பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 10, 2006

வைகோ வீட்டுக்கு ஜெயலலிதா சென்றார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை நெல்லை மாவட்ட பிரசாரத்தை தொடங்கிபோது கலிங்கபட்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வீட்டுக்கு சென்றார். ஊர் மக்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 4 நாள் தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு அவர் நெல்லை மாவட்ட பிரசாரத்துக்கு புறப்பட்டார். முதுகுடி, சோழபுரம், முறம்பு வழியாக பிரசாரம் செய்தபடி நெல்லை மாவட்ட எல்லையான பெருமாள்பட்டி விலக்குக்கு வந்தார்.

அங்கிருந்து அவர் கலிங்கப்பட்டிக்கு சென்றார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ததை முன்னிட்டு தனது சொந்த ஊரான கலிங்கபட்டிக்கு வந்து இருந்தார்.

வைகோ வரவேற்பு

கலிங்கப்பட்டியில் வைகோ வீட்டுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாலை 4 மணிக்கு வந்தார். அவரை வீட்டு வாசலில் வைகோவும், அவரது மனைவி ரேணுகாதேவியும் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அங்கு திரளாக கூடி இருந்த மக்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர். பெண்கள் குலவையிட்டனர்.

ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் வந்தார்.

தாயாருடன் சந்திப்பு

வைகோ வீட்டுக்கு ஜெயலலிதா சென்றதும் வைகோவின் தாயார் மாரியம்மாளை சந்தித்து பேசினார். அப்போது வைகோ தாயார், தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஆசி கூறினார்.

வைகோ, அவரது மனைவி ரேணுகாதேவி, மகன் வையாபுரி, மருமகள், பேரன், பேத்திகள், வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், அவரது மனைவி ஆகியோரும் அங்கு இருந்தனர். அவர்களிடம் ஜெயலலிதா 25 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தார்.


4.25 மணிக்கு ஜெயலலிதா வைகோ தாயாரிடமும், குடும்பத்தினரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அவர் வீட்டு வாசலுக்கு வந்ததும் நிளருபர்கள் அவரை சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா வைகோ வீட்டுக்கு வந்தது பற்றியும், தாயாரை சந்தித்தது பற்றியும் மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார்.

பேட்டி முடிந்ததும் ஜெயலலிதா பிரசார வேனுக்கு புறப்படும்போது பெருந்திரளாக கூடி இருந்த மக்களை பார்த்து கை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். மக்கள் வாழ்த்துக்கோஷங்களை முழங்கினார்கள்.

வைகோ வீட்டுக்கு ஜெயலலிதா வந்தது கலிங்கப்பட்டியில் கரைபுரண்ட உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஊர் எல்லை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 அடிக்கு ஒரு கொடி கம்பமாக அ.தி.மு.க., ம.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. வைகோ வீடு இருக்கும் தெருவில் அ.தி.மு.க.-ம.தி.மு.க. கொடி தோரணங்கள் நெருக்கமாக கட்டப்பட்டு பந்தல் போல காட்சி அளித்தது.

மலர் அலங்காரத்துடன் பந்தல்

வைகோ வீட்டு வாசலில் பெரிய பந்தல் போடப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தென்னம்பாளைகள், பாக்கு மரங்கள் மற்றும் தோரணங்கள் அழகுற அமைக்கப்பட்டு இருந்தன.

அ.தி.மு.க.-ம.தி.மு.க. கூட்டணி அமைந்த பின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதன் முதலில் கலிங்கப்பட்டிக்கு வந்ததும், வைகோ வீட்டுக்கு சென்றதும் ஊர் மக்களையும், சுற்று வட்டார கிராமங்களையும், அ.தி.மு.க., ம.தி.மு.க. தொண்டர்களையும் மகிழ்ச்சி கடலில் திளைக்க செய்தது.

ஊர் எல்லையில் இருந்து வைகோ வீடு வரை ரோட்டின் இருபுறமும் மக்கள் வெள்ளமென கூடி இருந்தனர்.

ஜெ பேட்டி

வீட்டு முன்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகுந்த மகிழ்ச்சி

"என் சகோதரர் வைகோ வீட்டுக்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

வைகோவின் தாயார் நாங்கள் எல்லா தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும், நான் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆசி கூறினார்.

என்தாயார் போல

என் தாயார் உயிருடன் இருந்தால் என்ன பேசி இருப்பார்களோ அதையே அவர்கள் பேசினார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். அப்போது வைகோவும் இருந்தார்.

ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டபோது அவரை வைகோவும், அவரது மனைவி ரேணுகாதேவியும் கார்வரை வந்து வழியனுப்பினார்கள்.


செய்தி, படங்கள் - தினத்தந்தி

Update ( 11/04/06)

கலிங்கப்பட்டியில் வைகோவின் தாய் மாரியம்மாள் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியது:

முதல்வர் எங்கள் வீட்டுக்கு வந்ததும் அவரிடம் நலம் விசாரித்தோம்.

அவரும் எங்களை நலம் விசாரித்தார். எங்கள் குடும்பத்தினரை அவருக்கு எனது மகன் (வைகோ) அறிமுகம் செய்துவைத்தார்.

வீட்டில் இருந்த பழைய காலத்து ரேடியோவை பார்த்த முதல்வர், "இந்த ரேடியோவை பார்த்ததும் எனது தாத்தா நினைவு வந்துவிட்டது. எனது தாத்தா ரேடியோவில் கர்நாடக சங்கீதம் கேட்பார். அவர் கர்நாடக சங்கீதம் கேட்டு முடிந்ததும், நாங்கள் சினிமா பாட்டு கேட்போம்' என்றார்.

இளநீர் சாப்பிட்டார்: முதல்வரை சாப்பிடச் சொன்னோம். இளநீரும், குளோப்ஜாமுனும் சாப்பிட்டார்.

முன்பு எனது மகன் அதிமுக கூட்டணியில் இருந்த போதே, ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து வருமாறு என் மகனிடம் கூறினேன்.

அந்தக் கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.

முதல்வர் எங்கள் வீட்டிற்கு வந்ததில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. முதல்வரைப் பார்ப்பதற்கு ஊரே திரண்டு வந்தது. இடம்தான் போதவில்லை என்றார் மாரியம்மாள்.

5 Comments:

முத்து(தமிழினி) said...

தல,

சேடப்பட்டி மேட்டர், பாக்யராஜ் பேட்டி எல்லாம் வரலையே தல?

தினமலர் மாதிரி ஆகிட்டயே தல?

Idly Vadai said...

முத்து - அடுத்த இரண்டு பதிவுகளை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

Krishna said...

எங்கள் நடுநிலைவாதி அண்ணனை, போயும் போயும் தினமலருக்கு ஒப்பிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், வழக்கு வராது, ஆட்டோவோ, மகளிரணியோ வரும் என தமிழினி முத்துவை எச்சரிக்கிறேன்.

Krishna said...

ஏய் கிருஷ்ணா, பைத்தியக்காரா, யாரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறாய். நீ என் மாமனா, மச்சானா, அல்லது பொடாவில் உள்ளே போட்டு, என் உடல் நலத்தை காத்தவனா, என் புகழை வளர்த்தவனா? உயிரே போனாலும் என்னை அடிமைப்படுத்தியவர்களைத் தவிர, வேறு எவரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டான் இந்த வைகோ,..ம்ம், தமிழினி முத்து.

ஆட்டோ அனுப்புவதிலும், ....அணியை அனுப்புவதிலும், வழக்கிலிருந்து வழுக்குவதிலும், காப்புரிமை வைத்திருப்பவர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளேன் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

Idly Vadai said...

வைகோ தாய் பேட்டியை Update செய்துள்ளேன்.