை நீதிமன்றங்களில் சத்தியப்பிரமாண நூலாக அங்கீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2 Comments:

தயா said...

கலர் டிவி நன்றாக வேலை செய்கிறது போலிருக்கிறதே!

15 கிலோ இலவச அரிசி, 500, 10000 வரையில் சேமிப்புக்கணக்கு, இலவச பைபிள், குரான், கீதை என இலவச அறிவிப்புகள். இது சும்மா அறிக்கையை அலங்கரிக்க அல்லது கவனத்தை ஈர்க்க என்று புரிகிறது.

இவை தவிர மற்ற அறிவிப்புகள் உண்மையிலேயே பயன் தருவதாகத்த தான் இருக்கிறது.

ஜெயக்குமார் said...

இந்த அறிக்கையில் உள்ள அனேக சலுகைகள் இங்கிலாந்து உட்பட பல வள்ர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளவைதான். நம் அரசு ஏழையாகவும், அரசை நடத்துபவர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் உள்ளதாலேயே நம் நாட்டில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியாமல் உள்ளது. முறையாக வரி வசூலிப்பதன் மூலம் நம் அரசையும் பணக்கார அரசாக மாற்ற முடியும். இன்னும் சென்னையில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தும் எந்த நகைகடையிலும் ரசீது (வரியுடன் கூடிய) வழங்கபடுவதில்லை. அதிகாரிகளும், ஆளும் வர்க்கத்தினரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு இதை கண்டு கொள்வதுமில்லை. முறைப்படி வரி வசூல் செய்து அரசு வருமானத்தை பெருக்கினாலே இதை விட அதிகமான் பயன்களை மக்களுக்கு அரசு செய்து தரலாம்.