பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 22, 2009

சன்டேனா இரண்டு (22-11-09) செய்திவிமர்சனம்

இந்த படத்துக்கான செய்தி கடைசியில்...



செய்தி # 1

காவல்துறை உங்கள் நண்பன் என்று அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ளும் நிலையில் இருக்கிறது நம்
தமிழக காவல் துறை.

போலீஸ் என்றாலே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு தவறான இமேஜ் உள்ளது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம் என்கின்றனர் போலீசார்.

காக்க...காக்க, அஞ்சாதே போன்ற ஒரு சில சினிமாக்களில் போலீஸ் அதிகாரிகளை உயர்வாக காட்டினாலும், பல சினிமாகளில் போலீசை காமெடி கதாபாத்திரமாகவே காட்டுகிறார்கள்.

மாணவர்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒருவித பயம் நிலவுகிறது. அதே நேரத்தில் அவர்களை வடிவேல் போல சிரிப்பு போலீசாகவே பொதுமக்கள் பார்க்கிறார்கள்.

மாணவர்களின் இந்த மனநிலையை போக்க சென்னை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்று பள்ளி மாணவர்கள் போலீஸ் நிலையத்தை சுற்றிப்பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையில் உள்ள 80போலீஸ் நிலையங்களும் இதற்கு தயாராயின. முதல் நிலை காவலர் முதல், காவல் துறை இயக்குனர் (டி.ஜி.பி.) வரை அவர்கள் அணியும் சின்னங்கள், விதவிதமான துப்பாக்கிகள், குற்றவாளிகளின் போட்டோக்கள், போக்குவரத்து விதிமுறை சின்னங்கள், வயர்லெஸ் கருவிகள் அனைத்தும் ஒரிடத்தில் அணிவகுத்திருந்தன.

இதனால் அத்தனை போலீஸ் நிலையங்களும் கண்காட்சி அரங்குகளாக காட்சி அளித்தன. காலை 10மணிக்கு மாணவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வரத் தொடங்கினர். போலீஸ் நிலையங்கள் அனைத்தும் ஒருநாள் பள்ளிக்கூடங்களாக மாறின. பூக்கடை போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் நிற்க வைத்து உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பாடம் நடத்தினர்.

போலீஸ் நிலையத்தை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா? என்று உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கேட்டதும்... சினிமாவில் பார்த்திருக்கிறோம் என்று ஓட்டு மொத்த மாணவர்களும் கூறினர்.

சினிமாவில் நீங்கள் பார்த்த போலீஸ் மாதிரி நாங்கள் இல்லை... உங்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள் இருக்கிறோம். சினிமா போலீசை நம்பாதீர்கள் என்று கூறிய உதவிகமிஷனர் ராதாகிருஷ்ணன், பிஸ்டல் ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளை இயக்குவது எப்படி என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

கைதிகளை அடைக்கும் அறைக்குள் சென்ற மாணவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், இது தப்பு செய்பவர்களை அடைத்து வைக்கும் இடம். யாரும் தவறு செய்யக்கூடாது என்றார். இதைகேட்டதும் ஒட்டு மொத்த மாணவர்களும் சரி சார் என்று ஒரே குரலில் கூறினர்.

மாணவர்கள் சிலரிடம் பேசியபோது, போலீஸ் என்றால் சினிமாக்களில் வருவது போல... சிரிப்பு போலீசாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தோம். இன்றிலிருந்து அவர்கள் மீது மரியாதை ஏற்பட்டுள்ளது என்றனர்.

மாணவர் ஒருவர் நானும் ஒரு நாள் இந்த ஏ.சி.யை போல பாடம் நடத்தாமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டு சென்றார்.

தேர்தல் நேரத்தில் இரண்டு மாதங்கள் வீட்டுக்கு போகாமல் பணி செய்ததாக காவல்துறையில் இருக்கும் ஒரு நண்பர் தெரிவித்து இருந்தார். நேர்மையான,தூய்மையான அரசியல் அமைப்பு உருவானால், காவல்துறை மட்டும் அல்ல எல்லா துறைகளின் சீர்கெடுகளும் தாமாகவே நீங்கிவிடும் என்பது என் தாழ்மையான கருத்து.



செய்தி # 2

இரண்டு துணிச்சல்(!) வாய்ந்த அறிக்கைகளின் சாரம் மட்டும் தருகிறேன் இட்லிவடை நலன்(?) கருதி.

முதலாவது, உலக தமிழர்களிடையே பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் இலங்கை பிரச்னைக்காக திமுக குரல் எழுப்பியதோடு நில்லாமல், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் நடத்திய அறப்போராட்டங்களும் சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிகழ்வுகளும் இரு முறை ஆட்சியையே இழந்த சம்பவங்களும் நடந்தன. . முதலமைச்சராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு திரும்பி வந்த அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வு இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் அங்கிருந்த ஒரு சிலருக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டார்கள். ஜனநாயக ரீதியான ஒரு வாய்ப்பு வாசற்படி வரையில் வந்தபோது, அதை எட்டி உதைத்து விட்டனர். அண்மையில் சென்னை வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார். 2003ல் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து தானாக வெளியேறினார். 2005 டோக்கியோ பேச்சுவார்த்தையிலும் தமிழர் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். 2005 அதிபர் தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கச் செய்தார். தேர்தலில் பங்கேற்று இருந்தால் தமிழர் மனநிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறி விட்டார்’’ என்று கூறியிருக்கிறார். அதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கையாளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.



. முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறிய காரணத்தால் நம் பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டது? இளம் சிறார்கள் எத்தனை பேர் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? பிரபாகரன் மனைவி மக்கள் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை எழுத நேரிட்டது. என்னையும், தம்பி மாறனையும் 9&2&1989ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து ஈழப் பிரச்னை குறித்து இரண்டு நாள் உரையாடி, ‘நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு பிரபாகரனுடன் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிடுங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். அவர் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்தார். அந்த இளந்தலைவர் இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அது ஈழ விடுதலைப் போராட்ட தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.

அடுத்து 2005ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சேவும் அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டார்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புலிகளுடன் அமைதிப் பேச்சை தொடருவேன் என்றார் ரணில். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். அப்போது ரணில் சொன்னதைதான் இப்போது பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏழு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் ஏற்பட்ட முடிவை பார்த்தால், விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு அன்று எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பது புரியும். அதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையின் தலைப்பு என்ன தெரியுமா? " விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிறோம".

இரண்டாவது அறிக்கை , காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பம் வழங்கும் விழா, ஈரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் விண்ணப்பங்களை வழங்கி பேசியதாவது:

"இங்கு வழங்கப்படும் விண்ணப்பங்களில் உறுப்பினர்களுக்கான எண்கள் குறிப்பிடப்படும். இந்த எண்கள் மாநில அளவில் குறிப்பிடப்படுகிறதா அல்லது தேசிய அளவில் குறிப்பிடப்படுகிறதா என்பது தெரியவில்லை. இப்போது காங்கிரஸ் தலைமை என்ன செய்கிறது என்று தெரியாத நிலை உள்ளது. காலை எழுந்தது முதல், வீணாக பொழுது கழிகிறது. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என உறுப்பினர்களை சேர்க்கிறோம்.ஒன்றுமில்லாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியால் பிரயோஜனம் இல்லை".



இந்த வார உலக செய்தி :

அ​மெ​ரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் இருந்து வெளி​யா​கும் போர்ப்ஸ் பத்​தி​ரிகை இந்​திய கோடீஸ்​வ​ரர்​கள் பட்​டி​யலை வெளி​யிட்​டது.

இதில் ரூ.1.60 லட்​சம் கோடி சொத்து மதிப்​பு​டன் ரிலை​யன்ஸ் நிறு​வன அதி​பர் முகேஷ் அம்​பானி முத​லி​டத்​தைப் பிடித்​துள்​ளார்.

லண்​ட​னில் வசித்து வந்​தா​லும் இந்​திய பாஸ்​போர்ட் வைத்​துள்ள தொழி​ல​தி​பர் லட்​சுமி மித்​தல் ரூ.1.50 லட்​சம் கோடி சொத்து மதிப்​பு​டன் 2-ம் இடத்​தில் உள்​ளார்.

மு​கேஷ் அம்​பா​னி​யின் இளைய சகோ​த​ர​ரும்,​ அனில் திரு​பாய் அம்​பானி குழு​மத் தலை​வ​ரு​மான அனில் அம்​பானி ரூ.87,500 கோடி சொத்து மதிப்​பு​டன் 3-வது இடத்​தைப் பிடித்​துள்​ளார்.

கு​மார் பிர்லா ​(ரூ.39 ஆயி​ரம் கோடி)​ 9-வது இடத்​தி​லும்,​ ஹெச்​சி​எல் உரி​மை​யா​ளர் சிவ நாடார் ​ ​(ரூ.18,500 கோடி)​ 15-வது இடத்​தி​லும்,​ சன் டிவி உரி​மை​யா​ளர் கலா​நிதி மாறன் ​(ரூ.11,500 கோடி)​ 20-வது இடத்​தி​லும் உள்​ள​னர்.

க​லா​நிதி மாற​னின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதி​க​ரித்​துள்​ளது.

ரூ.5000 கோடிக்​கும் அதி​க​மாக சொத்து மதிப்பு உள்​ள​வர்​கள் தற்​போது இந்​தி​யா​வில் 52 பேர் உள்​ள​னர். கடந்த ஆண்டு 27 பேர்​தான் இருந்​த​னர் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது. பட்​டிய​லில் இடம் பிடித்​துள்ள 100 பேரின் சொத்து மதிப்பு ரூ.13 லட்​சம் கோடி​யா​கும். இது இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் ​(ஜிடிபி)​ நான்​கில் ஒரு பங்​கா​கும்.

இந்த பட்டியலில் "'எந்திரன்" படம் வெளியான பின்னர் சன் டிவி கலாநிதி மாறன் முதல் இடம் பெறுவார் என்று என்னிடம் சொன்னார் கோபி என்ற ஒரு பகீர்(?) சித்தர்.


-இன்பா

Read More...

Friday, November 20, 2009

தண்டனைக்கு 12 ஆண்டுகள், நஷ்ட ஈடுக்கு 25 ஆண்டுகள்

1984, ஜூன் 7. மாலை 6 மணி. 28 வயதான அந்த கிராமத்து பெண் தன் கணவருடன் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டராக அப்போது பணியாற்றியவர் மங்கள தனராஜ்.

சினிமாவில் வருவதை போல் "நீங்கள் போகலாம்; உங்கள் மனைவியை விசாரித்து விட்டு அனுப்புகிறேன்" என்று கணவரை அனுப்பிவிட்டு, இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த இன்ஸ்பெக்டர்.

சட்டம் தன் கடமையை செய்யும் என்று நம்பி, அந்த பெண் தனராஜ் மீது புகார் கொடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க புறப்பட்டார். இன்ஸ்பெக்டராக இருந்த தனராஜ், DSP யாக பதவி உயர்வு பெற்று, அந்த பெண்ணின் சட்டரீதியான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

மேலும் அந்த இன்ஸ்பெக்டர் அப்பெண்ணுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, இவரது குற்றமும் நிரூபணம் செய்யப்பட்டு (1996 இல்) 11 ஆண்டுகால சிறைவாசம் விதிக்கப்பட்டது.(திருச்சி மத்திய சிறையில் இப்பொழுது இவர் கம்பி எண்ணி வருகிறார்) அந்தபெணுக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசும் உத்தரவிட்டது.
இந்த கிரிமினல் வழக்கு விசாரணை முடிய 12 ஆண்டுகளாகி உள்ளது.

செய்தி முடியவில்லை.

தனக்கு ஒன்பது லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அந்தபெண் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக இந்த பெண் அரசுக்கு அனுப்பிய பல்வேறு மனுக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.

25 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு இந்த புதன் கிழமை தமிழக அரசாங்கம் வழங்க மறுத்த நஷ்ட ஈட்டை வட்டியுடன் வழங்க தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.

இந்த கிராமத்துப் பெண் சாதாரணமாக வெற்றி பெறவில்லை. போலீஸ் அதிகாரிக்கு தண்டனை விதிக்கப்படும் வரை, 12 ஆண்டு காலம் வழக்கை இவர் நடத்தியுள்ளார். இவர் சந்திக்க நேர்ந்த சட்டச் சிக்கல்களுக்காக தனது அனைத்து உடமைகளையும் விற்றுள்ளார், இவருடைய வீட்டை உட்பட. இப்பெண் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், சட்டத்தை தன்னுடைய கடமையைச் செய்யும்படி செய்துள்ளார் என நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தண்டனைக்கு 12 ஆண்டுகள், நஷ்ட ஈடு வாங்க 25 ஆண்டுகள்.

28 வயதில் புகார் கொடுத்து 53 வயதில் வெற்றி பெற்ற இந்த பெண்ணுக்கு ஆண்கள் தினத்தில் சலியூட் அடிப்போம்.


நவம்பர் 2 ஆம் தேதி செய்தி: காவல்துறையை பாராட்டி முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை நகலை சென்னை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக போலீசார் ஒட்டி வைத்து மகிழ்ந்தனர்.



Read More...

தேசிய ஒருமைப்பாட்டு தின செய்திகள்

இரண்டு செய்திகள், இரண்டுக்கும் தொடர்பு இல்லை.
நேற்று தேசிய ஒருமைப்பாட்டு தினம். கோட்டையில் கருணாநிதி முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

"நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றை காக்கவும், வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன். நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும் மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டும் தீர்வு காணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்"
- என்ற உறுதிமொழியை முதல்-அமைச்சர்கள் கருணாநிதி படிக்க, மற்றவர்கள் அதை திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
( நன்றி: தினத்தந்தி )

நேற்று முரசொலியில் வந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்


இன்னொரு பக்தர் இவரை இவர் வெறும் பக்தர் மட்டுமல்ல; சாமியையும் அம்பாளை யும் அபிஷேகம் என்ற பெயரால் குளிப்பாட்டி - அலங்காரம் என்ற பேரால் துணிகளை உடுத்தி - சாமிக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்து தீபாரா தனையும் செய்யும் குருக்களய்யா!

அம்மனைக் குளிப்பாட்டும் போது அவர் கண்ட நிர்வாணத்தினால் ஏற்பட்ட ‘பக்தி பரவசம்’ காரணமாகவோ என்னவோ - சாமி கும்பிடவரும் பக்தைகளை - பெண்களை ஆசை வார்த்தை காட்டி சாமியின் சந்நிதானத்திலேயே மன்மதலீலை கள் நடத்தி - அதையெல்லாம் தனது செல்போனில்

( நன்றி: முரசொலி )

செய்தியே மஞ்சளாக இருக்கு அதனால் நோ மஞ்சள் கமெண்ட்!

Read More...

Wednesday, November 18, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 18-11-2009

முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்...

அன்புள்ள இட்லிவடை,

சமீபத்தில் மதுரைப் பக்கம் சென்றிருந்தேன். வந்தே மாதரம் பாடலை வைத்து இந்து-முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. நம் நாட்டில் தைரியமாக இது தான் நாட்டின் கொள்கை என்று சொல்லாதவரை இது மாதிரி மத சண்டைகள் நடந்துக்கொண்டு தான் இருக்கும். இதனால் பெரிய அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று காவல்துறை பாவம் கலங்கி போயிருக்கிறது. ஆனால் காவல்துறையை தன் கீழ் வைத்துள்ளவர் முரசொலியில் "வந்தே மாதரத்தை கட்டாயமாகத் திணிக்கக்கூடாது; அதை மக்களே மனமுவந்து ஏற்க அனுமதிக்க வேண்டும்" என்று அத்வானி 1998ல் அறிவித்தார்" என்று இந்த பிரச்சனையை அணையாமல் பார்த்துக்கொள்கிறார். இன்னொரு கோவை குண்டு வெடிப்பு மாதிரி ஒரு சம்பவம் தமிழ் நாட்டுக்குத் தேவையா? எல்லோருக்கும் தெய்வ பக்தியும் இருக்கணும், தேச பக்தியும் இருக்கணும். அதை உணர்த்துவது மாதிரி பெரியவர்கள் பேச வேண்டும். அரசியல் தலைவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. "நான் ஒரு மராட்டியன் என்பதில் பெருமை அடைகிறேன். ஆனால், முதலில் நான் ஒரு இந்தியன்" என்று சச்சின் மாதிரி தைரியமா எப்போது நம் தலைவர்கள் கற்றுக்கொள்ள போகிறார்கள்? சச்சின் 100 அடித்து இந்தியா வெற்றி பெறுகிறதோ இல்லையோ, நிச்சயமாக இந்தப் பேச்சில் வெற்றி பெற்றுவிட்டார்.

மராத்தியோ ஹிந்தியோ எல்லாம் நல்ல மொழி தான் என்ற உணர்வு நமக்கு வேண்டும். தமிழக அரசியல்வாதிகள் ஹிந்திக்கு தார் அடித்த பலனை நாம் இன்றும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கோம். ஹிந்தியோ தமிழோ இசைக்கு மொழி கிடையாது என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் இளையராஜா. கும் சும் கும் என்ற காப்பி சாயலில் ( காப்பி அடித்த அல்ல) இருக்கும் பாடலை மீண்டும் பா(paa) படத்தில் உபயோகித்துள்ளார். பவதாரினி மற்றும் அருமையான கோரஸ் கொண்டு பாடப்பட்ட பாடலுக்கு மொழி கிடையாது என்பதை உணர்த்துகிறது. அதே போல பக்திக்கு மதம் கிடையாது. தெய்வ பக்திக்கும் தேச பக்திக்கும் சின்ன வித்தியாசம் இருக்கு. தெய்வ பக்தி தாயின் படத்தைத் தரிசிப்பது மாதிரி, தாயையே தரிசிப்பது போன்றது தேச பக்தி. (இங்கே "அம்மா" வாசனை வருதே என்று நினைப்பவர்கள் "தந்தை" என்று மாற்றிப் படித்துக்கொள்ளுங்கள்). இதை எல்லோரும் உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது. இல்லை என்றால் ஓபாமா மாதிரி ஆட்கள் நாட்டாமை செய்வதை நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

நேற்றுவரை இந்தியா பாகிஸ்தான் இடையேயுள்ள காஷ்மீர் பிரச்சனை, உள்நாட்டுப் பிரச்சனை, இதில் அமெரிக்கா தலையிடாது என்று கூறி வந்த அமெரிக்கா திடீர் என்று நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையேயுள்ள உறவைக் கண்காணிப்பதற்கு சீனாவை நியமிக்கிறது. மன்மோகன் சிங் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஒபாமாவிற்கு யார் அதிகாரம் அளித்தது? தவிர இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களில் கட்டபஞ்சாயத்து வேலை செய்வதற்கு சீனாவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?? அநேகமாக இந்தியாவில் உள்ள அறிவு ஜீவிகளான கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவின் இம்முடிவை வரவேற்று இன்றோ அல்லது நாளையோ அறிக்கை வெளியிடுவர். அமெரிக்காவுடன் அவர்கள் ஒத்துப் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இது அமையலாம். இந்த கூட்டறிக்கைக்கு வழக்கம் போல் நம் முதுகெலும்பற்ற இந்திய அரசு மெளனம் காக்கிறது. எதிர்க்கட்சிகள் (கம்யூனிஸ்டுகள் தவிர) யாரேனும் இப்பிரச்சனையைக் கிளப்பினால் அதிகபட்சமாக கண்டனம் தெரிவிக்கப்படும். நீ என்ன நினைக்கிற இதப் பத்தி?

அட, முதலில் அருணாச்சலத்தின் பிரச்சனையை தீர்க்க முடியுமா என்று பார்க்கட்டும் அமெரிக்கா. சென்ற ஆண்டு அருணாச்சலைச் சேர்ந்த IAS அதிகாரிகள் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விசா தேவையில்லை என சீனா அறிவித்தது. அருணாச்சலத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவித்து சீனா அறிக்கை விடுகிறது. அருணாச்சலத்திற்கு இந்திய அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் மன்மோகன் சிங் வருவதற்கு கண்டனம் தெரிவித்தது. காஷ்மீரத்தை தனிநாடாக பாவித்து, காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு, இந்திய பாஸ்போர்ட்டில் அல்லாமல் தனியாக விசா வழங்க வேண்டும் என்று ஐடியா கொடுக்கிறது. அதை விடுங்க. காஷ்மீரிலிருந்து சீனாவிற்கு வியாபார நிமித்தமாக வருவோருக்கு சீனா இந்திய பாஸ்போர்ட்டிலல்லாமல், தனியானதோரு தாளில் விசா முத்திரையிட்டு வழங்கிவருகிறது.

இதுல ரொம்ப வேடிக்கை என்னன்னா இதுமாதிரி சீனா ரெண்டு வருஷமா பண்ணுதாம். நமக்கு போன மாசம்தான் தெரியும். ஐ மீன் இந்திய அரசுக்கு. அந்த அளவுக்கு இருக்கு நம்மை ஆளும் அரசு. நம்ம அலட்சியமா இருக்கோம். சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பு அதற்கு அவர்கள் வெளியிட்ட வரைபடம், இப்படி பல விஷய்ங்கள் இருக்கு. ஆனால் இது எல்லாம் ஓபாமா காதில் விழாமல் நோபல் பரிசு என்ற செய்தி மட்டும் தான் அவர் காதில் விழும் போலிருக்கு. நம்ம அரசாங்கத்துக்கு மூளை சைஸ் Zero!

பேசாம சோனி அறிமுகப்படுத்தியுள்ள சோனி எக்ஸ் (Sony X) லேப்டாப்புக்கு ஹிந்தி நடிகை கரீனா கபூரை தேர்ந்தெடுத்தற்கு பதிலா இந்திய அரசைத் தேர்தெடுத்திருக்கலாம். தன்னுடைய கச்சிதமான உருவத்திற்கு தகுந்த படி கரீனா கபூரை தேர்தெடுத்திருக்கிறது சோனி. எனக்கு ஒரு டவுட் இந்த மடி கணிணியை ஆண்கள் விரும்பி வாங்குவார்களா அல்லது பெண்கள் விரும்பி வாங்குவார்களா ? அடுத்த டவுட். Zero Sizeக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கரீனா கபூர், Zero Degree புத்தகத்துக்கும் இருப்பாரா ?

குர்பான் படத்தில் நான் முதுகு தெரிய நடித்திருப்பது சிவசேனா தொண்டர்களை டென்ஷன் (?) படுத்தியுள்ளது. உடனே படத்தின் சுவரொட்டிகளை கிழித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஆனால் கரீனா இதற்கு எல்லாம் அசரவில்லை இதில என்ன ஆபாசம் இருக்கிறது? இது டாப்லெஸ் இல்லை. மாறாக பேக்லெஸ் என்கிறார். கரீனாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஒரு புடவையை அன்பளிப்பாக தரப்போவதாக சிவசேனா நிர்வாகி அறிவித்து இருக்கிறார். அவங்க கிட்ட கூடவே மறக்காமல் மேட்சிங் ஜாக்கெட் எடுத்துட்டுப் போகச்சொல்லி யாராவது சொன்னாத் தேவலை.

பெண்களுக்கு இந்திய அரசும் எதிர்கட்சிகளும் எவ்வளவு செய்கிறது. ஆனால் குமுதம் அரசு பதில்களில் போன வாரம் இதை படித்தேன்.
ஒரு ஊர்வலம். இரண்டு சவப்பெட்டிகள். அதன் பின்னால் ஒரு நாய். அதன் பின்னால் ஒரு மனிதன். அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள்.
இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க, முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன். அதற்கு அவன், `முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி. இரண்டாவதில் என் மாமியார்.அவர்களுக்கான ஊர்வலம் இது' என்றான்.
`ஐய்யய்யோ!அப்படியா! இந்த நாய்?' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன்.
`ஓ, அதுவா? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது'
வந்தவன் சற்று யோசித்தான். `அந்த நாய் எனக்குக் கிடைக்குமா?'
`உனக்கும் வேணுமா, அப்போ பின்னாடி வர க்யூவுல போய் நில்லு' என்றான் மனைவியை பறிகொடுத்தவன்.

கூடிய சீக்கிரம் இந்த மாதிரி நாய் ஜோக்குக்கு மேனகா காந்தி கண்டனம் தெரிவிப்பார் என்று நினைக்கிறேன். ஒரிசா கால்நடை கல்லூரி விழாவில் நாய் முன்னங்கால்களை தூக்க செய்து நடக்க வைத்துள்ளனர். உடனே "இது மிருகவதைக்கு ஒப்பாகும்' என கூறி இதற்கு அனுமதியளித்த பல்கலைகழகத்துக்கு மேனகா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழக தீயணைப்புத் துறையில் மோப்ப நாய்கள் அடங்கிய மீட்புப் படைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களும், போலீஸ் நாய்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இல்லை மேனகா காந்தி இதற்கு கண்டனம் தெரிவிப்பார். இந்த மோப்ப நாய்கள் வைத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் கண்டுபிடிக்க முடியுமா என்பது என் அடுத்த டவுட். இந்த கடிதம் பூரா எனக்கு ஒரே டவுட்டு டவுட்டா வருது.

முல்லைப் பெரியாறு அணை பற்றி தினமும் ஜெயலலிதா அல்லது விஜயகாந்த் ஏதாவது அறிக்கை விட்டுக் கொண்டு இருக்க, முரசொலியும் சளைக்காமல் எந்த பத்திரிக்கை "சளைக்காமல்" திமுக பற்றி நல்ல விதமாக எழுதியிருக்கிறார்கள் என்று எடுத்து போடுகிறது. தமிழ் நாட்டுக்கு எல்லா அண்டை மாநிலத்திலும் தண்ணீரால் பிரச்சனை தான். கேரளா பகை, ஆந்திராவும் அணை கட்டுவதில் தகராறு. கர்நாடகாவில் கேட்கவே வேண்டாம், காவிரி பிரச்சனை. பிரச்சனை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி அங்கே நமக்கு கிடைப்பது வேற மாதிரி 'தண்ணீ'".

தமிழகத்துக்கு தண்ணீர் என்றாலே தலைவலி என்று ஆகிவிட்டது. பாஜக விற்கு எப்போதும் புதுத் தலைவலி வந்துக்கொண்டே இருக்கிறது. உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் ஆகிய இருவரும் தாய் கழகம் திரும்புகின்றனர். கல்யாண் சிங் இதற்கு முன் எவ்வளவு கட்சி மாறியிருக்கார் என்று அவருக்கே தெரியாதாம். உமா பாரதி பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவேளை இவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்து தான் திருநாவுக்கரசர் காங்கிரஸுக்கு ஓடி போய்ட்டாரா?

இந்தியா எங்கள் நாடு அப்படி இப்படி என்று உதார் விடும் பி.ஜே.பி ரெட்டி சகோதரர்கள் தங்கள் தொழில் வசதிக்காக கர்நாடகாவை பணயம் வைத்து பி.ஜே.பியை தோற்கடித்துள்ளார்கள். இவர்கள் இந்திய நாடு தேசிய ஒருமைபாடு என்ற ஜல்லி எல்லாம் இனிமே அடிக்க கூடாது. என்ன நான் சொல்லுவது?

உலகிலேயே அதிவேக, மற்றும் அதி நவீனமாக சுகோய் விமானத்தில் பயணம் செய்யப் போகும் முதல் பெண் ஜனாதிபதியாகப் போகிறார் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல். இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறப் போகிறதாம். இதை சீஃப் ஏர் மார்ஷல் பெருமையாக சொல்லியுள்ளார். இப்பயணம் முப்பது நிமிடங்கள் நீடிக்குமெனவும், அதற்கான முழு உடல்தகுதியுடன் ஜனாதிபதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நல்ல தில் உள்ள ஜனாதிபதி தான்!

ஆனால் பாரு, இந்த விஜய் டிவிக்கு என்ன தில் இருக்க வேண்டும் தாலி பற்றி விவாதம் நடத்த? பலர் டிவியில் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லையாம். தமிழ் ஹிந்து சைட்டில் வந்த பிறகு தான் அதை பலர் தேடிப் பார்த்துள்ளார்கள். அந்த விதத்தில் தமிழ் ஹிந்து சைட்டுக்கு விஜய் டிவி கடமை பட்டிருக்கிறது. விஜய் டிவி மீது ஆர்.சுப்ரமணியம் வழக்கு தொடர்ந்துள்ளார். கல்கியில் ஒரு பெண்மணி லாஜிக்கா ஒரு கேள்வி கேட்டிருக்கார் - சட்டசபையில் அமைச்சர் உறுதி மொழி எடுத்துக்கிறதை கிண்டலடிக்கிற மாதிரி ஒரு மத அடையாளத்தை எப்படி கிண்டலடிக்கலாம் என்று. இதற்கு கோபிநாத் என்ன பதில் சொல்லுவார்? அவருக்கு இதெல்லாம் கவலையே இல்லை. இதே மாதிரி இன்னும் ஒரு நிகழ்ச்சி நடத்தி ஒரு செட் மக்களை வைத்து அடுத்த பக்க மக்களக்கு லட்சோபலட்சம் விஜய் டிவி வாசகர்கள் பார்க்க சாபம் குடுக்க சொல்லி ரசித்தார். டீவில மூஞ்சி வந்தா என்ன எழவப் பேசறோம் என்ற நினைப்பே இல்லாமல் ஆட்டு மந்தை மாதிரி பேசும் ஆட்கள் இருக்கும் வரை கோபிநாத் மாதிரி "அதி புத்திசாலிகள்" காட்டில் நல்ல மழை அடித்துப் பெய்யும். என்ன சரிதானே?


சென்னையில் திரும்ப மழை ஆரம்பித்திருக்கிறது. பேப்பரில் சென்னையில் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்று போட்டிருக்கிறார்கள். எனக்கு என்னவோ பாதிப்பே இயல்பாகிவிட்ட பிறகு பாதிப்பே இல்லாமல் இருந்தால் தான் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்று நீயூஸ் போடணும்



இப்படிக்கு,
எப்பவும் போல இயல்பாய் இருக்கும் முனி

கடைசியாக இந்த லெட்டர் எழுதும் போது கிடைத்த தகவல்.
அடுத்த படத்தின் ஸ்கிரிப்டுடன் ரெடியாக வருகிறாராம் அச்சமுண்டு அச்சமுண்டு அருண். ஆனால், அது தமிழில் இருக்காது என்று சொல்கிறது ஒரு பட்சி ;). அருணிடம் உங்களுக்கு நிஜமாகவே பயமா இல்லையா என்று கேட்டதற்கு, எனக்கு தமிழ் படம் என்றால் தான் பயம் என்றார். ஏன் என்றதற்கு படம் வந்து இரண்டு வாரங்களில் அவர் அலுவலக வாசலிலேயே 30 ரூபாய்க்கு அச்சமுண்டு அச்சமுண்டு டிவிடியை அச்சமில்லை அச்சமில்லை என்று விற்றார்களாம்.

Read More...

கனகவேலை காக்க வந்த குங்கும பொட்டு காரன்

கனகவேல் காக்க திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (கிழக்கு மொட்டை மாடியில் இடம் கிடைக்காததால்), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது. ( காராபூந்தி, காபி தான் )

கமல், ஆடியோவை வெளியிட்டார். டிரெய்லர் பார்த்துவிட்டு படத்தைப் பார்க்கத் தூண்டுவதாகச் சொன்னார் (துண்டு துண்டாக பார்த்தால் அப்படி தான் இருக்கும் )இயக்குநரை மிகவும் பாராட்டினார். (காபி நன்றாக இருந்திருக்கும்)

படம் டிசம்பரில் வெளியாகிறது. மக்களே ஜாக்கிரதை. பாடல்களை வெளியிட்ட கமலுக்கு 50 பொருட்கள் அடங்கிய பரிசை அளித்தாராம் கரண். அந்த 50 பொருட்களில் ஒன்று ‘கனகவேல் காக்க’ பாடல் கேசட்டாம்.

படத்தில் பொட்டு வைத்துக்கொண்டு இருப்பவர் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று டிவிட்டரில் சொல்லுவார். ஏன் நிக்கில் முருகன் கமல் நிற்கும் போது பக்கத்தில் இல்லை ?

Read More...

Monday, November 16, 2009

பகீர் சித்தர்

நண்பர் அமுதப்ரியன் சில வாரங்களுக்கு முன் திருவண்ணா மலை சென்ற போது ஒரு மனிதரை அவர் சந்தித்திருக்கிறார். அவரை பற்றி இட்லிவடைக்கு எழுதியும் அனுப்பினார். அந்த மனிதரின் போட்டோ கிடைத்தால் நல்லா இருக்கும் என்றேன். உடனே அவர் போன வாரம் திரும்பவும் திருவண்ணாமலைக்கு சென்று அந்த மனிதரை தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. இந்த மாதிரி சித்தர்களை கண்டுபிடிக்கும் திறமை உள்ளவர்களான 'விஜய் டிவி நடந்தது என்ன' குழுவிடம் சொல்லியிருக்கோம். நிச்சயம் படம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

2012 என்ன என்ன நடக்கும் என்பதை விரிவாக விளக்கியுள்ள பதிவு...

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த மாதக் கடைசியில் திருவண்ணாமலை சென்றிருந்தேன். அது ஒரு பௌர்ணமி இல்லாத, பிரதோஷம் இல்லாத நாள். கிரிவலம் செல்லும் வழியில் மலையின் நேர் பின்னால் மேற்கு திசையில் வாயு லிங்கம் அருகில் ஒரு மனிதரை (அவருடன் சில சீடர்கள்) சந்திக்க நேர்ந்தது. அவருக்கு வயது கூடிப்போனால் 32 முதல் 35 வயது வரை இருக்கும். ஆனால் அவருடைய சீடர்கள்(அவருடன் இருந்தவர்கள்) அவருக்கு வயது 5000 என்றனர். அவருக்கு அஷ்டமாசித்திகளும் தெரியும் என்றனர். அவருடன் நடந்த ஒரு கலந்துரையாடலை இட்லிவடை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள கொடுக்கிறேன். “பாரடா வான்மதியிலே பார்தான் பாதியாகிடுமே” என்று ஒரு பாடலை எடுத்து விட்டு அதற்கு அர்த்தம் சொல்ல ஆரம்பித்தார். எனது இதயம் பகீர் என்றது.

அவர் சொன்ன பகீர் தகவல்களில் சில:

[1] 2012 உலகம் அழிவு ஆரம்பம்.

[2] கழுகு தற்போது 40 முட்டைகள் இடுகின்றனவாம், கழுகுகள் அதிகரித்தால் மனிதனைக் கொல்லுமாம்.(இதை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்)

[3] கிலோ அரிசி 1000ரூபாயைத் தொடுமாம்.

[4] 1பவுன் தங்கம் 50000ரூபாயைத் தொடுமாம்.

[5] ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவிற்கு கண்டம் கொடுக்க ஒருவன் உதித்து விட்டானாம். அவனுடைய ஆட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள் அனைத்திலும் ஊடுருவி உள்ளார்களாம். அனைத்து மக்களுடைய அங்க அடையாளங்கள் ஆவனங்கள் அவனிடத்தில் உள்ளதாம்.

[6] 2012ல் இந்தியாவை வெற்றி கொள்வானாம்.

[7] இந்தியாவில் இருக்கும் அனைத்து CALLCENTER களையும் அந்த ஐரோப்பிய மனிதன் வாங்கிவிட்டான்.

[8] உலகத்தின் மொத்த மக்கள் தொகை 100கோடியாகி விடும்.

[9] மின்சார உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும். பின் மின்சாரமே இல்லாமல் போகும்.

[10] சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும். சூரியன் ஒளி பாதியாக குறையும்.

[11] 30கோடி பேர்தான் இந்தியாவில் இருப்பார்களாம்.

[12] ஒரே நேரத்தில் சூரியனும் சந்திரனும் தெரியும்.

[13] மக்கள் சாப்பாட்டிற்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.

[14] இந்தியாவில் இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு மாறும்.

[15] இந்தியாவில் அதிபர் தேர்தல் நடக்கும்.

[16] இப்போதிருக்கும் பல நகரங்கள் இந்தியாவில் மூழ்கிப் போகும்.

[17] கடலுக்குள் இருக்கும் நகரங்கள் பல வெளிவரும்.

[18] புதிய புதிய விலங்குகள் உருவாகும்.

[19] புதிது புதிதாக நோய்கள் பிறக்கும்.

[20] உலகமெங்கும் வறட்சியின் பிடியில் இருக்கும்.

என்று நீண்டு கொண்டே செல்கிறது அவரது வாக்கு.

சரி எப்போது இதுவெல்லாம் சரியாகும் என்றேன். 2016ல் முழு உலகம் அழிந்து பின் 2019ல் புது உலகம் பிறக்கும் என்றார் புன்முறுவல் பூத்தபடி. மேலும் உண்மையான ஜோதிடர்களுக்கு இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றார். (ஐயா ஜோதிடர் ராமகிருஷ்ணன் அவர்களே பதில் தெரியுமா)

இட்லிவடையும் அதன் வாசகர்களும் என்ன நினைக்கிறீர்கள்...
- அமுதப்ரியன்


அடுத்த முறை பார்க்கும் போது இட்லிவடை என்ன ஆகும் என்று கேட்டு சொல்லுங்க :-)

Read More...

பெட்டிக்காரன் - இரா.முருகன்

வார்த்தை நவம்பர் 2009 இல் வந்த இரா.முருகன் கட்டுரை....

எழுத்தாளனா? இங்கே என்ன செய்யறீங்க?

பக்கத்து சீட்காரர் விசாரித்தார். அப்படியே வெளியே சாடிவிடலாம் என்று பார்த்தேன். சின்ன சிக்கல். வானத்தில் இருந்து கையில் லேப்டாப் பையோடும் கழுத்தில் டையோடும் இறங்கி வருகிற ஒரு சோடா புட்டி கண்ணாடிக்காரனை மக்கள் எப்படி வரவேற்பார்கள் என்று தெரியவில்லை. மேலே பறக்கிற விமானத்தில் இருந்து குதித்து மேகங்களின் ஊடாகப் பாய்ந்து கீழே வந்து இத்தனை களேபரத்திலும் மூச்சு உடம்பில் இருந்து பிரிந்து போகாமல் ஒட்டிக் கொண்டிருக்குமா? கீழே, துருக்கி நாட்டுக் கடைத்தெருவில் வேடிக்கை பார்க்கிற ஒருத்தருமா ஆதரவாகக் கையை நீட்டி என்னை இறக்கி விட மாட்டார்கள்?

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனியில் அதிகாரி என்றால் கொஞ்சம் மரியாதை கூட கிடைக்கலாம். ஆனாலும் தப்பித் தவறி கூடவே எழுத்தாளனும்தான் என்று மட்டும் சொல்லிவிடக் கூடாது. பின்னஞ் சந்தில் ராக்கெட்டைத் திணித்துத் திரும்பவும் மேலே அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். எனக்குத் தெரியும்.

பறக்கிற விமானத்திலும், பாழாய்ப்போன துருக்கியிலும் மட்டுமில்லை. பறந்து தாழ்ந்து ஸ்காட்லாந்தில் தரை இறங்க வேண்டிய எடின்பரோ நகரத்தில், அங்கே குடக்கூலிக்குக் குடிபோன இடத்தில் கூட இதே கதைதான். போய்ச் சேர்ந்து கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு புத்திசாலித்தனமாக (நான் நினைக்கிறது இது) மூஞ்சியை வைத்துக்கொண்டு ஆலோசனை சொல்லி உடனடியாகப் பெட்டி தட்டும் ஆபீசும் இதில் அடக்கம். எங்கேயும் சொல்லக்கூடாத சிதம்பர ரகசியம் ‘ஐயா, அம்மா, நான் ஒரு எழுத்தாளனும் கூட’.

அது சிலபேர் முகராசி. சதா சிரித்துக் கொண்டே ரொம்ப பிரியமாகப் பேசியபடி வருடக் கணக்காக உற்ற தோழராக இருப்பார்கள். அவர் வீடு எங்கே இருக்கு, எத்தனை பிள்ளைகள், மனைவி இல்லத்தரசியா வேலைக்குப் போகிறவரா இதெல்லாம் நமக்குத் தெரியாது. தெரிந்து என்ன ஆக வேண்டும், அதது அவங்க அவங்க சொந்த சமாசாரம் என்கிற தாராள மனப்பான்மைக்காரர்களுக்காக – சரி சார், அவங்க ப்ளட் க்ரூப், எச்.ஒன் என் ஒன் பாசிட்டிவா நெகட்டிவா, பிளட் பிரஷர், ரத்தத்தில் சர்க்கரை அளவு இதெல்லாம், வேணாம், இதிலே ஒண்ணு ரெண்டாவது தெரியுமா? சொன்னால்தானே தெரியும். இன்னோரன்ன கல்லுளிமங்கன்கள் வாயைப் பிடுங்கி வார்த்தை வரவழைக்கவே முடியாது.

நமக்கு இந்த விஷயத்தில் நேர்மாறு. முகம் படுசீரியஸ் எப்பவுமே. ‘அதென்ன எழவு வீட்டு போட்டோவிலே கூட கோபத்தோட நிக்கறீங்க? கைமாத்து ஏதும் வாங்கி அந்த மனுசர் திருப்பித் தராமப் போய்ச் சேர்ந்துட்டாரா?’ என்று அன்போடு விசாரிப்புகளை சகஜமாக எதிர்கொள்ளப் பழகிவிட்டது. ஆனாலும் என்? என் வாயைத் திறந்து பேச ஆரம்பித்த பதிமூன்றாவது நிமிடத்தில் உள்ளாடை சைஸ் வரை என் தரப்பில் இருந்து தகவல் பரிமாறப்பட்டு விடும். சங்கதி அப்படி இருக்க எழுத்து மோகம் மட்டும் அந்தரங்கத்தில் புதைந்து கொண்டு விடுமா என்ன? உள்ளாடை அளவு தவிர மற்ற எல்லாம் சொல்லியது எடின்பரோவில் வீட்டு புரோக்கரிடம். உடனடியாக குடக்கூலிக்கு வீடு வேண்டி இருந்தது.

அந்த வீட்டு புரோக்கர் பாட்டியம்மா ‘என் கூட வா’ என்று அழைத்தபடி, தெரு ஓரமாகக் குடையைப் பிடித்துக் கொண்டு சிலை சிலையாகக் கடந்து வளர்ப்பு நாய்க் கழிவை மிதிக்காமல் வேகமாக நடந்தார். மழையும், சிலையும், கழிவும் சற்றுத் தூக்கலான நகரம். எனக்கு முன்னால் நடக்கிற புரோக்கர் அப்பத்தாவும் தூக்கலான குதிகால் செருப்பு அணிந்து தாவிக் குதித்து நடக்க நான் பின்னால் மழையில் நனைந்து குளிர்ந்தபடி உத்தேசமாக அந்தம்மாவின் பின்புறங்கள் ஈரத்தில் துலங்கிய திசையில் நகர்ந்ததை மாநகரக் காவலர்கள் பார்த்திருந்தால் ஜெரியோபிலியா கேஸ் (முதியவர்கள் மேல் மையல் கொண்டு மடலூறும் பிரகிருதி) என்று முடிவு செய்து குழந்தைகள் காப்பகத்தில் சிறை வைத்திருப்பார்கள்.

அவள் கொண்டு போய் நிறுத்திய இடம் எடின்பரோ தோப்புத்தெருவில் ஒரு பழைய வீடு. தெரு முழுக்க கருப்புக் கல் கட்டிடங்கள் வருடம் பூரா மழையில் நனைந்து, கருப்பு ஆடை உடுத்தி நித்திய துக்கம் அனுஷ்டிக்கிற பெண்களைப் போல் மவுனமாக நிற்க, நடுவே இந்த வீடு வயோதிகமும் துக்கமுமாகப் பரிதாபமாக அழுதது. வாசலில் டாக்டர் மெக்வெய்ன். பல் டாக்டர் என்று கல்லில் கொத்தி வைத்திருந்தது. அவர்தான் வீட்டு சொந்தக்காரரா என்று புரோக்கரிடம் கேட்டேன். ‘மெக்வெய்ன் தாத்தா போய்ச் சேர்ந்து ஐம்பது வருஷமாச்சு. லாண்ட்லார்ட் அவரோட பேரன். என் அந்தக்கால பாய் பிரண்ட்’.

அறுபது கடந்த அந்த பாய் பிரண்டும் கேர்ள் பிரண்டும் அன்னியோன்னியமாக உரையாடிக் கொண்டிருக்க நான் ஒரு மர நாற்காலியில் உட்கார்ந்து அங்கே கிடந்த பழைய செய்தித்தாளில் ரெண்டாம் உலக யுத்தம் போனவாரம் ஆரம்பமான செய்தியை சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தேன். வீடு ரெண்டு உலக யுத்தங்களை சந்தித்து விட்டு இன்னும் ஒன்று வந்தாலும் பார்க்கத் தயாராக எல்லாச் சுவரிலும் மழைத் தண்ணீர் இறங்கி கனகம்பீரமாக நின்றது. அங்கங்கே பல்லுப்போன மாதிரி பல் டாக்டர் வீட்டு ஜன்னல் கம்பி பலதும் மிஸ்ஸிங்க்.

கம்ப்யூட்டர் காரன். கதையும் எழுதுவான். மூணு நாவல், எட்டு சிறுகதை தொகுப்பு, நாலு குறுநாவல் தொகுப்பு, ஐந்து கட்டுரைத் தொகுப்பு. எழுதியிருக்கானாம். இதோட கூட ஆபீசும் போய் வருவான் இந்தப் பிள்ளையாண்டான்.

புரோக்கரம்மா எடுத்துவிட, வீட்டுச் சொந்தக்காரர் விரோதத்தோடு பார்த்த மாதிரி பட்டது. தீர விசாரிக்கும் தோரணையில் என்னை அணுகினார் அவர்.

எழுத்தாளனா? கம்ப்யூட்டர் ஆசாமியா? யார் நீ?

வேலு நாயக்கரிடம் விசாரிக்கிற குழந்தை போல அவர் கேட்க, எழுத்தும் மற்றைய வேலையும் வெவ்வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் இடத்தில் வந்து மாட்டிக் கொண்டேன் என்று புரிந்து கொண்டேன். எழுத்தாளன் என்றால் எழுதிச் சம்பாதிப்பான். தினசரி ஏகதேசம் எட்டு மணி நேரம் மதுக்கடையில் கசப்பு லாகர் பியர் குடித்தபடி கதை எழுதுவான். கம்ப்யூட்டர்காரன் என்றால் ஆபீசில் மாய்ந்து மாய்ந்து பெட்டி தட்டி சம்பளம் வாங்கி வீட்டுமனைக் கடன், சேமநல நிதி பிடித்தம் இதெல்லாம் போக மாசக் கடைசியில் ஒரு கணிசமான தொகை வங்கிக் கணக்கில் வரவு வர, மதுக்கடையில் பியர் குடித்து சுருதி ஏற்றிக் கொள்வான். ரெண்டு ஆசாமிகளும் வெவ்வேறு ஜன்மங்கள். குடிப்பதில் மட்டுமே ஒற்றுமை.

ஆனால், நம்ம ஊர் வழக்கம் வேறு. எழுத்தை தொழிலாக வைத்துக் கொள்ளாமல், வேலை பார்த்துக் கொண்டே வாரக் கடைசியில், ராத்திரி கண் முழித்து பெண்டாட்டி படுத்துக் கொள்ளச் சொல்லி படுக்கையில் இடம் விட்டு நகர்ந்தாலும் பொருட்படுத்தாமல் டெட்லைன் காப்பாற்ற எழுதி அனுப்பி சன்மானம் வாங்குகிறது அது. வீட்டுக்காரருக்கு இந்த வளமுறையை கோடி காண்பிப்பதில் அடுத்த ஐந்து நிமிடம் கடந்து போனது. போகட்டும். தமிழ் எழுத்து பற்றி அவரும் அறியட்டும்.

மேட், சயாமிஸ் ரெட்டையர்கள் தெரியுமா?

அவர் கேட்டார். கேட்டிருக்கேன். தோள் பக்கத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். சாகிற வரைக்கும் ரெண்டு பேரும் ஒட்டியே இருக்கப்பட்டவர்கள்.

இருபது வயசு காணும் சயாமிஸ் ரெட்டையர்கள் ஒரு ஜோடி இருந்தாங்க. ரெண்டு பேரும் இப்படி சதா மழை பெய்யற ஸ்காட்லாந்திலே வருஷக் கணக்கா தனியாக் கழிக்க வேண்டிப் போனது.

நான் கதை கேட்கிற சுவாரசியத்தோடு அப்புறம் என்று கேட்டேன். அப்புறம் என்ன? அவர் இன்னொரு கிளாஸ் விஸ்கியை தாராளமாக தன் கோப்பையில் வார்த்துக் கொண்டார். எனக்குக் கொடுத்ததை பாட்டியம்மா புரோக்கர் குடித்துவிட்டாள். நாள் முழுக்க குடித்தாலும் ஸ்டெடியாக இருக்கிற மக்கள்.

அந்த சயாமிஸ் ரெட்டையர்களில் ஒருத்தர் பொன்னை விரும்பும் பூமியிலே பெண்ணை விரும்பும் சராசரி மனுஷர். இன்னொருத்தர் ஒருபால் புணர்ச்சியாளர். அவர் தன் புட்டத்தைத் தட்டிக் காட்ட, புரோக்கர் பாட்டியம்மா வெடிச்சிரிப்பு சிரித்தாள். எனக்கு ஒரு எழவும் புரியவில்லை.

எழுத்தாளனும் கம்ப்யூட்டர்காரனுமா ஒட்டிப் பிறந்திருக்கே நீ. இதிலே யார் சராசரி, யார் ஒருபால்னு தெரியாது. ஆனா, எப்பவுமே ரணமா வீங்கியிருக்கிற பின்புறம் உனக்குன்னு பிறக்கும்போதே விதிச்சிருக்குமே?

அன்பாக விசாரித்தார். ஆனாலும் என்னை பேண்டைக் கழற்றச் சொல்லிப் பரிசோதிக்காமல் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டை வாடகைக்கு விட்டார் அந்தப் புண்ணியவான்.

ஆபீசில் சக புராஜக்ட் சீனியர் மேனேஜர்களான வெள்ளைக்காரர்கள், ஒற்றைக் கருப்பர், ஒரு நியூசிலாந்துக்காரர் ஆகியோர் அவங்க ஊரில் அடுத்த ஜன்மத்தில் எழுத்தாளனாகப் பிறந்து சொர்க்க போகத்தோடு வாழ்க்கை நடத்த அன்போடு அழைப்பு விடுத்தார்கள். கார்டியன் பத்திரிகையில் வாராவாரம் ஒரு ஆங்கில எழுத்தாளர் வீட்டுக்குப் போய், அவர் எழுத உபயோகிக்கும் அறையைப் படம் எடுத்து விஸ்தாரமாகப் பிரசுரித்திருப்பார்கள். அதில் ஒரு பிரதியை எனக்குக் காட்டி, எழுத்தாளன் வீடு என்றார் இன்னொரு சிநேகிதர். சகல சுக சௌகரியத்தோடும் ஒரு அறை. ஓரத்தில் சின்னதாக ஒரு பூஜாடி தட்டுப்பட்டது. தமிழில் எழுதி புத்தகத்துக்கு ராயல்டி வாங்கிய பணத்துக்கு மேல் ஐநூறு ரூபாய் கைக்காசு போட்டு அது மாதிரி ஒரு பூஜாடி வாங்கலாம் என்று தோன்றியது.

அந்த வார ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கத்துக்கு மாறாக மழை ஓய்ந்திருந்தது. செய்தித்தாளில் கண்ணில் பட்ட முதல் விஷயம் ராயல் ஸ்காட்டிஷ் அகாதமியில் காலை பத்து மணிக்குக் கவிஞர் சந்திப்பு. கவிதை வாசிப்பு.

இங்கிலீஷ் கவிஞர் பெருமக்களையும் ஒரு சேஞ்சுக்கு பக்கத்தில் இருந்து பார்த்துவிட்டு வரலாமே என்று கிளம்பினேன். அதில் எத்தனை பேர் ஹாலிவுட் படத்துக்குப் பாட்டெழுதும் கனவில் இருப்பார்கள் என்று கொசுறாக சிந்தனை.

தரையில் நடக்கிற, ஜீன்ஸ், டீஷர்ட் அணிந்த இளம் கவிஞர்கள் பலபேரும். ஒரு பெண் கவிஞர் தொப்புளில் தொங்கட்டான் மாட்டியிருந்தார். அடுத்த சந்திப்பில் இவர்களுக்கு நம்ம ஊர் நயம் கதர் ஜோல்னாப்பை பரிசளிக்க மனதில் முடிவு செய்து கொண்டேன் - உள்ளே விவகாரமான ‘கவிஞர் கூடல்’ அழைப்பிதழோடு.

எடின்பரோ கவிஞர் சந்திப்பில், ஸ்காட்லாந்துக்காரரும், சமகால பிரிட்டீஷ் கவிஞர், – நாவலாசிரியர்களில் முக்கியமானவரானருமான ஜான் பர்ன்சைட் கலந்து கொண்டு கவிதை வாசித்தார். பரவலாகப் பேசப்பட்ட அவருடைய நாவலான ‘அப்பாவைப் பற்றிய பொய்கள்’ பற்றிய பேச்சை ஜாக்கிரதையாகத் தவிர்த்து விட்டு (‘நாவலை எல்லோரும் காசு கொடுத்து வாங்கிப் படிச்சுட்டு வாங்க, அப்புறம் பேசலாம்’) அவர் கவிதை படித்தார். பட்டியல் ரகக் கவிதை.

ஜான் பர்ன்சைடைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆங்கிலக் கவிஞர் ப்ரயன் ஜான்ஸ்டோன் அடுத்துக் கவிதை வாசிக்க எழுந்தார். என்னோடு இருந்த முப்பது பேரில் பத்து பேர் முன்கூட்டியே நிச்சயித்துக் கொண்டதுபோல், பிரின்சஸ் தெருப்பக்கம் நடையைக் கட்டினார்கள். அவர்கள் 1843-ல் திறக்கப்பட்டு இன்னும் கதவு அடைக்காத பியர்க்கடையில் நுழைகிறது ஜன்னல் வழியாகக் கண்ணில் பட்டது. கவிதையா பியரா என்று மனசில் சின்ன விவாதம். பக்கத்தில் தொப்புள் லோலாக்கு பெண் வந்து உட்கார்ந்ததும் கவிதை வென்றது.

அறுபது வயது கடந்த கவிஞர் ப்ரயன் ஜான்ஸ்டோன். விஞ்ஞானி ஐன்ஸ்டின் போல் தலைமுடியும், நரைத்த கட்டை மீசையுமாக இருந்தார். கம்பீரமான குரல். கோட்டும் சூட்டும் ஆறடி உயரமுமாக ஒரு கனவான் தோரணை. அவர் வாசித்த கவிதையில் அந்தத் தோரணை ஏதும் இல்லாமல் சட்டென்று மனதில் பதிந்தது.

கண்ணாடிக்குள் இருந்த
என் அப்பா உற்றுப் பார்க்கிறார்.
இறந்துபோய் இருபது வருடம் ஆனாலும்,
கண்ணாடிக்குள் தட்டுப்படும
என் இன்னொரு முகமாக வளர்ந்தபடி.

கூட்டம் முடிந்து கவிஞரிடம் போய் அறிமுகப்படுத்திக் கொண்டேன். வழக்கம் போல் பொட்டி தட்டும் சாப்ட்வேர்காரன் பிளஸ் எழுத்தாளன் என்று அறிவித்தபோது அவர் ஒரு சலனமும் இல்லாமல் என்னைத் திரும்ப வெறித்துப் பார்த்தார். எந்த மொழியில் எழுதுகிறீர்கள் என்று மட்டும் கேட்டார். சொன்னேன்.

தமிழ் கிரேக்க மொழியை விடப் புராதனமாது இல்லையா என்று திரும்பக் கேட்டார். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளொடு முன் தோன்றியதை ஆங்கிலத்தில் சொல்லி, விலாவாரியாகக் குலமுறை கிளர்த்தினேன்.

அப்படியான பழைய மொழியில் எழுத அதிர்ஷ்டம் இருக்கணுமே. எழுதியே காசு கொட்டும். ஆனாலும் கையிலே இன்னொரு தொழில் இருக்கணும்னு துடிப்பா இருக்கற உங்க திறமைக்கு என் வாழ்த்துகள்.

பீஷ்மர் கர்ணனை ஆசீர்வதித்தது சம்பந்தம் இல்லாமல் நினைவு வந்தது.

நானும் வேலையில் இருந்து தான் ரிடையர் ஆனேன்.அவர் தொடர்ந்து சொன்னார். நம்பவே முடியவில்லை.ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து போன வருடம் ரிடையர் ஆனேன்.

‘பல்லி விழும் மௌனம்’ என்ற தன் கவிதைத் தொகுதியைக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு படகு போல பெரிய டயோடா காரில் கிளம்பினார் ப்ரையன். நான் அவர் பின்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

( நன்றி: வார்த்தை, எனக்கு அனுப்பிய இரா.முருகனுக்கு ஸ்பெஷல் நன்றி )

பின்னஞ் சந்தில் ராக்கெட்டைத் திணித்துத் திரும்பவும் மேலே அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். எனக்குத் தெரியும். கடவுள் எல்லாவற்றையும் மேலேயிருந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார் என்று எதற்கு சொல்றோம் ? இதற்கு தான்!

Read More...